சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..

Sunday, February 24, 2013

இந்த தொடரின் முதல் பாகத்திற்கு இங்கு
ரெண்டாம் பாகத்திற்கு இங்கு
மூன்றாம் பாகத்திற்கு இங்கு
நான்காம் பாகத்திற்கு இங்கு க்ளிக்கவும்..

ஒரு வழியாக இந்த தொடர் ஒரு முடிவை எட்டியிருக்கிறது.. நமது வாடிக்கையாளரை சமாளித்து, எப்படி சேல்ஸ் வேலையில் நிலைப்பது என்பதைப்பற்றி இத்தனை நாள் பார்த்தோம்.. என்ன தான் உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் நன்றாக வியாபாரம் செய்தாலும், அதற்கான முழு அங்கீகாரமும் கொடுப்பது நம் பாஸ் தான். நன்றாக வேலை செய்துவிட்டு நம் மேனேஜரிடம் நல்ல பெயர் எடுக்காவிட்டால், 99 ரன்னில் அவுட் ஆன பேட்ஸ்மேன் போல் ஆகிவிடும் நம் நிலைமை. எடுக்காத அந்த ஒரு ரன்னை பற்றி தான் ஊரே பேசும், நமக்கும் கஷ்டப்பட்ட அந்த 99 ரன்கள் மறந்து போகும், விடுபட்ட அந்த ஒரு ரன் தான் மனதை உறுத்தும்.. பாஸின் பாராட்டு அந்த 100வது ரன் போலத்தான். சரி, மேனேஜர் நம்மை பாராட்டுமாறு எப்படி நடந்து கொள்வது?
.
 
மேனேஜருக்கு எப்பவும் ஒரு ஈகோ இருக்கும். தன்னிடம் தான் முழு பொறுப்பும் இருக்க வேண்டும் என்று. நம் வாடிக்கையாளர் நம்மை ஆஹா ஓஹோவென புகழந்தால் கூட மேனேஜருக்கு நம் மீது கோவம் வந்துவிடும் ‘என்ன இது நேத்து வந்த இவன இப்படி புகழுறாய்ங்க? ஒரு மேனேஜர் நம்மள எவனும் கண்டுக்க மாட்றாய்ங்க?’ என்று.  திடீரென்று குடும்பத்துக்குள் புதுசாய் வந்த மருமகள், தன் ஆஸ்தான பதவியான சமையல்கட்டை முழு பொறுப்போடு எடுத்துக்கொண்ட பின் ஒரு மாமியாருக்கு வரும் கோவம் போன்றது அது. அந்த ஈகோவை சமாளிக்க நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம் தான். ‘என்ன இருந்தாலும் உங்கள மாதிரி வராது அத்த’ என மருமகள் சொல்வது போல், எந்த விசயம் நடந்தாலும் அதை மேனேஜரிடம் சொல்லிவிடுவது தான். நம் வாடிக்கையாளர் இன்று குளிக்கவில்லை என்று தெரிந்தால் கூட உடனே மேனேஜருக்கு ஃபோன் போட்டு, “சார், இன்னைக்கு நம்ம சுப்பையா குளிக்கல சார்” என்று சொல்லிவிடுவது உத்தமம். அவருக்கு நம் மீது அப்போது தான் ஒரு நம்பிக்கை வரும், ‘சே நல்ல பையன், எதா இருந்தாலும் நம்மக்கிட்ட ஒடனே சொல்லிறான்’ என்று.



ஒரு மேனேஜர் என்பவர் அவருக்கு மேல் இருக்கும் மூத்த அதிகாரிகளிடம் வியாபார சூழலை தினமும் சரியாக புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டும். ஆனால் அவரால் தன் பொறுப்பில் இருக்கும் எல்லா இடங்களையும், எல்லா வாடிக்கையாளர்களையும் நேரில் பார்க்க முடியாது. நாம் தான் அவருக்கு தகவலை சொல்லியாக வேண்டும். நம்மை போன்று இருக்கும் எல்லா சேல்ஸ் ரெப்புகளும் மேனேஜருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தாலும், நாம் முதல் ஆளாக சொல்வது தான், அவருக்கு நம் மீது நம்பிக்கை ஏற்பட வைக்கும்.

அதே போல் எது செய்வதாக இருந்தாலும், அது உங்கள் பவருக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது இன்னும் நல்லது. ஒரு டீலர் தான் வாங்கிய பொருட்களுக்கு கம்பெனிக்கு சரியாக பணம் கட்டவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்து ஒரு ஆர்டர் கொடுக்கிறார். அந்த ஆர்டரை மறுத்து, முதலில் மொத்த பணத்தையும் கட்ட சொல்ல ஒரு சேல்ஸ் ரெப்பாக உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் நீங்கள் அப்படி சொன்ன அடுத்த நொடியில் அந்த டீலர் உங்கள் மேனேஜரை அழைத்து, “சார், நான் எத்தன வருசம் டீலரா இருக்கேன்? நேத்து வந்தவன் சார் அந்த ஆபிஸரு. எனக்கு லோடு குடுக்க மாட்டேங்கிறான் சார் அவன். நான் பணம் குடுக்காம எங்க போயிருவேன்?” என ஒரு பிட்டை போட்டால், அந்த நேரத்தில் நம் மேனேஜர் அந்த டீலருக்கு தான் சப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த இடத்தில் உங்களுக்கு இரண்டு விதங்களில் பின்னடைவு.

1. டீலரிடம் கம்பெனி ரூல்ஸ் என்று நீங்கள் என்ன சொன்னாலும், நேரடியாக மேனேஜரிடம் பேசி நீங்கள் சொல்வதை மீறி என்ன செய்ய முடியுமோ அதை செய்வார். உங்களுக்கு அந்த டீலரிடம் அடுத்து மரியாதையே இருக்காது.

2. எதற்கெடுத்தாலும் ஒரு டீலர் மேனேஜரை தொந்தரவு செய்து கொண்டிருந்தால், மேனேஜர் உங்களை unfit என நினைத்துக்கொள்வார்.
இந்த மாதிரி அசம்பாவிதங்களும் அவமானமும் வராமல் இருப்பதற்கு, மேனேஜரிடம் உடனுக்குடன் நாம் பேசுவது தான் சரி வரும். மேலே இருக்கும்

அதே சம்பவத்தில் நீங்கள் இப்படி செய்யலாம்.
1. டீலரிடம் பேசுவதற்கு முன் மேனேஜரிடம், இந்த மாதிரி இந்த டீலருக்கு பணப்பிரச்சனை இருக்கிறது, அவர் லோடு கேட்டால் நான் கொடுக்க முடியாது என சொல்லிவிடுவேன். ஒரு வேளை சரக்கை அனுப்பினால் பணத்தை வாங்குவது கஷ்டம். உங்கள் கருத்து இதுல என்ன சார்? அப்படினு அவரிடம் கேள்வியை கேட்கலாம். நம் மனதில் இருக்கும் முடிவை தான் அவரும் சொல்வார்.

2. அல்லது மேனேஜரிடம் கலந்தாலோசிக்காமலே டீலருக்கு பொருளை கொடுக்க முடியாது, முதலில் பணத்தை கட்டுங்கள் என சொல்கிறீர்கள். சொல்லிமுடித்தவுடன், உங்கள் டீலர் மேனேஜரை அழைக்கும் முன் நீங்கள் மேனேஜரை அழைத்து விசயத்தை சொல்லிவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம். டீலர் மேனேஜரை அழைக்கும் போது, “ஆமா ஆபிஸர் சொன்னாரு, உங்க outstanding கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, ஏதாவது கொஞ்சம் payment போடுங்க சார், பாத்து செய்யுறேன்” என்பார் மேனேஜர். நாமும் தப்பித்துக்கொள்ளலாம், மேனேஜரிடமும் விசயத்தை சொன்ன மாதிரி ஆகிவிடும், டீலரும் மேனேஜரே சொன்னதால் பணம் போடாமல் நம்மிடம் சரக்கிற்கு தொந்தரவு செய்ய மாட்டார்.

எதாக இருந்தாலும் காலை வேலைக்கு கிளம்பும் முன் மேனேஜருக்கு ஒரு ஃபோன் போட்டு அன்று செய்ய வேண்டிய வேலைகளையும், போக வேண்டிய இடங்களையும் சொல்லிவிட வேண்டும். மாலை வேலை முடிந்ததும் அடுத்து ஒரு அட்டெண்டன்ஸ். இடையில் தேவைப்படும் போதெல்லாம் அவரை அழைத்து பேசுங்கள். “இவன் நாம சொல்றதலாம் செய்வான், நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறான், நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டான்’ என்கிற நம்பிக்கை நம் மேனேஜர் மனத்தில் வரும்படி நடந்துகொண்டாலே போதும். ஏனென்றால் அவர் தான் நம் அப்ரைசலில் முதலில் கையெழுத்து போடுபவர். ஒரு மேனேஜர் நம்மிடம் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச செயல்பாடு, மார்க்கெட்டில் நடக்கும் விசயங்களை அவரிடம் சொல்ல வேண்டும் என்பதைத்தான். அதை சரியாக செய்துவிடுங்கள்.

இதையெல்லாம் முழுதாக பின்பற்றினால் வேலையில் எளிதாக ஜெயித்துவிடலாம். இது போக, வேலைக்கு சம்பந்தம் இல்லாத, ஆனால் நாம் வேலையை சிறப்பாக செய்ய சில பாயிண்டுகள் கீழே. இவற்றை சரியாக பின்பற்றுங்கள்.

1. எந்த சூழ்நிலையிலும் நம் வாடிக்கையாளர்/டீலரிடம் ஜாதி, மத, மொழி வித்தியாசம் பார்க்காதீர்கள். மனதில் கூட அப்படி ஒரு எண்ணம் இருக்க வேண்டாம். ஏனென்றால் கண்டிப்பாக பேச்சு வாக்கில் மனதில் இருப்பது வந்துவிடும். ஜாதி, மதம் சம்பந்தமான விசயங்களை பேசும் போது மிக சூதானமாக இருக்கவும். இப்படித்தான் போன மாதம் என் இஸ்லாமிய டீலர் ஒருவரிடம் கமலுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தேன் அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறந்து. அதன் பின் அவரை தாஜா செய்வது பெரும்பாடு ஆகிவிட்டது பிறகு.

2. டீ, பஜ்ஜி, வடை, கூல் ட்ரிங்க்ஸ் என ஒவ்வொரு டீலரிடம் செல்லும் போதும் புது மாப்பிள்ளை போல் ஏதாவது தின்ன கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்



தினமும் ரெண்டு டீக்கு மேல் வேண்டாம். ஒரு சிலர், அதுவும் கிராமங்களில், நீங்கள் அவர்கள் கொடுப்பதை சாப்பிடவில்லையென்றால் கோவித்துக்கொள்வார்கள். அவர்களிடம் எல்லாம் ‘டீ காஃபி சாப்பிடுறது இல்ல’ அது இதுனு எதாவது சொல்லி தப்பித்துவிடுங்கள். இல்லையென்றால் உடல் சீக்கிரம் கெட்டுவிடும்.

3. நம் சேல்ஸ் வேலை ஆஃபிஸ் வேலை போன்றது அல்ல. வேளாவேளைக்கு சரியாக நேரம் வைத்து சாப்பிட முடியாது. எங்கேயாவது எதாவது பஞ்சாயத்தில் பொழுது போவதே தெரியாமல் இருக்கும். மணியை பார்த்தால், மாலை 4 ஆகியிருக்கும். என்ன ஆனாலும் காலை சாப்பாட்டை 10மணிக்குள்ளும், மதியம் 2 மணிக்குள்ளும், இரவு 9மணிக்குள்ளும் முடித்துக்கொள்ளுங்கள். புரோட்டா மிக எளிதாக, எல்லா ஊர்களிலும், தெருவுக்கு தெரு இண்டு இடுக்கு மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் என்றாலும் அதிகம் சாப்பிடாதீர்கள்.

4. உடம்பை மிகவும் கண்ட்ரோலாக வைத்துக்கொள்ளுங்கள்.

சேல்ஸ் வேலையில் சேரும் போது ’அந்த 7 நாட்கள்’ அம்பிகா மாதிரி இருக்கும் ஆட்கள், அடுத்த 3,4 வருடங்களில் ’அவன் இவன்’ அம்பிகா மாதிரி ஊதிவிடுவார்கள். எல்லாம் வகை தொகை இல்லாமல் டீலர் கடைகளில் திங்கும் டீ, வடை, பஜ்ஜி, போன்றவையும், கம்பெனியில் தான் சாப்பாட்டுக்கு பில் வச்சு கன்வேயன்ஸ் கொடுக்குறாங்களே, என்கிற தைரியத்தில் நெய்யும் பருப்பு பொடியும் போட்டு ஐயர் மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸும், முனியாண்டி விலாஸில் முழுங்கும் முழுக்கோழி பிரியாணியும் தான் காரணம். எனக்கு தெரிந்த பல சேல்ஸ் ஆட்களுக்கு 30 வயதிலேயே, ப்ரெஷர், கொலஸ்ட்ரால், சுகர், உடல் பருமன், இதய நோய், லொட்டு லொசுக்கு என எல்லாம் உண்டு. அதனால் சேல்ஸ் வேலையில் நாவடக்கம் திங்கும் போதும் முக்கியம்.

5. நாம் செல்லும் வண்டி நல்ல கண்டிசனில் இருத்தல் வேண்டும்.

