இவ்விடம் கடவுள் விற்கப்படும்...

Wednesday, September 17, 2014

இந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி ஆகிவிடும் என்பதாலும் நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்..


மேலே இருக்கும் இந்த கிறிஸ்தவ மத சம்பந்தப்பட்ட பேனரை சமீபத்தில் புதுக்கோட்டையில் பார்த்தேன்.. இது போல் இப்போது ஊர் முழுவதும் பார்க்க முடிகிறது என்றாலும் இது ஒரு சாம்பிள்.. இந்த பேனரைப் பார்த்ததும் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன.. அவை,

1. யாருக்கிட்ட இருந்து யாருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்போறீங்க?

2. ஒருவரின் பெயரை பெரியதாக 'ஆனந்தன் ஐயங்கார்' என்று போட்டு, அதற்கு கீழே ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தலைமை தீட்ஷர் மகன்” என்று போட்டிருக்கிறீர்களே? அதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் கடவுளைப் பற்றிப் பேச மீனாட்சி அம்மன் கோயிலின் தீட்சிதர் பையனாக இருப்பது தான் பெரிய தகுதியா? 

3. வலது பக்கம் மேலே ஒரு டப்பாவில் சிறியதாக சிறப்பு சாட்சி என்று ஒரு பெண்ணின் பெயரைப் போட்டு, அதற்குக் கீழே “நரிக்குறவர் இனத்திலிருந்து ஒரு ஜீவனுள்ள சாட்சி” என்று அதை விடச் சிறியதாகப் போட்டிருக்கிறீர்கள்.. ஏன்யா ஜாதி வித்தியாசமே இல்லைன்னு சொல்லித்தான் மதமே மாத்துறீங்க.. ஆனா உங்க பேனர்லயே ஜாதி வித்தியாசம் பாத்துத் தான் பெயரை பெரியதாகவோ சிறியதாகவோ போடுகிறீர்கள்.. ஐயங்கார்னா பெருசு, நரிக்குறவர்னா இளப்பமா? இது தான் உங்கள் ஜாதி பேதம் இல்லாத மதமா?

4. சரி அது கூடப் பரவாயில்லை, அதென்ன ஜீவனுள்ள சாட்சி? அப்ப மேடையில் தேவன் மேல் உண்மையான நம்பிக்கையுடன் கண்ணீரோடு பேசும் மற்றவர்கள் எல்லாம் ஜீவனில்லாத போலி சாட்சிகளா?

என் மனதில் தோன்றிய இந்தக் கேள்விகளை ஃபேஸ்புக்கில் கேட்டேன்.. ஃபேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து மதத்தைப் பரப்பும் ஒரு கிறிஸ்தவர் கூட முழுமையாகப் பதில் சொல்லவில்லை.. ஒரு சிலர் வந்து “நீயெல்லாம் தீர்ப்பு நாளில் நல்லா அனுபவிப்படா” என்று சாபமெல்லாம் விட்டார்கள்.. இன்னும் சிலரோ அந்த ஆனந்தன் ஐயங்கார் என்பவர் முக்கியப் பேச்சாளராக இருப்பதால் அவர் பெயர் பெரியதாகவும், குறவர் இனத்தைச் சார்ந்த பிரேமா என்பவரின் பெயர் சிறியதாகவும் இருப்பதாகச் சொன்னார்கள்.. ஆனால் என் கேள்விகளுக்கு ஒருவரும் நேரடியாகப் பதில் சொல்லவேயில்லை.. ஜாதியே இல்லை என்று கூறி மதம் மாற்றுபவர்கள் ஏன் தங்கள் பேனரில் ஜாதியைக் குறிப்பிட வேண்டும்?

நான் ஃபேஸ்புக்கில் அந்த ஃபோட்டோவைப் பதிந்த போது கூட பலரும், “மீனாட்சி அம்மன் கோயிலில் ஏது தீட்சிதர்? அங்கு இருப்பது பட்டர் தானே? தீட்சிதர் என்றால் சிதம்பரத்தில் இருப்பவர் தான்.. அதுவும் போக இங்கு ஐயங்கார் என்று போட்டிருக்கிறதே? தீட்சிதர் என்னும் சைவ சமய ஆள் எப்படி ஐயங்கார் என்னும் வைணவராக இருக்க முடியும்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருந்தார்கள்.. “இப்படி இந்து மதத்தைப் பற்றி ஒன்று கூடத்தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக மதம் மாற்ற எண்ணுகிறார்கள்” என்றெல்லாம் கோபப்பட்டார்கள்.. அவர்களுக்கு என் பதில் இது தான்.. 

