வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...

Tuesday, November 18, 2014

சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்?’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பவர் தான் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்பவர். இவர் ஒரு நாள் தன் வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டிருக்கிறார்.. அவருக்கு எதுவுமே ஆகவில்லை.. இதை அவர் சொன்ன போது முதலில் யாரும் நம்பவில்லை என்றாலும் அவர் மீண்டும் மின்கம்பியைத் தொட்டுக்காட்டிய போது தான் நம்பியிருக்கிறார்கள்.. ஊரில் இருக்கும் ஒரு டிரான்ஸ்ஃபார்மரில் கூட அவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.. மருத்துவர்கள் அவரை சோதித்து விட்டு இதற்கான காரணம் தெரியாமல் மண்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.. இப்போது அவரது கிராமத்தில் அவரை மின்சார மனிதன் என்று செல்லமாக அழைக்கிறார்கள்’ என்று ஒரு துணுக்கு எழுதி அதற்கு ‘மின்சார மனிதன்’ என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு வாரப்பத்திரிகைக்கு அனுப்புவாராம்..

25,30 ஆண்டுகளுக்கு முன் துணுக்குச் செய்திகளுக்காகவே பல பத்திரிகைகள் வந்தனவே? அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவாராம்.. ஒன்று பிரசுரிக்கவில்லை என்றால் இன்னொன்றுக்கு என்று வரிசையாக அனுப்புவாராம்.. ஏதாவது ஒன்றில் அவர் பெயர் போட்டு அதுவும் பிரசுரமாகி விடுமாம்.. உடனே ஊர் பூரா ”நான் எழுதுனது புக்ல வந்திருக்கு பாத்தியா?” என்று அதைக் காட்டி சந்தோசப்படுவாராம்.. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்று  ஒருவனோ, அவனுக்கு மின்சாரம் ஷாக் அடிக்காது என்பதோ எதுவும் உண்மை கிடையாது.. சும்மா கை போன போக்கில் எதையாவது எழுதி அனுப்புவாராம்.. அது பிரசுரம் ஆகிவிட்டால் போதுமாம்.. ஒரு முறை பிரசுரம் ஆனதும், அது கொடுத்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் இதே போல் லண்டனில் ஒரு கதை, ஆஸ்திரேலியாவில் ஒரு கதை என்று எதையாவது அனுப்பி தன் பெயரில் அவை பிரசுரம் ஆவதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்..

ஒரு விசயம் உண்மையா, பொய்யா, நடந்ததா, இல்லையா என்பதை விட நம் பெயரில் அது வெளிவந்து அதை ஊர் முழுக்க, உலகம் முழுக்க தமிழ் தெரிந்த அனைவரும் வாசிப்பது ஒரு பெருமை தானே? புகழ்ச்சி தானே? போதை கொடுக்கும் தானே? அந்தப் பத்திரிகைகளிடமும் அவற்றையெல்லாம் உண்மை தானா என்று சரி பார்க்கும் அளவிற்கு அப்போது  தொழில்நுட்பமும் கிடையாது, நேரில் பார்த்து வர வசதியும் கிடையாது.. அதனால் பெயர் வந்தால் போதும் என்கிற எண்ணத்தில் எழுதும் பல துணுக்கு எழுத்தாளர்கள் அப்போது இருந்தார்கள் என்றார்.. பின் போகப்போக எப்படி  அதில் இருந்து தான் வெளிவந்து ஒரு சீரியஸ் ரைட்டர் ஆனேன் என்றும், அதில் அவர் பெற்ற கஷ்டங்களையும் கண் கலங்க குறிப்பிட்டார்.. ஆனால் அவர் சீரியஸ் ரைட்டர் ஆன கதை இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை.. அதனால் நமக்குத் தேவையானதை மட்டும் உறிந்து கொண்டு கட்டுரைக்குள் வருவோம்.. 