வாழ்வில் பாதி நேரம் நாம் வண்டியில் தான் கழிக்க வேண்டியிருக்கும். சரியான நேரத்தில் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும். தரமான ஹெல்மெட் எப்போதும் அணிந்தே வண்டி ஓட்டுங்கள். பெட்ரோல் எப்போது ரிசர்வில் விழாத அளவுக்கு இருக்கட்டும். 
சேல்ஸ் வேலையில் எப்போதும் தொலைபேசி அழைப்பு வந்துகொண்டிருந்தாலும் வண்டியில் செல்லும் போது ஃபோன் பேசவோ, எஸ்.எம்.எஸ் அனுப்பவோ வேண்டாம். நம் உயிர் நம் கம்பெனிக்கு மிக முக்கியம்.. என்னது குடும்பமா? சேல்ஸ் வேலைக்கு வந்து விட்டால் குடும்பம் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்..

6. டீலர் வீட்டில் இருக்கும் பெண்களை நம் வீட்டுப் பெண்களாக நினைத்துப் பழகுங்கள்.  நம்மை வீட்டில் ஒருவராக, தன் மகனாக, அண்ணனாக, தம்பியாக நினைத்து பல டீலர்கள் பழகுவார்கள். அந்த பழக்கம் நீங்கள் அந்த கம்பெனியில் இருந்து மாறினாலும், வேறு ஊருக்கு மாற்றல் ஆனாலும் தொடரும். ஆள் பழக்கம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் உதவும். அதனால் அவர்கள் பழக்கத்தை முறையாக பயன்படுத்துங்கள்.

7. போட்டி நிறுவன சேல்ஸ் ஆபிஸர்களுடன் நல்ல பழக்கத்தில் எப்போதும் இருங்கள். அந்தப்பழக்கம் ரொம்ப பெர்சனலாகவும் போகக்கூடாது, மிகவும் ப்ரொஃபசனலாகவும் இருக்கக் கூடாது. அதாவது நமக்கு தேவைப்படும் போது அவர் உதவி செய்ய தயங்காத அளவுக்கு அந்தப்பழக்கம் இருக்க வேண்டும்.

8. எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலையில் இருக்கும் கோவத்தையோ, பிரச்சனைகளையோ வீட்டில் காட்டாதீர்கள். வீட்டிற்குள் வரும் போது அலுவலக ப்ரஷர்களை வெளியிலேயே விட்டுவிட்டு வாருங்கள்.


அவ்வளவு தான்.. இந்த கட்டுரைத் தொடர் முடிந்தது. இனி நீங்கள் தைரியமாக சேல்ஸ் வேலையில் அடியெடுத்து வைக்கலாம். பல தரப்பட்ட மனிதர்களின் பழக்கமும், விதவிதமான அனுபவங்களும், ஊர் சுற்ற கம்பெனி கொடுக்கும் காசும், தினமும் பிரச்சனைகளை சந்திக்கும் த்ரில்லும் இனி உங்கள் தினப்படி வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும். வாழ்த்துக்கள்..

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம்..

இந்த பதிவின் முதல் பாகத்திற்கு இங்கு
ரெண்டாம் பாகத்திற்கு இங்கு
மூன்றாம் பாகத்திற்கு இங்கு க்ளிக்கவும்..

ஒரு பொருளை வாடிக்கையாளரிடம் விற்பதோடு நமக்கு அவருக்குமான உறவு முடிந்துவிடுவது என்பது பழைய பாணி வியாபரம். அதாவது வாடிக்கையாளர் கேட்பதை மட்டும் கொடுப்பதோடு நம் பொறுப்பு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த விற்பனைக்கு பிறகும் நமக்கும் அவருக்கமான உறவை தொடர, அவரை நம் பொருளின் மேல் காதலை உண்டு பண்ண, (ஆம் காதலை தான்) சேவை (service) கண்டிப்பாக தேவை. கொடுக்கும் காசுக்கு வெறும் பொருளை மட்டும் கொடுக்காமல், அதோடு அதிகமாக கண்ணுக்கு தெரியாத சேவையையும் கொடுப்பது தான் இன்றைய விற்பனையில் மிக முக்கியமான ஒன்று. மேலாண்மையில் services marketing என தனி துறை வரும் அளவிற்கு இன்று சேவைத்துறை மின்னுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக வருமானம் ஈட்டும் துறை சேவைத்துறை தான். சேவை என்பதை தனியாக கொடுக்க முடியாது, வாங்கும் பொருளோடு கொடுக்கும் நம்பகத்தன்மை (reliability), உத்திரிவாதம் (assurance), கண்களுக்கு இதமான நல்ல விற்பனை கூடம், இடம் & பொருட்கள் (tangibility), வாடிக்கையாளரின் இடத்தில் இருந்து யோசிப்பது (empathy), முறையான பதில் அளிப்பது (responsiveness) இந்த ஐந்தும் தான் சேவையின் ஐந்து பரிமாணங்கள்.

 எனக்கு தெரிந்த கிழிந்த துணியை தைத்துக்கொடுக்கும் பிளாட்பார டெயிலர் ஒருவர் இருக்கிறார். பொதுவாக இது போன்ற ஆட்கள் என்ன செய்வார்கள்? நாம் கிழிந்த துணியை கொடுத்துவிட்டு சென்றால், “நாளைக்கு சாந்தரம் வாங்க” என்பர். மறுநாள் சாயந்திரம் சென்றால், “இன்னும் ரெடி ஆகல, அப்புறம் வாங்க” என்பர், அல்லது தயாராக இருக்கும் துணியை கொடுத்து காசை வாங்கிக்கொள்வர். ஆனால் இந்த டெயிலர், துணியை கொடுக்கும் போதே, தன் கையில் இருக்கும் சாக்பீஸில் நம் ஃபோன் நம்பரை மட்டும் வாங்கி துணியில் எழுதிக்கொண்டு, ”சாந்தரம் கூப்பிடுறேன் சார்” என்பார். சரியாக மாலையில் கூப்பிட்டு “சார் உங்க துணி ரெடியா இருக்கு, வந்து வாங்கிக்கோங்க” என ஃபோன் போட்டு சொல்லுவார். மிகச்சாதரண விசயமாக இருந்தாலும், இது எத்தனை விதத்தில் உதவும் என யோசித்துப்பாருங்கள். தேவையில்லாமல் காத்துக்கிடக்க தேவையில்லை, நேரம் மிச்சம். ஒரு வேளை துணி தைக்க கொடுத்ததையே நாம் மறந்து போயிருந்தால் கூட சரியான நேரத்தில் கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார். அவர் வேலையை பொறுத்தவரை, இது ஒரு சேவை. துணி தைப்பது ஒரு பொருளை சரியாக கொடுப்பது, அதில் ஃபோன் நம்பரை வாங்கி நமக்கு சரியான நேரத்தில் பதில் சொல்வது தான் அந்த பொருளோடு தரும் சேவை. 
என் டீலர் ஒருவர் ஆர்டர் கொடுத்தவுடன் வேக வேகமாக ஆஃபிஸ்க்கு ஃபோன் அடித்து அந்த டீலரின் ஆர்டரை உறுதிப்படுத்திக்கொண்டு, மறுநாள் சரியான நேரத்தில் அந்த பொருளை டீலரிடம் சேர்ப்பது என் அடிப்படை வேலை. இதை நான் ஒழுங்காக செய்தாலே போதும், மாதக்கடைசி நாளில் என் அக்கவுண்டில் சம்பளம் வந்ததாக எஸ்.எம்.எஸ் வந்துவிடும். ஆனால் இதை தான் என் போட்டியாளரும் செய்கிறார். பின் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவரும் சிமிண்ட் தான் விற்கிறார். கேட்டவுடன் பொருளை கொடுக்கிறார். இந்த இடத்தில் தான் பொருளையும் தாண்டி நாம் கொடுக்கும் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கோவத்தில் வாடிக்கையாளர் கத்தும் போது பொறுத்துக்கொள்வது கூட ஒரு சேவை தான். நம் வீட்டில் யாருக்காவது உடம்புக்கு சரியில்லாத போது கூட, வாடிக்கையாளரின் சரியாக சாப்பிடாத செல்ல ஜிம்மியை பற்றி அக்கறையுடன் விசாரித்து நமக்கு தெரிந்த வெடினரி டாக்டரின் அட்ரெஸை சொல்வதும் கூட சேவை தான்.
ப்ரௌசிங் சென்டரில் ஏசி, தனி கேபின் இருப்பது ஒரு சேவை தான். பேருந்தில் சாய்வு நாற்காலி இருப்பது, செல்போனில் திடீரென்று வரும் ஃபுல் டாக்டைம், பல நிறுவனங்களின் ரிசெப்சனில் இருக்கும் அழகழகான பெண்கள் என எல்லாமே சேவைகளின் வெவ்வேறு வடிவங்கள் தான். வாடிக்கையாளரிடம் கனிவாக பேசுவது, அவர்கள் போடும் மொக்கையையெல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையாக கேட்பது, பொருளில் எதாவது பிரச்சனை என்று வாடிக்கையாளர் புகார் சொன்னால் ஃபோனிலேயே சமாளிக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நேரில் போய் நிற்பது இது எல்லாமே நம் நிறுவனத்தின் மீதும், பொருளின் மீதும் மட்டும் அல்ல, நம் மீதும் மதிப்பை உயர்த்தும்.
ஒரு பொருளை விற்றதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடிக்கடி அவரை சந்தித்து, பொருளின் தரம், உழைப்பு என்று பேசிக்கொண்டும், பொருள் பற்றிய நல்ல/கெட்ட விசயங்களை பெற்றுக்கொள்வதும், அதற்கு தகுந்தாற்போல் தக்க நடவடிக்கை உடனுக்குடன் எடுப்பதும், நம்மிடம் வாடிக்கையாளர் வெளிப்படையாக பேச சரியான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுமே சேவை. 


சேல்ஸ் வேலையில் சேவை என்பது வாடிக்கையாளர் நம் பொறுமையை எவ்வளவு சோதித்தாலும் அமைதியான மனமுடனும் சிரித்த முகத்துடனும், நம்மை அவர் இடத்தில் வைத்துப்பார்த்து அவருக்கு தீர்வுகள் (பெர்சனலாகவும், வியாபரத்திலும்) சொல்வதும் தான் சேவை.. இங்கு சேவை என்பது பிற தொழில்கள் போல் ஏசி ரூமும், அழகான ரிசப்சன் பெண்களும் கிடையாது. வெலியில் அழைந்து கசகசவென அழுக்கோடும் புழுக்கத்தோடும் நுழைந்து, வாடிக்கையாளர் மனதில் இடம் பிடிப்பது தான் இங்கு சேவை. அழுக்கும் புழுக்கமும் இருந்தாலும் எப்படி அவர் மனதில் நுழைவது? பேச்சு தான்.. நாம் பார்த்த அந்த முதல் மூன்று தலைப்புகளையும் (உடல் மொழி, கவனம், பொறுமை) சரியான இடத்தில் சரியான முறையில் பின்பற்றினாலே நல்ல சேவையை கொடுக்க முடியும்.

பொதுவான இந்த நான்கு விசயங்களை நீங்கள் பின்பற்றினால் வாடிக்கையாளாரிடம் ஜெயித்துவிடலாம். இந்த பகுதியோடு இந்த தொடரை முடிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் வாடிக்கையாளரையும் தாண்டி, நம் வேலைக்கு அங்கீகாரம் கொடுப்பது நம் பாஸ் தான். அதனால் வாடிக்கையாளரை பற்றி இதுவரை பேசிய நான் அடுத்த பதிவில் மேனேஜரிடம் எப்படி ஜெயிப்பது மற்றும் சேல்ஸ் வேலையில் பொதுவாக பின்பற்ற வேண்டிய அதே நேரத்தில் வேலைக்கு சம்பந்தம் இல்லாத ஆனாலும் முக்கிய விசயங்களையும் கூறி முடிக்கிறேன்..

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - மூன்றாம் பாகம்

 இந்த தொடரின் முதல் பாகத்துக்கு இங்கும்
ரெண்டாம் பாகத்துக்கு இங்கும் க்ளிக்கவும்..

இப்போது சேல்ஸ் வேலையின் அடுத்த முக்கிய விசயங்களான பொறுமை & கவனத்தை பற்றி அறியலாம். பொறுமை, கவனம் இரண்டும் வேறு வேறான வார்த்தைகள் என்றாலும், சேல்ஸ் வேலையை பொறுத்தவரை இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது. பொறுமையோடு கவனமும் வேண்டும். பொறுமை என்பது இங்கே மெதுவாக என்னும் அர்த்தத்தில் அல்லாமல், கடின சூழ்நிலைகளிலும் நிதானமாக இருப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதானே கவனம்? என கேள்வி கேட்பவர்கள், கவனம் என்பதை கவனித்தல் அதாவது listening என்னும்பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இன்று காலை எனது டீலர் ஒருவருக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஊருக்கு 70கி.மீ முன்பே பழுதாகிவிட்டது. அவர் இன்று கான்கிரீட் வைத்திருக்கும் தனது வாடிக்கையாளருக்கு சிமெண்ட் மூடை கொடுத்தே ஆக வேண்டும். கடையிலும் மூட்டை இல்லை. டீலர் என்னை காலை 6மணியில் இருந்து துளைத்து எடுக்கிறார் உடனடியாக மூடை வேண்டும் என்று. லாரி டிரைவரோ எல்லாம் சரியாகி வர மதியமாகிவிடும் என்கிறார். டீலர் திரும்ப திரும்ப அழைத்து தனது வாடிக்கையாளரின் முக்கியத்துவம், அவரை பிடிக்க மற்ற கம்பெனி டீலர்கள் செய்யும் தகிடுதத்தோம் எல்லாவற்றையும் மீறி தான் பெற்ற ஆர்டர் இது என்று என்னென்னமோ சொல்கிறார். 
 
