என் தாத்தா சிவாஜி...

Sunday, September 30, 2012

”ஒரு ஜீப்ல ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் காட்டுக்கு வேட்டையாட போனாங்களாம்” - என்னை தூங்க வைக்க கதை சொல்ல ஆரம்பித்தார் எங்கள் அப்பா..
“ம்.. சரி” - இது நானு..
“ரெண்டு பேரும் ட்ரெஸ்ல பாம், கத்தி, துப்பாக்கி எல்லாம் மாட்டி வச்சிருந்தாங்க”
“யாருப்பா வண்டி ஓட்டுனாங்க?”
“நேத்து யாரு ஓட்டுனா?” - என்னை செக் பண்ண கேள்வி கேட்கிறார் என நினைப்பேன். பின்பு தான் புரிந்தது அவர் நேற்று சொன்னதை மறந்து கேட்கிறார் என்று..
“நேத்து ரஜினி மாமா ஓட்டுனாங்க”
“அப்படின்னா இன்னைக்கு சிவாஜி தாத்தா தான் வண்டி ஓட்டுறாங்க. காட்டுக்குள்ள வண்டி வேமா போகுது”
“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா?”
“ரஜினி மாமா போற வண்டி விழுமா? எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”
“சரி பெறகு என்ன ஆச்சி?”
“.....”
“ப்பா... எப்பா...” - அப்பா கண் அயர்ந்திருப்பார்.. “எப்பா எந்திரிங்கப்பா.. அடுத்த என்னப்பா ஆச்சி?” - தட்டி எழுப்ப ஆரம்பித்துவிடுவேன் அவரை..
மெதுவாக கண் விழித்து, எனக்கு கதை சொல்வதை உணர்ந்து, “அப்போ எதுத்தாப்ல ஒரு யான வந்துச்சி”
“பெரிய யானையாப்பா?”
“ம் ஆமா பெரிய காது, நீளமா தந்தம் எல்லாம் இருக்கும்.. அப்படியே வேமா காருகிட்ட வருது”
“வந்து?”
”காருகிட்ட அப்டியே வந்து நிக்குது” - இதை சொல்வதற்குள் மீண்டும் ஒரு முறை கண் சொக்கி தூங்க ஆரம்பித்திருப்பார் என் அப்பா.. நான் வழக்கம் போல ‘எப்பா எப்பா’ என்று கத்திக்கொண்டிருப்பேன்..
”இப்ப கத்தாம தூங்க போறியா நாளைக்கு மிஸ்கிட்ட சொல்லவா?” - அம்மாவின் குரல் வரும் போது என் குரல் நின்றுபோகும்.
என் அப்பா கதையை முழுதாக சொல்லாமல் முடித்திருந்தாலும் எனக்கு என்ன நடக்கும் என தெரியும். அந்த யானையை ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் தூக்கி போட்டு பந்தாடியிருப்பார்கள். எத்தனை தடவை கேட்டிருப்பேன் இந்த கதையை? ஆனால் தினமும் புதிதாக கேட்பது போல் என் அப்பா அவ்வளவு அழகாக சொல்லுவார்.
 


நான் அப்போது பார்த்திருந்த ஒரே சிவாஜி படம் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டும் தான். ஒரு சில ரஜினி படங்கள் பார்த்திருந்தேன். எங்கள் சொந்தக்காரர்கள் தான் வெளியூரில் தங்கி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே பல காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அப்பாவிடம் “எப்பா ரஜினி மாமா எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க?” என்று அம்மா இல்லாத சமயம் கேட்டதுண்டு. அம்மா இருக்கும் போது கேட்டால் எனக்கு நல்லா வசவு விழும் அதான். அப்பாவும் “அவங்க வேலயெல்லாம் முடிஞ்சதும் கண்டிப்பா வந்துருவாங்க” என்பார். நானும் நம்பிக்கொண்டிருப்பேன் என்றாவது ஒரு நாள் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை மடியில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று.

