சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..

Sunday, February 24, 2013

இந்த தொடரின் முதல் பாகத்திற்கு இங்கு
ரெண்டாம் பாகத்திற்கு இங்கு
மூன்றாம் பாகத்திற்கு இங்கு
நான்காம் பாகத்திற்கு இங்கு க்ளிக்கவும்..

ஒரு வழியாக இந்த தொடர் ஒரு முடிவை எட்டியிருக்கிறது.. நமது வாடிக்கையாளரை சமாளித்து, எப்படி சேல்ஸ் வேலையில் நிலைப்பது என்பதைப்பற்றி இத்தனை நாள் பார்த்தோம்.. என்ன தான் உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் நன்றாக வியாபாரம் செய்தாலும், அதற்கான முழு அங்கீகாரமும் கொடுப்பது நம் பாஸ் தான். நன்றாக வேலை செய்துவிட்டு நம் மேனேஜரிடம் நல்ல பெயர் எடுக்காவிட்டால், 99 ரன்னில் அவுட் ஆன பேட்ஸ்மேன் போல் ஆகிவிடும் நம் நிலைமை. எடுக்காத அந்த ஒரு ரன்னை பற்றி தான் ஊரே பேசும், நமக்கும் கஷ்டப்பட்ட அந்த 99 ரன்கள் மறந்து போகும், விடுபட்ட அந்த ஒரு ரன் தான் மனதை உறுத்தும்.. பாஸின் பாராட்டு அந்த 100வது ரன் போலத்தான். சரி, மேனேஜர் நம்மை பாராட்டுமாறு எப்படி நடந்து கொள்வது?
.
 
மேனேஜருக்கு எப்பவும் ஒரு ஈகோ இருக்கும். தன்னிடம் தான் முழு பொறுப்பும் இருக்க வேண்டும் என்று. நம் வாடிக்கையாளர் நம்மை ஆஹா ஓஹோவென புகழந்தால் கூட மேனேஜருக்கு நம் மீது கோவம் வந்துவிடும் ‘என்ன இது நேத்து வந்த இவன இப்படி புகழுறாய்ங்க? ஒரு மேனேஜர் நம்மள எவனும் கண்டுக்க மாட்றாய்ங்க?’ என்று.  திடீரென்று குடும்பத்துக்குள் புதுசாய் வந்த மருமகள், தன் ஆஸ்தான பதவியான சமையல்கட்டை முழு பொறுப்போடு எடுத்துக்கொண்ட பின் ஒரு மாமியாருக்கு வரும் கோவம் போன்றது அது. அந்த ஈகோவை சமாளிக்க நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம் தான். ‘என்ன இருந்தாலும் உங்கள மாதிரி வராது அத்த’ என மருமகள் சொல்வது போல், எந்த விசயம் நடந்தாலும் அதை மேனேஜரிடம் சொல்லிவிடுவது தான். நம் வாடிக்கையாளர் இன்று குளிக்கவில்லை என்று தெரிந்தால் கூட உடனே மேனேஜருக்கு ஃபோன் போட்டு, “சார், இன்னைக்கு நம்ம சுப்பையா குளிக்கல சார்” என்று சொல்லிவிடுவது உத்தமம். அவருக்கு நம் மீது அப்போது தான் ஒரு நம்பிக்கை வரும், ‘சே நல்ல பையன், எதா இருந்தாலும் நம்மக்கிட்ட ஒடனே சொல்லிறான்’ என்று.



ஒரு மேனேஜர் என்பவர் அவருக்கு மேல் இருக்கும் மூத்த அதிகாரிகளிடம் வியாபார சூழலை தினமும் சரியாக புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டும். ஆனால் அவரால் தன் பொறுப்பில் இருக்கும் எல்லா இடங்களையும், எல்லா வாடிக்கையாளர்களையும் நேரில் பார்க்க முடியாது. நாம் தான் அவருக்கு தகவலை சொல்லியாக வேண்டும். நம்மை போன்று இருக்கும் எல்லா சேல்ஸ் ரெப்புகளும் மேனேஜருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தாலும், நாம் முதல் ஆளாக சொல்வது தான், அவருக்கு நம் மீது நம்பிக்கை ஏற்பட வைக்கும்.

