சென்னை.....

Wednesday, April 29, 2009

நான்கு மாதங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு சென்றேன். சென்னைக்கு நான் செல்வது அதுவே முதல் முறை. பேருந்தில் செல்லும் பொது பலவிதமான கனவுகளில் மூழ்கியிருந்தேன். என்ன செய்வதற்காக சென்னை செல்கிறேனோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொண்டே பேருந்தில் செல்கிறேன் (தெனாவட்டு, திருப்பாச்சி, தூள், போன்ற படங்களின் பாதிப்பு).
.
தாம்பரத்தில் இறங்கி விட்டேன். "நீ தாம்பரத்துல இறங்கி நிக்கும் போது உன் பஸ் கிட்ட பாரு, நான் நின்னுட்டு இருப்பேன் உனக்காக" என்று சொன்ன உயிர் நண்பன் அரைமணி நேரமாகியும் வரவில்லை. இந்த அரை மணி நேரத்தில் அவனுக்கு இருபத்தி ஏழு முறை மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே, அவன் டி .சி .எஸ் கம்பென்யில் வேலை செய்கிறான். 30,000 சம்பளம் என்று நினைக்கிறேன்.
.
ஒரு பெரிய கிராமத்தின் வாரச்சந்தை போல் அந்த ஊர் காலை ஏழு மணிக்கு காட்சி அளித்தது. மாட்டு வண்டிகளுக்கு பதில் ஷேர் ஆட்டோ, டிராக்டர் பேருந்துகளாக. போன் சிணுங்கியது. என் உயிர் நண்பன் தான் அழைக்கிறான்.
.
"டே, நீ அப்படியே அந்த ரயில்வே ஸ்டேஷன் வழியா பின் பக்கம் வந்தீனா, ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும். அங்க T51 பஸ் புடிச்சி சோழிங்கநல்லூர் டிக்கெட் எடுத்துரு டா. நான் பஸ் ஸ்டாப் வந்து உன்ன பாக்குறேன்."
.
"எனக்கு பாதை தெரியாது டா"
.
"டே நீ இப்போ மெட்ராஸ் வந்துட்ட. இதெல்லாம் எப்போ கத்துக்குறது?"
.
"இல்லடா உங்க ஏரியா எனக்கு தெரியாதே?"
.
"ஒரு டோல் கேட் வரும், அடுத்த ஸ்டாப் இறங்கு"
.
நான் அடுத்து என்ன சொல்கிறேன் என்பதை அறிய விரும்பாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
.
ஒரு வழியாக அங்கு இறங்கி, அவனை சந்தித்து அவன் அறைக்கு சென்றோம். குளித்து முடித்து விட்டு சாப்பிட சென்றோம். 120 ரூபாய் பில் வந்தது.
.
கடைக்கு வெளியில் வந்து சொன்னான், "டே இனிமேல் உன் காசுல நீ சாபிடு என் காசுல நான் சாபிடுறேன்"
.
எப்படி முடியும் என்னால்? கையில் இருப்பதோ வெறும் 1500 ரூபாய். இதை வைத்து இந்த ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அவனிடம் முடியாது என்றா சொல்ல முடியும்? "சரிடா" என்றேன்.
.
மறுநாள் வேலை தேடி நுங்கம்பாக்கம் சென்றேன். இரண்டு கம்பெனி மட்டுமே செல்ல முடிந்தது. சாதகமாக பதிலும் இல்லை அங்கு. ஆண்களும் பெண்களும் பைக் ல் ஒன்றாக கட்டிப்பிடித்து போகும் போது எரிச்சலாக வந்தது. மாலை எட்டு மணிக்கு அறைக்கு வந்தேன். இன்றைய செலவு மட்டும் 120 ரூபாய்.
.
"இங்கெல்லாம் டவுன் பஸ் ஓடாதா டா? டிக்கெட் எக்குதப்பா இருக்கு?"
.
"எல்லாமே டீலக்ஸ் பஸ் தான்"
.
இதே நிலைமையில் போனால் என்னால் ஒரு வாரம் கூட சென்னையில் தாக்கு பிடிக்க முடியாது என்று அறிந்தேன். ஆனால் வேலை இல்லாமல் மட்டும் ஊருக்கு திரும்பக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். தினமும் ஒரு வேளை தான் சாப்பிட்டேன். வண்டியில் செல்வோர்களிடம் லிப்ட் கேட்க கற்றுக்கொண்டேன்.
.
எவ்வளவு தான் சிக்கனமாக இருந்தாலும் என்னால் 15 நாட்களுக்கு மேல் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. கையில் இருந்த காசெல்லாம் கரைந்தது. திரும்பி செல்ல பணமும் இல்லை மனமும் இல்லை. யாரைப்பார்த்தாலும் எரிச்சலாக வந்தது எனக்கு. இந்த ஊரில் காசு இல்லாதவனால் பிழைக்க முடியாது, காசுக்கு மட்டுமே இங்கு மதிப்பு என்று புரிந்து கொண்டேன். நண்பன் என்னிடம் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. அறைக்கு வந்தவுடன் காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டான் என்றால் நான் தூங்கும் வரை பேசுவான். அப்படி யாருடன் பேசுகிறான் என்றே தெரியாது. ஒரு பெண் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். அந்த பெண்ணையும் பல நாட்கள் திட்டியுள்ளேன். 'நம்மட்ட ஒரு பொன்னும் பேச மாட்டேன்குது, இவன்ட காசு இருப்பதால் தான் வலியுரா. நம்மட்ட இருந்தா நம்மட்டையும் வலியுவா' என்று மனதுக்குள் பலவாராக நினைத்துக்கொண்டே தூங்கிவிடுவேன்.
.
'இது தேராத கேசு' என்று சென்னை என்னை ஏளனம் செய்வது போல் இருந்தது. கழுத்தில் யாராவது கம்ப்யூட்டர் கம்பெனி அட்டையை தொங்க விட்டிருந்தால் மனதிற்குள்ளேயே கெட்ட வார்த்தையில் வைவேன் 'இவர்களால் தான் இங்கு விலைவாசி ஏறி விட்டது, ஏழை பிழைக்க முடியவில்லை, கலாச்சாரம் கேட்டுவிட்டது என்று பலவாறாக'.
.
இனிமேலும் இங்கு இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலை வந்தவுடன் நண்பனிடம் 300 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
.
.
.
இப்போது இரண்டு வாரங்களுக்கு முன் எனக்கு சென்னையில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. மாதம் 18000 ரூபாய் சம்பளம். நேற்று தான் நண்பனின் அறைக்கு வந்தேன். நண்பன் என்னிடம் பல மணிநேரம் செலவழித்து பேசிக்கொண்டிருந்தான். டீலக்ஸ் பேருந்தில் சென்றேன். மதியம் அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டேன். ஆண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வண்டியில் பெண்கள் செல்வது அவர்களின் அந்தரங்க உரிமை என்று இப்போது நினைக்க ஆரம்பித்து விட்டேன். சென்னை இப்போது எனக்கு மிக அழகாக தெரிகிறது!

"பேரை சொல்லவா?" பெயர் காரணத்தை சொல்கிறேன்...

Friday, April 24, 2009

சென்ற பதிவில் மோகனா என்ற பெயரை பயன்படுத்தியதற்கு நண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அப்படி பெயர் உள்ள ஒரு பெண் எங்கள் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு மாதமாக அறியப்பட்டதால்.
என் அம்மா என்னை வயிற்றில் சுமந்த போது, பெண் குழந்தை தான் தனக்கு பிறக்கும் என்ற நம்பிக்கையில் மோகனா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் செய்த புண்ணியம் என்னை அவர்களுக்கு பிறக்க செய்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததில் என் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அவர் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ராம் குமார் என்ற பெயர் வைக்க நினைத்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அவர் சிவாஜியின் தீவிரமான ரசிகர். தன்னை சிவாஜியாக நினைத்து தனக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அவர் தலைவரின் முதல் குழந்தையின் பெயரை வைக்க நினைத்திருந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'முன்னூறு ரூபாய் கட்டினால் தான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும்' என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அந்த முன்னூறு ரூபாய்க்கு அவர் மூன்று நாள் எங்கெங்கோ அலைந்து யார்யார் காலையோ பிடித்து எப்படியோ கட்டிவிட்டார். உற்ற நண்பர்கள் நெருங்கிய சொந்தங்கள் கூட எங்களுக்கு உதவாத சமயம் அது. இப்போதும் நான் பிறந்த தருணத்தை வீட்டில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கஷ்டத்தில் அவர் 'ஆமா பொறக்கும் போதே அப்பன காசுக்காக நாயா அலையவுட்டுருக்கு, இது சிவாஜி பையனோட பேர வேற வைக்கனமாக்கும்?' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் இப்படியெல்லாம் விபரீதமாக யோசிக்காமல் எனக்கு இந்த அழகான பெயரை வைத்தார்.
சிவாஜி மேல் இவ்வளவு பைத்தியமாக என் அப்பா இருப்பதற்கு காரணம் எங்கள் பகுதி மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாதது தான். சினிமா தான் ஒரே பொழுதுபோக்கு. வார கடைசிகளில் தீப்பெட்டி ஒட்டிய காசில் பெண்களும் வாரநாட்களில் பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சகத்தில் கிடைத்த பணத்தில் ஆண்கள் ரெண்டாம் ஆட்டமும் தவறாமல் சினிமா பார்த்த காலம் அது. சினிமா கதாப்பாத்திரங்களும், நட்ச்சத்திரங்களும் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் தங்கியிருந்தனர்.