திரு.பாமரன் துணுக்கு மாதிரி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிய சங்கதிகள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா? இப்போதும் அது போல் எங்கேயோ நீங்கள் தினசரி பார்ப்பது போல், அனுபவிப்பது போல் உணர்கீறீர்கள் தானே? ஹ்ம் உண்மை தான், அன்றாடம் நாம் பார்க்கும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் தான் அவை.. மோடி சொன்னார், அவங்க டாடி சொன்னார், அப்துல் கலாம் சொன்னார், சார்லி சாப்ளின் சொன்னார் என்று வரும் அட்வைஸ்கள், பொன்மொழிகளில் இருந்து, ஐஏஎஸ் கேள்விகள் என்கிற லேபிலில் வரும் சப்பைக் கேள்விகளும், அன்றாட விசயங்களைப் பற்றிய பொது அறிவு என்று அனைத்தும் வருகின்றன இந்த வாட்ஸ்-அப்பில்.. ஆனால் அவற்றில் 90% பொய்யாக இருப்பது தான் இதில் இருக்கும் பெரிய கடுப்பு.. ஐஏஎஸ் செலெக்‌ஷன் கமிட்டில இருக்குற மாதிரி தினமும் ஒரு ஐஏஎஸ் கேள்வி கேக்குறாய்ங்க வாட்ஸ்-அப்ல.. கொடுமைடா சாமி.. அந்தக் கேள்விகள் தான் ஐஏஎஸ்சில் கேட்கப்படும் என்றால் எங்கள் மார்க்கஸ் கூட இன்று ஒரு ஜில்லா கலெக்டர் ஆகியிருக்கும்..

ஒரு காலத்தில் நாம் தகவல்கள் அறிந்து கொள்ள புத்தகங்களை மட்டும் தான் நம்பிக்கொண்டிருந்தோம்.. 25 வருடத்திற்கு முன் ”பிரேசில் கிராமத்தில் ஒருவனுக்கு மின்சாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, அவன் மின்சார மனிதன் என்று அழைக்கப்பட்டான்” என்கிற செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டால் நாம் நம்பிக்கொண்டும், அதை பிறரிடம் ஆச்சரியமாகக் கூறிக்கொண்டும் தான் இருந்திருப்போம், வேறு வழி இல்லை.. ஏனென்றால் அன்றையக் கால சூழல் அப்படி.. ஆனாலும் அப்போது சில அன்றாட, முக்கியமான விசயங்களை எந்த பத்திரிகையும் பொறுப்பில்லாமல் பொய்யாகத் தந்ததில்லை என்றே கணிக்கிறேன் என் ஞாபகத்திற்கு எட்டிய வரை..

இப்போது நாம் இருப்பதோ தொழில்நுட்ப யுகம்.. உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது.. நமக்குப் பிடித்த பாடலின் வரி மறந்து விட்டால் அதை தெரிந்து கொள்வதில் இருந்து, சமையல் ரெசிப்பி, பள்ளிக்கூட எதிரி, கல்லூரி நண்பன், நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, சினிமா, அரசியல் என்று எதையும் செல்ஃபோனில் பார்த்துவிடலாம்.. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று நொடியில் தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளத் தான் நாம் முயல்வதே இல்லை; சோம்பேறித்தனம்.. அதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.. கீழே நான் கொடுத்திருக்கும், எனக்கு வந்திருந்த சில வாட்ஸ்-அப் மெசேஜ்களைப் பாருங்கள், உங்களுக்கும் அவை வந்திருக்கலாம்..

1. ”இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.. அப்படி செய்தால் எண்ணி ஏழாவது நாளில் 12 மணி அடிக்கும் போது இந்தியா வல்லரசாகி விடும்.. ஒரு ரூ = ஒரு $ ஆகிவிடும்.. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? தேச பக்தி இருக்கும் எவனும் இதைச் செய்வான்” என்று செண்டிமெண்ட்டாக ட்ச் செய்து கீழே எதெது இந்தியப் பொருள், எதெது அந்நியப் பொருள் என்று பெரிய லிஸ்டே இருக்கும்..

