ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..

Wednesday, December 10, 2014

உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி டயலாக்குகள், நாட்டைத் திருத்தும் ஐடியாக்கள், “இந்த மாதிரி ஆளுங்கள மிலிட்டரிய விட்டு சுடணும் சார்”, “அரசியல்வாதியாலத் தான் சார் நாடே கெட்டுப்போகுது”, “ஊழல் பண்ணுறவன ஒடனே பிடிச்சி தூக்குல போடணும் சார்” போன்ற அனல் பறக்கும் வசனங்களை எல்லாம் அந்த ஆறிப்போன டீயை உறிந்து கொண்டே பேசுவீர்கள்.. உங்கள் பேச்சை வாய் பிளந்து கேட்கவும் அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது.. 

அந்த டீக்கடை வழியே செல்லும் சில வயித்தெரிச்சல் பிடித்த ஆட்கள் உங்களிடம், “ஏம்ப்பா இவ்வளவு வியாக்கியானம் பேசுறீல, பேசாம நீ அரசியலுக்கு வந்து நல்லது எல்லாம் செய்யலாமே?” என்கிறார்கள்.. பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? “எனக்கு ஆசையாத்தான் இருக்கு... ஆனா கால நேரம் கனிஞ்சு வரும் போது பாக்கலாம்” என்கிறீர்கள்.. மீண்டும் உங்களுக்கென்று இருக்கும் அந்த டீக்கடை ரசிகர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள்.. அந்த வயித்தெரிச்சல் குரூப் இப்போது உங்களை விட்டுவிட்டு உங்கள் ரசிகர்களை தூண்டுகிறது.. “ஏ பாத்தியா இவன? சும்மா பில்ட்-அப் மட்டும் தான் குடுக்குறான்.. இவ்வளவு பேசுறவன் நம்ம ஊர் எலக்சன்ல நிக்க வேண்டியது தான? அவன் கூடயே சுத்துறீங்கல்ல, உங்களுக்கு ஒரு பதவி குடுக்க வேண்டியது தான?” என்று.. சில அப்பாவிகளும் அவர்களின் பேச்சை நம்பிக்கொண்டு உங்களுக்கு எதிராய் திரும்புகிறார்கள்.. ஆனாலும் நீங்கள் உங்கள் முடிவில் தெளிவாய் இருக்கிறீர்கள். இன்னும் அதற்கான காலம் வரவில்லை என்பதைத் தெளிவாக நம்புகிறீர்கள்.. இப்போது அந்த வயித்தெரிச்சல் பிடித்த கும்பல் உங்களைப் பற்றி ஊர் முழுக்கத் தப்பாகப் பேசுகிறது கோழை, பிழைக்கத் தெரிந்தவன், சுற்றி இருப்பவரை ஏமாற்றுபவன், வியாபாரி, அது இதுவென்று.. நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை எப்பவும் போல் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.. அவர்களின் குரைக்கும் சத்தம் உங்களை எதுவும் செய்யவில்லை..




மேலே சொன்ன கதையில் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று தனியாக ஒரு முறை விளக்கத்தேவையில்லை.. இதில் அந்த வயித்தெரிச்சல் குரூப் என்று குறிப்பிடுவது நம் லுச்சா லெட்டர் பேட் அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும், ஃபேஸ்புக்/ட்விட்டர் போராளிகளையும் தான்.. முதலில் ஒரு விஷயம், “நாம் டீக்கடையில் அரசியல் பேசுவதும், ரஜினி மேடையில், சினிமாவில் பேசுவதும் ஒன்றா?” என்கிற கேள்வி வரலாம் உங்கள் மனதில்.. நம் சக்திக்கு நமக்கு கிடைத்திருக்கும் தளம் டீக்கடை தான்.. அவருக்கு சினிமா, அதனால் அங்கு பேசுகிறார்.. மற்றபடி டீக்கடையில் நாலு பேர் நம்மை உற்று கவனிக்க வேண்டும் என்கிற ஆசையில் நாம் பேசும் அளவில் பாதியைக் கூட  அவர் மேடைகளில் பேசுவதில்லை என்பதே உண்மை.. அதற்கே இந்த அரசியல்வாதிகளும், மீடியாவும் அவரை என்னமாய் காய்ச்சுகிறார்கள்? இத்தனைக்கும் இந்த மீடியாக்காரர்கள் தான் அவரிடம் போய் “எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருப்பது..

