குரு - சினிமா விமர்சனம்..

Thursday, July 31, 2014

மணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயதில் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைபெறும். அங்கு வரும் கிருஷ்ண தேவராயருக்கு அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. எந்த ஓவியமும் முழுமை பெறாமல் அங்கங்கு தீட்டாமல் விடப்பட்டிருக்கும்.. பார்வையாளர்கள் அதை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக்கொள்ள வேண்டும், அல்லது தாங்களாக அந்த ஓவியங்களை உருவகித்துக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அந்த ஓவியங்களை ஆஹா ஓஹோ என்றுப் புகழும் போது மன்னனுக்கு மட்டும் அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஓவியர்கள் மீது டென்சன் ஆகி ஏதோ தண்டனை எல்லாம் கொடுத்து, பின் as usual நம்ம தெனாலி ராமன் வந்து ஏதேதோ செய்து  மன்னனைத் திருத்துவார்.. 



நம்ம மணிரத்னம் படம் பார்க்கும் போது ஏன் இந்தக்கதை ஞாபகம் வருமென்றால், அவரின் படம் கதையின் முக்கியமான விசயங்களை, சம்பவங்களை மட்டும் தொட்டுவிட்டுப் போய்விடும்.. பல விசயங்களை நாமாகத்தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும், ‘இது தான் நடந்திருக்கும்’ என்று. அவர் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு விசயமாக விவரித்துக்கொண்டோ, விளக்கிக்கொண்டோ இருக்க மாட்டார்.. பொதுவாகவே அவரின் படங்கள் பார்ட் பார்ட்டான காட்சிகளை தொகுத்துப் பார்ப்பது போலவே இருக்கும்.. ஒரு வேளை தனி காமெடி டிராக் இல்லாததால் கூட அப்படித்தோன்றலாம்.. நாயகன், தளபதி, பம்பாய் என அவரின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2007ல் வெளி வந்த அவரின் ‘குரு’ படமும் இதே வகையறா தான்.. இந்தப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பல முறை எழுதியிருந்தாலும் ப்ளாக்கில் ஒரு பதிவாக எழுத ரொம்ப நாள் ஆசை.. இப்போது தான் நிறைவேறுகிறது..



ஒரு கிராமத்தில் சாதாரண ஸ்கூல் வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்த ஒருத்தன், வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறி கொண்டு, தன் தகப்பனின் எதிர்ப்பையும் மீறி வியாபாரம் ஆரம்பித்து, சகப்போட்டியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சட்டம் என அனைத்தையும் மீறி இந்தியாவின் business icon ஆக வளர்ந்து, தன் கனவை நனவாக்குவதே “குரு”.. கேட்பதற்கு மிகச்சாதாரணமான விக்ரமன் பாணி, மசாலாக் கதை போலத்தான் இருக்கும்.. ஆனால் அதை மணிரத்னம் கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே க்ளாசிக்.. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..

இந்தப்படத்தில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் அது பாத்திரப்படைப்பும், வசனமும், இசையும் தான்.. ஒவ்வொரு பாத்திரமும் மிக மிக நேர்த்தியாக அதற்கென்று ஒரு இலக்கணத்துடன் தான் இருக்கும். குருபாயில் இருந்து ஆரம்பித்து இரண்டு நிமிடம் மட்டுமே வரும் அவரின் செவிட்டு மாமனார் வரை அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம். 



அதுவும் வியாபாரம் மட்டுமே உயிர், லாபம் மட்டுமே குறிக்கோள், வெற்றி மட்டுமே இலக்கு என்று ஓடும் ஒரு நாயகனை அவ்வளவு அற்புதமாக படைத்திருப்பார் மணிரத்னம்.. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் அபிஷேக் பச்சன்.. ஆரம்பக் காட்சிகளில் பம்பாய் மார்க்கெட்டில் துணி டிரேடிங் வியாபாரத்திற்கு மெம்பராவதற்காக ஒருவரிடம் சிபாரிசிற்குப் போய் நிற்பார் அபிஷேக். அந்த ஆள் கோல்ஃப் கிரவுண்டில் இருப்பான்.. “நீ இந்த பந்தை அந்த குழிக்குள்ள போடு, லெட்டர் தரேன்” என்பான்.. “பந்து பொந்துக்குள்ள விழுகணும், அவ்வளவு தான?” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க?” என்பார்.. குருவிற்கு சட்டம், ரூல்ஸ் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் அவனுக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை.. அவனுக்குத்தேவை இலக்கை அடைவது மட்டுமே, என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் தான் இந்தக்காட்சி.. பந்து குழிக்குள் விழ வேண்டும், கையாலோ, மட்டையாலோ அல்லது வேறு எதாலோ, ஆனால் பந்து குழிக்குள் விழ வேண்டும் அவ்வளவு தான்.. இது தான் குரு.. 





