சேரன் செய்தது மட்டும் தான் தவறா?

Friday, August 21, 2009

சமீப நாட்களாக பதிவுலகில் சேரனை பற்றியும் பொக்கிஷம் திரைப்படத்தை பற்றியும் பலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதினார்கள். நானும் எனக்கு தோன்றுவதை எழுதுறேன்.
.
.
திரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறதாம். சேரனின் எந்த படம் அய்யா கில்லி போன்ற வேகமான திரைக்கதை உடையது? அவருடைய படங்கள் எல்லாம் அனுபவித்து ரசித்து பார்பவர்களுக்கு ஏற்றவை. உங்களுக்கு வேகமான திரைக்கதை மட்டும் தான் பிரச்சனை என்றால் 'வில்லு', 'படிக்காதவன்', போன்ற உலகத்தர திரைப்படங்களை மட்டும் பாருங்கள். யார் உங்களை பொக்கிஷம் போன்ற படங்களுக்கு அழைத்தது? வாழ்வை அவசரமாக வாழும் நாம் மூன்று மணிநேரம் அமைதியாக ஒரு படம் பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டுமே தவிர பிறர் மேல் கோபப்படக்கூடாது.
.
.
அதே போன்று ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் 'எனக்கு இந்த இந்த காட்சிகள் பிடிக்கவில்லை, அல்லது மொத்த படமுமே எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறுங்கள். ஏதோ நீங்கள் தான் உலகின் தலை சிறந்த விமர்சகர் போன்று 'இந்த படம் நல்லா இருக்கு, இந்த படம் கேவலமா இருக்கு' என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? உங்களுக்கு பிடிக்காத படம் வேறு எவருக்குமே பிடிக்காதா? உங்களுக்கு பிடித்த படம் தான் சிறந்த படமா?
.
.
மற்றொரு குற்றச்சாட்டு 'சேரனுக்கு நடிக்கத்தெரியவில்லையாம்'. இதை அவர் சொல்ல மறந்த கதை நடித்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா? அட்லீஸ்ட் ஆட்டோகிராப், அட தவமாய் தவமிருந்து படத்திலாவது சொல்லியிருக்கலாமே பாஸ். என்னை கேட்டால் முன்புக்கு இப்போது அவர் நடிப்பு எவ்வளவோ தேறியுள்ளது என்றே சொல்வேன். சேரன் என்ற மோசமான நடிகரால் சேரன் என்ற சிறந்த இயக்குனருக்கு அசிங்கமாம். முன்னணி நாயகர்கள் இல்லை என்றால் புது முகத்தை வைத்து படம் எடுக்க வேண்டுமாம். சுப்பிரமணியபுரம், பசங்க என்று இதில் மேற்கோள் காட்டுகிறார்கள். சுப்பிரமணியபுரம் படத்தில் முன்னணி வேடத்தில் யார் புதிய முகம் என்று தெரியவில்லை. அதில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்புக்கு புதுசு ஆனால் அவர்களும் சேரனை போன்று இயக்குனர்கள் தானே? இன்னும் சில வருடங்களில் உங்களுக்கு சசிகுமார் நடிப்பும் பிடிக்காது, அப்போதும் இதே போன்று 'சசிகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டு இயக்குனராக மட்டும் இருப்பது நல்லது' என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்கள்.
.
.
தானே இழைத்து இழைத்து செதுக்கிய கதைக்கு யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். தயாரிப்பாளர் சிறிது தலையிடலாம். நீங்கள் நான் எல்லாம் யார் இதில் தலையிட? உங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தா உங்களுக்கு பொக்கிஷம் படம் காண்பிக்க பட்டது? நீங்களாக சென்று படம் பார்த்து விட்டு இப்போது சேரன் மேல் பலி போட்டால் என்ன அர்த்தம்? 'மழை வெளுத்து வாங்கிருச்சு அதான் படம் பாக்க முடியல' என்று நீங்கள் தவமாய் தவமிருந்து வந்த பொது சொல்லி ஒரு தரமான படத்தை ஓட விடாமல் செய்தீர்களே அதற்கு சேரன் உங்கள் மீது பலி போடலாமா?
.
.
இயக்குனர் சேரனுக்கு நடிகர் சேரனால் அவமானம் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நடிகர் கமலுக்கு இயக்குனர் கமலால் அவமானம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பிற மொழிப்பட டிவிடிகள் தமிழ் நாட்டிற்குள் இப்போது இருப்போது போல் பரவலாக கிடைக்காத காலத்தில் பல பிறமொழி படங்களின் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும், அவர்களின் பாவனைகளையும் சுட்டு இயக்குனர் கமல் நடிகர் கமலை தமிழக அளவில் ஒரு உலக நாயகனாக மாற்ற எண்ணினார். இப்போது தான் அவரின் அன்பே சிவம் படமே ஒரு ஈ அடிச்சான் காப்பி என்று தெரிகிறது. தனது குட்டு வெளிப்பட்ட உடன், தான் ஒரு நல்லவன் என்று காண்பிப்பதற்காக வசூல் ராஜா, உன்னைப்போல் ஒருவன் என்று வெளிப்படையாக காப்பி அடிக்கிறார் உங்களின் தமிழ் நாட்டு உலக நாயகன்.
இந்த விதத்தில் சொந்த கதையை மட்டுமே படம் எடுக்கும் சேரன் எவ்வளவோ சிறந்தவர் சார்.
.
.
இதில் ஒருவர் பின்னூட்டம் என்ற பெயரில், 'பீல்ட் அவுட் ஆனவர்கள் தான் மதவாதத்தை கையில் எடுப்பார்கள்' என்று சேரனை சாடியிருக்கிறார். அவர் கோணத்தில் அவர் இந்த படத்தை அணுகியிருக்கிறார். யார் மதவாதி என்பது அவரது பின்னூட்டத்தின் மூலம் நன்கு தெரிகிறது. அவர் பெயர் ஷாஜகான்.
.
.
பின்குறிப்பு:
எனக்கு பொக்கிஷம் படம் மிகவும் பிடித்துள்ளது. தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் அளவிற்கு இல்லை என்றாலும் இப்போது வந்துள்ள படங்களின் மத்தியில் பொக்கிஷம் ஒரு நல்ல படமாகவே எனக்கு படுகிறது.
.
.
நான் கமலின் தீவிரமான ரசிகன். சாரி தலைவா உங்களின் உண்மைகளை பேச தயங்காத ரசிகன் நான்.

முதல் சம்பளம்!

Thursday, July 30, 2009

சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆனது போல் உள்ளது, ஆனால் இப்போது தான் ஒரு மாதம் முடிந்திருக்கிறது என்பதை என் முதல் சம்பளத்திற்கான செக் வந்ததும் தான் உணர்ந்தேன். முழுதாக பத்தாயிரம் ரூபாய்! சென்னைக்கே நான் தான் ராஜா என்பது போன்ற மிதப்பில் இருந்தேன். 'இனிமேல் வீட்டுக்கு போன் போட்டு 'அப்பா ஒரு 1000 ரூபாய் அவசரமா தேவைப்படுது' னு இனிமேல் கெஞ்ச வேண்டியது இல்லை' என்று நிம்மதியாக நினைத்துக்கொண்டேன்.
.
உடன் வேலை செய்பவர்கள் அப்போதே அந்த மாத சம்பளத்திற்கு தாங்கள் என்னென்ன செலவு செய்யலாம் என்று பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவன் அடிடாஸ் ஷூ வாங்கப்போவதாக சொன்னான்.
.
மற்றொருவன், "அப்போ உன் சம்பளம் ஒரு வாரத்துக்கு கூட தாங்காது" என்று எச்சரித்துவிட்டு "நான் சத்யம்ல படம் பாப்பேன்" என்றான்.
.
'ஓ.. முதல் மாச சம்பளம்னா இப்படித்தான் செலவு செய்யனுமா?' என்று நினைத்துக்கொண்டே அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு கிளம்பினேன். வரும் வழியில் நான் என்ன மாதிரி செலவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.
.
'புது டிரஸ் எடுக்கலாமா?'
'அதான் போதுமான அளவுக்கு டிரஸ் இருக்கே?'
.
'படத்துக்கு போலாமா?'
'எப்படித்தான் காச கொண்டுபோயி இந்த சினிமாக்காரன் கையில குடுக்க மனசு வருதோ?' என்று அம்மா அடிக்கடி சொல்லும் (திட்டும்) வார்த்தை தேவையில்லாமல் நினைப்பை கெடுத்தது. என்ன செலவு செய்யலாம் என்று பலவாராக யோசித்துக்கொண்டிருந்தேன். டக் என்று் என் சிந்தனையை கலைத்தது 'காலையில் தினமும் கண்விழித்தால்..' ரிங்டோன். வீட்டில் இருந்து அழைப்பு. அம்மா பேசினார்.
.
'என்னப்பா சாப்டியா?' - அதே வழக்கமான பழைய கேள்வி.
'ஏம்மா இத விட்டா உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா?' சற்றே கோபத்துடன் 'இந்த கேள்விக்கு பதில் சொல்லி பதில் சொல்லி எனக்கு அலுத்துப்போச்சுமா.'
'இல்லப்பா அவ்ளோ தூரம் தள்ளி இருக்க. தினமும் ரொம்ப அலைய வேண்டிருக்குன்னு வேற சொல்ற. அதான் சரியா சாப்டுறியா என்னனு விசாரிச்சேன்' என்றார் பாசத்தோடு கூடிய படபடப்புடன்.
'சரி வேற என்ன?'
'ஒன்னும் இல்லப்பா நாளைக்கு போன் போடறேன்'
'சரி வச்சுடறேன்' மறு முனையில் பதிலை எதிர் பாராமல் துண்டித்தேன்.
.
.
மறுநாளும் யோசித்தேன் என்ன செலவு செய்யலாம் என்று.
'ஷூ வாங்கலாமா?'
'ச்சே மொத செலவு கால்ல மிதிபடுற மாதிரியா இருக்கணும்?'
'நண்பர்களுக்கு ட்ரீட் வைக்கலாமா?'
'பட்ஜெட் இடம் குடுக்குமானு யோசிச்சிக்கோ'
வேற என்ன தான் செய்றது? அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே?'
.
இன்று இரவும் அம்மா தவறாமல் வழக்கம் போல் போன் செய்தார்.
'சாப்டியான்னு மட்டும் கேக்காதீங்கமா...'
'சரிப்பா கேக்கல. இல்ல அப்பா உன்கிட்ட ஏதோ விபரம் கேக்கனும்னு சொன்னாங்க அதான்'
'என்னவாம்?'
'இந்தா அப்பாட்டயே பேசு' போன் அப்பா கைக்கு மாறியிருக்க வேண்டும். அவர் தான் பேசினார்.
'தம்பி சொல்லுப்பா..'
'நீங்க தான் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களாமே?'
'அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அவா கெடக்கா கிறுக்கு கழுத. சரி நீ சாப்டியா?'
'ம்ம்...'
'சரி அம்மாட்ட பேசு' அம்மாவிடம் கொடுத்தார்..
'ராம் குமாரு உனக்கு இப்போ சம்பளம் போட்டிருப்பாங்க இல்ல?'
'ம்ம் நேத்து தான் போட்டாங்க'
'இல்ல நம்ம ஊர்ல பாக்டரி லாம் ஆக்சிடென்ட் ஆகுறனால செக்கிங் வருவாங்கன்னு பயந்துட்டு பாக்டரி ஒரு வாரமா தெறக்கல. அதான் உன் செலவு போக கொஞ்சம் பணம் இருந்தா அனுப்ப முடியுமான்னு அப்பா கேக்க சொன்னாங்க..'
'இத அப்பாவே கேட்டிருக்கலாமேமா?'
'இல்ல உன்ட்ட கேக்குறதுக்கு அப்பா வருத்தப்படறாங்க. பையனோட மொத மாச சம்பளத்த கூட அவன செலவழிக்க விடாம இப்படி ஆகிப்போச்சேன்னு'
'இதுல என்னம்மா இருக்கு? சரி நாளைக்கு காலைல அனுப்புறேன். எவ்வளவு வேணும்?'
'ஏங்க எவ்வளவு வேணும்னு கேக்குறான். தம்பி 1500 ரூபாய் அனுப்புவியாம்..'
'சரி நாளைக்கு காலைல அனுப்புறேன்'
'சாப்டியாப்பா?'
'புளிச்சுபோச்சுமா. அதெல்லாம் சாப்டுவேன். போன வைங்க...'
.
.
மறுநாள் விடிந்தது. அருகில் உள்ள வங்கிக்கு சென்றேன். மூவாயிரம் ரூபாய் பணத்தை இதுவரை என்னை கேட்காமல் எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின் வங்கி கணக்குக்கு அனுப்பினேன். முதல் மாத சம்பளத்தின் முதல் செலவு திருப்தியாக அமைந்த சந்தோசத்தில் மன நிம்மதியுடன் வேலைக்கு கிளம்பினேன்.

