மழைக்கால ஆஸ்பத்திரி..

Monday, November 23, 2015

ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண்டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்த  ஆஸ்பத்திரிக்காவது போலாம்னு பாத்தா வெளிய நசநசன்னு மழை.. 

ஒரு வழியா மதியம் மழை விட்டு லேசா தூரும் போது, ஒரு கையில குடையையும், இன்னொரு கையில அம்மாவின் மணிக்கட்டையும் பிடித்துக்கொண்டு, நடக்கப் பழகும் பிள்ளை போல் மெதுவாகத் தள்ளாடி ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.. அங்கு நிற்கிறது பொங்கலுக்கு வேட்டி சேலை வாங்க நிற்கும் கும்பல் போல் ஒழுங்கற்ற ஒரு வரிசை.. முக்கால்வாசி குழந்தைகள் தான்.. இந்த மழை தான் டாக்டர்களுக்கு எவ்வளவு பெரிய வரத்தைக் கொடுக்கிறது? தனக்குக் காய்ச்சல் என்றால் பொறுத்துக்கொள்ளும் மனது, பிள்ளைகளுக்கென்றால் துடிதுடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறதே?!

“ம்மா இந்த வரிசைல நின்னு அடுத்த வாரம் டாக்டர பாக்குற வரைக்கும்லாம் நான் உயிரோட இருக்க மாட்டேம்மா.. வாங்க பேசாம வீட்டுக்கே பெயிரலாம்” - மேலுக்கு முடியாத போது, உடன் ஒரு ஆள் இருந்தால் இந்த மனம் தான் எவ்வளவு கோழையாகவும், பிறர் சார்ந்தும் மாறிவிடுகிறது? தனிமையில் இதை விட அதிக வலியைத் தாங்கிய நான் இன்று அம்மா அருகில் இருக்கும் தைரியத்தில் மிகவும் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.. நான் பண்ணும் அலம்பலை எல்லாம் கண்டுகொள்ளாமல் சீட்டு எடுத்து வைத்தார் அம்மா.. தரை முழுவதும் ஈரம், சகதி, அழுக்கு, ஒரே நசநசப்பு. இதெல்லாம் அந்தச் சூழலை இன்னும் எரிச்சலூட்டுவதாய் மாற்றியது. இதில் எப்படி பிள்ளைகளைத் தரையில் விளையாட விடுகிறார்கள் என ஆச்சரியமாய் இருந்தது. ஹ்ம் இப்படிலாம் விளையாட விட்டதால் தான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி வந்திருக்கிறார்கள் என சமாதானம் செய்து கொண்டேன்.

”48. ராம்குமார்” என்று நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைப் பேப்பரில் அந்தப் பெண் எழுதினாள்.. இப்போது தான் அந்த லிஸ்டில்  எட்டாவதாக இருந்த ‘நிகிதா’ என்கிற பெயர் வாசிக்கப்பட்டது.. ‘இன்னும் 40 பேரா?’ என சோர்ந்து விட்டேன். ’நிகிதா’ - அந்தப் பெயர் எங்கள் ஊருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாததாய் இருந்தது.. மெதுவாக அந்த லிஸ்டில் இருக்கும் பிற பெயர்களைப் பார்த்தேன், அவைகளும் அப்படியே. தக்‌ஷா, தீப்தி, வேததர்ஷினி, அஜித்குமார், ரோஹித்.. ஹா ஹா இப்போதெல்லாம் சிவகாசியில் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர் எல்லாம் ஆச்சரியமாய் இருக்கிறது.. பட்டன் இல்லாமல் ஊக்கு குத்தியிருக்கும், எந்நேரமும் அழுதுகொண்டிருக்கும் அந்த அழுக்கு ஸ்வெட்டருக்குப் பெயர் அஜித் குமார். தங்கள் வாழ்க்கை தான் நவீனமாக மாறவில்லை, அட்லீஸ்ட் பெயரிலாவது கொஞ்சம் மாடர்னாக இருப்போம் என மக்கள் முடிவு செய்திருப்பார்கள் போல..  தீக்குச்சி அடுக்கிக்கொண்டும், தீப்பெட்டி ஒட்டிக்கொண்டும் அன்றாடங்காச்சிகளாய் இருக்கும் நம் பிழைப்பு, இந்தக் குழந்தைகள் மூலமாகத்தான் மாறப்போகிறது என்கிற அவர்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாகத் தான் அந்த மாடர்ன் பெயர்களை நான் பார்க்கிறேன்..

ஒத்தக் குடையைப் பிடித்துக் கொண்டு, மழையில் தான் நனைந்தாலும், பிள்ளைகளை நனையவிடாமல் தூக்கிக்கொண்டு அம்மாமார்கள் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னும் பொறுப்புத் தான் இந்தப் பெண்களை எவ்வளவு அழகாக மாற்றிவிடுகிறது? ரஜினி பட முதல் ஷோ மாதிரி கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.. எண்ணெய் பார்க்காத கந்தல் தலை, அழுக்கு உடுப்பு, ஒரே அழுகை, ஒழுங்கில்லாமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுவது, ஊசி குத்துவதற்கு முன்பே வரும் வீல்ல்ல்ல் சத்தம் என சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரி ஒரு சந்தையைப் போல் அலறிக்கொண்டிருந்தது, இந்த அமைதியான ஞாயிற்றின் மதியத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்..

