விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)..

Sunday, February 10, 2013

ஒரு படம் வருவதற்கு முன்பே எவ்வளவு பிரச்சனைகள்? அந்த பிரச்சனைகளை ஒட்டி படத்திற்கு வந்த அபரிமிதமான ஆதரவும், கடும் எதிர்ப்பும், எல்லோரையும் ஒன்றை மட்டும் முடிவு செய்ய வைத்தன.. ‘பிடிச்சிருக்கோ இல்லையோ இந்த படத்துல அப்படி என்ன தான் இருக்குனு பாக்கணும்’.. சரி அப்படி என்ன தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது?




தனக்கென்று இருக்கும் ஒரு சிறிய உலகத்தை பெண் தன்மையோடு, தன் மனைவியின் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு வாமனனாக இருக்கும் விஸ்வநாதன் என்னும் ஒரு சாதாரண கதக் டான்ஸ் மாஸ்டர், ஒரு சூழலில் தான் ஒரு தலிபான் பயிற்சியாளன் என்கிற விஸ்வரூபத்தை காட்டுவது தான் கதை. கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கிறது? ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்திற்கு இதை வைத்து என்னென்னமோ பண்ணலாம். ஆனால் கமல் எனக்கு நிறைய கொட்டாவியும் லேசான தலைவலியையும் தான் கொடுத்திருக்கிறார். “ஏ ஒனக்கு கலைய ரசிக்க தெரில, இன்னொரு 10வருசம் கழிச்சு ஒலகமே இந்த படத்த புகழும், அப்ப உன் மூஞ்ச எங்க வச்சுக்கிடப்போற? கமல் யாருனு தெரியுமா? சினிமாவுக்கு என்னலாம் செஞ்சிருக்காருனு தெரியுமா?’ என வரிசையாக கேள்வி கேட்பவர்கள் என் டிக்கெட் காசான 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள். சாவகாசமாய் பதில் அனுப்புகிறேன்.


”சாகுறதுக்கு முன்னாடி என்ன தொழுகை பண்ண விடுங்க” என்று கேட்டு ஓதிக்கொண்டே பொங்கி எழும் காட்சி, பிறந்ததில் இருந்தே மசாலாப்படமாக பார்த்து நெஞ்சுக்கரிப்பிலேயே வளர்ந்தவன் எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. அந்தக்காட்சி, ஆனாலும் நன்றாக இருந்தது. ஸ்லோ மோஷனில் இன்னொரு தடவை காட்டியிருக்க வேண்டாம். தசாவதாரத்தில் அசினை பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு எரிச்சல் வந்ததோ, (உங்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு நிறைய வந்தது), அதே அளவு எரிச்சல் இதில் பூஜா குமாரை பார்க்கும் போது வருகிறது. முதல் காட்சியில் இருந்தே அசட்டுத்தனமான ஓவர் ரியாக்‌ஷன்.. பிடிக்காத, கொஞ்சம் கூட மதிக்காத கணவன் பிரதமரோடு பேசும் அளவுக்கு பெரிய ஆள் என்றவுடன் பொசுக்கென்று அன்பு, காதல், பாசம், மரியாதை இன்னும் பிற இல்லத்தரசிகளுக்கான அம்சங்களும் சேர்ந்துகொள்கின்றன.. 24 அமைப்புகளோடு சேர்ந்து பெண்கள் அமைப்புகளும் ”எங்களை தவறாககாட்டுகிறார் கமல்” என கொடி பிடித்திருக்கலாம்.. 



படத்தில் எதற்கென்றே தெரியாத நிறைய பாத்திரங்கள் உள்ளன. அதில் ஒருவர் தான் ஆண்ட்ரியா.. கமல் வீட்டில் நடனம் பயில்கிறார், நடனம் முடிந்தாலும் அவர் வீட்டிலேயே இருக்கிறார், கடைசி வரை கமல் கூடவே சுத்துகிறார். இவரை அட்லீஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூடவே இருந்து குழிபறிக்கும் வில்லியாக ஒரு பாத்திரம் நிச்சயம் வரும், அது போல் காட்டியிருந்தால் கதையில் சின்ன டுவிஸ்டாவது இருந்திருக்கும். முதல் பாதியில் கமலைப்பற்றி காட்டும் ஃப்ளாஷ்பேக், ஊஞ்சல் ஆட விரும்பும் அடலசண்ட் ஜிகாதி பையன், ‘போன வருசமே ஸ்கூல் எல்லாத்தையும் இடிச்சிட்டோம்’ என மிக சாதாரணமாக சொல்லும் முல்லா ஓமர், தசாவதாரத்தில் வந்த மாறுவேட கலைஞர், ஜெயலலிதா போல் இதில் வந்த ஒசாமா என சில இடங்கள் வாயைப்பிளக்க வைத்து அட போட வைக்கின்றன..




நாம் முதல் பாதியில் ஒரு சில இடங்களில் போட்ட ‘அட’ ரெண்டாம் பாதியில் ‘அடடடா’ என்னும் புலம்பலாக மாறிவிடுகிறது. திரைக்கதை எங்கெங்கோ தறிகெட்டு ஓடுகிறது. ஒரு சில வசனங்களும், அமெரிக்க குளிரை உணர வைக்கும் காட்சியமைப்பும் தான் நம்மை உட்கார வைத்திருக்கின்றன. இல்லையென்றால் பலரும் பாதியிலே எழுந்து போயிருப்பார்கள். முதல் பாடல் தவிர அனைத்தும் திரைக்கதையோடு வந்திருப்பதால், தியேட்டரில் சிகரெட் விற்பனை கம்மி. கமலுக்கே மிகுந்த குழப்பம் போல தன் பாத்திர படைப்பில்.. “அவங்கள கடவுள் காப்பாத்துவார்” என பூஜா குமார் சொல்லும் போது “எந்த கடவுள்?” என பகுத்தறிவு பேசும் அதே கமல் தான், வில்லனின் திட்டத்தை அழிக்கும் முன் கடவுளிடம் தொழுகை செய்கிறார். ஒய் திஸ் கன்ப்யூஸன்?




வில்லன் ஓமராக வருபவர் தாலிபான் தளபதி முல்லா ஓமரை ஞாபகப்படுத்துகிறார். நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் நினைத்த நேரத்தில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா என எப்படித்தான் பறக்க முடிகிறதோ? இப்பலாம் தியேட்டருக்கு வந்தாக்கூட பாக்கெட்ட எல்லாம் செக் பண்ணிட்டு தான் உள்ள விடுறாங்க பாஸ்.. நீங்க ஏதோ ஃபாரின் போறத, பக்கத்து வீட்டுக்கு போற மாதிரி சொய்ங் சொய்ங்னு போயிட்டு வரீங்க?