என் அப்பா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர். என் பெயர்க்காரணம் கூட அதனால் அமைந்தது தான். என் பெரியப்பாவும் என் அண்ணனுக்கு கணேசன் என்றும் அக்காவுக்கு சாந்தி என்றும் பெயரிட்டு அழகு பார்த்தார். நல்ல வேளை என் தம்பி பிரபு என்னும் பெயரில் இருந்து தப்பித்துவிட்டான்.

எனக்கு ரஜினி மாமா அளவுக்கு சிவாஜி தாத்தாவை பிடிக்காது. நான் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்த பல படங்களில் சிவாஜி தாத்தா கஷ்டப்படுவார், கடைசியில் இறந்து போய்விடுவார். “ச்சே என்ன இப்பிடி இருக்காரு நம்ம தாத்தா? மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே?! நம்ம வீட்டுக்கு வரப்ப கேக்கணும்” என நினைத்துக்கொள்வேன்.


கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது.. சிவாஜி நமக்கு சொந்தக்காரராய் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஒரு பத்து வயது இருக்கும். அதே பக்கத்து வீட்டில் அதே டிவியில் ’தங்கப் பதக்கம்’ படம் பார்த்தேன். அப்போது தான் அவர் நடிப்பின் பிரமாண்டம் எனக்கு லேசாக புரிந்தும் புரியாதது போன்றும் இருந்தது.. சௌத்ரியினுடைய பேச்சும் கம்பீரமான நடையும் ஒரு வித பயத்தை கொடுத்தாலும், ஜெகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் அதை அவர் வெளிக்காட்ட துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என் அப்பா தான் கண் முன் வந்தார். சிவாஜி மாதிரி சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போடுவதாலோ என்னவோ சிவாஜியை அதற்கு பின் எப்போது பார்த்தாலும் என் அப்பாவின் சாயல் அங்கு இருக்கும்..



ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்க்கும் போது அதில் எது நாடகம், எது படத்தில் நடப்பது என புரியாமலே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி அந்த படத்திலும் செத்துப்போவது எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்னும் பாடலை இப்போது கேட்டாலும் பார்த்தாலும் கண் கலங்கிவிடும். நம் கண் முன் நின்று தன் குடும்ப நிலையை எண்ணி அவர் வருந்தி பாடுவது போலவே இருக்கும்.



ஒரு நிமிடம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., சிவபெருமான், ராஜ ராஜ சோழன், அப்பரென்று யாரை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. கண்டிப்பாக சிவாஜி எல்லார் போலவும் இருப்பார். நானெல்லாம் சின்ன வயசுல சாமி கும்பிடும் போது கண்ணை மூடியவுடன் சிவபெருமான் ரூபத்தில் சிவாஜி தான் மனதிற்குள் நிற்பார். சிவபெருமானுக்கே கூட டவுட் வந்திருக்கலாம், ‘யாருடா இவன் நம்மள விட நம்ம ரோல அலப்பறையா பண்ணுறான்!’னு..



’பர்ஸ்ட் ரஜினி, செகண்ட் சிவாஜி’ என்று பிடித்த நடிகர்களை வரிசை படுத்தி பேசும் போது சொல்வேன். ஆனாலும் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் ஏன் ஒன்றாக நடிப்பதில்லை என்று ஒரு கேள்வியை எனக்குள் மட்டுமே கேட்டுக்கொள்வேன். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம், ‘படிக்காதவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினியும் சிவாஜியும் வெளுத்துவாங்கியிருப்பார்கள். ரஜினி நடித்த படங்களில் எப்போதும் என் ஆல் டைம் ஃபேவரைட்டில் “படிக்காதவன்”ம் ஒன்று. அந்தப்படம் பார்த்ததில் இருந்து ஃபர்ஸ்ட் செகண்ட் எல்லாம் கிடையாது. பிடித்த நடிகர்கள் என்றாலே ரஜினியும் சிவாஜியும் தான்.

