ரிலீசான முதல் நாள் நான் பார்த்த எந்தப்படமும் எனக்குப்பிடித்ததில்லை (உ.ம். மதுர, சச்சின், ஆழ்வார், பையா, அயன், சுறா, வேட்டைக்காரன், வில்லு, அழகிய தமிழ் மகன், மேலும் பல விஜய் அஜித் படங்கள்). இந்தப்படங்கள் முதல் நாள் மட்டும் அல்லாது என்று பார்த்திருந்தாலும் எனக்கு பிடித்திருக்காது. இதனாலேயே நான் முதல் நாள் படம் பார்ப்பதை சென்டிமென்ட்டாக தவிர்த்து வந்தேன். ஆனால் என் சென்டிமென்ட்டை சுக்குநூறாக்கிய படங்கள் இரண்டு. ஒன்று தலைவரின் எந்திரன், மற்றொன்று ஆடுகளம். சன் பிக்சர்ஸ்காரர்கள் உருப்படியாக கொடுத்திருக்கும் மற்றொரு படைப்பு.
எல்லாமே சரியாக அமைந்திருக்கும் படம். பொல்லாதவன் படத்தை ஒட்டிய அதே திரைக்கதை என்று பொல்லாதவனின் சாயல் இருந்தாலும் படம் ரசிக்கும் படியாகவே உள்ளது. பாடல்கள், தனுசின் நடிப்பு (cock giving என்று சொல்லும் இடம், இடைவேளை சேவல் சண்டை காட்சியில் சேவலை விடும் போது அவர் கொடுக்கும் ஒரு பார்வை, அருமை), வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஹீரோயின் டாப்சி (ஒரே குறை, அவருடைய நடிப்பு inversely proportional to அவரது கலர்) என்று இரண்டரை மணி நேரம் உக்கார்ந்து ரசிக்கப்போதுமான அம்சங்கள் உள்ள படம். ஆனால் இப்படிப்பட்ட மதுரை மண் சார்ந்து எடுக்கப்படும் படங்கள் மதுரை என்ற நகரை எவ்வளவு அசிங்கமாக, அந்த மக்களை எவ்வளவு கேவலமாகவும் கொரூரமாகவும் சித்தரிக்கிறதோ அதையே தான் ஆடுகளமும் செய்திருக்கிறது.
மதுரையை மையமாக வைத்து மிகப்பெரிய வெற்றி அடைந்து இந்த சம்பிரதாயத்திற்கு அடிகோலிய படம் காதல். இதற்குப்பின் பல படங்கள் மதுரையை வைத்து வந்து விட்டாலும், அவற்றில் பல விஷயங்களில் ஒரே சாயல் தான் உள்ளது. ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் அவை பெரும்பாலும் மதுரையை தவறாக சித்தரிப்பதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட மதுரையை மையமாக வைத்து வரும் படங்களால் அறியப்படும் முதல் செய்தி, "மதுரையில் இருப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள்". எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் கோபக்காரர்களே தவிர நம்பிக்கை துரோகி என்று ஒருவரையும் காட்ட முடியாது. பழக்கத்திற்காக எதையும் செய்யும் மக்கள் அவர்கள். துரோகம் செய்ய அஞ்சுபவர்கள். சுப்ரமணியபுரம் படத்தில் இந்த விஷயம் ஒத்துக்கொள்ளும் படி இருந்தது. மற்ற அனைத்து மதுரை படங்களிலும் கொஞ்சம் ஓவர் தான்.
அவர்களைப்பற்றி காட்டப்படும் இன்னொரு விஷயம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், sentimental/emotional idiots, ரவுடித்தனம் செய்பவர்கள். அதாவது சமுதாயத்தில் எதெல்லாம் கெட்டது என்று சொல்லப்படுகிறதோ அதையெல்லாம் செய்பவன் தான் மதுரையில் நிரம்பி இருக்கிறான் என்று தான் இன்றைய சினிமாக்கள் காண்பிக்கின்றன. மதுரையில் இருப்பவனெல்லாம் ரவுடியா? மதுரை படம் என்றால் யாராவது யாரையாவது துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள் கத்தியோடு! சினிமாகாரர்களை பொறுத்தவரை மதுரை என்பது இன்னும் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இருக்கும் ஒரு லூசுத்தனமான கிராமம். இவர்கள் எல்லாம் கொஞ்சம் மதுரையை பற்றி தெரிந்து கொண்டு படம் எடுக்கலாம். மதுரையை சுற்றி இருக்கும் அனைத்து கல்வித்தலங்களும் பெயர்போனவை. இவர்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று எதை வைத்து காட்டுகிறார்கள்?