MATERIALISM

Friday, June 5, 2009

'ச்சே ஆபீஸ்ல இருந்து வந்து கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடமாற்றாங்க' என்று அலுவலகத்தின் அழுப்பை எண்ணிக்கொண்டே, கதறிய தொலைபேசியை எடுத்தேன். எதிர் முனையில் சுப்பிரமணி, எங்கள் அலுவலக வாட்ச்மேன்.
.
"அய்யா நம்ம மேனேஜர் சதீஷ் சாரு திடீர் னு மயக்கம் போட்டு விழுந்துட்டார்யா!" - பதற்றத்தோடும் படபடப்போடும் சொன்னான்.
.
"என்னடா சொல்ற?"
.
"ஆமாயா மூச்சுபேச்சே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்குயா. கொஞ்சம் வேகமா வாங்க".
.
அவன் அழுது கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. "சரி நீ அங்கேயே இரு. நான் இப்போ வந்துறேன்"
.
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். எங்கள் ஆபீஸில் பலரும் வேலை செய்யும் பொது இந்த சுப்பிரமணி, சதீஷின் பி. எ. விற்கு கூட இந்த விஷயத்தை சொல்லாமல் என்னிடம் சொல்கிறான் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. சதீஷ் என்னுடன் படித்தவன், என் நண்பன். நானும் அவனும் இளநிலை இயற்பியல் ஒன்றாக தான் படித்தோம். நாகர்கோவில் காரன்; சுமாராகத்தான் படிப்பான். பயந்தாங்கோலி சதீஷ் என்றால் கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். அவன் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆனால் இவன் அந்தப்பதவிக்கு சம்பந்தமே இல்லாதவன் போல் இருப்பான். பரிட்சையில் ஒரு கேள்வியை விட்டுவிட்டால் கூட 'ஐயோ பெயில் ஆயிடுவேனோ?!' என்று புலம்பி தள்ளிவிடுவான். நாங்கள் அசால்ட்டாக அரியர் வைத்துக்கொண்டு திரியும் பொது இவன் மட்டும் படிப்புக்கு தத்து கொடுத்த மாதிரி பேசுவது கொஞ்சம் எங்கள் மத்தியில் வெறியைக்கிலப்பும்.
.
மூன்றாண்டு படிப்பு முடிந்ததும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்துசெல்லாமல் வெட்டியாக ஒவ்வொருவர் ஊருக்கும் வீட்டுக்கும் சென்றுகொண்டிருந்தோம். சதீஷ் மட்டும் "டே எங்க வீட்டுக்கு வராதீங்க டா. எங்க அப்பா சத்தம் போடுவாரு" என்று கெஞ்சினான். சரி பய பொழச்சு போகட்டும் என்று விட்டுவிட்டோம். அதற்கு பின் அவனை நாங்கள் பார்க்கவும் இல்லை; அவனைப்பற்றிய எந்த செய்தியும் இல்லை.
.
ஊர் சுற்றுவது போர் அடிக்க ஆரம்பித்ததும் வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசனையில் ஒரு வருடம் கழிந்தது. ஒரு வழியாக படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்தேன். வாரம் முழுதும் நாய் மாதிரி அலைந்து திரிந்து, வார கடைசியில் ரிவ்யுவ் மீட்டிங் என்ற பெயரில் டவுசர் கிழிந்து அலைந்த காலம் அது.
இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ரிவ்யுவ் மீட்டிங் முடிந்து ஒரு சனிக்கிழமை மதியம் வெயிலில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பஸ் ஸ்டாப்பில் பெண்கள் இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே வந்த என் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே நின்றன.
.
அங்கே வெயிலுக்கு நிழலாக தன் பைலை தலைக்கு வைத்துக்கொண்டு ஒரு ஜீவன் பஸ் வருவதற்கு காத்துக்கொண்டிருந்தது. 'அட நம்ம சதீஷு' என்று மனம் ஒரு நொடி மகிழ்ச்சி அடைந்தது.
.
"டே சதீஷ் என்னடா இந்த பக்கம்?"
.
"டே அருண் எப்படி டா இருக்க?" - கண்களில் ஏதோ ஏக்கம் தெரிந்தது.
.
"நான் நல்லா தான்டா இருக்கேன். நீ என்னடா பைல தலைக்கு வச்சுட்டு நின்னுட்டு இருக்க? என்ன விஷயம், இன்னும் வேல கெடைக்கலையா?" சிரித்துக்கொண்டே கேட்டேன்.
.
"பி.எஸ்ஸி. பிசிக்ஸ் க்கு லாம் வேல எங்கயும் கிடைக்கமாடேங்குதுடா. வாழ்கையே வெறுப்ப இருக்குடா" என்று உலக நிலவரம் புரியாமல் அப்பரானியாக அழுதுகொண்டே பேசினான்.
.
"டே லூசுப்பயலே, பிசிக்ஸ்ல தான் வேலைக்கு போகணும் னு ஒக்காந்துக்கிட்டே இருந்தீனா இப்படியே கடைசி வரைக்கும் பைல தலைக்கு வச்சுக்கிட்டு வெயில்ல தான் நிப்ப. நான் சொல்றத கேட்டேனா வேல கெடைக்கும். என்ன சொல்ற?"
.
"எனக்கு எதாவது ஒரு வேல கெடைக்குதே, அதுவே போதும்டா" மனநிம்மதியோடு பதில் சொன்னான்.
.
என் அலுவலகத்திலேயே மார்க்கெட்டிங் வேலை காலியாக இருந்ததால் அவனுக்கு அந்த வேலையை வாங்கிக்கொடுத்தேன். வெறிபிடித்தவன் போல் வேலை செய்தான். ராகேட்டிற்கு பின் பக்கம் இருக்கும் நெருப்பைப்போல அந்த வெறி அவனை 'சர்' என்று மேலே ஏற்றியது.
.
மேலும் மேலும் ப்ரோமோசன் வாங்கிக்கொண்டே ரிஜினல் மேனேஜர் பதவி வரை உயர்ந்து சென்றான். என் கண்முன்னே விக்ரமன் இயக்காத 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் அவன் வாழ்க்கை மூலமாக தெரிந்தது. நான் ஆரம்பத்தில் இருந்த அதே வேலையில் இப்போதும் தொடர்கிறேன்.
.
'சார், நம்ம சதீஷ் சார நீங்க தான் சேத்து விட்டீங்க. இப்போ பாருங்க அவரு உங்களுக்கே மேனேஜர் ஆகிட்டாரு' என்று என்னிடமே வந்து சகதொழிலாளர்கள் சொல்வார்கள். ஆனால் சதீஷ் என் மீது மிகவும் அன்பாக இருந்தான். அதை அன்பு என்று சொல்வதைவிட நன்றிக்கடன் என்று தான் சொல்லவேண்டும். இப்போது வரை நான் அவனை ஒரு நண்பனாக நினைத்ததில்லை, என்னுடன் படித்த ஒருவன் அவன், அவ்வளவு தான். ஆனால் அவனோ என்னை நண்பன் என்ற ஸ்தானத்தை விட ஒரு படி மேலையே வைத்திருந்தான். அவன் திருமணத்திற்கு கூட நான் செல்லவில்லை. என் திருமணத்திற்கு வந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான். எனக்கு அவ்வப்போது 2000, 5000 என்று பணம் கொடுத்து உதவுவான். அவனைப்பொருத்த வரை பணம் ஒரு பொருட்டே இல்லை. எனக்கு பணம் தான் எல்லாம். சில சமயங்களில் நானே நினைப்பேன், 'நாம வேலைக்கு சேத்து விட்ட பய நம்மைவிட இவ்வளவு அதிகமா சம்பளம் வாங்குறானே' என்று.
.
ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஒரு விளையாட்டுப்போட்டி நடந்தது. சினிமாவில் நாம் பார்த்துப்பழகிய விளையாட்டு தான்; பேப்பரில் எழுதி உள்ளதை போல் செய்ய வேண்டும், அல்லது அதில் உள்ள கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். சதீசுக்கு 'நீங்கள் இறக்கும் தருவாயில், சந்திக்க விரும்பும் நபர் யார்? அவரிடம் என்ன சொல்ல விரும்புவீர்கள்?'.
.
அவன் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய் விட்டேன். அவன் சொன்ன பதில் "அருண்". மேலும் "நான் சொல்ல வேண்டியத அவன் கிட்ட சாகும் போது சொல்லிடுவேன். இப்போ மாட்டேன்" என்று முடித்தான்.
.
பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தேன். "இப்போ தான் சார் ஆம்புலன்ஸ் வந்து எடுத்துட்டு போனாங்க" - சுப்பிரமணி.
அவனிடம் மருத்துவமனையை விசாரித்துக்கொண்டு சென்றடைந்தேன். அவன் வீட்டிற்கு கூட இன்னும் தகவல் சொல்லவில்லை. நிலைமை கொஞ்சம் சீரியஸ் என்று அங்கு நடப்பவைகளை பார்த்தாலே புரிந்தது.
.
"டாக்டர் உயிர் பிழைத்துடுவான்ல?" செயற்கை பதற்றத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.
.
"கொஞ்சம் கஷ்டம் தாங்க. நீங்க யாரு, ப்ரெண்டா?"
.
"இல்லல்ல, கூட வேல செய்றவன்"
.
"வீட்டுக்கு இன்பாம் பண்ணிடுங்க சார், சந்தேகம் தான் பொலைக்குறது"
.
'இவன் இறந்து விட்டால் நமக்கு யார் மாச செலவுக்கு பணம் கொடுத்து உதவுவது?' அந்த சூழ்நிலைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பயம் வந்தது எனக்கு.
.
ஐ சி யு வில் இருந்து வெளியே வந்த டாக்டர் என்னிடம், "அவர் உங்க கிட்ட ஏதோ சொல்லணும் னு ஆசை படுறாரு" என்றார்.
.
உள்ளே சென்றேன். "டே அருண், நான் அன்னைக்கு சொன்னேன்ல, சாகும் போது உன்கிட்ட தான் பேசுவேன்னு" திக்கித்திணறி பேசினான். "நான் இப்போவரைக்கும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலடா. நீயும் அதை எதிர் பாக்கல. பட் சொல்ல வேண்டியது என் கடமை டா. நடு ரோட்ல அனாதையா இருந்த நான் இன்னைக்கு இவ்வளவு உயர்ந்த நிலைல இருக்குறதுக்கு நீ தான்டா காரணம். ரொம்ப நன்றிடா. ஆமா நான் உன்கிட்ட சொல்ல நினைச்சது இதத்தான். சாகப்போற நேரத்துல இத விட என்னால உனக்கு ஒன்னும் பண்ண முடியா...." முழுதாக சொல்லாமல் இறந்து போனான்.
.
.
.
இத்தனை வருடங்களில் இப்போது தான் சதீஷ் வீட்டிற்கு வருகிறேன். நடு வீட்டில் நேற்று வரை சதீஷ் என்றும் மேனேஜர் என்றும் இன்று பாடி என்றும் அழைக்கப்படும் அது இருந்தது. ஓரளவு பெரிய வீடு தான். இரண்டு டிவி, இரண்டு பிரிட்ஜ், என்று சகலமும் இரண்டாக இருந்தது.
.
உறவினர்கள் சிலர், "முப்பத்தஞ்சு வயசு கூட இருக்காதேய்யா. சாகுற வயசா இது?" என்று வினவிக்கொண்டார்கள்.
.
"இப்போல்லாம் இந்த வயசுல தான் நோய் வருதுன்னு இல்ல, பொறந்த கொழந்தைக்கே வருது" என்று வேறோருபுரம் அவன் இறப்பின் ரகசியத்தை அலசிக்கொண்டிருந்தார்கள்.
.
நான் அப்படியே சுற்றி வரும் போது பார்த்தேன், போட்டோவில் இவன் ஒரு காரிலும் இவன் மனைவி ஒரு காரிலும் இருந்தார்கள். 'பரவாயில்லையே, ரெண்டு கார் இருக்கா?' என்று எண்ணிக்கொண்டேன்.
.
ஒரு வழியாக வீட்டை சுற்றி முடித்து மீண்டும் பிணம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அங்கு அவன் மனைவி உயிரே போகும் அளவிற்கு அழுது கொண்டிருந்தாள். முப்பது வயதாவது இருக்க வேண்டும். ஆனால் பார்ப்பதற்கு இப்போதும் செய்து வைத்த சிலை போன்று வெண்ணை நிறத்தில் பதினெட்டு வயது பெண் போல இருந்தாள்.
.
'டே இது துஷ்டி வீடு டா. கண்ணை வேறு புறம் திருப்பு' என்று மனம் எச்சரித்தது. முகத்தில் ஒரு செயற்கையான சோகத்தை தற்காலிகமாக குடியேற்றினேன்.
பிணத்தை தூக்கிச்சென்றதும் ஒப்பாரிப்படலம் முடிந்தது. ஆண்கள் எல்லாம் சென்றவுடன் ஒரு தீர்க்கமான முடிவுடன் நான் மெதுவாக சதீஷின் மனைவியிடம் சென்றேன்.
.
"உங்க வீட்டுக்காரர் என்கிட்டே மூணு லட்ச ரூபா வாங்கிருக்காரு. அத திருப்பி கொடுக்குறதுக்குள்ள இப்படி அல்ப்பாயிசுல போயிட்டாரே" என்றேன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.
.
"ஐயோ இருக்குற வரைக்கும் என்ன ராணி மாதிரி வச்சிருந்தீங்களே, இப்போ போகும் போது கடனாளியா ஆக்கிடீங்களே?" என்று கத்தி அழுதாள். அழுதுகொண்டே, "தயவு செஞ்சு உங்க பணத்த அடுத்த வாரம் வந்து வாங்கிக்கோங்க" என்றாள்.
.
"சரிம்மா, நான் அப்போ வரேன்" என்று சொல்லி விடைபெற்றேன், என் நண்பன் சதீஷ் இல்லத்தில் இருந்து.

22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை...

Thursday, June 4, 2009

வாழ்க்கையில் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் உயிரற்ற பொருளை நினைத்து ஏங்கியிருப்போம். இரண்டு வயதில் பக்கத்து வீட்டு குழந்தையின் ரயில் பொம்மை, ஐந்து வயதில் பள்ளி நண்பனின் ரப்பர் வைத்த பென்சில், பத்து வயதில் சைக்கிள், பதினைந்து வயதில் அழகழகான ஆடைகள் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நாம் நினைத்து ஏங்கும் பொருட்கள் பல உண்டு. அவற்றில் சில கிடைத்தாலும், பல நம் கனவுகளில் மட்டுமே இருக்கும். எனக்கும் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆசை இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்தும் போயின. ஆனால் ஐந்து வயதில் இருந்து என்னை பொறாமைப்படவைத்த, ஏங்கவைத்த, அழ வைத்த, சில சமயங்களில் கூனிக்குறுக வைத்த பொருள் ஒன்று உண்டென்றால் அது தொலைகாட்சி பெட்டி தான்.
.
.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் "சந்திரகாந்தா" நாடகம் பார்ப்பதற்கு பக்கத்து வீடே கதி என்று இருப்பேன். மறுநாள் வகுப்பில் நண்பர்களோடு "டே நேத்து அந்த எகு பண்டிதர மாட்டிவிட்டுட்டான் டா" என்று கத பேசுவதில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. ஒரு வாரம் பார்க்க முடியாவிட்டாலும் எதையோ இழந்தது போன்று மனம் வருத்தப்படும்.
.
.
மகாபாரதம் ஒளிபரப்பான சமயம் நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன். அதை மனதில் வைத்து அவள் என்னை ஒரு முறை மகாபாரதம் பார்க்க அவள் வீட்டிற்குள் நுழையும் பொழுது "என் கூட சண்ட போட்டில, இனிமேல் எங்க வீட்டுக்கு டிவி பாக்க வராத" என்று அதட்டினாள். அதட்டினால் என்று சொல்வதை விட வீட்டில் இருந்து தள்ளி விட்டாள் என்று சொல்லலாம். அன்று அழுதுகொண்டே அவள் வீட்டில் இருந்து சென்ற நான் என் அம்மாவும் அவள் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் வீட்டிற்கு அதற்கு பின் செல்லவே இல்லை. சக்திமான் போடும் போது கூட நான் அவர்கள் வீட்டிற்கு சென்றது இல்லை. இதுவரை சக்திமான் தொடரை ஒரு முறை கூட நான் பார்த்ததும் இல்லை.
.
.
என் அப்பாவிடம் மட்டும் கிடைக்காது என்று தெரிந்தே டிவி வாங்க வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். "ஆமா இப்போ அது ஒன்னு தான் கொறச்சல் நமக்கு" என்று எங்கிருந்தாவது அம்மாவின் குரல் தவறாமல் கேட்கும். அம்மாவிற்கு ரேடியோ கேட்டுக்கொண்டே தீப்பெட்டி ஓட்டினால் பொழுது போய்விடும். எனக்கு அப்படி இல்லையே? "டிவி வாங்குனா அம்மாவ பாக்க விடக்ககூடாது" என்று தம்பியும் நானும் சேர்ந்து சத்தியம் செய்து கொண்டோம்.
.
.
இப்படியே என் பத்தாம் வகுப்பு வரை காலம் ஓடியது. என் சித்தி குடும்பத்துடன் எங்கள் ஊரில் வந்து குடியேறினார்கள். இதில் அதிகம் சந்தோசப்பட்டவன் நான் தான், ஏனென்றால் சித்தி வீட்டில் டிவி உண்டு, கலர் டிவி அதுவும் கேபிள் டிவி. வாராவாரம் சித்தி வீடே கதி என்று இருக்க ஆரம்பித்தேன். "உன் சித்தப்பாவே வியாபாரம் நொடிச்சு போயி தான் இங்க வந்துருக்காரு, நீ வேற வாராவாரம் போயி அவங்கள தொல்ல பண்ண வேண்டாம்" என்று அம்மா அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.
.
.
ஒரு இரண்டு வருடம் டிவி பார்க்கும் ஆசையை அடக்கிக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் பார்த்தா சேரன் ஆட்டோகிராப் படம் எடுத்துத்தொலைவார்? தியேட்டரில் படம் பார்த்த நாள் முதல் அந்த படத்திற்கு நான் அடிமை ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். அப்போது விஜய் டிவி இல் மெட்டுக்கள் புதுசு என்றொரு நிகழ்ச்சி மதியம் போடுவார்கள். அதில் ஆட்டோகிராப் பாடலும் தினமும் வரும் என்பதால் மார்ச், ஏப்ரல் மாத வெயில்களிலும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் அழுத்தி நண்பனின் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பேன். ஒரு கட்டத்தில் அவன் "டே நீ மதியம் சோறு சாப்புடற டயத்துல டிவி பாக்க வரது எங்க வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி இருக்கு டா" என்றான். அன்று விட்டவன் தான் நண்பர்கள் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை.
.
.
மூன்று வருடம் உள்ளூரில் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, அடுத்து இரண்டு வருடம் வெளியூரில் படிக்கும் போதும் சரி கல்லூரி வாழ்கையின் இன்பத்தில் டிவி இரண்டாம் பட்சம் ஆனது. ஆனாலும் பார்ப்பவர்கள் எல்லாம் "என் வீட்டில் டிவி இல்லையா?" என்று ஆச்சர்யமாகவும், நம்ப மறுப்பது போலவும் கேட்கும் போது டிவி இல்லாததை நான் ஒரு கொலைக்குற்றமாக கருதினேன்.
.
.
ஒரு வழியாக சென்ற வாரம் எங்கள் வீட்டில் டிவி வாங்கலாம் என்று முடிவெடுத்தோம். 7500 ருபாய் கொடுத்து LG Golden Eye TV வாங்கினோம். இந்த செய்தியை நண்பன் ஒருவனிடம் உடனடியாக கூறினேன். அவன் "டே அது பழைய மாடல் டா. அத வாங்குனதுக்கே நீ இவ்ளோ எபக்ட் உட்றியா?" என்று மூக்கறுத்தான். அவனுக்கு எங்கே தெரியும் இது எனது பல வருட ஆசை என்று?
.
.
நான் மூன்றாம் வகுப்பில் ஆசைப்பட்ட சைக்கிள் ஏழாம் வகுப்பில் கிடைத்தது. அதற்கு முன்பே ஐந்து வயதில் ஆசைப்பட்ட டிவி இப்போது 22 வயதில் கிடைத்துள்ளது. ஆசைப்பட்ட பொருள் தாமதமாக கிடைப்பதிலும் ஒரு சுகம் தான். என்ன, இப்பொழுது சந்திரகாந்தா கதையை பேச அந்த பழைய நண்பர்கள் இல்லை.. என்னை வீட்டை விட்டு அனுப்பிய அந்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் செயலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் தான் இருக்கிறது. அந்தப்பெண்ணும் எங்கள் வீட்டில் டிவி வாங்குவதற்கு ஒரு வகையில் உதவியிருக்கிறாள்.
.
.
அப்பா தினமும் இரவு எங்கள் அனுமதியுடன் கொஞ்ச நேரம் பழைய பாடல்கள் பார்ப்பார். என்ன டிவி வந்து என்ன பண்ண? அம்மாவிற்கு இப்போதும் ரேடியோ தான் உற்ற நண்பன். "போடா டிவி பாத்துகிட்டே தீப்பெட்டி ஒட்ட முடியல" என்று சாதாரணமாக சொல்கிறார். எப்படி இந்த அம்மாமார்களால் மட்டும் முடிகிறதோ?