உண்மை பாத்திரங்களையும் சில வரலாற்று சம்பவங்களையும் தன் கறபனையையும் வைத்து ‘ஹே ராம்’ என்னும் முக்கியமான படத்தை எடுத்த அதே கமல் தான், முல்லா ஓமர் என்னும் உண்மை பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு இந்திய உளவாளி வந்தால் என்ன ஆகும் என்கிற தன் அழகான கற்பனையை வைத்து இப்படி ஒரு சொத்தப்பல் படத்தை தந்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை ரகம். தியேட்டரில் எல்லோரும் எழுந்த போது தான் படம் முடிந்து விட்டதே தெரிந்தது. சப்பென்ற ஒரு கிளைமேக்ஸ். ஆனால் அதற்கு அடுத்து பார்ட்2 விற்கு காட்டிய ட்ரைலர் போன்ற சங்கதி நன்றாக இருந்தது. ஆனால் பார்ட்2 எல்லாம் வருமா என்பது அல்லாவுக்கே வெளிச்சம்.





மொத்தத்தில் காக்கிச்சட்டை, பாண்டியன், போக்கிரி வரிசையில் ஒரு விஸ்வரூபம்.. லோக்கல் தாதா, போலீஸ் கதையை, தாலிபன், உளவுத்துறை என்று எடுத்திருக்கிறார்கள்.. சில இடங்களில் கமலின் நடிப்பும், இசையும், வசனங்களும் நன்றாக இருக்கின்றன.. ஆனால் அது மட்டும் படம் வெற்றியடைய போதாதே? “கமல் படமா? ஒன்னும் புரியாதேப்பா? அதப்போயி எவன் தியேட்டர்ல பாப்பான்?” என்று சொன்னவர்கள் கூட படத்தை பார்த்துவிட்டு, “எதுவுமே புரியல, ஆனா என்ன தான் சொல்ல வாரான்னு இன்னொரு தடவ போயி கண்டிப்பா பாக்கணும்” என்கிறார்கள்.. ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஒரு படத்தை, வெற்றிப்படமாக்க உழைத்த 24 குழுக்களுக்கும், சிலரின் திமிரான நடவடிக்கைகளுக்கும், அதையெல்லாம் வியாபாரத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்ட கமலுக்கும் வாழ்த்துக்கள்..

படத்தை பற்றி இவ்வளவு போதும். இனி கமலை பற்றி. ‘அன்பே சிவ’த்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் கிழி கிழியென்று கிழித்த கமலா இது? ஒரு பெண்ணை தவறுதலாக சுட்டுவிட்ட அமெரிக்க ராணுவ வீரன், அதற்காக உச் கொட்டி ஃபீல் பண்ணுவதெல்லாம் எதற்காக? அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி குழந்தை பற்றி கவலைப்படாமல் ஓமர் இப்படி சொல்கிறான், “அவர்கள் (அமெரிக்கர்கள்) பெண்கள் குழந்தைகளை தாக்க மாட்டார்கள்”.. சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி ஒரு வசனம்? அவர்கள் என்ன தரையில் இருந்தா தாக்குகிறார்கள் யார் குழந்தை யார் பெண் என தெரிந்துகொள்ள? வான்வெளித்தாக்குதலுக்கு சம்பந்தமே இல்லாமல் அப்படி ஒரு வசனம். அமெரிக்கா என்ன நம் நாட்டு ராஜபுத்திர மன்னர்களா, போய் விதிமுறைகளையெல்லாம் பின்பற்ற? போர் விதிமுறையை பின்பற்றுபவனா இன்னொரு நாட்டின் மீது அணுகுண்டை போடுவான்? ஒவ்வொரு நாட்டு சர்வதேச எல்லையில் தன் போர்க்கப்பல்களையும் உளவு விமானங்களையும் பறக்க விடுவான்?

”உன்னைப்போல் ஒருவன்” படத்தின் ஒரிஜினலான “A Wednesday"வில் நாயகன் இந்துவா கிறிஸ்தவனா இஸ்லாமியனா என எதுவும் தெரியாது.. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ல் கமல் தன்னை ஒரு இஸ்லாமியனாக காட்டியிருப்பார். அதாவது தவறு செய்த ஒருவனை அவன் மதம் சார்ந்த இன்னொருவன் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற தொனியில் அமைத்திருப்பார். தட்டிக்கேட்பவனுக்கு அடையாளமே இல்லை என்று ஹிந்தியில் சொன்ன இயக்குனரின் தைரியம் தமிழில் கமலுக்கு வரவில்லை. இதே தான் இங்கு வேறு மாதிரி “விஸ்வரூப”த்தில். இதில் இவர் விஸ்வனாத்தாகவே கூட இருந்திருக்கலாம். ஆனால் கேஷ்மிரி என்கிற இஸ்லாமியனாக காட்ட விளைந்திருப்பது ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற காரணமாக கூட இருக்கலாம்.

கமல் தனது ஹாலிவுட் என்ட்ரியை மனதில் வைத்து இப்படியெல்லாம் எடுத்திருப்பதாய் சொல்கிறார்கள். ஹாலிவுட்டில் இருந்து தானே இங்கு "Mrs.Doubtfire", "Trains, palnes and automobiles", "9 to 5" என பல படங்களை எடுத்திருக்கிறார்? அங்கு போனால் இவரின் பப்பு வேகுமா எனத்தெரியவில்லை.. வேண்டுமானால் இங்கு எடுத்த ஹேராம், மகாநதி, அபூர்வ சகோதரர்கள் போன்றவற்றை அங்கு முயற்சிக்கலாம். கமல் நமக்கு என்றைக்குமே உலக நாயகன் தான். ஆனால் தமிழக எல்லையை தாண்ட விரும்பாத உலக நாயகன். அவருக்கு உலக நாயகன் என்னும் பிம்பம் பிடித்திருக்கிறது. தமிழகத்தை/இந்தியாவை தாண்டினால் அந்த பிம்பம் உடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்தியாவெல்லாம் தாண்டிப்போய் செட்டில் ஆகவோ படம் எடுக்கவோ மாட்டார் என உறுதியாக நம்பலாம். விஸ்வரூபம் அடுத்த பாகம் வருகிறது, என்றிருக்கிறார், பார்க்கலாம் அதையாவது ரசிக்கிற மாதிரி ஒரு நல்ல கமெர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கொடுக்கிறாரா என்று..