ஐயா, அவங்களுக்கு தீட்சிதர், பட்டர், ஐயங்கார் பேதம் எல்லாம் தேவையில்லை.. இந்து மதத்தில் உயர்வானவர்களாக பிராமணர்கள் தான் கருதப்படுகிறார்கள்.. அவர் ஐயரோ, ஐயங்காரோ, தீட்சிதரோ, பட்டரோ, சாஸ்திரியோ - பெரும்பாலான இந்துக்களைப் பொறுத்தவரை கோயிலின் கருவறையில் தீபாராதனை காட்டுபவர் ஐயர் தான்.. பெருமாள் கோயிலில் தீபாராதனைக் காட்டினாலும் அவரை ஐயர் என்று தான் அழைக்கிறோம்.. ஒரு மதத்தின் உயர்வான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ஒருவர், அந்த மதத்தை விட்டுவிட்டு தங்கள் மதத்துக்கு மாறிவிட்டதைப் பெருமையாகக் கூறி, “பார் உங்கள் மதத்தில் பெரிய ஆளாக நீ நினைக்கும் ஐயரே மாறிவிட்டார், நீ எப்போது மாறப்போகிறாய்?” என்று மறைமுகமாகக் கேட்பது தான் அது.. அந்த பேனரைப் பார்க்கும் பாமரனுக்கு ”மீனாட்சி அம்மன் கோயிலில் ஏதுடா தீட்சிதர் அதுவும் ஐயங்கார் தீட்சிதர்?” என்கிற கேள்வி எல்லாம் தோன்றாது.. “என்னது ஒரு ஐயரே மதம் மாறிட்டாரா?” என்கிற ஆச்சரியம் தான் தோன்றும்.. அந்த ஆச்சரியம் தான் மதம் மாற்ற நினைப்பவர்களின் முதல் வெற்றி..

எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு காலத்தில் ஜாதியின் பெயரால் சீரழிந்து போயிருந்த இந்து மதத்தில், கீழ் நிலையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை, “நீ கர்த்தரைத் துதி.. எங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது” என்று ஏமாற்றி மாரியம்மாள் கோயிலில் தீ மிதித்தவனை மேரியம்மாள் கோயிலில் சப்பரம் இழுக்க வைத்தார்கள்.. கோயில் தேரின் வடத்தில் தன் கை பட்டாலே தீட்டு என்று இத்தனை நாளாக ஒதுக்கப்பட்டு வந்த அவனுக்கு மாதா கோயில் சப்பரத்தை இழுக்கும் போது ஒரு நம்பிக்கை கிடைத்தது.. ஆனால் அதே சர்ச்சில் ஒரு கீற்றுக்கொட்டகை மூலம் அவன் உட்காரும் பகுதியை தனியாகப் பிரித்த போது அவன் நம்பிக்கை தவிடு பொடியாக ஆரம்பித்தது.. பின் அவன் தனக்கென்று தனி சர்ச்சை கட்டிக்கொண்டான் என்பது வேறு விசயம்.. ஆனால் மதம் விட்டு மதம் சென்றாலும் அவன் இழிவாகத் தான் பார்க்கப்படுகிறான்.. ஆனால் என்ன செய்வது? இரண்டு மூன்று தலைமுறைகளாக அவன் இந்தக்கடவுளைத் தானே கும்பிடுகிறான்? இப்போது கிட்டத்தட்ட அவன் சார்ந்த ஜாதியில் பாதி பேரை தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்.. அடுத்து தான் அதிர்ச்சி ஆரம்பித்தது..

இப்போது அவனின் இழிநிலைக்குக் காரணமானவர்களாகக் கருதப்படும் அந்த மேல் வர்க்கத்தை மதம் மாற்றத் தொடங்குகிறார்கள்.. அதாவது கீழ் நிலையில் இருப்பவனிடம் ஒரு காலத்தில் ’எங்கள் மதத்தில் ஜாதி பேதம் இல்லை’ என்று சொன்ன அதே வாய், இன்று மேல் சாதிகளை மதம் மாற்றும் போது, அவர்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு பெருமையாய்ச் சொல்லி பூரிப்படைந்து கொள்கிறது போஸ்டரிலும் ஃப்ளெக்ஸ் பேனர்களிலும்.. சாதியால் அவமானப்பட்ட அந்த தாழ்த்தப்பட்டவன் ”ங்யே” என்று இதையெல்லாம் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அங்கும் ஒரு பிராமன அசோசியேசன் ஆரம்பிக்கப்படுகிறது.. இந்துப் பள்ளராக இருந்தவர், இப்போது கிறிஸ்தவப் பள்ளராக இருக்கிறார்.. வேறு பெரிய வித்தியாசம் இல்லை.. இந்து ஐயராக இருந்தவர், கிறிஸ்தவ ஐயராக ப்ரொமோசன் ஆகிறார்.. 

