நானும் வாலியும்...

Friday, July 19, 2013

தலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரிஞ்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்?’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறேன் என்கிற கர்வத்தில் தான் இந்த தலைப்பு.. நேற்று மாலை பாஸோடு மார்க்கெட் விசிட்டில் இருந்த போது நண்பர் ஒருவரிடம் இருந்து 7மணி அளவில் ஒரு எஸ்.எம்.எஸ், "ur favorite vaali is dead" என்று.. ஒரு சிலர் இறந்தால் நமக்கு மிகவும் வருத்தமாக, அன்று முழுவதும் மனதுக்கு மிக பாரமாக கஷ்டமாக இருக்கும், சிலர் இறந்தால் நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு பாதிப்பும் இருக்காது.. ஆனால் வாலி இறந்த செய்தி கேட்டதும் எனக்கு இந்த இரண்டு விதமாகவும் தோன்றவில்லை.. அவருடைய பாடல் வரிகள் சில மனதில் வந்து போயின. பின் அவர் இறந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் பாடல்கள் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, வாயில் நாம் முனுமுனுத்துக்கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவு  என்பதே இல்லை.. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்கிற கண்ணதாசனின் வரிகள் வாலிக்கும் பொருந்தும்.. இனி நானும் வாலியும்..


சென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் அமைந்திருக்கும் சௌத் போக் சாலையில் ஒரு சிறிய மண்டபம். அங்கு 2005ம் ஆண்டில் ‘விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 32 பேரும் மதிய சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தோம். அமைதியாக, நமக்கு அறிமுகமில்லாத ஆனால் இனி அறிமுகப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு சிறு சலசலப்பு.. காற்றில் திருநீறும், குங்குமமும், ஜவ்வாதும் கலந்த ஒரு தெய்வீகமான மெல்லிய வாசனை வந்தது.. வாசனையை மூக்கும் மனதும் உணர்ந்து லயிக்கும் அந்த நொடியில் வெள்ளை நிற பட்டு வேட்டியும் முழுக்கை ஜிப்பாவும் போட்டு ஒரு வாலி எங்களை விறுவிறுவென சிரித்த முகத்துடன் கடந்தார். நாங்கள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கை வரிசைகளைத்தாண்டி எங்களுக்கு முன் பேசும் இடத்தில் கம்பீரமாக தொண்டையை செருமியபடி மைக்கை பிடித்துக்கொண்டு நின்றார். ’இவ்வளவு வெள்ளையா உலகத்துல ஒருத்தன் இருப்பானா?’னு நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கலர்.. எங்க ஊர் பக்கமெல்லாம் நான் இந்த கலரில் ஆளை பார்த்ததே இல்லை.. கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..


அதற்கு முன் வாலி என்றால் சினிமாவில் பாட்டு எழுதுபவர் என்பது மட்டும் தான் தெரியும்.. அவரின் வரலாறு, குறும்பு, நகைச்சுவை இது எதுவும் தெரியாது.. என்ன தைரியத்தில் ஒரு கிழவரை, 20வயது இளைஞர்களுக்கு மத்தியில் பேச வைக்க விகடன் குழுமம் முடிவு செய்திருக்கும் என்று கூட யோசித்தேன்.. பேச ஆரம்பித்தார்.. அந்த 30நிமிடங்களும், யாரோ நம் கல்லூரி நண்பன் நம்மோடு சகஜமாக, நகைச்சுவையாக, ஊக்கு சக்தியாக, கிண்டலாக, பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருந்தது அவரின் பேச்சு. ’நான் இன்னைக்கு இங்க பேசுறதுக்கு எதுவுமே prepare பண்ணல.. கார்ல வரும் போது அவசர அவசரமா ஒரு கவிதை உங்களுக்காக எழுதிருக்கேன்”னு சொல்லி அந்த கவிதையை வாசித்தார். அந்த கவிதை எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை இரு கருத்துக்களை தவிர்த்து.. 

”யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை..
உங்களின் பலத்திற்கு இன்னொரு கை
அது தான் விகடன் பத்திரிகை”

“எவன் ஒருவர் வேர்வைக்கும் - வெற்றி
நிச்சயம் வேர் வைக்கும்”

அவர் பாட்டுக்க வார்த்தைகளை பிரித்து மேய்ந்து கவிதை பாடிக்கொண்டிருந்தார்.. அவரே அவரை ’பாக்கெட் பேப்பர் கவிஞன்’ என்று சொல்லிக்கொண்டார்.. கண்டேன் காதலை படத்தில் சந்தானம் சொல்வாரே, “இப்படித்தாம்ப்பா நான் பாட்ட எழுதி அங்கங்க விட்டுட்டு போயிருவேன், அத எடுத்து யாராவது சினிமால எழுதி பேர் வாங்கிறாங்க”னு, கிட்டத்தட்ட வாலியும் அதே வகையறா தான்.. தான் அவசரத்தில் மேடையில் பேசுவதற்காக எழுதிய பல கவிதைகளை முறையாக பாதுகாக்காமல் விட்டுவிடுவாராம்.. அதை பின் ஏதாவது ஒரு சினிமாவில் பாடலாக கேட்கும் போது தான் அவருக்கே தெரியுமாம் ’எவனோ நம்ம கருத்த களவாண்டுட்டாய்ங்க’னு...

அழகிய தமிழ் மகன் படம் வந்த புதிதில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடல் கேட்டதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.. அதில் “எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே” என்று ஒரு வரி வரும்.. ‘ஆஹா வாலி சொன்ன மாதிரியே எவனோ அவர் கவிதைய லவட்டிட்டு போயி பாட்டு எழுதிட்டான்’ என அலர்ட் ஆகி வேகவேகமாக நெட்டில் மேய்ந்ததில், நல்ல வேளையாக அந்த பாடலை வாலி தான் எழுதியிருந்தார்.. பரவாயில்ல நம்ம மீட்டிங்கிற்கு பிறகு ஆள் உஷாராகத்தான் இருக்கிறார் என மனதை தேற்றிக்கொண்டேன்..


வாலிக்கு எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது.. எங்களிடம் பேசும் போது கூட எம்.ஜி.ஆர் தன்னிடம் ஒரு விசயம் கூறி மிகவும் வருந்தியதாகவும், தான் அவரை எப்படி தேற்றினேன் எனவும் கூறினார்.. “கவிஞரே நீர் எனக்கு எழுதிருக்கிற எல்லா பாட்டும் வாழ்க்கையில நடந்திருக்கும்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு எழுதின.. நடந்தது.. நான் ஆணையிட்டால்னு எழுதுன, நாட்டுக்கே ஆணையிடுற அளவுக்கு வந்துட்டேன்.. ஆனா எனக்கொரு மகன் பிறப்பான்னு எழுதுன.. அது மட்டும் நடக்கலியே?” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது? இந்த தமிழ் நாட்டு மக்களே உங்க பிள்ளைங்க” தான்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினாராம்..

வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்.. வாலிக்கு ஓவியத்தில் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி.. அவரைப்போல் தானும் பிரபலமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக்கொண்டாராம்.. ஒரு பத்திரிகை ஆபிசில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார்.. அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “அதென்னப்பா பேரு வாலி? வாலே இல்ல, நீ வாலியா?” என்றாராம்.. நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே.. 

“வால் இல்லை என்பதால் வாலியாகக்கூடாதா?
கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?”

என்று  சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்.. “ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது, நீ ஒழுங்கா கவிதை எழுது”னு அவர் தான் வாலியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்..


அப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார்.. கண்ணாதசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டு கொள்ளவில்லை.. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனின் காத்திருந்தார்.. அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது.. ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.. மீண்டும் புது உத்வேகத்துடன் பாடல் எழுதி வாலிப கவிஞராக இன்று வரை இருக்கிறார்.. அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்த பாடலை எழுதியவர், வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன்!!!! இது தான் விதி என்பது..

வாலி மிகுந்த கோபக்காரராம். ”என் கிட்ட வேலை வாங்க தெரிஞ்ச ரெண்டே பேரு எம்.ஜி.ஆரும் கமலும் தான்” என்றார் வாலி.. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வந்த “ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டு இப்பவும் நமது favorite காதல் தோல்வி பாடல்.. ஆனால் அந்த பாடலை வாலி ஒவ்வொரு முறை எழுதும் போதும் கமல் ‘எனக்கு பிடித்த மாதிரி இல்லை’ என்று வேறுவேற மாதிரி கேட்டிருக்கிறார்.. பயங்கர கடுப்பான வாலி, கடைசியாக ஒரு பேப்பரில் வேகமாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் நீட்டி, “போய்யா இதுக்கு மேல ஒனக்கு எழுத முடியாது”னு சொல்லிட்டாராம்.. அதை படித்த கமல் வாலையை கட்டிப்பிடித்துக்கொண்டார்..