நான் பிறந்த ஐந்து வருடங்களில் தம்பி பிறந்தான். அவனுக்கு பிரபு என்று பெயர் வைக்க விரும்பினார் அப்பா. 'குஷ்பு மாதிரி யார் கூடையாவது ஓடிப்போய்விடுவான்' என்று என் அம்மா பயந்ததால் அவனுக்கு வேறு பெயர் வைத்தார்கள்.

இதனால் நான் சொல்ல வருவது யாதெனில் மோகனா என்ற பெயர் எனக்கு இப்போது பழக்கமானதல்ல. இது இருபத்திமூன்று வருட பழக்கம். கதையில் அந்த பெயரை மாற்ற மாட்டேன்.
பின் குறிப்பு:
அந்த கதை என் மனதில் வேறு மாதிரி ஆரம்பித்தது. எழுதி முடித்து பார்த்த போது 'ஹே ராம்' போல இருந்தது. இனி இது போன்ற தவறு நிகழாது.

பேரை சொல்லவா?

Wednesday, April 22, 2009

"ஏங்க இந்த ஊரு ரொம்ப அழகாவும் அமைதியாவும் இருக்குல்ல?" ஜன்னலில் திரையை மாட்டிக்கொண்டே கேட்டாள் என் மனைவி மோகனா.
.
"ஆமாம்" என்று சந்தோசமாக தலையாட்டினேன்.கல்யாணம் ஆகி மூன்றே மாதங்களில் இப்படி பெயரே தெரியாத ஒரு வடஇந்திய ஊருக்கு, புது மனைவியோடு மாற்றலானால் யாருக்குத்தான் இருக்காது சந்தோஷம்? தனிமையில் இந்த ஊரில் மூன்று பகலும் இரண்டு இரவும் அவளுடன் கழித்த கிறக்கமும் சேர்ந்து கொண்டதால் மனைவிசொல் மந்திரமாகவே பட்டது எனக்கு. நாளை வெள்ளிக்கிழமை; வேலையில் சேரவேண்டிய நாள். அடுத்து சனி, ஞாயிறு. மீண்டும் அதே கிறக்கம் வந்துவிடும் எனக்கு.
.
"நாளைக்கு ஆபீஸ் கிளம்பணும், இல்லையா? அதனால நேத்து மாதிரி இல்லாம இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்குங்க"
.
"இல்ல. நான் லேட்டா தூங்குனாலும் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேன்" குறும்பாக சொன்னேன்.
.
"அப்போ இன்னைக்கு ராத்திரியுமா?" சலிப்பாக சொல்வது போல் நடித்தாள். "உங்களுக்கு வேற நெனப்பே இருக்காதா?"
.
"எதுக்கு இருக்கணும்? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வேற நெனப்பு எனக்கெதுக்கு?"
.
"ஐயோ ராமா....""என்ன, கூப்பிட்டியா?"
.
"ராமானா நீங்க ஒரு ஆள் தானா? நான் அந்த கடவுள கூப்பிட்டேன். ஆபீஸ்ல எப்படி தான் தனியா இருக்கீங்களோ?" .
"வேணும்னா ஆபிஸுக்கும் வந்துடேன். அங்க எனக்கு தனி கேபின் தான்"
.
"சீ.. நெனப்ப பாரு"
.
"எல்லாம் நல்ல நெனப்பு தான்" என்று கூறிக்கொண்டே அவளை அணைத்தேன் மெதுவாக. இனிமையாக கழிந்தது இரவு.
.
மறுநாள் வேலைக்கு கிளம்புகிறேன். ஷூவை துடைத்து கொண்டே,"பாஷை தெரியாத ஊரு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். புது மனுசங்க. கொஞ்சம் பாத்து பழகு"
.
"இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணும். நீங்க தான் வெளிய போய் நாலு பேர்கிட்ட பழகப்போறீங்க. நான் வீட்ல தான இருக்கப்போறேன்?"
.
வருத்தமுடன், "இல்லமா, நம்ம ஊர்லனா வீட்ல அம்மா இருப்பாங்க துணைக்கு. இங்க புது ஊர்ல உன்ன தனியா விட்டுட்டு...."
.
"காட்டுக்கா போகப்போறீங்க? இந்தா இருக்குற ஆபிஸுக்கு போயிட்டு சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துரப்போறீங்க. இதுக்கு இவ்வளவு பில்ட்டப்பா?" வெளியில் பயப்படாதது போல் காட்டிக்கொண்டாலும் மோகனாவுக்கும் உள்ளூர பயம் இருந்தது.
.
கணவன் சென்றதும் கதவை தாழிட்டு கொண்டாள். காலை மணி பத்திலிருந்து மாலை ஆறு ஆகும் வரை எங்கள் இருவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுக்கு மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொண்டோம். உலக கடிகாரத்தின் முள்ளை யாரையாவது வைத்து வேகமாக தள்ளலாமா என்று யோசித்தேன். நல்லவேளை, அதற்குள் மணி ஆறு அடித்தது. விரைந்தேன் வீட்டுக்கு. காலிங் பெல் அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" உள்ளிருந்து ஹிந்தி குரல். மோகனா தான். அவள் ஹிந்தி பேசுவதை கேட்க எனக்கு சிரிப்பாக வந்தது. மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" சத்தமாக கேட்டாள். அவள் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தது.இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்தேன். இப்போது பலமாக கதவை தட்ட ஆரம்பித்து விட்டேன். பயத்தில் அவள் நடுங்க ஆரம்பித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது என் மொபைல் போனுக்கு அவள் கால் செய்கிறாள். 'கண்கள் இரண்டால்...' ரிங்டோன் பலமாக கேட்டது.ஜன்னல் திறக்கப்படும் சத்தம் கேட்டது. கொடிக்காப்பழம் போன்ற இரண்டு கண்கள் லேசாக திறந்த ஜன்னல் வழியாக என்னை பார்த்தன. அந்த கண்களுக்கு 'இவன் நமக்கு பரிச்சயமானவன்' என்று தெரிந்திருக்க வேண்டும். கதவை திறந்தாள்.
.
"உங்களுக்கு எதுல விளையாடுறதுன்னே தெரியாதா?" கோபமாக கேட்டாள்.
.
"ரொம்ப பயந்துட்டியா செல்லம்?"
.
"அப்பறம் பயப்படாம என்ன செய்யுறதாம்?"
.
"சாரி.. சாரி.. ஆமா, ஹிந்தியெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?"
.
"சொல்லவே மறந்துட்டேன்ல?! நாம இந்த ஊருக்கு வாரோம்னு தெரிஞ்ச உடனே எங்க அப்பா இந்த புக் வாங்கி கொடுத்தார்". முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள்.
.
"ஏன்டி, புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஒரு அப்பா கொடுக்குற சீதனமாடி இது?"
.
"அம்பது பவுனும் போட்டு தானடா அனுப்புனாரு?"
.
"அடிங்க.. யாரப்பாத்து டான்னு சொல்ற?"
.
"டி போட்டு பேசாதிங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்? இனிமேல் டி போட்டு பேசுனா, பதிலுக்கு நானும் டா போட்டு பேசுவேன்!"
.
"சரி, சரி, ரொம்ப பேசாத. வீட்டுக்கு என்னென்ன சாமான்லாம் வாங்கனும்னு ஒரு லிஸ்ட் போட்டு வை. நாளைக்கு போய் வாங்கலாம்".
.
.
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங் முடிய இரவு பத்து மணி ஆகிவிட்டது! வீட்டுக்கு வந்து சேர மணி பதினொன்று. இவளுடன் இனி சேர்ந்து கடைக்கு போவதில்லை என்று நாற்பத்தி ஒன்றாவது முறையாக சபதம் போடுகிறேன்.
.
கதவை திறக்கும் போது சொன்னாள், "ஏங்க பால் வாங்க மறந்துட்டேன். இங்க பக்கத்துல எங்கயாவது..."
.
"உங்க அப்பாவா இந்த ஊர்ல பால்பண்ணை நடத்துறாரு எப்போனாலும் வாங்குறதுக்கு? அதெல்லாம் நாளைக்கு காலைல பாத்துக்கலாம். தூக்கம் வருது எனக்கு". என்னை பார்த்து முறைத்து கொண்டே தூங்க சென்றாள்.
.
மறுநாள் காலை."ஏங்க மணி எழாகிடுச்சு. போய் பால் வாங்கிட்டு வாங்க. இன்னைக்கு ஞாயித்து கிழம, அப்படியே கறியும் வாங்கிட்டு வந்துடுங்க"
.
"எல்லாம் அப்பறம் பாக்கலாம். தூங்க விடு மனுஷன"
.
"இப்போ எந்திரிக்கிறீங்களா, இல்ல மூஞ்சில தண்ணி ஊத்தவா?" சொல்லிக்கொண்டே இரண்டு சொட்டு நீரை என் முகத்தில் தெளித்தாள்.
.
"ராட்சஸி, இப்படி என்னை கொடுமைப்படுத்துறியே?" கோபமாக இருப்பது போல் நடித்தேன். மனதுக்குள் 'இந்த பெண்கள் மட்டும் இரவு எவ்வளவு தாமதமாக தூங்கினாலும், காலையில் அலாரம் வைத்தது போல் எழுகிறார்களே?' என்று வியந்தேன். மெதுவாக கண் விழித்து மோகனாவை பார்த்தேன்.
.
இன்று மோகனா மிக அழகாக தெரிந்தாள். காரணம் நான் வாங்கி தந்த வெள்ளை சுடிதார். திருமணத்திற்கு பின் இன்று தான் அவள் முதல் முறையாக சுடிதார் அணிகிறாள். அதுவும் இந்த வெள்ளை சுடிதாரில் பாலுடை அணிந்த பளிங்கு போல் இருந்தாள்.என் கையில் கூடையை திணித்து, "போய் வேகமா வாங்கிட்டு வாங்க. சமையல் செய்யணும்", டீச்சர் போல் கண்டிப்பு காட்டினாள்.
.
வேண்டாவெறுப்பாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். கேட்டை திறந்து நடக்கும் போது "பைக்ல போகலயா?", வாசலில் நின்று கொண்டு மோகனா கேட்டாள்.
.