ஆனால் அதை அச்சில் ஏற்றும் போது, என்னமோ ரஜினியே இவர்களை எல்லாம் அழைத்து ஒரு பிரஸ் மீட் வைத்து, “நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமான்னு குழப்பத்துல இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க.. அடுத்த படம் வரப்ப திரும்ப இதே மாதிரி பிரஸ் மீட் வைக்குறேன்.. அப்பயும் இதே மாதிரி தான் பதில் சொல்வேன்” என்று சொல்வது போல் எழுதுவார்கள்.. பாட்ஷா வந்த காலத்தில் இருந்து தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்த இந்த மீடியாக்காரர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதங்களில் ஒன்று தான் ரஜினியின் அரசியல் எண்ட்ரி.. ஆனால் இவர்களின் அந்த ஈனப்பிழைப்பிற்கு கூட ரஜினி மீது தான் பழி போட்டார்கள்.. ஏதோ புதிதாகப் படம் வரும் போதெல்லாம் ரஜினி அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் என்று..

சந்திரமுகியோ சிவாஜியோ எந்திரனோ வந்த போது ரஜினி அரசியல் பற்றி வாய் திறந்தாரா? இந்த மீடியாக்காரர்கள் தான் ஒவ்வொரு படமும் வரும் போதும் பிச்சை கேட்பவன் போல், இல்லை இல்லை, பிக் பாக்கெட் அடிப்பவன் போல் அவர் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கப் பார்க்கிறார்கள்.. பின் இவர்களே “படம் வரும் போது மட்டும் அரசியல் ஸ்டண்ட் செய்கிறார் ரஜினி” என்பது போல் கார்டூன், கட்டுரை, பாரதிராஜா பேட்டி எல்லாம் எடுத்துப் போடுவார்கள்.. ஏன்யா அரசியல் ஸ்டண்ட் அடித்துத் தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்கிற நிலையிலா இருக்கிறார் ரஜினி? மீண்டும் இந்த பாராவின் முதல் வரியைப் பாருங்கள்.. அந்தப் படங்கள் வரும் போது இந்த மீடியாக்காரர்களை அவர் மதிக்கவே இல்லை.. ஆனால் படங்கள் பட்டையைக் கிளப்பின.. அவர் ஒன்றும் அரசியல் ஸ்டண்ட் அடித்து படம் ஓட வைக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதற்கு சமீபத்தில் வந்த அவரின் அந்தப் படங்கள் தான் தகுந்த உதாரணங்கள்..



தன் ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி மீடியாவின் காற்று படாமலேயே தான் இருக்க விரும்பினார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.. ஆனால் மீடியா தான் அவரை, அவரின் மனநிலை, அவரின் திருமண செய்தி, அவர் மகள்களின் சொந்த வாழ்க்கை, அவரின் உடல் நிலை, அவரின் படங்கள், அவரின் அரசியல் பேச்சு என்று அனைத்தையும் “மீடியா சுதந்திரம்” என்கிற பெயரில் மூக்கை நுழைத்து எழுதிக்கொண்டே இருந்தன.. அவர்களுக்குத் தெரியும் ரஜினி ஒரு பொன்முட்டை இடும் வாத்து என்று.. அதனால் அவர் சும்மாவே இருந்தாலும் மீடியா அவரைப் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இந்தக் கேடு கெட்ட நான்காம் தூண். நிம்மதி வேண்டி இமயமலை சென்றாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.. அவர் என்ன செய்தாலும் அதில் ஒரு குதர்க்கமான விசயத்தை அவர்களாக டெவலப் செய்து, அச்சிலேற்றி தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்திக்கொண்டார்கள்..