இதெல்லாம் நாங்கள் ஓவ்வொருவராக கேள்வி கேட்டு அதற்கு வாலி சொன்ன பதில்களின் தொகுப்பு.. இப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி.. “சார் ஒரே படத்துல ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’னு பாட்டு எழுதுறீங்க.. ‘சக்கர இனிக்குற சக்கர’னு ‘ஒரு மாதிரியான’ பாட்டும் எழுதுறீங்க.. எப்படி முடியுது?”.. இந்த உலக முக்கிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் “உங்கள மாதிரி இளைஞர்கள் கூட பழகிட்டு மனசு சந்தோசமா இருந்தா எப்படியும் எழுதலாம்.. எல்லாத்தையும் விட சரஸ்வதி தேவியின் அருள்னு தான் நான் நெனைக்கிறேன்” என்றார்..


உண்மை தான்.. யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்.. அதை தமிழர்களின் வாயில் முனுமுனுக்கவும் வைக்க முடியும்.. வாலியே ஒரு பேட்டியில் சொன்னது, “நானும் ரகுமானும் சேர்ந்து எழுதும் பாட்டு ‘ம’ வரிசையில் வந்தாலே அது ஹிட் தான்” என்று.. உண்மை தான்.. டாக்ஸி டாக்ஸி என்று நட்புக்கும் நவீன இலக்கணம் கொடுப்பார், secret of successம் சொல்லிக்கொடுப்பார்.. காதல் வெப்சைட் ஒன்றை கண்ணில் காண வைப்பார், மல மல மருதமலனு ஒரு மார்க்கமாவும் எழுதுவார், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என்று கடவுளுக்கும் எழுதுவார். கடவுளுக்கு எழுதினாலும் காசுக்கு எழுதினாலும் அவரின் வார்த்தை விளையாட்டும், எழுத்தில் இருக்கும் துள்ளலும் என்றுமே மாறாது..

”இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? அதற்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது, அதை கூட வார்த்தையில் விளையாண்டு, ‘நான் recognitionக்காக எழுதல, remunerationக்காக எழுதுறேன்’ என்று தைரியமாக ஓபனாக பதில் சொன்னவர் அவர்.. “நான் இதுவரை டில்லி தாண்டி போனது இல்ல. கடல் கடந்து போகாத ஒரே ஒரு விசயத்துலயாவது நான் பிராமணனா இருக்கேனே?” என்று தன் சூழலை வைத்து தன்னையே கிண்டல் அடித்துக்கொள்பவர்.. அந்த நகைச்சுவை உணர்வும், தைரியமும் தான் அவரை என்றும் இளமையாக வைத்திருந்தது என்றால் மிகையில்லை.. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..

”வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்.. 
போ போ என்கிறேன், போகாமல் நீ நிற்கிறாய்...”

வாலியின் பாடலுக்கு சிவாஜி நடிக்க T.M.S குரல் கொடுக்க வானில் இன்று ஒரு அழகான பாடல் அரங்கேறிக்கொண்டிருக்கும் என நம்புவோம்...

24 comments

  1. வாலியின் வரிகளுக்கு சாவு எது...?

    ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
    Replies
    1. எந்த படைப்பாளியும் இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பான் அவன் படைப்புகள் மூலம்..

      Delete
  2. நேற்றே முகபுத்தகத்தில் நீங்கள் எழுதி இருந்ததைப்படித்து பிரம்மித்தேன், பிரம்மிக்க என்ன இருக்கிறதா? விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டம் என்பது எனது எட்டாக் கனி, ஆனால் அது நண்பருக்கு கிடைத்தால் பிரம்மிப்பு தானே வரும், காரணம் இன்றைய புதிய தலைமுறைக்கு தளம் அமைத்துக் கொடுத்ததில் அதற்க்கு பெரும்பங்கு உண்டு, வாலி போன்ற ஜாம்பவான்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் அது தானே, அதனால் தான் பிரம்மித்தேன்...

    இன்று தொலைகாட்சியில் கண்ணதாசனின் வரிகளை ஒத்து வாலியின் வரிகள் இருக்கும், அதுவே அவரது பலமாகவும் பலவீனமாகவும் மாறிவிட்டது என்று வாலி சொன்னதாக ஒருவர் சொன்னார்... இன்று பலரும் வாலியின் பல பாடல்களை கண்ணதாசனுடையது என்று தான் நினைகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. உண்மை தான்.. அந்த நாள் ஞாபம், மாதவி பொன்மயிலாள் போன்றவை எல்லாம் நான் கண்ணதாசன் எழுதியதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அந்த பாடல்கள் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்று நம்புவோம்..