மேலே வீடும், கீழே ஆஸ்பத்திரியும் என ஒன்றாகக் கட்டியிருந்தார் அந்த டாக்டர். மேலேயிருந்தும் ஒரே சத்தம். நிறைய உறவுக்காரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். டாக்டரின் மனைவி கீழே வந்து அவரை அழைத்தார். கிளம்பிய டாக்டர் வெடுவெடுவென மேலே ஏறினார்.. நம் நிகிதா, அஜித் போன்றோர்களின் பெற்றோருக்கெல்லாம் ஒரே கடுப்பு, ’பிள்ளைக்கு மேலு நெருப்பா சுடுது, இத்தன பேரு காத்துக்கெடக்கோம் இந்தாள் பாட்டுக்க பொண்டாட்டி கூப்ட்ருச்சின்னு பின்னாடியே போறியான் பாரு’ என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ’நம்ம கஷ்டமெல்லாம் எங்க தெரியப்போகுது, இவன் பிள்ளைகளுக்கு வந்தா தெரியும்’ போன்ற சாபங்களும் சில பல கெட்ட வார்த்தைகளும் முனுமுனுக்கப்பட்டன.. பத்தே நிமிடத்தில் கீழே வந்துவிட்டார். மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார். இப்போது மேலே இருந்து ஒரு பெண் கையில் பெரிய தட்டுடன் கீழே இறங்கி வந்தார்.

“டாக்டர் பையனுக்கு இன்னைக்குப் பொறந்த நாளு.. இந்தாங்க எல்லாரும் மிட்டாயி எடுத்துக்கோங்க” என்று வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு கொடுக்கப்பட்டது. அந்த மிட்டாயை எடுக்க எனக்குக் கைகள் கூசின.. ’என்னய்யா மனுசன் இந்த ஆளு? பையனோட பொறந்த நாளுக்குக் கூட அவசர அவசரமா ஓடி, அஞ்சே நிமிசம் தலையக் காட்டி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு வருவதற்கா இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இத்தனை பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு?’ என அவர் மேல் எனக்கு பரிதாபமாய்ப் போய்விட்டது. டாக்டரைப் பார்த்துக் கருவிய வாய்கள் எல்லாம் இளித்துக்கொண்டே மிட்டாயை மென்று கொண்டிருந்தன. ‘அடுத்தது ராம் குமார்’ - அழைப்பு வந்தது.

“இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? ரெண்டே நாள்ல சரியாப்போயிரும்” சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்து, முதுகில் லேசாக ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவைத்தார்.. முகத்தில் ஒரு சின்ன கவலை, எரிச்சல், விரக்தி, கடுகடுப்பு ஏதாவது இருக்க வேண்டுமே? எவ்வளவு தேடினாலும் இல்லை. ஹ்ம் பழகிப்போயிருக்கும். ’விடுமுறை, நல்ல நாள், பொல்ல நாள், ராத்திரி, பகல், மழை, வெயில், தீபாவளி, பொங்கல் என எது வந்தாலும் தன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்துக்கொண்டு நமக்காகவே உழைக்கும் மருத்துவர்கள், டிரைவர்கள், போலீசார் போன்றவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்? நம்மைப் போல் விரும்பிய நேரத்தில் ஒன்றுக்கு இருக்கக் கூட முடியாதே இவர்களால்? இவர்களின் குடும்பத்தினருக்கான நாட்களை அல்லவா இவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர்களின் சாபம் நம்மை என்ன செய்யும்? ஒரு வேளை அவர் குடும்பத்தினரும் பெருந்தன்மையாக நமக்காக பொறுத்துக்கொள்வார்களோ?! அப்பாவோடு படத்திற்குப் போக வேண்டும், தூங்கும் போது அப்பா கதை சொல்ல வேண்டும், விசேஷ வீடுங்களுக்குக் கணவனோடு செல்ல வேண்டும் என அந்தக் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்? உண்மையில் நாம் அந்த குடும்பத்தினருக்குத் தான் கடமைப் பட்டிருக்கிறோம்.’ என பலவாறாக யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன்.. 

ஊசி போட்டு அழுது கொண்டிருந்த ரோஹித்தை அவன் அம்மா கொஞ்சிக்கொண்டிருந்தார், ‘தம்பி பாரு நீயும் படிச்சி நாளைக்குப் பெரிய டாக்டர் ஆகணும், இது மாரி நம்மளும் எல்லாத்துக்கும் ஊசி போட்ரலாம், சேரியா?’ என்று.. எனக்கு ரோஹித்தின் வருங்கால குடும்பத்தை நினைத்துக் கவலையாக இருந்தது.. அவர்களுக்காகவாவது நமக்கு நோய் நொடி எதுவும் வந்துவிடக்கூடாது என இறைவனை மனது வேண்டுகிறது.. 

உலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..

Tuesday, November 10, 2015

நான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.. அவர்கள் கொஞ்சம் எடிட் செய்து போட்டார்கள்.. அந்த பத்திரிகையை வாசிக்க முடியாத நண்பர்களுக்காக, தினமலருக்கு நான் அனுப்பிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே..
______________________________________________________________________________

சினிமா தியேட்டரில் ஹீரோ வில்லனைப் பார்த்து செமத்தியான ஒரு பன்ச் டயலாக் விடுகிறான். குஷியான ரசிகர் கூட்டம் ஓஓவென கூக்குரலிட்டுக்கொண்டு விசில் சத்தத்தால் அந்தத் தியேட்டரை நிரப்புகிறது. நண்பர்களோடு செம ஜாலியான அரட்டை ஓடிக்கொண்டிருக்கிறது. உற்சாகமிகுதியில் அனைவரும் அந்த இடமே அதிர்வது போல் கை தட்டிக்கொண்டாடுகிறார்கள். இந்த இரண்டு விசயங்களிலும் பொதுவானத் தன்மை எது? சந்தோசமும் அதை வெளிப்படுத்தும் சத்தமும். மனிதனின் உணர்ச்சிகளை, குறிப்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் சத்தங்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இன்றும் வீட்டு மற்றும் கோவில் விசேஷங்களில் வாத்தியங்கள் இசைப்பதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? சத்தங்கள் மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை.. தியேட்டரில் விசில் அடிப்பது, நண்பர்களோடு கை தட்டி சிரித்துப் பேசுவது போன்ற வரிசையில் வருவது தான் தீபாவளியை வெடிச்சத்தத்தோடு கொண்டாடுவதும். அந்த வெடிச்சத்தத்துக்குப் பின் இருக்கும் மௌனக் கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு சந்தோசமாகக் கொண்டாடலாமே?