அதே போல் தன்னை மட்டமாக நினைப்பவர்களை, குறைத்து மதிப்பிடுபவர்களை, தன்னைப்பற்றி தவறாகப் பேசுபவர்களை அவன் கண்டுகொள்ள மாட்டான்.. ‘உன்னப்பத்தி தப்பா பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. அவன் வாயை அடைக்கணும்னா, நீ அவன கண்டுக்காம இன்னும் வேகமா உழைச்சி முன்னேறணும்’ என்பான்.. தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிடும் பத்திரிகைக்கு தான் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பான்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்பான்.. சட்டம், ரூல்ஸ் என எதையும் மதிக்கவில்லை என்றாலும் தன் ஷேர் ஹோல்டர்களை அவன் எப்போதும் கைவிடத் தயாராக இல்லை.. அவன் முன்னேறும் போது அவன் ஷேர் ஹோல்டர்களும் முன்னேற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.. இப்படி எந்நேரமும் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், லாபம் என்று திரிபவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு நிகராக இருக்க வேண்டுமே?

ஐஸ்வர்யா ராய் அப்படி ஒரு மனைவியாக இந்தப்படத்தில் வாழ்ந்திருப்பார்.. குருவுக்கு சரி சமமாகப் பேசுவதிலும் சரி கஷ்ட நேரங்களில் துணை இருப்பதிலும் சரி, அவரின் வியாபார ஆசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் சரி, ஒரு perfect match ஆக இருப்பார்கள் இருவரும்.. வேறு ஒருவனைக் காதலித்து அவனை மணக்க முடியாத சூழலில், ஒரு கட்டாயத்தில் தான் அபிஷேக்கை அவர் மணப்பார்.. திருமணம் முடிந்தவுடனே வியாபாரத்தைப் பார்க்க (ஆமா, புதுப்பொண்டாட்டிய விட அவருக்கு வியாபாரம் தான் பெருசு) பம்பாய் கிளம்புவார் அபிஷேக்.. அப்போது ரயில் நிலையத்தில் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் கவிதை.. பொதுவாகவே ஐஸ்வரயா ராய் என்றால் அவர் ஒருவர் தான் அழகு என்று பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்.. எனக்கு அவரைப் பிடித்த ஒரே படம் என்றால் அது இது தான்.. அவ்வளவு அழகாக இருப்பார்.. ஏனென்றால் அந்தப் பாத்திரம் அப்படி..




தன் கணவன், தந்தை போல் மதிக்கும் பத்திரிகை ஜாம்பவானிடம் கூட பதிலுக்குப் பதில் பேசக்கூடிய புத்திசாலி அவள்.. கணவனுக்கு பக்கவாதம் வந்தாலும் துணை நின்று அவனை ஜெயிக்க வைப்பவள், “பிசினஸ்ல மட்டும் இல்லைங்க கஷ்டத்துலயும் கூட நான் அவரோட பார்ட்னர் தான்” என்று கோர்ட்டில் தைரியமாகப் பேசுபவள் அவள்.. ஐஸ்வர்யா ராய் வேறு எந்தப்படத்திலும் இந்த அளவிற்கு நடித்திருப்பாரா என்றுத் தெரியவில்லை... கடைசிக் காட்சியில் கோர்ட்டில் அபிஷேக் அனைத்தையும் பேசி முடிக்கும் போது, அவரை பெருமையும், சந்தோஷமும், அழுகையும் கலந்த மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், செம காட்சி அது.. அந்த ஒரு காட்சி போதும் அவரின் நடிப்பைக் கூற..

அபிஷேக், ஐஸ்வர்யாவிற்கு அடுத்த முக்கியமான பாத்திரங்கள் என்றால் பத்திரிகையாளராக வரும் மிதுன் சக்ரபர்த்தியும், மாதவனும் தான்.. ஆரம்பத்தில் அபிஷேக்கின் தந்தை போல் பாசம் காட்டும் மிதுனே ஒரு கட்டத்தில் அபிஷேக்கின் சட்ட மீறல்களைக் கண்டு அவருக்கு எதிராகத் திரும்புகிறார். தன் பத்திரிகையில் அபிஷேக்கின் முகத்திரையை கிழிக்க அவருக்கு உதவுபவர் தான் மாதவன்.. இது அப்படியே அம்பானியின் வாழ்க்கையில் நடந்த விசயம்.. அம்பானிக்கு ஆரம்ப காலத்தில் "Indian Express”ன் ராம்நாத் கோயென்கா (Ramnath Goenka) மிகுந்த ஆதரவாக, ஒரு குடும்ப நண்பர் போல இருந்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் விரிசல் வந்ததால் அவர் எஸ்.குருமூர்த்தியின் (மாதவன் பாத்திரம்) துணை கொண்டு அம்பானியின் லஞ்சம், சட்ட மீறல்கள், என ஒவ்வொன்றாக கிழித்துத்தொங்க விட்டார்.. எஸ்.குருமூர்த்தி இன்றும் பல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் பற்றியெல்லாம் விரிவாக, practicalஆக எழுதும் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு தமிழரும் கூட..