இப்போது கூட ‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் என்னமோ ரஜினி தான் வாலண்டியராக வந்து அரசியல் எண்ட்ரி பற்றிப் பேசியது போல் அனைத்து மீடியாக்கரர்களும், திடீர் ஃபேஸ்புக் போராளிகளும் பொங்குகிறார்கள்.. அந்த நிகழ்ச்சியில் அமீர், சேரன் இருவரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசுகிறார்கள்.. அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லாவிட்டால் அது அவர்களை அவமதிப்பதாகிவிடும், அதுவும் போக தன்னை தலைக்கனம் கொண்டவன் என்றும் சொல்லிவிடுவார்கள் என்கிற எண்ணத்தில் அவர்களுக்குக் கூறிய பதிலை நம் மீடியாக்களும் ஃபேஸ்புக் புரட்சியாளர்களும் இங்கு என்னமாய் இட்டுக்கட்டி, ட்விஸ்ட் செய்து போட்டார்கள் என்பதை ஊரே அறியும்.. 




அதாவது இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தானாம்.. ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட வேண்டுமாம்.. ஏன்யா நாட்டுல என்னென்னமோ பிரச்சனை நடக்குது, உங்களுக்கு இதப் பத்தி ஏன்யா இவ்வளவு அக்கறை? அவர் வந்தால் உங்களுக்கென்னா? வராவிட்டால் உங்களுக்கென்ன? அது அவர் இஷ்டம்.. வாழ்வில் எல்லா விசயத்திலும் உங்களால் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பதில் சொல்லிவிட முடியுமா? பின் ஏன் ஒரு நடிகர் மட்டும் மிகவும் சென்சிடிவ்வான, ரிஸ்க்கான விசயத்தில் மட்டும் அப்படி ஒரு முடிவைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாலோ, வர மாட்டேன் என்றாலோ அதனால் யாருக்கு என்ன பயன்? நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் அவர்கள் அரசியலுக்கு வந்ததும் தீர்ந்து விடுமா, அல்லது அவர் வராவிட்டால் நாடே அழிந்துவிடுமா? பின் ஏன்யா ‘பதில் சொல், பதில் சொல்’ என்று அந்த மனிதரை துன்புறுத்துகிறீர்கள்?

என்னது, ரசிகர்களுக்காக இதையெல்லாம் கேட்கிறீர்களா? இதுவரை எந்த ரசிகனும் ரஜினியை நிர்பந்திக்கவில்லை உங்களைப் போல்.. எங்களுக்கு அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம் என்று தான் இருக்கிறோம்.. ஆனால் அது அவரின் சொந்த முடிவு.. நாங்களே கம்மென்று இருக்கும் போது உங்களுக்கு என்னய்யா எங்கள் மீது இவ்வளவு கரிசனம்?

சரி, அவர் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், என்ன செய்யும் இந்த மீடியா? அப்போதும் எதையாவது ஆரம்பிப்பார்கள். “இதை முதலிலேயே செய்திருக்கலாம், கிட்டத்தட்ட 20 வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி விட்டார்” என்று.. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு நடிகனின் உச்ச பட்ச நிலையே கட்சி ஆரம்பித்து தன் ரசிகர்களை தேர்தல் போஸ்டர் ஒட்ட வைக்கும் வேலைக்கு அனுப்புவது தானா? அல்லது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தேர்தலில் சீட் கொடுப்பதா? ரசிகனுக்காகக் கேள்வி கேட்கும் மீடியா முதலில் இதை விளக்க வேண்டும்.. ஒரு நடிகன் கட்சி ஆரம்பித்து, 35 வருடமாக தன் ரசிகன் என்கிற ஒரே தகுதியை மட்டும் உடைய, கொஞ்சம் கூட நிர்வாக அறிவே இல்லாத, ஒருவனுக்கு மந்திரி பதவி கொடுப்பதைத் தான் இந்த மீடியாக்கள் விரும்புகின்றனவா? இதைத் தான் “ரசிகனுக்காகக் கேட்கிறோம்” என்கிற பதம் மூலம் அவர்கள் சொல்ல வருகிறார்களா? மீடியாக்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தை விட பாலாபிசேகம் செய்யும் ரசிகன் ஒருவன் அதற்கு பிரதிபலனாக கட்சி போஸ்டிங்கோ, எம்.எல்.ஏ பதவியோ பெறுவது தான் முக்கியமா? அப்படியானால் ”ஜனநாயகத்தின் நான்காம் தூண் நாங்கள் தான்” என்று கம்பீரமாகக் கூறிக்கொள்ள இந்தக் கேடு கெட்ட மீடியாவிற்கு என்ன அருகதை இருக்கிறது?