36 comments

  1. //ஆனால் கமல் எனக்கு நிறைய கொட்டாவியும் லேசான தலைவலியையும் தான் கொடுத்திருக்கிறார்.//

    ஹி. ஹி... உண்மை..

    // “ஏ ஒனக்கு கலைய ரசிக்க தெரில, இன்னொரு 10வருசம் கழிச்சு ஒலகமே இந்த படத்த புகழும், அப்ப உன் மூஞ்ச எங்க வச்சுக்கிடப்போற? கமல் யாருனு தெரியுமா? சினிமாவுக்கு என்னலாம் செஞ்சிருக்காருனு தெரியுமா?’ என வரிசையாக கேள்வி கேட்பவர்கள் என் டிக்கெட் காசான 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள். சாவகாசமாய் பதில் அனுப்புகிறேன்.//

    ஹா... ஹா.. சூப்பர்.. :)

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்ணுறது? ஒரு கமெர்ஷியல் படமாகவும் இல்லாமல், கலைப்படமாகவும் இல்லாமல் மிகவும் மேம்போக்காக இருக்கிறது.. இந்த படத்தை பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஏன் இவ்வளவு பில்ட்-அப் கொடுக்க வேண்டும் என்று தான் தெரியவில்லை :)

      Delete
  2. 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள் - இதுக்கு மேலயும் யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டாங்க ராம்...

    24 அமைப்புகளோடு சேர்ந்து பெண்கள் அமைப்புகளும் ”எங்களை தவறாககாட்டுகிறார் கமல்” என கொடி பிடித்திருக்கலாம்.. - இதற்கு போராட்டம் ஆரம்பித்தால் தினமும் போடப்படும் விளம்பரங்களில் இருந்து பெரிய இயக்குனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எடுக்கும் படம் வரை போராட்டம் நடத்த வேண்டி வரும்...

    விஸ்வரூபம் விமர்சனத்தை விட கமலைப் பற்றிய விமர்சனம் அருமை.. நடுநிலையாகவும் இருந்தது..

    வாழ்த்துக்கள்.. விஸ்வரூபம் விமர்சனம் - சினிமாவிற்கு மட்டுமல்ல...

    அனானி...:-)

    ReplyDelete
    Replies
    1. //இதற்கு போராட்டம் ஆரம்பித்தால் தினமும் போடப்படும் விளம்பரங்களில் இருந்து பெரிய இயக்குனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எடுக்கும் படம் வரை போராட்டம் நடத்த வேண்டி வரும்...// hi அனானி, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.. உண்மை தான்.. எல்லா விளம்பரத்திலும் பெண்களை அப்படித்தான் காட்டுகிறார்கள்.. ஒரு கான்கிரீட் கம்பி விளம்பரத்திற்கு டைட் ஆடை அணிந்து நமீதா வருவார்.. குழந்தைகளுக்கான சோப்பு விளம்பரத்தில் குழந்தையின் அம்மா கவர்ச்சியாக வருவார்.. இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள்.. மொத்ததில் இன்று வரும் விளம்பரங்கள் அனைத்தும் நம் தன்னம்பிக்கையை குறைக்கின்றன..

      Delete
  3. விஸ்வரூபம் புரிந்து கொள்ள சற்றே கடினமான படம் தான்.. ஆனால் எனக்கு படம் பார்க்கிறோம் என்கிற ஆர்வமே அலாதியாய் இருந்தது. நீங்கள் சொன்ன தூக்கமும் கொட்டாவியும் ஒரு காட்சியில் கூட வரவில்லை.

    அவருடைய இந்து மத வெறுப்பு அல்லது மற்ற மத ஆதரவு இந்தப் படத்திலும் தொடர்கிறது. இனியும் தொடரும். இருந்தும் கமல் என்ற மனிதன் வாழ்வியலில் எனக்கும் உடன்பாடு இல்லை. நடிகன் என்ற முறையில் நல்ல கலைஞன், தனக்குத் தெரிந்த கலையை இந்தப் படத்தில் மிகச் சரியாய் கையாண்டுள்ளார் என்று தான் தோன்றுகிறது. அவரிடம் உள்ள வசதியில் உலகத் தரத்தில் ஒரு இந்தியப் படம்.

    கமல் பற்றிய உங்களது விமர்சனத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறேன், விஸ்வரூபத்தில் முரண் படுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபம் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்.. //ஆனால் எனக்கு படம் பார்க்கிறோம் என்கிற ஆர்வமே அலாதியாய் இருந்தது// இந்த எண்ணத்தை நீங்கள் படத்தின் திரைக்கதை & சுவாரஸ்யத்தினுடன் கலக்காமல் இருந்திருந்தால் படம் பிடித்திருக்குமா என்பது கேள்விக்குறியே.. எனக்கும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடிகிறதே என்கிற சந்தோசம் இருந்தது.. ஆனால் அந்த எண்ணம் படம் ஆரம்பிக்கும் வரை தான்.. படம் ஆரம்பித்தவுடன் அது வெளிவரும் வரை நடந்த களேபரங்களை மறந்துவிட்டேன்.. வெறும் படத்தை மட்டும் தான் பார்த்தேன்.. எனக்கு பிடிக்கவில்லை நண்பா :-)

      Delete
  4. // கமலுக்கே மிகுந்த குழப்பம் போல தன் பாத்திர படைப்பில்.. “அவங்கள கடவுள் காப்பாத்துவார்” என பூஜா குமார் சொல்லும் போது “எந்த கடவுள்?” என பகுத்தறிவு பேசும் அதே கமல் தான், வில்லனின் திட்டத்தை அழிக்கும் முன் கடவுளிடம் தொழுகை செய்கிறார். ஒய் திஸ் கன்ப்யூஸன்? //

    யோசிக்க வேண்டிய விஷயம்...

    உன்னைப்போல் ஒருவனில் கமல் இஸ்லாமியர் என்று காட்டியிருக்கிறார்களா ? என்னப்பா என்கிட்ட சொல்லவே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. உன்னைப்போல் ஒருவனில் அவரது தாடி ஸ்டைல் அசல் இஸ்லாமியர் வைத்திருப்பது.. மனைவியிடம் ஃபோனில் உரையாடும் போது, ’இன்ஷா அல்லாஹ்’ என்பார்.. அவர் காட்டும் பல காட்சிகளின் பின்னணியில் அல்லா பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்.. A Wednesday கதையில் கமலின் குறும்பு/குசும்பு/அதிகப்பிரசங்கித்தனம் இது..