நானும் கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் தான் இந்த மாதிரி சாதிப்பாகுபாடு எல்லாம் இருக்கிறது, அதனால் தான் கிறிஸ்தவத்தில் அதைத் தடுக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால் இதே இந்தியாவில் இருக்கும் இஸ்லாத்தில் சாதிப்பாகுபாடு துளியும் இல்லையே? அவர்களால் முடியும் போது ஏன் இவர்களால் முடியவில்லை? காரணம் பைபிளிலேயே ஒரு கதை வருகிறது, அது இதற்கான பதிலைக் கொடுக்கும்.. அதாவது ஏசுநாதர் தன் சீடர்களுடன் ஒரு ஊர் வழியாக உபதேசம் செய்து கொண்டே செல்கிறார்.. அப்போது ஒரு கானானியப்பெண் (கீழ்சாதிப்பெண்), அவரிடம் வந்து, “தேவனே என் மகள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அவளை ஆசிர்வதிக்க எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்கிறாள்.. உடனே தேவன் சொல்கிறார், “எஜமானர்கள் சாப்பிடுவதற்காகத் தயார் செய்யப்பட்ட உணவை நாய்க்குட்டிகளுக்குத் தர முடியாது” என்று.. அதாவது மேல் ஜாதி எஜமானர்களுக்கான உணவு போன்றது தான் இவரின் போதனை மற்றும் ஆசிர்வாதம் என்றும், அது கீழ் ஜாதி நாய்களுக்கு கிடைக்காது என்றும் கூறுகிறார்.. இதைப் பின்பற்றி வருபவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப்போகிறது? கீழ்சாதி மக்களை லாபத்திற்காக தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டு, பின் நாய் போலத்தானே நடத்துகிறார்கள்? எந்த கிறிஸ்தவப் பறையரும் கிறிஸ்தவ பிள்ளையோடோ, எந்த கிறிஸ்தவப் பள்ளரும் கிறிஸ்தவ நாடாரோடோ சம்பந்தம் செய்து கொண்டதை நான் பார்த்ததேயில்லை.. மதம் மாறும் வரை தான் ஜாதி இல்லாதது போன்ற பிம்பம், அதுவே மதம் மாறிய பின் பழைய குருடி கதவைத்திறடி கதை தான்..

”பிரமாண சகோதரியின் தேவ சாட்சி” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள், போஸ்டர் ஒட்டுகிறார்கள்.. அதில் அந்த பிராமண சகோதரி, மடிசார் கட்டிக்கொண்டு திருமணக்கோலத்தில் நிற்கும் படத்தைப் போட்டு “அன்று இருளில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. அருகிலேயே அவர் கைகளில் பைபிளை வைத்துக்கொண்டு நிற்கும் இன்னொரு படத்தைப் போட்டுவிட்டு “இன்று வெளிச்சத்தில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. கீழே இருக்கும் படத்தையும் பாருங்கள்..