சென்னை.....

Wednesday, April 29, 2009

நான்கு மாதங்களுக்கு முன் வேலை தேடி சென்னைக்கு சென்றேன். சென்னைக்கு நான் செல்வது அதுவே முதல் முறை. பேருந்தில் செல்லும் பொது பலவிதமான கனவுகளில் மூழ்கியிருந்தேன். என்ன செய்வதற்காக சென்னை செல்கிறேனோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொண்டே பேருந்தில் செல்கிறேன் (தெனாவட்டு, திருப்பாச்சி, தூள், போன்ற படங்களின் பாதிப்பு).
.
தாம்பரத்தில் இறங்கி விட்டேன். "நீ தாம்பரத்துல இறங்கி நிக்கும் போது உன் பஸ் கிட்ட பாரு, நான் நின்னுட்டு இருப்பேன் உனக்காக" என்று சொன்ன உயிர் நண்பன் அரைமணி நேரமாகியும் வரவில்லை. இந்த அரை மணி நேரத்தில் அவனுக்கு இருபத்தி ஏழு முறை மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன். சொல்ல மறந்துவிட்டேனே, அவன் டி .சி .எஸ் கம்பென்யில் வேலை செய்கிறான். 30,000 சம்பளம் என்று நினைக்கிறேன்.
.
ஒரு பெரிய கிராமத்தின் வாரச்சந்தை போல் அந்த ஊர் காலை ஏழு மணிக்கு காட்சி அளித்தது. மாட்டு வண்டிகளுக்கு பதில் ஷேர் ஆட்டோ, டிராக்டர் பேருந்துகளாக. போன் சிணுங்கியது. என் உயிர் நண்பன் தான் அழைக்கிறான்.
.
"டே, நீ அப்படியே அந்த ரயில்வே ஸ்டேஷன் வழியா பின் பக்கம் வந்தீனா, ஒரு பஸ் ஸ்டாண்ட் வரும். அங்க T51 பஸ் புடிச்சி சோழிங்கநல்லூர் டிக்கெட் எடுத்துரு டா. நான் பஸ் ஸ்டாப் வந்து உன்ன பாக்குறேன்."
.
"எனக்கு பாதை தெரியாது டா"
.
"டே நீ இப்போ மெட்ராஸ் வந்துட்ட. இதெல்லாம் எப்போ கத்துக்குறது?"
.
"இல்லடா உங்க ஏரியா எனக்கு தெரியாதே?"
.
"ஒரு டோல் கேட் வரும், அடுத்த ஸ்டாப் இறங்கு"
.
நான் அடுத்து என்ன சொல்கிறேன் என்பதை அறிய விரும்பாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
.
ஒரு வழியாக அங்கு இறங்கி, அவனை சந்தித்து அவன் அறைக்கு சென்றோம். குளித்து முடித்து விட்டு சாப்பிட சென்றோம். 120 ரூபாய் பில் வந்தது.
.
கடைக்கு வெளியில் வந்து சொன்னான், "டே இனிமேல் உன் காசுல நீ சாபிடு என் காசுல நான் சாபிடுறேன்"
.
எப்படி முடியும் என்னால்? கையில் இருப்பதோ வெறும் 1500 ரூபாய். இதை வைத்து இந்த ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அவனிடம் முடியாது என்றா சொல்ல முடியும்? "சரிடா" என்றேன்.
.
மறுநாள் வேலை தேடி நுங்கம்பாக்கம் சென்றேன். இரண்டு கம்பெனி மட்டுமே செல்ல முடிந்தது. சாதகமாக பதிலும் இல்லை அங்கு. ஆண்களும் பெண்களும் பைக் ல் ஒன்றாக கட்டிப்பிடித்து போகும் போது எரிச்சலாக வந்தது. மாலை எட்டு மணிக்கு அறைக்கு வந்தேன். இன்றைய செலவு மட்டும் 120 ரூபாய்.
.
"இங்கெல்லாம் டவுன் பஸ் ஓடாதா டா? டிக்கெட் எக்குதப்பா இருக்கு?"
.
"எல்லாமே டீலக்ஸ் பஸ் தான்"
.
இதே நிலைமையில் போனால் என்னால் ஒரு வாரம் கூட சென்னையில் தாக்கு பிடிக்க முடியாது என்று அறிந்தேன். ஆனால் வேலை இல்லாமல் மட்டும் ஊருக்கு திரும்பக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். தினமும் ஒரு வேளை தான் சாப்பிட்டேன். வண்டியில் செல்வோர்களிடம் லிப்ட் கேட்க கற்றுக்கொண்டேன்.
.
எவ்வளவு தான் சிக்கனமாக இருந்தாலும் என்னால் 15 நாட்களுக்கு மேல் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. கையில் இருந்த காசெல்லாம் கரைந்தது. திரும்பி செல்ல பணமும் இல்லை மனமும் இல்லை. யாரைப்பார்த்தாலும் எரிச்சலாக வந்தது எனக்கு. இந்த ஊரில் காசு இல்லாதவனால் பிழைக்க முடியாது, காசுக்கு மட்டுமே இங்கு மதிப்பு என்று புரிந்து கொண்டேன். நண்பன் என்னிடம் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. அறைக்கு வந்தவுடன் காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டான் என்றால் நான் தூங்கும் வரை பேசுவான். அப்படி யாருடன் பேசுகிறான் என்றே தெரியாது. ஒரு பெண் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். அந்த பெண்ணையும் பல நாட்கள் திட்டியுள்ளேன். 'நம்மட்ட ஒரு பொன்னும் பேச மாட்டேன்குது, இவன்ட காசு இருப்பதால் தான் வலியுரா. நம்மட்ட இருந்தா நம்மட்டையும் வலியுவா' என்று மனதுக்குள் பலவாராக நினைத்துக்கொண்டே தூங்கிவிடுவேன்.
.
'இது தேராத கேசு' என்று சென்னை என்னை ஏளனம் செய்வது போல் இருந்தது. கழுத்தில் யாராவது கம்ப்யூட்டர் கம்பெனி அட்டையை தொங்க விட்டிருந்தால் மனதிற்குள்ளேயே கெட்ட வார்த்தையில் வைவேன் 'இவர்களால் தான் இங்கு விலைவாசி ஏறி விட்டது, ஏழை பிழைக்க முடியவில்லை, கலாச்சாரம் கேட்டுவிட்டது என்று பலவாறாக'.
.
இனிமேலும் இங்கு இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்ற நிலை வந்தவுடன் நண்பனிடம் 300 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
.
.
.
இப்போது இரண்டு வாரங்களுக்கு முன் எனக்கு சென்னையில் ஒரு வேலை கிடைத்துவிட்டது. மாதம் 18000 ரூபாய் சம்பளம். நேற்று தான் நண்பனின் அறைக்கு வந்தேன். நண்பன் என்னிடம் பல மணிநேரம் செலவழித்து பேசிக்கொண்டிருந்தான். டீலக்ஸ் பேருந்தில் சென்றேன். மதியம் அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டேன். ஆண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வண்டியில் பெண்கள் செல்வது அவர்களின் அந்தரங்க உரிமை என்று இப்போது நினைக்க ஆரம்பித்து விட்டேன். சென்னை இப்போது எனக்கு மிக அழகாக தெரிகிறது!

"பேரை சொல்லவா?" பெயர் காரணத்தை சொல்கிறேன்...

Friday, April 24, 2009

சென்ற பதிவில் மோகனா என்ற பெயரை பயன்படுத்தியதற்கு நண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அப்படி பெயர் உள்ள ஒரு பெண் எங்கள் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு மாதமாக அறியப்பட்டதால்.
என் அம்மா என்னை வயிற்றில் சுமந்த போது, பெண் குழந்தை தான் தனக்கு பிறக்கும் என்ற நம்பிக்கையில் மோகனா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் செய்த புண்ணியம் என்னை அவர்களுக்கு பிறக்க செய்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததில் என் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அவர் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ராம் குமார் என்ற பெயர் வைக்க நினைத்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அவர் சிவாஜியின் தீவிரமான ரசிகர். தன்னை சிவாஜியாக நினைத்து தனக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அவர் தலைவரின் முதல் குழந்தையின் பெயரை வைக்க நினைத்திருந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'முன்னூறு ரூபாய் கட்டினால் தான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும்' என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அந்த முன்னூறு ரூபாய்க்கு அவர் மூன்று நாள் எங்கெங்கோ அலைந்து யார்யார் காலையோ பிடித்து எப்படியோ கட்டிவிட்டார். உற்ற நண்பர்கள் நெருங்கிய சொந்தங்கள் கூட எங்களுக்கு உதவாத சமயம் அது. இப்போதும் நான் பிறந்த தருணத்தை வீட்டில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கஷ்டத்தில் அவர் 'ஆமா பொறக்கும் போதே அப்பன காசுக்காக நாயா அலையவுட்டுருக்கு, இது சிவாஜி பையனோட பேர வேற வைக்கனமாக்கும்?' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் இப்படியெல்லாம் விபரீதமாக யோசிக்காமல் எனக்கு இந்த அழகான பெயரை வைத்தார்.
சிவாஜி மேல் இவ்வளவு பைத்தியமாக என் அப்பா இருப்பதற்கு காரணம் எங்கள் பகுதி மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாதது தான். சினிமா தான் ஒரே பொழுதுபோக்கு. வார கடைசிகளில் தீப்பெட்டி ஒட்டிய காசில் பெண்களும் வாரநாட்களில் பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சகத்தில் கிடைத்த பணத்தில் ஆண்கள் ரெண்டாம் ஆட்டமும் தவறாமல் சினிமா பார்த்த காலம் அது. சினிமா கதாப்பாத்திரங்களும், நட்ச்சத்திரங்களும் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் தங்கியிருந்தனர்.

நான் பிறந்த ஐந்து வருடங்களில் தம்பி பிறந்தான். அவனுக்கு பிரபு என்று பெயர் வைக்க விரும்பினார் அப்பா. 'குஷ்பு மாதிரி யார் கூடையாவது ஓடிப்போய்விடுவான்' என்று என் அம்மா பயந்ததால் அவனுக்கு வேறு பெயர் வைத்தார்கள்.

இதனால் நான் சொல்ல வருவது யாதெனில் மோகனா என்ற பெயர் எனக்கு இப்போது பழக்கமானதல்ல. இது இருபத்திமூன்று வருட பழக்கம். கதையில் அந்த பெயரை மாற்ற மாட்டேன்.
பின் குறிப்பு:
அந்த கதை என் மனதில் வேறு மாதிரி ஆரம்பித்தது. எழுதி முடித்து பார்த்த போது 'ஹே ராம்' போல இருந்தது. இனி இது போன்ற தவறு நிகழாது.

பேரை சொல்லவா?