வளர்ந்தவுடன் நண்பர்களிடம் ரஜினி ’மாமா’, சிவாஜி ’தாத்தா’ என்று உறவு முறை சொல்லி கூறுவதை நிறுத்தியிருந்தாலும் மனதிற்குள் அந்த உறவை இப்போது வரை வைத்துக்கொண்டுதானிருக்கிறேன். 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தும், ’ஞானஒளி’ கோயில் மணியடிக்கும் அந்தோணியையும், ’பாரத விலாஸ்’ குடும்ப தலைவனையும், ’தில்லானா மோகனாம்பாள்’ சிக்கலையும், ’வசந்த மாளிகை’ சின்ன துரையையும், ’தெய்வ மகன்’ல் ”ஹொட்டேல் ஸ்டார்ட் பண்ணபோறேன் டேட்” என்று நெகத்தை கடித்துக்கொண்டே வரும் அந்த சுட்டி சிவாஜியையும், கர்ணனையும், ’முதல் மரியாதை’ மலைச்சாமியும், ’வியட்நாம் வீடு’ ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்று எத்தனையை சொல்ல? அவர் நடித்த எந்த படத்திலும் அவரது நடைப்பை குறை சொல்ல முடியாது..



‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும். சினிமாவிலும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் நடிகர்கள். சிவாஜியே ஒரு பேட்டியில் அவரது ‘ஓவர் ஆக்டிங்’ பற்றி கேட்கப்பட்ட போது, “சினிமாங்குறதே நிஜ வாழ்க்கைக்கும், நிஜத்துக்கும் மீறிய ஒரு விசயம் தானே? அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும்? இயல்பை மீறியது தானே நடிப்பு?” என்பது போல் பதில் சொல்லியிருப்பார். 



எனக்கு 6 வயதாக இருக்கும் போது, அப்பா ‘கர்ணன்’ படத்திற்கு கூட்டிச்சென்றார். வேலையெல்லாம் முடித்து வர லேட்டாகும் என்பதால் நைட் ஷோ தான் கூட்டி செல்வார். அம்மாவிடம் அடிவாங்கி கஷ்டப்பட்டு ஹோம்-வொர்க் செய்த பையனை, அதுவும் 6 வயசு பையனை நைட் ஷோவுக்கு ‘கர்ணன் படத்துக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது எவ்வளவு கொடுமைனு உங்களுக்கு தெரியாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் நான் தூங்கிவிட்டேன். என் அப்பா என்னை அடித்தார், கிள்ளினார், என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹீம் நான் எழவே இல்லை. அவருக்கு ஒரே வருத்தம், நான் அந்த க்ளைமேக்ஸ் போர் காட்சியையாவது பார்த்திருக்க வேண்டும் என்று. எனக்கு என் அப்பா மேல் கோவம் வந்ததே தவிர சிவாஜி மீது அப்போது கோவம் வரவில்லை.15, 16 வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தலைக்கு ஏறும் அந்த காலத்தில் என் அப்பாவை பயங்கரமாக கிண்டலடிப்பேன், அவர் சிவாஜி ரசிகர் என்கிற ஒரே காரணத்துக்காக. “அவா வீட்டுக்குள்ள கால வச்சதும் இவரு கையி அப்டியே துடிக்குமாம்!! என்னமா ஏமாத்துறாய்ங்க? அவருக்கு நீங்க ஃபேன் வேற?” என்று முதல் மரியாதை க்ளைமேக்ஸில் இருந்து வசந்த மாளிகை, தங்க பதக்கம் என்று நான் கிண்டல் செய்த அனைத்து படங்களையும் இப்போது மீண்டும் தேடித்தேடி விரும்பி பார்க்கிறேன்.

ஏதோ ஒரு வெளிநாட்டு பல்கலையில்  நடிப்பு பற்றிய பட்டிய பாடப்பிரிவிற்குரிய டிக்ஸ்னரியில் சிவாஜியை பற்றி பெருமையாக “முகத்தில் கிட்டத்தட்ட 60 விதமான பாவங்களை காட்டும் திறமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என ஆனந்த விகடனில் வந்த ‘ஹாய் மதனி’ல் ஒரு முறை சிவாஜியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை  மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும். ஆனா அந்த மனுசன் செஞ்ச எல்லா நடிப்பும் நம்மை ஆச்சரியப்படவும் அழவும் மெய்மறக்கவும் வைத்தன.