அதே போல் எது செய்வதாக இருந்தாலும், அது உங்கள் பவருக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது இன்னும் நல்லது. ஒரு டீலர் தான் வாங்கிய பொருட்களுக்கு கம்பெனிக்கு சரியாக பணம் கட்டவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்து ஒரு ஆர்டர் கொடுக்கிறார். அந்த ஆர்டரை மறுத்து, முதலில் மொத்த பணத்தையும் கட்ட சொல்ல ஒரு சேல்ஸ் ரெப்பாக உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் நீங்கள் அப்படி சொன்ன அடுத்த நொடியில் அந்த டீலர் உங்கள் மேனேஜரை அழைத்து, “சார், நான் எத்தன வருசம் டீலரா இருக்கேன்? நேத்து வந்தவன் சார் அந்த ஆபிஸரு. எனக்கு லோடு குடுக்க மாட்டேங்கிறான் சார் அவன். நான் பணம் குடுக்காம எங்க போயிருவேன்?” என ஒரு பிட்டை போட்டால், அந்த நேரத்தில் நம் மேனேஜர் அந்த டீலருக்கு தான் சப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த இடத்தில் உங்களுக்கு இரண்டு விதங்களில் பின்னடைவு.

1. டீலரிடம் கம்பெனி ரூல்ஸ் என்று நீங்கள் என்ன சொன்னாலும், நேரடியாக மேனேஜரிடம் பேசி நீங்கள் சொல்வதை மீறி என்ன செய்ய முடியுமோ அதை செய்வார். உங்களுக்கு அந்த டீலரிடம் அடுத்து மரியாதையே இருக்காது.

2. எதற்கெடுத்தாலும் ஒரு டீலர் மேனேஜரை தொந்தரவு செய்து கொண்டிருந்தால், மேனேஜர் உங்களை unfit என நினைத்துக்கொள்வார்.
இந்த மாதிரி அசம்பாவிதங்களும் அவமானமும் வராமல் இருப்பதற்கு, மேனேஜரிடம் உடனுக்குடன் நாம் பேசுவது தான் சரி வரும். மேலே இருக்கும்

அதே சம்பவத்தில் நீங்கள் இப்படி செய்யலாம்.
1. டீலரிடம் பேசுவதற்கு முன் மேனேஜரிடம், இந்த மாதிரி இந்த டீலருக்கு பணப்பிரச்சனை இருக்கிறது, அவர் லோடு கேட்டால் நான் கொடுக்க முடியாது என சொல்லிவிடுவேன். ஒரு வேளை சரக்கை அனுப்பினால் பணத்தை வாங்குவது கஷ்டம். உங்கள் கருத்து இதுல என்ன சார்? அப்படினு அவரிடம் கேள்வியை கேட்கலாம். நம் மனதில் இருக்கும் முடிவை தான் அவரும் சொல்வார்.

2. அல்லது மேனேஜரிடம் கலந்தாலோசிக்காமலே டீலருக்கு பொருளை கொடுக்க முடியாது, முதலில் பணத்தை கட்டுங்கள் என சொல்கிறீர்கள். சொல்லிமுடித்தவுடன், உங்கள் டீலர் மேனேஜரை அழைக்கும் முன் நீங்கள் மேனேஜரை அழைத்து விசயத்தை சொல்லிவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம். டீலர் மேனேஜரை அழைக்கும் போது, “ஆமா ஆபிஸர் சொன்னாரு, உங்க outstanding கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, ஏதாவது கொஞ்சம் payment போடுங்க சார், பாத்து செய்யுறேன்” என்பார் மேனேஜர். நாமும் தப்பித்துக்கொள்ளலாம், மேனேஜரிடமும் விசயத்தை சொன்ன மாதிரி ஆகிவிடும், டீலரும் மேனேஜரே சொன்னதால் பணம் போடாமல் நம்மிடம் சரக்கிற்கு தொந்தரவு செய்ய மாட்டார்.