      Delete
    2. Pooja Kumar character is different from that of Kamal. Don't get confussed.

      Delete
    3. Ya I don't confuse between those two characters.. I talk about the confusion in Kamal character itself..

      Delete
  5. Hi,

    I like your previous posts, stories everything. But your Vishwaroopam review is too much nonsense. It is good movie to watch, he tried new thing, new technology and not like other tamil movies. Please tell me honestly, Which is good movie from you point of view (I think you're expecting 3 love songs, 2 'kuthu' songs, 5 fights and comedies).

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நல்ல படம் என்பதற்கு உங்களை போல் நவீன டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், சண்டை காட்சி என்றெல்லாம் அர்த்தம் சொல்ல முடியாது.. ரெண்டரை மணி நேரம் எனக்கு போர் அடிக்காமல், ஸ்க்ரீனில் என்னை பார்க்க வேண்டும் அல்லது, “அட! இப்படியெல்லாம் கூட நடக்குமா?!” என ஆச்சரியமாக கதையை காட்ட வேண்டும்.. அந்த விதத்தில் எனக்கு கற்றது தமிழ், அன்பே சிவம், தவமாய் தவமிருந்து போன்ற படங்களும் பிடிக்கும், துப்பாக்கி, கில்லி, ரஜினி படங்கள், சிறுத்தை போன்ற படங்களும் பிடிக்கும்.. விஸ்வரூபத்தில் வெறும் டெக்னாலஜி மட்டும் தான் இருக்கிறது.. குப்பை கதை.. அமெரிக்க தரத்தை நீங்கள் உலகத்தரம் என நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்வது? உலகத்தரம் என்பது நம் கலாச்சாரத்தை, நம் வாழ்க்கை முறையை எந்த சமரசமும் இல்லாமல் உலத்துக்கு அப்படியே எடுத்து வைப்பது தான் உலகத்தரம்.. அந்த வகையில் எவ்வளவோ நல்ல படங்கள் இருக்கின்றன.. தேவர் மகன் அப்படி ஒரு படம் தான்.. இப்பவும் பாருங்கள் பல ஈரான் படங்களை.. மிகவும் லோ பட்ஜெட், பெண்களை வைத்து கவர்ச்சி காட்ட முடியாது, மிகவும் பிற்போக்குத்தனமான கட்டுப்பாடு மிக்க நாடு.. ஆனால் உலகத்தர படம் என்றால், பத்தில் 3,4 படங்கள் அவர்களின் படங்கள் தான் இருக்கும்.. எல்லாமே அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள்.. நேற்றைய BAFTA விருதில் கூட ஒரு ஈரானிய படம் தான் சிறந்த படம், இயக்குனர், நடிகைக்கான விருதுகளை குவித்தது.. உங்கள் உலக நாயகனால் ஏன் இது வரை ஒரு இன்டர்நேஷனல் விருதை கூட வாங்க முடியவில்லை? நேற்று வந்த ஜீவா கூட ‘ராம்’ படத்திற்காக வாங்கிவிட்டார் உலக அளவில் விருதை.. காரணம் என்னவென்றால், கமல் பிற இயக்குனர்களை நம்புவதில்லை, உலகத்தரம் என்பதை அவர் அமெரிக்க அளவில் சுருக்கிக்கொண்டிருக்கிறார், நீங்களும் அதை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.. இது என் கருத்து தான்.. இதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட இல்லை.. சிம்பிளாக, விஸ்வரூபம் உங்களுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் அந்த படம் என்னை திருப்திபடுத்தவில்லை :-)

      Delete
  6. நீங்கள் விஸ்வரூபம் விமர்சனம் என்று போடாமல் விஸ்வரூபம் பற்றிய என் சொந்த கருத்து என்று போடுங்கள் அது தான் சரி.

    படம் பிடிக்கததுக்கு காரணங்கள் நாம் எல்லாம் ரஜினியின் மசாலா படங்களையும் விஜய் அஜித்தின் அதிரடி படங்களை பார்த்து வளர்ந்தவர்கள்.
    விஸ்வரூபம் தமிழ்நாட்டில் பலருக்கு பிடிக்காது என்று தெரியும் (கமலுக்கும் தெரியும்).

    தமிழ்படம் உலக அரங்கிற்கு செல்லத்துக்கு காரணம் மசாலா படங்களை வெற்றி அடைய வைத்து தரமான படங்களை தோல்வி படமாக மாற்றும் தமிழர்கள் நாம் தான்.

    விஸ்வரூபம் மசாலா படம் பார்பவர்களுக்கு பிடிக்காது தமிழ் சினிமாவில் ஒரு மாற்று படம் பார்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

    நான் இது வரை விஜய்க்கும், ரஜினிக்கும் ரசிகனாக இருந்தேன் இப்போது மாற்றிக்கொண்டேன் விஜய் ரஜினியை விட்டு கமல் ரசிகராக மாறவில்லை தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டுசெல்ல தனி மனிதனாக இத்தனை தடைகளை சந்தித்த ஒரு உலக நாயகனின் உணர்வுக்கு மதிப்பளிக்க தொடங்கிவிட்டேன்.

    விஸ்வரூபம் பற்றி ஒரு வலை பதிவர் வெளியிட்ட வரிகளை நான் இங்கு பகிர விரும்புகிறேன்.

    " விஸ்வரூபத்தை மிஞ்சும் ஒரு படத்தை எடுக்கும் வரையில் தமிழ் சினிமா கமலுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்"

    இது தான் என் மனதிலும் தோன்றியது இதுவரை படத்தை 3 முறை பார்த்துவிட்டேன் இனிமேலும் பார்ப்பேன்.