இந்த சூழலில் வேறொரு ஊரில் இருக்கும் இன்னொரு டீலர், அவர் வழக்கமாக கொடுக்கும் வாடிக்கையாளருக்கு வேறொரு டீலர் குறைந்த விலையில் மூட்டையை இறக்கி சென்றுவிட்டதால் என்னிடம் சண்டை போடுகிறார், “எல்லாரையும் ஒரே ரேட்ல விக்க வைக்க முடியலேன்னா, நீங்கலாம் எதுக்கு சார் கம்பெனி நடத்துறீங்க?” என்று.. ஏதோ நான் தான் முதல் போட்டு, சுண்ணாம்பு குவாரிகளை வாங்கி சிமெண்ட் உற்பத்தி செய்து விற்பது போல். இது எனது தினப்படி வாழ்க்கையில் காலை 6-9க்குள் நடக்கும் சாதாரண விசயங்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் நான் எனது வாடிக்கையாளர்கள் (டீலர்கள்) மனம் கோணாமலும் கம்பெனியின் மதிப்பு கெடாமலும், எனக்கு டீலருக்கும் உள்ள உறவுக்கும் பங்கம் வராமலும் முடிவெடுக்க வேண்டும். என்ன செய்யலாம்?
.
”வண்டி ரிப்பேர் ஆகிட்டா நானா சார் போய் தள்ளிட்டு வர முடியும்? எப்ப சரியாகுமோ அப்ப தான் மூட வரும்.. வேற ஒன்னும் பண்ண முடியாது சார். அவ்ளோ அவசரம்னா உங்க பார்ட்டிய வேற எங்கேயாவது மூட்டை எடுத்துக்கிட சொல்லுங்க” என்று மிகவும் நிதர்சனமான அப்பட்டமான உண்மையை கத்திவிட தோன்றும் நமக்கு. பின்ன என்ன, அதிகாலையில் தொந்தரவு செய்தால் அப்படித்தான் யாராக இருந்தாலும் கத்துவார்கள். ஆனால் சேல்ஸ் ரெப் சோறில் கொஞ்சம் குறைவாக உப்பு போட்டு சாப்பிடுவதால் அப்படியெல்லாம் கத்தக்கூடாது. கத்தினால் உடம்புக்கு மட்டும் அல்ல, நம் வேலைக்கும் ஆகாது. ஒரு வேலை தூக்க கலக்கத்தில் அவரிடம் கத்திவிட்டால் அது தான் அவர் நமக்கு அழைக்கும் கடைசி அழைப்பாக இருக்கும்.  அவரிடம் இருந்து அடுத்து ஒரு ஆர்டர் வாங்க முடியாது, கம்பெனிக்கு அவர் பணம் கொடுக்க வேண்டும் என்றால் அதை வாங்குவதற்கு பதிலாக எங்கேயாவது காளை மாடு இருந்தால் பால் வியாபாரம் செய்ய போய் விடலாம்.
 .
நான் என்ன செய்தேன்?
“சார் கான்கிரீட் எத்தன மணிக்கு?”
“8மணிக்கு சார். மணி இப்பயே 6.30 ஆகுது.. டிரைவர் வேற மத்தியானம் ஆகிரும்னு சொல்றான். நான் என்ன சார் பண்ணுவேன்?”
“சார் பொறுமையா இருங்க, நான் எதாவது பண்ணுறேன்”என்னிடம் ஒரு மாற்று இருந்தாலும் நான் அதை இப்போது சொல்லாமல் பேச்சை முடிக்கிறென்.
“சரி சார், ஏதாவது பண்ணுங்க”  - ஃபோனை துண்டித்துவிடுவார். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் கூப்பிட்டு மேலே சொன்ன அதே கதை வசனம் எல்லாம் ரீ-மேக் ஆகும். கடைசியாக நான் சொன்னேன்.
“சார் உங்களுக்கு மூடை மதியம் தான் வரும். ஆனா உங்க பார்டிக்கு கரெக்ட்டா 8.30க்கு நான் இறக்கி கொடுத்துறேன்” என்று 8மணிக்கு சொன்னேன். அவர் “சார் ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார். இன்று காலை வேறொரு டீலருக்கு வந்த மூடையை, அவரிடம் கெஞ்சி கூத்தாடி இவருக்கு இறக்கி கொடுத்தேன். நான் முதலிலேயே என் டீலரிடம் இதை சொல்லியிருந்தால், “அவன்ட்ட இருந்தா? எனக்கு அவன பிடிக்காது.. நீங்க அந்த லாரியவே சீக்கிரம் ரிப்பேர் பாத்து எனக்கு 8.30மணிக்குள்ள கொண்டு வாங்க” என என்னென்னமோ உளறியிருப்பார். ஆனால் கொஞ்சம் பொறுமையாக நிதானமாக, அதே நேரம் கோவப்படாமலும் தாமதமாகாமலும் முடித்துக்கொடுக்க வேண்டும்.
 .
அந்த இன்னொரு டீலர் இருந்தாரெ, “என் பார்ட்டிக்கு காசு கம்மியா இன்னொருத்தன் சப்ளை பண்ணிட்டான்”னு.. இந்த மாதிரி எல்லா கம்பெனியிலும் ஒருவர் இருப்பார். எப்போதும் பிறரை குறை கூறிக்கொண்டு. அவர் சொல்வதில் சில நேரங்களில் உண்மை இருந்தாலும் பல நேரங்களில் டூப்பாக தான் இருக்கும். நான் அவர் கடைக்கு சென்றவுடன் என்னை பேசவே விடாமல், “அவன் அப்படி, இவன் இப்படி, எவனும் ஒழுங்கா யாவாரம் பண்ணுறது இல்ல, எவனும் கம்பெனி ரூல்ஸ மதிக்குறது இல்ல” என்று பெரிய குட்ஸ் வண்டி போல் புகை விட்டு கிளப்ப ஆரம்பித்துவிடுவார் அவரது பிரச்சனைகளை. இந்த மாதிரி டீலர்கள் எப்போதும் தாங்கள் கம்பெனியில் கவனிக்கப்பட வேண்டும், தங்களை கம்பெனி ஒரு information giverஆக நினைக்க வேண்டும், தாங்கள் மட்டும் தான்  கம்பெனியின் ரூல்ஸ் படி நடப்பவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள். இவர்கள் நம்மை சும்மா அடிக்கடி கூப்பிட்டு, market information என்னும் பெயரில் அவர்களுக்கு நேற்று இரவு வந்த கனவையெல்லாம் கலந்துகட்டி கதை அடிப்பார்கள்.

இவர்களிடம் இருந்து அதிகமாக ஃபோனும், தொந்தரவும் இருக்குமே தவிர, இவர்களை டீல் செய்வது ரொம்ப எளிது. நீங்கள் சேல்ஸ் வேலையில் நுழையும் போது இது போன்ற டீலர்களின் கால் வந்தாலே, அவர்களின் கடைக்கு போவதற்கே பயமாக இருக்கும், “இன்னைக்கு பயபுள்ள என்ன பிரச்சனைய கிளப்ப போகுதோ?”னு.. ஆனா போகப்போக, ஒன்று மட்டும் புரிந்துவிடும். அவர்களின் பிரச்சனைக்கு நாம் எவ்வளவு மெனக்கெட்டு உதவி செய்தாலும், அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதனால் இது போன்ற ஆட்களின் ஃபோன் வந்தாலே மிகவும் சாந்தமாக, அக்கறையாக, “நீங்க சொல்றது எல்லாம் சரி தான் சார். நானும் கேள்விப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன். நீங்க ஒருத்தரு தான் சார் நம்ம கம்பெனி ரூல்ஸ் படி நடக்குற ஒரே ஆள். விடுங்க சார், யார் கொறச்சி வித்தாலும் நான் பாத்துக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி டீலர்களுக்கு காரியம் தேவை இல்லை, இந்த வார்த்தைகளே போதும். தினமும் அவர் ஏதாவது பிரச்சனையை சொல்லுவார், நீங்களும், “இந்த பிரச்சனைய என்ட்ட விடுங்க சார், நான் பாத்துக்கிறேன்” என்று கெத்தாக சொல்லி அதோடு அதை தாராளமாக தைரியமாக மறந்து விடலாம். அந்த டீலர்களும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நமது கரிசனமான ஆதரவான வார்தைகள் தான். நாம் எப்போதும் அவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறோமோ என்று செக் பண்ணிக்கொண்டே இருக்கும் சந்தேகப்பேர்வழிகள் அவர்கள்.
.
இந்த மாதிரி தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் ஏதாவ்து பிரச்சனை வரும். பிரச்சனை வரும் என்பதை விட, பிரச்சனை தான் நம்மை காலையில் அலாரம் அடித்து எழுப்பி விடும் என்று சொல்லலாம். அனால் கொஞ்சம் நிதானமாக தெளிவாக அலசினால் எதையும் சமாளித்துவிடலாம். சேல்ஸ் வேலை என்பதே 90சதவிகித சமாளிப்பு தான். பொறுமை என்பதை தியரிட்டிக்கலாக சொல்லாமல் என் அனுபவம் மூலம் சொல்லியிருக்கிறேன். இது போதுமானதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், உங்கள் வாடிக்கையாளர் உங்களை எவ்வளவு தான் கோபப்படுத்துமாறு பேசினாலும், தன்னிடம் இருக்கும் டென்சனை உங்கள் தலை மீது ஏற்ற முயற்சி செய்தாலும், நீங்கள் அமைதியாக, அந்த பிரச்சனையை, தலையில் ஏற்றாமல் கொஞ்சம் தூரத்தில் வைத்து பார்த்தால், எளிதாக அதை தீர்த்துவிடலாம். அப்படி தூரத்தில் வைத்து பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமை அவசியம். பதட்டமும் கோவமும் சேல்ஸ் வேலைக்கு முதல் எதிரி.. 

சரி அடுத்து கவனித்தல், அதாவது listening. ஒவ்வொரு நல்ல கலந்துரையாடலும் சரியான கவனித்தல் மூலமே ஆரம்பிக்கிறது. உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் தனது பிரச்சனையை - அது வியாபாரமோ, சொந்த பிரச்சனையோ - சொல்லிக்கொண்டிருக்கிறார். நீங்கள் மேஜையில் இருக்கும் பேனாவை எடுத்து சுகமாக கண்களை மூடிக்கொண்டு காதை குடைந்து கொண்டிருந்தாலோ, அல்லது உங்கள் ஃபோனில் எஸ்.எம்.எஸ், கேம்ஸ் விளையாண்டு கோண்டிருந்தாலோ, அவர் அதற்கு பின் உங்களிடம் எதையும் சொல்ல மாட்டார். சண்டை போடும் வாடிக்கையாளரை கூட நம்பிவிடலாம், அவர் மனதில் என்ன இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். ஆனால் இப்படி அமைதியாக இருப்பவர்கள் எப்பவுமே டேஞ்சர். அதனால் நம் வாடிக்கையாளார்களை எப்போதும் பேச வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் பேசுவதை நாம் கவனிக்க வேண்டும். கவனிக்க பிடிக்கவில்லை என்றால், கவனிப்பது போலாவது நடிக்க வேண்டும். ஆம், பள்ளிக்காலங்களில், ஆங்கில இலக்கண வகுப்பில் உட்கார்ந்திருப்போமே, அதே மாதிரி தான். வாத்தியாருக்கு நம்மை பார்த்தால் இவன் கவனிக்கிறானா இல்லையா என்கிற குழப்பம் வந்தாலும் பாடம் நடத்துவதை நிறுத்த மாட்டார். அதே போல் ஒரு தியான நிலையில் டீலர் முன் அமர்ந்து கொண்டால் அவரும் நம்மிடம் பேசுவதை நிறுத்த மாட்டார்.
ஒருவர் பேசுவதை நாம் முழுதாக கவனிக்கும் போது அவருக்கு நம் மேல் நம்பிக்கை வரும். கவனித்து பொறுமையாக அதை நாம் கையாளும் போது நம் மீது மதிப்பு வரும். நம்பிக்கையும் மதிப்பும் வரும் போது, தன்னால் நமக்கு ஆர்டரும் வரும், கம்பெனிக்கு வர வேண்டிய பணமும் வரும். வாடிக்கையாளரை பேசவே விடாமல் நாமே பேசிக்கொண்டிருந்தால், அவர் நம்மிடம் எதையும் சொல்லவே மாட்டார். வாடிக்கையாளர் ஒன்றும் சொல்லவில்லையென்றால் பிரச்சனையே இல்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு நம்மிடம் பிரச்சனையை சொல்லப்பிடிக்கவில்லை என்று அர்த்தம். உங்களால் மார்க்கெட்டில் என்ன நடக்கிறது என்று வாடிக்கையாளர் மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும். Market information வேண்டுமானால் வாடிக்கையாளரை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு வர வேண்டிய தகவல் எல்லாம் உங்கள் போட்டியாளருக்கு சென்று விடும். 
இதை எளிதாக சொல்ல வேண்டுமானால், கேர்ள் ஃப்ரெண்டிடம், மொக்கை போடும் போது நடு நடுவில் அவளையும் கொஞ்சம் பேச விட வேண்டும். நாமே பேசிக்கொண்டிருந்தால், அவள் பேச்சை கேட்கும் ஒருவன் வரும் போது நமக்கு டாட்டா காட்டி போய்விடுவாள். அதே போல் தான், நீங்கள் கவனிக்கவில்லையென்றால், டீலர் பேச்சுக்கு மண்டையாட்டும் ஒரு போட்டியாளன் வரும் போது உங்கள் டீலர் அவனின் வாடிக்கையாளர் ஆகிவிடுவார். அதனால் கவனித்தல், பொறுமையாக ஆழந்து முடிவெடுத்தல் என்பது மிகவும் முக்கியமாகப்படுகிறது.
.
சரி, என் பொறுமை மற்றும் டீலருக்கு செவி சாய்த்தல் போன்ற தகுதிகளின் மூலம் ஆர்டரை பெற்று விட்டேன். இனி வெற்றி தானே? என்று நினைக்கலாம். ஆனால் சேல்ஸ் வேலையின் மிக முக்கியமான விசயமே அடுத்து தான் இருக்கிறது. சேவை. நீங்கள் என்ன தான் பெரிய பேச்சாளராக, டீலர் சொல்வதை எல்லாம் வேத வாக்காக அமைதியாக கேட்பவராக இருந்தாலும், சரியான சேவை இல்லையென்றால் உங்களின் வியாபாரம் அந்த முதல் ஆர்டரோடு அல்பாயூசில் முடிந்து விடும். வியாபாரத்தை அமரமாக்க என்ன செய்ய வேண்டும்? அடுத்த பதிவில்.........