சுஜாதா, சிவாஜி போன்ற கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களின் மூச்சு கலந்திருந்த இந்த காற்றில் நமது மூச்சும் கலந்திருக்கிறது என்பதே நமக்கு மிகவும் பெருமையான விசயம் தான். இன்றைக்கு நாம் மிகப்பெரும் நடிகர்கள் என்று சொல்லும் எல்லோருமே சிவாஜி சாப்பிடும் போது சிதறிய பருக்கைகளை தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு பெரிய நடிகர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாளை அக்டோபர் ஒன்று, ’கலைத்தாயின் தவப்புதல்வன்’ சிவாஜியின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய இந்த பதிவு சிவாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும், என் அப்பாவிற்கும் சமர்ப்பணம்..

சிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..

Thursday, September 27, 2012

’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’ - கடந்த ஒரு மாதமாக நாளிதழ்களின் எதாவது ஒரு பக்கத்தில் இது போன்ற ஒரு செய்தி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.. சிவகாசி வெடி விபத்துக்கு பின் மீடியாவில் இருந்து ஃபேஸ்புக் குரூப் வரை அனைவரும் அவரவருக்கு தெரிந்த எங்கிருந்தோ அறிந்த பல விசயங்களை எழுதித்தள்ளுவது வாடிக்கையாகிவிட்டது. அதில் பலவும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவையாகவும், உண்மையை எடுத்துரைப்பதாய் இல்லாமலும் இருப்பதால், சிவகாசிக்காரன் என்கிற உரிமையிலும், என் தகப்பனார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார் என்கிற தகுதியோடும் இங்கிருக்கும் உண்மையை சொல்கிறேன்.. 



இங்கு யாரும் வேண்டுமென்றே உயிர் போக வேண்டும் என்று வேலை செய்வதுமில்லை, ஃபயர் ஆபிஸ் கட்டி ஆட்களை வேலைக்கு அமர்த்துவதுமில்லை. சிவகாசி என்றால் அச்சு, தீப்பெட்டி, வெடி தொழில் தான் என்று எங்கள் தலையில் எழுதி வைத்து படைத்துவிட்டான் ஆண்டவன். இங்கிருக்கும் எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஒருவர் இது சம்பந்தப்பட்ட ஆலையில் வேலை செய்துகொண்டிருப்போம். ‘எத்தன நாள் தான்டா கூலிக்கு மாரடிக்குறது?’ என்று எண்ணும் சிலர் தாங்கள் பிறந்ததில் பார்த்து வளர்ந்த அந்த தொழிலில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

அச்சுத்தொழில் என்றால் மிசின் வாங்க வேண்டும், முடிந்தால் ரெஜிஸ்ட்ரேசன் செய்து டின் நம்பர் பெற வேண்டும் என்று மட்டும் தெரியும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை என்றால் லைசன்ஸ் வாங்கி இடம் கட்டினால் போதும் தொழிலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம். அதிலும் பலர் ஏற்கனவே லைசன்ஸ் பெற்றிருக்கும் ஃபேக்டரியை லீசுக்கு எடுத்து தொழில் செய்வர் (இது சட்டப்படி தவறு). தொழிலை முறையாக கற்றுக்கொண்டோ, அல்லது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்வதற்கு இங்கு யாரும் அய்ய நாடார், சண்முக நாடார் பரம்பரை இல்லை. உங்கள் ஊரில் உங்களுக்கு எலெக்ட்ரிக் கடை, செல்ஃபோன் கடை, மளிகை கடை வைக்கும் ஆசை இருப்பது போல் எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு பட்டாசு ஆலை ஆரம்பிக்கும் ஆசை இருக்கும்.