இந்தப்படம் முழுக்க முழுக்க குருநாத் தேசிகன் @ குருபாய் என்னும் ஒரு வியாபார ஆசை கொண்ட மனிதனைச்சுற்றி நகர்வது மட்டும் தான்.. மேம்போக்காக பார்த்தால் ஒரு வறட்சியான, சுரத்தே இல்லாதக் கதை போல் தெரியும்.. ஆனால் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத ஒரு மாஸான ஹீரோயிசப்படம் என்று இதை தாராளமாகச்சொல்லலாம்.. ஏனென்றால் குருபாய் என்கிற பாத்திரம் நம் மனதில் அப்படி ஒரு பிம்பத்தை விதைக்கும்.. ஹீரோயிசப்படம் என்றால் சண்டைக்காட்சி அவசியம்.. ஆனால் சண்டைக்காட்சிகளை விட விறுவிறுப்பான வசனமும், பின்னணி இசையும்  இந்தப்படத்திற்கு அமைந்துவிட்டது.. 

குருபாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது “இல்லைங்கிற வார்த்தை என் காதுல விழாதே?”.. ஒரு இடத்தில் அவரின் நண்பர் சொல்வார், “நீ வியாபாரத்துல ரொம்ப வேகமா ஓடுற”.. அதற்கு குருபாய், “போடா நான் இதை விட வேகமா பறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்பார்.. மிதுன்சக்கரபர்த்தி குருபாயிடம் ஆரம்பக்காட்சியில் சொல்வார், “ஒரே நேரத்துல பணிவையும் புத்திசாலித்தனத்தையும் யாரும் எதிர்பாக்காத மாதிரி உபயோக்கிற திறமை உனக்கு இருக்கு” என்று.. உண்மை தான்.. தனக்கு ஒவ்வொரு முறை பிரச்சனைகள் வரும் போதும், பணிவாகப் போக வேண்டிய இடத்தில் பணிவாகவும், அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி காட்டவும் செய்வார்.. கலெக்டர் வீட்டில் மொத்த துணி பண்டல்களையும் இறக்கி வைக்கும் காட்சி அதற்கு நல்ல உதாரணம் (நாயகனை ஞாபகப்படுத்தும் காட்சி அது).. “குருநாத் கூட மோதணும்னா நீயும் குருநாத்தா மாறணும்.. ஆனா குருநாத் என்னைக்கும் ஒருத்தன் தான்.. அது நான் மட்டும் தான்” போன்ற வசனங்கள் எல்லாம் அந்த பாத்திரத்தை பில்ட்-அப் செய்வதில் பெரும் பங்கு கொண்டவை..







இந்தப்படத்தில் மிக மிக முக்கியமான, படத்தின் ஆணிவேரான காட்சி என்றால் அது க்ளைமேக்ஸ் கோர்ட் காட்சி தான்.. குருபாய் செய்த ஊழல்களுக்கு கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கும்.. அது வரை விசாரணையின் போதெல்லாம் வாயே திறக்காத குருபாய் தனக்குப் பேச வாய்ப்பு வேண்டும் என்பார்.. வெறும் 5நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.. அந்த 5 நிமிடத்தில் அவர் பேசும் பேச்சும், அபிஷேக்கின் நடிப்பும், அந்த வசனமும், இசையும் மிரட்டி எடுத்துவிடும்.. ’அப்படி என்னப்பா பெருசா தப்பு பண்ணிட்டான் இந்த ஆளு?’ என அவன் மீது குற்றம் சுமத்தியவர்களே சொல்லும் அளவிற்கு ஸ்ட்ராங்கான வசனம் அது.. கீழே இருக்கும் சுட்டியில் அந்தக்காட்சியைப் பாருங்கள்.. 



ஏ.ஆர்.ரெஹ்மான், வழக்கம் போல மணிரத்னம் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பார்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் இந்தப்படத்திற்கு.. ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தும் செம.. ஒரே கனா, ஆருயிரே மன்னிப்பாயா இரண்டும் என்னை மிக மிகக்கவர்ந்த பாடல்கள்.. இந்தப்படத்திற்காக IIFA மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ரெஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழில் வசனங்களை அழகம்பெருமாள் எழுதியிருந்தார்.. மிக மிகக்கூர்மையான வசனங்கள்.. “5நிமிஷம் டைம் குடுத்தீங்கல்ல எனக்கு? இப்ப நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன்.. 30 செகண்ட் ப்ராஃபிட்.. இது தாங்க பிசினஸ்” - மொத்தக் கதையையும் இந்த ஒரு வசனம் சொல்லி முடித்துவிடும்.. 

படத்தில் எனக்குத்தெரிந்த ஒரே நெருடலான விசயம், குஜராத்திய பாரம்பரிய உடை அணிந்து வரும் ஆட்களை, குஜராத் பக்கம் நடக்கும் கதையை (அம்பானியின் சொந்த ஊர் குஜராத் தான்) தமிழிலும் அப்படியேக் காட்டியிருக்கலாம்.. தேவையில்லாமல் இலஞ்சி என்றுக் கூறி, திருநெல்வேலிப் பேச்சு வழக்கில் அனைவரையும் பேச விட்டது தான் கொஞ்சம் இடித்தது.. இன்னொரு விசயம், ஓரளவாவது பிசினஸ் பற்றித்தெரியாத பாமர மக்களுக்கு இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும், அல்லது நாமாகவே புரிந்து கொள்வோம் என நினைத்து சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விசயங்கள் புரியாது.. மற்றபடி படத்தில் எதுவும் பெரிய தவறாகவோ குறையாகவோத் தெரியவில்லை எனக்கு..