தீபாவளி என்றால் உடனே வெடி ஞாபகம் வருவது போல, வெடி என்றால் உடனே சிவகாசி தான் ஞாபகம் வரும். இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் கிட்டத்தட்ட 85சதவிகிதத்தைத் தன் தோள்களில் சுமந்திருக்கும் ஊர் இது. அதாவது வருடத்திற்கு 2000கோடி ரூபாய் புழங்கும் தொழிலாகத் தன் விழுதுகளைப் பரப்பி வளர்ந்து நிற்கிறது. இன்றும் தீபாவளி நெருங்க நெருங்க வெளியூர்களில் இருந்தெல்லாம் கார்களில் இங்கு வந்து சல்லிசாகக் கிடைக்கும் என பட்டாசுகளை அள்ளிச்செல்கிறார்கள். மற்ற எந்த ஊரிலும் இல்லாமல் சிவகாசியில் மட்டும் இந்த அளவிற்கு பட்டாசுத் தொழில் வளர்ந்து நிற்க என்ன காரணம்? சிவகாசி என்னும், விவசாயத்தால் விவாகரத்து செய்யப்பட்ட ஊர் எப்படி இந்த பட்டாசுக்கு வாக்கப்பட்டது? சிவகாசிக்கு முன் பட்டாசு என்பதே யாருக்கும் தெரியாத விசயமா?

பட்டாசு என்பது சீனத் தொழில்நுட்பம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான். நம் கிராமப்புறங்களிலும் கூட இன்று வரை கோயில் திருவிழாக்களின் போது அந்தந்த ஊர்களில் சிறிய அளவில் பட்டாசு உற்பத்தி செய்கிறார்கள். அவ்வளவு ஏன் சிவகாசியில் கூட வானக்காரர் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது மாரியம்மன் கோவிலுக்கு அருகில். கோவில் திருவிழாக்களின் போது பட்டாசு வெடித்துக்கொண்டாடுவதற்கு ஏதுவாக, அந்தத் தொழில்நுட்பம் தெரிந்த சிலரை கோவில் நிர்வாகத்தினர் அருகிலேயே குடிவைத்து ஒரு தெருவை உருவாக்கினர் அந்தக் காலத்தில். அதனால் பட்டாசுத் தொழில்நுட்பம் என்பது அரசல்புரசலாக பல ஊர்களிலும், ஃபார்முலா என்று எதுவும் இல்லாமல், பழக்க வழக்கம் மூலம் மட்டுமே பழக்கதில் இருந்து வந்த ஒரு விசயம் தான். அதை ஒரு organized businessஆக மாற்றியதில் தான் சிவகாசி வெற்றிபெற்றது..



அது 1920களின் ஆரம்பம். சிவகாசியில் இருந்து அய்ய நாடார், சண்முக நாடார் என்கிற இரண்டு இளைஞர்கள் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழில்நுட்பம் பற்றித்தெரிந்துகொள்ள கல்கத்தா புறப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வருட படிப்பிற்குப் பின் உள்ளூர் திரும்பிய அவர்கள் ஜெர்மனியில் இருந்து சில எந்திரங்களை இறக்குமதி செய்து சிவகாசியில் முதல் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வானத்தை நம்பியே காத்திருந்து, அது கொடுக்கும் தூரலில் விளையுமோ விளையாதோ என்கிற பயத்தில் பருத்தியையும், கம்பையும், புகையிலையையும் விதைத்துக் கஷ்டப்படுவது என்கிற எண்ணத்தில் இருந்த மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புதுத் தொழிலின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். வியாபாரம் வளர ஆரம்பித்தது..

இணைந்து நடித்துப் பல வெற்றிகளைக் குவித்த ரஜினியும் கமலும் ஒரு கட்டத்தில் ‘இனி பிரிந்திருந்தால் தான் இருவருக்கும் நல்லது’ என்கிற முடிவை எடுத்ததற்கெல்லாம் முன்பே இவர்கள் அதைப் போன்ற முடிவுடன் இரு வேறு பெயரில் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். அணில் பிராண்ட் அய்யன் ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பெயரில் அய்யநாடாரும், காக்கா பிராண்ட் காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பெயரில் சண்முக நாடாரும் புது நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.. மத்தாப்பு மற்றும் தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சியை அடுத்து அய்யநாடாரும் சண்முக நாடாரும் தங்கள் வியாபார ஆர்வத்தைப் பட்டாசுப் பக்கம் திருப்பினார்கள். 1923ல் முதல் ஃபேக்டரி ஆரம்பிக்கப்பட்டது.