Wednesday, April 22, 2009

"ஏங்க இந்த ஊரு ரொம்ப அழகாவும் அமைதியாவும் இருக்குல்ல?" ஜன்னலில் திரையை மாட்டிக்கொண்டே கேட்டாள் என் மனைவி மோகனா.
.
"ஆமாம்" என்று சந்தோசமாக தலையாட்டினேன்.கல்யாணம் ஆகி மூன்றே மாதங்களில் இப்படி பெயரே தெரியாத ஒரு வடஇந்திய ஊருக்கு, புது மனைவியோடு மாற்றலானால் யாருக்குத்தான் இருக்காது சந்தோஷம்? தனிமையில் இந்த ஊரில் மூன்று பகலும் இரண்டு இரவும் அவளுடன் கழித்த கிறக்கமும் சேர்ந்து கொண்டதால் மனைவிசொல் மந்திரமாகவே பட்டது எனக்கு. நாளை வெள்ளிக்கிழமை; வேலையில் சேரவேண்டிய நாள். அடுத்து சனி, ஞாயிறு. மீண்டும் அதே கிறக்கம் வந்துவிடும் எனக்கு.
.
"நாளைக்கு ஆபீஸ் கிளம்பணும், இல்லையா? அதனால நேத்து மாதிரி இல்லாம இன்னைக்கு நைட் சீக்கிரம் தூங்குங்க"
.
"இல்ல. நான் லேட்டா தூங்குனாலும் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேன்" குறும்பாக சொன்னேன்.
.
"அப்போ இன்னைக்கு ராத்திரியுமா?" சலிப்பாக சொல்வது போல் நடித்தாள். "உங்களுக்கு வேற நெனப்பே இருக்காதா?"
.
"எதுக்கு இருக்கணும்? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வேற நெனப்பு எனக்கெதுக்கு?"
.
"ஐயோ ராமா....""என்ன, கூப்பிட்டியா?"
.
"ராமானா நீங்க ஒரு ஆள் தானா? நான் அந்த கடவுள கூப்பிட்டேன். ஆபீஸ்ல எப்படி தான் தனியா இருக்கீங்களோ?" .
"வேணும்னா ஆபிஸுக்கும் வந்துடேன். அங்க எனக்கு தனி கேபின் தான்"
.
"சீ.. நெனப்ப பாரு"
.
"எல்லாம் நல்ல நெனப்பு தான்" என்று கூறிக்கொண்டே அவளை அணைத்தேன் மெதுவாக. இனிமையாக கழிந்தது இரவு.
.
மறுநாள் வேலைக்கு கிளம்புகிறேன். ஷூவை துடைத்து கொண்டே,"பாஷை தெரியாத ஊரு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். புது மனுசங்க. கொஞ்சம் பாத்து பழகு"
.
"இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லணும். நீங்க தான் வெளிய போய் நாலு பேர்கிட்ட பழகப்போறீங்க. நான் வீட்ல தான இருக்கப்போறேன்?"
.
வருத்தமுடன், "இல்லமா, நம்ம ஊர்லனா வீட்ல அம்மா இருப்பாங்க துணைக்கு. இங்க புது ஊர்ல உன்ன தனியா விட்டுட்டு...."
.
"காட்டுக்கா போகப்போறீங்க? இந்தா இருக்குற ஆபிஸுக்கு போயிட்டு சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துரப்போறீங்க. இதுக்கு இவ்வளவு பில்ட்டப்பா?" வெளியில் பயப்படாதது போல் காட்டிக்கொண்டாலும் மோகனாவுக்கும் உள்ளூர பயம் இருந்தது.
.
கணவன் சென்றதும் கதவை தாழிட்டு கொண்டாள். காலை மணி பத்திலிருந்து மாலை ஆறு ஆகும் வரை எங்கள் இருவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுக்கு மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொண்டோம். உலக கடிகாரத்தின் முள்ளை யாரையாவது வைத்து வேகமாக தள்ளலாமா என்று யோசித்தேன். நல்லவேளை, அதற்குள் மணி ஆறு அடித்தது. விரைந்தேன் வீட்டுக்கு. காலிங் பெல் அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" உள்ளிருந்து ஹிந்தி குரல். மோகனா தான். அவள் ஹிந்தி பேசுவதை கேட்க எனக்கு சிரிப்பாக வந்தது. மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினேன்.
.
"கோன் ஹை?" சத்தமாக கேட்டாள். அவள் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தது.இன்னும் கொஞ்சம் விளையாடி பார்க்க நினைத்தேன். இப்போது பலமாக கதவை தட்ட ஆரம்பித்து விட்டேன். பயத்தில் அவள் நடுங்க ஆரம்பித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது என் மொபைல் போனுக்கு அவள் கால் செய்கிறாள். 'கண்கள் இரண்டால்...' ரிங்டோன் பலமாக கேட்டது.ஜன்னல் திறக்கப்படும் சத்தம் கேட்டது. கொடிக்காப்பழம் போன்ற இரண்டு கண்கள் லேசாக திறந்த ஜன்னல் வழியாக என்னை பார்த்தன. அந்த கண்களுக்கு 'இவன் நமக்கு பரிச்சயமானவன்' என்று தெரிந்திருக்க வேண்டும். கதவை திறந்தாள்.
.
"உங்களுக்கு எதுல விளையாடுறதுன்னே தெரியாதா?" கோபமாக கேட்டாள்.
.
"ரொம்ப பயந்துட்டியா செல்லம்?"
.
"அப்பறம் பயப்படாம என்ன செய்யுறதாம்?"
.
"சாரி.. சாரி.. ஆமா, ஹிந்தியெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?"
.
"சொல்லவே மறந்துட்டேன்ல?! நாம இந்த ஊருக்கு வாரோம்னு தெரிஞ்ச உடனே எங்க அப்பா இந்த புக் வாங்கி கொடுத்தார்". முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகத்தை எடுத்து வந்து காட்டினாள்.
.
"ஏன்டி, புதுசா கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஒரு அப்பா கொடுக்குற சீதனமாடி இது?"
.
"அம்பது பவுனும் போட்டு தானடா அனுப்புனாரு?"
.
"அடிங்க.. யாரப்பாத்து டான்னு சொல்ற?"
.
"டி போட்டு பேசாதிங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்? இனிமேல் டி போட்டு பேசுனா, பதிலுக்கு நானும் டா போட்டு பேசுவேன்!"
.
"சரி, சரி, ரொம்ப பேசாத. வீட்டுக்கு என்னென்ன சாமான்லாம் வாங்கனும்னு ஒரு லிஸ்ட் போட்டு வை. நாளைக்கு போய் வாங்கலாம்".
.
.
காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங் முடிய இரவு பத்து மணி ஆகிவிட்டது! வீட்டுக்கு வந்து சேர மணி பதினொன்று. இவளுடன் இனி சேர்ந்து கடைக்கு போவதில்லை என்று நாற்பத்தி ஒன்றாவது முறையாக சபதம் போடுகிறேன்.
.
கதவை திறக்கும் போது சொன்னாள், "ஏங்க பால் வாங்க மறந்துட்டேன். இங்க பக்கத்துல எங்கயாவது..."
.
"உங்க அப்பாவா இந்த ஊர்ல பால்பண்ணை நடத்துறாரு எப்போனாலும் வாங்குறதுக்கு? அதெல்லாம் நாளைக்கு காலைல பாத்துக்கலாம். தூக்கம் வருது எனக்கு". என்னை பார்த்து முறைத்து கொண்டே தூங்க சென்றாள்.
.
மறுநாள் காலை."ஏங்க மணி எழாகிடுச்சு. போய் பால் வாங்கிட்டு வாங்க. இன்னைக்கு ஞாயித்து கிழம, அப்படியே கறியும் வாங்கிட்டு வந்துடுங்க"
.
"எல்லாம் அப்பறம் பாக்கலாம். தூங்க விடு மனுஷன"
.
"இப்போ எந்திரிக்கிறீங்களா, இல்ல மூஞ்சில தண்ணி ஊத்தவா?" சொல்லிக்கொண்டே இரண்டு சொட்டு நீரை என் முகத்தில் தெளித்தாள்.
.
"ராட்சஸி, இப்படி என்னை கொடுமைப்படுத்துறியே?" கோபமாக இருப்பது போல் நடித்தேன். மனதுக்குள் 'இந்த பெண்கள் மட்டும் இரவு எவ்வளவு தாமதமாக தூங்கினாலும், காலையில் அலாரம் வைத்தது போல் எழுகிறார்களே?' என்று வியந்தேன். மெதுவாக கண் விழித்து மோகனாவை பார்த்தேன்.
.
இன்று மோகனா மிக அழகாக தெரிந்தாள். காரணம் நான் வாங்கி தந்த வெள்ளை சுடிதார். திருமணத்திற்கு பின் இன்று தான் அவள் முதல் முறையாக சுடிதார் அணிகிறாள். அதுவும் இந்த வெள்ளை சுடிதாரில் பாலுடை அணிந்த பளிங்கு போல் இருந்தாள்.என் கையில் கூடையை திணித்து, "போய் வேகமா வாங்கிட்டு வாங்க. சமையல் செய்யணும்", டீச்சர் போல் கண்டிப்பு காட்டினாள்.
.
வேண்டாவெறுப்பாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். கேட்டை திறந்து நடக்கும் போது "பைக்ல போகலயா?", வாசலில் நின்று கொண்டு மோகனா கேட்டாள்.
.
"வேண்டாம், இது அப்படியே வாக்கிங் போன மாதிரியும் இருக்கும்".
.
"சரி சரி வேகமா வாங்க"தெருவை தாண்டி நடந்த நான், ஊரில் ஒரு விதமான மயான அமைதி இன்று நிலவுவதை உணர்ந்தேன். ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. தெரு முக்கில் எப்போதும் திறந்திருக்கும் பீடா கடை கூட இன்று மூடப்பட்டிருந்தது. 'சரி பஜார் வரை சென்று பார்க்கலாம்' என்று நேராக நடந்தேன்.பஜாருக்கு செல்லும் வழியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு வழியாக பஜாரை அடைந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே இங்கும் கடைகள் அனைத்தும் பூட்டியே இருந்தன. டிசம்பர் மாத பனி அமைதியாக பெய்துகொண்டிருந்தது. இந்த பனியும் மயான அமைதியும் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறி தான் என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
.
மோகனாவிற்கு போன் செய்ய எண்ணி பாக்கெட்டில் கை விட்டு செல் போன் எடுத்தேன். அப்போது தான் அது என் கண்ணில் பட்டது. தூரத்தில் ஒரு கசாப்பு கடையில் பெரிய ஆடு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால் கடையில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அந்த கடையை நோக்கி நடந்தேன். பக்கத்தில் செல்ல செல்ல அங்கு தொங்குவது ஆடில்லை என்பது தெரிந்தது. கடையை நெருங்கிப்போய் பார்த்தேன். அங்கே தொங்கியது தோல் உரிக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு மனித உடல்! என் உடலில் தீக்குழம்பு ஓடுவது போல் மிரண்டேன்.
.
கையில் இருந்த செல் போனை தற்செயலாக பார்த்தேன். என்னுடைய ஸ்க்ரீன்சேவர் "Dec. 6" என்று காட்டியது! "இன்னைக்கு டிசம்பர் ஆறா?" மெதுவாக முணுமுணுத்தேன். வடநாட்டில் டிசம்பர் ஆறில் கலவரம் மிகுந்து இருக்கும் என்று நாளிதழ்களில் படித்தது எனக்கு தேவையில்லாமல் இப்போது ஞாபகம் வந்தது. திடீர் என்று சத்தம் கேட்டது. ஒரு கும்பல் கத்திக்கொண்டே ஓடி வருவது போன்ற சப்தம். பயத்தில் தொண்டை அடைத்து கொண்டு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன எனக்கு. அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேடினேன். ஒரு கடையில் போடப்பட்டிருந்த மரப்பெட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டு அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தேன் மனதில் பயத்தோடு.
.
ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபனை பதினைந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி வந்தது. கும்பலில் சிலர் காவி டர்பன் அணிந்திருந்தனர், சிலர் நெற்றியில் திலகம் இட்டிருந்தனர். துரத்தப்படும் வாலிபன் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். அவனை ஒரு மூலையில் வைத்து இருவர் பிடித்து கொண்டனர். அவன் திமிறினான், கெஞ்சினான், கதறினான். மரண பயத்தின் முகவரி தெரிந்தன அவன் முகத்தில். அந்த கும்பலின் கண்களிலோ கொலை வெறி. கும்பலில், நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு முரட்டு ஆள், அந்த முஸ்லிம் இளைஞன் மீது பெட்ரோல் ஊற்றினான்.
.
பின் அவனிடம் கசாப்பு கடையில் தொங்கும் பிணத்தை காட்டி "இவரை கொன்று எங்களிடம் சவால் விட்டீர்களே, அந்த சவாலுக்கு பதில் சொல்லும் விதமாக இன்னும் சிறிது நேரத்தில் நீ இருப்பாய்" என்று ஹிந்தியில் கூறிக்கொண்டே குரூரமாக தீயை பொருத்தி போட்டான். அந்த இளைஞன் மரண ஓலமிட்டான்.
.
உறைந்து போன நான் இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டே, "நான் பத்திரமாய் வீடு போய் சேர வேண்டும் கடவுளே" என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். என் கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது. அந்த கொலைவெறி பிடித்த கும்பல் மெதுவாக கலைந்து செல்கிறது.
.
"நாம் க்யா ஹே?" என்ற குரல் என் பின்னால் கேட்டது. திரும்பி பார்த்தேன். அந்த கும்பலில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். அவன் கண்களில் மீண்டும் கொலை வெறி தெரிந்தது. கண் முன் மரணதேவன் நிற்பது போல் இருந்தது.மீண்டும் கேட்டான், "நான் க்யா ஹே?"
.
ஏற்கனவே உலர்ந்து போன நாக்கு குளறியது. திக்கி திணறி சொன்னேன், "ராம்".
.
கேட்டவனின் முகத்தில் இருந்த குரூரம் மறைந்து புன்னகை லேசாக தெரிந்தது. "ராம்?" என்றான் ஆச்சரியமாக. என் தோளில் கை போட்டு ஹிந்தியில் கேட்டான், "இன்று எதற்கு வெளியில் வந்தாய்?"
.
"இந்த அளவிற்கு கலவரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை" இன்னும் பயம் தெளியாமல் பதில் சொன்னேன்.
.
"ரொம்ப பயந்துடியா?"
.
"நான் சினிமாவில் மட்டும் தாங்க கொலையெல்லாம் பாத்துருக்கேன்", நான் ஒரு அப்பராணி என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இப்படி சொன்னேன்.
.
அவன் சிரித்துக்கொண்டே, "இது கொலை இல்லையப்பா, வதம்! நம்ம இனத்த அழிக்க நினைக்குற மிருகங்கள வதம் பண்றோம்".
.
இப்போது இன்னும் ஒரு வாலிபனை இழுத்து வந்திருந்தார்கள் அங்கே. என்னிடம் கேட்டது போலவே "நாம் க்யா ஹே?" என்றான். பல முறை கேட்டும் அந்த இளைஞன் பதில் சொல்லாததால் அவனுடைய கால்சட்டையை அவிழ்த்தனர். எதையோ கண்டுபிடித்தது போல, சற்று நேரத்து முன் நடந்த குரூரத்தை மீண்டும் ஒரு முறை நடத்தினர்.
.
கடமையை முடித்துக்கொண்டு, "நாம் ஒரு முறை இவர்கள் மசூதியை இடித்ததற்கு இவர்கள் எத்தனை முறை நம் மக்களை குண்டு போட்டு அழிப்பார்கள்?" என்று மீண்டும் அவன் பக்கம் உள்ள ஞாயங்களை என்னிடம் சொன்னான்.
.
"நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்"
.
"ஏன்? நம் கடமையை பார்க்க வரவில்லையா?"
.
"என் மனைவி தனியாக இருக்கிறாள்" என்று சொல்ல நினைத்தேன். "எனக்கு பயமாக இருக்கிறது"
.
சிரித்து கொண்டே முகத்தை தீர்க்கமாக வைத்துக்கொண்டு, "நான் எதற்காக பயப்பட வேண்டும்? இது நம் தேசம். நீ யாருக்கும் பயப்படாதே. சென்று வா"
.
ஒன்றும் பேசாமல் வேகமாக நடக்க ஆரம்பித்த என்னை மீண்டும் ஒரு முறை அழைத்து, "யாரவது உன்னிடம் பெயர் கேட்டாள் யோசித்து பதில் சொல்". எச்சரித்தான்.'
.
சரி' என்று மண்டையாட்டி விட்டு வீடு நோக்கி விரைந்தேன். அப்போது இன்னொரு தெருவில் நான் ஏற்கனவே கண்டு கேட்ட வசனங்கள் மீண்டும் ஒரு முறை என் முன் உரையாடப்பட்டன. பெயர் மட்டும் வேறாக இருந்தது.
.
"நாம் க்யா ஹே?" மூர்க்கமான குரல்.
.
"கிஷோர்" பயத்தின் முகவரி. எரித்து விட்டார்கள். இந்த கும்பலில் பலரும் தாடியுடன் இருந்தார்கள். எரிந்து கொண்டிருப்பவன் நெற்றியில் திலகம் இருந்தது.
.
'எப்படியாவது வீட்டுக்கு போய்விட வேண்டும்'. யார் கண்ணிலும் படாமல் வேகமாக ஓடினேன். என்னுடைய இரண்டு கால்களையும் பயம் என்னும் கருவி செலுத்தியது. ஒரு வழியாக என் வீடு இருக்கும் தெருவை அடைந்தேன். சிறுது நேரத்திற்கு முன் நான் பார்த்த தெருவா இது என்று சந்தேகப்படும் படியாக இருந்தது தெரு. ரத்தக்கறைகள், பிணங்கள், தீ ஜ்வாலைகள், என்று அழிவின் அடையாளமாய் இருந்தது. சிறிது தூரத்தில், 'நங் நங்' என்று சத்தம் கேட்டது.சத்தம் வந்த திசையில் பார்த்தேன்.
.
சிறுது நேரத்திற்கு முன் என்னிடம் பேசிக்கொண்டிருந்த காவி டர்பன் அணிந்திருந்தவனும், அவனுடன் சிலரும் என் வீட்டுக்கதவை கடப்பாரையால் பெயர்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் என் வண்டி எரிந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள்ளிருந்து மோகனாவின் அலறல் சத்தம் கேட்டது. "அய்யோ மோகனா...." வீட்டை நோக்கி வேகமாக ஓடினேன்.