இந்தப்படத்தில் காட்டியிருப்பதைப் போல் ஒரு மனிதன் நிஜமாகவே இப்படியெல்லாம் அரசை ஏமாற்றி, அதன் ஓட்டைகளை பயன்படுத்தி இந்தியாவின் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் அந்த மனிதன் மீது நமக்கு எவ்வளவு கோபம் வரும்? அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும்? ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி? ”அவன் திருந்த வேண்டிய அவசியமே இல்லை.. அவன் எப்பவும் போல வியாபாரம் செய்தான்” என்று தான் படம் முடிகிறது.. நாமும் சந்தோசமாக ரசிக்கிறோம்.. எதனால் இந்த முரண்?

இந்த இடத்தில் தான் எனக்கு இன்னொரு முக்கிய விசயம் ஞாபகம் வருகிறது.. ”சதுரங்க வேட்டை”யை லேசாக இந்தப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.. அதிலும் நாயகன் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றத்தான் செய்கிறான்.. ஆனால் அந்தப்படத்தில் அவன் திருந்துவது போல் முடித்திருப்பார்களே, ஏன்? சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்..  அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள்? அதனால் அவன் திருந்த வேண்டியக் கட்டாயம் அந்தக்கதையில்.. நாமும் அது தான் சரியான முடிவு என்றோம்..





ஆனால் “குரு”வில் அவன் ஏமாற்றுவது அரசாங்கத்தை.. அதுவும் எப்படி?மக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது, அவனும் எப்பவும் போல் சம்பாதித்துக்கொண்டே தான் இருப்பான், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன்.... ஆக, செய்யும் தவறை பெரிதாக செய்தால் பாமரனில் இருந்து பட்டத்தில் இருப்பவன் வரை நமக்கு உதவுவான் என்பது தான் இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது நமக்கு கிடைக்கும் moral of the stories.. :D

ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..


வேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறிவு வேஷங்களும்....

Wednesday, July 16, 2014

செய்தித்தாள், டிவி, ஃபேஸ்புக், அட அவ்வளவு ஏன் சட்டசபை வரைக்குமே ஹாட் டாபிக் என்றால் அது சென்னையில் வேஷ்டி கட்டி வந்த ஒரு ஜட்ஜை கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்காத விவகாரம் தான்.. தமிழர் பண்பாடு, தனிமனித உரிமைன்னு ஆரம்பிச்சு ஆளாளுக்கு அவங்க கருத்தை அள்ளித் தெளிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க.. என் பங்குக்கு நானும் சில கருத்துக்கள் சொல்லலாம்னு பாக்குறேன்.. 

முதலில் பொதுவான சில விசயங்களை சொல்லிவிடுகிறேன்.. ஸ்கூல், கல்லூரி, வேலை இடம், பப் என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சில விதிமுறைகள், ட்ரெஸ் கோட் உண்டு.. அதைப் பின்பற்றாதவர்கள் அந்த இடத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை பொதுவாகவே.. நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பிய உடையில் அலுவலகத்திற்குப் போக முடியும்? எனக்கு மிகப்பிடித்த உடை என் கைலி தான்.. ஒரு விற்பனைப் பிரதிநிதியான நான், எனக்குப் பிடித்த உடை என்பதற்காக அதை அணிந்து கொண்டு என் டீலர் கடைகளுக்கு செல்ல முடியுமா? சென்றால், என்னை அவர் லோடு மேனோடு உட்கார வைத்துவிடுவார்... அட, முதலில் இந்த மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை ஒரு நாள் சீருடை இல்லாமல் பள்ளிக்கு அனுப்பிப்பாருங்களேன் நிலவரம் புரியும்..

இதே போல் தான் அந்த கிளப்பும்.. அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன.. அதைப் பின்பற்றித்தான் நடக்க முடியும்.. அந்த கிளப் என்றில்லை, சென்னையில் பல பப்புகளில் கூட வேஷ்டிக்கு கெட் அவுட் தான்.. சில ஏர்லைன்ஸ்களில் கூட வேஷ்டிக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கெல்லாம் போய் நம் இன உணர்வை காட்ட வேண்டியது தானே? அட அவ்வளவு ஏன்? நம்ம ஊர் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு வேஷ்டி கட்டி வர அனுமதி இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்களேன்.. என்ன தான் ஆண்மையானது, கம்பீரமானது, சுத்தமானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக ஃபார்மல் உடை என்பதற்கான வரையறையில் வேஷ்டி கிடையாது.. அதனால் தான் மேற்கத்திய பாணிக்கு தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் நிறுவனங்களும், அந்த நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளக்காசை உறிஞ்சும் பப்/கிளப் போன்ற சங்கதிகளிலும், அந்த நிறுவனங்களுக்கு அடிமைகளை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் தங்கள் எல்லைக்குள் வேஷ்டியை அனுமதிப்பதில்லை.. சரி பொதுவான விசயங்கள் போதும், இப்போது மேட்டருக்கு வருகிறேன்..