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்..

 முன் குறிப்பு:
இந்த தொடரில் வாடிக்கையாளர் என்று குறிப்பது, ஒரு நிறுவனத்தின் டீலர்கள், ஏஜெண்டுகள், ஸ்டாக்கிஸ்டுகள், நுகவோர்கள் என அனைவரையும் தான்.. 
  சென்ற பதிவில் சேல்ஸ் வேலையில் ஜெயிப்பதற்கான நான்கு விசயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவதாக சொல்லியிருந்த உடல் மொழி (body language) பற்றிப்பார்க்கலாம். பேச்சின் மூலம் அல்லாமல், ஒருவரின் உடல் அசைவுகள், மூலமாக அவர் சொல்ல வருவதை, மனதில் இருப்பதை காட்டுவதே உடல் மொழி எனப்படும். ஒருவர் பேச்சில் வசியம் வைக்கும் வஸ்தாதாக இருந்தாலும் அவரின் உடல் மொழி, சரியாக இல்லையென்றால் அவர் பேசும் பேச்சு எல்லாம், பேலன்ஸ் இல்லாத ஃபோனில் பேசுவது போல் தான், no use.. உடல் மொழியை புரிந்து கொள்ள முயல்வது மிகுந்த சுவாரசியமானது. அதை நம் வாழ்வில் பரிட்சித்து பார்ப்பது அதை விட சுவாரசியமானது. யோசித்துப்பாருங்கள், நம் முன் ஒருவர் அமர்ந்து எல்லாம் தெரிந்தது போல் பந்தாவாக பேசிக்கொண்டிருக்கிறார், ஆனால் அவர் உடல் மொழியிலேயே புரிந்துவிடுகிறது அவர் சரியான டூபாக்கூர் என்று.. அப்போது நம் மனதுக்குள் ஒரு வித குறுகுறுப்பான ஆனந்தம் வருமே? ”பேசுடா பேசு” என்பது போல் அமைதியாக ரசித்துக்கொண்டிருப்போமே, அது சுவாரசியம் தானே?

சில பொதுவான முக்கியமான உடல் மொழிகள் இருக்கின்றன.. அதைப்பார்த்து விட்டு சேல்ஸ் வேலைக்கு தேவையானதை பார்க்கலாம். ஒருவர் பேசும் போது முன் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு பேசினால் அவர் நீங்கள் சொல்வதை காதில் மட்டும் வாங்க்கிகொண்டு தலையில் ஏற்ற தயாராக இல்லை என் அர்த்தம். அதே போல் கையை பின் பக்கம் கட்டிக்கொண்டு பேசும் ஒருவர், முழுதாக சொல்லாமல் மனதிற்குள் எதையோ மறைக்கிறார். பேசும் போது அடிக்கடி ஒருவர் மூக்கை சொறிந்தால் ”தம்பி கொஞ்சம் உண்மைய பேசுறியா?” என தைரியமாக கேளுங்கள். அதே போல் ஒருவர் பேசும் போது எதையாவது ஞாபகப்படுத்த யோசிக்கும் போது, கண்கள் வலது ஓரம் மேலே எழும்பி யோசித்தால் அவருக்கு நிஜமாகவே ஞாபகம் இருக்கிறது என அர்த்தம். அதுவே இடது ஓரம் மேலே சென்றால் அவருக்கு ஞாபகம் இல்லை என அர்த்தம். ஒரு வேளை இடது ஓரம் மேலே யோசித்துவிட்டு, “ஆஆஆ ஞாபகம் வந்துருச்சி” என சொன்னால் “உன் ஞாபகத்த நீயே வச்சிக்கோ” என நகர்ந்து விடுங்கள். ஒருவர் கால் மீது கால் போட்டிருந்தால், நம் ஊர் பக்கம் மரியாதை தெரியாதவன் என்பார்கள். ஆனால் உடல் மொழிப்படி அப்படி ஒருவர் அம்ர்ந்திருந்தால், அது அவர் பதட்டமாக, அல்லது பாதுகாப்பின்மையாக உணருகிறார் என அர்த்தம்.
சரி, இப்போது சேல்ஸ் வேலையில் என்ன மாதிரி உடல்மொழி தேவை என பார்க்கலாம். முதலில் உடை. உடை என்பது உடல்மொழியில் சேர்க்கப்படுவதில்லை என்றாலும், உடல்மொழியை விட, முன்னதாக உங்களை பற்றிய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸனை கொடுப்பது உங்கள் உடை தான். பொதுவாக நம் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு வித டென்ஸனில், பரபரப்பில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு காரியம் டக்கென்று முடிய வேண்டும். அந்த மாதிரி ஒரு பரபரப்பில் நாம் அவர் முன் மாரியம்மன் கோவிலில் தீ மிதிப்பவன் போல் மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் போய் நின்றால், அவர் கண்களில் தான் தீ எரியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், கரகாட்டக்காரன் மாதிரி ஜிலு ஜிலு சிகப்பு சட்டை, பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை என்று போட்டு, “ஏன்டா இவன் வேற வந்து வெறுப்பேத்துறான்?” என்பது போல் வாடிக்கையாளர்களை உணர வைத்துவிடுவார்கள். கொடூரமான விசயம் என்னவென்றால், ஒரு சிலர் எங்கெங்கோ ஜிப் இருக்கும் பேண்ட்டை போட்டு வருவது தான். இது போல் வந்த ஒரு கம்பெனியின் சேல்ஸ் ஆஃபிஸரை பார்த்து என் டீலர் இப்படி சொன்னார், ”பாவம் அவனுக்கு மட்டும் ஆண்டவன் வக தொக இல்லாம படைச்சுட்டான் போல? அதான் இத்தன ஜிப்ப போட்டுக்கிட்டு அலையுது”னு.. அன்றில் இருந்து என் டீலரிடம் அந்த ஆபிஸரின் மதிப்பு மொத்தமாக காலி.
.
அதே போல் டீ-சர்ட்டும் கூடவே கூடாது.. டீ-சர்ட் என்பது லீவு நாளைக்கு, வீட்டில் சும்மா இருக்கும் போது போடும் ஒரு ஆடை என்பது போல் ஆகிவிட்டது. அதை போட்டுக்கொண்டு வாடிக்கையாளரை பார்த்தால், நம்மிடம் ஒரு professional look இருக்காது. ஏதோ காலையில் பல் விளக்காமல் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் சொந்தக்காரல் லுக் தான் இருக்கும். ஜீன்ஸ் போடலாம், ஆனால் அது துவைக்கப்பட்டு சுத்தமாக, முக்கியமாக பெல் பாட்டமாக இல்லாமல் இருக்க வேண்டும். சட்டை தான் மிக முக்கியம். மைல்ட் கலராக, கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும். முழுக்கை சட்டையாக இருந்தால் ரொம்ப நல்லது. சட்டையில் டிசைன், பூனைப்படம், சட்டை பாக்கெட்டில் ஆர்டின் படம் இதெல்லாம் இருந்தால் அந்த சட்டையை பக்கத்து வீட்டு காலேஜ் ஸ்டூடண்ட்டுக்கு இனாமாக கொடுத்து விடுங்கள். நல்ல ஷூ, துவைத்த சாக்ஸ், அழகாக இன் செய்த சட்டை, இது போதும் உங்களின் ஃபர்ஸ்ட் இம்ப்ரஸனை சரியாக கொடுக்க..
சரி, மேலே சொன்னபடி உடையெல்லாம் போட்டு வாடிக்கையாளரின் இடத்திற்கு அவரை பார்க்க செல்கிறோம். சென்றவுடன் கை கொடுக்க வேண்டும். கை கொடுத்து பழக்கம் இல்லாதவர்கள் கொஞ்சம் பழகிக்கொண்டு செல்லலாம். என்னது கை கொடுக்க பழக வேண்டுமா? என கேட்காதீர்கள். சரியாக பழக்கம் இல்லாதவர்கள் கை கொடுக்காமலே இருப்பது உசிதம். மேலே காட்டியிருக்கும் படத்தில் இருப்பது போல் இருவரின் உள்ளங்கையும் சேர்ந்து விரல்கள் மற்றவரின் கையின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டும் இருக்க வேண்டும். இதில் ஒருவரின் உள்ளங்கையில் மற்றொருவர் தனது உள்ளங்கையை பதிக்காமல் வெறும் விரல்களை மட்டும் கொடுத்தால், அவருக்கு (விரலை மட்டும் கொடுப்பவருக்கு), இவர் மேல் நம்பிக்கை இல்லை என அர்த்தம். அதே போல் கை கொடுக்கும் போது பெருவிரலும் மடங்கி இருக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால், ‘நான் உன்னை விட பெரியவன்’ என்கிற எண்ணம் இருப்பவராக அர்த்தம். ஆனால் நம் தேசத்தில் யாரும் கை கொடுப்பதை இவ்வளவு உன்னிப்பாக செய்வதில்லை. சும்மா கை குலுக்கி கொள்வதே ஒரு வித மரியாதை தான் நம் தேசத்தில்.
உடல் மொழியில் மிக மிக முக்கியமானது கண்களை பார்த்து பேசுவது தான். நீங்கள் பேசுவதில் உண்மை இருக்கும் போது தான் உங்களால் கண்களைப் பார்த்துப்பேச முடியும். நீங்கள் ஒருவரின் கண்களைப் பார்த்துப் பேசும் போது, அதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும். முதலில் நீங்கள் பேசுபவர் உங்களை நம்புவார். நீங்கள் போட்டு வரும் நல்ல ஆடை, உங்களில் வெளிப்பாடு வாடிக்கையாளரை கவரலாம். ஆனால் அவர் உங்களை நம்பினால் தான் உங்கள் பொருளை வாங்குவார். அதற்கு நீங்கள் அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்துப்பேச வேண்டும். அவர் அபப்டியே நீங்கள் சொல்வதைஎல்லாம் கேட்கும் வசிய நிலைக்கு கூட சென்று விடலாம். ஆனால் கண்களை பார்த்துக்கொண்டே பேசுவது மிக கஷ்டம். ஏதோ முறைத்துக்கொண்டு பேசுவது போல் இருக்கும். அதனால், அவரின் முகத்தை விட்டு உங்கள் பார்வையை அகற்றாமல் பேசுவதே போதும்.
என் நண்பன் ஒருவனை, அவனது டீலர் ஒருவர் கடைக்குள் வரவே கூடாது என்று கம்பெனியின் மேலிடம் வரை பேசி அனுமதி மறுத்திருக்கிறார். காரணம் என்ன தெரியுமா? அவன் அவர் கடையில் கொட்டாவி விட்டது தான். ஆம்!!1 வியாபாரிகள், லட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த மாதிரி சகுணம் எல்லாம் பார்ப்பார்கள். ”இப்படி இவன் கொட்டாவி விட்டால் என் வியாபாரம் எப்படி செழிக்கும்?” இது தான் அவரின் கேள்வி. அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மிக ஞாயமான கேள்வி தான். நாம் பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்க்கும் இது போல் ஏதாவது ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எனது வாடிக்கையாளார் ஒருவருக்கு நான் மேஜையில் கை முட்டியை ஊன்றினால் பிடிக்காது. இன்னொருவருக்கு அவரின் கடையில் தலைய சொறிந்தால் பிடிக்காது. இதையெல்லாம் விட பெரிய காமெடி, என் டீலர் ஒருவருக்கு அவரின் கடையில் நான் கொசு கடிக்கும் போது அதை அடித்தால் பிடிக்காது!!!! இதையெல்லாம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரிடம் பேசும் போது மூக்கை நோண்டுவது, நகத்தை கொரிப்பது, அங்கிங்கு சொறிந்து கொண்டிருப்பது இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அதே போல் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, அதை கவனிக்காமல் அவர் கடையில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்ப்பது, பேப்பரில் சினிமா செய்திகளை புரட்டிக்கொண்டு, அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நடிகையின் ஸ்டில்லை வெறிப்பது போன்றவை உங்கள் வருட இறுதி அப்ரைஸலில் விளைவை காட்டும் அளவுக்கு கொண்டு போய் விட வல்லது. 
அதே போல் நீங்கள் வாடிக்கையாளரை பார்க்க செல்லும் போது நிமிர்ந்து தைரியமாக நடந்து செல்ல வேண்டும். அவர் மிகவும் பிரச்சனைக்குரியவராக இருந்தாலும் உங்கள் பயத்தை கண்களிலோ, நடையிலோ, பாவனையிலோ காண்பிக்கவே கூடாது. எப்போதும் உங்கள் முகத்தில் ஒரு வித அமைதியும், புன்னைகையும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் என்றாலும் பழகிக்கொள்ள வேண்டும். அவருக்கு நீங்கள் வரும் தோரணையிலேயே ஒரு நம்பிக்கை வர வேண்டும், ‘இவனிடம் நம் பிரச்சனைகளை எல்லாம் சொல்லலாம்’, ‘இவன் நமக்கு உதவியாக இருப்பான்’, ‘இவனால் நம் வியாபாரம் உயர்ந்துவிடும்’ என்கிற நம்பிக்கையை உங்கள் நடை உடை பாவனை கொடுத்தே ஆக வேண்டும். என்னை கேட்டால் ப்ளைன் லைட் ப்ளூ அல்லது வெள்ளை நிறத்தில் மெல்லிய கோடுகள் இருக்கும் முழுக்கை சட்டையும் பொருத்தமான பேண்ட்டும், நல்ல பெல்ட்டும், பாலிஷ் போட்ட ஷூவும் சுத்தமான சாக்ஸும், நிமிர்ந்த நடையும், சிரித்த முகமும், உறுத்தாத உடல் மொழியும் இருந்தால் நீங்கள் முதல் படியை தாண்டி, வாடிக்கையாளரை உங்கள் மேல் ஒரு வித எதிர்பார்ப்பை நல்ல விதமான நம்பிக்கையை ஏற்படுத்த செய்துவிடலாம்.
.
ஆனால் என்ன தான் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸன் நன்றாக இருந்தாலும் அதை லாஸ்ட் வரை பெஸ்ட் இம்ப்ரெஸனாக தொடர இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டும். நீங்கள் போய் அழகாக உட்கார்ந்தவுடன் அவருக்கு நம்பிக்கை மட்டும் தான் வரும். அந்த நம்பிக்கையை அவர் வாயில் இருந்து வார்த்தைகளாக கொண்டு வருவதும், அந்த வார்த்தையை எப்படி வியாபாரமாக்குவது என்பதும் அடுத்தடுத்த பதிவுகளில்...
.
சரி, சேல்ஸ் வேலையில் இருக்கும் சில நன்மைகளை போன பதிவில் சொன்னோம். இப்போது மேலும் சில நன்மைகள்.
1. சேல்ஸ் வேலையில் நாம் டென்ஸனாக இருப்பதால், வீட்டிலும் எரிந்து விழுவோம் என பயந்து நம்மை எப்போதும் நயி நயி என்று நச்சரிக்க மாட்டார்கள்.
.
2. வெஜ்ஜோ நான் வெஜ்ஜோ தைரியமாக ஃபுல் கட்டு கட்டிவிட்டு அந்த பில்லை கம்பெனிக்கும் அனுப்பி வைத்து காசு வாங்கிவிடலாம்.
.
3. உங்களோடு படித்து வெளிவந்து வேறு துறைகளுக்கு சென்றவன் எல்லாம் இன்க்ரீமெண்ட் ப்ரொமோஷன் போன்றவற்றிற்கு சிவனை நோக்கி தவமிருக்கும் அசுரன் போல் தாடி எல்லாம் வளர்த்துக்கொண்டு அலையும் போது, நீங்கள் கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களில் மேனேஜர் தகுதிக்கு எம்பி குதித்துவிடலாம்.
.
4. ”சார், இன்னைக்கு மழை வர மாதிரி இருக்கு, அதனால ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி லீவும் போடாமல் லீவு எடுத்து, சம்பளமும் பிடித்தம் ஆகாமல் எஸ்கேப் ஆவது சேல்ஸ் வேலையில் மட்டுமே..
.
சரி நம் அடுத்த பதிவில் பொறுமை, கவனம் இவற்றை பார்க்கலாம்.. அது வ்ரை உடல் மொழியை பற்றி நீங்களும் நிறைய அறிய முற்படுங்கள், செயல் படுத்திப்பாருங்கள். ஆரம்பத்தில் காமெடியாக இருந்தாலும், வொர்க் அவுட் ஆகும் நிச்சயமாக..

சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - முதல் பாகம்..

Saturday, February 23, 2013

15, 20 வுடங்குக்கு முன் வேலை கிடைக்க வேண்டுமானால் ஒன்று B.Com படித்து வங்கி வேலைக்கு செல்ல வேண்டும், அல்லது அரசுத்தேர்வு எழுதி வேலை கிடைக்கும் ஊருக்கு வேண்டும். இல்லையென்றால் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு வேலையை பார்த்து கிடைக்கும் சம்பளத்தில் கொஞ்சம் செலவழித்து நிறைய சேமித்து வாழ வேண்டும். பின் 90களின் ஆரம்பத்தில் வந்த தாராளமயமாக்கல் 90களின் இறுதியில் பொறியியல் மற்றும் கணினி சார்ந்த படிப்புக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளித்தர ஆரம்பித்தன. வங்கி, அரசு வேலை மோகம் மறந்து எங்கு பார்த்தாலும் “ஸாஃப்ட்வேர் என்ஜினியர்” என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தார்கள். 2008ல் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணும் வரை கம்ப்யூட்டர் துறையும் ஒரு செழிப்பான துறையாக இருந்தது. ஆனால் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி வந்ததில் இருந்து இன்று இந்த கட்டுரையை எழுதும் இந்த நொடி வரை விற்பனை துறை என்பது படித்தவன் படிக்காதவன் என பாகுபாடு பார்க்காமல் பலருக்கும் படி அளந்து கொண்டிருக்கிறது.
சேல்ஸ் வேலை என்பது சினிமாவில் “நாய்ப்பொழப்பு” என்று நகைச்சுவை காட்சியில் சொல்லும் அளவுக்கு மிகவும் அலைச்சல் மிகுந்த வேலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தின் வருமானம் என்பது அந்நிறுவனத்தில் இருக்கும் விறபனையாளர்களால் தான். எந்த ஒரு நிறுவனமும் மிகச்சிறந்த விற்பனையாளனை வைத்துக்கொள்ள வேண்டும் என தான் நினைக்கும். ஏனென்றால் வாடிக்கையாளரை நேரடியாக சந்திக்கப்போவது அவன் தான். வாடிக்கையாளரப்பொறுத்தவரை அந்த விற்பனை பிரதிநிதி தான் அந்த கம்பெனி. அதனால் தான் மற்ற வேலைகளுக்கு வெறும் பட்டங்கள் மட்டுமே போதும் என்றாலும், விற்பனை வேலைக்கு மட்டும் பல கட்ட நேர்முகத்தேர்வு வைக்கிறார்கள். இப்போது பல நிறுவனங்களில் MBA படித்த ஆட்களை எடுத்தாலும் அவர்களுக்கும் கஷ்டமான நேர்முகத்தேர்வு & கடுமையான பயிற்சி கொடுத்து தான் வேலைக்கு எடுக்கிறார்கள். யாரும் நினைப்பது போல் அது ஒரு கஷ்டமான வேலை இல்லை, அனுபவித்து செய்யும் போது. சேல்ஸ் வேலையை அனுபவித்து செய்தால் தான் ஜெயிக்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.
எல்லோரும் சேல்ஸ் வேலையில் எளிதாக ஜெயித்து விடலாம். “என்னால் சகஜமாக பேச முடியாது”, “நான் கூச்ச சுபாவம் உள்ளவன்” என்று சொல்பவர்கள் கூட சேல்ஸ் வேலையில் எளிதாக ஜெயிக்கலாம். பள்ளி, கல்லூரி காலத்தில் நான் ஒரு முறை கூட முன் நின்று பேசியதில்லை. அவ்வளவு கூச்சம். இன்று நானும் ஒரு விற்பனை பிரதிநிதி, என் வேலையை நான் அவ்வளவு அனுபவித்து ரசித்து செய்கிறேன். சேல்ஸ் வேலையில் ஜெயிக்க முக்கியமான நான்கு விசயங்கள் தேவை.
1. உடல் மொழி
2. பொறுமை
3. கவனம் (Listening).
4. சேவை
நீங்கள் லொட லொடவென்று ஓயாமல் பேச வேண்டுமென்பதில்லை. மிக அழகாக விளம்பர மாடல் போல் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் மேலே கூறியிருக்கும் எளிதான நான்கு விசயங்களை புரிந்து கொண்டு பின்பற்றினால் போதும், சேல்ஸ் வேலை என்பது உங்களுக்கு உண்மையிலேயே நல்ல அனுபவம் தான்.
இந்த ஒவ்வொன்றை பற்றியும் பின் வரும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். அதற்கு முன் சேல்ஸ் வேலையில் இருக்கும் சில பல நன்மைகளை சொல்லிவிட்டு இன்றைய பகுதியை முடித்துக்கொள்ளலாம்.

1. இத்தன மணிக்கு வரணும், இவ்வளவு நேரம் வேலை செய்யணும் என்கிற கட்டாயம் இல்லை.

2. வீட்டில் கட்ட வேண்டிய கரெண்ட் பில், கேஸ் பில், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அம்மாவை மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது என வேலை நேரத்தில் பெர்மிசன் போடாமலே எல்லாம் செய்யலாம் :-D

3.  ஆள் பழக்கம் கிடைக்கும். உங்களுக்கு எந்த ஊரில் எது சம்பந்தமாக விவரம் வேண்டுமானாலும், நீங்கள் சேல்ஸ் வேலையில் இருந்தால் அந்த விபரம் அடுத்த அரை மணிநேரத்தில் உங்களுக்கு கிடைத்துவிடும்.

4. நீங்கள் ஊர் சுற்ற கம்பெனியே காசு கொடுத்து தினமும் அனுப்பி வைக்கும் வேலை சேல்ஸ் வேலை தான். அதை அலைச்சல் என்று பார்க்காமல், ஒவ்வொரு மில்லி பெட்ரோலையும் பணமாக பாருங்கள், அலையும் போது அலுப்பு தட்டாது.

5. தெரியாத ஊரில் கூட தைரியமாக வாழலாம், உங்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்கள் அவ்வளவு உதவி செய்வார்கள்.

6. பல ஊரில் மொழி, கலாச்சாரம், சுற்றுலாத்தளங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

7. நாட்டு நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.
இனி அடுத்த பதிவில் இருந்து சேல்ஸ் வேலையில் நம்மை ஜெயிக்க வைக்கப்போகும் அந்த நான்கு தகுதிகளையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம். கீழுள்ள படத்துக்கும் சேல்ஸ் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நம்பவா போகிறீகள்? ஹா ஹா அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..

ஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..



பொதுவாக நான் தியேட்டரில் பார்க்க முடியாத படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. திருட்டு சிடியில் பார்க்கும் யாரும் ஒரு படத்தை பற்றி குறை கூற தகுதி இல்லை என்பது என் கருத்து. அதுவும் வேற்று மொழிப்படங்கள் என்றால், சுத்தம்.. நான் படித்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் “மை நேம் இஸ் ராம் குமார்” என்பதை தான் திக்காமல் இங்கிலீசில் பேச சொல்லிக்கொடுத்தது அந்த 12 வருடங்களில்.. அதற்கு மேல் யாராவது என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டால், “ஆஃபிஸ் கால்” என்று ஃபோனை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். பள்ளியில் சொல்லிக்கொடுத்த இங்கிலீஷ் தான் இந்த லட்சணம் என்றால், வெளி டியூசனில் படித்த ஹிந்தி அதை விட சுத்தம்.. ஒரு வயதான பாட்டி, மத்திய வயது வேட்டி கட்டிய பண்டிட், என் தூரத்து உறவினர் என்று நான் அவர்களிடம் ஹிந்தி படிக்க சென்று, என்னால் ஹிந்தியை வெறுத்து விட்டவர்கள் அவர்கள் எல்லாம்.. அந்த அளவுக்கு நான் ஒரு ஹிந்தி அறிஞன்.

அப்படிப்பட்ட நான் ஒரு காலத்தில் இருந்து ஹிந்திப்படங்களை விழுந்து விழுந்து பார்க்க ஆரம்பித்தேன்.. ஆம், டேஷ் என்னும் அந்த கருமத்தில் விழுந்து தொலைத்ததால், ஹிந்தி படங்களிலும் விழ வேண்டியதாகி விட்டது.. இப்போது அந்த டேஷ் என்னை விட்டு போனாலும் ஹிந்தி படம் பார்க்கும் ஆர்வம் இன்னும் இருக்கிறது. காதல் கொடுத்த சென்ற சில நல்ல விசயங்களில் ஹிந்தி படமும் எனக்கு முக்கியமான ஒன்று. ஆரம்பத்தில் ஷாருக்கான் படங்கள் மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.. சப் டைட்டில் உதவியுடன் தான்.  போகப்போக ஷாருக்கானையும் தாண்டி ஹிந்திப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது தான் "A Wednesday" என்னும் படம் பார்த்தேன். என்னை மிக கவர்ந்த படங்களில் ஒன்று. இதைத்தான் கமல் தமிழில் “உன்னைப்போல் ஒருவன்” என்று அழகாக எடுத்திருப்பார் தன் சிறிசில அதிகப்பிரங்கித்தனங்களையும் சேர்த்து. நீரஜ் பாண்டே என்னும் அந்த இயக்குனர் அந்த ஒரு படத்தின் மூலமே என் மனதில் நின்று விட்டார், ‘கற்றது தமிழ்’ ராம் போல..



கிட்டத்தட்ட நாலரை வருடங்கள் கழித்து நீரஜ் பாண்டே எடுத்திருக்கும் படம் தான் இந்த ஸ்பெசல்26.. இந்தப்படத்தை நான் பார்க்க இன்னொரு காரணம், அக்‌ஷய் குமார்.. நம் சிறுத்தையை இவர் இந்தியில் ரவுடி ரத்தோராக உறுமியிருப்பார்.. அந்த படத்தில் இருந்து எனக்கு இவரையும் பிடித்துவிட்டது. நல்ல ஜனரஞ்சக ஹீரோ.. ஒரு சீரியஸ் டைரக்டரும் ஜனரஞ்சக நடிகரும் இணையும் கொஞ்சம் ரிஸ்கான ஸ்பெசல் காம்பினேசனில் வெளி வந்திருக்கும் படம் தான் ஸ்பெசல் 26. இது 1987ல் பம்பாயில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாம்.