2. கையில் தீக்காயம் பட்டுவிட்டால் தண்ணீர் ஊற்றுவதோ, துணியால் சுற்றி அணைப்பதோ கூட சமயங்களில் காயத்தை பெரிதாக்கலாம்.. வீட்டில் மாவு இருந்தால் தீக்காயத்தில் அதைக்கொட்டுங்கள்.. இது ஒரு வியட்நாம் மருத்துவ முறை.. காயத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் தழும்பே கூட மறைந்து விடும்.. என் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகனின் பெரியம்மா பெண் இப்படித்தான் செய்தாள்.. இப்போது அவள் கையில் தீப்பட்ட சுவடே இல்லை..

3. நீங்கள் ஸ்விஸ் பேங்கில் போட மறந்து போய், பாழாய்ப் போன இந்திய நாட்டு வங்கியில் போட்ட உங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்மில் நடு இரவில் நிற்கிறீர்கள்.. அப்போது எவனோ ஒருவன் உங்களை கத்தியை வைத்து மிரட்டுகிறான் உங்கள் காசையெல்லாம் கொடுக்கச்சொல்லி.. உடனே நீங்கள் பயப்படாமல், ஆழமாக உங்கள் மூச்சை இழுத்துக்கொண்டு, தீர்க்கமான முடிவுடன் உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யுங்கள்.. ஏற்கனவே ஏடிஎம்முடன் கல்யாணம் செய்து வைக்கப்பட்டிருக்கும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உங்கள் ஏடிஎம்மிற்கு அந்த நட்டநடு ராத்திரியிலும் போலீஸ் விரைந்து வந்து, சடுதியில் செயல்பட்டு அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள்..

4. ஃப்ரூட்டி கம்பெனியில் எய்ட்ஸ் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறுக்கன், எய்ட்ஸ் கிருமி இருக்கும் அவன் ரத்தத்தை ஃப்ரூட்டியில் கலந்து விட்டான்.. அதனால் யாரும் ஃப்ரூட்டி குடிக்காதீர்கள்..

போதும் உதாரணம் என்று நினைக்கிறேன்.. இவை அனைத்தும் உங்களுக்கும் வந்திருக்கிறது தானே? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், இதில் எத்தனையை நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்தீர்கள்? இது அத்தனையுமே பொய்.. வீட்டின் வரவு செலவு கணக்கைப் பார்க்கும், லேசான common sense இருக்கும் ஒருவனே சொல்லிவிடுவான் முதல் விசயம் சத்தியமாக சாத்தியம் இல்லை என்று.. அதிலும் 100% இந்தியப் பொருள் என்று எதையும் இன்றைய LPG பொருளாதாரத்தில் சொல்லிவிட முடியாது.. கடைசி விசயமும் அப்படித்தான்.. எய்ட்ஸ் கிருமி இப்படியெல்லாம் எளிதாக பரப்பப்பட வாய்ப்பில்லை என்கிற சிறிய பொது அறிவு போதும்.. ஆனாலும் ஃப்ரூட்டி குடிக்காமல் இருப்பது நல்லது தான் என்பதால் ஒரு வகையில் அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் மற்ற விசயங்களின் சீரியஸ்னஸ் தெரியாமல் ஃபார்வேர்டு செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்..

நிஜமாகவே தீக்காயம் பட்ட ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் போகாமல் கையில் மாவை மட்டும் போட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? செப்டிக் ஆகி கையையே எடுக்க வேண்டியது தான்.. தீப்புண்ணிற்கு கையில் மாவு போடுவது சரியான முறை அல்ல என்பது கூகிளில் நீங்கள் அரை குறையாகத் தேடினாலே பதில் தெளிவாகக் கிடைத்துவிடும்.. அடுத்தது ஏடிஎம் விசயம்.. அந்த மெசேஜில் சொன்ன பாயிண்ட் சரி என்றே வைத்துக்கொள்வோம்.. எனது பின் நம்பர் 2222, அல்லது 7887 என்றோ இருந்தால் நான் என்ன செய்வது? சரி ரேண்டமாக 2591 என்கிற நம்பர் இருக்கும் ஒருவன் ஏடிஎம்மில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவகர் அனுப்பிய செய்தியை உண்மை என்று நம்பி, 1952 என்று தலைகீழாக அடித்துவிட்டு போலீசுக்காக காத்திருந்து கத்திக்குத்து பட்டு செத்துப்போனால் என்ன செய்வீர்கள்? மறுநாள் அதையும் வாட்ஸ்-அப்பில் அனுப்புவோம், அபப்டித்தானே? ஒரு செய்தியை, அதுவும் பின்விளைவுகள் மோசமாக ஏற்படும் சாத்தியம் உள்ள செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும் என்கிற அக்கறை கிஞ்சித்தும் நமக்கு இல்லையே?.. 

ஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்பும் நம் ஒவ்வொருவரையும் ஒரு மீடியாவாக மாற்றியிருக்கிறது.. நம் கருத்துக்களைப் படைக்கிறோம், சினிமா, அரசியலைப் பகடி செய்கிறோம்.. பத்திரிகைகள், செய்திச்சேனல்கள் போல் நாமும் ஹாட் நியூஸை முதன் ஆளாகக் கொடுக்க பதைபதைக்கிறோம்.. பந்தாவாக ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கி, 3G நெட் பேக் எல்லாம் போட்டுக்கொண்டு, வருபவர் போகிறவருக்கெல்லாம் வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்து, ஊர் ஞாயம் உலக ஞாயம் பேசும் நமக்கு, அதில் வரும் செய்தியின் உண்மைத் தன்மையை கூகிளில் 5நிமிடம் தேட மட்டும் கறி வலிக்கிறது.. ஒரு செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, ஏன் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை? 

சமீபத்தில் என் தோழி ஒருத்தி ஒரு அழகான பெண்ணின் ஃபோட்டோவையும், ஒரு வாய்ஸ் மெசேஜையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தாள். அந்த அழகான பெண் வீட்டிற்கு கேஸ் ரிப்பேர் செய்ய வருவது போல் வந்து, மயக்க மருந்து கொடுத்து, வீட்டில் இருக்கும் சாமான்களைத் திருடி விடுவாள் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருந்தது.. அந்தப் பெண் அந்த ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதத்திலேயே தெரிந்தது அது அவள் வீட்டிலோ, அல்லது அவளுக்கு பழக்கமான இடத்திலோ யாரோ எடுத்த ஃபோட்டோ என்று.. அவள் கொடுக்கும் போஸிற்கும் அந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை. என் தோழிக்கும் இதைச் சொன்னேன், “உண்மையை அறியாமல் பகிராதே” என்று.. “எதா இருந்தா உனக்கென்ன? பிடிச்சா ஃபார்வேர்டு பண்ணு, இல்லாட்டி டெலிட் பண்ணு” என்றாள்.. “உன் ஃபோட்டோவ போட்டு ஃபார்வேர்டு பண்ணவா?” என்றேன்.. கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.. மறுநாள் தினகரனில் அந்தப்பெண்ணின் ஃபோட்டோவைப் போட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தியை அப்படியே போட்டிருந்தார்கள். உடனே என் தோழி என்னை அழைத்து, “நேத்து பெரிய வெண்ண மாதிரி சொன்ன? இன்னைக்கு பாரு பேப்பர்லயே போட்டிருக்கான்” என்று அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பினாள்.. 