வேஷ்டி கட்டிய அந்த நீதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும் எப்படி நம்மால் அது தமிழ் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பொங்க முடிகிறது? வேஷ்டியில் தான் தமிழ் கலாச்சாரமே அடங்கி இருக்கிறதா? ஒரு காமெடியில் விவேக் அந்த ஊர் நாட்டாமையை பார்த்துச்சொல்வார், “டேய் 10% டிஸ்கவுண்ட்ல எடுத்த கோ-ஆப்டெக்ஸ் துண்டுல எப்படிடா 18 பட்டிய பேக் பண்ணுனீங்க?” என்று.. அது போலத் தான் இருக்கிறது இதுவும்.. தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது? ஒழுங்கான தமிழ் பேசுகிறோமா? நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறோமா? தமிழ் மாதங்களை பின்பற்றுகிறோமா? அட தமிழின் மெய் எழுத்துக்களை எத்தனை பேர் வரிசையாக சொல்வீர்கள்? அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்? இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணமகன் கூட வேஷ்டி கட்டுவதில்லை.. அவரின் நண்பர்கள் மட்டும் ஸ்டைலுக்காக வேஷ்டி கட்டி 4 ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்கிறார்கள்.. இது தான் வேஷ்டிக்கு நாம் கொடுக்கும் மரியாதை.. அல்லது ஒரு சிலர் அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், கைலிக்கு பதிலாக வேஷ்டியை அணிந்து கொள்கிறோம்.. இதைத் தவிர வேஷ்டிக்கும் நமக்கும் என்ன பெரிய தொடர்பு இருக்கிறது? 

நம் வீட்டிற்குள்ளேயே, நம் அன்றாட வாழ்விலேயே வேஷ்டியை மறந்து விட்டு, தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தே இழந்து விட்டு, இன்று எங்கோ ஒரு இடத்தில் எவனோ ஒருவன் வேஷ்டியை அனுமதிக்கவில்லை என்றதும் பொங்குகிறோம்.. நல்லா இருக்கு நம்ம தமிழ்ப்பற்று.. முதலில் தமிழர் கலாச்சாரத்தை வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் ஆரம்பிப்போம்.. மக்களிடம் வேஷ்டிக்கு ஆதரவு இருந்தால் எவனாலும் அதை மறுக்கவோ, தடுக்கவோ முடியாது.. இன்றும் கேரளத்தில் ’வேஷ்டிக்கு அனுமதி இல்லை’ என்று எவனும் சொல்ல முடியாது.. அங்கே மக்களிடம் நம்மை விட அதிகமாகவே வேஷ்டி பயன்படுத்தப்படுகிறது.. அங்கு எவனாவது வேஷ்டிக்கு மறுப்பு சொன்னால் நடப்பதே வேறு... நாமும் வேஷ்டியை பரவலாக அணிந்தால் எவன் அதை தடுக்க முடியும்? அவன் தடுக்க காரணமே நாம் தானே? வேஷ்டி கட்டிய ஆட்களை ஒருவன் உள்ளே அனுமதிக்கவில்லையா, யாரும் அங்கே போக வேண்டாம்.. அவன் என்ன நம்மை புறக்கணிப்பது? நாம் அவனை புறக்கணிப்போம்.. அதை விடுத்து வேஷ்டியில் தான் தமிழர் பண்பாடே இருக்கிறது என்பது போல் புலம்பிக்கொண்டே இருப்பதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை..

இன்னொரு முக்கிய விசயம், அது போன்ற கிளப்புகள், ஒரு பாமர தமிழனுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விசயம்.. அங்கு வேஷ்டியை அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் ஒரு சாதாரண தமிழனுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.. எத்தனை வேஷ்டி கட்டிய சாதாரண தமிழன் அங்கு போகப்போகிறான்? சும்மா இது தமிழர் பண்பாட்டை குழைக்கும் சதின்னுல்லாம் செண்டிமெண்ட்டாக யாரோ பேசுவதை பலரும் சீரியசாக எடுத்துக்கொள்வது தான் வேதனை.. நம் கலாச்சாரத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு பெரிய விசயமாகப் படவில்லை இது எனக்கு..