"வேண்டாம், இது அப்படியே வாக்கிங் போன மாதிரியும் இருக்கும்".
.
"சரி சரி வேகமா வாங்க"தெருவை தாண்டி நடந்த நான், ஊரில் ஒரு விதமான மயான அமைதி இன்று நிலவுவதை உணர்ந்தேன். ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. தெரு முக்கில் எப்போதும் திறந்திருக்கும் பீடா கடை கூட இன்று மூடப்பட்டிருந்தது. 'சரி பஜார் வரை சென்று பார்க்கலாம்' என்று நேராக நடந்தேன்.பஜாருக்கு செல்லும் வழியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு வழியாக பஜாரை அடைந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே இங்கும் கடைகள் அனைத்தும் பூட்டியே இருந்தன. டிசம்பர் மாத பனி அமைதியாக பெய்துகொண்டிருந்தது. இந்த பனியும் மயான அமைதியும் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறி தான் என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
.
மோகனாவிற்கு போன் செய்ய எண்ணி பாக்கெட்டில் கை விட்டு செல் போன் எடுத்தேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. தூரத்தில் ஒரு கசாப்பு கடையில் பெரிய ஆடு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால் கடையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அந்த கடையை நோக்கி நடந்தேன். பக்கத்தில் செல்ல செல்ல அங்கு தொங்குவது ஆடில்லை என்பது தெரிந்தது. கடையை நெருங்கிப்போய் பார்த்தேன். அங்கே தொங்கியது தோல் உரிக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு மனித உடல்! என் உடலில் தீக்குழம்பு ஓடுவது போல் மிரண்டேன்.
.
கையில் இருந்த செல் போனை தற்செயலாக பார்த்தேன். என்னுடைய ஸ்க்ரீன்சேவர் "Dec. 6" என்று காட்டியது! "இன்னைக்கு டிசம்பர் ஆறா?" மெதுவாக முணுமுணுத்தேன். வடநாட்டில் டிசம்பர் ஆறில் கலவரம் மிகுந்து இருக்கும் என்று நாளிதழ்களில் படித்தது எனக்கு தேவையில்லாமல் இப்போது ஞாபகம் வந்தது. திடீர் என்று சத்தம் கேட்டது. ஒரு கும்பல் கத்திக்கொண்டே ஓடி வருவது போன்ற சப்தம். பயத்தில் தொண்டை அடைத்து கொண்டு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன எனக்கு. அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேடினேன். ஒரு கடையில் போடப்பட்டிருந்த மரப்பெட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தேன் மனதில் பயத்தோடு.
.
ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபனை பதினைந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி வந்தது. கும்பலில் சிலர் காவி டர்பன் அணிந்திருந்தனர், சிலர் நெற்றியில் திலகம் இட்டிருந்தனர். துரத்தப்படும் வாலிபன் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். அவனை ஒரு மூலையில் வைத்து இருவர் பிடித்து கொண்டனர். அவன் திமிறினான், கெஞ்சினான், கதறினான். மரண பயத்தின் முகவரி தெரிந்தன அவன் முகத்தில். அந்த கும்பலின் கண்களிலோ கொலை வெறி. கும்பலில், நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முரட்டு ஆள், அந்த முஸ்லிம் இளைஞன் மீது பெட்ரோல் ஊற்றினான்.
.
பின் அவனிடம் கசாப்பு கடையில் தொங்கும் பிணத்தை காட்டி "இவரை கொன்று எங்களிடம் சவால் விட்டீர்களே, அந்த சவாலுக்கு பதில் சொல்லும் விதமாக இன்னும் சிறிது நேரத்தில் நீ இருப்பாய்" என்று ஹிந்தியில் கூறிக்கொண்டே குரூரமாக தீயை பொருத்தி போட்டான். அந்த இளைஞன் மரண ஓலமிட்டான்.
.
உறைந்து போன நான் இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டே, "நான் பத்திரமாய் வீடு போய் சேர வேண்டும் கடவுளே" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். என் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது. அந்த கொலைவெறி பிடித்த கும்பல் மெதுவாக கலைந்து செல்கிறது.
.
"நாம் க்யா ஹே?" என்ற குரல் என் பின்னால் கேட்டது. திரும்பி பார்த்தேன். அந்த கும்பலில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். அவன் கண்களில் மீண்டும் கொலை வெறி தெரிந்தது. கண் முன் மரணதேவன் நிற்பது போல் இருந்தது.மீண்டும் கேட்டான், "நான் க்யா ஹே?"
.
ஏற்கனவே உலர்ந்து போன நாக்கு குளறியது. திக்கி திணறி சொன்னேன், "ராம்".
.
கேட்டவனின் முகத்தில் இருந்த குரூரம் மறைந்து புன்னகை லேசாக தெரிந்தது. "ராம்?" என்றான் ஆச்சரியமாக. என் தோளில் கை போட்டு ஹிந்தியில் கேட்டான், "இன்று எதற்கு வெளியில் வந்தாய்?"
.
"இந்த அளவிற்கு கலவரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை" இன்னும் பயம் தெளியாமல் பதில் சொன்னேன்.
.
"ரொம்ப பயந்துடியா?"
.
"நான் சினிமாவில் மட்டும் தாங்க கொலையெல்லாம் பாத்துருக்கேன்", நான் ஒரு அப்பராணி என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இப்படி சொன்னேன்.
.
அவன் சிரித்துக்கொண்டே, "இது கொலை இல்லையப்பா, வதம்! நம்ம இனத்த அழிக்க நினைக்குற மிருகங்கள வதம் பண்றோம்".
.
இப்போது இன்னும் ஒரு வாலிபனை இழுத்து வந்திருந்தார்கள் அங்கே. என்னிடம் கேட்டது போலவே "நாம் க்யா ஹே?" என்றான். பல முறை கேட்டும் அந்த இளைஞன் பதில் சொல்லாததால் அவனுடைய கால்சட்டையை அவிழ்த்தனர். எதையோ கண்டுபிடித்தது போல, சற்று நேரத்து முன் நடந்த குரூரத்தை மீண்டும் ஒரு முறை நடத்தினர்.
.
கடமையை முடித்துக்கொண்டு, "நாம் ஒரு முறை இவர்கள் மசூதியை இடித்ததற்கு இவர்கள் எத்தனை முறை நம் மக்களை குண்டு போட்டு அழிப்பார்கள்?" என்று மீண்டும் அவன் பக்கம் உள்ள ஞாயங்களை என்னிடம் சொன்னான்.
.
"நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்"
.
"ஏன்? நம் கடமையை பார்க்க வரவில்லையா?"
.
"என் மனைவி தனியாக இருக்கிறாள்" என்று சொல்ல நினைத்தேன். "எனக்கு பயமாக இருக்கிறது"
.
சிரித்து கொண்டே முகத்தை தீர்க்கமாக வைத்துக்கொண்டு, "நான் எதற்காக பயப்பட வேண்டும்? இது நம் தேசம். நீ யாருக்கும் பயப்படாதே. சென்று வா"
.
ஒன்றும் பேசாமல் வேகமாக நடக்க ஆரம்பித்த என்னை மீண்டும் ஒரு முறை அழைத்து, "யாரவது உன்னிடம் பெயர் கேட்டாள் யோசித்து பதில் சொல்". எச்சரித்தான்.'
.
சரி' என்று மண்டையாட்டி விட்டு வீடு நோக்கி விரைந்தேன். அப்போது இன்னொரு தெருவில் நான் ஏற்கனவே கண்டு கேட்ட வசனங்கள் மீண்டும் ஒரு முறை என் முன் உரையாடப்பட்டன. பெயர் மட்டும் வேறாக இருந்தது.
.
"நாம் க்யா ஹே?" மூர்க்கமான குரல்.
.
"கிஷோர்" பயத்தின் முகவரி. எரித்து விட்டார்கள். இந்த கும்பலில் பலரும் தாடியுடன் இருந்தார்கள். எரிந்து கொண்டிருப்பவன் நெற்றியில் திலகம் இருந்தது.
.
'எப்படியாவது வீட்டுக்கு போய்விட வேண்டும்'. யார் கண்ணிலும் படாமல் வேகமாக ஓடினேன். என்னுடைய இரண்டு கால்களையும் பயம் என்னும் கருவி செலுத்தியது. ஒரு வழியாக என் வீடு இருக்கும் தெருவை அடைந்தேன். சிறுது நேரத்திற்கு முன் நான் பார்த்த தெருவா இது என்று சந்தேகப்படும் படியாக இருந்தது தெரு. ரத்தக்கறைகள், பிணங்கள், தீ ஜ்வாலைகள், என்று அழிவின் அடையாளமாய் இருந்தது. சிறிது தூரத்தில், 'நங் நங்' என்று சத்தம் கேட்டது.சத்தம் வந்த திசையில் பார்த்தேன்.
.
சிறுது நேரத்திற்கு முன் என்னிடம் பேசிக்கொண்டிருந்த காவி டர்பன் அணிந்திருந்தவனும், அவனுடன் சிலரும் என் வீட்டுக்கதவை கடப்பாரையால் பெயர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் என் வண்டி எரிந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள்ளிருந்து மோகனாவின் அலறல் சத்தம் கேட்டது. "அய்யோ மோகனா...." வீட்டை நோக்கி வேகமாக ஓடினேன்.