    கடைசியாக ஒன்று

    \\கேள்வி கேட்பவர்கள் என் டிக்கெட் காசான 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள். சாவகாசமாய் பதில் அனுப்புகிறேன்.\\
    உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அதில் உள்ள நிறை குறைகளை சொல்பவர்கள் உங்களுக்கு காசு கொடுத்து விட்டு சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது என்ன நாகரீகம் என்று எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய முந்தைய கமெண்ட்டை படித்திருந்தால் இந்த கமெண்ட்டை நீங்கள் போட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.. அமெரிக்க தரத்தை உலகத்தரம் என நீங்கள் நினைத்துகொண்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. டெக்னாலஜி மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிடாது..
      //விஸ்வரூபத்தை மிஞ்சும் ஒரு படத்தை எடுக்கும் வரையில் தமிழ் சினிமா கமலுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்// இந்த வாக்கியத்தை சொன்னவரை நான் பார்க்க வேண்டும்.. அவர் அன்பே சிவம், மகாநதி, தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறாரா என்று கேட்க வேண்டும்.. அந்த படங்களில் கால் தூசிக்கு பெறாது இந்த விஸ்வரூபம்.. மீண்டும் சொல்கிறேன், நான் ஒன்னும் கமர்ஷியல் சினிமா ரசிகன் இல்லை. ஒரு படம் என்பது அட்லீஸ்ட் தியேட்டரில் நம்மை ரெண்டரை மணிநேரம் உட்காரவாவது வைத்திருக்க வேண்டும்.. இந்தப்படத்தில் என்னால் அப்படி ஒரு காட்சியை கூட சொல்ல முடியவில்லை.. அந்த ஆஃப்கானிய சண்டையெல்லாம் எவ்வளவு பதட்டத்தையும், பயத்தையும், பிரமிப்பையும் தந்திருக்க வேண்டும்? ஆனால் ஏதோ மேம்போக்கா செல்கிறது.. சரி எல்லாவற்றையும் விடுங்கள், என் முந்தைய கமெண்ட்டையும் ஒரு முறை வாசித்துவிட்டு, உலகத்தரம் என்றால் என்னவென்பதையும் கொஞ்சம் என் மண்டையில் ஏறும் அளவுக்கு சொல்லிவிட்டு போங்கள்.. :-)

      Delete
    2. நீங்கள் என் காமண்டை நன்றாக படித்து பாருங்கள் அதில் நான் உலகத்தரம் என்று எதையும் குறிப்பிடவில்லை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல கமல் முயன்றுள்ளார் என்று தான் சொல்லியிருக்கிறேன் .அமெரிக்க படங்கள் தான் உலக தரம் வாய்ந்தவை என்று யாரும் சொல்லவில்லை ஆனால் உலக தரமான படங்களில் அமெரிக்க படங்களும் இருக்கின்றன. உங்கள் முந்தைய கமண்டில் உலகநாயகன் ஏன் இண்டர்நஷனல் விருது ஏதும் வாங்க முடியவில்லை என்று கேட்டிருக்கிறீர்கள். நான் கேட்கிறேன் நேற்று வந்த தனுஷ் எல்லாம் நேஷனல் அவார்ட் வாங்கும் போது நம்ம சூப்பர் ஸ்டார் ஏன் இன்னும் ஒரு நஷனல் அவர்ட் குட வாங்க முடியவில்லை. நடிப்புக்கு இலக்கணமாக சொல்லப்படும் நதிகள் திலகம் சிவாஜி சார் கூட நேஷனல் அவர்ட் வாங்கவில்லையே ஏன்?
      உங்களுக்கு விஸ்வரூபம் பிடிக்கவில்லைய அல்லது அமெரிக்காவை பிடிக்கவில்லையா?
      நீங்கள் சொல்வது போல் கமலும் சராசரி ரசிகனுக்காக 5 பாடல்கள் 4 சண்டைக்காட்சி கவர்ச்சி காமெடி என்று எடுத்தால் தான் போர் அடிக்காமல் எல்லாரையும் சந்தோஷ படுத்த முடியும் ஆனால் கமல் தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாய கருத்தை முன் வைத்து எடுக்கிறார்.

      ///நான் முதலில் சொன்னது போல, ப்ரூஸ் வில்லிஸும், டாம் க்ரூஸும், ஜேம்ஸ் பாண்டும் ஹாலிவுட்டில் நடித்தால் மட்டும் பார்ப்போம், புகழ்ந்து பேசுவோம், தமிழில் எவனாவது நடித்தால், அதுவும் அஜித் மாதிரி ஒருவர் நடித்தால் பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் பில்லா 2 பிடிக்காது///

      மேலே உள்ளது நீங்கள் பில்லா 2 விமர்சனத்தில் குறிப்பிட்டது உங்களுடைய விஸ்வரூபம் விமர்சனத்தை பார்த்தால் எனக்கு இது தான் தோன்றியது.தனி மனித புகழ்ச்சியும், தேவையற்ற கவர்ச்சியும் வசிகரீகாத திரைக்கதையும் பலரும் நன்றாக இல்லை என்று சொன்ன பில்லா 2 படத்துக்கு நீங்கள் ஹாலிவுட்டுக்கு இணையான படம் என்று விமர்சனம் எழுதினீர்கள். ஆனால் விஸ்வரூபம் நன்றாக இல்லை. உலக தரம் என்றால் அது ஹாலிவுட் இல்லை என்று ஈரானிய படங்கள் தான் உலகத்தரம் என்று சொல்கிறீர்கள். ஏன் என்றால் உங்களுக்கு அஜித் பிடித்திருக்கிறது. கமல் பிடிக்கவில்லை. கமல் எனக்கு பிடிக்கும் என்று நீங்கள் கூறினால் ரஜினியின் பிறந்தநாளுக்கு நீங்கள் எழுதிய பதிவை பாருங்கள் அதில் தேவையே இல்லாமல் கமலை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள் அதன் அவசியம் என்ன?
      உங்களுக்கு தாலிபான் காட்சிகள் அந்த அளவுக்கு அழுத்தமானதாக இல்லை அனால் அந்த காட்சிகளின் அழுத்தம் தான் முஸ்லிம் அமைப்புகளை அந்த அளவுக்கு போராட வைத்தது ஐஎம்டி தர வரிசையில் 9.5 பெற வைத்தது. இதுவரை வந்த தமிழ் சினிமாவில் அதிகமான ரேட்டிங் இது தான். ஒரு சிலருக்கு படம் ஒரு சில படம் பிடித்திருக்கிறது ஒருசிலருக்கு ஒரு சில படங்கள் பிடிக்கவில்லை அது அவரவரின் மன நிலை சார்ந்தது. ஆனால் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பதற்காக கமலுக்கு படமே எடுக்க தெரியாது போன்றும் ஒரு சீன கூட ஒழுங்காக இல்லை என்று சொல்வது என்ன நாகரீகம்?
      கேவலமான கமெர்சியல் படங்களுக்கு தரும் மரியாதையை கூட ஒரு சினிமா கலைஞனின் படத்துக்கு தராமல் விமர்சிப்பதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

      Delete
    3. நான் ரஜினி பற்றியும் அஜித் பற்றியும் எழுதியதை இங்கு குறிப்பிட்டிருக்கும் அவசியம் நான் கமலை பிடிக்காதவன் என்று காட்ட என நன்றாக தெரிகிறது.. கொஞ்சம் என் ஃபேஸ்புக் பக்கத்தை இந்தப்படம் வெளிவரும் சில நாட்கள் முன்பிருந்தே பார்த்திருந்தீர்கள் என்றால் நான் கமலுக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தேன் எனத்தெரியும்.. கமலின் கருத்து சுதந்திரத்திற்கு கொடுத்த சப்போர்ட், கமலின் கருத்துக்கும் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தால் என்ன செய்வது?