1987ல் பம்பாய் ஒபேரா ஓட்டல்.. 26 பேர் கொண்ட சி.பி.ஐ குழு ஒன்று ரைடுக்கு வருகிறது. சில கோடி கறுப்பு பணத்தை ரைடின் மூலம் அவர்கள் கண்டு பிடித்து எடுத்து செல்கின்றனர். ஆனால் அதன் பின் தான் தெரிகிறது அவர்கள் ஒரு டுபாக்கூர் சி.பி.ஐ என்று. பாதிக்கப்பட்டவர்கள் இந்த நொடி வரை புகார் செய்யவில்லை, அது கறுப்புப்பணம் என்பதால். ஆனால் போலீசாலும் இது வரை அந்த 26 பேரின் நிழலை கூட அறியமுடியவில்லை. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் இது. மிகவும் அழகான கதைக்களம். சரி இந்த நிஜம் சினிமா பிம்பத்தில் எவ்வளவு அழகாக விழுந்திருக்கிறது என்று பார்க்கலாம்..


அக்‌ஷய் குமார் தலைமையில் ஒரு சிறு குழு நாட்டின் பல முக்கிய நகரங்களின் தங்களை சி.பி.ஐ என அறிமுக செய்து கொண்டு லட்சக்கணக்கில் பணங்களை ஆட்டையைப்போடுகிறது. பணத்தை பறிகொடுத்தவர்கள் ஒருவரும் புகார் செய்யாததால் இது வெளியில் தெரியவேயில்லை. மந்திரி ஒருவர் வீட்டிலேயே இவர்கள் கைவரிசையை காட்ட, போலீஸ் ஒரிஜினல் சி.பி.ஐ.ன் துணை கொண்டு இவர்களை மோப்பம் பிடிக்கிறது. கடைசியாக மும்பை நகைக்கடையில் பல்க்காக ஒரு அமௌண்ட்டை வழித்து எடுத்துக்கொண்டு தங்கள் திருட்டு ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என இவர்கள் நினைக்கும் போது போலீஸ் இவர்களின் ப்ளானை மொத்தமாக அறிந்துகொண்டு அனைத்து பக்கமும் அணை கட்டுகிறது. அதையும் மீறி பணத்தை கொள்ளையடித்து ஹாயாக ஷார்ஜாவில் அக்‌ஷய் குமார் &;கோ கிரிக்கெட் பார்ப்பதோடு படம் முடிகிறது. இதற்கும் அந்த ஒரிஜினல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள், “3idiotsக்கும் “five point someone”க்கும் இருக்கும் தொடர்பை எனக்கு சரியாக சொன்னால், அவர்களுக்கு மட்டும் விளக்கப்படும்.





படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, வேகம் வேகம் அப்படி ஒரு வேகம். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சண்டைக்காட்சி கூட கிடையாது, அட சேசிங்கும் கிடையாதுங்க. அதிலும் ஒரிஜினல் சி.பி.ஐ மனோஜ் பாஜ்பாய் அறிமுகமான பின் படம் அசுர வேகம். அக்‌ஷய் குமார் போன்ற மாஸ் நடிகர் கிடைத்தாலும், கதையில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் எடுத்திருப்பதற்காகவே நீரஜ் பாண்டேவிற்கு சபாஷ். அக்‌ஷய் குமாரின் முகத்தில் லேசான வயது முதிர்வு தெரிந்தாலும் அவரின் அசால்ட்டான நடிப்பு அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறது. கல்கத்தா ரெய்டில் தாங்கள் செல்லும் இடத்தில் தங்களுக்கு முன் ஒரிஜினல் சிபிஐ ரெய்டு செய்துகொண்டிருப்பதை பார்த்து சமாளித்துக்கொண்டு வருவது, அடுத்து அவர்களையே ஆட்டையைப் போட்ட பணத்தை தூக்கி வர செய்வது என அக்‌ஷய்குமாரின் குறும்புகளும் உண்டு படத்தில்.

அனுபம் கேரும், அக்‌ஷய் குமாரும் ஆரம்ப காட்சியில் ரைடு முடிந்ததும் காரில் நக்கலாக பேசிக்கொள்வது காலரைக்கால் ஹிந்தி தெரிந்த எனக்கே சிரிப்பை கொடுத்தது. ஹிந்தி தெரிந்தவர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நினைக்கிறேன். அனுபம்கேர் - A Wednesdayவில் ப்ரகாஷ் ரத்தோடாக கம்பீரம் காட்டியவர் இந்த படத்தில் பி.கே.சர்மாவாக ஒரு அப்பாவி கொள்ளைக்காரனாக நம்மை சிரிக்க வைக்கிறார்.. அந்த ஓட்டல் ரூம் போலீஸ் என்கொயரி காட்சி ஒன்று போதும் இவரின் நடிப்பின் பிரமாண்ட்டத்தை காட்ட. மனுசன் வெளுத்து வாங்கிவிட்டார்.


மேலே இருக்கும் படத்தில் இருப்பவர் தான் மனோஜ் பாஜ்பாய்.. வாஜ்பாயிக்கு தூரத்து சொந்தமா என தெரியவில்லை. இந்த ஆளை நான் இந்த படத்தில் தான் முதல் முறையாக பார்க்கிறேன். மனுசன் பாக்குறதுக்கு அதுல் குல்கர்னி மாதிரி ஒல்லியா இருந்துக்கிட்டு என்ன ஒரு நடிப்பு?! ஒரிஜினல் சி.பி.ஐ, வாசிம்மாக வரும் இவர், கண்ணை சிமிட்டாமல் முறைத்து பார்த்துக்கொண்டே நடிப்பது நமக்கே கிலியாக இருக்கிறது. ஆரம்ப காட்சியில் பையனை தோளில் சுமந்து கொண்டு அவனை மகிழ்வித்துக்கொண்டே பள்ளிவேனில் ஏற்றி, “bye dad" என்று சொல்லும் மகனிடம் “அப்பு”னு சொல்லு அக்கறை காட்டுகிறார். அவனை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தால், வாசலில் “ஆஃபிஸ் ஃபோன்” என்று கையில் காட்லெஸ் ஃபோனோடு காத்திருக்கும் மனைவியிடம் ஃபோனை வாங்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே முறைப்பு, கோவம் & கண்டிப்பு என அத்தனையையும் ஒரே பார்வையில் காட்டிவிட்டு, “துப்பட்டா போடு” என அதட்டுகிறார். ஆபிஸ் ஃபோனை பேசி முடித்ததும் மனைவியிடம், “ஒன்னுமில்ல இதோ வந்துறேன்” என தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பி ஒருவனை துரத்திப்பிடித்து செவிட்டிலேயே ஒன்னு விடுகிறார். அதன் பின் கொள்ளை கும்பலை கண்டுபிடிக்கும் வரை படம் முழுவதும் முறைப்பும் விறைப்பும் தான். தன் மகனோடு இருக்கும் காட்சியிலும், கடைசி காட்சியிலும் தான் சிரிக்கிறார் மனுசன். மற்ற நேரங்களில் எல்லாம் அவ்வளவு ஆக்ரோசம் &; உஷ்ணம் இவர் பார்வையில்.

அந்த பார்வை தான் நம்மை கடைசி வரை, “புடிச்சிருவானோ?” என்கிற பயத்தையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இவர் ஒவ்வொரு இடமாக நூல் பிடித்து செல்லும் இடம் அழகு. நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்போகிறார்கள் என தெரிந்ததும் அங்கு வந்து வேகமாக அவர்களை கூண்டோடு பிடிக்க ப்ளான் போடுகிறார். அப்போது நகைக்கடை ஓனர் பாவம் போல் அவரிடம் வந்து, “அதான் அவன் தான் திருட போறான்னு தெரியுதுல, அப்ப அவன இங்க வரதுக்கு முன்னாடியே பிடிக்கலாம்ல?” என்கிறார். நம்ம ஆள் அந்த நகைக்கடையை பார்த்து (முறைத்து), “ஐயா ராசா, திருடணும்னு நெனைக்குறதுக்கெல்லாம் அரெஸ்ட் பண்ண முடியாது, திருடுனாதான் அரெஸ்ட் பண்ண முடியும்” என்று சொல்லும் போது இந்த கோவ மூஞ்சுக்குள்ளயும் கொஞ்சம் நக்கல் இருப்பது தெரிகிறது. இவர் பாத்திரம் தான் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது என தாராளமாக சொல்லலாம்.

ஹீரோயினாக நம்ம காஜல் அகர்வால். எனக்கு இந்த பெண்ணை ஆரம்பத்தில் இருந்து தீபாவளிக்கு வந்த துப்பாக்கி வரை பிடிக்கவேயில்லை. ஆனால் இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். காரணம் அவர் உடுத்தியிருந்தது, அழகழகான 25 வருடங்களுக்கு முந்தைய மாடல் சேலை & சுடிதார்கள், நீளமான கம்மல்கள், சிறிய வட்டமான சிகப்பு ஸ்டிக்கர் பொட்டுகள். அது போக, இந்த படத்தில் இவருக்கு நீண்ட கூந்தல் வேறு. கேட்கவும் வேண்டுமா? நான் காலி.. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த பெரிய கண்கள் இந்தப்படத்தில் ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கின்றன. அக்‌ஷய்குமாருக்கு கண்களாலேயே செய்கை கொடுப்பது, ”உன் கூட இருக்கும் போது நான் நல்லவனா மாறிடணும்னு நெனைக்கிறேன்” என்று சொல்லும் நாயகனிடம், “அதான் என்ன விட்டுட்டு அடிக்கடி போயிறியா?” என்று கேட்டு நம்மையும் ஃபீலிங்க்ஸில் தள்ளி விடுவது என நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். கடைசி காட்சியில் எதோ ஒரு நம்பிக்கையில் நாயகனுக்காக ஏர்போட்டில் காத்திருக்கும் அந்த நொடிகள் அவரோடு சேர்ந்து நமக்கும் திக் திக் நிமிடங்கள் தான், நாயகன் வருவானா இல்லையா என..


ரெண்டேகால் மணி நேர படத்தில் கால் மணிநேரம் தான் சப்டைட்டில் வேலை செய்தது. மீதி நேரங்களில் என் காலரைக்கால் ஹிந்தி அறிவை வைத்து நானாக, இது தான் பேசியிருப்பார்கள் என கணித்த வகையில் பல வசனங்களும் அருமையாக இருந்தன. சில சாம்பிள்கள்..

1. ”உண்மையான அதிகாரம்/சக்தி நம்ம மனசுல தான் இருக்கு” - அனுபம் கேர் பேசும் இந்த வசனம் சீரியஸாக வருவதை விட காமெடியாக அக்‌ஷய் குமார் அவரை ஓட்டும் போது சூப்பராக இருக்கும்..

2. அக்‌ஷய்: உன் கூட இருக்கும் போது நல்லவனா இருக்கணும்னு நெனைக்குறேன்
காஜல்: அதான் அடிக்கடி என்ன விட்டுட்டு போயிறீங்களா?

3. அனுபம் கேர் : அஜ்ஜு (அக்‌ஷய்) அவன யாராலயும் பிடிக்க முடியாதுன்னு சொல்லுவான்.. நாளைக்கு நீங்க அவன பிடிக்கும் போது அவன் முகம் எப்படி இருக்கும்னு நெனச்சு பாத்தா எனக்கு சிரிப்பா வருது..

4. சி.பி.ஐ ஹெட் : நிறைய கட்சி ஆட்கள் கிட்ட இவங்க கைவரிச்சைய காட்டிருக்காங்க..
மனோஜ் பாஜ்பாய் : எந்த கட்சி அரசியல்வாதிங்கலாம் இவன்ட்ட மாட்டிருக்காங்க?
சிபிஐ ஹெட் : எந்த கட்சி அரசியல்வாதி மாட்டலனு கேளு.. எல்லா கட்சிலயும் கறுப்பு பணம் வச்சிருக்குறவன் தான இருக்கான்?

5. அக்‌ஷய் : நீ தமிழா?
இண்டர்வியூவிற்கு வந்தவன் : ஆமா சார்..
அக்‌ஷய் : சிபிஐ காத்து இல்லடா சுனாமி.. எவனா இருந்தாலும் அலேக்.. தட்ஸ் ஆல்.. தூக்கிடுவோம்..
தமிழன் : தலைவா நீங்க ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..

நம்புங்கள் ஒரு எழுத்து பிசகாமல் அப்படியே வரும் வசனம் இது. இந்த காட்சியில் அக்‌ஷய் பேசியிருக்கும் தமிழ் சிரிப்பை வரவழைத்தாலும் நல்ல ரசிக்கத்தகுந்த ஹீரோயிஸ காட்சி இது.. மூன்று பாஷைகளில் அக்‌ஷய் பேசும் இந்த காட்சி அக்‌ஷய் ரசிகர்களை விசில் அடிக்க வைத்திருக்கும், தலைவர் பணக்காரன் படத்தில் பேசியதை போல. 

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ரெண்டு விசயங்கள் இருக்கின்றன. முதலில் உடை. அனைவரும் 1980களின் மாடல் ஆடைகளை தான் அணிந்து வருகிறார்கள். அதிலும் காஜல் அகர்வால்.. போதும், ஏற்கனவே தேவைக்கு அதிகமாக புகழந்து விட்டேன்.. அடுத்தது கலை. அந்தக்காலத்து டப்பா வேன், அகலமான நூறு ரூபாய், வெறிச்சோடியிருக்கும் டில்லி, பம்பாயின் பெருஞ்சாலைகள், ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் வெஸ்பா, பஜாஜ் ஸ்கூட்டர்கள், அம்பாஸிடர், ப்ரீமியர் பத்மினி, மாருதி 800 போன்ற கற்கால வாகனங்கள் என ஒவ்வொன்றும் நம் கண் முன் 1987 கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு நொடி நாமும் 1987ல் இந்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு பெர்ஃபெக்சன் உண்டு..