அப்போது என் பின் மண்டையில் ஏதோ ஒன்று பலமாக தாக்கியது. "அம்மா" கீழே சரிந்தேன்.

கீழே விழுந்தாலும் என் கண்கள் சுற்றி நடப்பவற்றை கண்காணித்தன. கண்களை தவிர வேறு பாகங்கள் அசைய மறுத்தன என் உடம்பில். என்னை சுற்றி ஒரு கும்பல் நிற்பதை உணர்கிறேன். சிலர் தாடியோடு, சிலர் கையில், தடியோடு.
.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டுக்கதவை பெயர்ப்பவன் என்னைப்பார்த்து உதவுவான் என்று நினைத்தேன். ஒரே ரத்தம் அல்லவா? ஆனால் அவன் இங்கு நடப்பதை கண்டும் காணாதது போலிருந்தான். எதிரிகளை வதம் செய்யாமல் என் வீட்டின் கதவை பலமாக உடைக்க ஆரம்பித்தான். மோகனாவின் அலறல் சத்தம் கூடியது.
.
"மோகனா எப்படியாவது தப்பித்துவிடு" கண்களின் ஓரம் நீர் கசிகிறது.
.
என் முகத்தில் தடியால் ஒரு அடி விழுந்தது. மீண்டும் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
என் பாகெட்டில் மொபைல் போன் சிணுங்கியது. அது மோகனா தான். என்ன செய்ய முடியும் என்னால்? வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு விட்டது. இப்போது மோகனாவின் அலறல் கெஞ்சுவதாய் இருந்தது.
.
சிணுங்கும் போனை எடுத்து எரிந்து, என் வயிற்றில் ஓங்கி எத்தினான். வலிக்கவில்லை எனக்கு.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டு ஜன்னலில் சிறிது நேரத்திற்கு முன் மோகனா அணிந்திருந்த வெள்ளை சுடிதார் கிழிந்து தொங்குகிறது. இப்போது அவளின் அலறல் அழுகையாக மாறியது. இந்த ஊரையே உதவிக்கு அழைப்பது போல் கெஞ்சியது.
.
கன்னத்தில் அறைந்து கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
வீட்டில் அதிகரித்த அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. உள்ளிருந்த ஆண்கள் வெளியேறினர். என் வீட்டில் அழுக்கான அமைதி உண்டானது. அந்த அமைதியை மோகனாவின் விம்மல் சத்தம் வலிக்க செய்தது.
.
என் வீட்டில் இருந்து வெளியேறி வருபவர்களை கண்டுகொள்ளாதது போல், கடைசியாய் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
சற்று நேரத்துக்கு முன் 'பெயரை கேட்டால் யோசித்து சொல்' என்று சொன்னவன் தன் கும்பலோடு என் மனைவியை தின்றுவிட்டு தன் பான்டை சரி செய்து கொண்டு, இதோ என்னை தாண்டி ஒன்றும் நடக்காதது போல் செல்கிறான்.
.
உயிரில் மிச்சம் உள்ள அனைத்து சக்திகளையும் சேர்த்து அலறினேன், "தேவடியா பசங்களா".
.
அமைதியாய் என் கண்கள் இப்போது மூடுகின்றன, சுற்றி உள்ள ரத்த கரைகளை மறைத்து. இவ்வளவையும் பார்க்க சகிக்காமல் மறைந்திருந்த சூரியன், இப்போது மெல்ல ஒளி பரப்புகிறது!!!
அந்த ஒளி இந்த சமூகத்தின் அசிங்கங்களை அம்மனமாக காட்டியது...

வைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா?

