ஆயுதம்...

Tuesday, November 19, 2013

இன்று அதிகாலை பேருந்தில் சிவகாசி - மதுரை சென்று கொண்டிருந்தேன்.. லேசான குளிரால் பேருந்துக்குள் எப்போதும் இருக்கும் வெக்கையும் அதன் அழுக்கு வாடையும் இல்லாமல் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. குறிப்பிட்டு பார்க்கும் படி பேருந்தில் யாரும் இல்லாததால் நான் வெளியில் நான்கு வழிச்சாலையின் செயற்கையை ரசித்துக்கொண்டே வந்தேன்.. அப்போது ஒரு பெண்மணி, ஸ்வெட்டர் மாட்ட அடம்பிடித்துக்கொண்டிருக்கும் தன் மூன்று வயது மதிக்கத்தக்க மகனிடம், “என்ன அடி வேணுங்கிதா? சீப்ப கொண்டு கையிலேயே நொட்டுனு அடிச்சிருவேன்” என்றார். அந்த குழந்தை ‘கம்’மென்று ஸ்வெட்டரை அணிந்து கொண்டது. எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம், ’தலை சீவும் சீப்பை வைத்து மிரட்டுவதை இன்னமும் பெற்றவர்கள் கடை பிடிக்கிறார்களா?’ என்று. என் சிறு வயதுகளில் கேள்விப்பட்டு, அனுபவித்திருந்த ஒரு செயல் பல வருடங்கள் கழித்து இன்று தான் காணக்கிடைத்தது.. அதுவும் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு பயப்படும் பிள்ளைகள் இப்போதும் உண்டா?



"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்..
மாதாவை.. மாதாவை.. “
சீராக ஒப்பித்துக்கொண்டிருக்கும் செய்யுள் திடீரென ஒரு இடத்தில் திக்கும்.. கையில் தமிழ் புத்தகத்தோடு என்னை முறைத்துக்கொண்டிருக்கும் அம்மாவை பார்ப்பேன் பயத்துடன். நீளமான தன் கூந்தலை பிண்ணிக்கொண்டே என்னை ஒப்பிக்க வைத்துக்கொண்டிருப்பார் அவர். நான் திக்குவதை பார்த்ததும் தன் கையில் இருக்கும் சீப்பை மடித்து ‘சொத்’ என என் தொடையில் சுண்டிவிட்டு சொல்லுவார், “மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்” என.. அந்த வலியில் எனக்கு அடுத்த வரியும் மறந்துபோயிருக்கும்.. அடுத்த வரிக்கு தொடையில் இன்னும் ஒரு சுண்டு. நான் அழுதாலும், கண்ணீர் வற்றினாலும் முழுதாக ஒப்பித்து முடிக்கும் வரை சீப்பில் இருந்தும் அம்மாவிடம் இருந்தும் விடுதலை கிடையாது. ஒவ்வொரு முறை மறக்கும் போதும் ஒரு சுண்டு விழும். நான் எழுந்து வேகமாக குடுகுடுவென ஓடிவிட்டால் அம்மாவால் பிடிக்க முடியாது என தெரிந்தாலும் ஓட மாட்டேன்.. ஓடினால் மீண்டும் வீட்டிற்கு தானே வர வேண்டும்? அப்போது இதை விட அதிக அடி விழுமே?

இப்போது நினைத்தால் ஒரு பசுமையான அழகிய கனவு போல் இருக்கும் அந்த நினைப்புகள் எல்லாம் அந்த காலத்தில் என் அம்மாவை ஒரு அரக்கி போல் நினைக்க வைத்தன. அம்மாவை பிடிக்காது எதெற்கெடுத்தாலும் அடிப்பார் என.. சீப்பு தான் என்றில்லை. கையில் கிடைக்கும் எதிலும் அடி உண்டு.. தயிர் மத்து, பனையோலை விசிறி, தோசை கரண்டி, எரியும் தீக்குச்சி, விளக்குமாறு, சைக்கிள் டியூப், வீட்டிற்கு வெளியில் இருக்கும் வேப்பங்குச்சி, என என்னை தாக்க பல ஆயுதங்கள் இருந்தன. என் தம்பி பிறந்து ஓரளவு வளரும் வரை நான் மட்டும் தனியாக வாங்கிக்கொண்டிருந்த பரிசுகளை, அவன் வளர்ந்த பின் பங்கிட்டுக்கொண்டோம்.. அப்போதெல்லாம் பிள்ளைகளை அடித்தால் பக்கத்து வீட்டில் இருந்து கூட வந்துவிடுவார்கள் காப்பாற்ற. இப்போதெல்லாம் பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால் கூட பேப்பர் பார்த்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது..