அப்போது வரை பட்டாசு என்றால் அது கம்பி மத்தாப்புக்கள் தான்.. அதுவும் ஜெர்மனில் இருந்து தான் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. சிவகாசி, கேரளத்தின் திரிச்சூர் என அங்கும் இங்கும் சிறிய அளவில் தான் இந்தியாவில் உற்பத்தி இருந்து வந்தது.. இந்தச் சூழலில் தான் 1934ல் பட்டாசு உற்பத்திக்கு கலால் வரி விதிக்கப்பட்டு அது ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. மூலப்பொருட்களும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.. இந்த நேரத்திலா இரண்டாம் உலகப்போர் வர வேண்டும்? வெடி பொருட்கள் ஆதலால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் பல கெடுபிடிகள். மூலப்பொருட்களுக்கும், இறக்குமதி பட்டாசுகளுக்கும் பயங்கர தட்டுப்பாடு வர ஆரம்பித்தது. உற்பத்தி பாதித்தது. இதனால் பிற ஊர்களில் இருந்த பட்டாசு ஆலைகள் எல்லாம் தொழில் நசிந்துவிடுமோ என்கிற பயத்தில் மூடப்பட்டன.. ஆனால் இந்த இடத்தில் தான் சிவகாசிக்காரர்கள் வேறு மாதிரி யோசித்தார்கள். நிர்வாகவியலில் SWOT அனாலிசிஸ் என்பார்கள். ஒரு வியாபாரம் அதனுடைய பலம் (strength), பலவீனம் (weakness), வாய்ப்பு (opportunities), அச்சுறுத்தல் (threats) என்கிற நான்கையும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப்போரால் நேர்ந்த இந்தத் தடையை மற்ற ஊர் பட்டாசு முதலாளிகள் ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்தார்கள் என்றால், சிவகாசிக்காரர்கள் மட்டும் அதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தார்கள், ஜெயித்தார்கள்.

’மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யமுடியாவிட்டால் என்ன? நாமே உற்பத்தி செய்வோமே?’ என பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களையும் அவர்களே உற்பத்திச் செய்ய ஆரம்பித்தார்கள்.. இங்கும் ஒரு நிர்வாகவியல் தியரி இருக்கிறது. High risk = high returns என்பது தான் அது. ரிஸ்க் எடுத்து இறங்கினார்கள். அது பலனைக் கொடுத்தது. மூலப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்ய ஆரம்பித்த பின், இறக்குமதி செய்வதை விட விலை மலிவாகவும், உடனுக்குடன் கிடைக்கக்கூடியதாகவும் மாறியது. இதனால் பட்டாசு உற்பத்தி அதிகரித்து குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தது. அழகிய தீப்பொறியுடன் சுருசுருவென எரியும் கம்பி மத்தாப்பை அனைவரும் வாங்க ஆரம்பித்தார்கள். கம்பி மத்தாப்பில் இருந்து சங்கு சக்கரம், புஸ்வானம், சீனிவெடி, சரவெடி என்று பட்டாசுத்தொழில் ஒவ்வொரு படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. இன்று சிவகாசியில் கிட்டத்தட்ட 500 பட்டாசு ஃபேக்டரிகள் இருக்கின்றன.

பட்டாசு மட்டுமல்லாது மூலப்பொருட்கள் கம்பெனிகளும், பிரிண்டிங் ப்ரெஸ்களும், அந்த பிரிண்டிங் ப்ரெஸ்களுக்காக மை கம்பெனிகளும், இன்னும் பல சிறு தொழில்களும், பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தீப்பெட்டி, பட்டாசுப் பெட்டிகள் ஒட்டுவது என கைச்செலவுக்கு சம்பாதிப்பதும் என்று சிவகாசி ஒரு பொருளாதார மையமாக உருவாகியது. வருடம் முழுக்க இங்கு கொழுத்தித் தீர்க்கும் வெயிலும் சிவகாசிக்கு மட்டுமே சாத்தியமானதாய் இந்தத் தொழில்களை மாற்றியது. சிறிய அளவில் வெறும் கம்பி மத்தாப்பை உற்பத்திச் செய்ய ஆரம்பித்தவர்கள், தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத இந்த இரண்டாம் உலகப்போரினால், உலகையே திரும்பிப் பார்க்க வைத்து, ஒரு ஊரின் பொருளாதரத்தையே திருப்பிப் போட்டார்கள் என்பது ஆச்சரியமான கேயாஸ் தியரி தான்..



சரி இது வரலாறு. அப்படியே நிகழ்காலத்திற்கு வருவோம். ’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தைப் பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’  - தீபாவளி நெருங்கும் சமயத்திலும், பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படும் வேளைகளிலும் இது போன்றச் செய்திகள் டிவி, செய்தித்தாள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என எதன் மூலமாவது வந்து அடிக்கடி நம் கண்களில் படும். அவற்றில் பலவும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன என்பது தான் கொடுமை.

யாரும் எந்த ஒரு தொழிலையும் கொலை செய்வதற்காக ஆரம்பிப்பதுமில்லை, யாரும் தன் உயிர் போக வேண்டும் என்பதற்காக எந்த வேலையிலும் ஈடுபடுவதும் இல்லை. பிறந்ததில் இருந்து பார்த்த வளர்ந்த தொழில் என்பதாலும், அதைத் தவிர்த்த வேறு விசயங்கள் தெரியாது என்பதாலும் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலரும் பட்டாசு மற்றும் பிரிண்டிங் சார்ந்த துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். கொஞ்சம் காசு இருப்பவர்கள் சொந்தமாக வியாபாரம் ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே ஒழிய செத்துப்போவது கிடையாது. பின் ஏன் இவ்வளவு விபத்துக்கள்? இங்கு தான் ஒரு பிரச்சனை தொக்கி நிற்கிறது.



ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒருவர் தவறாகக் கோட் எழுதினால் என்னவாகும்? ப்ரோகிராம் execute செய்தால் error காட்டும். டெஸ்டிங் டிபார்ட்மெண்ட்டில் அதைச் சுட்டிக்காட்டுவார்கள், தவறைச் சரி செய்து மீண்டும் அந்தப் ப்ரோகிராமை execute செய்து சரியாக்கி விடலாம். அதுவே ஒரு பட்டாசு ஆலையில் ஒருவர் தவறு செய்தால்? அவ்வளவு தான் விசயம். பொறுப்பு பெரியது, அதனால் சிறிய தவறுகள் கூட பெரும்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒவ்வொரு வருடமும் கேம்பஸ் இண்டர்வியூவின் போது எப்படி பல பெரிய ஐடி நிறுவனங்களும் தங்களுக்குத் தரமான மனித சக்திகள் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனவோ அதே மாதிரி தான் இங்கிருக்கும் ஆலைகளும் புலம்புகின்றன, தொழில் தெரிந்த ஆட்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என.

படிப்பின் வாசம் கிடைத்தவர்கள் இந்தத் தொழிலின் ரிஸ்க்கைக் கருத்தில் கொண்டு வேறு ஊர்களுக்குப் பிழைக்கச் சென்றுவிடுகிறார்கள். படிக்காத ஒரு சிலர் மட்டும் ஃபயர் ஆஃபிஸ் பக்கம் வேலைக்கு வருகிறார்கள். எப்படியோ ஆள் கிடைத்தால் சரி என்றிருக்கும் முதலாளிகளும் முறையான அனுபவம் இல்லாத ஆட்களிடம் ஃபோர்மோன் பொறுப்பையும், காண்ட்ராக்ட் வேலைகளையும் ஒப்படைக்கிறார்கள். ஐடி கம்பெனி போல் இங்கு டெஸ்டிங் டிபார்ட்மெண்ட் எல்லாம் இருப்பதில்லையே தவறுகளைச் சுட்டிக்காட்ட? ஒரு தவறு, சரி செய்வதற்கான வாய்ப்பையேக் கொடுக்காமல் மொத்த உயிர்களையும் கொத்தாக அள்ளிச்சென்று விடுகிறது. பெரிய நிறுவனங்களில் இது போல் அனுபவம் இல்லாத ஆட்களை ஃபோர்மேனாகவோ காண்ட்ராக்டராகவோ அமர்த்துவதில்லை என்றாலும், தொழில் தொடங்கும் ஆசையில் சிறு முதலீட்டில் ஆரம்பிக்கும் பலரும் அனுபவமற்றவர்களை நம்பி இறங்குவதால் வரும் பிரச்சனை இது. சமீபத்தில் நடந்த விபத்துக்களும் இதைத்தான் சொல்கின்றன. இதற்கு என்ன தான் தீர்வு?



சிவகாசியில் வளர்ந்து வரும் அச்சுத்துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதை இன்னும் நெறிப்படுத்திச் செல்லவும் 1977ல் பிரிண்டிங் டெக்னாலஜிக்கென தனி தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதை விட முக்கியமான, பாதுகாப்புக் குறைந்த பட்டாசுத் தொழிலுக்கென தனி கல்லூரியோ, அரசு மையமோ, படிப்போ எதுவும் இன்று வரை கிடையாது. இதனால் பட்டாசுத் தொழில் படித்து அறிந்து, புது நுட்பங்களைப் புகுத்தும் தொழில்நுட்பம் என்கிற நிலைக்கு உயராமல், செவி வழிச்செய்தியாகக் கேட்டுச் செய்யும் ஒரு சாதாரண வேலை என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது. புதிதாக வருபவர்களும் முறையான அனுபவம் கிடைப்பதற்கு முன்பே, ஆள் பற்றாக்குறையால் பெரிய பொறுப்பை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு பற்றியோ, பயன்படுத்தும் மருந்துகளின் உண்மையான வேதியியல் தன்மை பற்றியோ முழுதாகத் தெரியாமல் அதைப் பயன்படுத்தும் ஒருவன் நிச்சயம் கவனக்குறைவாகத்தான் இருப்பான். இன்று வீட்டில் கேஸ் சிலிண்டரை மாட்டும் பொழுது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறோம்? லேசாக வாடை வந்தாலே எவ்வளவு உஷார் ஆகிறோம்? ஆனால் அதை விட ஆபத்தான மருந்துகளை, முறையான அனுபவம் இல்லாத ஆட்கள் மிகவும் சர்வசாதாரணமாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு விழிப்புணர்வு வரும்.

அதனால் முறையான படிப்பு இதற்கு மிகவும் அவசியமாகிறது. அட்லீஸ்ட் அரசாங்கம் வேளாண் மையம் நிறுவுவது மாதிரி சிவகாசியில் பட்டாசுத் தொழில் மையங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பச் சந்தேகங்களைத் தீர்ப்பதில் இருந்து, பாதுகாப்பாக வெடிகள் தயாரிப்பது வரை அடிக்கடி முகாம்கள் நடத்தி ஒவ்வொன்றையும் வேலையாட்களுக்கும் முதலாளிகளுக்கும் மனதில் பதிய வைக்க வேண்டும். பட்டாசு தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களையும் தீர்ப்பதற்கான ஒரு இடமாக இந்த மையம் செயல்பட வேண்டும். முதலாளிகள் எல்லாம் ஒன்றாகச் சேந்து பிரிண்டிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்தது போல பைரோடெக் இன்ஸ்டிட்யூட்டும் ஆரம்பிக்கலாம். வெறும் வேலையாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பமாகவும் மாற்றலாம் பட்டாசு தயாரிக்கும் கலையை!!