அடுத்த இரண்டு நாளில் பார்த்தால் அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. அந்தப் பெண் பாவம் எங்கோ வடநாட்டில் கேஸ் கம்பெனியில் வேலை செய்பவள். உடன் வேலை செய்யும் எவனோ ஒருவன், ஏதோ ஒரு சொந்தக் காரணத்தால் அவள் ஃபோட்டோவைப் போட்டு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறான் என்று பின்பு தான் தெரிய வந்திருக்கிறது.. அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? சரி நாம் தான் கூறுகெட்ட பாமர மக்கள், இந்த மீடியாவுக்கு என்னவாம்? ஒரு செய்தியைப் போடும் முன் ஆராய மாட்டார்களா, அது உண்மையா இல்லையா என்று? மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்னன்னைக்கு செய்தி வேண்டும். அது சரியோ தவறோ ஒரு ஹாட் நியூஸ் வேண்டும்.. கிடைத்ததைப் போடுவார்கள், மறுநாள் மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.. ஒருவர் தன் கையில் இரட்டை விரல்களைக் காட்டியதை மட்டும் வைத்தே, ஜெ.வுக்கு ஜாமீன் என்று அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் ஸ்க்ரோலிங் ஓட்டவில்லையா? அதற்கு எத்தனை சேனல்கள் மன்னிப்பு கேட்டன? மக்களாகிய நாமும் இதை மறுநாள் மறந்துவிடுவோம்.. ஞாபம் இருந்தாலும் கேட்க நமக்கென்ன அருகதை இருக்கிறது? நாமும் ஏடிஎம், மாவு, ஃப்ரூட்டி, என்று கண்டதையும் கிறுக்குத்தனமாக அவர்களைப் போல் பகிர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்? செய்தி நிறுவங்கள் பற்றி நான் சொன்னது ஒரு பானைச் சோறு தான், அதுவும் பழைய சோறு.. சுடு சோறு ஒன்றைக் கேளுங்கள், இன்டர்நேஷன்ல் லெவலில் நம் செய்தி நிறுவனங்கள் நாறிய கதை அது..

கேரளத்தைச் சேர்ந்த அருண் என்னும் நபர் நம் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.. அதாவது தனக்கு நாசாவில் ETயைப் பற்றி, அதாவது வேற்று கிரக ஜீவராசிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்திருப்பதாகவும், அதே நேரத்தில் உலகப்புகழ் பெற்ற MITயில் இருந்தும் டாக்ட்ரேட் படிப்புக்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. இது நடந்தது 2012 ஆகஸ்டில்.. கேரள சேனல்களும், மாத்ருபூமியும், The Hindu, The New Indian Express, Telegraph போன்ற ஆங்கில நாளேடுகளும் கவர் ஸ்டோரிகளாகப் போட்டுத் தள்ளின.. இவரின் பேட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளேடுகளிலும் வந்தன.. இதை எல்லாம் உண்மை என்று நம்பிய மத்திய மனிதவள மேம்பாட்டு மையமும் அந்தப் பையனுக்கு பாராட்டு விழா நடத்தியது.. அவனும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலமாக, தான் பிரதமர் மோடியை சந்தித்து அரைமணிநேரம் உரையாடியதாகவும், தேசத்தின் ஆராய்ச்சிக்கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்தே இருப்பதாக மோடி சொல்லியிருப்பதாகவும் கப்சா விட்டிருக்கிறான்.. நம் மீடியாக்களும் டைமிங்காக, ரைமிங்காக அவனைப் பற்றிய கட்டுரைகளைப் போட்டுத் தள்ளயிருக்கின்றன.. இரண்டு வருடங்கள் இதே சங்கதி ஓடிக்கொண்டிருந்தன கடந்த அக்டோபர் வரை..

கடைசியில் MITயில் இருக்கும் சில மலையாளிகள் மூலம் விசாரித்த போது அவனுக்கும் MITக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்திருக்கிறது.. நாசாவிலும் இந்தப் பையனைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.. பின் இவன் யாரென்று தேடிப்பிடித்து விசாரித்தால் இவன் சிறுவயதிலேயே அமெரிக்கா செல்லும் ஆசையில் இருந்தவனாம்... நண்பர்கள் எல்லாரும் வெளிநாடு செல்வதால், ஒரு வித ஏக்கத்தில் தானும் அப்படி கப்சா விட்டானாம்.. அவன் கப்சாவை எல்லாம் உண்மை என்று நம்பிய நம் நான்காம் தூண்களாக பத்திரிகைகள் அதை அச்சில் ஏற்றினவாம், இந்த ஜனங்கள் நாம் எதைச் செய்தி என்று கொடுத்தாலும் படிப்பார்கள் என்று.. ஆனால் அவனோ பூடானில் ஒரு கல்லூரியில் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.. நாசா, MIT, ராஜ்நாத் சிங், மோடி சந்திப்பு எல்லாமே அவன் கச்சிதமாகச் சொன்ன பொய்கள்.. 