இந்தியாவின் 75% அச்சு தேவைகளை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒரே ஒரு அச்சுத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரி தான் இருக்கிறது. 80% தீப்பெட்டி தேவையையும், 90% பட்டாசு தேவையையும் பூர்த்தி செய்யும் சிவகாசியில் அது சம்பந்தமான படிப்பையோ அறிவுரையோ வழங்கோ ஒரு கல்லூரியோ அரசு மையமோ கிடையாது என்பது வேதனையான விசயம். இவ்வளவு சிறு தொழில் மிக்க ஊரில், மக்களுக்கு விழிப்புணர்வும் சிறு தொழில் முனைவோர்க்கு அறிவுரையோ சொல்லும் அளவுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லையென்றால், தொழில் தொடங்க நினைப்பவன் நீங்கள் ஆரம்பிக்கும் வரை காத்திருப்பானா? அவனுக்கு அடுத்த வேளை சோறு வேண்டும். லைசன்ஸ் பெற்று (சாதா வெடிகள் செய்யும் கலெக்டர் லைசன்ஸ் மட்டுமே இங்கு நான் குறிப்பிடுவது, வானவெடிகளுக்கு நாக்பூரில் இருந்து லைசன்ஸ் பெற வேண்டும். இங்கு ஒரு சில ஃபேக்டரிகளில் மட்டுமே அந்த நாக்பூர் லைசன்ஸ் உள்ளது), ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத காட்டில் இடம் வாங்கி கட்டிடம் கட்டிவிட்டு தொழிலை தொடங்கி விடுவான் அவன்.

தொழில் தொடங்க எந்த விதமான உதவியோ வழிகாட்டுதலோ கொடுக்காத நம் அரசு அவன் தொழிலை ஆரம்பித்தவுடன் மிக வேகமாக வந்துவிடும், அதிகாரிகளின் மூலம். வரும் அதிகாரியாவது சரியானவனாக இருப்பானா என்றால் கிடையாது. “நாளைக்கு உன் ஃபேக்டரிக்கு செக்கிங் வாரோம்” என்று முன்னக்கூடி சொல்லி வைத்துவிட்டு வரும் ‘நல்ல’அதிகாரிகள் அவர்கள். மறுநாள் அவர்கள் வரும் போது பெரும்பாலும் ஃபேக்டரிக்கு லீவு விடப்பட்டிருக்கும், இல்லையென்றால் மேம்போக்காக பார்த்துவிட்டு போய் விடுவார் நல்ல அதிகாரி. அவருக்கு செக்கிங் வந்த அன்றோ அல்லது மாதமொரு முறையோ கவனிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி ‘நல்ல’ அதிகாரியாய் இருப்பார்கள்.

இன்னும் சில ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்கள் இருக்கிறார்கள். முன்னறிவிப்பு இல்லாமல் ஃபேக்டரிக்கு வரும் அவர்களாவது சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என நீங்கள் நினைத்தால் உங்களை போல் பச்சை மண்ணும் யாருமே இருக்க முடியாது. வேகமாக ஃபேக்டரிக்குள் வரும் அவர்கள் வானவெடிகளுக்கான லைசன்ஸ் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். பெரும்பாலும் அது இருக்காது. “அண்ணாச்சி என்ன நீங்க லைசன்ஸே இல்லாம ஃபேன்ஸி ஐட்டம் தயாரிக்குறீங்க?” என்பார் முகத்தை கொஞ்சம் முறைப்பாக வைத்துக்கொண்டு. அடுத்து  குடவுனில் பார்ப்பார். “அண்ணாச்சி உங்க குடவுன் அளவுக்கு இவ்ளோ ஸ்டாக் வைக்க கூடாதுல?” என்று நம்மிடம் அடுத்த கேள்வி கேட்பார். “யார கேட்டு இவ்ளோ பேர அளவுக்கு அதிகமா வேலைக்கு வச்சிங்க?”, “வெடியெல்லாம் ஏன் இப்படி பாதுகாப்பு இல்லாம வெளியில வச்சிருக்கிங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போவார். கடைசியில் “உங்க மேல கேஸ் போட்டு லைசன்ஸ் கேன்சல் ஆகுற அளவுக்கு மோசமா இருக்குண்ணாச்சி உங்க ஃபேக்டரி” என்று முடிப்பார். நம்ம ஆள் ’போச்சி அவ்வளவு தான் நம்ம லைசன்ஸ்’ என்கிற பயத்தோடு, “சார் சாரி இனிமேல் எல்லாம் சரி பண்ணிறேன் சார்” என்பார்.. நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசருக்கு சாரி சொன்னால் தான் பிடிக்காதே?!