இதாவது பரவாயில்லை, செண்டிமெண்ட்டாக சிலர் அணுகுவதால் வரும் பிரச்சனை இது.. தமிழர்கள் தான் செண்டிமெண்டிற்கு எளிதாக மடங்கிவிடுவோமே? ஆனால் செண்டிமெண்டையும் தாண்டி இதில் இன்னொரு முக்கிய விசயம் இருக்கிறது. அது தான் பகுத்தறிவாளர்கள் எடுத்திருக்கும் தனிமனித சுதந்திரம் என்னும் நேக்கான ஒரு அஸ்திரம்.. அதாவது வேஷ்டி கட்டி வருவது என்பது தனி மனித சுதந்திரமாம் அதில் இன்னொருவர் தலையிடுவது அநாகரிகமாம்.. ரொம்ப சரி தான்.. தனிமனித சுதந்திரம் தான்.. ஆனால் பொது இடங்களில் தனிமனித சுதந்திரத்திற்கு என்ன வேலை? வீட்டை தாண்டி, வெளியில் வந்தவுடன், அதாவது தனி மனிதனாக நாம் இருக்கும் இடத்தை தாண்டி, சமூகம் என்னும் வட்டத்திற்குள் நுழையும் போது அந்த சமூகம் சரி என்று அங்கீகரித்திருக்கும் விசயத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.. இதைத்தான் நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஸ்கூல், வேலை இடம், போன்றவற்றில் அதற்கான வரையறைகளுக்குட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என.. வீட்டில் ஒரு பெண் எப்போதும் நைட்டியுடன் தான் இருக்கிறாள்.. ஒரு திருமண விசேஷத்திற்கும் அவள் நைட்டியுடன் போகலாமா? அது அவள் தனி மனித சுதந்திரம் தான் என்றாலும், திருமண நிகழ்ச்சிக்கு அப்படி செல்ல முடியாதே? ஆனால் தனிமனித சுதந்திரம் என்று இது போன்ற விசயங்களை, தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்றே தெரியாமல் நாமளும் ஆதரித்துக்கொண்டிருக்கிறோம்..

சரி இதை எப்படி பகுத்தறிவாளர்கள் அஸ்திரமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லவா? நாளையே ஏதாவது ஒரு கோயிலில் ஒருவன் லுங்கியுடன் தான் நுழைவேன் என்பான்; அல்லது சட்டை அணியாமல் வரச்சொல்லும் கோயிலில் சட்டை போட்டுத்தான் வருவேன் என்று அடம்பிடிப்பான்.. கோயிலுக்குள் அவர்களை விடமாட்டார்கள்.. உடனே நம்ம பகுத்தறிவாளர்கள் இந்த வேஷ்டி மேட்டரையும், கோயில் மேட்டரையும் 'தனிமனித உரிமை’ என்னும் புள்ளியில் இணைப்பார்கள்.. இன்று வேஷ்டிக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நாளை கோயிலிலும் இஷ்டத்திற்கு ஆடை உடுத்திக்கொண்டு வரலாம் என்பதை ஆதரிப்பீர்களா? ரோட்டில் அம்மணமாகத் திரிவது கூட தனிமனித உரிமை தான்.. அதையும் ஆதரிப்போமா? அந்தந்த இடத்திற்கு என்று இருக்கும், பின்பற்றப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றுவது தான் சிறந்தது.. அதையே செண்டிமெண்ட்டாகவும், எதற்கெடுத்தாலும் தனிமனித சுதந்திரம் கோசம் போடுவதும் உண்மையான பலனையோ தீர்வையோ கொடுக்காது.. எப்படி ஒரு அலுவலகத்திற்கு முழுக்கை சட்டை போட்டு, அதை இன் பண்ணி, ஷூ போட்டு வருவது அதன் ரூல்ஸோ அதே போலத்தான் ஒரு சில பப்/கிளப் போன்ற இடங்களில் அவர்கள் சொல்லும் ட்ரெஸ் கோடும் அவசியம்.. அதை ரொம்ப எமோசனலாக எடுத்துக்கொள்வது சரி என்று படவில்லை எனக்கு.. மீண்டும் சொல்கிறேன், ஒரு சமூகம் என்றும், பொது இடம் என்றும் வரும்போது தனிமனித உரிமை அந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை அனுசரித்து தான் இருக்க வேண்டும்... இல்லையென்றால் வன்கொடுமை செய்பவனும், கொலை செய்பவனும், ரோட்டில் அம்மணமாகத் திரிபவனும் கூட தனி மனித உரிமை கோஷம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.. அதற்கும் நம்ம பகுத்தறிவு குரூப் சப்போர்ட் பண்ணும்.. நீங்கள் வேஷ்டி மேட்டருக்கு கொடுத்த ஆதரவை தனி மனித உரிமை என்னும் categoryயின் கீழ் இது போன்ற சங்கதிகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்..