Monday, April 20, 2009

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை கூறிவிட்டு நான்காவதாக விருதுநகர் தொகுதிக்கு பெயர் அறிவிக்கும் முன் ஒரு சிறிய இடைவெளி விட்டார் வைகோ இதழில் தவழும் புன்னகையுடன். அப்போது அரங்கத்தில் பலத்த விசில் மற்றும் கைதட்டல் சத்தம். அந்த சத்தம் அவர் தனது பெயரை அறிவித்த சில நிமிடங்கள் வரை தொடர்ந்தது. இது கானல் நீரா? முன் போல் இப்போதும் அவருக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா? அவரால் ஜெயிக்க முடியுமா என்று ஒரு சிறிய பார்வை...
.
.
இப்போதைய விருதுநகர் தொகுதி சென்ற தேர்தலில் சிவகாசி தொகுதியாக இருந்த போது வைகோ இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சென்ற முறை அவர் நிற்காத போதும் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்று ஒரு புதியவரை அறிமுகப்படுத்திய போது மக்கள் அவரையும் ஜெயிக்க வைத்தனர். கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் வைகோ சிவகாசி தொகுதியை தனது கோட்டையாக வைத்திருக்கிறார். இதற்கு பல விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டாலும், முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.
.
.
1. அவர் சார்ந்துள்ள நாயக்கர் சமுதாய மக்கள் இந்த தொகுதியில் அதிகம். மற்றும் அவருக்கு இந்த தொகுதி மக்களிடம் உள்ள பரிட்சயம்.
.
2. அவர் தொகுதிக்கு செய்துள்ள பல நல்ல செயல்கள் (சிவகாசிக்கு அகல ரயில் பாதை வர செய்தது முதல், தீப்பெட்டி தொழிற்சாலையை இயந்திரமயமாக்காமல் தடுத்தது வரை பலவற்றை சொல்லலாம்).
.
.
ஆனால் இப்போது தொகுதி மறுவரையறைக்கு பின் அவருக்கு அதே செல்வாக்கு உள்ளதா? இப்போதைய விருதுநகர் தொகுதியில் புதிதாக திருமங்கலமும் திருப்பரங்குன்றமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதியில் இப்போது முக்குலத்தோர் கை ஓங்கியுள்ளது. இந்த ஊர்களில் அஞ்சாநெஞ்சரின் செல்வாக்கும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் முன்பு போல் அவரால் எளிதாக வெற்றிபெற முடியுமா? பல தொகுதிகளிலும் ஜாதியை வைத்தே வேட்பாளர்களின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகுதியையும் அந்த கண்ணோட்டத்தில் அலசலாம்.
.
.
இந்த தொகுதியில் முதலாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன். இவர் புகழ் பெற்ற மபாய் கன்சல்டன்சி என்ற கம்பெனியின் தலைவர். சிவகாசி அருகில் உள்ள விளாம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் நாடார் சமூகத்தை சார்ந்தவர். இவர் சார்ந்துள்ள கட்சியும் சமூகமும் இவருக்கு ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தாலும், இவர் வழக்கமான தேமுதிக வேட்பாளரை போல் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் வேலையைத்தான் செய்வார். இது வைகோவிற்கு விழும் ஓட்டுக்களை தான் பாதிக்கும். தேமுதிகவுக்கு நாயக்கர் சமூக மக்கள் ஓட்டும் விழுவதால் இதுவும் வைகோவை பாதிக்கும்.
.
.
நடுநிலையாளர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் ஓட்டுக்களையும் தேமுதிக பிரிக்கிறது. இதற்கு பேசாமல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
.
.
அடுத்ததாக வருபவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தர வடிவேல். இவரை யார் என்றே தொகுதியில் உள்ள பலருக்கும் (கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட) தெரியாது. முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளதால் இவரை தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்த போதே சிவகாசியில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதமும், ஒரு கோஷ்டி உண்ணும்விரதமும் இருந்து காமெடி பண்ணினர். காங்கிரஸின் ஓட்டு வங்கியான நாடார் சமூக மக்கள் இந்த முறை இவருக்கு ஓட்டளிப்பார்களா என்பது சந்தேகமே. முதலில் காங்கிரஸ் காரர்களே ஓட்டளிப்பார்களா என்று கேட்க வேண்டும். திமுக கூட்டணி என்று எண்ணி யாராவது ஓட்டளித்தால் உண்டு. ஆனால் இந்த கூட்டணியின் பிரச்சாரத்தை அடுத்து வேட்பாளரின் செல்வாக்கு கூடலாம். தேமுதிகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுகிறதோ அவ்வளவு வாய்ப்பு உள்ளது இவர் ஜெயிப்பதற்கு.
.
.
இந்த இருவரையும் வைத்து பார்க்கும் போது, கொஞ்சம் உழைத்தால் வைகோ இந்த தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால் இப்போது புதிதாக ஒரு புது தலைவலி வந்துள்ளது நமது நவரச நாயகன் கார்த்திக் ரூபத்தில்!
.
.
இவரும் விருதுநகர் தொகுதியில் நிற்கபோவதாக ஒரு தகவல் வருகிறது. ஏற்கனவே வைகோவிற்கு விழும் நாடார் சமூக மற்றும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாண்டியராஜன் பிரிக்கிறார். இந்த நிலையில் கார்த்திக் நின்றால் அதிமுகவின் ஓட்டு வங்கியான முக்குலத்தோரின் ஓட்டுக்களும் பிரியும் நிலை வரும். கார்த்திக்கிற்கு சமூக மக்களிடம் இப்போது முன்பு மாதிரி மரியாதை இல்லை என்றாலும், 18 முதல் 30 வயது வரை உள்ள முக்குலத்து இளைஞர்கள் இப்போதும் இவர் பின்னால் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவிற்கு விழ வேண்டிய முக்குலத்து ஓட்டுக்களிலும் கணிசமான அளவு பிரிந்து இவருக்கு விழும். என்னதான் காமெடி பீஸாக இவர் இருந்தாலும் இவரை சீரியஸாக மதித்து ஓட்டுப்போட இன்னும் இந்த தொகுதியில் ஆள் இருக்கிறார்கள்.
.
.
சிவகாசி, விருதுநகர், சாத்தூர் தொகுதியில் பாண்டியராஜன் மிகுந்த போட்டிகொடுப்பார். அருப்புகோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சுந்தர வடிவேலும், கார்த்திக்கும் வைகோவை வெற்றியிலிருந்து கொஞ்சம் தூரமாகவே தள்ளிவைப்பர் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வைகோவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் போட்டியாளர்கள் யாருக்கும் தெளிவான காரணங்கள் இல்லை, எல்.ஜி, செஞ்சி போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினாலும் தொகுதி மக்கள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிகொண்டதாக தெரியவில்லை. இவர் மேல் எப்போதும் மக்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. இருந்தாலும் இந்த ஜாதி மற்றும் பணபல அரசியலில் வைகோ ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும், ஆனால் முடியாத காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது....

மன்னிக்கவும்... இது ஆனந்த தாண்டவம் விமர்சனம் அல்ல!!!

Monday, April 13, 2009


தலைவர் சுஜாதாவின் அருமையான நாவல் படமாக வருகிறதே, என்ற சந்தோஷத்தில் திரையரங்கு சென்ற என் ஆசையில் காந்தி கிருஷ்ணா வாடகைக்கு லாரி பிடித்து மண்ணள்ளி கொட்டிவிட்டார்! 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போதும் நேற்று எழுதியதைப்போல் புதிதாக (அதனால் தான் உன்னை நினைத்து, உன்னாலே உன்னாலே என்று காப்பி அடிக்க முடிகிறது இப்பவும்) இருப்பதே இந்த கதையின் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு கதையை இப்படி சிறுகுழந்தை பேண்டு உலப்பியதைப்போல சொதப்பிவிட்டார்கள். இந்த படத்தில் ஒரு வசனம் வரும். "வண்ணத்துப்பூச்சி பிடிச்சுட்டு அழகா வாழ்ந்த அந்த பொண்ண இப்படி சாகடிச்சுடாங்களே?" என்று. அதே நிலைமை தான் இந்த கதைக்கு, இன்று. அமைதியாய் பலர் நினைவுகளில் கனத்த ஞாபகங்களோடு இருந்த இந்த கதையை கற்பழித்து விட்டார்கள்.
.
.
நாவலில் உயிரோடு நம் கண்முன்னே நடமாடிய ரகுவும், ரத்னாவும், ராடும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிய ஜடங்களாய் வந்துபோயிருக்கிறார்கள்! தமன்னா பரவாயில்லை. கோவிந்தராஜாக வரும் கிட்டி மட்டுமே சிறப்பாக செய்திருக்கிறார். ரத்னா கதாப்பாத்திரத்துக்கு ருக்மிணி பொருந்தவே இல்லை. யாராவது புதுமுகத்தை போட்டிருக்கலாம் (எனக்கு நாவல் வாசிக்கும் போது அல்வா நடிகை கஸ்தூரி தான் ஞாபகம் வந்தார்). அவரை பார்க்கும் போதெல்லாம் "சார் பையன் சார்" என்று அவர் பொம்மலாட்டத்தில் சொன்ன வசனம் தான் ஞாபகம் வந்தது.
.
.
சுஜாதா, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்கேற்ற ஞாயங்கள் சொல்லியிருப்பார். படத்தில் ஒன்றும் இல்லை. நாவலில் மதுமிதாவின் பாத்திரம் மிகத்தெளிவாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால் தானும் குழம்பி படம் பார்ப்பவர்களையும் குழம்ப வைத்திருக்கிறார் காந்தி கிருஷ்ணா. நாவல் வாசிக்காமல் படம் பார்ப்பவர்கள் கதி அதோகதி தான். சினிமாவுக்காக பல விஷயங்களை மாற்றியும் புதிதாகவும் இணைத்துள்ளார்கள். அதில் ஜெயந்தி பாத்திரம் ஓரளவு சரியாக படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சகமாணவனாக வரும் கிருஷ்ணா பாத்திரம் எதற்கு? தேவையில்லாமல் நம்மை டென்ஷன் தான் படுத்துகிறார். அமெரிக்க கலாச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிழி கிழியென்று கிழித்திருப்பார் சுஜாதா. அதையும் படத்தில் மேம்போக்காக செய்திருக்கிறார்கள்.
.
.
படத்தொகுப்பு செய்தவர் ஏதாவது சலூனில் முடிவெட்ட பழகிக்கொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி ஒட்டாமல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கரும் ஏதோ 'சம்பளம் வாங்கினோமே' என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்திருக்கிறார். அடுத்த யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசு என்று அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷும் தன் பங்குக்கு சொதப்பி இருக்கிறார். "பூவினை திறந்து கொண்டு" பாடல் மட்டும் பரவாயில்லை. பின்னணி இசை சுத்த மோசம். ஒரு படத்தில் கோழி பிடிப்பவனையும், திருடனையும், அதுபோல் பலரையும் பிடித்து வந்து சத்யராஜ் கிரிக்கெட் விளையாடுவார். இங்கும் அப்படித்தான் காந்தி கிருஷ்ணா விளையாடியிருக்கிறார். விளையாடலாம், தப்பில்லை. அதை உங்கள் சொந்த கதையில் செய்யுங்கள் திரு. காந்தி கிருஷ்ணா அவர்களே. எங்கள் சுஜாதாவின் கதையை இப்படி நாசமாக்கதீர்கள்.
.
.
இவ்வளவு கடுப்பில் இருக்கும் போது, காந்தி கிருஷ்ணா மேலும் கடுப்பேற்றும் விதமாக ரேடியோ மிர்ச்சியிலும், zee தமிழிலும் வந்து "சுஜாதா மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால் மிகவும் சந்தோசப்படுவார்" என்கிறார். இதற்கு மேல் அந்த கலைஞனை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது.
.
.
திரு. காந்தி கிருஷ்ணாவுக்கு ஒரு வேண்டுகோள், மற்றும் ஒரு எச்சரிக்கை.

