முதல் சம்பளம்!

Thursday, July 30, 2009

சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆனது போல் உள்ளது, ஆனால் இப்போது தான் ஒரு மாதம் முடிந்திருக்கிறது என்பதை என் முதல் சம்பளத்திற்கான செக் வந்ததும் தான் உணர்ந்தேன். முழுதாக பத்தாயிரம் ரூபாய்! சென்னைக்கே நான் தான் ராஜா என்பது போன்ற மிதப்பில் இருந்தேன். 'இனிமேல் வீட்டுக்கு போன் போட்டு 'அப்பா ஒரு 1000 ரூபாய் அவசரமா தேவைப்படுது' னு இனிமேல் கெஞ்ச வேண்டியது இல்லை' என்று நிம்மதியாக நினைத்துக்கொண்டேன்.
.
உடன் வேலை செய்பவர்கள் அப்போதே அந்த மாத சம்பளத்திற்கு தாங்கள் என்னென்ன செலவு செய்யலாம் என்று பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவன் அடிடாஸ் ஷூ வாங்கப்போவதாக சொன்னான்.
.
மற்றொருவன், "அப்போ உன் சம்பளம் ஒரு வாரத்துக்கு கூட தாங்காது" என்று எச்சரித்துவிட்டு "நான் சத்யம்ல படம் பாப்பேன்" என்றான்.
.
'ஓ.. முதல் மாச சம்பளம்னா இப்படித்தான் செலவு செய்யனுமா?' என்று நினைத்துக்கொண்டே அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு கிளம்பினேன். வரும் வழியில் நான் என்ன மாதிரி செலவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.
.
'புது டிரஸ் எடுக்கலாமா?'
'அதான் போதுமான அளவுக்கு டிரஸ் இருக்கே?'
.
'படத்துக்கு போலாமா?'
'எப்படித்தான் காச கொண்டுபோயி இந்த சினிமாக்காரன் கையில குடுக்க மனசு வருதோ?' என்று அம்மா அடிக்கடி சொல்லும் (திட்டும்) வார்த்தை தேவையில்லாமல் நினைப்பை கெடுத்தது. என்ன செலவு செய்யலாம் என்று பலவாராக யோசித்துக்கொண்டிருந்தேன். டக் என்று் என் சிந்தனையை கலைத்தது 'காலையில் தினமும் கண்விழித்தால்..' ரிங்டோன். வீட்டில் இருந்து அழைப்பு. அம்மா பேசினார்.
.
'என்னப்பா சாப்டியா?' - அதே வழக்கமான பழைய கேள்வி.
'ஏம்மா இத விட்டா உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா?' சற்றே கோபத்துடன் 'இந்த கேள்விக்கு பதில் சொல்லி பதில் சொல்லி எனக்கு அலுத்துப்போச்சுமா.'
'இல்லப்பா அவ்ளோ தூரம் தள்ளி இருக்க. தினமும் ரொம்ப அலைய வேண்டிருக்குன்னு வேற சொல்ற. அதான் சரியா சாப்டுறியா என்னனு விசாரிச்சேன்' என்றார் பாசத்தோடு கூடிய படபடப்புடன்.
'சரி வேற என்ன?'
'ஒன்னும் இல்லப்பா நாளைக்கு போன் போடறேன்'
'சரி வச்சுடறேன்' மறு முனையில் பதிலை எதிர் பாராமல் துண்டித்தேன்.
.
.
மறுநாளும் யோசித்தேன் என்ன செலவு செய்யலாம் என்று.
'ஷூ வாங்கலாமா?'
'ச்சே மொத செலவு கால்ல மிதிபடுற மாதிரியா இருக்கணும்?'
'நண்பர்களுக்கு ட்ரீட் வைக்கலாமா?'
'பட்ஜெட் இடம் குடுக்குமானு யோசிச்சிக்கோ'
வேற என்ன தான் செய்றது? அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே?'
.
இன்று இரவும் அம்மா தவறாமல் வழக்கம் போல் போன் செய்தார்.
'சாப்டியான்னு மட்டும் கேக்காதீங்கமா...'
'சரிப்பா கேக்கல. இல்ல அப்பா உன்கிட்ட ஏதோ விபரம் கேக்கனும்னு சொன்னாங்க அதான்'
'என்னவாம்?'
'இந்தா அப்பாட்டயே பேசு' போன் அப்பா கைக்கு மாறியிருக்க வேண்டும். அவர் தான் பேசினார்.
'தம்பி சொல்லுப்பா..'
'நீங்க தான் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களாமே?'
'அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அவா கெடக்கா கிறுக்கு கழுத. சரி நீ சாப்டியா?'
'ம்ம்...'
'சரி அம்மாட்ட பேசு' அம்மாவிடம் கொடுத்தார்..
'ராம் குமாரு உனக்கு இப்போ சம்பளம் போட்டிருப்பாங்க இல்ல?'
'ம்ம் நேத்து தான் போட்டாங்க'
'இல்ல நம்ம ஊர்ல பாக்டரி லாம் ஆக்சிடென்ட் ஆகுறனால செக்கிங் வருவாங்கன்னு பயந்துட்டு பாக்டரி ஒரு வாரமா தெறக்கல. அதான் உன் செலவு போக கொஞ்சம் பணம் இருந்தா அனுப்ப முடியுமான்னு அப்பா கேக்க சொன்னாங்க..'
'இத அப்பாவே கேட்டிருக்கலாமேமா?'
'இல்ல உன்ட்ட கேக்குறதுக்கு அப்பா வருத்தப்படறாங்க. பையனோட மொத மாச சம்பளத்த கூட அவன செலவழிக்க விடாம இப்படி ஆகிப்போச்சேன்னு'
'இதுல என்னம்மா இருக்கு? சரி நாளைக்கு காலைல அனுப்புறேன். எவ்வளவு வேணும்?'
'ஏங்க எவ்வளவு வேணும்னு கேக்குறான். தம்பி 1500 ரூபாய் அனுப்புவியாம்..'
'சரி நாளைக்கு காலைல அனுப்புறேன்'
'சாப்டியாப்பா?'
'புளிச்சுபோச்சுமா. அதெல்லாம் சாப்டுவேன். போன வைங்க...'
.
.
மறுநாள் விடிந்தது. அருகில் உள்ள வங்கிக்கு சென்றேன். மூவாயிரம் ரூபாய் பணத்தை இதுவரை என்னை கேட்காமல் எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின் வங்கி கணக்குக்கு அனுப்பினேன். முதல் மாத சம்பளத்தின் முதல் செலவு திருப்தியாக அமைந்த சந்தோசத்தில் மன நிம்மதியுடன் வேலைக்கு கிளம்பினேன்.
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One