படத்தில் பின்னணிக்கு ஒன்று, பாடல்களுக்கு இரண்டு என்று மொத்தம் மூன்று இசையமைப்பாளர்கள். பாடல்கள் எல்லாம் மெலடி ரகம் என்றாலும் அழகாக கவிதை போல் எடுத்திருக்கிறார்கள். அக்‌ஷய் & காஜலின் காதல் வரலாற்றை சொல்லும் பாடலில், கீழே விழும் காஜலை அவர் தாங்கிப்பிடித்தவுடன் காதல் வருவது போல் காட்டியிருப்பதை தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்தின் வேகத்தையும் காட்சியின் எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது. பின்னணி இசை கூட 1980களின் பாணி போல் தான் இருப்பது கதையோடு மிகவும் ஒன்றச்செய்து விடுகிறது.


1987ல் நடந்த உண்மை சம்பவத்திற்கும் இந்த படத்திற்கு இருக்கும் ஒரே சம்பந்தம் 26 என்னும் எண் மட்டும் தான். மற்றபடி இது ஒரு வழக்கமான, திருடன் போலீஸ் படம் தான். திருடன் ஹீரோவாக இருந்தாலும் அவனுக்கு எந்த ஞாயமும் கற்பிக்கப்படவில்லை, ஒரே ஒரு காட்சியில், “அவன் சிபிஐ வேலைக்கு போகணும்னு நெனச்சு இண்டர்வியூவில் கிடைக்காமல் போயிருச்சி. அவனுக்கு சிபிஐ ஆகணும்னு ஆச” என்கிறார் அனுபம் கேர்.. மற்றபடி அவரை ஞாயப்படுத்த எந்த காட்சியும் கிடையாது. "A Wednesday" போல் இதிலும் போலிசுக்கு எல்லாமும் தெரிந்தாலும் கடைசியில் கோட்டை விட்டுவிடுகிறார். 

மொத்தத்தில் A Wednesday போல் எந்த ஒரு முக்கிய பிரச்சனையை பேசா விட்டாலும், நீரஜ் பாண்டே, நல்ல ஒரு கமெர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். காட்சிகளில் அவரின் பெர்ஃபெக்சன், விறுவிறுப்பான திரைக்கதை என செமத்தியாக விளையாண்டிருக்கிறார். குத்துப்பாட்டு, கவர்ச்சி நடனம், 30,40 பேர் பறக்கும் சண்டை என எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்க வேண்டுமா? சப்டைட்டிலுடன் “Special 26” பாருங்கள்.. நான் மூன்றாவது முறை பார்க்கப்போகிறேன்..


தொடர்புள்ள இந்த பதிவுகளையும் நீங்கள் வாசிக்கலாம் & ரசிக்கலாம்..

தம்மாருகம் - ஒலகம் பேசாம அழிஞ்சே போயிருக்கலாம்..

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

 

ஜாதி வேண்டும்...

Tuesday, February 19, 2013

தலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்துல நமக்கு ஆதரவா ஒரு புள்ள கொரல் குடுக்குது?’ என ஆர்வத்தோடு வந்திருக்கும் என்னைப்போன்ற உண்மையான பிற்போக்குவாதிகளுக்கும், ‘கொஞ்ச நாளா ஓஞ்சிருந்த பிரச்சனைய திரும்ப ஆரம்பிக்கப்போறானா?’ என ஆர்வக்கோளாறில் வந்திருக்கும் நட்டநடுநிலைவாதிகளுக்கும் வணக்கம்.. நான் இங்கு ஜாதி ஏற்றத்தாழ்வு, இட ஒதுக்கீடு என எதைப்பற்றியும் பேசப்போவதில்லை!!! ஜாதிய கோட்பாடுகளில் இருக்கும் நன்மையை (அது உங்களுக்கு நன்மையாக தெரியவில்லை என்றால் ஜாதிய கோட்பாடுகளில் எனக்கு சரி என்று படுபவைகளைப் பற்றி என நினைத்துக்கொள்ளுங்கள்) பற்றி சொலல்விருக்கிறேன்.

ஜாதி என்றால் என்ன? அது எப்படி அமைக்கப்பட்டது? தலையில் துவங்கி கால் வரை ஒவ்வொரு பார்ட்டிலும் இருந்து ஒரு ஜாதியை நாரதர் உருவாக்கினார் என ஜாதியின் ஹிஸ்ட்ரி & மிஸ்ட்ரி பற்றி எல்லோருக்கும் ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்திருப்பதால் அதற்குள் போகாமல் கம்முனு டைரக்ட்டா கட்டுரைக்குள் போகலாம். இன்று ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? மதத்தின் மூலம் உலகமே ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு குண்டு வீசும் சூழலில் இருக்கிறது.. மதமே வேண்டாம் என சொல்லிப்பாருங்கள்..

  

நான் இங்கு ஜாதிய வேறுபாடு வேண்டும் என சொல்ல வரவில்லை. பிறப்பு, மதம், செல்வம் இவற்றில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு இருந்தாலும் மதமே வேண்டாம் என்றும், ஆண் பெண் என இல்லாமல் நியூட்ரலாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் சொல்லாமல், மக்களின் மனதை ’எதிலும் வேறுபாடு இல்லை’, என ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம், வர முயற்சி செய்கிறோம்.. அப்படி இருந்தும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை நடக்கத்தான்  செய்கிறது. போன மாதம் டைம் ஆன்லைன் கட்டுரையில்இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண் சிசுக்கொலைகளும் முக்கிய காரணம் என சொல்கிறார்கள். (http://ideas.time.com/2013/01/04/rape-in-india-a-result-of-sex-selection/?iid=obinsite)..  அதே போல் இப்போதும் பல இடங்களில் ஜாதி வன்முறை நடக்கத்தான் செய்கிறது, பெண் சிசுக்கொலைகள் போல சரியான வழிகாட்டுதல் இல்லாததால்.. அதற்காக ஜாதியே கூடாதென்று சொல்லாமல் ஜாதிய வேறுபாடு பார்க்கக்கூடாது என மக்களுக்கு புரியவைக்கலாம்.

என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும். அதிலும் இந்த பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர், ஜாதி எதிர்ப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எப்போதும் தாக்குவர். சமீபத்தில் நடந்த விஸ்வரூபம் பிரச்சனையில் ரஜினி அவர்கள் கமலுக்கு செய்த உதவியில் கூட, “பார்ப்பனீயம்” இருக்கிறது என நோண்டி ஆராய்ந்தவர்கள் அவர்கள். அந்த தாக்குதலில் இல்லாத ஜாதி வெறியா பிறரிடம் வந்துவிடப்போகிறது? அப்படி வசைபாடுவதை விட்டுவிட்டு, எளிதாக “மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே? ஆனால் செய்ய மாட்டார்கள். கலகம் முடித்துவிடவில்லை எனில் பகுத்தறிவுக்கு மதிப்பு இல்லையே?


இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். ஜாதியால் ஒற்றுமை இல்லை என்கிறார்கள். இன்னும் இது போல் பல காரணங்கள். இவர்கள் ஒற்றுமை என எதை சொல்ல வருகிறார்கள் என தெரியவில்லை. ஒற்றுமை தான் எல்லாரிடமும் இருக்கிறதே.. என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நண்பன் புகைத்த தம்மை தான் ஒரு ஃபப் வாங்கி இழுக்கும் நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை  இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?

அதே போல் ஜாதி இல்லை, மதம் இல்லை என கோசம் போடுபவர்களில் தான் பெரும்பான்மையோர் மொழி வெறியர்களாகவும், இனத்தீவிரவாதியாகவும் இருக்கிறார்கள்.. ஜாதியும் மதமும் சக மனிதன் மேல் துவேசத்தை வளர்க்கிறது என்று சொல்லும் இவர்கள் தான், மொழி வேறுபாட்டாலும் இன வேறுபாட்டாலும் பிறரை தூற்றுகிறார்கள். வேற்று மதத்திலோ ஜாதியிலோ திருமணம் செய்து கொண்டால் ஜாதியும் மதமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒழியும் என்று சொல்லும் இவர்கள் தான் இலங்கையில் வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒரே இனமாக இருக்க தமிழர்களையும் சிங்களவர்களையும் கலக்க அந்த அரசு செய்யும் முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் பகுத்தறிவு இலங்கையில் அதே கலப்பு திருமணத்தை எதிர்க்கிறது.. அதற்காக இலங்கையில் நடப்பதற்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என அர்த்தம் இல்லை. இலங்கையில் நடப்பதை தப்பு என சொல்லும் இவர்கள் இங்கு மட்டும் அதே தவறை சரி என எப்படி சொல்கிறார்கள் என கேள்வி தான் கேட்கிறேன்.



அதே போல் இவர்களின் ஜாதி வித்தியாசம் எல்லாம் இந்து மதத்திற்குள் மட்டும் தான்.. சர்ச்சுகளில் நடக்கும் ஜாதி பேதங்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.. திறந்தால்? சிறுபான்மையினர் உரிமை என்னாவது? மதுரைக்கு தெற்கே கிறிஸ்தவர்கள் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்வார்கள். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியின் கிராமங்களில் ஜாதிவாரியாக சர்ச் இருந்ததாக கூட சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சில சர்ச்சுகளில் தலித்துக்களை கூரை போட்டு தனியாக அமர வைத்திருப்பார்களாம்.. மதுரைக்கு வடக்கே கிறிஸ்தவர்களிடம் இந்த அளவுக்கு ஜாதி பேதம் இல்லையென்றாலும், ஒரு பிறபடுத்தப்பட்ட கிறிஸ்தவர் தாழ்த்தப்பட்டவருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கிறிஸ்தவ மதம் இன்னும் பக்குவப்படவில்லை. அதே போல் தான் இஸ்லாமும்.. ராவுத்தரை பொறுத்தவரை லெப்பை மட்டம் தான்.. பட்டானிக்கு, ராவுத்தர் லெப்பை இருவரும் மட்டம் தான்.. லெப்பை, ராவுத்தர், பட்டானிக்கு இடையில் திருமண பந்தம் கிடையாது. ஒரே ஜாதியில் கல்யாணம் செய்தால் குதிக்கும் இவர்கள், ஒரே குடும்பத்தில் ஒன்று விட்ட சகோதரியை சகோதரனை கல்யாணம் செய்துகொள்பவர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏனென்றால் சிறுபான்மையினர் நம் நாட்டில் மருமகள்கள் போல்.. மண்சட்டியும் அவர்கள் கை பட்டால் பொன் சட்டி தான்..

சரி, நான் முந்தைய பத்தியில் கலப்பு திருமணத்தை தவறு என்று சொன்னதால் சிலருக்கு கேள்வி எழலாம், ‘அதெப்படி கலப்பு திருமணத்தை தவறு என நீ சொல்லலாம்?’ என்று.. நான் முதலிலேயே ஒன்றை சொல்லிவிட்டேன். ஜாதி என்பது என் வீட்டு வாசல் வரை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அந்த எண்ணத்துடன் நான் அடுத்து சொல்லப் போவதை படியுங்கள். என் வீட்டு வாசலை நான் தாண்டியவுடன், என் நண்பனை, என் தொழில் நிமித்த ஆட்களை பார்க்கும் போது எனக்கு ஜாதி, மதம் எல்லாம் ஞாபகம் வராது. ’சரி, அவர்களிடம் தான் நீ ஜாதி பார்ப்பதில்லையே, பின் ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்வதில்லை?’ எனக்கேட்டால், என் பதில், “ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்?” என பதில் கேள்வியாகத் தான் இருக்கும்.. இலங்கையில் தமிழனுக்கு என்று சில பழக்க வழக்கம் , சடங்கு, கலாச்சாரம் இருக்கிறது. அவனை சிங்களவனோடு கலக்கும் போது தமிழனின் அடையாளமும் பழக்க வழக்கமும் சிதைந்து போகும் என நினைப்பது சரி என்றால், இங்கு நானும் அப்படி நினைப்பது சரியே.

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். முக்குலத்தோர் இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 26, 51 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.



கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.



திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். எங்கள் குல தெய்வம் 4 ஜாதிகளுக்கு உரியது. அதில் தலித் சமுதாயமும் ஒன்று. அங்கெல்லாம் நாங்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம். 

சரி நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்றால் கலப்புத்திருமணங்களால், ஜாதியை ஒழிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கலப்புத் திருமணம் என்று மட்டும் அல்ல, எதனாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. ஒரு முதலியார் பையன் செட்டியார் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் எப்படி ஜாதி ஒழியும்? அவர்களின் குழந்தை முதலியாராகவோ செட்டியாராகவோ தான் இருக்கும். ஒரு நாடார் வீட்டு பெண் தலித் ஆணை மணந்து கொண்டால் அவர்களின் குழந்தை ஜாதி அடையாளம் இல்லாமல் வளர்க்கப்படுமா? அதனால் கலப்புத்திருமணங்கள் ஜாதியை என்றும் ஒழித்துவிடாது. மாறாக நான் சொன்னது போல் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளை ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களோடு பழக விட வேண்டும். சில நேரங்களில் அந்த நட்பில் காதலும் வரலாம். அப்போது தன் பிள்ளை அந்த காதலின் மூலம் வருங்காலத்தில் நன்றாக இருப்பான்/ள் என பெற்றோர்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யலாம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் அதனால் ஜாதி ஒழியாது. ஜாதி வேறுபாடு வேண்டுமானால் மறையும். ஜாதி வேறுபாடு மறைய கலப்புத்திருமணம் என்பது கொஞ்சம் ரிஸ்க்கான தேர்வு தான். ஒழுங்கான பழக்க வழக்கங்கள் மூலமாகவே ஜாதி வேறுபாட்டை கலையலாம்.

ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு தெரிந்து புரட்சி பேசிய யாரும் தங்கள் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருந்தது இல்லை, அன்றைய சாக்ரடீஸ், ஹிட்லர், பகத்சிங்கில் இருந்து இன்றைய என் நண்பர்கள் சிலர் வரை. அதே போல் மக்களை பகுத்தறிவு என்னும் பெயரில் தூண்டி விடும் எவராலும் தன் வீட்டில் கூட அந்த பகுத்தறிவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.



முடிவாக, உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

தொடர்புடைய இந்த பதிவுகளையும் நீங்கள் ரசிக்கலாம்..

சசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க?

சரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..

வம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..

 

 


விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)..

Sunday, February 10, 2013

ஒரு படம் வருவதற்கு முன்பே எவ்வளவு பிரச்சனைகள்? அந்த பிரச்சனைகளை ஒட்டி படத்திற்கு வந்த அபரிமிதமான ஆதரவும், கடும் எதிர்ப்பும், எல்லோரையும் ஒன்றை மட்டும் முடிவு செய்ய வைத்தன.. ‘பிடிச்சிருக்கோ இல்லையோ இந்த படத்துல அப்படி என்ன தான் இருக்குனு பாக்கணும்’.. சரி அப்படி என்ன தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது?




தனக்கென்று இருக்கும் ஒரு சிறிய உலகத்தை பெண் தன்மையோடு, தன் மனைவியின் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு வாமனனாக இருக்கும் விஸ்வநாதன் என்னும் ஒரு சாதாரண கதக் டான்ஸ் மாஸ்டர், ஒரு சூழலில் தான் ஒரு தலிபான் பயிற்சியாளன் என்கிற விஸ்வரூபத்தை காட்டுவது தான் கதை. கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கிறது? ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்திற்கு இதை வைத்து என்னென்னமோ பண்ணலாம். ஆனால் கமல் எனக்கு நிறைய கொட்டாவியும் லேசான தலைவலியையும் தான் கொடுத்திருக்கிறார். “ஏ ஒனக்கு கலைய ரசிக்க தெரில, இன்னொரு 10வருசம் கழிச்சு ஒலகமே இந்த படத்த புகழும், அப்ப உன் மூஞ்ச எங்க வச்சுக்கிடப்போற? கமல் யாருனு தெரியுமா? சினிமாவுக்கு என்னலாம் செஞ்சிருக்காருனு தெரியுமா?’ என வரிசையாக கேள்வி கேட்பவர்கள் என் டிக்கெட் காசான 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள். சாவகாசமாய் பதில் அனுப்புகிறேன்.


”சாகுறதுக்கு முன்னாடி என்ன தொழுகை பண்ண விடுங்க” என்று கேட்டு ஓதிக்கொண்டே பொங்கி எழும் காட்சி, பிறந்ததில் இருந்தே மசாலாப்படமாக பார்த்து நெஞ்சுக்கரிப்பிலேயே வளர்ந்தவன் எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. அந்தக்காட்சி, ஆனாலும் நன்றாக இருந்தது. ஸ்லோ மோஷனில் இன்னொரு தடவை காட்டியிருக்க வேண்டாம். தசாவதாரத்தில் அசினை பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு எரிச்சல் வந்ததோ, (உங்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு நிறைய வந்தது), அதே அளவு எரிச்சல் இதில் பூஜா குமாரை பார்க்கும் போது வருகிறது. முதல் காட்சியில் இருந்தே அசட்டுத்தனமான ஓவர் ரியாக்‌ஷன்.. பிடிக்காத, கொஞ்சம் கூட மதிக்காத கணவன் பிரதமரோடு பேசும் அளவுக்கு பெரிய ஆள் என்றவுடன் பொசுக்கென்று அன்பு, காதல், பாசம், மரியாதை இன்னும் பிற இல்லத்தரசிகளுக்கான அம்சங்களும் சேர்ந்துகொள்கின்றன.. 24 அமைப்புகளோடு சேர்ந்து பெண்கள் அமைப்புகளும் ”எங்களை தவறாககாட்டுகிறார் கமல்” என கொடி பிடித்திருக்கலாம்.. 



படத்தில் எதற்கென்றே தெரியாத நிறைய பாத்திரங்கள் உள்ளன. அதில் ஒருவர் தான் ஆண்ட்ரியா.. கமல் வீட்டில் நடனம் பயில்கிறார், நடனம் முடிந்தாலும் அவர் வீட்டிலேயே இருக்கிறார், கடைசி வரை கமல் கூடவே சுத்துகிறார். இவரை அட்லீஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூடவே இருந்து குழிபறிக்கும் வில்லியாக ஒரு பாத்திரம் நிச்சயம் வரும், அது போல் காட்டியிருந்தால் கதையில் சின்ன டுவிஸ்டாவது இருந்திருக்கும். முதல் பாதியில் கமலைப்பற்றி காட்டும் ஃப்ளாஷ்பேக், ஊஞ்சல் ஆட விரும்பும் அடலசண்ட் ஜிகாதி பையன், ‘போன வருசமே ஸ்கூல் எல்லாத்தையும் இடிச்சிட்டோம்’ என மிக சாதாரணமாக சொல்லும் முல்லா ஓமர், தசாவதாரத்தில் வந்த மாறுவேட கலைஞர், ஜெயலலிதா போல் இதில் வந்த ஒசாமா என சில இடங்கள் வாயைப்பிளக்க வைத்து அட போட வைக்கின்றன..




நாம் முதல் பாதியில் ஒரு சில இடங்களில் போட்ட ‘அட’ ரெண்டாம் பாதியில் ‘அடடடா’ என்னும் புலம்பலாக மாறிவிடுகிறது. திரைக்கதை எங்கெங்கோ தறிகெட்டு ஓடுகிறது. ஒரு சில வசனங்களும், அமெரிக்க குளிரை உணர வைக்கும் காட்சியமைப்பும் தான் நம்மை உட்கார வைத்திருக்கின்றன. இல்லையென்றால் பலரும் பாதியிலே எழுந்து போயிருப்பார்கள். முதல் பாடல் தவிர அனைத்தும் திரைக்கதையோடு வந்திருப்பதால், தியேட்டரில் சிகரெட் விற்பனை கம்மி. கமலுக்கே மிகுந்த குழப்பம் போல தன் பாத்திர படைப்பில்.. “அவங்கள கடவுள் காப்பாத்துவார்” என பூஜா குமார் சொல்லும் போது “எந்த கடவுள்?” என பகுத்தறிவு பேசும் அதே கமல் தான், வில்லனின் திட்டத்தை அழிக்கும் முன் கடவுளிடம் தொழுகை செய்கிறார். ஒய் திஸ் கன்ப்யூஸன்?




வில்லன் ஓமராக வருபவர் தாலிபான் தளபதி முல்லா ஓமரை ஞாபகப்படுத்துகிறார். நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் நினைத்த நேரத்தில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா என எப்படித்தான் பறக்க முடிகிறதோ? இப்பலாம் தியேட்டருக்கு வந்தாக்கூட பாக்கெட்ட எல்லாம் செக் பண்ணிட்டு தான் உள்ள விடுறாங்க பாஸ்.. நீங்க ஏதோ ஃபாரின் போறத, பக்கத்து வீட்டுக்கு போற மாதிரி சொய்ங் சொய்ங்னு போயிட்டு வரீங்க?

உண்மை பாத்திரங்களையும் சில வரலாற்று சம்பவங்களையும் தன் கறபனையையும் வைத்து ‘ஹே ராம்’ என்னும் முக்கியமான படத்தை எடுத்த அதே கமல் தான், முல்லா ஓமர் என்னும் உண்மை பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு இந்திய உளவாளி வந்தால் என்ன ஆகும் என்கிற தன் அழகான கற்பனையை வைத்து இப்படி ஒரு சொத்தப்பல் படத்தை தந்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை ரகம். தியேட்டரில் எல்லோரும் எழுந்த போது தான் படம் முடிந்து விட்டதே தெரிந்தது. சப்பென்ற ஒரு கிளைமேக்ஸ். ஆனால் அதற்கு அடுத்து பார்ட்2 விற்கு காட்டிய ட்ரைலர் போன்ற சங்கதி நன்றாக இருந்தது. ஆனால் பார்ட்2 எல்லாம் வருமா என்பது அல்லாவுக்கே வெளிச்சம்.





மொத்தத்தில் காக்கிச்சட்டை, பாண்டியன், போக்கிரி வரிசையில் ஒரு விஸ்வரூபம்.. லோக்கல் தாதா, போலீஸ் கதையை, தாலிபன், உளவுத்துறை என்று எடுத்திருக்கிறார்கள்.. சில இடங்களில் கமலின் நடிப்பும், இசையும், வசனங்களும் நன்றாக இருக்கின்றன.. ஆனால் அது மட்டும் படம் வெற்றியடைய போதாதே? “கமல் படமா? ஒன்னும் புரியாதேப்பா? அதப்போயி எவன் தியேட்டர்ல பாப்பான்?” என்று சொன்னவர்கள் கூட படத்தை பார்த்துவிட்டு, “எதுவுமே புரியல, ஆனா என்ன தான் சொல்ல வாரான்னு இன்னொரு தடவ போயி கண்டிப்பா பாக்கணும்” என்கிறார்கள்.. ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஒரு படத்தை, வெற்றிப்படமாக்க உழைத்த 24 குழுக்களுக்கும், சிலரின் திமிரான நடவடிக்கைகளுக்கும், அதையெல்லாம் வியாபாரத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்ட கமலுக்கும் வாழ்த்துக்கள்..

படத்தை பற்றி இவ்வளவு போதும். இனி கமலை பற்றி. ‘அன்பே சிவ’த்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் கிழி கிழியென்று கிழித்த கமலா இது? ஒரு பெண்ணை தவறுதலாக சுட்டுவிட்ட அமெரிக்க ராணுவ வீரன், அதற்காக உச் கொட்டி ஃபீல் பண்ணுவதெல்லாம் எதற்காக? அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி குழந்தை பற்றி கவலைப்படாமல் ஓமர் இப்படி சொல்கிறான், “அவர்கள் (அமெரிக்கர்கள்) பெண்கள் குழந்தைகளை தாக்க மாட்டார்கள்”.. சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி ஒரு வசனம்? அவர்கள் என்ன தரையில் இருந்தா தாக்குகிறார்கள் யார் குழந்தை யார் பெண் என தெரிந்துகொள்ள? வான்வெளித்தாக்குதலுக்கு சம்பந்தமே இல்லாமல் அப்படி ஒரு வசனம். அமெரிக்கா என்ன நம் நாட்டு ராஜபுத்திர மன்னர்களா, போய் விதிமுறைகளையெல்லாம் பின்பற்ற? போர் விதிமுறையை பின்பற்றுபவனா இன்னொரு நாட்டின் மீது அணுகுண்டை போடுவான்? ஒவ்வொரு நாட்டு சர்வதேச எல்லையில் தன் போர்க்கப்பல்களையும் உளவு விமானங்களையும் பறக்க விடுவான்?

”உன்னைப்போல் ஒருவன்” படத்தின் ஒரிஜினலான “A Wednesday"வில் நாயகன் இந்துவா கிறிஸ்தவனா இஸ்லாமியனா என எதுவும் தெரியாது.. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ல் கமல் தன்னை ஒரு இஸ்லாமியனாக காட்டியிருப்பார். அதாவது தவறு செய்த ஒருவனை அவன் மதம் சார்ந்த இன்னொருவன் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற தொனியில் அமைத்திருப்பார். தட்டிக்கேட்பவனுக்கு அடையாளமே இல்லை என்று ஹிந்தியில் சொன்ன இயக்குனரின் தைரியம் தமிழில் கமலுக்கு வரவில்லை. இதே தான் இங்கு வேறு மாதிரி “விஸ்வரூப”த்தில். இதில் இவர் விஸ்வனாத்தாகவே கூட இருந்திருக்கலாம். ஆனால் கேஷ்மிரி என்கிற இஸ்லாமியனாக காட்ட விளைந்திருப்பது ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற காரணமாக கூட இருக்கலாம்.

கமல் தனது ஹாலிவுட் என்ட்ரியை மனதில் வைத்து இப்படியெல்லாம் எடுத்திருப்பதாய் சொல்கிறார்கள். ஹாலிவுட்டில் இருந்து தானே இங்கு "Mrs.Doubtfire", "Trains, palnes and automobiles", "9 to 5" என பல படங்களை எடுத்திருக்கிறார்? அங்கு போனால் இவரின் பப்பு வேகுமா எனத்தெரியவில்லை.. வேண்டுமானால் இங்கு எடுத்த ஹேராம், மகாநதி, அபூர்வ சகோதரர்கள் போன்றவற்றை அங்கு முயற்சிக்கலாம். கமல் நமக்கு என்றைக்குமே உலக நாயகன் தான். ஆனால் தமிழக எல்லையை தாண்ட விரும்பாத உலக நாயகன். அவருக்கு உலக நாயகன் என்னும் பிம்பம் பிடித்திருக்கிறது. தமிழகத்தை/இந்தியாவை தாண்டினால் அந்த பிம்பம் உடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்தியாவெல்லாம் தாண்டிப்போய் செட்டில் ஆகவோ படம் எடுக்கவோ மாட்டார் என உறுதியாக நம்பலாம். விஸ்வரூபம் அடுத்த பாகம் வருகிறது, என்றிருக்கிறார், பார்க்கலாம் அதையாவது ரசிக்கிற மாதிரி ஒரு நல்ல கமெர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கொடுக்கிறாரா என்று..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One