அடுத்த விசயம் விதிகளைப் பின்பற்றுவது. என்ன தான் ஹெல்மெட் நம் உயிரைக் காப்பாற்றுவதாய் இருந்தாலும், ரோட்டில் போலீஸ் இருந்தால் மட்டும் தான் நாம் அதை அணிகிறோம். தேர்வறையில் ஆசிரியர் அசந்து இருக்கும் போது பக்கத்துப் பேப்பரை எட்டிப்பார்த்து எழுதி வளர்ந்தவர்கள் தானே நம்மில் பலரும்? இங்கு விதிகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் முறையான கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த ஒரு விசயமும் விதிகளை மீறி தன் இஷ்டத்திற்குச் செயல்பட ஆரம்பிக்கத்தான் செய்யும். பட்டாசுத் தொழிலும் இதற்கு விதிவிலக்கல்லவே? பாட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பாகச் செய்ய பல விதிகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டியவர்கள் பெயருக்குத் தான் ஆய்வு செய்கிறார்கள் என்பது தான் வேதனை. நாளை ஒரு ஃபேக்டரியில் ஆய்வு என்றால் இன்று மாலையே அந்த முதலாளிக்குத் தகவல் போய்விடும், மறுநாள் அந்த சுற்றுவட்டார ஃபேக்டரிகள் அனைத்திற்கும் லீவு விடப்பட்டிருக்கும். இழுத்து மூடப்பட்டிருக்கும் ஃபேக்டரியில் என்னத்தை ஆய்வு செய்வது?



இன்னும் சில ஃபேக்டரிகளில் திடீரென ஆய்வு செய்ய வருவார்கள். ‘நாக்பூர் லைசன்ஸ் இல்லையே அண்ணாச்சி?’, ‘இத்தன பேர எப்படி வேலைக்கு வைக்கலாம்ணே?’, ‘என்ன இப்படி வேட்ட எல்லாம் வெயில்ல போட்டு வச்சிருக்கீங்கண்ணாச்சி?’ என்று கேள்விகளால் குடைந்து எடுப்பார்கள். ’சரி ரூல்ஸ் ஒன்னத்தையும் ஃபாலோ பண்ணல, நம்ம மொதலாளி ஆபிசுக்கு சீல் தான் இன்னைக்கு’ என்று வேலையாட்கள் கூடப் பதறமாட்டார்கள். ஏனென்றால் மறுநாளோ அல்லது ஒரு இரண்டு நாட்கள் லீவு விட்டோ வழக்கம் போல ஃபேக்டரி மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும் என அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நடுவில் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வீடுகளிலேயே சிலர் திருட்டுத்தனமாகப் பட்டாசு தயாரிப்பதையும் யாரும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. ஏதாவது விபத்து நடந்தால் மட்டும் கண் துடைப்பிற்கு சில நாட்கள் அதிகாரிகள் அங்கும் இங்கும் ஆய்வு செய்வார்கள். பின் பழைய குருடி கதவைத் திறடி கதை தான் மீண்டும்.
பெரியவனோ சிறியவனோ, யார் விதிகளைப் பின்பற்றாவிட்டாலும் பாரபட்சம் பார்க்காமல் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். விதிகளைப் பின்பற்றாவிட்டால் அதற்கான விலை மிகவும் மோசமானதாக இருக்கும் என முதலாளிகளும் தொழிலாளிகளும் உணர வேண்டும். சாலையில் லைசன்ஸ் இல்லாமல் போகிறவனுக்கு இருக்கும் பயம் கூட விதிகளைப் பின்பற்றாமல் ஃபேக்டரி நடத்தும் ஆட்களுக்கு இருப்பதில்லை. பயம் வர வேண்டும் என்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆட்கள் யோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் மனது வைக்க வேண்டும். முதலாளிகளும் தங்கள் பொறுப்பையும், தங்களை நம்பி வந்திருக்கும் உயிர்களையும், அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களையும் மனதில் கொண்டு விதிகளைப் பின்பற்ற முனைய வேண்டும்.

பட்டாசு ஆலைகளுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பார்கள் சிலர். இப்படி சாத்தியமே இல்லை என்று 90களில் சொல்லப்பட்டு வந்த குழந்தைத் தொழிலாளர் முறை இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதே அது எப்படிச் சாத்தியமானது? சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் எந்த ஃபேக்டரியிலும் வேலை பார்க்கும் ஒரு சிறுவனைக் கூட இன்று நம்மால் பார்க்க முடியாது. யாராவது சிவகாசி பட்டாசு ஆலைகளில் இன்னமும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரது காலண்டர் 1990களிலேயே நின்றுவிட்டது என அர்த்தம். எப்படி இது சாத்தியமானது? அரசு, அரசு அதிகாரிகள், முதலாளிகள், பொதுமக்கள் என்கிற நான்கு பேரின் கூட்டு முயற்சியினால் தானே? சட்டத்தின் மீது இருந்த பயமும், விழிப்புணர்வும் தானே? அது போல் மற்ற விதிகளையும் அனைவரும் பொறுப்புடன் பின்பற்றினால் பட்டாசுத் தொழில் விபத்தில்லாத, அமைதியான, குதூகலத்தை மட்டுமே தரக்கூடிய ஒரு தொழிலாக மாறும் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் வெகுதொலைவிலும் இல்லை.