இந்த போஸ்டரில் பார்த்தீர்களா? ஜாம்பஜார் சார்லஸ் என்பவர் நெற்றியில் விபூதி குங்குமத்தோடு இருக்கும் படம் இருளாம், அதுவே கையில் ஒரு பைபிளைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படம் வெளிச்சமாம்.. என் கேள்வி எல்லாம் இந்துக்களை குறி வைத்து, இந்து மதத்தை இருள் என்று பேசும் இவர்களால், இந்துக்களை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் இந்த மத வியாபாரிகளால் ஏன் ஒரு இஸ்லாமியரைக் கூட மதம் மாற்ற முடியவில்லை? ஒரு வேளை கிறிஸ்தவ வெளிச்சத்தை விட இஸ்லாமிய வெளிச்சம் இன்னும் பளீர் என்று இருப்பதால் இவர்களால் அதனை நெருங்க முடியவில்லையோ? கொஞ்ச நாளைக்கு முன்பு கூட ஒரு கிசுகிசு வந்தது, கிறிஸ்தவர்களின் உலகத்தலைவராக இருக்கும் போப் ஆண்டவரே இஸ்லாத்தை தழுவிவிட்டார் என.. அதனால் தான் தன் போப் பதவியைக் கூட ராஜனாமா செய்தார் என்றும் சொன்னார்கள்.. இந்த லாஜிக்கை வைத்துப் பார்த்தால் கிறிஸ்தவத்தை விட இஸ்லாம் தானே பெரிய வெளிச்சம்? அப்படியானால் முதலில் இந்த மதம் மாற்றம் செய்யும் மதவியாபாரிகள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறிவிட்டு, பின் இருளில் இருக்கும் இந்துக்களை மாற்ற நினைக்கலாம்.. அல்லது இஸ்லாமியர்களை உங்கள் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துவிட்டு இந்துக்களை இழுக்க நினைக்கலாம்.. ஆனால் செய்ய மாட்டீர்கள்.. ஏன்?

ஏனென்றால் அவர்கள் ஒற்றுமையானவர்கள்.. அவர்களின் ஒற்றுமையின் முன்னால் உலகின் அனைத்துமே அற்பம் தான்.. ஒரு தகவல் சடுதியில் தமிழ்நாடு முழுக்கப் பரவ வேண்டுமானால் எது சிறந்த சாதனம்? டிவி? இணையம்? செல்ஃபோன்? இவை எதுவும் இல்லை.. தமிழ்நாடு முழுக்க இருக்கும் கிட்டத்தட்ட 7500 பள்ளி வாசல்கள் தான் சிறந்த தகவல் பரப்பும் இடங்கள்.. சென்னையின் ஒரு பள்ளி வாசலில் சொல்லப்படும் கருத்து இம்மி பிசகாமல் கன்னியாகுமரியின் எல்லையில் இருக்கும் பள்ளி வாசலை சடுதியில் வந்து அடைந்துவிடும்.. ஒற்றுமை இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது.. அதே போல் இந்துக்கள் இருக்கும் தெருக்களில் அசால்ட்டாக வந்து பெண்களை குழப்புவது, நோட்டீஸ் கொடுப்பது, இந்துக் கடவுள்களையே மட்டமாகப் பேசும் புத்தகங்களைக் கொடுப்பது போல் இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் தெருக்களில் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.. அங்கு இப்படி செய்ய ஆரம்பித்தால் அது மொத்த இஸ்லாமியர்களுக்கும் பள்ளி வாசல்கள் மூலம் தீ வேகத்தில் அடுத்த அரை மணிநேரத்திற்குள் தெரிவிக்கப் பட்டுவிடும். அவர்களும் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்க வேண்டுமோ அப்படிச் சமாளிப்பார்கள்.. அந்த ஒற்றுமை இருப்பதால் தான் இந்த மாதிரி மத வியாபாரிகளால் இஸ்லாமியர்களை நெருங்கக் கூட முடியவில்லை.. அது போன்ற ஒற்றுமை இந்துக்களிடம் இல்லாததால் தான் இந்துக்களை ஏமாற்றி அவர்களிடம் மதத்தை விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள்..

”அப்பாஸ் கூட எங்கள் பினாயிலை வைத்துத் தான் கக்கூஸைக் கழுவுகிறார், நீயும் அதனால் எங்கள் பினாயிலை வாங்கு” என்கிறான் பொருளை விற்பவன்.. “ஐயரே எங்கள் மதத்துக்கு மாறிட்டான்.. அதனால் நீயும் எங்கள் மதத்துக்கு மாறிரு” என்கிறான் மதத்தை/கடவுளை விற்பவன்.. அதாவது ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர், நடிகர் போல் பிராமண மக்கள் மதத்தை விளம்பரப்படுத்தும் ஏஜெண்டுகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.. சிகரெட், ஷேவிங் க்ரீம், பினாயில், ஊறுகாய், தேங்காய் எண்ணெய் போல கடவுளையும் ஒரு சந்தைப் பொருளாக மாற்றிவிட்டார்கள்.. ஹ்ம் கடவுளை வைத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் கடவுளை ஒரு சந்தைப் பொருளாக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம்?