அதே போல் இன்னொரு மிக மோசமான செயல், மதுரை ஹீரோ என்றாலே அவன் அசிங்கமாக இருக்க வேண்டும், அல்லது அசிங்கமான ஹீரோ என்றால் கதை மதுரையில் நடக்க வேண்டும். கதாநாயகி அழகாக இருந்து அவனை உயிராக என்ன வேண்டும். இந்த அழுக்கு ஹீரோ அழகு ஹீரோயின் தியரிய கண்டுபுடிச்சவன் மட்டும் சிக்குனான்னா நாக்கப்புடுங்குற மாதிரி நாப்பத்தெட்டு கேள்வி கேக்கணும். எல்லா ஊரிலும் இப்போது பெண்கள் மிகவும் கவனத்துடனும் திட்டமிடலுடனும் தான் ஆண்களை தேர்வு செய்கிறார்கள். இவன் போவானாம் "I am love you" என்று சொல்லுவானாம், ராத்திரி பொரோட்டா வாங்கி குடுப்பானாம், அவளுக்கு அந்த அழுக்கு ஹீரோ மேல் காதல் வந்து விடுமாம். என்ன கொடும தமிழ் டைரக்டர்ஸ் இது?
இதே போல் மதுரை மக்களைப்பற்றி காட்டும் இன்னும் பல விஷயங்கள்
*அவர்களுக்கு அறிவு மந்தம்
*குரலை உயர்த்தி கத்தி பேசுவார்கள்
*ஆண் - வெட்டி முண்டம் வீணா போன தண்டம்
*எவ்வளவு நல்ல பெண் என்றாலும் அந்த வெட்டி முண்டத்தை தான் லவ் பண்ணும்
*நடுத்தெருவில் அரிவாளை தூக்கிக்கொண்டு யாரையாவது துரத்துவது.
*பெண்கள் தாவணி போட்டுக்கொண்டு ஊரில் திரிவது (தாவணி என்ற ஒரு வழக்கொழிந்த ஆடை இருப்பது சினிமா பார்த்தால் மட்டுமே தெரிகிறது. இலவச டிவி இல்லாத இடத்தில் கூட நைட்டி எல்லாம் வந்துருச்சே பாஸ்?)
*கொலை என்பது மிகவும் மலிந்து போனதாக இருக்கும்.
*ஆண்கள் டவுசர் தெரியத்தான் லுங்கி கட்டுவார்கள்
*எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனை மதுரைக்காரன் "ஏய், என்ன?" என்று மிக துணிச்சலோடு நடு ரோட்டில் கேட்பான்.
*ஜாதி என்பது மதுரையில் மட்டுமே உள்ளது, உலகில் வேறு எந்தப்பகுதியிலும் ஜாதி என்ற ஒரு மனிதத்தன்மை அற்ற செயல் இருப்பதே இல்லை. மதுரைக்காரன் ஜாதி வெறி பிடித்தவன்.
*மதுரை ஹீரோ வேலைக்கே செல்ல மாட்டான்.
இப்படியெல்லாம் ஒரு ஊரைப்பற்றி தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல படம் எடுக்கும் இயக்குனர்களை என்ன செய்வது? சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவள் சென்னைப்பெண், மதுரை என்னும் ஊர் அவளுக்கு சினிமாவில் மட்டுமே பரிச்சயம். ஆனால் அவள் சொல்கிறாள், அவளுக்கு பிடிக்காத ஊர் மதுரை தானாம். அங்கு ஒரே ரவுடிகளும், சல்லிப்பசங்களும் (இது அவள் கூறிய அதே வார்த்தை) இருப்பார்களாம். பெண் அடிமை மிக்க ஊராம். பாருங்கள் நமது இயக்குனர்கள் இந்த அழகான பண்பாடு மிக்க ஊரை எப்படி பிறரிடம் எடுத்து செல்கிறார்கள் என்று.
நானும் காத்துக்கொண்டிருக்கிறேன், ஏதாவது ஒரு படம் மதுரையின் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்க்கையையும் காட்டாதா என்று...