கடைசியாக ஒரு சிறிய வேண்டுகோள். “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன், சுற்றுப்புறத்தைக் காப்பேன்” என்று திடீர் புரட்சியாளனாகி உறுதிமொழியெல்லாம் எடுப்பதற்கு முன் கொஞ்சம் இதை நினைத்துப் பாருங்கள். பட்டாசு விபத்தால் ஒரு நொடியில் போகும் அவர்களின் உயிர், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும், அவ்வளவு தான் வித்தியாசம். சுற்றுச்சூழல் மீது நிஜமாகவே அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், இயற்கையைக் கொன்று உருவாக்கும் பேப்பரையும், வருடம் முழுவதும் இயற்கையைப் பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற ஓசோனை ஓட்டையாக்கும் சாதனங்களையும் பயன்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். வருடத்தில் ஒரே ஒரு நாள் சந்தோசத்தைக் கொடுக்கும் பட்டாசைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.


 உயிரைப் பணயம் வைத்துத் தான் தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிவதைப் பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் ஃபயர் வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்.. பட்டாசு கொழுத்துங்கள் மகிழ்ச்சியாய்க் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. 




நன்றி: தினமலர்

ஆணென்ன?! பெண்னென்ன? !

Wednesday, September 30, 2015

As usual ஸ்ட்ரெயிட்டாவே மேட்டருக்கு வந்துருவோம். லெக்கின்ஸ் பிரச்சனை போன வாரம் வெடித்த போது தினகரனில் ஒரு கட்டுரை வந்தது. அதாவது பெண்களின் உடையைப் பற்றி ஆண்கள் வாயைத் திறக்கவே கூடாதாம்.. ஞாயமாகப் பார்த்தால், ஆண்கள் டவுசர் போட்டுக் கொண்டு வாக்கிங் போவது, தொப்பை தெரிகிற மாதிரி டீ ஷர்ட் அணிவது, இதையெல்லாம் எதிர்த்துப் பெண்கள் தான் போராட வேண்டுமாம்.. எனக்கு அந்தக் கட்டுரையைப் படித்த போதே சில விசயங்கள் தோன்றின. அப்போதே சொன்னால் இருக்கும் வெறியில் எல்லோரும் என்னை ஆணாதிக்கவாதி ஆக்கிவிடுவார்கள் என்பதால் ஒரு வாரம் கேப் விட்டு இதைப் பதிகிறேன்.

நான் இந்த லெக்கின்ஸ்சுக்கு ஆதரவா இல்லையா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் ஆதரவாலோ எதிர்ப்பாலோ லெக்கின்ஸ் வியாபாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்னும் போது, அதைச் சொல்லி என்ன பிரயோஜனம்? பெண்களின் உடை அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதையும் நான் மதிக்கிறேன்.. மற்றபடி அந்த தினகரன் கட்டுரைக்கு என் பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம்..

முதலில், ’பெண்களின் ஆடைகளைப் பற்றி ஆண்கள் குறை கூறுவது தப்புஎன்று கட்டுரை எழுதும் உங்களுக்கு, ஆண்களின் ஆடையைப் பற்றி மட்டும் குறை கூற என்ன உரிமை இருக்கிறது? ரோட்டில் வாக்கிங் போகிற ஆண் முழங்கால் வரை சுருள் முடி தெரிய சீன் காட்டிக்கொண்டு, தொப்பை குலுங்க நடக்கிறான், வேஷ்டி கட்டிக்கொண்டு தொடையைக் காட்டுகிறான், ஒத்துக்கொள்கிறேன்.. எங்காவது ஆண் வெறும் பனியனை மட்டும் அணிந்து கொண்டும், அக்குளைக் காட்டிக்கொண்டும் பஸ், ஆபிஸ், ரயிலில் எல்லாம் போகிறானா? ஒரு ஆண் ஜீன்ஸ் அணிந்து வருவதற்குக் கூட அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றன பல அலுவலகங்களில். டீ ஷர்ட்க்கும் அதே கட்டுப்பாடு தான்.. அந்தந்த இடங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் பாவப்பட்ட ஆண்களுக்கு மட்டுமே இருக்கின்றன, பெண்கள் அந்த வரையறைக்குள் வருவதில்லை என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

சமூக சீர்திருத்தம், பெண்ணியம், பெண் சுதந்திரம் என்கிற பெயரில் பெண்களுக்கு மட்டுமே அடக்குமுறைகள் இருக்கின்றனஅவர்கள் என்ன செய்தாலும் சரி, அப்படியே தவறுகள் செய்தாலும் அவர்கள் எல்லாம் ரொம்ப பாவம், என்பது போன்ற கருத்துக்களைப் பொதுவெளியில் வைப்பது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது, குறிப்பாக மீடியாக்களில். ’ஆண்களின் அடக்குமுறைகளைப் பற்றி வாய்திறக்க ஆள் கிடைக்காதா, எங்களுக்கும் ஒரு புரட்சியாளன் வர மாட்டானா?’ என்று நாங்களெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை பெண்களுக்கு உங்களைப் போல் ஒரு ஆண் ஆதரவாளர் கிடைத்த மாதிரி, எங்கள் உரிமைக்கும் ஏதாவது பெண் கிடைப்பாரா என்றும் காத்திருக்கிறோம் நாங்கள்.