ஒரு முறை நான் என் அப்பா கொடுத்த கால் ரூபாய்க்கு வாங்கிய 5 தேன் மிட்டாய்களை கையில் வைத்திருந்தேன். எதுத்த வீட்டு சாமுவேல் பங்கு கேட்டும் கொடுக்காமல் அனைத்தையும் மொக்கிவிட்டேன். அவன் என் அம்மாவிடம் போய், “அத்த ராம் குமாரு கூரக்கடக்காரருக்கு தெரியாம முட்டாய திருடி திங்குறியான்” என அவன் கற்பனை வளத்திற்கு தகுந்தவாறு என்னை மாட்டிவிட்டான். நான் தேன் மிட்டாயில் இருந்து கையில் வடிந்த சீனிப்பாலை நக்கிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும் போது பொளேர் என என் செவிட்டில் ஒரு அறை விழுந்தது. என்ன ஏதுவென்று நான் சுதாரிப்பதற்குள், என் உதட்டில் எரிந்து கொண்டிருந்த ஒரு தீக்குச்சியை அம்மா தேய்த்துவிட்டார். சரியான வலி. உதடு எரிகிறது. மீண்டும் கண்ணத்தில் ஒரு பொளேர், தலையில் ஒரு நங்,.. காரணமே தெரியாமல் அம்மா அடிப்பது தான் எனக்கு மிகவும் கோபமாக வந்தது. அந்த வயதில் கோபத்தையும் அழுகையில் தானே காட்ட முடியும்? நான் அழுத அழுகையில் தெருவே எங்கள் வீட்டில் கூடி விட்டது. என் கீழ் உதட்டில் அதற்குள் லேசான கொப்பளம் வேறு வந்து விட்டது. எல்லோரும் என் அம்மாவை வைய ஆரம்பித்துவிட்டார்கள்... ‘இருந்தாலும் தனத்துக்கு ரொம்பத்தான் கோவம் வருது. பிள்ளைய இப்டியா போட்டு அடிப்பா?”. அம்மா ஒன்றுமே சொல்லாமல் என்னை முறைத்துக்கொண்டிருந்தார். நான் இப்பவும் ஏன் என்னவென்று புரியாமல் அழுது கொண்டிருந்தேன். “இருங்க அப்பா வந்தவொனே சொல்றேன்” என கண்ணீரோடு விரலை ஆட்டிக்கொண்டே அம்மவை மிரட்டியதாக ஞாபகம். 

என் கதியை பார்த்த என் துரோகி (அப்புறம், மாட்டி விட்டா அவன் என்ன நண்பனா?) “அத்த நான் சும்மா சொன்னேன். இவேன் காசு குடுத்து தான் கடேல வாங்குனியான். நான் சும்மா சொன்னேன்” என்றான். அவன் சொல்லி முடிக்கும் போது அவன் அம்மா அவன் முதுகில் ஒன்று கொடுத்தார் பாருங்கள், பக்கி, திறந்த வாயை மூட முடியவில்லை அவனால். அப்படி ஒரு அடி. கொஞ்ச நேரம் கழித்து தான் குரலே வெளிவந்தது அவனுக்கு. இவ்வளவு நேரம் என் அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருந்த தெரு இப்போது அவன் அம்மாவை சமாதானம் செய்ய வந்துவிட்டது. நான் அழுகை லேசாக குறைந்த நிலையில் வெறும் விம்மலோடு என் அம்மாவை பார்த்தேன். அவரைக்காணோம். தலையை திருப்பி தேடலாம் என்றால் தலையை திருப்ப முடியவில்லை. யாரோ என் தலையிலும் முகத்திலும் தங்கள் இரு கைகளாலும் என்னை அழுத்திப்பிடித்திருந்தார்கள். நான் மெதுவாக அண்ணாந்து பார்த்தேன். அம்மா என்னை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. அவ்வளவு தூரம் என்னை அடித்திருந்தாலும், அம்மா அழும் போது நானும் ஏன் அழுதேன் என்று எனக்கு தெரியவில்லை. அது தான் முதலும் கடைசியுமாக சூடு பட்டது என்றாலும், அதற்கு பின்னும் அடிக்கடி சூடு வைத்து விடுவதாக மிரட்டுவார். அடுப்பில் ஒரு கம்பியை காய வைப்பார். என் கண்ணீரின் அளவு, கம்பி அடுப்பில் காயும் நேரத்திற்கு inversely proportionalஆக இருக்கும்.