”என்ன அண்ணாச்சி, இவ்ளோ பிரச்சனைய வச்சுக்கிட்டு அசால்ட்டா சாரினு சொல்றீங்க? இது எவ்வளவு மோசமான விசயம் தெரியுமா? கண்டிப்பா லைசன்ஸ் கேன்சல் ஆகிரும்” என்பார். இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அதோடு கிளம்பியிருக்க வேண்டும். அந்த மோசமான ஃபேக்டரியின் லைசன்ஸை கேன்சல் செய்திருக்க வேண்டும். அப்படி ஓரிருவருக்கு கேன்சல் செய்திருந்தால் இந்நேரம் எல்லா முதலாளிகளும் ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அந்த நல்ல ஆபிசர் மாதிரி 2000, 5000ரூபாயோடு கிளம்புபவர் இல்லையே? ஸ்ட்ரிக்ட்டா டியூட்டி பாக்குறதுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கே? பல்க்கா முதலாளிகளிடம் கறந்து விட்டு, “சரி சரி நான் பாத்துக்குறேன், இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க, என்ன?” என்று வார்னிங் செய்வது போல் வருங்கால உயிர்பலிக்கு தேதி குறித்துக்கொடுப்பார்.. 




அடுத்த முக்கியமான விசயம் இங்கு வீடுகளிலேயே நடக்கும் பட்டாசு உறப்த்தி. ஆலைகளில் ஏற்படும் விபத்து அங்கிருப்பவர்களை மட்டும் கொல்லும். ஆனால் வீட்டில் பட்டாசு உற்பத்தியின் போது விபத்து ஏற்பட்டால், அந்த குடுயிருப்பு பகுதியே முழுவதுமாக அழிந்து போய்விடும். ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரியும் இது வரை வாய் திறந்ததாகவோ, ஃபைன் போட்டதாகவோ, அட்லீஸ்ட் லஞ்சம் வாங்கியதாகவோ கூட தகவல் இல்லை. ஏன்? ஏன்னா அந்த மாதிரி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் எல்லோரும் சேரிப்பகுதிகளில் ஒன்றாக வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீது எந்த அரசோ அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டு, அட்வான்ஸை திரும்ப கேட்டால், “என் முதலாளி என்னை ஜாதியை சொல்லி வைகிறான்” என்று புகார் செய்யும் இவர்கள் மேல் யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

கடந்த ஞாயிறன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பட்டாசு விபத்துக்கு இரங்கல் செய்வது போல் ஒரு கூட்டம் போட்டிருந்தார் சிவகாசியில்.  ஊரில் இருக்கும் பல முதலாளிகளிடம் அந்த கூட்டத்திற்காக பணமும் வசூலிக்கப்பட்டது. பணம் கொடுக்கும் போது பல சிறு முதலாளிகளும் கட்சியினரிடம் “உங்க தலைவர, கவர்மெண்ட் ஆபிஸர பத்தி பேச சொல்லுப்பா, அவங்க முறையா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்” என்று கூறியிருக்கின்றனர். கட்சியினரும் “என்ன மொதலாளி? அதுக்குத்தானே இந்த கூட்டமே? எங்க தலைவர பாருங்க, நாளைக்கு எப்படி பேசுறாருன்னு.. சும்மா எல்லாரையும் கிழிச்சு எடுத்துருவாரு”னு சொல்லிட்டு போனவங்க தான்.. ஞாயிறு மீட்டிங்கில் கிருஷ்ணசாமி பேசுகிறார், “பணவெறி பிடித்த முதலாளிகளால் தான் விபத்துகள் நடக்கின்றன” என்று. தன் மக்களுக்கு அவர் அறிவுரை சொல்லியிருக்கலாமே, “நீங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாமல் வெடி உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள்” என்று? சொன்னால் ஓட்டு கிடைக்காதே?!