கடவுள் அதிசயத்தை நிகழ்த்தி விடுவார் என்றால் ஏன் கிறிஸ்தவ நாடுகளில் கூட ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும், காவல் நிலையங்களும் இருக்கின்றன? அட அவ்வளவு ஏன், தேவன், முடவரை நடக்க வைத்தார், இதய ஓட்டையை அடைத்தார், வயிற்று கேன்சரை சரி செய்தார் என்று மேடைக்கு மேடை சாட்சியங்களை செட் செய்து புழுகியே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்த ஆள், ஏன் தன் கடைசிக் காலத்தில் தேவனிடம் தன்னை குணப்படுத்தச்சொல்லி வேண்டாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்? இன்னமும் எந்த தைரியத்தில் அவர் இறந்த பின்னும் அவரின் குடும்பத்தினர் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? "The Mummy" என்னும் படத்தில் அந்த மம்மியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் “Imhotep... Imhotep" என்று அந்த மம்மியின் பெயரை மட்டும் உச்சரித்துக்கொண்டே தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அந்த மம்மியின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவார்கள்.. மதவியாபாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தெருத்தெருவாய் மதமாற்றம் செய்ய வரும் அப்பாவிகளுக்கும், மம்மி படத்தில் "Imhotep" என்று பித்து பிடித்த மாதிரி கத்திக்கொண்டே வருபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது..

தெளிவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. கடவுள் ஒன்றும் விற்பனைப் பொருள் அல்ல.. சாம்பிள் பல்பொடி விற்பவன் போல ஒருவன் தெருத்தெருவாய் வந்து கடவுளை விற்றுக்கொண்டிருந்தால் கொஞ்சமாவது யோசியுங்கள்.. வேலை, குடும்பம், குட்டியை விட்டுவிட்டு எந்தக் கிறுக்கனாவது கடவுளுக்காக இப்படியெல்லாம் செய்வானா என்று? எல்லாம் காசு படுத்தும் பாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் நல்வாழ்க்கையில் உங்களை விட வேறு எவனும், ஏன் அந்தக் கடவுளே கூட அதிக அக்கறை காட்டிவிட முடியாது.. அதனால் நம் கஷ்டத்தில் பங்கேற்று, நம் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் கடவுளை விற்கும் ஆட்களைப் புறந்தள்ளுவோம்... மூளைச்சலவை செய்யப்பட்ட அந்தப் பைத்தியங்களை மாற்ற முடியாது.. அவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழி தான் உள்ளது.. ஒன்று, ஒதுங்கிச் செல்ல வேண்டும்.. இரண்டு, இஸ்லாமியர்கள் போல் ஒற்றுமையாய் நிற்க வேண்டும்.. இரண்டாவது வழி தான் நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும் என்பது என் கருத்து..

சுப்ரமணிய சாமியும் தமிழுணர்வும்...

Thursday, September 4, 2014

இரண்டு, மூன்று நாட்களாகவே ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பேசியதைப் போட்டுத்தான் நாளிதழ்கள், டிவிக்கள் இரண்டும் கூவிக்கூவி காசு பார்த்துக்கொண்டிருக்கின்றன... நம்ம ஆளும் சும்மா இருக்க மாட்டார்.. திடீரென்று ஒரு ப்ரெஸ்மீட் வைத்து, உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு விசயத்தைக் கொழுத்திப்போட்டு அவர் பாட்டுக்கப் போய்விடுவார்.. இங்கு ஒவ்வொருத்தனும் தலையைப் பிய்த்துக்கொண்டு தங்களுக்குள் ஒரு ரத்தக்களறியையே நடத்திக்கொண்டு இருப்பார்கள்.. சமீபத்தில் அவர் பேசியதும் அப்படிப்பட்ட விசயம் தான்.. அது என்னவென்று தெரியாதவர்களுக்காக, அவர் சொன்னதன் சுருக்கம் கீழே:

“இலங்கை அரசிடம், எல்லை தாண்டி மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை விட்டுவிட்டு அவர்களின் படகுகளை மட்டும் பிடித்து வைத்துக்கொள்ளச் சொன்னவன் நான் தான்.. ஏனென்றால் படகுகள் பெரும் முதலாளிகளினுடையது.. அதைப் பிடித்து வைத்துக்கொண்டால் மீண்டும் எல்லை தாண்ட மாட்டார்கள் நம் மீனவர்கள்.. ஏழை மீனவனின் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காகவே படகை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, அவர்களை மட்டும் விடச் சொல்லிவிட்டேன்.. நான் சொன்னதைத் தான் இலங்கை அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது..”