அப்போது என் பின் மண்டையில் ஏதோ ஒன்று பலமாக தாக்கியது. "அம்மா" கீழே சரிந்தேன்.

கீழே விழுந்தாலும் என் கண்கள் சுற்றி நடப்பவற்றை கண்காணித்தன. கண்களை தவிர வேறு பாகங்கள் அசைய மறுத்தன என் உடம்பில். என்னை சுற்றி ஒரு கும்பல் நிற்பதை உணர்கிறேன். சிலர் தாடியோடு, சிலர் கையில், தடியோடு.
.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டுக்கதவை பெயர்ப்பவன் என்னைப்பார்த்து உதவுவான் என்று நினைத்தேன். ஒரே ரத்தம் அல்லவா? ஆனால் அவன் இங்கு நடப்பதை கண்டும் காணாதது போலிருந்தான். எதிரிகளை வதம் செய்யாமல் என் வீட்டின் கதவை பலமாக உடைக்க ஆரம்பித்தான். மோகனாவின் அலறல் சத்தம் கூடியது.
.
"மோகனா எப்படியாவது தப்பித்துவிடு" கண்களின் ஓரம் நீர் கசிகிறது.
.
என் முகத்தில் தடியால் ஒரு அடி விழுந்தது. மீண்டும் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
என் பாகெட்டில் மொபைல் போன் சிணுங்கியது. அது மோகனா தான். என்ன செய்ய முடியும் என்னால்? வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு விட்டது. இப்போது மோகனாவின் அலறல் கெஞ்சுவதாய் இருந்தது.
.
சிணுங்கும் போனை எடுத்து எரிந்து, என் வயிற்றில் ஓங்கி எத்தினான். வலிக்கவில்லை எனக்கு.
"நாம் க்யா ஹே?"
.
வீட்டு ஜன்னலில் சிறிது நேரத்திற்கு முன் மோகனா அணிந்திருந்த வெள்ளை சுடிதார் கிழிந்து தொங்குகிறது. இப்போது அவளின் அலறல் அழுகையாக மாறியது. இந்த ஊரையே உதவிக்கு அழைப்பது போல் கெஞ்சியது.
.
கன்னத்தில் அறைந்து கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
வீட்டில் அதிகரித்த அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. உள்ளிருந்த ஆண்கள் வெளியேறினர். என் வீட்டில் அழுக்கான அமைதி உண்டானது. அந்த அமைதியை மோகனாவின் விம்மல் சத்தம் வலிக்க செய்தது.
.
என் வீட்டில் இருந்து வெளியேறி வருபவர்களை கண்டுகொள்ளாதது போல், கடைசியாய் கேட்டான், "நாம் க்யா ஹே?"
.
சற்று நேரத்துக்கு முன் 'பெயரை கேட்டால் யோசித்து சொல்' என்று சொன்னவன் தன் கும்பலோடு என் மனைவியை தின்றுவிட்டு தன் பான்டை சரி செய்து கொண்டு, இதோ என்னை தாண்டி ஒன்றும் நடக்காதது போல் செல்கிறான்.
.
உயிரில் மிச்சம் உள்ள அனைத்து சக்திகளையும் சேர்த்து அலறினேன், "தேவடியா பசங்களா".
.
அமைதியாய் என் கண்கள் இப்போது மூடுகின்றன, சுற்றி உள்ள ரத்த கரைகளை மறைத்து. இவ்வளவையும் பார்க்க சகிக்காமல் மறைந்திருந்த சூரியன், இப்போது மெல்ல ஒளி பரப்புகிறது!!!
அந்த ஒளி இந்த சமூகத்தின் அசிங்கங்களை அம்மனமாக காட்டியது...

வைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா?

Monday, April 20, 2009

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை கூறிவிட்டு நான்காவதாக விருதுநகர் தொகுதிக்கு பெயர் அறிவிக்கும் முன் ஒரு சிறிய இடைவெளி விட்டார் வைகோ இதழில் தவழும் புன்னகையுடன். அப்போது அரங்கத்தில் பலத்த விசில் மற்றும் கைதட்டல் சத்தம். அந்த சத்தம் அவர் தனது பெயரை அறிவித்த சில நிமிடங்கள் வரை தொடர்ந்தது. இது கானல் நீரா? முன் போல் இப்போதும் அவருக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு இருக்கிறதா? அவரால் ஜெயிக்க முடியுமா என்று ஒரு சிறிய பார்வை...
.
.
இப்போதைய விருதுநகர் தொகுதி சென்ற தேர்தலில் சிவகாசி தொகுதியாக இருந்த போது வைகோ இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சென்ற முறை அவர் நிற்காத போதும் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்று ஒரு புதியவரை அறிமுகப்படுத்திய போது மக்கள் அவரையும் ஜெயிக்க வைத்தனர். கடந்த மூன்று பாராளுமன்ற தேர்தலிலும் வைகோ சிவகாசி தொகுதியை தனது கோட்டையாக வைத்திருக்கிறார். இதற்கு பல விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டாலும், முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு.
.
.
1. அவர் சார்ந்துள்ள நாயக்கர் சமுதாய மக்கள் இந்த தொகுதியில் அதிகம். மற்றும் அவருக்கு இந்த தொகுதி மக்களிடம் உள்ள பரிட்சயம்.
.
2. அவர் தொகுதிக்கு செய்துள்ள பல நல்ல செயல்கள் (சிவகாசிக்கு அகல ரயில் பாதை வர செய்தது முதல், தீப்பெட்டி தொழிற்சாலையை இயந்திரமயமாக்காமல் தடுத்தது வரை பலவற்றை சொல்லலாம்).
.
.
ஆனால் இப்போது தொகுதி மறுவரையறைக்கு பின் அவருக்கு அதே செல்வாக்கு உள்ளதா? இப்போதைய விருதுநகர் தொகுதியில் புதிதாக திருமங்கலமும் திருப்பரங்குன்றமும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த தொகுதியில் இப்போது முக்குலத்தோர் கை ஓங்கியுள்ளது. இந்த ஊர்களில் அஞ்சாநெஞ்சரின் செல்வாக்கும் நாம் அறிந்ததே. இந்த நிலையில் முன்பு போல் அவரால் எளிதாக வெற்றிபெற முடியுமா? பல தொகுதிகளிலும் ஜாதியை வைத்தே வேட்பாளர்களின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகுதியையும் அந்த கண்ணோட்டத்தில் அலசலாம்.
.
.
இந்த தொகுதியில் முதலாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தேமுதிக சார்பில் மாபா பாண்டியராஜன். இவர் புகழ் பெற்ற மபாய் கன்சல்டன்சி என்ற கம்பெனியின் தலைவர். சிவகாசி அருகில் உள்ள விளாம்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் நாடார் சமூகத்தை சார்ந்தவர். இவர் சார்ந்துள்ள கட்சியும் சமூகமும் இவருக்கு ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தாலும், இவர் வழக்கமான தேமுதிக வேட்பாளரை போல் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் வேலையைத்தான் செய்வார். இது வைகோவிற்கு விழும் ஓட்டுக்களை தான் பாதிக்கும். தேமுதிகவுக்கு நாயக்கர் சமூக மக்கள் ஓட்டும் விழுவதால் இதுவும் வைகோவை பாதிக்கும்.
.
.
நடுநிலையாளர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவு அளித்தனர். இப்போது அவர்கள் ஓட்டுக்களையும் தேமுதிக பிரிக்கிறது. இதற்கு பேசாமல் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
.
.
அடுத்ததாக வருபவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுந்தர வடிவேல். இவரை யார் என்றே தொகுதியில் உள்ள பலருக்கும் (கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட) தெரியாது. முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ளதால் இவரை தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்த போதே சிவகாசியில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதமும், ஒரு கோஷ்டி உண்ணும்விரதமும் இருந்து காமெடி பண்ணினர். காங்கிரஸின் ஓட்டு வங்கியான நாடார் சமூக மக்கள் இந்த முறை இவருக்கு ஓட்டளிப்பார்களா என்பது சந்தேகமே. முதலில் காங்கிரஸ் காரர்களே ஓட்டளிப்பார்களா என்று கேட்க வேண்டும். திமுக கூட்டணி என்று எண்ணி யாராவது ஓட்டளித்தால் உண்டு. ஆனால் இந்த கூட்டணியின் பிரச்சாரத்தை அடுத்து வேட்பாளரின் செல்வாக்கு கூடலாம். தேமுதிகவிற்கு எவ்வளவு ஓட்டு விழுகிறதோ அவ்வளவு வாய்ப்பு உள்ளது இவர் ஜெயிப்பதற்கு.
.
.
இந்த இருவரையும் வைத்து பார்க்கும் போது, கொஞ்சம் உழைத்தால் வைகோ இந்த தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்று தான் நினைக்க தோன்றும். ஆனால் இப்போது புதிதாக ஒரு புது தலைவலி வந்துள்ளது நமது நவரச நாயகன் கார்த்திக் ரூபத்தில்!
.
.
இவரும் விருதுநகர் தொகுதியில் நிற்கபோவதாக ஒரு தகவல் வருகிறது. ஏற்கனவே வைகோவிற்கு விழும் நாடார் சமூக மற்றும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பாண்டியராஜன் பிரிக்கிறார். இந்த நிலையில் கார்த்திக் நின்றால் அதிமுகவின் ஓட்டு வங்கியான முக்குலத்தோரின் ஓட்டுக்களும் பிரியும் நிலை வரும். கார்த்திக்கிற்கு சமூக மக்களிடம் இப்போது முன்பு மாதிரி மரியாதை இல்லை என்றாலும், 18 முதல் 30 வயது வரை உள்ள முக்குலத்து இளைஞர்கள் இப்போதும் இவர் பின்னால் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவிற்கு விழ வேண்டிய முக்குலத்து ஓட்டுக்களிலும் கணிசமான அளவு பிரிந்து இவருக்கு விழும். என்னதான் காமெடி பீஸாக இவர் இருந்தாலும் இவரை சீரியஸாக மதித்து ஓட்டுப்போட இன்னும் இந்த தொகுதியில் ஆள் இருக்கிறார்கள்.
.
.
சிவகாசி, விருதுநகர், சாத்தூர் தொகுதியில் பாண்டியராஜன் மிகுந்த போட்டிகொடுப்பார். அருப்புகோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சுந்தர வடிவேலும், கார்த்திக்கும் வைகோவை வெற்றியிலிருந்து கொஞ்சம் தூரமாகவே தள்ளிவைப்பர் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வைகோவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் போட்டியாளர்கள் யாருக்கும் தெளிவான காரணங்கள் இல்லை, எல்.ஜி, செஞ்சி போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினாலும் தொகுதி மக்கள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிகொண்டதாக தெரியவில்லை. இவர் மேல் எப்போதும் மக்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. இருந்தாலும் இந்த ஜாதி மற்றும் பணபல அரசியலில் வைகோ ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும், ஆனால் முடியாத காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது....

மன்னிக்கவும்... இது ஆனந்த தாண்டவம் விமர்சனம் அல்ல!!!

Monday, April 13, 2009


தலைவர் சுஜாதாவின் அருமையான நாவல் படமாக வருகிறதே, என்ற சந்தோஷத்தில் திரையரங்கு சென்ற என் ஆசையில் காந்தி கிருஷ்ணா வாடகைக்கு லாரி பிடித்து மண்ணள்ளி கொட்டிவிட்டார்! 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போதும் நேற்று எழுதியதைப்போல் புதிதாக (அதனால் தான் உன்னை நினைத்து, உன்னாலே உன்னாலே என்று காப்பி அடிக்க முடிகிறது இப்பவும்) இருப்பதே இந்த கதையின் சிறப்பு. அப்படிப்பட்ட ஒரு கதையை இப்படி சிறுகுழந்தை பேண்டு உலப்பியதைப்போல சொதப்பிவிட்டார்கள். இந்த படத்தில் ஒரு வசனம் வரும். "வண்ணத்துப்பூச்சி பிடிச்சுட்டு அழகா வாழ்ந்த அந்த பொண்ண இப்படி சாகடிச்சுடாங்களே?" என்று. அதே நிலைமை தான் இந்த கதைக்கு, இன்று. அமைதியாய் பலர் நினைவுகளில் கனத்த ஞாபகங்களோடு இருந்த இந்த கதையை கற்பழித்து விட்டார்கள்.
.
.
நாவலில் உயிரோடு நம் கண்முன்னே நடமாடிய ரகுவும், ரத்னாவும், ராடும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிய ஜடங்களாய் வந்துபோயிருக்கிறார்கள்! தமன்னா பரவாயில்லை. கோவிந்தராஜாக வரும் கிட்டி மட்டுமே சிறப்பாக செய்திருக்கிறார். ரத்னா கதாப்பாத்திரத்துக்கு ருக்மிணி பொருந்தவே இல்லை. யாராவது புதுமுகத்தை போட்டிருக்கலாம் (எனக்கு நாவல் வாசிக்கும் போது அல்வா நடிகை கஸ்தூரி தான் ஞாபகம் வந்தார்). அவரை பார்க்கும் போதெல்லாம் "சார் பையன் சார்" என்று அவர் பொம்மலாட்டத்தில் சொன்ன வசனம் தான் ஞாபகம் வந்தது.
.
.
சுஜாதா, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்கேற்ற ஞாயங்கள் சொல்லியிருப்பார். படத்தில் ஒன்றும் இல்லை. நாவலில் மதுமிதாவின் பாத்திரம் மிகத்தெளிவாக படைக்கப்பட்டிருக்கும். ஆனால் தானும் குழம்பி படம் பார்ப்பவர்களையும் குழம்ப வைத்திருக்கிறார் காந்தி கிருஷ்ணா. நாவல் வாசிக்காமல் படம் பார்ப்பவர்கள் கதி அதோகதி தான். சினிமாவுக்காக பல விஷயங்களை மாற்றியும் புதிதாகவும் இணைத்துள்ளார்கள். அதில் ஜெயந்தி பாத்திரம் ஓரளவு சரியாக படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சகமாணவனாக வரும் கிருஷ்ணா பாத்திரம் எதற்கு? தேவையில்லாமல் நம்மை டென்ஷன் தான் படுத்துகிறார். அமெரிக்க கலாச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிழி கிழியென்று கிழித்திருப்பார் சுஜாதா. அதையும் படத்தில் மேம்போக்காக செய்திருக்கிறார்கள்.
.
.
படத்தொகுப்பு செய்தவர் ஏதாவது சலூனில் முடிவெட்ட பழகிக்கொண்டிருப்பவர் என்று நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி ஒட்டாமல் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கரும் ஏதோ 'சம்பளம் வாங்கினோமே' என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலை செய்திருக்கிறார். அடுத்த யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசு என்று அழைக்கப்படும் ஜி.வி.பிரகாஷும் தன் பங்குக்கு சொதப்பி இருக்கிறார். "பூவினை திறந்து கொண்டு" பாடல் மட்டும் பரவாயில்லை. பின்னணி இசை சுத்த மோசம். ஒரு படத்தில் கோழி பிடிப்பவனையும், திருடனையும், அதுபோல் பலரையும் பிடித்து வந்து சத்யராஜ் கிரிக்கெட் விளையாடுவார். இங்கும் அப்படித்தான் காந்தி கிருஷ்ணா விளையாடியிருக்கிறார். விளையாடலாம், தப்பில்லை. அதை உங்கள் சொந்த கதையில் செய்யுங்கள் திரு. காந்தி கிருஷ்ணா அவர்களே. எங்கள் சுஜாதாவின் கதையை இப்படி நாசமாக்கதீர்கள்.
.
.
இவ்வளவு கடுப்பில் இருக்கும் போது, காந்தி கிருஷ்ணா மேலும் கடுப்பேற்றும் விதமாக ரேடியோ மிர்ச்சியிலும், zee தமிழிலும் வந்து "சுஜாதா மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தால் மிகவும் சந்தோசப்படுவார்" என்கிறார். இதற்கு மேல் அந்த கலைஞனை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது.
.
.
திரு. காந்தி கிருஷ்ணாவுக்கு ஒரு வேண்டுகோள், மற்றும் ஒரு எச்சரிக்கை.