மீடியாக்கள் மட்டும் இல்லை, இந்த தனிமனித மீடியாவான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலும் கூட ரஜினியை வைத்து தங்கள் புகழை வளர்க்கத் தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.. அதுவும் இந்த ஃபேஸ்புக்கில் லைக் விழுகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, முந்தாநாள் வரை ரஜினி ரசிகனாக தன்னைக் காட்டிக்கொண்டவன் எல்லாம், ரஜினியை ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்குப் புகழ்ந்து எழுதியவன் எல்லாம் அவரைக் கிண்டலடித்து எழுதுகிறான்.. அவன் அன்று எழுதியதும் அவனின் சொந்த புகழ்ச்சிக்காக, லைக்குக்காக.. இன்று எழுதுவதும் அவனின் புகழ்ச்சிக்காக மட்டுமே.. இன்று அவனைக் கொண்டாடும் லூசுகள், அவன் ”முந்தாநேத்து ரஜினியை பற்றிப் புகழந்து எழுதியது ஏன்?” என்று கேட்க முடியாத அறிவிலிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.. 

முதலில் ஒரு நடிகன் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதில் இவ்வளவு பெரிய debate ஏன் செய்ய வேண்டும்? அவர் ரசிகர்களை exploit செய்கிறார் என்கிறார்கள்.. யார் தான் யாரைத்தான் exploit செய்யவில்லை? பெற்றவர்கள் பிள்ளைகளைச் செய்யவில்லையா? அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களைச் செய்யவில்லையா? முதலாளி தொழிலாளியைச் செய்யவில்லையா? புருஷன் பொண்டாட்டியைச் செய்யவில்லையா? காதலி காதலனைச் செய்யவில்லையா? இவர்கள் எல்லாம் செய்வதால் ரஜினியும் தன் ரசிகர்களை exploit செய்வதைச் சரி என்று சொல்லவில்லை நான்.. அவர் செய்யும் exploitationஐ விட இந்த நாட்டில் மாற்றப்பட வேண்டிய பல exploitationகள் இருக்கின்றன.. மீடியாவும், திடுதிப் ஃபேஸ்புக் புரட்சிக்குஞ்சுகளும் முதலில் அதைப் பற்றியத் தங்கள் சமூக அக்கறையைக் காட்டட்டும்.. 

எம்ஜிஆர் காலத்திலேயே சினிமா என்னும் பொழுது போக்கு அம்சத்தை மக்களின் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் இரண்டறக் கலந்து விட்டதில் இந்த மீடியாவிற்குத் தான் பெரும்பங்கு இருக்கிறது.. இன்று வரை மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுக்காமல், நடிகைகளின் சதைகளையும், நடிகர்களின் கிசுகிசுக்களையும் நம்பி, மஞ்சள் பத்திரிகை போன்று டிஷ்யூ பேப்பருக்குக் கூட பயன்படாத, டைம் பாஸ் செய்வதற்காகப் பத்திரிகையை நடத்தும் யாருக்கும் ரஜினியைக் கேட்க அருகதை கிடையாது.. ரஜினியைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் மீடியா, முதலில் தன்னை அங்கு நிறுத்திக்கொண்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.. ஒவ்வொரு வாரமும் சினிமா ஸ்பெசல், ரஜினி ஸ்பெசல், என்று போட்டு தங்களில் சர்குலேசனைக் கூட்டி கல்லா கட்டுவதில் குறியாக இருக்கும் மீடியாக்கள், கொஞ்சமாவது மக்களுக்குத் தேவையான செய்தியை இனிமேலாவது கொடுக்கட்டும்.. 