வேண்டுகோள் - இனி உங்கள் சொந்த கதைகளை மட்டும் படமாக எடுங்கள்.
.
எச்சரிக்கை - சுஜாதா கதைகளை இனி தொடக்கூட செய்யாதீர்கள்.
.
.
சென்ற பதிவில் காந்தி கிருஷ்ணாவுக்கு திறமை இருக்கிறது என்று கூறியிருந்தேன். இப்போது அதை வாபஸ் வாங்கலாமா என்று பரிசீலித்து வருகிறேன்!

சில தமிழ் டைரக்டர்களும் மோட்டிவேசன் தியரியும்!!!!

Thursday, April 9, 2009

நிர்வாகவியலில் மோட்டிவேசன் என்றொரு தலைப்பு மிகவும் பிரபலமானது. ஒரு நிர்வாக அதிகாரி அவருக்கு கீழுள்ள வேலையாட்களை எப்படி தாஜா செய்து வேலை வாங்குவது என்று இந்த தியரி சொல்கிறது... முதலில் அடிப்படை வசதி, இரண்டாவதாக பாதுகாப்பு, மூன்றாவதாக அன்பு, நான்காவதாக மதிப்பு, கடைசியாக தன்னிலை உணரச்செய்தல்.



எல்லோருக்கும் இந்த ஹைரார்க்கி வரிசையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு முதல் இரண்டும் தேவைப்படாமல் அன்பு தேவைப்படலாம். ஒரு கம்பெனியில் மேனேஜர் பொறுப்பில் புதிதாக சேரும் ஒருவனுக்கு முதல் மூன்றும் தேவை இல்லை. இப்படி நம்முடைய தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு இந்த ஹைரார்க்கி வேறுபடும்.



சினிமா தொழிலில் இருக்கும் துணை இயக்குனர்களுக்கு எந்த மாதிரியான மோட்டிவேசன் அவர்களுடைய தலைவர்களான இயக்குனர்களிடம் இருந்து தேவைப்படுகிறது? & தரப்படுகிறது? துணை இயக்குனர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் எல்லாம் வருங்கால படைப்பாளிகள். அவர்களுக்கு தேவை அங்கிகாரம் தான். அங்கிகாரம் என்பது டைட்டில் கார்டில் பெயர் போடுவதோடு முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டி 'இந்த படத்தில் நானும் வேலை செய்திருக்கிறேன்' என்று பெருமையாக அவர்கள் தன் ஊர் மக்களிடம் சொல்லும் அளவுக்கு செய்ய வேண்டும். இப்படி தன்னுடைய துணை இயக்குனர்களுக்கு அங்கிகாரம் கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலர் தான் என்று நினைக்கிறேன்.



முதலில் வருபவர் பாரதிராஜா. தன்னிடம் வேலை செய்யும் திறமையான துணை இயக்குனர்கள் மற்றும் டெக்னிசியன்களை திரையில் காண்பிக்க தவறமாட்டார். மணிவண்ணன் (கொடி பறக்குது), எஸ்.ஜே.சூர்யா (கிழக்கு சீமையிலே), இளவரசு-இவர் ஒரு ஒளிப்பதிவாளர், இப்படி பலரையும் திரையில் காட்டி அங்கிகரித்த பெருமை இவருக்கே உண்டு.





கிராமத்து குயிலை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்றினார் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் கே.எஸ்.ரவிக்குமார். ரமேஷ் கண்ணா இதற்கு சிறந்த உதாரணம். இவர் இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் வருவதே இல்லை. சில சமயங்களில் தன்னுடைய துணை இயக்குனர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இவர் அமைதியாக அவர்கள் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்று நோட்டம் இடுவாராம். அப்படி ஒரு துணை இயக்குனர் இயக்கிய காட்சி தான் நாட்டாமையில் வரும் அந்த சிலம்பு சண்டை. அந்த காட்சியை இயக்கியவர் சேரன். படையப்பாவில் வரும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி நடனக்காட்சியை இயக்கியவர் ரமேஷ் கண்ணா!



இவர்கள் இருவரும் இப்படி என்றால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வழக்கம் போல இந்த விஷயத்திலும் பிறரிடம் இருந்து வேறுபடுகிறார். மற்ற இயக்குனர்கள் போல் அல்லாமல் தன்னுடைய துணை இயக்குனர்களின் பெயர்களை படத்தில் வரும் ஏதாவது ஒரு பாத்திரத்துக்கு சூட்டிவிடுவார். மாதேஷ் (மதுர பட இயக்குனர்) ஒரு சில படங்களில் இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்; மற்றும் முதல்வன் படத்தை ஷங்கருடன் சேர்ந்து தயாரித்தார். தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ராஜு சுந்தரத்துக்கு அந்த பெயரைச்சூட்டி படத்தில் எல்லாரும் அந்தப்பெயரை மகேஷ் என்று தவறாகவே உச்சரிப்பது போல் நகைச்சுவையாக செய்திருப்பார்.


முத்துவடுகும் (பேரரசு தம்பி), ஷங்கரின் உதவி இயக்குனர் தான். இவரின் பெயரை ஷங்கர் முதல்வன் படத்தில் ஒரு அரசு அதிகாரிக்கும், அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜின் அண்ணன் நடத்தி வரும் சமையல் தொழிலில் ஒரு வேலைக்காரருக்கும் வைத்திருப்பார்.


ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணாவும் (செல்லமே, ஆனந்த தாண்டவம் இயக்குனர்) ஷங்கரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் தான். இவர் பெயரை ஷங்கர், இந்தியன் படத்தில் கமல், எடுபிடி வேலை செய்யும் ட்ராபிக் கமிஷனர் (ஊர்மிளா தந்தை) பெயராக பயன்படுத்தி இருப்பார். அதே போல் சிவாஜி படத்தில் வரும் ஒரு வருமான வரித்துறை அதிகாரியின் பெயரும் காந்தி கிருஷ்ணா தான்.



புகழ் பெற்ற மேலே குறிப்பிட்டுள்ள இயக்குனர்களுக்கு பல உதவி இயக்குனர்கள் இருந்தும் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் திரையில் காட்டியதை தான் "managing creative people" என்று சொல்வார்கள். அதாவது திறமை இருப்பதாய் அறியப்பட்ட உதவி இயக்குனர்கள் மட்டுமே அப்படி பெருமை செய்யப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட உதவி இயக்குனர்கள் அனைவரும் தங்களுடைய முழுத்திறமையை இன்று நிரூபித்து புகழ் பெற்று இருக்கிறார்கள். அப்போ, ஒரு இயக்குனராவதற்கு கற்பனை திறமையோடு "managing creative people" என்ற கலையும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
























மறந்துவிட்டாள் என்னை..!!

Thursday, April 2, 2009

கோகுலின் திருமணத்தில் தான் அவளை மறுபடியும் பார்த்தேன். கோகுல், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் செய்த, மதுரையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் தர மேலாளர். இங்கு அவளை நான் எதிர்பார்க்கவில்லை. இவள் தான் 'கல்யாணத்திற்கு பிறகு வேலையில் இருந்து நின்று விட்டாள்' என்று சொன்னார்களே? இங்கே எப்படி வந்தாள்?