      Delete
  3. வாலி என்றும் நம் நினைவில் இருப்பார்

    ReplyDelete
  4. இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...
    அருமையான செய்தி தொகுப்பு , அவர் பாடல்கள் என்றும் அழியாது.

    நான் முக நூலில் சொல்லியது போல், இது என்ன துக்க ஆண்டா ?
    TMS, சுஜாதா வரசையில் வாலி :(

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.. சுஜாதா இறந்து போய் 5ஆண்டுகள் ஆகிவிட்டனவே?

      Delete
    2. ஹ்ம்ம்... சுஜாதாவின் இறப்பிற்கு பின் தான் அவர் படைப்புகளை நான் படிக்க நேர்ந்தது.... இந்த ஆண்டு அவர் மனைவி வாயிலாக சில ஊடகங்களில் கிளம்பிய சர்ச்சை, சற்று மனதை வாட்டியது

      Delete
    3. அட விடுங்க.. இந்த ப்ரெஸ் கார பக்கிங்களுக்கு வர வர நாகரிகம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது

      Delete
  5. சிறப்பான அஞ்சலி ராம் குமார்.

    வாலி - பிறந்தது திருப்பராய்துறை வளர்ந்தது திருவரங்கம்......

    ReplyDelete
    Replies
    1. சரியான தகவலுக்கு நன்றி சார்..

      Delete
  6. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..

    கவிஞர் திரு வாலி அவர்களின் நினைவாக எங்கள் அருமை ராம்குமாரின் அற்புதமான பதிவு. ராம்குமார், நீங்கள் ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாள்ராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
    இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வாழ்த்துகள் திரு Ram Kumar

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. :-)

      Delete
  7. arumayana pathivu vazhalga valarga

    ReplyDelete
  8. வேட்டைக்காரன்July 22, 2013 at 7:00 AM

    //யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்..//

    தத்தை - யாருக்குமே புரியாத?

    இதுல விகடன் பத்திரிகையாளர் வேற. சுத்தம்!

    ReplyDelete
    Replies
    1. //தத்தை - யாருக்குமே புரியாத?//

      ஹா ஹா.. நீங்கள் தமிழ் வார்த்தைகளை கரைத்து குடித்தவராக இருக்கலாம்.. தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன? முஸ்தஃபாவிற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்காமல் இருக்கலாம்.. ஒரு இஸ்லாமியர் “முஸ்தஃபாவிற்கு கூட அர்த்தம் தெரியாதா?” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

      நீங்கள் நக்கீரர் பரம்பரையோ?

      Delete
  9. வேட்டைக்காரன்July 23, 2013 at 8:19 AM

    // தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன?//

    விற்பனையாளரே, சொற்களை என் வாயில் திணிக்காதீர்கள்.
    எல்லாத் தமிழரும் தமிழ்ப் புலமையுடன் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாயில் நான் எதையும் திணிக்கவில்லை.. எனக்கு அந்த பாடல் வரும் முன்பே தத்தை என்றால் என்னவென்று தெரியும் சார்.. நான் பொதுவாக அதை புரியாத வார்த்தை என்றேன்.. எங்கே உங்கள் பக்கத்து வீடுகளில் ஒரு பத்து பேரிடம் தத்தை என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்களேன்..
      // நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.// நான் பத்திரிகையாளன் ஆவதற்கு முன்பே எனக்கு அதற்கு அர்த்தம் தெரியும்.. நன்றி.. வணக்கம் :-)

      Delete
  10. அன்பின் ராம்குமார் - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து மகிழ்ந்து மறுமொழி இடுகிறேன். http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html

    வாலியினைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அருமை. வாலி எழுதிய பல பாடல்களை இன்றும் கண்ணதாசன் எழுதியதாக்த் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. தமிழோடு விளையாடுவதில் வாலி வல்லவர்.மறையும் வரை மழுங்காத புகழுடன் வாழ்ந்தவர்.
    உங்கள் பதிவு அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. அவர் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும் வரை அவரும் நம்மோடு இருப்பார்...

      Delete
  12. தகவலுக்கு மிக்க நன்றி ரூபன் சார் :-)

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One