என் முதல் சந்தேகமே இவர் எப்படி ஹார்வர்டில் பொருளாதாரத்தில் டாக்டரேட் வாங்கினார் என்பது தான்.. சிலர் சொல்வார்கள், ”சிவகாசியில் பட்டாசு ஆலைகளை எல்லாம் மூடிவிட்டால், விபத்துக்களே நடக்காது, சிவகாசி மக்கள் உயிரோடு, சந்தோசமாக இருப்பார்கள்” என.. பட்டாசு ஆலையில் விபத்து வந்தால் அன்றோடு அவன் உயிர் போய்விடும்.. குடும்பமும் ஒரு வாரம் அழுதுவிட்டுத் திரும்ப தன் பிழைப்பைப் பார்க்க ஓடிவிடும்.. அதுவே விபத்தைத் தடுக்கிறேன் பேர்வழி என்று எல்லா ஆலைகளையும் மூடினால், விபத்தன்று ஒரேடியாகப் போகும் அவன் உயிர் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. ஏனென்றால் எங்களுக்கு அதைத்தவிர வேறு தொழில் தெரியாது, அரசும் எங்கள் பிழைப்பிற்கு வேறு வழியைக் காட்டவில்லை.. கிட்டத்தட்ட கூலிக்கு மீன் பிடிப்பவனின் கதியும் இதே தான்...

ஒரு முதலாளியின் படகைப் பிடித்து வைத்துகொண்டு, மீனவனை மட்டும் விடுவித்தால் என்ன பயன்? அந்த மீனவன் அதன் பின் எங்கு வேலைக்குப் போவான்? அட்லீஸ்ட் படகோடு சேர்த்து அவனையும் பிடித்து வைத்துக்கொண்டால், இலங்கை ஜெயிலில் மூன்று வேளை சோறாவது போடுவார்கள் என நம்புகிறேன்.. படகு இல்லாமல் கரைக்குத் திரும்பும் அவனுக்குச் சொந்தப் படகு வாங்கவும் காசு இருக்காது.. முதலாளிகளின் படகையும் நம்ம சு.சாமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இலங்கை பிடித்து வைத்துக்கொள்வதால் கூலிக்கும் மீன் பிடிக்கப் போக முடியாது.. அரசாங்கமும் மீனவர்களுக்கு பிழைப்பிற்கான வேறு வழிமுறைகளை இதுவரைச் செய்ததில்லை.. பின் அவனால் என்ன தான் செய்ய முடியும்? சாக வேண்டியது தான்.. இலங்கைக் கப்பல் படையின் ஒரு துப்பாக்கி குண்டினால் உடனே போக வேண்டிய அவன் உயிர், தமிழ் மண்ணில் தினம் தினம் பசியால் போய்க்கொண்டிருக்கும்.. அவ்வளவு தான் வித்தியாசம்..

அதனால் தான் ஏதோ பெரிய உலக சாதனை நிகழ்த்தி விட்டது போல் பேசிக்கொண்டிருக்கும் சு.சாமி, பொருளாதார ரீதியில் இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த மிகப்பெரிய ஓட்டையைத் தவிர அவரது பேட்டியில் வேறு எந்தப் பெரியக் குற்றமும் எனக்குத் தெரியவில்லை.. சு.சாமியின் கருத்தை எதிர்ப்பதால் நான் ஒன்றும் தமிழக மீனவர்களின் ஆதரவாளனும் கிடையாது!!!! சரி மேட்டருக்கு வருகிறேன்..

உங்கள் வீடும் உங்கள் தம்பி வீடும் அருகருகே இருக்கிறது.. உங்கள் வீட்டில் இருக்கும் மளிகைச் சாமான் மற்றும் காய்கறிகளை நீங்கள் ஊதாரித்தனமாய் கணக்கு வழக்கு இல்லாமல் எடுத்துக் காலியாக்கி விட்டீர்கள்.. இப்போது உங்கள் வீட்டில் சோறாக்க அரிசி இல்லை, குழம்பு வைக்கக் காய்கறி, பலசரக்குச் சாமான்கள் இல்லை.. நீங்கள் நேராக, உங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் உங்கள் தம்பி வீட்டிற்குள் நுழைகிறீர்கள்.. அவன் ஒரு சிக்கனப் பேர்வழி.. பார்த்துப்பார்த்துச் செலவு செய்பவன்.. நீங்கள் அவனைக் கேட்காமலேயே அவன் வீட்டில் இருக்கும் சமையல் ஐட்டங்களை ஆட்டையைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக நீங்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. எத்தனை நாள் தான் அவன் பொறுமையாக இருப்பான்? அண்ணன் தம்பி என்றாலும், தொப்புள்க்கொடி உறவு என்றாலும் அவரவர் வயிற்றுக்கு அவரவர் தானே சாப்பிட வேண்டும்?