வேண்டுகோள் - இனி உங்கள் சொந்த கதைகளை மட்டும் படமாக எடுங்கள்.
.
எச்சரிக்கை - சுஜாதா கதைகளை இனி தொடக்கூட செய்யாதீர்கள்.
.
.
சென்ற பதிவில் காந்தி கிருஷ்ணாவுக்கு திறமை இருக்கிறது என்று கூறியிருந்தேன். இப்போது அதை வாபஸ் வாங்கலாமா என்று பரிசீலித்து வருகிறேன்!

சில தமிழ் டைரக்டர்களும் மோட்டிவேசன் தியரியும்!!!!

Thursday, April 9, 2009

நிர்வாகவியலில் மோட்டிவேசன் என்றொரு தலைப்பு மிகவும் பிரபலமானது. ஒரு நிர்வாக அதிகாரி அவருக்கு கீழுள்ள வேலையாட்களை எப்படி தாஜா செய்து வேலை வாங்குவது என்று இந்த தியரி சொல்கிறது... முதலில் அடிப்படை வசதி, இரண்டாவதாக பாதுகாப்பு, மூன்றாவதாக அன்பு, நான்காவதாக மதிப்பு, கடைசியாக தன்னிலை உணரச்செய்தல்.



எல்லோருக்கும் இந்த ஹைரார்க்கி வரிசையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு முதல் இரண்டும் தேவைப்படாமல் அன்பு தேவைப்படலாம். ஒரு கம்பெனியில் மேனேஜர் பொறுப்பில் புதிதாக சேரும் ஒருவனுக்கு முதல் மூன்றும் தேவை இல்லை. இப்படி நம்முடைய தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு இந்த ஹைரார்க்கி வேறுபடும்.



சினிமா தொழிலில் இருக்கும் துணை இயக்குனர்களுக்கு எந்த மாதிரியான மோட்டிவேசன் அவர்களுடைய தலைவர்களான இயக்குனர்களிடம் இருந்து தேவைப்படுகிறது? & தரப்படுகிறது? துணை இயக்குனர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் எல்லாம் வருங்கால படைப்பாளிகள். அவர்களுக்கு தேவை அங்கிகாரம் தான். அங்கிகாரம் என்பது டைட்டில் கார்டில் பெயர் போடுவதோடு முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டி 'இந்த படத்தில் நானும் வேலை செய்திருக்கிறேன்' என்று பெருமையாக அவர்கள் தன் ஊர் மக்களிடம் சொல்லும் அளவுக்கு செய்ய வேண்டும். இப்படி தன்னுடைய துணை இயக்குனர்களுக்கு அங்கிகாரம் கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலர் தான் என்று நினைக்கிறேன்.



முதலில் வருபவர் பாரதிராஜா. தன்னிடம் வேலை செய்யும் திறமையான துணை இயக்குனர்கள் மற்றும் டெக்னிசியன்களை திரையில் காண்பிக்க தவறமாட்டார். மணிவண்ணன் (கொடி பறக்குது), எஸ்.ஜே.சூர்யா (கிழக்கு சீமையிலே), இளவரசு-இவர் ஒரு ஒளிப்பதிவாளர், இப்படி பலரையும் திரையில் காட்டி அங்கிகரித்த பெருமை இவருக்கே உண்டு.





கிராமத்து குயிலை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்றினார் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் கே.எஸ்.ரவிக்குமார். ரமேஷ் கண்ணா இதற்கு சிறந்த உதாரணம். இவர் இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் வருவதே இல்லை. சில சமயங்களில் தன்னுடைய துணை இயக்குனர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இவர் அமைதியாக அவர்கள் எப்படி வேலை வாங்குகிறார்கள் என்று நோட்டம் இடுவாராம். அப்படி ஒரு துணை இயக்குனர் இயக்கிய காட்சி தான் நாட்டாமையில் வரும் அந்த சிலம்பு சண்டை. அந்த காட்சியை இயக்கியவர் சேரன். படையப்பாவில் வரும் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி நடனக்காட்சியை இயக்கியவர் ரமேஷ் கண்ணா!



இவர்கள் இருவரும் இப்படி என்றால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வழக்கம் போல இந்த விஷயத்திலும் பிறரிடம் இருந்து வேறுபடுகிறார். மற்ற இயக்குனர்கள் போல் அல்லாமல் தன்னுடைய துணை இயக்குனர்களின் பெயர்களை படத்தில் வரும் ஏதாவது ஒரு பாத்திரத்துக்கு சூட்டிவிடுவார். மாதேஷ் (மதுர பட இயக்குனர்) ஒரு சில படங்களில் இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்; மற்றும் முதல்வன் படத்தை ஷங்கருடன் சேர்ந்து தயாரித்தார். தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ராஜு சுந்தரத்துக்கு அந்த பெயரைச்சூட்டி படத்தில் எல்லாரும் அந்தப்பெயரை மகேஷ் என்று தவறாகவே உச்சரிப்பது போல் நகைச்சுவையாக செய்திருப்பார்.


முத்துவடுகும் (பேரரசு தம்பி), ஷங்கரின் உதவி இயக்குனர் தான். இவரின் பெயரை ஷங்கர் முதல்வன் படத்தில் ஒரு அரசு அதிகாரிக்கும், அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜின் அண்ணன் நடத்தி வரும் சமையல் தொழிலில் ஒரு வேலைக்காரருக்கும் வைத்திருப்பார்.


ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணாவும் (செல்லமே, ஆனந்த தாண்டவம் இயக்குனர்) ஷங்கரிடம் சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் தான். இவர் பெயரை ஷங்கர், இந்தியன் படத்தில் கமல், எடுபிடி வேலை செய்யும் ட்ராபிக் கமிஷனர் (ஊர்மிளா தந்தை) பெயராக பயன்படுத்தி இருப்பார். அதே போல் சிவாஜி படத்தில் வரும் ஒரு வருமான வரித்துறை அதிகாரியின் பெயரும் காந்தி கிருஷ்ணா தான்.



புகழ் பெற்ற மேலே குறிப்பிட்டுள்ள இயக்குனர்களுக்கு பல உதவி இயக்குனர்கள் இருந்தும் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் திரையில் காட்டியதை தான் "managing creative people" என்று சொல்வார்கள். அதாவது திறமை இருப்பதாய் அறியப்பட்ட உதவி இயக்குனர்கள் மட்டுமே அப்படி பெருமை செய்யப்பட்டார்கள். மேலே குறிப்பிட்ட உதவி இயக்குனர்கள் அனைவரும் தங்களுடைய முழுத்திறமையை இன்று நிரூபித்து புகழ் பெற்று இருக்கிறார்கள். அப்போ, ஒரு இயக்குனராவதற்கு கற்பனை திறமையோடு "managing creative people" என்ற கலையும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
























மறந்துவிட்டாள் என்னை..!!

Thursday, April 2, 2009

கோகுலின் திருமணத்தில் தான் அவளை மறுபடியும் பார்த்தேன். கோகுல், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் செய்த, மதுரையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் தர மேலாளர். இங்கு அவளை நான் எதிர்பார்க்கவில்லை. இவள் தான் 'கல்யாணத்திற்கு பிறகு வேலையில் இருந்து நின்று விட்டாள்' என்று சொன்னார்களே? இங்கே எப்படி வந்தாள்?

இவள்? பெயர் சிவசங்கரி. நான் ப்ராஜெக்ட் செய்த பொது, அந்த மருத்துவமனையில் என் கைடுக்கு இவள் தான் உதவியாளர். நான் ப்ராஜெக்ட் ஆரம்பித்த இரண்டு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள். 'நான் காற்றில் பறக்காமல் இருப்பதே என் ஆடையின் எடையில் தான்' என்பது போல் இருந்தால். அவ்வளவு ஒல்லி. வெள்ளையாக இருந்தாள். வெண்மையான நேரான பல் வரிசை. ஏழ்மையை பிரதிபலிக்கும் ஒரு திக் கலர் சுடிதார். இது தான் சிவசங்கரியின் அடையாளம்.

பொதுவாகவே நான் பெண்களிடம் பேசத்தயங்குபவன். காரணம் கூச்சமா? வெறுப்பா? தன்மானமா? என்னவென்று தெரியாது! இவளிடமும் அப்படித்தான். நானாக பேசவில்லை.

"அந்த பைல் எடுத்துக்குடுங்க". எடுத்துகுடுத்தேன்.