சில மாதங்களுக்கு முன், கடை வைத்திருக்கும் ஒரு பெண் வாரமலரின்இது உங்கள் இடம்பகுதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். வேஷ்டி கட்டியிருக்கும் ஆண்கள் கடையில் அவர் கண் முன்னே தங்கள் வேஷ்டியைத் தொடை தெரியத் தூக்கி அண்ட்ராயரில் இருந்து காசு எடுத்துக் கொடுப்பது அவருக்கு அருவெறுப்பாக இருக்கிறதாம். “பெண் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் நாகரிகமே இல்லாமல் இப்படி தொடையைக் காட்டலாமா?என்று கேட்கிறார் அவர். இந்தக் கடிதத்தை இந்த உலகம் எப்படி அணுகும்? ”ச்செய் இந்த ஆம்பளைகளுக்கு வெவஸ்தையே இல்லப்பா, பொம்பளப்பிள்ள இருக்குற இடத்துல இப்படியா செய்வான்?” என்பார்கள்.. இதுவே ஒரு ஆண், தன் கடைக்கு வரும் பெண்கள் ஜாக்கெட்டில் இருந்து காசை எடுக்கும் போது தனக்கு அது அசிங்கமாகத் தெரிகிறது என்று மட்டும் எழுதியிருந்தால் என்ன களேபரம் நடந்திருக்கும்? ஆணாதிக்கம், பார்வையில் வக்கிரம், பெண் அடிமைத்தனம் என்றெல்லாம் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார்கள்..

ஒரு பாலினத்தவரின் ஆடை சுதந்திரம் சமயங்களி்ல் எதிர்பாலித்தவரைத் தொந்தரவு செய்யவதற்கோ, அவர்களின் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிவதற்கோ வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மேலே கூறிய ஒரு பெண்ணின் கடிதம் அதற்கும் சிறந்த உதாரணம். So, இங்கு பிரச்சனை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்க்கப் படுவதால் தீரப்போவதே இல்லை.. ரூல்ஸ் என்றால் இருவருக்கும் ரூல்ஸ் தான் அது அலுவலகத்திலும் சரி, பொதுவிடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, வாக்கிங்கிலும் சரி.. இல்லை, சுதந்திரம் என்றால் அதுவும் இருவருக்கும் தான்.. இன்னொரு முக்கிய விசயம், நாட்டில் சில விசயங்களை மீடியாக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது..

வக்கிரமான சினிமா, சிறுவர்கள் செய்யும் வன்முறைகள், கள்ளக்காதல்கள், எங்கோ ஜாதி, மதத்தின் பெயரால் நடந்த வன்முறை இவற்றையெல்லாம் ஏதோ தங்களுக்கு தான் சமூகத்தின் மீது அதிக அக்கறை இருக்கிறது என்பது போல் இந்த மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு முக்கியச் செய்தியாக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குற்றங்கள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல், சாமானியன் மீது எந்த பாதிப்பையும், வன்முறை எண்ணத்தையும், வஞ்சத்தையும், ‘இதெல்லாம் நாட்டுல சகஜம்ப்பாஎன்கிற மோசமான எண்ணத்தையும் விதைக்காமல் இருக்கும். இப்போதெல்லாம் எல்லா விசயங்களும், அது நல்லதோ கெட்டதோ, “அவன் செய்யிறான், நானும் செய்யிறேன்’, ‘இப்பலாம் யாரு இதப்பண்ணல? எல்லாம் ரொம்ப சகஜமாயிருச்சிஎன்கிற விதத்தில் தானே பரவுகின்றன.. அதிலும் கெட்ட விசயங்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. இது எவ்வளவு பெரிய மோசமான முன்னுதாரணம்? குடி சகஜம் என்று பலரும் நினைக்க ஆரம்பித்ததில் மீடியாவிற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது தானே? அந்த லிஸ்டில் இந்த லெக்கின்ஸ் சமாச்சாரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.

இது லெக்கின்ஸுக்கு எதிராகப் பதறிய குமுதத்திற்கும் பொருந்தும், ‘எனி ப்ராப்ளம் ஷாலினி?’ என ஆதரவாகப் பொங்கிய தினகரனுக்கும் பொருந்தும். அனைத்திலும் பத்திரிகை சுந்ததிரம் என்கிற பெயரில் மூக்கை நுழைக்கும் இந்த மீடியாக்கள் பாக்கி வைத்திருப்பது நம் வீட்டு கழிவறையை மட்டும் தான் என நினைக்கிறேன். அல்ரெடி பெட்ரூம் வரை என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சொந்த மற்றும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளின் மூலம். ஒரு உதாரணம் சொல்கிறேன். இளையராஜா சில காட்சிகளில் பின்னணி இசைக்கு எந்தக் கருவியையும் பயன்படுத்தியிருக்க மாட்டார், வெறும் மௌனம் மட்டும் தான் அந்தக் காட்சிக்குப் பின்னணி. அவ்வளவு அருமையான உணர்வைக் கொடுக்கும் அந்தக் காட்சிகள். உண்மையிலேயே சமூகத்தின் மீது அக்கறை இருந்தால், இளையராஜாவின் அந்த டெக்னிக்கை, அதாவது வாசிப்பு தேவையில்லாத இடத்தில் வாசிக்காமல் இருங்கள், அதுவே போதும். அது தான் நீங்கள் இந்தச் சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய உதவி. இந்த லெக்கின்ஸ், குடி, கள்ளக்காதலை எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம், நன்றி.

மற்றபடி, தனிப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ, உங்கள் ஆடை என்பது உங்கள் வசதி, உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது தான். ஆனால் பொது இடத்தில் நீங்கள் சிகரெட் குடிப்பது எப்படி இன்னொருவரை உடல் அளவில் பாதிக்குமோ, சில ஆடை முறைகள் சிலரை மனதளவிலும் பாதிக்கலாம், உங்கள் மீது தப்பான, அருவெறுப்பான எண்ணத்தைக் கொண்டு வரலாம், அந்தக் கடை வைத்திருக்கும் பெண்மணிக்கு அண்ட்ராயர் ஆளால் ஏற்பட்ட உணர்வு மாதிரி. அதனால் இருவருமே கொஞ்சம் கண்ணியமாக இருங்கள். உங்களுக்கும் நன்றி..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One