விரைவில் லிங்கா விமர்சனம்... :)

25 comments

  1. மீடியாக்கள் தங்கள் வியாபாரத்துக்காக எதையும் சொல்வார்கள் / செய்வார்கள் என நினைக்கிறேன். அதே சமயம் ரஜினியும் அவர்களை மிக புத்திசாலித்தனமாக உபயோகித்துக் கொள்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அரசியலுக்கு ஏற்ற வசனம் / லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பது போன்ற பஞ்ச் வசனங்களும் மீடியாவா வைக்கச் சொன்னது? வசனத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைக்கவில்லை. இன்றைய தேதியில் ரஜினி ஒரு மிகப்பெரிய ப்ராண்ட். அவர் சம்மதம் இல்லாமல் அவர் படத்தில் எதுவும் நடக்காது என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. படம் என்பது ஒரு வியாபாரம்.. வெற்றியடைய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள்.. அதைக் கேட்டு ஏமாற ரசிகர்களே இப்போது தயாராக இல்லை என்பதை ரஜினியே புரிந்து வைத்திருக்கிறார்.. ஆனால் மீடியா மட்டும் ஏன் ஏமாறுவது போல் நடிக்கிறது?

      Delete
  2. மற்றவர்கள் இடத்தில் தன்னை வைத்து பார்த்தால் தான் எவ்வித பிரச்சனையும் வராதே...

    கவனிக்க : அடுத்த டீக்கடைக்காரர் விஜய்...

    ReplyDelete
    Replies
    1. ரஜினி ஒரு சுயம்பு அண்ணே.. விஜய் அப்படி அல்ல, அப்பாவின் நிழலின் வளரும் போன்சாய்.. அவரால் ரஜினி போல் பொறுமையாக நிதானமாக எல்லாம் இருக்க முடியாது

      Delete
  3. எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல் நண்பா. நீங்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்படத் தேவையில்லை

    ReplyDelete
    Replies
    1. ரசிகனுக்கும் நடிகனுக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கலைப் பற்றி, வாங்கிக்கொடுக்கும் ஆட்களுக்கு என்ன கவலை?

      Delete
  4. நல்லவன் எங்கே இருப்பான் என்று மக்கள் தேடுகிறார்கள். படிப்பறிவில்லா மக்கள் தங்கள் தலவனைத் தேர்ந்தெடுக்கும் எளிய வழியாக பிரபலங்களை நம்புகிறார்கள் .துரதிர்ஷ்ட வசமாக.பிரபலங்கள் சினிமாத்துறையில் உருவாகுகிறார்கள்.அதிலும் எம்ஜிஆர் போன்ற நல்லவர்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கைதான். அதைவிட முக்கியமான விஷயம் "அவனை விட்டால் இவன்தான்" என்கிற நிலைமைக்கு ஒரு மாற்று ஏற்படுமே.ஒருவன் நல்லவனாக இருந்தால் அடுத்தமுறை தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். கெட்டவனாக இருந்தால் என்றென்றைக்கும் ஒதுக்கி வைக்க முடியும் என்ற வகையில் ஆட்கள் கிடைப்பது திரைத்துறையில்தான். விஜய்காந்துக்கு கொடுத்த ஆதரவும் அந்த வகைப் பட்டதுதான். ஆனால் அவருக்கு நிர்வாகத் திறமை குறைவு அதனால் பயன் படுத்த வில்லை. எல்லாவகையிலும் வாய்ப்பு இருக்கும் பொழுது அதை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யாதவனை மீடியாக்கள் தூற்றுவது சகஜம்தான். நானும் அதில் உடன் படுகிறேன். ஒரு முறை மாற்றம் கொடுத்தால் ஐந்து வருடத்தை கடந்து விடலாம்.இவர் செய்ய வேண்டியது நிர்வாகம் அல்ல ஒரு மாற்றம் தான். இவர்கள் போன்றவர்கள் வரவில்லை என்றால் அடுத்தமுறை சக்கர கட்டிலில் வந்து ஆட்சி பீடத்தில் படுப்பார்கள். அந்தக் கேவலத்தையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய தமிழனாக வாழ வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து இது சார்.. ஆனால் ஒரு தனிமை விரும்பி, அமைதியை ஆராதிக்கும் ஆளுக்கு இதெல்லாம் சரி வருமா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு.