"மேடம் இன்னைக்கு மதியத்துக்கு மேல தான் வருவாங்களாம். நீங்க அவங்களுக்கு வெயிட் பண்ணாம ப்ராஜெக்ட் ஆரம்பிப்பிங்கலாம். சொன்னாங்க."
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் டேட்டா கலக்க்ஷனுக்கு சென்று விட்டேன். இப்படியே ஒரு நான்கு நாட்கள் சென்றன. எவ்வளவு நாளைக்குத்தான் பைல் எடுத்துக்குடுக்குறதையே பேசிட்டு இருக்குறது? அப்போது ஏதோ ஒரு கமல் படம் வெளிவந்து இருந்தது.
"நான் கமல் படமே பாக்க மாட்டேன். ஏன்னு சொல்லுங்க ராம் குமார்"
நான் ஒன்றும் சொல்லாமல் அவளைப்பார்த்தேன்.
"ஏன்னா ஒண்ணுமே புரியாது. ஹா... ஹா.. ஹா.."
அவள் சினிமா தியேட்டருக்கே இரண்டு முறை தான் போயிருக்கிறாளாம். அதுவும் அவள் படிக்கும் போது பள்ளியில் கூட்டி சென்றதாம்.
"உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு, ராம் குமார்?"
ஒவ்வொரு வரி முடிக்கும் போதும் என் பெயரை அதுவும் முழுப்பெயரை அவள் சொல்லும் போது அழகாக இருக்கும்.
"அது நெறைய பேர பிடிக்கும்ங்க"
"சும்மா சொல்லுங்க"
"ரஜினி"
"தாத்தாவா? அப்புறம்?"
"கமல்"
"ச்சீ.. உங்க டேஸ்ட் என்ன இருவது வருசத்துக்கு முன்னாடி இருக்கு ராம் குமார்?"
"என் டேஸ்ட் அவ்வளவு தாங்க. சரி, உங்களுக்கு பிடிச்ச நடிகர்லாம் யாரு?"
"எனக்கு ஒரே ஒரு ஆள் தான் பிடிக்கும்"
"யாரு?"
"ப்ரித்விராஜ்"
"அவனா? உருப்படியா ஒரு பத்து படம் கூட நடிக்கல!"
"ஓய்... என்ன?"
"சாரி சாரி... ஏன் அவன புடிக்கும்?"
"அவன் அவ்ளோ அழகா இருப்பான் தெரியுமா? இப்போ கொஞ்ச நாளா விஷாலையும் பிடிக்குது"
நான் வாயை திறக்காமல் இருந்தேன். திரும்பவும் அவள் ஓய் என்று சொன்னால் என்ன செய்வது?
"ஏன் பிடிக்கும்னு கேக்க மாட்டீங்களா ராம் குமார்?"
"ஏன் பிடிக்கும்?"
"அவன் கருப்பா உங்கள மாதிரியே இருக்கானா, அதான்..."
"ஏங்க, நாங்க கருப்புல மட்டும் தான் ஒன்னு. நான் அவன விட கொஞ்சம் அழகா தான் இருக்கேன்."
"அதெல்லாம் தெரியாது. எனக்கு அவன பாத்தா உங்க ஞாபகம் தான் வருது"
அன்று முதல் எனக்கும் விஷாலை கொஞ்சமாக பிடிக்க தொடங்கியது. நாற்பத்தைந்து நாளில் முப்பது நாட்கள் வேகமாக ஓடி விட்டன. இந்த முப்பது நாட்களில் அவளும் நானும் பேசாத சமயங்கள் மிகவும் குறைவு. அவள் குடும்பத்தை பற்றி, அம்மா இறந்தது, அக்கா கல்யாணம், இப்போது அப்பாவுடன் அவள் தனியாக இருப்பது என்று அவளைப்பற்றி அனைத்தையும் சொன்னாள்.
"வீட்டுக்கு போனாலே எரிச்சலா இருக்கும் ராம் குமார்"
"ஏன்?"
"இங்க வேலைய முடிச்சுட்டு அழுப்பா வீட்டுக்கு போனா, அங்கயும் மூஞ்சில அடிக்குற மாதிரி வேல இருக்கும். துணி துவைக்குறது, பாத்திரம் கழுவுறது, அப்பறம் இந்த சமையல் வேல இருக்கே? அப்பப்பா.."
"ம்ம்ம்..."
"ஆம்பளைங்கலாம் ரொம்ப குடுத்து வச்சவங்கல்ல, ராம் குமார்?"
அவள் கண்களில் நீர் தெரிந்தது. இதழில் சோகம் கலந்த சிரிப்பு.
"நீங்க இன்னும் ரெண்டு வாரத்துல போயருவிங்கள்ள ராம் குமார்?"
"ஆமா"
"எங்களலாம் மறந்துருவிங்களா?"
நான் அவளை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன். பதில் எதுவும் சொல்லவில்லை. 'என்னை' என்பதைத்தான் அவள் 'எங்களை' என்று சேர்த்து சொன்னாள்.
"உங்க காலேஜ்ல பொண்ணுங்கலாம் படிக்குறாங்களா?"
"அதெல்லாம் எதுக்கு இப்போ?"
"இல்ல சும்மா கேட்டேன். மணி அஞ்சாச்சி, வீட்டுக்கு கெளம்பலையா ராம் குமார்?"
அடுத்து ஒரு வாரம் நான் அந்த மருத்துவமனைக்கு செல்லவில்லை. காலேஜ் இல் என் கைடிடம் ப்ராஜெக்ட் பற்றி பேசினேன். 'இன்னும் ரெண்டு நாட்கள் தான் மருத்துவமனையில் வேலை இருக்கும்' என்று சொன்னார்.
"ஏன் ராம் குமார் நீங்க ஒரு வாரமா வரல? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?" - என்னை மீண்டும் பார்த்த அதிர்ச்சியும் இதுவரை பார்க்காததால் இருந்த வருத்தமும் சேர்ந்து அவள் ஒல்லி முகத்தில் கோலம் போட்டன.
"இல்லைங்க வாத்தியார பாக்க போயிருந்தேன்"
"சொல்லிட்டு போகலாம்ல. நீங்க இல்லாத இந்த ஏழு நாளும் எரிச்சலா இருந்தது. வீட்டுலயும் ஒரு வேல பாக்க முடியல!"
"சிவசங்கரி"
"என்ன?"
"நாளைக்கு தான் என் ப்ரோஜெக்டோட கடைசி நாள்"
"என்ன சொல்றிங்க? இன்னும் ஒரு வாரம்ல இருக்கு?"
"இல்லைங்க. கொஞ்சம் டாகுமெண்டேசன் வேல இருக்கு. அதனால நாளையோட கிளம்பிருவேன்!"
"நீங்க இங்க எதுக்குங்க ப்ராஜெக்ட் பண்ண வந்தீங்க? வேற எங்கயாவது போயித்தொலஞ்சுருக்க்கலாம்ல?" அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவள் அன்று அழுத அழுகை என்னை என்னவோ செய்தது. ப்ராஜெக்ட் முடித்து கிளம்பிவிட்டேன். இந்த நாற்பது நாட்களில் பிரிவோம் என்ற நம்பிக்கை துளியும் இல்லாததால் நாங்கள் போன் நம்பர் கூட பரிமாறிக்கொள்ளவில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தது. நண்பர்களிடம் அவளைப்பற்றி சொன்னேன்.
"நீ அந்த சிவசுந்தரிய.."
"டே சிவசங்கரி டா..."
"ஏதோ ஒன்னு. அவள நீ லவ் பண்றியாடா?"
"ஆமாம் டா" என்று சொல்ல ஆசை. "அவா தான் என்ன லவ் பண்ற மாதிரி தெரியுது டா.."
"டே மூடுடா.. அந்த பொண்ணு இதெல்லாம் கேட்டா தற்கொல பண்ணிக்கும்"
அன்று அவர்களுக்கு நான் தான் ஊறுகாய். 'ஏண்டா இவர்களிடம் சொன்னோம்?' என்று நினைத்தேன். அதிலும் ஒருவன்,
"நண்பா நீ அந்த பொண்ண லவ் பண்ற விஷயம் அந்த பொண்ணுக்கு தெரியாம பாத்துக்கோடா. சங்கடப்படுமா இல்லையா?" என்றான். இவர்களிடம் இது பற்றி இனி பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ப்ராஜெக்ட் முடிந்த மூன்று நாட்களில் எனக்கு ஒரு புது எண்ணில் இருந்து போன் வந்தது. ரிலையன்ஸ் நம்பர். தயக்கமான குரலில்,
"ஹலோ?"
"ஹலோ..."
"ராம் குமாரா?"
"ஆமா. நீங்க யாரு?"
"நெறைய பொண்ணுங்க கிட்ட பேசினா இப்படித்தான், யாரு பேசுறதுனே தெரியாம முழிக்க வேண்டிருக்கும். நான் யாருன்னு நெஜம்மாவே தெரியலையா ராம் குமார்?"
"சிவசங்கரி!"
"எப்பா! எவ்ளோ கஷ்டப்பட வேண்டிருக்கு என்ன ஞாபகப்படுத்த? அதுக்குள்ள மறந்துட்டிங்கள்ள?"
"இல்லைங்க, புது நம்பர்ல அதான். ஆமாம் என் நம்பர் எப்படி கெடச்சது?"
"உங்க கைட், அதான் எங்க மேடம் செல்லுல இருந்து சுட்டுட்டேன்!"
"என்னது?"
"ஆமா ராம் குமார். என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல..."
அன்று மட்டும் இரண்டு மணிநேரம் பேசினோம். அவளை எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்று தெளிவாக உணர முடியாத அளவுக்கு குழம்பி இருந்தேன்! அவள் இதுவரை ஆண்களோடு பழகியதில்லை. நான் தான் அவள் வாழ்வின் முதல் ஆண். அதனால் இது ஒரு இன்பாட்சுவேஷன் ஆக இருக்கலாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அதே போல் இன்னும் ஒரு ஆண்டில் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் அப்பா சொன்னாராம். "ஏதாவது பண்ணுங்க ராம் குமார்" என்று அழுதாள்.
நான் என்ன பண்ணுவது? ஒரு பெண்ணை எளிதாக காதலிக்கும் மனது, திருமணம் என்றவுடன் பயப்படுகிறதே? அவள் வேறு ஜாதி. என் வீட்டில் தெரிந்தால் தோலை உரித்து விடுவார்கள். இது எல்லாவற்றையும் அலசிப்பார்த்த பின் அவளிடம் பேசாமல் இருப்பதே இருவருக்கும் நல்லது என்று பேசுவதைத்தவிர்த்தேன். ஆண்கள் தான் எவ்வளவு கோழைகள்?
ஒரு நாளில் நூறு மிஸ்டு கால் கூட வரும். சில சமயம் இன்பாக்ஸ் நிரம்பி வழியும்! ஒன்றுக்கும் நான் பதில் அளிக்கவில்லை. அவளிடம் இருந்து ஒரு நாள் இப்படி எஸெமெஸ் வந்தது,
'நீங்கள் என்னிடம் பேச வேண்டாம். தயவு செய்து நான் பேசுவதை மட்டும் அமைதியாக கேட்டால் போதும். எனது காலை அட்டன்ட் செய்யவும் ப்ளீஸ்.'அந்த மெசேஜ் இன் வலி என்னையும் தாக்கியது. அதைத்தொடர்ந்து வந்த காலை அட்டென்ட் செய்தேன். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஒரு விம்மல் சத்தம் கேட்டது.
"ஏன் ராம் குமார் என்ட பேச மாற்றிங்க?"
"........"
"ஒரு பொண்ண இப்படி அழ வைக்கிறோமேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா? என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல! என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்களா வந்து என்கிட்ட பேசற வரைக்கும் நானும் உங்ககிட்ட பேச மாட்டேன். அதுக்காக நான் உங்கள மறந்துருவேன்னு மட்டும் நெனைக்காதிங்க. என் உயிர் உள்ளவரை அது நடக்காது!"
அதற்குப்பின் அவளிடம் இருந்து எனக்கு மெசேஜ்ஜோ காலோ வரவே இல்லை. ஐம்பது நாட்கள் கூட என்னிடம் பழகாத ஒரு பெண் என் ஆயுசு முழுதும் மனதில் நீங்காத ஒரு தழும்பாக, நினைவில் நீங்கி விட்டாள்.
'என் உயிர் உள்ள வரை உங்கள மறக்காம மாட்டேன்'னு சொன்னவள், இதோ இங்கே ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு என் கண்முன்னே திருமணமாகி! என் மனதுக்குள் ஒரு சின்ன ஆர்வம், 'இவள் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாளா?' என்று. எவ்வளவு மோசமான எண்ணம், மாற்றான் மனைவியின் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா என்று எண்ணுவது?
ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அவளிடம் செலுத்தியது. அருகில் சென்றேன். அவள் முதுகுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் சதை போட்டுருக்கிறாள். சிகப்பு வண்ண பட்டுப்புடவையில் கையிலும் காதிலும் கழுத்திலும் கணவன் வாங்கி கொடுத்த தங்கத்தில் மின்னினாள். ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு ஒரு தலைக்காதலர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
"நீங்க சிவசங்கரி தானே?"
அவள் திரும்பி என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் எந்த வித அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ தெரியாதது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
"ஆமா. நீங்க யாரு?" முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் கேட்டாள். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
"என்னை தெரியலையா? நான் தாங்க ராம் குமார். நீங்க வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுநேனே, மறந்துடிங்களா?"
"சாரிங்க.. எனக்கு சரியா ஞாபகம் இல்லையே!"
அப்போது ஒரு ஆசாமி, கையில் குழந்தையுடன் எங்களை நெருங்கி அவளிடம், "என்னம்மா? சார் யாரு?" என்றார். அந்த ஆசாமிக்கு வயது இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருக்கும். ஒடிசலான தேகம். அவள் கணவன்.
"இவர் நான் வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுனாராம். ஞாபகம் இருக்கானு கேட்டாரு"
"ஓஹோ"
"ஆமா சார். அவங்களுக்கு என்ன ஞாபகம் இல்ல போல. சாரிங்க. நான் வரேன்"
'ஏன்டா இவளிடம் பேசினோம்' என்று இருந்தது. என்னை சாகும் வரை மறக்க மாட்டேன் என்றவள் ஒன்றரை வருடத்தில் என்னை அறவே மறந்து போய்விட்டாள். 'இந்த பொம்பளைங்களே இப்படித்தான். சரியான சந்தர்ப்பவாதிகள்' என்று நினைத்து கொண்டே திரும்பி நடந்தேன்.
"டாய் ராம் குமார்".
யாரோ கூப்பிட்டது போல இருந்தது. அந்த ஆண் குரல் வந்த திசைக்கு திரும்பினேன். அங்கு அவள் குடும்பம் தான் நின்று கொண்டு இருந்தது. அவள் குழந்தை அழுது கொண்டு இருந்தது. வேறு யாரும் இல்லை. 'என்னடா இது? பிரம்மையோ?' என்று எண்ணினேன்.
திரும்பவும் "டாய் ராம் குமார்" என்று கேட்டது. திரும்பி பார்த்தேன். அங்கே அவள் கணவன், "டாய் ராம் குமார் அழாத டா. சீக்கிரம் வீட்டுக்கு போயிறலாம். அம்மா கிட்ட 'சீக்கிரம் கெளம்பு' னு சொல்லு" - அழும் குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
'என்னது? அவள் குழந்தையின் பெயர் ராம் குமாரா?' என் மூளைக்குள் வேகமாக ரெத்தம் ஏறியது. நான் அவளை நேராக பார்த்தேன். அதிர்ச்சியில் கிட்டத்தட்ட உறைந்து போன நிலையில் இருந்தாள். அவள் கண்களால் என்னை நேராக பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் உடைந்து விடும் அணை போல அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். அந்த கணம் என் மனதில் அப்படியே பச்சை குத்தியது போல் பதிந்து விட்டது. அன்று அவளிடம் ஏன் பேசினோம் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.
'இவளா என்னை மறந்து விட்டாள் என்று நினைத்தேன்? உண்மை தான் இவள் சொன்னது. இவள் சாகும் வரை என்னை மறக்க மாட்டாள்!'
ஒரு பெண்ணின் மனதை மீண்டும் மீண்டும் துன்புறுத்தி விட்டோமே என்று மனது கனக்கிறது. எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உறவுக்காக கண்களில் நீர் கசிகிறது!

உடனடி தேவை!!!

Monday, March 30, 2009

ஆட்கள் தேவை
படிப்பு தகுதி : தேவை இல்லை.

உடல் தகுதி : அவசியம் இல்லை.

முன் அனுபவம் : வேண்டவே வேண்டாம்.

உங்களுக்கு வயது 21க்கு மேலா?

உங்கள் தோல் கடினமாக இருக்குமா?

உங்களை பெற்றவர்களும் மற்றவர்களும் உதவாக்கரை என்று திட்டுகிறார்களா?

உங்களை தண்டச்சோறு என்பது ஜீரணிக்க கடினமாக உள்ளதா?

உங்களுக்கு மூன்றுவேளை சோறும் இரண்டு மாதங்களுக்கு தங்கும் இடமும் இலவசமாக தேவை என்றால், தொடர்பு கொள்ளுங்கள்:

அடுத்த மாதம் முதல் இந்திய அளவில் நடக்கும் மிகப் பெரும் சர்கஸ் ஆட்டத்துக்கு தமிழ் நாட்டில் என்னுடைய கட்சிக்கு நாப்பது பேர் தேவை.

இவண்,
தலைவர் / துணைத்தலைவர் / உப தலைவர் /பொது செயலாளர் / செயலாளர் / உப செயலாளர் / பொருளாளர் / துணைப் பொருளாளர் / கொ.ப.செ / துணை கொ.ப.செ.
அகில இந்திய காடாளும் மக்கள் கட்சி.

பின் குறிப்பு: வெத்திலை போட்டுக் கொண்டு தொப்பி அணிந்து வருபவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப் படும்.
By
Amaran Groups (எங்க ஊர்ல பல பக்கிங்க இன்னும் இப்படி சொல்லிக்கிட்டு தான் அலையுதுங்க....... So, நானும்)

கலாச்சாரம்

Wednesday, March 18, 2009

முன்குறிப்பு:
காலத்துக்கு ஏற்றவாறு தனது சாரத்தை மாற்றிக்கொள்வதே கலாச்சாரம் என்ற கருத்து உடையவர்கள், மற்றும் என் கருத்துக்கு எதிர் கருத்து உடையவர்கள் தயவுசெய்து கமென்ட் போடவும்....

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேசவே பயந்த, செயல்படவே மறுத்த பல விஷயங்கள் இன்று நம் கன்ன்முன்னே பரவலாக நடக்கின்றன! அந்தரங்கங்கள் எல்லாம் அம்பலங்கள் (அம்மணம் என்றும் சொல்லலாம்) ஆகின்றன. இன்று நம் நாட்டில் நடப்பது கலாச்சார சீரழிவு இல்லை, கலாச்சார கற்ப்பழிப்பு! இதெற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்த போது, என்னால் உணரப்பட்ட சில காரணங்கள் இங்கே....


முதல் காரணம், வழக்கம் போல தகவல் தொழில்நுட்பத்துறை. ஐயா, உங்களை பெஞ்ச் மார்க்காக வைத்து தான் இந்த விலைவாசி உயர்வெல்லாம் நடக்கிறது. ஐயாயிரத்துக்கும் கீழே சம்பளம் வாங்குபவர்களை எல்லாம் ஏற்கனவே அழவைத்து விட்டீர்கள். (இப்போ உங்களுக்கும் ஆப்பு.. வாழ்க அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி). விலைவாசியில் மட்டுமல்ல கலாச்சாரத்திலும் இப்போது உங்களைத்தான் பலர் பெஞ்ச் மார்க்காக நினைக்கிறார்கள்.


தமிழின காவலர். கலைஞர். முதல்வர்.டாக்டர். (அம்மாடி எவ்ளோ பட்டம்!) கருணாநிதி, ஹெல்மெட் அணிய சொன்னது யாருக்கு பயனளித்ததோ இல்லையோ, உங்களுக்கு நல்லா பாதுகாப்பு கொடுக்குது! நீங்க கீழ விழக்கூடாதுன்னு ஹான்ட் பார புடிச்சுக்கிறீங்க, உங்க பின்னாடி இருக்குற பொண்ணு கீழ விழாம இருக்க, உங்கள இறுக்கமா கட்டிபுடிச்சுட்டு வருது. வண்டில நீங்க எங்க போறீங்க என்ன பண்ணுரிங்கனு எழுதுனா, இந்த பதிவு செக்ஸ் கதை மாதிரி இருக்கும். எனக்கு ஒரு சந்தேகம், இந்த பெவிகால் விளம்பரத்துக்கு ஏன் இவ்ளோ செலவு பண்றாங்களோ? பேசாம OMR ரோட்டுல போற ஒரு ஐ.டி. ஜோடிய படம் புடிச்சு போடலாம்! எங்கேயோ ஒன்னு ரெண்டு முறைதவறிய உறவுகள் இருந்தது, இப்போ உங்கள பாத்ததும், வைரஸ் கிருமி மாதிரி வேகமா சாதாரண மக்கள்கிட்டயும் பரவி வருது. கூட வேல செய்ற பொண்ணுக்கு இந்த உதவி கூட பண்ண கூடாதான்னு கேக்குறவங்களுக்கு பதில் கடைசியில இருக்கு.