நான் முதலில் சொன்னது போல் விபத்து நடக்கவேண்டுமென்று யாரும் தொழில் தொடங்குவதில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் தொழில் பற்றிய பாதுகாப்பு முறைகளும் சொல்லிக்கொடுக்க அரசு ஒரு அடியும் எடுத்து வைக்காத போது, தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவன் எங்கு டியூசன் போய் கற்றுக்கொள்வான் இதையெல்லாம்? கிருஷ்ணசாமி போன்று விளம்பரத்துக்கு ஊருக்கு வரும் அரசியல்வாதிகளாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுவார்கள் என்றால், அவர்களும் தொழிலாளி முதலாளி என்று சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் என்று கூவுகிறது. சிவகாசியிலும் மற்ற ஊர்களில் இருப்பதை போல டீக்கடையிலும், சிறு அச்சகங்களிலும், ஹோட்டல்களிலும் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் முறை எங்கிருந்தாலும் அதை போக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வகையில் பட்டாசு ஆலைகளில் 95% குழந்தை தொழிலாளர்கள் கிடையாது.. அதற்கு காரணம் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று முதலாளிகள் உணர்ந்து கொண்டதால். இந்த மாதிரி மற்ற விசயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சென்ற வார விகடனில் காளீஸ்வரி ஃபயர் வொர்க்ஸ் குரூப் முதலாளி திரு.A.P.செல்வராஜ் அவர்கள் சொன்னது தான் நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல வசதியான மருத்துவமனைக்கு அரசின் நிதித்துறை அனுமதி மறுத்துள்ளது, தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் பட்டாசு தொழில் பற்றிய சட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சரியான Institute வேண்டும் போன்ற நல்ல தகவல்களை சொல்லியிருந்தார். மற்றபடி அந்த கட்டுரையில் அவர்கள் போட்ட படங்களும் குறிப்பிட்ட செய்திகளும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தன.. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அரசின் மீது யாரும் குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே எல்லோரும் முதலாளி என்றும், குழந்தை தொழிலாளர் என்றும் மேம்போக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். 

எல்லா பிரச்சனைகளுக்கும் முதலாளிகளே காரணம் அல்ல. கவனக்குறைவான தொழிலாளர்களும் காரணம். அவர்களுக்கு தாங்கள் சார்ந்த வேலையில் சிறு தவறு கூட என்ன மாதிரி விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும். மற்றபடி ஏற்படும் எல்லா விபத்துக்களுக்கும் அரசின் மெத்தனமும், எங்கள் மக்கள் மீது அக்கறை இல்லாததும் தான் காரணம். எங்கள் ஊர் விபத்தில்லாத அமைதியான, பட்டாசுத்தொழில் பாதுகாப்பான சந்தோசத்தை கொடுக்கும் தொழிலாக அமையும் - அரசும் அதிகார்களும் தங்கள் கடமையை சரியாக செய்தால். சிறந்த பட்டாசு துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களை கொண்டு இங்கு முகாம் ஆரம்பிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி சம்பந்தப்பட்ட கல்வியும் வர வேண்டும். லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும். ஜாதியை மீறிய கண்டிப்பு வேண்டும் கடமையில். தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் கண்டும் காணாமல் இருக்க கூடாது. ஃபேன்ஸி வெடிகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதை சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 





ஒரு சின்ன வேண்டுகோள். ஏதோ பெரிய புரட்சியாளன் போல் “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன்” என்கிற உறுதிமொழியெல்லாம் எடுக்க வேண்டாம். பட்டாசு விபத்தால் எங்கள் உயிர் ஒரு நொடியில் போகும் என்றால், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும். அவ்வளவு அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், மரங்களை அழிக்கும் பேப்பரையும், இயற்கையை பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களையும் நிறுத்துங்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிக்கொடுத்தால், முறையான பயிற்சி கொடுத்தால், சட்டங்களை சரியாக அதிகாரிகள் பின்பற்றினால் வருடம் முழுதும் எங்கள் மனதில் சிரிப்பும், தீபாவளியன்று உங்கள் மனதில் சிரிப்பும் என்றும் இருக்கும்..

தான் உயிரை பணயம் வைத்து தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிந்து போவதை பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் எங்கள் ஃபயர்வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One