      நான் பில்லாவை ஹாலிவுட் தரம் என்று தான் சொன்னேன்.. உலகத்தரம் என சொல்லவில்லை.. //கேவலமான கமெர்சியல் படங்களுக்கு தரும் மரியாதையை கூட ஒரு சினிமா கலைஞனின் படத்துக்கு தராமல் விமர்சிப்பதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?// நீங்கள் கமலின் முந்தைய படங்களை மனதில் வைத்துக்கொண்டே இந்த படத்தையும் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.. உங்களுக்கு படம் பிடித்திருக்கலாம், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

      நான் நம் நாட்டில் கொடுக்கும் தேசிய விருதின் லட்சணம் தெரிந்து தான் உலக அளவில் கொடுக்கும் விருதுகளை ஒப்பிட்டுள்ளேன்.. அந்த விதத்தில் 1958லேயே நடிகர் திலகம் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு உலக அளவில் எகிப்தில் நடந்த விழாவில் விருது வாங்கியிருக்கிறார்.. ரஜினி விருது வாங்கும் நடிகர் அல்ல.. அவர் ஒரு entertainer. //ஆனால் உலக தரமான படங்களில் அமெரிக்க படங்களும் இருக்கின்றன// அப்படிப்பட்ட படங்கள் எதுவும் விஸ்வரூபம் போல் ஒரு மோசமான கமெர்ஷியல் படமாக இருக்காது.. இண்டியானா ஜோன்ஸும், அவதாரும் உலகத்தரம் & கமெர்ஷியல் படங்கள்.. ஆனால் அது போன்ற ஒரு ஃபேண்டஸியோ தரமோ இதில் இல்லை.. என்னை பொறுத்தவரை கமல் என்னும் நல்ல கலைஞன் மறைந்துகொண்டிருக்கிறார்..


      //நீங்கள் சொல்வது போல் கமலும் சராசரி ரசிகனுக்காக 5 பாடல்கள் 4 சண்டைக்காட்சி கவர்ச்சி காமெடி என்று எடுத்தால் தான் போர் அடிக்காமல் எல்லாரையும் சந்தோஷ படுத்த முடியும் ஆனால் கமல் தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாய கருத்தை முன் வைத்து எடுக்கிறார். // ஆட்டோகிராஃப், மைனா, காதல், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் மக்களை சந்தோஷப்படுத்தினவே? ஏன் கமலின் தேவர் மகன், விருமாண்டி, மகாநதி எல்லாம் கூட மக்களை சந்தோஷப்படுத்தியதே? அதில் என்ன வெறும் பாட்டும் ஃபைட்டுமா இருந்தது?

      இங்கு ஒரு நடிகரை அவரின் ரசிகர் மட்டும் தான் விமர்சிக்க வேண்டும் என்றால், உண்மையான விமர்சனம் என்றுமே வராது.. அதே நேரத்தில் நான் கமலை ரசிப்பதில்லை என்று நீங்களாகவே முடிவெடுத்துக்கொண்டும் பேசுவது சரியில்லை.. இந்த ஒரு படத்தால் நான் கமலை வெறுத்துவிடப்போவதில்லை.. விஸ்வரூபம்2ம் பாகமும் பார்ப்பேன்.. நன்றாக இருந்தால் அதையும் தூக்கி வைத்து எழுதுவேன், பிடிக்கவில்லை என்றால் இதை விட அசிங்கமால எழுதுவேன்.. நான் எப்படிப்பட்ட அஜித் ரசிகன் என்று பலருக்கும் தெரியும்.. இன்றும் நான் எழுதிய அஜித் பற்றிய ஒரு பதிவு பலரால் தொடர்ந்து ஷேர் செய்யப்படுகிறது.. அப்படிப்பட்ட நான் தான் ‘துப்பாக்கி’ படத்தை சிலாகித்து எழுதினேன்.. சோ, ஒரு நடிகரை எனக்கு பிடித்திருப்பதும் பிடிக்காமல் இருப்பதும் நான் அந்தப்படத்தை ரசிப்பதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது..

      Delete
    4. அதே போல் இந்த பதிவிற்கு மாற்றுக்கருத்து இடும் யாரும் படத்தில் நான் சொன்ன குறைகளைப்பற்றி பேசவே வராமல், கமலைப்பற்றி பொதுவாகவே பேசுகிறீர்கள்.. பொதுவாக பார்த்தால் கமல் ஒரு சிறந்த கலைஞன் தான்.. ஆனால் இந்த படத்தில்? தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்கள் கமல் தன்னை ஒரு மேதாவி என்று காட்டிக்கொள்ளத்தான் எடுக்கப்படுகின்றன.. அவர் ஒரு மேதாவி என்பது நமக்கும் தெரியும்.. அந்த மேதாவியிடம் நாம் ஒரு தேர்ட் ரேட்டட் கமெர்ஷியல் படத்தை எதிர்பார்க்கவில்லை.. நல்ல படம் கொடுப்பார் என நம்புவோம்..

      Delete
    5. அஜித் பற்றி நீங்கள் எழுதிய பதிவை பற்றி நான் சொல்லவில்லை பில்லா 2வை பற்றி எழுதியதை தான் சொல்லியிருக்கிறேன். எனக்கு அஜித் படங்களை பிடிக்காது ஆனால் அஜித் என்ற மனிதனை பிடிக்கும்.


      கமலின் முந்தைய படங்களை நினைத்துகொண்டு பார்பதற்கு நான் ஒன்றும் கமல் ரசிகன் அல்ல தவிர கமலின் படங்கள் பெரும்பாலானவை எனக்கு இதற்கு முன்பு பிடித்தது இல்லை.



      விஸ்வரூபம் கமர்சியல் படமாகவும் இல்லாமல் கலை படமாகவும் இல்லாமல் இருக்கிறது என்று நீங்கள் தான் ஒரு கமண்டில் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் இப்போது கமர்சியலாக இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த குழப்பம்.