சரி அம்மா தான் இப்படி என்றால், எங்க அப்பாவிற்கு கோபம் வந்தால் அவ்வளவு தான். இது வரை என்னை மூன்றே மூன்று முறை தான் அடித்திருக்கிறார். ஆனால் அடித்த மூன்று முறையும் காய்ச்சல் வந்து படுத்துவிட்டேன். அப்படி ஒரு அடி. ஒரு படத்தில் வருமே ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுனு, அது மாதிரி. அம்மாவுக்கு என்று சில பெண்பால் ஆயுதங்கள் இருப்பது போல், அப்பாவுக்கும் ஆண்பால் ஆயுதங்கள் உண்டு. அதில் முதன்மையானது சைக்கிள் டியூப். சிவகாசி போன்ற தண்ணீருக்கு சீரழியும் ஒரு ஊரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தலைவனின் முதல் வேலை, அதிகாலையில் எங்காவது அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது. அப்படி வந்தால் தான் அன்று வீட்டில் எல்லோரும், கழுவ, குளிக்க, பிழங்க முடியும். சைக்கிளில் இரண்டு பக்கமும் இரண்டு குடம் தொங்கும் கேரியரில் ஒரு குடத்தை நிறுத்தி அதை சைக்கிள் டியூப்பால் இறுக்கி கட்டி, சீட்டில் மாட்டுவார்கள்.  ஒரே நடையில் மூன்று குடங்கள் தண்ணீர் கொண்டு வரும் வசதி இது. இதற்காகவே சிவகாசியில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சைக்கிள் டியூப் நிச்சயம் இருக்கும்.



ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து நான் முகத்தை கழுவிக்கொண்டிருந்தேன். அது தீபாவளி முடிந்த சமயம். மீண்டும் வேலை ஆரம்பிக்கும் வரை அப்பாவுக்கு விடுமுறை. அப்பாவிடம் பல ஆண்டுகளாக கேட்ட வாட்சை அந்த தீபாவளிக்கு  தான் வாங்கி கொடுத்திருந்தார்.. புது வாட்ச் வாங்கிய ஆசையில் அதை நான் கழட்டுவதே இல்லை. தூங்கும் போது கூட வாட்ச் தான். அப்போதும் அப்படித்தான், கையில் வாட்ச் கட்டியவாறே முகத்தை, கை, கால்களை கழுவினேன். என் அப்பா அங்கிருந்து குரல் கொடுத்தார். “தம்பி வாச்ச கழட்டி வச்சிட்டு மூஞ்ச கழுவு”... நான் அசால்ட்டாக, “எப்பா இது வாட்டர் ப்ரூஃப் வாச்சி.. ஒன்னும் ஆவாது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் கப்புக்குள் கையை விட்டேன்.. கையை கப்பில் இருந்து எடுக்கும் நொடியில் சுளீர் என்று என் முதுகில் ஏதோ படர்ந்தது. அப்படியே தரையில் விழுந்தேன். ஒரு சாதாரண ரப்பர் டியூப் இவ்வளவு வலிக்குமா என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. வழக்கமாக என்னை அடிக்கும் அம்மா, அன்று மிக மிக ஆச்சரியமாய் அடியில் இருந்து என்னை காப்பாற்றினார். மற்ற இரு முறைகளும் அப்பா கைகளால் மட்டுமே அடித்ததால், அது ஆயுதம் என்னும் இக்கட்டுரை தலைப்புக்கு வெளியில் செல்வதால் அதைப்பற்றிய விளக்கங்கள் வேண்டாம்.

எங்கள் தெருவில் முதலில் கல்லூரி சென்று டிகிரி முடித்தவர் என் மாமா தான். என் போல் இல்லாமல், கொஞ்சம் டீசண்ட்டான ஆள்.. அவருக்கு நான் தெரு பயல்களோடு விளையாடுவது சுத்தமாக பிடிக்காது. அதுவும் சாக்கைடையில் விழுந்த பந்தை கையை விட்டு எடுத்து மீண்டும் அதை வைத்தே கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் பார்த்தால் என்னை கழுவேற்றிவிடுவார். அதனால் மாமா இருக்கும் போது நான் நல்லபடி நாணயமாக வீட்டில் அமைதியாக இருப்பேன். அது மாமா டிகிரி முடித்து விட்டு வேலை தேடிய சமயம். ஒரு நாள் வேலை விசயமாக விருதுநகரில் யாரையோ பார்க்க சென்று விட்டார்.. நான் விருதுநகர் என்றால் ஏதோ காலையில் கிளம்பினால் நைட்டு தான் வர முடியும் என்று நினைத்து தைரியமாக தெரு பயல்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். வெயில் காலம் வேறு அது. அதனால் ஸ்டைலாக ரஜினி மாமா மாதிரி சட்டை பட்டனை எல்லாம் கழட்டிவிட்டு, சட்டையை காற்றில் பறக்க விட்டு பேர் பாடியாக விளையாடிக்கொண்டிருந்தேன். 