இந்த அண்ணன் இடத்தில் நம் கடல் வளங்களையும், மீன் வளங்களையும் அனுமதிக்கப்படாத வாரியல்களைக் கொண்டு அழித்துவிட்டத் தமிழக மீனவர்களையும், தம்பி இடத்தில் இலங்கையின் வடக்கு மாகானங்களில் இன்னமும் தங்கள் மீன் வளங்களைக் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.. இப்போது இந்தக் கதையின் அர்த்தமும், இலங்கை அரசின் நடவடிக்கைகளில் இருக்கும் ஞாயமும் உங்களுக்குப் புரியும்..




இலங்கையைச் சேர்ந்தத் தமிழக மீனவர்கள் பல முறை சொல்லிவிட்டார்கள், நம் இந்தியத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள் மிக மிக மோசமானவை; அவை கடல் வளங்களை மொத்தமாக அழித்துவிடும் என்று.. நாம் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட சட்டையே செய்யாமல், “என் இனம், என் தமிழன்.. அவனுக்கு மீன் பிடிக்கக்கூட உரிமை இல்லையா?” என்று பொங்குகிறோம்.. இதே தமிழன், தன் கடல் வளத்தை அனுமதி இல்லாத வாரியல்கள் கொண்டு அழித்த போது இன்று கூப்பாடு போடும் ஆட்கள் எல்லாம் எங்கே போனார்கள்? சரி நம் நாட்டுக் கடல் வளத்தை அழித்த போது நாம் மூடிக்கொண்டு இருந்த மாதிரி, மற்ற நாட்டுக்காரனும் இருப்பானா? கடலில் எல்லை தெரியாது, மீனவனுக்குக் கடல் சொந்தம் என்று சொல்வதெல்லாம் லாஜிக்கலாக ஏற்கக்கூடிய வாதமே இல்லை.. கடல் எல்லை தெரியாத மீனவன் இருக்கவே மாட்டான்.. தெரிந்தே தான் போகிறான்.. இந்த பார்டரைத் தாண்டிப் போனால் இலங்கை கப்பற்படை பிடிக்கிறது, சுடுகிறது என்றுத் தெரிந்தும் ஏன் போகிறான்? எல்லாம் பேராசை.. இது அவன் தவறு தானே?

இன்னொரு முக்கிய விசயம் நாம் பாகிஸ்தானை எப்படிப் பார்க்கிறோமோ, ஒரு பாகிஸ்தான்காரனை எப்படி பயத்துடன் அணுகுவோமோ அப்படித்தான் இலங்கைக்காரனுக்கு நாம்.. அவனுக்கு தமிழன் என்றாலே, “ஒரு வேளைத் தீவிரவாதியாக இருப்பானோ?” என்கிற பயம் இருக்கத்தானே செய்யும்? இப்படிப் பட்டச் சூழலில் நம் உயிரையும், பொருட்களையும் காப்பாற்றிக்கொள்ளப் பார்ப்போமோ, அல்லது திமிர் பிடித்துக் கடலில் எல்லை தாண்டிச் செல்வோமா?



சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் உணர்வு இதற்கெல்லாம் அவர்கள் தான் wholesale agency எடுத்து, கிட்டத்தட்ட ஒரு carrying and forwarding agent ஆகச் செயல்படுவார்கள்.. இவர்களைப் பொறுத்தவரை, தமிழன் கொலையே செய்தாலும் அதுவும் சரியே.. ஏன்னா அவன் தமிழன்.. தமிழன் எதுவும் செய்யலாம்.. அதற்கு இவர்களின் ஆதரவு என்றும் உண்டு.. ஆனால் இலங்கையிடம் மட்டும் ”இனவாதம் கூடாது” என்பார்கள்.. அதாவது தமிழனுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அளிக்கும் இவர்கள் தான், அதே போல் கண்ணை மூடிக்கொண்டு தன் இன மக்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கை செய்வதைத் தவறு என்பார்கள்.. சரி அவர்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சொல்கிறேன்..