      Delete
  5. மேலும் ஒரு செய்தி. காவிரி பிரச்சனையில் திரு ரஜினி மட்டும்,இரு மாநிலத்திற்கும் (கர்நாடகா மற்றும் தமிழகம்) சாதகமாக ""ஒரே ஒரு அறிக்கை"" தான் கொடுக்கவேண்டும் என இரு மாநிலத்திலேயும் இருக்கும் சில ""அறிவிலிகள்"" சொல்கின்றன. என் கேள்வி- காங்கிரஸ், ப ஜ க , மற்றும் சன் நெட்வர்க்( உதயா செய்தி சேனல் தமிழகத்திற்கு எப்போதும் எதிரியே) இந்த மூவரும் தமிழகத்தில் ஒரு மாதிரியும் கர்நாடகாவில் ஒரு மாதிரியும் ""அரசியல்"" செய்து ""லாபம்"" அடைகின்றனரே இதை கேட்க இந்த கேடு கெட்ட பத்திரிக்கைகளுக்கு ""ஆண்மை"" உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. சூப்பரான பாயிண்ட்.. மீடியாக்கள் அதையெல்லாம் கேட்காது.. இன்றைய பல நிருபர்களும் எப்படி செய்திகளைத் தருகிறார்கள் என்பது ஊரறிந்த விசயம் ஆயிற்றே..

      Delete
    2. அது மட்டும் அல்ல . எந்த அரசியல் கட்சியும் நியாயமான குரல் எழுப்புவதில்லை.பதவி ஆசையும் சுயநலமும் தான் காரணம்

      Delete
    3. ஆனால் ஒரு நடிகன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அந்த அரசியல்வாதிகள் கூட சொல்வார்கள்.. அதையும் வெட்கம் கெட்ட மீடியாக்கள் நம்மிடம் காட்டும்..

      Delete
  6. ராம், இப்பதிவு உண்மையான ரஜினி ரசிகனின், உண்மை வரிகள்.... டாப் டக்கரு...:-)

    25 வருடமாக ரசிகர்களையும், தமிழ் மக்களையும் ஏமாற்றுகிறார் என்று கூறும் புண்ணாக்குகளுக்கு : -
    ஒருவனை/ஒருத்தரை ஒரு வருடம் ஏமாற்றலாம் ; 5 வருடம் ஏமாற்றலாம் ; ஏன் 10 வருடம் கூட ஏமாற்றலாம் ... அதற்காக 25 வருடங்களாக நீங்கள் ஏமாறுகிறீர்கள் என்றால், அது யார் தப்பு..? உங்களை எவன் ஏமாற சொன்னது...? அவ்வளவு பெரிய மடையர்களா நாம்??.. "நான் அரசியலுக்கு வருவேன்.. வந்து என் ரசிக பெருமக்களை பதவியில் அமர்த்துவேன் என்று தலைவர் சொல்லியிருகிறாரா???? " .. அப்படி ஒரு போதும் சொன்னது இல்லை.. எந்திரன் பட ரிலீசுக்கு முன் எனக்கு அரசியலில் வர கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்று அவரே சொல்லிவிட்டார்.. அப்புறம் ஏன் அவரையே போட்டு குடைகிறார்கள் என தெரியவில்லை..

    ரஜினி இயமலைக்கு போய் வருவதையும், அவர்கள் வீடு குடும்ப பிரச்சனைகளை காசாக்கும் ஊடகங்கள் , தலைவரை பற்றி பேச தகுதியற்றவை....

    அரசியல் சாயம் பூசி தான் அவருடைய மாஸை காட்ட வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண் சும்மா இருந்தாலும் அவளை நோண்டுவது என்ன விதமான டார்ச்சரோ, ஸாடிசமோ, அதே போன்றது தான் ஒதுங்கிப் போகும் ஒரு ஆளை மீடியா சுதந்திரம் என்கிற பெயரில் துன்புறுத்துவதும்..