இன்னும் சில so called சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள் வேஷ்டியை உள்ளே அனுமதிக்காததை, ”இப்போது புரிகிறதா புறக்கணிப்பின் வலி?” என்று எள்ளி நகையாடுகிறார்கள்.. அதாவது தாழ்த்தப்பட்டவர்களை அன்று புறக்கணித்தவர்கள், இன்று அந்த கிளப்புக்குள் நுழைய முடியாமல் அந்த புறக்கணிப்பின் வலியை உணர்கிறார்களாம்.. சரி, அந்த புறக்கணிப்பின் வலி அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும்.. உங்களுக்குத் (சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள்) தான் அந்த வலி நன்றாகத் தெரியுமே? பின் ஏன் இன்னொருவன் புறக்கணிக்கப்படும் போது இவ்வளவு சந்தோசமாக ஒரு சேடிஸ சுகம் காண வேண்டும்? ஏனென்றால் உங்களின் சாதி மறுப்பு எண்ணம் எப்போதுமே எல்லோருமே கீழ் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறது?.. அப்போது தானே உங்களால் சாதி மறுப்பு அரசியல் செய்து புரட்சியும், பகுத்தறிவும் பேச முடியும்?.. அதனால் தான் கீழிருப்பவனை முன்னேறவே விடாமலும், முன்னேறிய ஒருவனை திட்டிக்கொண்டும், அவன் கீழே விழும் போது குதித்து கும்மாளம் இடுவதுமாக இருக்கிறீர்கள்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒரு ஜட்ஜ்ஜை உள்ளே விடாததற்கும், ஜாதியைக் காரணம் காட்டி உங்களை புறக்கணித்ததற்கும் என்னய்யா சம்பந்தம்? இளவரசன் மேட்டர் மாதிரி, உங்கள் அரிப்புக்கு இந்த வேஷ்டி மேட்டரையும் பயன்படுத்திக்கொண்டீர்கள்.. பாவம் விபரம் புரியாத மக்களும், நீங்கள் அவர்களைத் தான் கேவலமாக, மட்டமாக, குத்திக்காட்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு தெரியாது எந்த பிரச்சனைக்கும் உங்களிடம் தீர்வு இருக்காது என்று..

நாட்டில் மதவாதியும் ஜாதியவாதியும் முற்றிலும் ஒழிந்து போவதை இந்த so called பகுத்தறிவுக் கூட்டம் என்றுமே விரும்பியதில்லை.. இரண்டு குரூப்புக்குள் சண்டைகளை மூட்டி விட்டு பிழைப்பை நடத்துவதே இவர்கள் தானே? ஒரு காலத்தில் சிண்டு முடியும் வேலையை பார்ப்பான் செய்தான் என்று கூறும் இவர்கள் தான் இன்று அந்த வேலையை கணக்கச்சிதமாகப் பார்க்கிறார்கள்.. இது போன்ற குரூப்புகளின் கையில் இந்த வேஷ்டி மேட்டரில் பலரும் சிக்கிக்கொண்டது தான் வேதனை.. இந்த பகுத்தறிவு கும்பல் அமைதியாக இருந்தாலே நாட்டில் கலவரமோ பிரச்சனைகளோ வராது.. ஆனால் அமைதியாக இருக்க மாட்டார்கள்..

வேஷ்டி மேட்டரில் என் கருத்து இது தான்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒருவன் நம்மை உள்ளே விடவில்லை என்றால், “போடா வெண்ண” என்று சொல்லி அவனை புறக்கணிப்போம்.. அவனிடம் போய் உரிமை, எருமை, கலாச்சாரம் எல்லாம் பேசுவது வேஸ்ட்.. இன்னொரு விசயம், ஒரு இடத்திற்கு என்று இருக்கும் விதிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டும்.. பின்பற்றப் பிடிக்கவில்லை என்றால் அங்கு போகாமல் இருப்பதே சிறந்தது.. இது தமிழர்களின் பண்பாட்டை கேவலப்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

ரெண்டாவது விசயம், தங்களைத்தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆட்கள் எந்த விசயத்திற்கு ஆதரவு தந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.. நாளை அதை வைத்தே அவர்கள் உங்களுக்கு ரிவிட் அடிப்பார்கள்.. ஜாக்கிரதை.. 

ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..

Friday, July 11, 2014

சென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஓய்ந்திருக்கிறது.. அடுத்த பதிவை ஒரு நகைச்சுவைக் கதையாகவோ, லேசான கட்டுரையாகவோ எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ’அப்படியெல்லாம் லேசுல உன்ன விட்டுற முடியாது’ என்று இறைவன் நினைத்து விட்டார் போல.. இதோ மீண்டும் நாலாபுறத்தில் இருந்தும் என்னை அட்டாக் செய்ய ஏதுவான, அனல் பறக்கும் அடுத்த கட்டுரை.. முக்கியமான விசயம் என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பதில் அளித்து என் நேரத்தையும், சக்தியையும் நான் வீணடிக்கப்போவதில்லை.. சரி விசயத்திற்கு வருகிறேன்..

ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்களின் இன்றைய நிலை குறித்து கேலியாக சொல்லிக்கொள்வார்களாம், “அவர்கள் (ஐரோப்பியர்கள்) இங்கே வந்த போது எங்கள் கையில் நிலமும் அவர்கள் கையில் பைபிளும் இருந்தது.. இப்போது எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் மாறிவிட்டது”.. உண்மை தான், பெரும்பாலும் மதமாற்றம் என்பது ஒரு வியாபாரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.. வளரும், ஏழை நாடுகளில் கிறிஸ்தவ இயக்கங்கள் இதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செய்துகொண்டு வருகின்றன.. ’இந்துக்கள், யாரையும் மதம் மாற்றுவது இல்லையா?’என்று சிலர் கேட்கலாம்.. ஆம், அமெரிக்காவில் சில இந்து இயக்கங்களும் இதைச் செய்கின்றன.. ஆனால் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ இயக்கங்கள் செய்வது போல் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடுவீடாக ‘ஊழியக்காரர்’களை நியமித்து எங்கு, யார் வீட்டில் துக்கம் நடக்கிறது, அதை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு குரூரமாக இறங்கவில்லை. இன்னொரு விசயம் ஒரு வளர்ந்த நாட்டில் மக்களை அவ்வளவு எளிதாகவெல்லாம் ஏமாற்றி மதம் மாற்றி விட முடியாது. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற படிப்பறிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில், மிக எளிதாக மக்களை மதம் மாற்றிவிடலாம்..