எதாக இருந்தாலும் காலை வேலைக்கு கிளம்பும் முன் மேனேஜருக்கு ஒரு ஃபோன் போட்டு அன்று செய்ய வேண்டிய வேலைகளையும், போக வேண்டிய இடங்களையும் சொல்லிவிட வேண்டும். மாலை வேலை முடிந்ததும் அடுத்து ஒரு அட்டெண்டன்ஸ். இடையில் தேவைப்படும் போதெல்லாம் அவரை அழைத்து பேசுங்கள். “இவன் நாம சொல்றதலாம் செய்வான், நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறான், நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டான்’ என்கிற நம்பிக்கை நம் மேனேஜர் மனத்தில் வரும்படி நடந்துகொண்டாலே போதும். ஏனென்றால் அவர் தான் நம் அப்ரைசலில் முதலில் கையெழுத்து போடுபவர். ஒரு மேனேஜர் நம்மிடம் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச செயல்பாடு, மார்க்கெட்டில் நடக்கும் விசயங்களை அவரிடம் சொல்ல வேண்டும் என்பதைத்தான். அதை சரியாக செய்துவிடுங்கள்.

இதையெல்லாம் முழுதாக பின்பற்றினால் வேலையில் எளிதாக ஜெயித்துவிடலாம். இது போக, வேலைக்கு சம்பந்தம் இல்லாத, ஆனால் நாம் வேலையை சிறப்பாக செய்ய சில பாயிண்டுகள் கீழே. இவற்றை சரியாக பின்பற்றுங்கள்.

1. எந்த சூழ்நிலையிலும் நம் வாடிக்கையாளர்/டீலரிடம் ஜாதி, மத, மொழி வித்தியாசம் பார்க்காதீர்கள். மனதில் கூட அப்படி ஒரு எண்ணம் இருக்க வேண்டாம். ஏனென்றால் கண்டிப்பாக பேச்சு வாக்கில் மனதில் இருப்பது வந்துவிடும். ஜாதி, மதம் சம்பந்தமான விசயங்களை பேசும் போது மிக சூதானமாக இருக்கவும். இப்படித்தான் போன மாதம் என் இஸ்லாமிய டீலர் ஒருவரிடம் கமலுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தேன் அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறந்து. அதன் பின் அவரை தாஜா செய்வது பெரும்பாடு ஆகிவிட்டது பிறகு.

2. டீ, பஜ்ஜி, வடை, கூல் ட்ரிங்க்ஸ் என ஒவ்வொரு டீலரிடம் செல்லும் போதும் புது மாப்பிள்ளை போல் ஏதாவது தின்ன கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்



தினமும் ரெண்டு டீக்கு மேல் வேண்டாம். ஒரு சிலர், அதுவும் கிராமங்களில், நீங்கள் அவர்கள் கொடுப்பதை சாப்பிடவில்லையென்றால் கோவித்துக்கொள்வார்கள். அவர்களிடம் எல்லாம் ‘டீ காஃபி சாப்பிடுறது இல்ல’ அது இதுனு எதாவது சொல்லி தப்பித்துவிடுங்கள். இல்லையென்றால் உடல் சீக்கிரம் கெட்டுவிடும்.

3. நம் சேல்ஸ் வேலை ஆஃபிஸ் வேலை போன்றது அல்ல. வேளாவேளைக்கு சரியாக நேரம் வைத்து சாப்பிட முடியாது. எங்கேயாவது எதாவது பஞ்சாயத்தில் பொழுது போவதே தெரியாமல் இருக்கும். மணியை பார்த்தால், மாலை 4 ஆகியிருக்கும். என்ன ஆனாலும் காலை சாப்பாட்டை 10மணிக்குள்ளும், மதியம் 2 மணிக்குள்ளும், இரவு 9மணிக்குள்ளும் முடித்துக்கொள்ளுங்கள். புரோட்டா மிக எளிதாக, எல்லா ஊர்களிலும், தெருவுக்கு தெரு இண்டு இடுக்கு மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் என்றாலும் அதிகம் சாப்பிடாதீர்கள்.