      Delete
  7. வணக்கம்
    வரிவாக சொல்லியுள்ளீர்கள்.. எல்லாம் காலம் வழி வகுக்கும் அப்போது பார்க்கலாம்..
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வரிவாக சொல்லியுள்ளீர்கள்.. எல்லாம் காலம் வழி வகுக்கும் அப்போது பார்க்கலாம்..// நீங்கள் இந்த பதிவை எழுதாமலே இருந்திருக்கலாம் அண்ணே ...

    ReplyDelete
  9. ரஜினி எனும் மனிதரை சக மனிதனாக பாவிக்காமல் அவரின் சொந்த விசயத்துக்குள் மூக்கை நுழைப்பதினால் வரும் விளைவுகள் இவை...

    ReplyDelete
  10. இதுவரை எந்த ரசிகனும் ரஜினியை நிர்பந்திக்கவில்லை உங்களைப் போல்.// அவரின் லிங்கா ஆடியோ வெளியீட்டன்று அவரின் கல்யாண மண்டபத்தை சுற்றிலும், சென்னையின் பரவலான இடங்களிலும் அவரின் இரசிகர்களே தமிழக அரியணை தலைவனுக்கே ! என்ற டைப்புகளில் வசனம் தாங்கிய போஸ்டர்களை காண முடிந்தது. அனைத்து ரசிகனையும் என்று அடைத்துவிடாதீர்கள். உங்களுக்கு தெளிவான சிந்தனை இருப்பது போல் எல்லோருக்கும் இருக்குமென்று நினைத்துவிடாதீர்கள் அண்ணே ...

    ReplyDelete
    Replies
    1. அது போன்ற போஸ்டரை சிவ கார்த்திகேயனுக்கு கூட வைக்கிறார்கள்.. அதெல்லாம் மேல் மட்ட ஆட்களை கூல் செய்ய ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்யும் யுக்தி.. அவ்வளவே..

      Delete
  11. ஏன் ஒரு நடிகர் மட்டும் மிகவும் சென்சிடிவ்வான, ரிஸ்க்கான விசயத்தில் மட்டும் அப்படி ஒரு முடிவைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?//

    அப்படி என்ன ரிஸ்க் மற்றும் சென்ஸ்டிவ் இருக்க போகிறது என்று தெரியவில்லை. ரஜினி மிக தெளிவான முடிவு எடுத்திருப்பார் என்று நம்புகிறேன். ஒன்று வருவேன், இல்லை வரவே மாட்டேன் என்று சொல்லி விட்டால் இந்த அளவுக்கு அவரை விரட்டாது இந்த மீடியாக்கள். பின் தொடரவே மாட்டார்கள் என்று சொல்லவில்லை, எந்த முடிவை சொன்னாலும் ரஜினி எனும் பிம்பத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவே ஆசைப்படும் தொழில் அது.

    ReplyDelete
    Replies
    1. அவர் வருவேன் என்றாலும் வர மாட்டேன் என்றாலும் அவரைத் தொந்தரவு செய்வதை நம் மீடியா என்றுமே நிறுத்தப்போவதில்லை..

      Delete
  12. nalla pathivu.. athe neram sila nerangalil avarum mediavai payan paduthi kolkirar..

    ReplyDelete
    Replies
    1. அவர் மீடியாவைத் தொடர்பு கொண்டு பல ஆண்டுகள் ஆகிறது சார்..

      Delete
  13. Kizhattu payaluku ovara koovareenga.

    ReplyDelete
    Replies
    1. உங்க அப்பா, தாத்தாவுக்கெல்லாம் வயதே ஆகாதோ? கிழட்டுப்பயல்கள் ஆகாமல் என்றும் இளமையாக இருப்பார்களோ அவர்கள்? அல்லது அவர்கள் கிழவன் ஆனாலும் இப்படித்தான் “கிழட்டுப்பய” என்று பேசுவீர்களா? உங்கள் வீட்டுக்கிழட்டுப்பயல்களையும் இதே போல் பேசினால் பிறரையும் பேசுங்கள்..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One