இவள்? பெயர் சிவசங்கரி. நான் ப்ராஜெக்ட் செய்த பொது, அந்த மருத்துவமனையில் என் கைடுக்கு இவள் தான் உதவியாளர். நான் ப்ராஜெக்ட் ஆரம்பித்த இரண்டு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள். 'நான் காற்றில் பறக்காமல் இருப்பதே என் ஆடையின் எடையில் தான்' என்பது போல் இருந்தால். அவ்வளவு ஒல்லி. வெள்ளையாக இருந்தாள். வெண்மையான நேரான பல் வரிசை. ஏழ்மையை பிரதிபலிக்கும் ஒரு திக் கலர் சுடிதார். இது தான் சிவசங்கரியின் அடையாளம்.

பொதுவாகவே நான் பெண்களிடம் பேசத்தயங்குபவன். காரணம் கூச்சமா? வெறுப்பா? தன்மானமா? என்னவென்று தெரியாது! இவளிடமும் அப்படித்தான். நானாக பேசவில்லை.

"அந்த பைல் எடுத்துக்குடுங்க". எடுத்துகுடுத்தேன்.

"மேடம் இன்னைக்கு மதியத்துக்கு மேல தான் வருவாங்களாம். நீங்க அவங்களுக்கு வெயிட் பண்ணாம ப்ராஜெக்ட் ஆரம்பிப்பிங்கலாம். சொன்னாங்க."
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் டேட்டா கலக்க்ஷனுக்கு சென்று விட்டேன். இப்படியே ஒரு நான்கு நாட்கள் சென்றன. எவ்வளவு நாளைக்குத்தான் பைல் எடுத்துக்குடுக்குறதையே பேசிட்டு இருக்குறது? அப்போது ஏதோ ஒரு கமல் படம் வெளிவந்து இருந்தது.
"நான் கமல் படமே பாக்க மாட்டேன். ஏன்னு சொல்லுங்க ராம் குமார்"
நான் ஒன்றும் சொல்லாமல் அவளைப்பார்த்தேன்.
"ஏன்னா ஒண்ணுமே புரியாது. ஹா... ஹா.. ஹா.."
அவள் சினிமா தியேட்டருக்கே இரண்டு முறை தான் போயிருக்கிறாளாம். அதுவும் அவள் படிக்கும் போது பள்ளியில் கூட்டி சென்றதாம்.
"உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு, ராம் குமார்?"
ஒவ்வொரு வரி முடிக்கும் போதும் என் பெயரை அதுவும் முழுப்பெயரை அவள் சொல்லும் போது அழகாக இருக்கும்.
"அது நெறைய பேர பிடிக்கும்ங்க"
"சும்மா சொல்லுங்க"
"ரஜினி"
"தாத்தாவா? அப்புறம்?"
"கமல்"
"ச்சீ.. உங்க டேஸ்ட் என்ன இருவது வருசத்துக்கு முன்னாடி இருக்கு ராம் குமார்?"
"என் டேஸ்ட் அவ்வளவு தாங்க. சரி, உங்களுக்கு பிடிச்ச நடிகர்லாம் யாரு?"
"எனக்கு ஒரே ஒரு ஆள் தான் பிடிக்கும்"
"யாரு?"
"ப்ரித்விராஜ்"
"அவனா? உருப்படியா ஒரு பத்து படம் கூட நடிக்கல!"
"ஓய்... என்ன?"
"சாரி சாரி... ஏன் அவன புடிக்கும்?"
"அவன் அவ்ளோ அழகா இருப்பான் தெரியுமா? இப்போ கொஞ்ச நாளா விஷாலையும் பிடிக்குது"
நான் வாயை திறக்காமல் இருந்தேன். திரும்பவும் அவள் ஓய் என்று சொன்னால் என்ன செய்வது?
"ஏன் பிடிக்கும்னு கேக்க மாட்டீங்களா ராம் குமார்?"
"ஏன் பிடிக்கும்?"
"அவன் கருப்பா உங்கள மாதிரியே இருக்கானா, அதான்..."
"ஏங்க, நாங்க கருப்புல மட்டும் தான் ஒன்னு. நான் அவன விட கொஞ்சம் அழகா தான் இருக்கேன்."
"அதெல்லாம் தெரியாது. எனக்கு அவன பாத்தா உங்க ஞாபகம் தான் வருது"
அன்று முதல் எனக்கும் விஷாலை கொஞ்சமாக பிடிக்க தொடங்கியது. நாற்பத்தைந்து நாளில் முப்பது நாட்கள் வேகமாக ஓடி விட்டன. இந்த முப்பது நாட்களில் அவளும் நானும் பேசாத சமயங்கள் மிகவும் குறைவு. அவள் குடும்பத்தை பற்றி, அம்மா இறந்தது, அக்கா கல்யாணம், இப்போது அப்பாவுடன் அவள் தனியாக இருப்பது என்று அவளைப்பற்றி அனைத்தையும் சொன்னாள்.
"வீட்டுக்கு போனாலே எரிச்சலா இருக்கும் ராம் குமார்"
"ஏன்?"
"இங்க வேலைய முடிச்சுட்டு அழுப்பா வீட்டுக்கு போனா, அங்கயும் மூஞ்சில அடிக்குற மாதிரி வேல இருக்கும். துணி துவைக்குறது, பாத்திரம் கழுவுறது, அப்பறம் இந்த சமையல் வேல இருக்கே? அப்பப்பா.."
"ம்ம்ம்..."
"ஆம்பளைங்கலாம் ரொம்ப குடுத்து வச்சவங்கல்ல, ராம் குமார்?"
அவள் கண்களில் நீர் தெரிந்தது. இதழில் சோகம் கலந்த சிரிப்பு.
"நீங்க இன்னும் ரெண்டு வாரத்துல போயருவிங்கள்ள ராம் குமார்?"
"ஆமா"
"எங்களலாம் மறந்துருவிங்களா?"
நான் அவளை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன். பதில் எதுவும் சொல்லவில்லை. 'என்னை' என்பதைத்தான் அவள் 'எங்களை' என்று சேர்த்து சொன்னாள்.
"உங்க காலேஜ்ல பொண்ணுங்கலாம் படிக்குறாங்களா?"
"அதெல்லாம் எதுக்கு இப்போ?"
"இல்ல சும்மா கேட்டேன். மணி அஞ்சாச்சி, வீட்டுக்கு கெளம்பலையா ராம் குமார்?"
அடுத்து ஒரு வாரம் நான் அந்த மருத்துவமனைக்கு செல்லவில்லை. காலேஜ் இல் என் கைடிடம் ப்ராஜெக்ட் பற்றி பேசினேன். 'இன்னும் ரெண்டு நாட்கள் தான் மருத்துவமனையில் வேலை இருக்கும்' என்று சொன்னார்.
"ஏன் ராம் குமார் நீங்க ஒரு வாரமா வரல? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?" - என்னை மீண்டும் பார்த்த அதிர்ச்சியும் இதுவரை பார்க்காததால் இருந்த வருத்தமும் சேர்ந்து அவள் ஒல்லி முகத்தில் கோலம் போட்டன.
"இல்லைங்க வாத்தியார பாக்க போயிருந்தேன்"
"சொல்லிட்டு போகலாம்ல. நீங்க இல்லாத இந்த ஏழு நாளும் எரிச்சலா இருந்தது. வீட்டுலயும் ஒரு வேல பாக்க முடியல!"
"சிவசங்கரி"
"என்ன?"
"நாளைக்கு தான் என் ப்ரோஜெக்டோட கடைசி நாள்"
"என்ன சொல்றிங்க? இன்னும் ஒரு வாரம்ல இருக்கு?"
"இல்லைங்க. கொஞ்சம் டாகுமெண்டேசன் வேல இருக்கு. அதனால நாளையோட கிளம்பிருவேன்!"
"நீங்க இங்க எதுக்குங்க ப்ராஜெக்ட் பண்ண வந்தீங்க? வேற எங்கயாவது போயித்தொலஞ்சுருக்க்கலாம்ல?" அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவள் அன்று அழுத அழுகை என்னை என்னவோ செய்தது. ப்ராஜெக்ட் முடித்து கிளம்பிவிட்டேன். இந்த நாற்பது நாட்களில் பிரிவோம் என்ற நம்பிக்கை துளியும் இல்லாததால் நாங்கள் போன் நம்பர் கூட பரிமாறிக்கொள்ளவில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தது. நண்பர்களிடம் அவளைப்பற்றி சொன்னேன்.
"நீ அந்த சிவசுந்தரிய.."
"டே சிவசங்கரி டா..."
"ஏதோ ஒன்னு. அவள நீ லவ் பண்றியாடா?"
"ஆமாம் டா" என்று சொல்ல ஆசை. "அவா தான் என்ன லவ் பண்ற மாதிரி தெரியுது டா.."
"டே மூடுடா.. அந்த பொண்ணு இதெல்லாம் கேட்டா தற்கொல பண்ணிக்கும்"
அன்று அவர்களுக்கு நான் தான் ஊறுகாய். 'ஏண்டா இவர்களிடம் சொன்னோம்?' என்று நினைத்தேன். அதிலும் ஒருவன்,
"நண்பா நீ அந்த பொண்ண லவ் பண்ற விஷயம் அந்த பொண்ணுக்கு தெரியாம பாத்துக்கோடா. சங்கடப்படுமா இல்லையா?" என்றான். இவர்களிடம் இது பற்றி இனி பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ப்ராஜெக்ட் முடிந்த மூன்று நாட்களில் எனக்கு ஒரு புது எண்ணில் இருந்து போன் வந்தது. ரிலையன்ஸ் நம்பர். தயக்கமான குரலில்,
"ஹலோ?"
"ஹலோ..."
"ராம் குமாரா?"
"ஆமா. நீங்க யாரு?"
"நெறைய பொண்ணுங்க கிட்ட பேசினா இப்படித்தான், யாரு பேசுறதுனே தெரியாம முழிக்க வேண்டிருக்கும். நான் யாருன்னு நெஜம்மாவே தெரியலையா ராம் குமார்?"
"சிவசங்கரி!"