இதே தமிழின ஆதரவாளர்கள் தான், இலங்கைத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.. ஆனால் இவர்கள் இந்தியாவில் அகதிகள் முகாமில் அடைபட்டு, வாழ்வை இழந்த ஈழத் தமிழனைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு விசயம்.. இந்தத் தமிழின ஆதரவாளர்கள் இலங்கையில் இருக்கும் தமிழனின் வளத்தைத் தன் இந்தியத் தமிழன் அழிப்பதை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? அவனும் தமிழன் தானே? அவனது உயிரை போர் என்னும் பெயரில் இலங்கை பறித்தது.. அவன் வளத்தை, வாழ்வாதாரத்தை “இனம்” என்கிறப் பெயரில் இவர்கள் பறிக்கிறார்கள்.. தான் மீன் திங்க வேண்டும் என்பதற்காக, தொப்புள்க்கொடியின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அவனின் வளத்தைத் திருடலாமா? உன் வீட்டுக்குள் எவனோ ஒருவன் வந்து பீரோவில் இருக்கும் நகை, பணத்தை எல்லாம் அள்ளிக்கொண்டு போனால் சும்மா இருப்பியா நீ? ஆனா நீ மட்டும் இன்னொருத்தன் நாட்டுக்குள்ள போயி அவன் கடல் வளத்தை அழிப்ப, அதை அவன் தட்டிக்கேட்டா ”இன அழிப்பு”, “இன வெறி”னு பட்டம் கொடுத்து அரசியல் ஆக்குவ, அப்படித்தானே மை டியர் டமிலின போராளீஸ்? 

இன்னும் சிலர் இருக்கிறார்கள், ”மனிதாபிமான அடிப்படையில் பாருங்கள்.. வெறும் மீன் பிடித்ததற்காக மீனவனைக் கொல்லலாமா? வலையை அறுக்கலாமா? படகைப் பிடிக்கலாமா?” என்று ஜீவகாருண்யம் பேசுவார்கள்.. ஐயா வாழும் வள்ளலாரே, உலகமே பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஓடுகிறது.. ஒரு நாடு தன் வளத்தைப் பாதுகாத்து, அதைப்பெருக்குவதில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது மனிதமாவது மானமாவது.. பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும் கண்டுகொள்ளாத, ரோட்டில் ஒருவர் அடிபட்டுக்கிடந்தாலும் ஆஃபிஸுக்கு லேட் ஆகிவிடும் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் போகிற நாம் தான் மனிதாபிமானம் பேசுகிறோம் என்பது மிகப்பெரிய நகைமுரண்.. தனிமனிதனான நமக்கே பணம் தான் முக்கியம் என்று ஆன பின்பு, ஒரு நாடு, அதற்குத் தன் இயற்கை வளங்களும் பொருளாதாரமும் தானே முக்கியம்? அதைத் தன் குடிமக்களுக்குத் தானே கொடுக்க நினைக்கும்? வருபவன் போறவன் எல்லாம் அள்ளிக்கொண்டுப் போக அது என்ன தமிழ்நாட்டு ஆற்று மணலா? இந்த விசயத்தில் தவறை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு இலங்கையைக் கண்டிப்பது, இலங்கை மீது கோபப்படுவது என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தெரிகிறது..



முதலில் இந்திய அரசு தன் மீனவர்களுக்கு இந்திய எல்லைக்குள் மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டும் என்கிற உத்தரவைப் போட வேண்டும்.. மீறிச் செல்பவர்கள் அதன் பின் கடலுக்குள்ளேயே இறங்க முடியாத அளவிற்கு தடை விதிக்க வேண்டும்.. இந்திய எல்லையில் மீன் வளம் இல்லையென்றால் மீனவர்களுக்கு வேறு சில வாழ்வாதார வழிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு அவர்களின் உயிரோடும் உடமையோடும் இன்னொரு நாடு விளையாண்டு கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.. அதே போல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முடிவுகள் தேவைப்படும் இது போன்ற விசயங்களில், மக்களின் உணர்வுகளைத் தூண்டிப் பிழைப்பை நடத்தும், பொது அறிவே இல்லாத மூன்றாம் தர அரசியல்வாதிகள் மூக்கை நுழைப்பதையும் உடனுக்குடன் கண்டிக்க வேண்டும்.. சும்மா “தமிழ், தமிழன், என் இனம், தொப்புள்க்கொடி உறவு” என்று மேடைக்கு மேடை மைக்கைப் பிடித்துக் கத்துவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தெரிந்தும் கத்திக்கொண்டிருக்கும் அது போன்ற சில்லறை அரசியல்வாதிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One