”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு.. அதை மாற்றிக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா? அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்கலாம்.. நல்ல கேள்வி தான்.. வேறு ஒரு விசயத்தை இதே போன்று கேட்டுப்பார்ப்போம்.. இந்தி கற்றுக்கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. இந்தி படிக்க ஒருவருக்கு உரிமை இல்லையா? பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம்? பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன? அதுவே அவர்கள் மதம் மாறிவிட்டால், அந்த சடங்குகள் எல்லாம் மொத்தமாக அழிந்து போய் ஐரோப்பியர்களின், வளைகுடாக்காரர்களின் கலாச்சாரம் தான் நம் கலாச்சாரம் என்பது போல் மாறிவிடும்.. பின் நமது அடையாளம் மொத்தமாக அழிந்து போகும்.. மதமாற்றத்தின் இறுதி நிலை என்பது மொத்தமாக நம் அடையாளத்தை இழக்கச்செய்வது தான்.. 

“ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்?” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா? அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்? நாம் இன்று பேசும் தமிழை ஆதிகாலத் தமிழன் ஒருவனும் தமிழ் என்றே ஒத்துக்கொள்ள மாட்டான்.. ஆனால் நமக்கு இது தான் தமிழ்.. இந்தி என்கிற அந்நிய மொழி உள்ளே நுழைவதை பார்த்ததும் நாம் பேசும், பின்பற்றும் இந்தத் தமிழை ஆதரிக்க நினைக்கிறோமே, அது போல் தான் இதுவும்.. இப்போது நாம் பின்பற்றுவது தான் இந்து மதம்.. அதன் கலாச்சாரத்தை, பழக்க வழக்கத்தை ஒரு சிலர் வேற்று மதங்களை புகுத்தி அழிக்க நினைக்கும் போது நாம் ஒன்று கூடத்தான் வேண்டும்.

“ஆனால் இந்து மதங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவே? இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே? இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே?”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா? தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் உண்டு.. சில இடங்களில் மற்ற சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதவாறு கீற்றுக்கொட்டகையால் பிரிக்கப்பட்டிருப்பார்கள் சர்ச்சுகளில்.. அதனால் மதம் மாறிவிடுவதால் ஒருவர் மீது காட்டப்படும் துவேசம் எல்லாம் குறைந்து விடாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.. கிறிஸ்தவ பிராமண அசோசியன் என்றெல்லாம் ஆரம்பித்து “உயர்வான”வர்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ பிராமணர்களை வைத்து பைபிள் கதாகாலேட்சபம் நடத்துகிறார்கள் கிறிஸ்தவர்கள்.. அங்கு ஜாதி வித்தியாசம் இருக்காது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.. இஸ்லாமியர்கள் கூட கீழ் சாதி இந்துக்களை மட்டமாக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. அவர்கள் மதத்திற்கு மாறிய பின் இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை என்றாலும், ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரை அவர்கள் மதிப்பதில்லை.. அதாவது ஜாதி வெறி என்பது இஸ்லாமியர்களுக்குள்ளும் தான் இருக்கிறது.. 

“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா? அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா?”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள்? ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை? அவர்கள் நம் ஏற்றத்தாழ்வுகளை தங்களுக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இந்த ஏற்றத்தாழ்வு மறைய அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறையாமல் பார்த்துக்கொள்பவர்களே அவர்கள் தான்.. ஏனென்றால் இதை வைத்து தான் அவர்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.. மாறாக இந்துக்களில் பலர் தான், ராஜா ராம்மோகன் ராயில் இருந்து, விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர் என்று ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சீரிய செயல்பாடுகளின் விளைவுகளால் தான் இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது என்றால் மிகையாகாது.. அரசும் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற பல செயல்களை செய்து வருகிறது.. இந்து மதத்தில் தான் ஒடுக்கப்பட்டவருக்கு சலுகைகள் கிடைக்கிறது அரசின் மூலம்.. 

நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..  

இன்னொரு முக்கிய விசயம் இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. அதற்கான ஆரம்பப்புள்ளி தான் இந்தப்பதிவு.. ஒத்தக்கருத்துள்ள, இணைந்து களப்பணியாற்ற விருப்பம் உள்ள நண்பர்கள் hindusagainstconversion@gmail.com என்னும் ஈமெயில் முகவரியில் உங்கள் விருப்பத்தினையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்... இது வெறும் தொடக்கப்புள்ளி தான்.. :-)
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One