      ஒரு சினிமாவை எந்த ரசிகனும் விமர்சிக்கலாம் அனால் அது நடுநிலையானதாக இருக்க வேண்டும். எந்திரனை சாரு நிவேதிதா எப்படி விமர்சித்தாரோ அது போல தான் இருக்கிறது உங்கள் விமர்சனமும்.

      // ஆட்டோகிராஃப், மைனா, காதல், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் மக்களை சந்தோஷப்படுத்தினவே? ஏன் கமலின் தேவர் மகன், விருமாண்டி, மகாநதி எல்லாம் கூட மக்களை சந்தோஷப்படுத்தியதே? அதில் என்ன வெறும் பாட்டும் ஃபைட்டுமா இருந்தது?

      வழக்கு என் 18/9,ஆரண்யகாண்டம்,ஆரோகணம் போன்ற நல்ல படங்கள் எல்லாம் மக்களால் ரசிக்கபடவில்லையே.தமிழ்நாட்டில் என்றுமே கமர்சியல் படங்களுக்கு தரும் மதிப்பை நல்ல கதையுள்ள படங்களுக்கு தருவதில்லை.

      எதாவது ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களால் ரசிக்கப்படுகிறது அதுவும் ஒரு கமர்சியல் படத்தின் வசூலை தாண்ட முடியாது.



      நான் உங்களின் fb பக்கங்களை பார்க்கவில்லை உங்கள் பதிவுகளில் எனக்கு தெரிந்த குறைகளை தான் சொல்லியிருக்கிறேன்.



      நீங்கள் படத்தை பற்றி மட்டும் விமர்சிக்கவில்லை கமலை பற்றியும் தான் சொல்லியிருக்கிறீர்கள் எனவே தான் கமலை பற்றி பேசுகிறார்கள். தவிர நான் படத்தில் நீங்கள் குறை கூறிய ஆப்கானிஸ்தான் காட்சிகளையும், படம் ஐஎம்டிபி தரவரிசை பற்றியும் கூறியுள்ளேன்.

      Delete
    6. //வழக்கு என் 18/9,ஆரண்யகாண்டம்,ஆரோகணம் போன்ற நல்ல படங்கள் எல்லாம் மக்களால் ரசிக்கபடவில்லையே.தமிழ்நாட்டில் என்றுமே கமர்சியல் படங்களுக்கு தரும் மதிப்பை நல்ல கதையுள்ள படங்களுக்கு தருவதில்லை.// ஓ அதனால் தான் கமலும் வஸ்வரூபம் போன்ற படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டாரா? சூப்பர்.. //விஸ்வரூபம் கமர்சியல் படமாகவும் இல்லாமல் கலை படமாகவும் இல்லாமல் இருக்கிறது என்று நீங்கள் தான் ஒரு கமண்டில் குறிப்பிட்டுள்ளீர்கள் // தேர்ட் ரேட்டட் கமெர்ஷியல் படம் என்று தான் சொல்லியிருக்கிறேன்.. உங்கள் இஷ்டத்துக்கு என் வார்த்தையை திரிக்க வேண்டாம்..
      //தவிர நான் படத்தில் நீங்கள் குறை கூறிய ஆப்கானிஸ்தான் காட்சிகளையும், படம் ஐஎம்டிபி தரவரிசை பற்றியும் கூறியுள்ளேன்.// ஐஎம்டிபி மதிப்பெண் மட்டும் ஒரு படத்தின் தரத்தையும் வெற்றியையும் முடிவு செய்துவிடாது.. உடனே நீங்கள் ஷ்ஷாங் ரிடெம்சன் படத்தை சொல்லாதீர்கள்.. விஸ்வரூபத்தை விட எவ்வளவோ சிறந்த கமல் படங்கள் அந்த வலைதளத்தில் கம்மியான மதிப்பேண்கள் தான் பெற்றுள்ளன..

      Delete
    7. உங்களுக்கு படம் பிடித்திருக்கிறது.. எனக்கு பிடிக்கவில்லை.. உங்கள் வாதத்தை நீங்களும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை நானும் அப்படித்தான்.. :-)

      Delete
    8. // ஓ அதனால் தான் கமலும் வஸ்வரூபம் போன்ற படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டாரா? சூப்பர்..//



      ஆமாம் ஆனால் அலெக்ஸ்பாண்டியன்,சுறா,பில்லா 2,மாற்றான்,போன்று இல்லாமல் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உண்மைகதையை எடுத்துள்ளார். டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் மகனை தீவிரவாதியாக மாற்றும் தந்தை, பெண் அடிமைத்தனம், மதத்தின் பெயரால் வன்முறை ஆகியவை கலந்த ஒரு தரமான படமாக தந்துள்ளார்.

      //தேர்ட் ரேட்டட் கமெர்ஷியல் படம் என்று தான் சொல்லியிருக்கிறேன்.. உங்கள் இஷ்டத்துக்கு என் வார்த்தையை திரிக்க வேண்டாம்..//



      தேர்ட் ரேட்டட் கமெர்ஷியல் படமா தனி மனித துதிபாடுதல் இல்லை, தேவையற்ற பன்ச் வசனம் இல்லை, கேவலமான குதுபாட்டுகள் இல்லை, ரெட்டை அர்த்த வசன காமெடிகள் இல்லை, எதை வைத்து இதை தேர்ட் ரேட்டட் கமெர்ஷியல் படம் என்று சொல்கிறீர்கள். சுறா, பில்லா 2, வில்லு, அசல், அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களை பார்த்து இருக்கிறீர்கள் தானே?



      //ஐஎம்டிபி மதிப்பெண் மட்டும் ஒரு படத்தின் தரத்தையும் வெற்றியையும் முடிவு செய்துவிடாது.. உடனே நீங்கள் ஷ்ஷாங் ரிடெம்சன் படத்தை சொல்லாதீர்கள்.. விஸ்வரூபத்தை விட எவ்வளவோ சிறந்த கமல் படங்கள் அந்த வலைதளத்தில் கம்மியான மதிப்பேண்கள் தான் பெற்றுள்ளன. //



      ஐஎம்டிபி மதிப்பெண்ணை கூறியது படத்தில் உள்ள குறைகளை யாரும் சொல்ல மாட்டிர்கள் என்று நீங்கள் சொன்னதற்காக சொன்னேன். ஐஎம்பிடி தவிர ஆனந்தவிகடன்,கேபிள் சங்கர் என பலர் நன்றாக உள்ளதாக சொல்லியுள்ளார்கள் தவிர படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.