உலகம் முழுக்க செய்தி சேகரிப்பாளர்களை வைத்திருக்கும் இன்றைய நவீன நாளேடுகள் கூட எதனால் கோட்டை விட்டன? லேசான ஒரு விசாரணை செய்திருந்தாலே இவன் ஒரு ஃப்ராடு என்று தெரிந்திருக்குமே? ஏன் செய்யவில்லை? அவசரம், எல்லாம் அவசரம்.. செய்தியை நான் தான் முதலில் தருவேன் என்கிற அவசரம், என் செய்தி வெப்சைட்டில் தான் ஸ்க்ரோலிங் முதலில் ஓட வேண்டும் என்கிற அவசரம், நான் தான் இந்தியாவின் இந்த அறிவாளியை முதன் முதலாகப் படம் பிடித்து பேட்டி எடுத்தேன் என்று தண்டோரா போட அவசரம்.. ஆனால் இப்போது என்ன நடந்தது? அவனை வாழ்த்திய அனைத்து பத்திரிகைகளும் என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது மூடிக்கொண்டு இருக்கின்றன.. அப்போது சுடச்சுட செய்தி கொடுக்க முடியாத Deccan Chronicle, BBC, மனோரமா போன்றவைகள் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு அவன் ஃப்ராடுத்தனத்தை கிழிக்கின்றன.. இப்போது சுடச்சுட செய்தியும் ஸ்கோரிலிங்கும் போட அவர்களுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது..

இது தான் இன்றைய நிதர்சனம்.. எந்த ஒரு விசயத்தையும் நிறுத்தி, நிதானமாகப் பார்த்து, ஆராய்ந்து செல்வதற்கெல்லாம் யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை.. அந்த விசயம் சரி என்றால் கொண்டாட்டம், தவறு என்றால் ஒரே ஒரு சாரி.. அவ்வளவு தான்.. அறிவியலும் முன்னேற்றமும் தரத்தைக் காவு வாங்கிக்கொண்டன.. தரத்தை விட ஜிகினா வேலைகள் தான் பெரியது என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டன.. அதற்கான உதாரணங்கள் தான் நமது வாட்ஸ்-அப் மெசேஜ்களும், நான் மேலே சொன்ன நம் நாளிதழ்கள் மற்றும் செய்திச்சேனலகளின் லட்சணங்களும்.. ஹாட் நியூஸைத் தரத்துடிக்கும் பத்திரிகைகள் எதற்குமே பெஸ்ட் நியூஸைத் தர வேண்டும் என்கிற அக்கறைக் கொஞ்சம் கூட இல்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் தான் தங்களைத் தாங்களே நான்காம் தூண் என்று பெருமையாக அழைத்துக்கொள்கிறார்கள்..

சரி அவர்களுக்குத் தான் அக்கறை இல்லை.. ஒரு மனிதனாக சக மனிதன் மேல் அக்கறைக் கொண்ட நாமாவது இனி அக்கறையாக இருப்போம்.. நமக்கு வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பிறரிடம் பகிர்வோம்.. இனி மெசேஜை ஃபார்வேர்டு செய்யும் முன் கூகிள் ஆண்டவரை ஒரு முறை தரிசித்து விட்டு ஃபார்வேர்டு செய்யுங்கள்.. இங்கே பாருங்கள் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் எனக்கு வந்திருக்கும் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் இது.. ”044-40504050 என்னும் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுனா உங்க நம்பருக்கு 3G டேட்டா கார்டு 1GB கொடுக்கிறார்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த ஆஃபர்.. நேரத்தை வீணாக்காமல் வேகமாகக் கால் செய்..” அடப்பாவிகளா டேய் அது அமேசான் காட்டை அழிக்கும் எர்வாமேட்டின் காரனோட நம்பர்டா.. ஃபோன் கீன் பண்ணித் தொலஞ்சிறாதீங்க.. உங்கள ஜென்மத்துக்கும் தூங்க விட மாட்டாய்ங்க.. 