இதாவது பரவாயில்லை, இப்பல்லாம் ஒருசில கல்லூரிகள்ல இதுக்கு மேல நடக்குது! சின்ன வயசுல தூர்தர்ஷன்ல காண்டம் விளம்பரம் பாத்தது இவங்களுக்கு எவ்ளோ உதவியா இருக்கு தெரியுமா? பல கல்லூரிகள்ல இப்போ காண்டம் வழங்கும் மிஷின் வச்சுருக்காங்க! தன்னோட ஆண்மையை நிலைநாட்டிய தருணத்தை பெருமையுடன் படம் புடித்து தன் நண்பர்களுக்கு காட்டுவது தான் இப்போ டிரண்டு! நம்ம அரசாங்கமும் வெக்கமே இல்லாம, "பாதுகாப்பான உடலுறவு" னு காண்டம் போட்டு போட சொல்லுது! காண்டம் கண்டுபுடிச்ச பர்பஸெ மாறிப்போச்சே?! இந்த லட்சணத்துல செக்ஸ் கல்வி வேற?


ரெண்டாவது காரணம், சினிமா.... நான் பத்தாவது படிக்கும் போது சாகலேட்னு ஒரு படம் வந்தது. அந்தப்படத்துல ஜெயாரே & மும்தாஜ் போட்டு வர டிரஸ் எல்லாம் ரொம்ப செக்ஸ்சியா இருக்கும், அன்றைய காலகட்டத்தில் (ஏழு வருஷம் முன்னாடி தான்)... ஆனால் இப்போது எல்லா படத்திலும் எல்லா கதாநாயகியும் அப்படித்தான் வருகிறார்கள். கொஞ்சநாளைக்கு முன்னாடி 'வில்லு' னு ஒரு உலகத்தரமான குப்பையை பார்க்க நேர்ந்தது! அதில் நயன்தாரா, படம் முழுதும் ஆண்கள் அணியும் கலர் பனியன் தான் போட்டு வந்தார்! அதாவது பரவாயில்லை, அவர் பல படங்களில் அணிந்து வரும் பாவாடையை பார்க்கும் போது "எப்போது அவிழ்ந்து விழுமோ?" என்று எனக்கு பயமாக இருக்கிறது! இந்த மாதிரி, படத்துல நடிகைகள் அணியும் உடைகள், ரெண்டே வருசத்துல, "இது வில்லு (ல நயன்தாரா போட்ட) பனியன்" அப்படின்னு மார்கட்டுக்கு வரும். பெண்களும் அதை பந்தாவாக வாங்கி தங்கள் அழகை வெளிப்படுத்துவார்கள்! பெண்களே, தயவுசெய்து சினிமா மோகத்தால், குழந்தைகளுக்கு பசியாற்ற இறைவன் படைத்த உறுப்பை காட்ச்சிபொருள் ஆக்காதீர்கள்!


அப்பறம், வருங்கால செவ்வாய் கிரக ஜனாதிபதி நம்ம தமிழ் சினிமால தான் நடிச்சுட்டு இருக்காரு, பேரு விஜய்னு சொல்றாங்க. தமிழ் நாட்ல பாதிப்பயபுள்ளைக காதல்னா என்னனே தெரியாம அரைவேக்காட்டுத்தனமா பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுக்கு இந்த இளைய தளபதி ஒரு முக்கிய காரணம்! இவர் ஆரம்ப காலங்கள்ல நடிச்ச, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் போன்ற பல படங்களால் தான் தமிழ் நாட்டில் காதலிப்போர் எண்ணிக்கை அதிகமானது என்று சொன்னால் மிகையில்லை.



காதலுக்கு நான் எதிரி இல்லைங்க. இந்த ஜாதி மதம்லாம் ஒழியனும்னா, அது காதலால மட்டும் தான் முடியும். ஆனால் இன்னைக்கு காதல்ன்ற பேர்ல மக்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க? சினிமால காட்டுறது தான் உண்மைக்காதல்னு சாமி சத்தியமா நம்புறாங்க! அட, அதாவது பரவால்லையே, படத்துல வார மாதிரியே தான் லவ் பண்ணுவாங்களாம்! இந்த ரெயின்போ காலனி படத்த பாத்து பலபேர் நாசமா போனதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்! அந்த படத்தோட டைரக்டர் மட்டும் என் கையில் சிக்குனார்னா, நாக்கப்புடுங்குற மாதிரி கேள்வி கேட்பேன். ஒரு (பல) பேட்டியில அவர் சொல்லுறாரு, "உலகத்துல நடக்காததை நான் படமாக எடுக்கவில்லை. என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தான் என் கதையின் கரு". இவர்ட்ட நான் ஒரு கேள்வி கேட்கணும். அது முடிவில்.



மூன்றாவது காரணம் பெண்கள்! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்ற கருத்தில் ஆழமான நம்பிக்கை உடையவன் நான். கலாச்சாரம் என்பதில் பெண்களின் பங்கு மிக அதிகமானது. அதனால் தான் அந்தக்காலங்களில், படையெடுக்கும் போது, பெண்களை கற்பழித்து விடுவர். இது தான் மிகப்பெரிய அவமானம் என்று கருதப்பட்டது. அப்படி மாற்றானிடம் தன் கற்பை இழந்த பெண் உயிருடன் வாழ மாட்டாள். ஆனால் இன்று??????? பெண்கள், தங்கள் கற்பை தாங்களே வலிய போய் அழித்து கொள்கின்றனர். பெண் சுதந்திரம் (உரிமை) என்ற பெயரில், ஆண்களை பார்த்துப்பார்த்து அவர்களைப்போலவே உடை அணிந்து, அவர்களைப்போலவே தண்ணி தம் அடித்து, இப்படி எல்லா விஷயத்திலும் ஆண்களைப்போலவே நடப்பது தான் பெண் சுதந்திரம் என்று நினைக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் அவர்கள் அவர்களையே அறியாமல் தங்களை ஆண்களிடம் அடிமைப்படுத்தும் செயல் தான்!



பெண்களே உங்களிடம், சில கேள்விகள்..
ஒரு பையனை கட்டிப்புடிச்சுட்டு தான் உங்களால் பைக்ல போக முடியுமா?
உடல் அங்கங்களை வெளிப்படுத்துவது போல் உடை அணிந்தால் தான் உங்களுக்கு ______________முடியுமா?
ஆண்களோடு போட்டி போடுவதால் நீங்கள் அடைந்தது அதிகமா? இழந்தது அதிகமா?


சுரிதார்னு ஒரு அருமையான உடை, அது பெண்கள்ட்ட சிக்கிட்டு படுற பாட்ட பாத்தா, பாவமா இருக்கு. லோ நெக், ஸ்லீவ் லெஸ், அப்டின்னு தினுசு தினுசா போடறாங்க. அதுவும் அந்த துப்பட்டாவ அவங்க படுத்துற பாடு இருக்கே... அதுஏன் துப்பட்டாவ கழுத்துல சுத்துன பாம்பு மாதிரியே போடுறாங்க? துப்பட்டா எத மூட கண்டுபுடிச்சாங்க? கழுத்த மூடவா? பெண்கள் ஒழுங்கா உடை உடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.


பெண்களே, தப்பெல்லாம் உங்க மேல வச்சுகிட்டு பையன குத்தம் சொன்ன என்ன அர்த்தம்? T-shirts ல "curves make many things stright", "objects here are bigger than they appear" னு எழுதுனா பையன் பாக்கத்தான் செய்வான், தொடணும்னு தான் நெனப்பான்! கறியை ஒழுங்காக பாத்திரத்தில் மூடி வைத்தால் பூனை ஏன் தொடுகிறது? முதலில் கறியை மூடி வையுங்கள், பிறகு பூனை மேல் பழி போடலாம்!


மங்களூர் பப்பில் ஸ்ரீராம் சேனா செய்ததைத்தான் மீடியா பெரிதுபடித்தின. ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் அப்படி செய்ததன் காரணத்தை யாரும் யோசிக்க வில்லை. அந்த பப்பில் உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ, இல்லை அம்மாவோ இருந்திருந்தால் நீங்கள் பெண்ணுரிமை பேசிக்கொண்டு இருக்க மாடீர்கள். நான்கு சுவர்களுக்குள் பண்ணவேண்டியதை பொது இடத்தில் (பப் என்றால் பப்ளிக் ஹவுஸ் என்று பொருள்) செய்தால் அடி விழத்தான் செய்யும். தவறுகளை தட்டி கேட்க அதிகாரமோ பதவியோ தேவையில்லை. "ஸ்ரீராம் சேனா என்ன கலாச்சார காவலர்களா?" என்று நீங்கள் கேட்டால், "நீங்கள் கலாச்சார கயவர்களாக இருக்கும் போது அவர்கள் காவலர்களாக இருப்பதில் தப்பில்லை என்பேன்!".



நம் நாட்டில் இந்த அளவுக்கா செக்ஸ் வறட்சி இருக்கிறது? இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் தாராளமயமாக்கல் உலகமயமாக்கால் என்னும் பெயரில் நம் தேசத்துக்குள் சாக்கடைகளை நுழைய விட்டது தான் காரணம். தாய் நாட்டையே ஏலம் விடும் இவர்கள், நாட்டு பெண்களின் கற்பை பற்றியும் கலாச்சாரம் பற்றியுமா யோசிக்கப்போகிறார்கள்? யாரவது ஒரு நல்ல மனசுக்காரர் பேசினாலும் அவரை பெண்ணடிமைவாதி, பிற்போக்குவாதி என்று பட்டம் கொடுத்து முடக்கி விடுகின்றனர்!


ஆரம்பத்தில் சொல்லுவதாக குறிப்பிட்ட அந்த பதிலும், கேள்வியும்...

"colleagues கூட டேட் பண்றது தப்பா?" என்ற கேள்விக்கு இதோ பதில். "உன் அம்மா வேலை செய்யும் இடத்தில் அவளுக்கும் colleagues உண்டு; 'வேலைக்கு போகும் மனைவி தான் வேண்டும்' என்று தேடி நீ மணம் புரியும் பதிபத்தினிக்கும் colleagues உண்டு". அப்படியெல்லாம் உன் அம்மா அன்று colleagues உடன் சென்றிருந்தால் இன்று உனக்கு என்ன பெயர்? உன் மனைவியோ காதலியோ சென்றால் உன் குழந்தைக்கு என்ன பெயர்?

டைரக்டர் செல்வராகவன் கிட்ட ஒரு கேள்வி. "நாட்டுல எவ்வளவோ நல்ல விசயங்கள பத்தி படம் எடுக்காம, யாரோ யாருடனோ படுத்த ஒரு கதையை 'உன்னதமான காதல் கதை, உலகத்துல நடக்குறதத்தான் காட்டிருக்கேன்' என்று சொல்கிறீர்களே? இதனால் ஒரு சில பேருக்கு தெரிஞ்ச ஒரு கலாச்சார சீரழிவான விசயத்த கோடிக்கணக்கான மக்களுக்கு 'அதுல ஒரு தப்பும் இல்ல' அப்டின்னு எடுத்து சொல்றிங்களே இது ஞாயமா? ரெயின்போ காலனி பாத்துட்டு செக்ஸ் வச்சுகிட்ட லவ்வேர்ஸ் பல பேர எனக்கு தெரியும். ஆனா இப்போ அவங்க வேற யாருக்கோ கணவனாவும் மனைவியாவும் வாழ்ந்துட்டு இருக்காங்க! அப்போ அவர்களை மணம் புரிந்த பெண்களும் ஆண்களும் கேனா கூனாவா? 'என் வாழ்க்கைல நடக்குற விசயத்த தான் படமா எடுக்கிறேன்' னு இனி சொன்னால், உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நாலு சுவருக்குள் நடந்த புணர்ச்சி விளையாட்டும் உங்களிடமிருந்து படமாக வரும் என்பது என் எதிர் பார்ப்பு! நிறைவேற்றுவீர்கள?"


பின் குறிப்பு:
காதலின் முடிவு தான் காமமே அன்றி காமத்தின் தொடக்கம் காதல் இல்லை...
நான் இந்த விஷயத்தில் ஒரு பிற்போக்குவாதி தான்.

தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....

Friday, March 13, 2009

பாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது!! தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....

ஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இல்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...

பின் குறிப்பு:
இந்த படம் தான் "ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....
இவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா? ஒரு தடவையா? ரெண்டு தடவையா? பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...

வாழ்க தமிழ் சினிமா.....

தமிழா!!!

இவன் நம்முள் ஒருவன்
பத்தாவது படித்து விட்டு
பட்டத்தையும் முடித்து விட்டு
பரதேசம் போனான்
வேலை தேடி...
கண்ணீரில் மிதக்கிறது
குடும்பமே வாடி....

அயல் நாட்டில்
அநாதை போல் அழைந்து
வெயிலிலும் பனியிலும் மழையிலும்
கருகி இருகி கரைந்து
நீ சம்பாதிக்கும்
அந்த காகிதத்தால்
உதடு இளித்தாளும்
உள்ளம் வலிக்கிறது...

எந்திர பறவை நிலையத்தில்
நீ கொண்டு வரும்
தொலைக்காட்சி பெட்டி
கணிப்பொறி பெட்டி
இதர பல பொருட்களின் இடையிலும்
கண்கள் உன்னை தான்
தேடுகின்றன முதலில்...

நீ கொடுத்த சென்டிலும்
உன் வியர்வையை நுகரும் மனைவி...
வெளிநாட்டு ஆடையிலும்
உன் உதிரம்அறியும் உடன்பிறந்தோர்..
பத்து கிலோ பெருத்தாலும்
"என்னப்பா இப்டி இளச்சுட்ட?"
என்று கேட்கும் தாய்...
இவர்களை எல்லாம் விட
உனக்கு அந்நிய மண்ணில்
கிடைத்து விடபோவது என்ன??
பணமா? பொருளா?

நீ அங்கிளா, அப்பாவா
என்று உன்
மகனுக்கு தெரியச்செய்ய
அந்த பணமும் பொருளும்
போதாது உனக்கு!
பாசம்-
உலகில் நிலையானது இது தான்...

அந்நியனின் அடிவருடியாய்
அங்கே காட்டிய அதே முனைப்பை
இங்கு இந்தியாவில் காட்டு..
அன்பின் அருமையும்
காதலின் கருணையும்
அருகில் இருக்க
பணம் ஒரு பொருட்டா?

சற்றே சிந்தி...
என்ன இல்லை இங்கு?
தொழில் இல்லையா?
வேலை இல்லையா?
நிம்மதி இல்லையா?
இருக்கிறது
இங்கே எல்லாம் இருக்கிறது...
இருப்பதைஎல்லாம் இங்கே விட்டுவிட்டு
நீ இருட்டில்
வெளிநாட்டில்
தேடுவது எதை?

உலகிற்கே கணிதத்தையும் வான சாஸ்திரத்தையும்
கொடையளித்த இந்த தேசம்
ஆயிரம் ஆண்டுகள் வன்கொடுமையால்
கொள்ளையடிக்கப்பட்ட இதே தேசம் தான்
இன்று
உனக்கு இருக்க இடமும்
உயர படிப்பும் கொடுத்தது...

செய்நன்றி மறந்தவனுக்கு
உய்வில்லை என்று
சபிக்கிறான் வள்ளுவன்...
செய்நன்றி மறவாதே...
உன்னை உயர்த்திய தேசத்தை
நீ உயர்த்த வேண்டாமா?
வெளிநாட்டான்,
வேலைக்கு நம்மை நாட வேண்டாமா?
உலகின் தலைஎழுத்தை
நிர்ணயிப்பவர்களாக நாம்
மாற வேண்டாமா?
வேண்டும்.. எல்லாம் வேண்டும்...
அதற்கு
சேர்ந்து உழை, இந்திய மண்ணில்
நம் புகழை பொறி உயர விண்ணில்...

சொர்க்கமே என்றாலும்
தமிழா!
அது நம்மூர போல வருமா?!?!?!

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One