சிவாத்தம்பி அடித்த பந்து மேரிக்கா வீட்டு சாக்கடையில் விழுந்தது. அந்த சாக்கடை தான் ஃபோர் லைன். நான் தான் அங்கு ஃபீல்டிங். ஃபோருக்கு போன பந்தை ஸ்டைலாக குனிந்து சாக்கடையில் கையை விட்டு எடுத்துக்கொண்டே தெருவை பார்த்தேன். எப்போதும் நின்ற வாக்கிலேயே தெருவை பார்த்துவிட்டு, இன்று தரையோடு ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட படுத்துக்கொண்டே பார்ப்பது தெருவை மிகவும் நீளமாக காட்டியது. ’நம்ம தெரு எவ்ளோ பெருசு!’ என வியக்கும் போது தூரத்தில் ஏதோ தெரிந்த உருவம் ஒன்று வந்தது தெரு முக்கில். ஆமா, அது நம்ம மாமா தான். நான் பந்தை எடுத்து வீசிவிட்டு, “ஏ நான் வெளாட வல்லப்பா” என்று குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி ஆச்சிக்கு அருகில் அமைதியாக படுத்துவிட்டேன், சட்டை பட்டனை எல்லாம் ஒழுங்காக மாட்டி. மாமா கதைவை திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்ததும் அவர் பனையோலை விசிறியை எடுத்தார். படுத்திருந்த என்னை ஒரே கையில் விச்சென தூக்கி இன்னொரு கையால் தொடையிலும், முதுகிலும், இன்னும் பிற பின் பகுதிகளிலும் அவர் பாணி கிரிக்கெட் ஆடிவிட்டார். தடுத்த ஆச்சிக்கும் வசவு விழுந்தது, அவர் கொடுக்கும் செல்லத்தால் தான் நான் தெருப்பயல்களோடு சேர்ந்து கெட்டுப்போவதாக. அடுத்த சில் நாட்களில் மாமாவுக்கு ஐராபாத்தில் வேலை கிடைத்து சென்று விட்டார். நான் மீண்டும் சிவாத்தம்பி அடித்த பந்தை தேடி மேரிக்கா வீட்டு சாக்கடையை நோண்ட ஆரம்பித்துவிட்டேன் சந்தோசமாக..

ஒரு காலத்தில் அம்மா என்றாலே நம்மை அடிக்க கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜந்து என நினைத்த நான் இன்று அம்மா என்பதற்கு கொண்டிருக்கும் அர்த்தமே வேறு. ஆனாலும் என் அம்மா ஒன்றும் என்னை அடிப்பதை நிறுத்திவிடவில்லை. இப்போதும் நன்றாக வாங்குவேன். வாங்கினால் இருவருக்கும் சிரிப்பு தான் வரும். என் அம்மாவுக்கும் எனக்கும் ஆல்டைம் ஃபேவரைட் எங்கள் வீட்டு தோசைக்கரண்டி தான். அதில் கல்லில் தோசை சுட்ட நாட்களை விட என் முதுகில் தோசை சுட்ட நாட்கள் தான் அதிகம். என்னை அடித்ததால் கைப்பிடியின் நடுவில் வளைந்திருக்கும் அந்த தோசைக்கரண்டி ஆயுசு கெட்டியாக இப்போதும் தோசையை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தன் பழைய கடமையையும் மறக்காமல் இன்றும் அம்மாவால் என் முதுகில் சில சமயம் செல்லமாக விளையாடவும் செய்கிறது.