எத்தனை சிவகாசிக்காரன் வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது போலயே....

20 comments

  1. நீங்கள் கூறுவது மிகமிக சரியான சிந்திக்க கூடிய விஷயம் தான்
    ஆனால் சிந்திப்பதற்க்கு தான் யாருமில்லாத நிலை.

    உதாரணத்திற்க்கு நேற்று எனக்கு வந்த ஒரு மெஜேசை பத்து பேருக்கு பார்வேர்டு செய்தால் Rs450 கிடைக்கிறது என்று வந்தது அதிலிலுள்ள வலைத்தளமும் உறுதிபட கூறியது இது அந்நிறுவனத்தின் விளம்பரத்தை பெருக்க அவர்கள் செய்த ஒரு வித யுக்தி பணம் ஏறுகிறதே இல்லையே பணத்தின் மேல் மோகம் கொண்ட பலர் இதை உண்மையா பொய்யாவென அறியாது பகிர்கின்றனர். மக்களின் பேராசையை சிலர் காசுக்காக விற்றால் சிலர் பாசுக்காக டைம்பாசுக்காக விற்க்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கம்பெனிகள் செய்வது எல்லாம் இருக்கட்டும்.. இந்த மக்களுக்கு கொஞ்சம் கூடவா அறிவு இல்லை? வாத்து மடையர்கள் என்று சொன்னாலும் தகும்..

      Delete
  2. ஹைய்யோ ஹைய்யோ!!!! அத்தனையும் உண்மை!

    ஏமாத்தறதுக்குன்னே எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க பாருங்களேன்!

    சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

    ReplyDelete
    Replies
    1. //சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?// கேட்பாருக்கு மதி என்பதைத் தாண்டிய புகழ் போதை தலைக்கு ஏறுவதால் ஏற்படும் விளைவுகள் இவை...

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அம்மா..

      Delete
  3. வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...= சிவகாசிக்காரன் = சரி அவர்களுக்குத் தான் அக்கறை இல்லை.. ஒரு மனிதனாக சக மனிதன் மேல் அக்கறைக் கொண்ட நாமாவது இனி அக்கறையாக இருப்போம்.. நமக்கு வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பிறரிடம் பகிர்வோம்.. இனி மெசேஜை ஃபார்வேர்டு செய்யும் முன் கூகிள் ஆண்டவரை ஒரு முறை தரிசித்து விட்டு ஃபார்வேர்டு செய்யுங்கள்.= இது தான் Ram Kumar. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
  4. ராம்குமார், துளசி மேடம் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். இது உங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. என் புகழில் முக்கால்வாசி உங்கள் மூலம் கிடைத்தவை தான்.. உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னைச் சுற்றி நல்லவர்கள் என்றும் இருப்பார்கள்..

      Delete
  5. கடைசில என்ன எழுத விடல....ஹ்ம்ம்.. கொஞ்சம் லேட் பண்ணது என் தப்பு தான்..

    இருந்தாலும் உங்கள் நடையில் பதிவு சிறப்பாக உள்ளது . மிக அருமை... நானும் இதே வாட்ஸ்-அப் ஆடியோ செய்தி, லைக்/ ஷேர் செய்தால் விடியலுக்குள் நல்ல செய்தி வரும், குழந்தையை கண்டிபிடிக்க உதவுங்கள்.... இது போன்ற பல உதாரணங்களை எடுத்து வைத்துள்ளேன்.. முக்கியமாக வாட்ஸ்-அப் ஆடியோ கேட்ட பின்பு தான். நான் இதை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.. நான் எழுதியதை படிப்பதை விட, நீங்கள் எழுதியதை நிறைய பேர் படித்து தெளிவு பெறட்டும்... :-)

    ReplyDelete
    Replies
    1. //லைக்/ ஷேர் செய்தால் விடியலுக்குள் நல்ல செய்தி வரும், குழந்தையை கண்டிபிடிக்க உதவுங்கள்...// இது நான் எழுத நினைத்து நீளம் காரணமாக விட்டவை.. இவற்றைப் பற்றி இன்னும் ஆழகாம சைக்காலஜிக்கலாக எழுதலாம்..