4. உடம்பை மிகவும் கண்ட்ரோலாக வைத்துக்கொள்ளுங்கள்.

சேல்ஸ் வேலையில் சேரும் போது ’அந்த 7 நாட்கள்’ அம்பிகா மாதிரி இருக்கும் ஆட்கள், அடுத்த 3,4 வருடங்களில் ’அவன் இவன்’ அம்பிகா மாதிரி ஊதிவிடுவார்கள். எல்லாம் வகை தொகை இல்லாமல் டீலர் கடைகளில் திங்கும் டீ, வடை, பஜ்ஜி, போன்றவையும், கம்பெனியில் தான் சாப்பாட்டுக்கு பில் வச்சு கன்வேயன்ஸ் கொடுக்குறாங்களே, என்கிற தைரியத்தில் நெய்யும் பருப்பு பொடியும் போட்டு ஐயர் மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸும், முனியாண்டி விலாஸில் முழுங்கும் முழுக்கோழி பிரியாணியும் தான் காரணம். எனக்கு தெரிந்த பல சேல்ஸ் ஆட்களுக்கு 30 வயதிலேயே, ப்ரெஷர், கொலஸ்ட்ரால், சுகர், உடல் பருமன், இதய நோய், லொட்டு லொசுக்கு என எல்லாம் உண்டு. அதனால் சேல்ஸ் வேலையில் நாவடக்கம் திங்கும் போதும் முக்கியம்.

5. நாம் செல்லும் வண்டி நல்ல கண்டிசனில் இருத்தல் வேண்டும்.

வாழ்வில் பாதி நேரம் நாம் வண்டியில் தான் கழிக்க வேண்டியிருக்கும். சரியான நேரத்தில் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும். தரமான ஹெல்மெட் எப்போதும் அணிந்தே வண்டி ஓட்டுங்கள். பெட்ரோல் எப்போது ரிசர்வில் விழாத அளவுக்கு இருக்கட்டும். 
சேல்ஸ் வேலையில் எப்போதும் தொலைபேசி அழைப்பு வந்துகொண்டிருந்தாலும் வண்டியில் செல்லும் போது ஃபோன் பேசவோ, எஸ்.எம்.எஸ் அனுப்பவோ வேண்டாம். நம் உயிர் நம் கம்பெனிக்கு மிக முக்கியம்.. என்னது குடும்பமா? சேல்ஸ் வேலைக்கு வந்து விட்டால் குடும்பம் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்..

6. டீலர் வீட்டில் இருக்கும் பெண்களை நம் வீட்டுப் பெண்களாக நினைத்துப் பழகுங்கள்.  நம்மை வீட்டில் ஒருவராக, தன் மகனாக, அண்ணனாக, தம்பியாக நினைத்து பல டீலர்கள் பழகுவார்கள். அந்த பழக்கம் நீங்கள் அந்த கம்பெனியில் இருந்து மாறினாலும், வேறு ஊருக்கு மாற்றல் ஆனாலும் தொடரும். ஆள் பழக்கம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் உதவும். அதனால் அவர்கள் பழக்கத்தை முறையாக பயன்படுத்துங்கள்.

7. போட்டி நிறுவன சேல்ஸ் ஆபிஸர்களுடன் நல்ல பழக்கத்தில் எப்போதும் இருங்கள். அந்தப்பழக்கம் ரொம்ப பெர்சனலாகவும் போகக்கூடாது, மிகவும் ப்ரொஃபசனலாகவும் இருக்கக் கூடாது. அதாவது நமக்கு தேவைப்படும் போது அவர் உதவி செய்ய தயங்காத அளவுக்கு அந்தப்பழக்கம் இருக்க வேண்டும்.

8. எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலையில் இருக்கும் கோவத்தையோ, பிரச்சனைகளையோ வீட்டில் காட்டாதீர்கள். வீட்டிற்குள் வரும் போது அலுவலக ப்ரஷர்களை வெளியிலேயே விட்டுவிட்டு வாருங்கள்.


அவ்வளவு தான்.. இந்த கட்டுரைத் தொடர் முடிந்தது. இனி நீங்கள் தைரியமாக சேல்ஸ் வேலையில் அடியெடுத்து வைக்கலாம். பல தரப்பட்ட மனிதர்களின் பழக்கமும், விதவிதமான அனுபவங்களும், ஊர் சுற்ற கம்பெனி கொடுக்கும் காசும், தினமும் பிரச்சனைகளை சந்திக்கும் த்ரில்லும் இனி உங்கள் தினப்படி வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும். வாழ்த்துக்கள்..

18 comments

  1. Really Very nice article. Thank you
    Gayathri

    ReplyDelete
  2. நல்லதொரு சேல்ஸ் வேலையின் கட்டுரைத் தொடர்...

    எனது dashboard-ல் அடுத்தடுத்து வரிசையாக ஐந்து பகிர்வுகள்... ஏன் ஒரே நாளில்...? இனி மேல் இது போல் வேண்டாம் என்பது எனது சிறிய விருப்பம்... நண்பர்களிடம் பகிர்கிறேன்...

    மேலே இதை குறிப்பிட்டதற்கும் நண்பர்களுக்காகவே...

    நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிண்ணே.. இது தான் தொழிற்களத்தில் ஒரு மாதமாக எழுதி வந்த பதிவு.. முடிந்ததும் இங்கு மொத்தமாக போட்டுவிட்டேன்.. ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? கொஞ்சம் தெளிவாக சொன்னால் புரிந்துகொள்வேன்.. சொல்லுங்களேன் ப்ளீஸ்..

      Delete
  3. பயனுள்ள தொடர். ஐந்து பாகத்தையும் ஒரே நேரத்தில் அலுப்பு தட்டாமல் படிக்க வைத்துவிட்டீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  4. நல்ல தொடர். ரசித்தேன்.

    ReplyDelete
  5. //நன்றாக வேலை செய்துவிட்டு நம் மேனேஜரிடம் நல்ல பெயர் எடுக்காவிட்டால், 99 ரன்னில் அவுட் ஆன பேட்ஸ்மேன் போல் ஆகிவிடும் நம் நிலைமை. எடுக்காத அந்த ஒரு ரன்னை பற்றி தான் ஊரே பேசும், நமக்கும் கஷ்டப்பட்ட அந்த 99 ரன்கள் மறந்து போகும், விடுபட்ட அந்த ஒரு ரன் தான் மனதை உறுத்தும்.. பாஸின் பாராட்டு அந்த 100வது ரன் போலத்தான்.// வாஸ்தவம் தான் ...

    //ரொம்ப நன்றிண்ணே.. இது தான் தொழிற்களத்தில் ஒரு மாதமாக எழுதி வந்த பதிவு.. முடிந்ததும் இங்கு மொத்தமாக போட்டுவிட்டேன்.. ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?//

    எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே மதிப்பு தான். அது ஏமாற்றினாலும் கூட ...