வீட்டில் இருக்கும் ஆயுதங்களை விடுங்கள். பள்ளியில்? அந்த ஒல்லியான நீண்ட குச்சிக்கு பயந்து நாம் எழுதிய வீட்டுப்பாடங்களும், மனப்பாடம் செய்த போயம்களும் தான் எத்தனை எத்தனை? சின்ன வயதில் எல்லாம், டீச்சர் நம்மை நொட்டு நொட்டு என அடிப்பதால் தான் அதற்கு அடி ஸ்கேல் என்று பெயர் வைத்ததாக நினைத்துக்கொண்டிருப்பேன். வாத்தியார் பிரம்பை பயன்படுத்திய 10ம் வகுப்பு வரையிலான போயம் ஞாபகம் இருக்கிறது. பிரம்புக்கு வேலை இல்லாத 11, 12, கல்லூரிகளில் படித்த அனைத்தும் மறந்துவிட்டன. இன்றைய தேதியில் வாத்தியார் யாராவது ஒரு பையனை லேசாக காதை திருகினால் கூட டிவி, பேப்பர் எல்லாம் வந்துவிடுகிறார்கள். பாவம், இப்போது இருக்கும் பிள்ளைகள் எங்களை போல் தினுசு தினுசாக அடி வாங்குவது, வகுப்புத்தோழன் அடி வாங்கும் போது அஷ்டகோணலாக முகம் மாறுவதை ரசிப்பது, அடுத்தவன் அழுவதை பார்த்து நம் வலியை மறந்து சிரிப்பது போன்ற பல அருமையான அனுபவங்களை இழக்கிறார்கள்.... அவர்கள் அப்பாக்களுக்காவது தாங்கள் அடிவாங்கிய கதைகளை சொல்ல நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.. 

எனக்கு தெரிந்து எங்கள் தெருவில் கம்மியாக அடி வாங்கிய ஆள் நானாகத்தான் இருப்பேன். முத்துக்குமார் அண்ணனுக்கு எல்லாம் மிதியே விழுகும். அவங்க அப்பாவும் எங்க அப்பா மாதிரி தான். அவ்வளவு லேசில் கோபப்பட மாட்டார். ஆனால் கோபம் வந்தால் மூஞ்சு முகறை எல்லாம் பெயர்ந்து விடும். இவ்வளவு அடி வாங்கினாலும் எங்கள் தெருவில் என் செட்டு ஆள் வரை யாரும் இதுவரை எங்கள் பெற்றவர்களை எதிர்த்தோ பிறரிடம் மரியாதை குறைந்தோ ஒரு முறை கூட பேசியது இல்லை. சின்ன வயதில் இருந்த பயம் இப்போது பன்மடங்காக பெருகி மரியாதையாக மாறிவிட்டது.. எந்த சூழலில் பயமெல்லாம் மரியாதையாக மாறியது என்பதை இப்போது வரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றும் பள்ளியில் எந்த ஆசிரியர் என்னை வெளுவெளு என்று வெளுத்தாரோ அவரை தான் அதிகம் பிடிக்கிறது. இதுவெல்லாம் அடிமை புத்தியா என்று கூட யோசிப்பேன். இருந்துவிட்டு போகட்டுமே, ஒன்றுக்கும் உருப்படாத எஜமானனாக இருப்பதை விட பக்குவப்பட்ட அடிமை எவ்வளவோ சிறந்தவன் தானே?


இப்போது யாரும் பிள்ளைகளை அடிப்பதையோ, ஏன் மிரட்டுவதையோ அதட்டுவதையோ கூட பார்க்க முடிவதில்லை. அப்படி பெற்றவர்கள் அதட்டினால் பிள்ளைகள் லேசாக அழுவது போல பாவலா காட்டுகின்றன. உடனே பெற்றவர்கள் பிள்ளைகளிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். 3 வயது 4 வயது நண்டு நசுக்கான் சொல்வதை தான் 30 வயது பெற்றோர்கள் கேட்க வேண்டும் போல.. வீட்டில், வெளியில், பள்ளியில், ஓட்டலில், கோயிலில், பொருட்காட்சியில் எங்கும் பெற்றவர்களுக்கு பயப்படாத பிள்ளைகளின் சத்தம் தான். பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்திற்கு இப்படியெல்லாம் கண்டிக்கப்படாமல் இருப்பது சரியா தவறா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு புரிதல் இல்லை. ஆனால் சிறு வயதில் பிரம்பிற்கும், விசிறி கட்டைக்கும், விளக்குமாறுக்கும், தோசைக்கரண்டிக்கும் வேலை வைத்தவனுக்கு, வருங்காலத்தில் லத்திக்கு வேலை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திடமாக நம்புகிறேன்.. 

காலையில் அந்த பயல் ஒழுங்காக ஸ்வெட்டர் மாட்டியிருந்தால் நீங்கள் என் செந்தில்தனமான அடி உதை கதைகளை எல்லாம் கேட்க வேண்டியே அவசியமே இருந்திருக்காதல்லவா? ஹ்ம் எல்லாம் உங்கள் விதி.. முடிந்தால் நீங்கள் வீட்டில் வாங்கிக்கட்டிய கதைகளை கமெண்ட்டுங்கள்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One