      //நான் எழுதியதை படிப்பதை விட, நீங்கள் எழுதியதை நிறைய பேர் படித்து தெளிவு பெறட்டும்... :-)// பாஸ் இதெல்லாம் டூ மச்..

      Delete
  6. ஏமாற்றுவது ஒரு கலை.இதை தனி நபராகவோ,குழுவாகவோ நடத்துவதை தொழிலாகக்கொண்டவர்கள் ஏராளம்,ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம்,பிரபல பத்திரிகைகள் வார இதழ்கள் பொறுப்பின்றி விளம்பர வருமானத்திர்க்காக நம்பகத்தன்மையற்றவைகளை வெளியிடுவது.அவர்கள் கூறும் சமாதானம்,அதனினும் அசிங்கமானது.எடிட்டோரியல்—மார்கட்டிங்.ஒருங்கிணைப்பு சம்பந்தமானது.லூதியான விளம்பரமொன்றை பார்த்து பள்ளி மாணவனாக ஏமாந்த அனுபவம் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தி கல்லா கட்டிய பிரபல வார இதழ், அன்றைய சிறுவனுக்கு அளித்த பரிசு.ஏன் இன்றைய பல வலைப்பதிவுகளில் ஒரு வாரத்தில் அல்லது மாதத்தில் ஆயிரக்கணக்கான டாலரை கொட்டிகொடுக்க ாத்திருப்பவர்களைப்பார்க்கலாமே
    பேராசை பெரு நஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் ஒரு வகையில் ஏமாந்து கொண்டும், ஏமாற்றிக்கொண்டும் தானே இருக்கிறோம்?

      Delete
  7. மிக சிறப்பான விழிப்புணர்வு பகிர்வு! பேஸ்புக், வாட்ஸ் அப், செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று கொஞ்சம் சிந்தித்தே பகிரவேண்டும். மீடியாக்களும் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் உண்மை சார்.. நன்றி

      Delete
  8. எல்லோருக்கும் ஒரு கடமை உணர்வு தேவை என்பதை அருமையான விளக்கமாக கொடுத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  9. vசெமையான காரம் அண்ணே பதிவில் ...
    நறுக்கென்று உள்ளது ... அந்த MIT மேட்டர் போல தான் நாட்டோட நிலை ....

    ReplyDelete
    Replies
    1. மக்களின் கூட்டு தானே நாடு? அதனால் தான்ணே அப்படி..

      Delete
  10. பலருக்கு சொந்த சரக்கு இருந்தாலும் பயன்படுத்துவதில்லை , சிந்திக்கவும் யோசிக்கவும் சோம்பேறிதனப்பட்டு மற்றவர்கள் எழுதியதிதை மறுபதிவிடுகிறார்கள் .நல்ல எழுத்து நடை !

    ReplyDelete
    Replies
    1. யோசிக்கக்கூட சோம்பேறித்தனமாக இருப்பவர்கள், அதை மறுபதிவு செய்வதில் மட்டும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்கிற கேள்வி தான் என்னைத் துளைக்கிறது..
      நன்றி :-)

      Delete
  11. Casino Bonus Codes and Promotions - Dr. mcd
    The 서울특별 출장샵 best online 용인 출장안마 casinos to play with 성남 출장안마 a real money bonus 목포 출장샵 are: Ignition Casino; Betsoft Casino; Bovada Casino; Deposit Bonus: 100% up to €500Bonus Type: 오산 출장마사지 First Deposit Bonus

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One