    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தொடர்ந்து அனைத்தையும் கூர்ந்து வாசித்ததற்கு மிக்க நன்றி ஜீவன்சுப்பு.. //எதிர்பார்ப்புகளுக்கு என்றுமே மதிப்பு தான். அது ஏமாற்றினாலும் கூட ...// இதை ஏன் இங்கு இப்போது சொல்கிறீர்கள் என புரியவில்லை

      Delete
  6. //சேல்ஸ் வேலையில் நாவடக்கம் திங்கும் போதும் முக்கியம். // முப்பது வயசிலேயே பிரஷர், சுகர், ஹார்ட் அட்டாக் என்று இளைய தலைமுறை அவதிப்படுவதற்கு மிக முக்கியமான காரணம். சேல்ஸ் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல , எல்லாரும் கடைபிடிக்க வேண்டியது.
    ஹெல்மெட் போடுறதை நம் தமிழ்நாட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பெங்களூரில் இருசக்கர வாகன நெரிசல் அதிகமெனினும் விபத்து சாவுகள் குறைவாக இருப்பதற்கு இது ஒரு மிக முக்கிய காரணம். அதுக்கு அவங்க சொல்லுற காரணத்தை கேட்டா சப்புன்னு அறையலான்னு தோணும். "வேர்க்குது" - அவனவன் அம்பது டிகிரி வெயில்ல தில்லியிலேயே ஹெல்மெட் போடுறான்.. , "சைடுல தெரிய மாட்டிங்குது" - ரிவியு மிரர் எதுக்கு? "பழக்கமாயிடிச்சு" - டிரக் அடிக்சனா ?, "முடி கொட்டுது" - மண்டை முக்கியமா மயிர் முக்கியமா?
    இது மிக முக்கியமாய் அனைவரும் உடனடியாக கடைபிடிக்க வேண்டியது.
    நான் சேல்ஸ் வேலையில் இல்லாவிட்டாலும் தொடர் இன்ரஸ்டிங்கா இருந்தது. கையில பெட்டியோட யாரையாச்சும் சேல்ஸ்ன்னு வந்தாலே சந்தேக கண்ணுடன் பார்க்கும் வியாதி கொண்ட நான் அவர்களை இன்முகத்துடன் சந்திக்கும் பக்குவத்தை இத்தொடர் கொடுத்துள்ளது. நன்றி ராம்குமார்.
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாரதி மேடம்.. உங்கள் கமெண்ட்டை, இதை நீங்கள் தான் எழுதியிருக்கிறீர்கள் என்று தெரியாமல் முதல் வரியில் இருந்து வாசித்துக்கொண்டு வரும் போது, ”பெங்களூரில் இருசக்கர வாகன நெரிசல் அதிகமெனினும்” இந்த வார்த்தைகளை வாசிக்கும் போது டக்கென்று உங்கள் ஞாபகம் வந்தது.,. முடிவில் பார்த்தால் உங்கள் பெயர்.. மகிழ்ச்சி :-)
      உண்மை தான் இதில் நான் கூறியிருக்கும் பல விசயங்களும் எல்லா வேலைகளுக்கும் பொதுவானவை தான்.. அதிலும் வாகனம் ஓட்டும் போது எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.. நான் சாலை விபத்தை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.. நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.. இருந்தாலும் இது தான் அதன் சுட்டி.. இதிலும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்
      http://www.sivakasikaran.com/2013/02/blog-post.html

      Delete
  7. வீடு திரும்பலில் நீங்கள் ....

    //பதிவர் பக்கம் - சிவகாசிக்காரன்

    சிவகாசிக்காரன் என்கிற பெயரில் பதிவெழுதும் இளைஞர் - சேல்ஸ் வேலையில் ஜெயிக்க வழிகள் என ஒரு தொடர் எழுதுகிறார். நேரடி அனுபவத்தை எளிமையாய் சொல்லி செல்கிறார். இங்கு வாசித்து பாருங்கள்//

    ReplyDelete
    Replies
    1. ஆம் பார்த்தேன் ஜீவன்சுப்பு அவர்களே.. என் மீது அக்கறை கொண்டு அதை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி :-)

      Delete
  8. Sales ,marketing field enrale palar virumbuvathillai.antha bayathai pokkiyulleer nanbare.Visit my blog kaliaperumalpuducherry.blogspot.com and write ur suggestions

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.kaliaperumal Kali.. உங்கள் தளத்தையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் இப்போது :-)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One