      //ஐஎம்டிபி மதிப்பெண் மட்டும் ஒரு படத்தின் தரத்தையும் வெற்றியையும் முடிவு செய்துவிடாது//



      வேறு எது படத்தின் வெற்றியை முடிவு செய்யும் என்று சொல்லுங்கள். படம் நல்ல வசுலும் பெற்று இருக்கிறது. அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் இதுவரை வந்த தமிழ் படங்களின் சாதனையை முறியடித்துள்ளது.



      உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன் ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் இந்த படம் பார்பதற்கு நன்றாக இல்லை என்கிறீர்களா இல்லை இந்த படத்தில் கமல் சொன்ன கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லையா?



      Delete
  7. A PICTURE RUNNING FOR 100 DAYS, NEED NOT BE LIKED BY ALL. IN THE SAME WAY, RAMKUMAR DOESN'T LIKE THIS MOVIE, WHERE MANY PEOPLE LIKE THIS MOVIE....WHAT HIS BELIEF NEED NOT BE FOLLOWED BY EVERYONE.

    ReplyDelete
    Replies
    1. That's a good point.. I dont like the movie, and I can justify my view..

      Delete
  8. அய்யா... கமல் மீது காழ்ப்புடன் பார்த்தால் படம் மோசமாகத்தான் தெரியும்... காழ்ப்பை கழற்றி விட்டுவிட்டு பாருங்கள் 100 முறைகள் பார்த்தாலும் அலுக்காத படம் தான் விசுவரூபம் என்பது என் கருத்து.. அத்தனை கருத்துச் செரிவுள்ள படம் அதுவும் தமிழில் என்பது நாம் பெருமை கொள்ளத்தக்க விசயம்..
    ஆர் சந்திரசேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா! கமல் மேல காரம், புளிப்பு, இனிப்பு எதுவுமில்லாமதான் நான் பார்த்தேன். அப்போ கூட பாருங்க படம் செம மொக்கையா இருக்கு. சராசரி ரசிகனையும் கட்டி போடும்படியா படம் இருக்கனும். மஹாநதி பார்த்தா கண்ணுல தண்ணி வரும், தேவர்மகன் பார்த்தா அப்ப்ப்ப்பிடியே நமக்கு ஒரு வீரம் வரும்... ஆனா இதை பார்த்தா தலைவலிதான் வருது.... :( :(

      Delete
    2. திரு ஆர் சந்திரசேகரன் ஐயா, நான் சொல்ல விரும்பியதை TERROR-PANDIYAN(VAS) சொல்லிவிட்டார்.. கமல் மேல் எனக்கு என்ன காழ்ப்புணர்ச்சி வேண்டியிருக்கிறது? நான் கொடுத்த காசுக்கு படம் என்னை திருப்திப்படுத்த வேண்டும் அவ்வளவு தான்.. அன்பே சிவம், மகாநதி, விருமாண்டி, தேவர் மகனில் இருந்த கமல் எங்கே? கமெர்ஷியல் படமாக சொல்ல வேண்டும் என்றால், வேட்டையாடு விளையாடுவில் இருந்த கமல் எங்கே? //அத்தனை கருத்துச் செரிவுள்ள படம்// இந்தப்படத்தில் அப்படி என்ன கருத்து இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.. //அதுவும் தமிழில் என்பது நாம் பெருமை கொள்ளத்தக்க விசயம்.. // நீங்கள் தமிழில் வந்திருக்கும் நிஜமான கருத்துசெரிவுள்ள படங்களை பார்த்திருக்கிறீர்களா?

      Delete
  9. Replies
    1. thanks ராஜேஷ்.. by the way, i'm a cinema fan.. everyone knows me as a die hard ajith fan.. for ur kind information read my thuppaki review..

      Delete
  10. நான் ஒரு கமல் ரசிகை. இருந்தாலும் கமல் என்பதற்காக என்ன செஞ்சாலும் ரசிக்கனும்ன்னு எல்லாம் எனக்கு வேண்டுதல் இல்லை. முதல் அரைமணி நேரம் மிக அருமை. அருமையான நடிப்பு. அந்த சண்டைக்கு அப்புறம் சுமார் தான்.. சத்தம் காது கிழிந்து விட்டது. எல்லாமே யூகிக்கும்படி எடுப்பது என்ன விதமான திரில்லர் என்று தெரியவில்லை.
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரிங்க.. சிலருக்கு பிடித்திருக்கிறது சிலருக்கு பிடிக்கவில்லை.. சிலர் சுவாரசியம் என்கிறார்கள், சிலர் அறுவை என்கிறார்கள்.. எல்லாத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் “உலகத்தரம்”னு சொல்லிக்கிட்டு யாராவது வந்தா தான் எனக்கு எரிச்சல் பயங்கரமா வருது..

      Delete
    2. ஒலக நாயகன் எடுக்குற எல்லாமே ஒலகத்தரம் தான்..

      Delete
    3. ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  11. உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஆம் உங்களைப்போன்ற அறிவுக்கொழுந்துகளுக்கெல்லாம் ஆங்கிலப்படங்களை காப்பி அடிப்பவன் தான் லாயக்கு..

      Delete
    2. என்ன கொடுமை சரவணன்.. படம் பிடிக்கலைன்னு ஒரு காரணத்தோட சொன்னா அறிவில்லைன்னு அர்த்தமா? நம்மள எல்லாம் தெரியாம வேலைக்கு சேத்துகிட்டாங்க போல..
      அறிவில்லைன்னு ஒத்துக்கறோம் சாமி.. ஆனா கேள்விகளுக்கு பதில் சொல்லலியே? இந்த படத்துல கூட விஜயகாந்த் நடிச்சிருக்கலாம்.. முதல் அரை மணி தவிர்த்து அந்த சாயல் கூட கொஞ்சம் இருக்குது.. (அது கூட இப்ப நீங்க சொன்னப்புறம் தான் இந்த மழுங்கிய மூளையில் உதித்தது..)
      பாரதி.

      Delete
    3. விடுங்கள் பாரதி.. இவர்கள் இப்படித்தான்.. என்னமோ எனக்கும் கமலுக்கு சொத்து தகராறு அதனால் நான் அவரை தூற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போல.. நான் கொடுத்த காசுக்கு ஏற்ற திருப்தி இல்லையென்றால் கேள்வி கேட்கத்தான் செய்வேன்.. அதே போல் ஒரு மோசமான கருத்தை படத்தின் மூலம் சொல்ல நினைத்தால் அதையும் கேள்வி கேட்பேன்.. இங்கு கமலுக்கு ஆதரவாக பின்னூட்டம் இட்ட யாரும் என் கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லவில்லை இப்போது வரை..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One