"எப்பா! எவ்ளோ கஷ்டப்பட வேண்டிருக்கு என்ன ஞாபகப்படுத்த? அதுக்குள்ள மறந்துட்டிங்கள்ள?"
"இல்லைங்க, புது நம்பர்ல அதான். ஆமாம் என் நம்பர் எப்படி கெடச்சது?"
"உங்க கைட், அதான் எங்க மேடம் செல்லுல இருந்து சுட்டுட்டேன்!"
"என்னது?"
"ஆமா ராம் குமார். என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல..."
அன்று மட்டும் இரண்டு மணிநேரம் பேசினோம். அவளை எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்று தெளிவாக உணர முடியாத அளவுக்கு குழம்பி இருந்தேன்! அவள் இதுவரை ஆண்களோடு பழகியதில்லை. நான் தான் அவள் வாழ்வின் முதல் ஆண். அதனால் இது ஒரு இன்பாட்சுவேஷன் ஆக இருக்கலாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அதே போல் இன்னும் ஒரு ஆண்டில் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் அப்பா சொன்னாராம். "ஏதாவது பண்ணுங்க ராம் குமார்" என்று அழுதாள்.
நான் என்ன பண்ணுவது? ஒரு பெண்ணை எளிதாக காதலிக்கும் மனது, திருமணம் என்றவுடன் பயப்படுகிறதே? அவள் வேறு ஜாதி. என் வீட்டில் தெரிந்தால் தோலை உரித்து விடுவார்கள். இது எல்லாவற்றையும் அலசிப்பார்த்த பின் அவளிடம் பேசாமல் இருப்பதே இருவருக்கும் நல்லது என்று பேசுவதைத்தவிர்த்தேன். ஆண்கள் தான் எவ்வளவு கோழைகள்?
ஒரு நாளில் நூறு மிஸ்டு கால் கூட வரும். சில சமயம் இன்பாக்ஸ் நிரம்பி வழியும்! ஒன்றுக்கும் நான் பதில் அளிக்கவில்லை. அவளிடம் இருந்து ஒரு நாள் இப்படி எஸெமெஸ் வந்தது,
'நீங்கள் என்னிடம் பேச வேண்டாம். தயவு செய்து நான் பேசுவதை மட்டும் அமைதியாக கேட்டால் போதும். எனது காலை அட்டன்ட் செய்யவும் ப்ளீஸ்.'அந்த மெசேஜ் இன் வலி என்னையும் தாக்கியது. அதைத்தொடர்ந்து வந்த காலை அட்டென்ட் செய்தேன். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஒரு விம்மல் சத்தம் கேட்டது.
"ஏன் ராம் குமார் என்ட பேச மாற்றிங்க?"
"........"
"ஒரு பொண்ண இப்படி அழ வைக்கிறோமேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா? என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல! என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்களா வந்து என்கிட்ட பேசற வரைக்கும் நானும் உங்ககிட்ட பேச மாட்டேன். அதுக்காக நான் உங்கள மறந்துருவேன்னு மட்டும் நெனைக்காதிங்க. என் உயிர் உள்ளவரை அது நடக்காது!"
அதற்குப்பின் அவளிடம் இருந்து எனக்கு மெசேஜ்ஜோ காலோ வரவே இல்லை. ஐம்பது நாட்கள் கூட என்னிடம் பழகாத ஒரு பெண் என் ஆயுசு முழுதும் மனதில் நீங்காத ஒரு தழும்பாக, நினைவில் நீங்கி விட்டாள்.
'என் உயிர் உள்ள வரை உங்கள மறக்காம மாட்டேன்'னு சொன்னவள், இதோ இங்கே ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு என் கண்முன்னே திருமணமாகி! என் மனதுக்குள் ஒரு சின்ன ஆர்வம், 'இவள் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாளா?' என்று. எவ்வளவு மோசமான எண்ணம், மாற்றான் மனைவியின் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா என்று எண்ணுவது?
ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அவளிடம் செலுத்தியது. அருகில் சென்றேன். அவள் முதுகுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் சதை போட்டுருக்கிறாள். சிகப்பு வண்ண பட்டுப்புடவையில் கையிலும் காதிலும் கழுத்திலும் கணவன் வாங்கி கொடுத்த தங்கத்தில் மின்னினாள். ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு ஒரு தலைக்காதலர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
"நீங்க சிவசங்கரி தானே?"
அவள் திரும்பி என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் எந்த வித அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ தெரியாதது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
"ஆமா. நீங்க யாரு?" முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் கேட்டாள். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
"என்னை தெரியலையா? நான் தாங்க ராம் குமார். நீங்க வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுநேனே, மறந்துடிங்களா?"
"சாரிங்க.. எனக்கு சரியா ஞாபகம் இல்லையே!"
அப்போது ஒரு ஆசாமி, கையில் குழந்தையுடன் எங்களை நெருங்கி அவளிடம், "என்னம்மா? சார் யாரு?" என்றார். அந்த ஆசாமிக்கு வயது இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருக்கும். ஒடிசலான தேகம். அவள் கணவன்.
"இவர் நான் வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுனாராம். ஞாபகம் இருக்கானு கேட்டாரு"
"ஓஹோ"
"ஆமா சார். அவங்களுக்கு என்ன ஞாபகம் இல்ல போல. சாரிங்க. நான் வரேன்"
'ஏன்டா இவளிடம் பேசினோம்' என்று இருந்தது. என்னை சாகும் வரை மறக்க மாட்டேன் என்றவள் ஒன்றரை வருடத்தில் என்னை அறவே மறந்து போய்விட்டாள். 'இந்த பொம்பளைங்களே இப்படித்தான். சரியான சந்தர்ப்பவாதிகள்' என்று நினைத்து கொண்டே திரும்பி நடந்தேன்.
"டாய் ராம் குமார்".
யாரோ கூப்பிட்டது போல இருந்தது. அந்த ஆண் குரல் வந்த திசைக்கு திரும்பினேன். அங்கு அவள் குடும்பம் தான் நின்று கொண்டு இருந்தது. அவள் குழந்தை அழுது கொண்டு இருந்தது. வேறு யாரும் இல்லை. 'என்னடா இது? பிரம்மையோ?' என்று எண்ணினேன்.
திரும்பவும் "டாய் ராம் குமார்" என்று கேட்டது. திரும்பி பார்த்தேன். அங்கே அவள் கணவன், "டாய் ராம் குமார் அழாத டா. சீக்கிரம் வீட்டுக்கு போயிறலாம். அம்மா கிட்ட 'சீக்கிரம் கெளம்பு' னு சொல்லு" - அழும் குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
'என்னது? அவள் குழந்தையின் பெயர் ராம் குமாரா?' என் மூளைக்குள் வேகமாக ரெத்தம் ஏறியது. நான் அவளை நேராக பார்த்தேன். அதிர்ச்சியில் கிட்டத்தட்ட உறைந்து போன நிலையில் இருந்தாள். அவள் கண்களால் என்னை நேராக பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் உடைந்து விடும் அணை போல அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். அந்த கணம் என் மனதில் அப்படியே பச்சை குத்தியது போல் பதிந்து விட்டது. அன்று அவளிடம் ஏன் பேசினோம் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.
'இவளா என்னை மறந்து விட்டாள் என்று நினைத்தேன்? உண்மை தான் இவள் சொன்னது. இவள் சாகும் வரை என்னை மறக்க மாட்டாள்!'
ஒரு பெண்ணின் மனதை மீண்டும் மீண்டும் துன்புறுத்தி விட்டோமே என்று மனது கனக்கிறது. எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உறவுக்காக கண்களில் நீர் கசிகிறது!
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One