சிவகாசி வட்டார வழக்கு வார்த்தைகள்...

Thursday, December 12, 2013

சமீபத்தில் சென்னையில் வேலை செய்யும் ஃப்ரெண்ட் ஒருத்தனிடம் பேச வேண்டியிருந்தது.. சென்னை கிளம்பும் வரை “மாப்ள, மாப்ள” என்று வாயார அழைத்தவன், சென்னையின் yo yo guy ஆன பின் ’மச்சி’ என்று தான் விளிப்பான்.. நான் பேசும் போது, ’அவிய்ங்க, இவிய்ங்க’ என்பேன்.. ‘டேய் நீங்க இன்னும் மாறவேயில்லையாடா கண்ட்ரி ஃப்ரூட்ஸ்’ என்பது போல் ஒரு லுக் விடுவான்.. அவனைப்பொறுத்தவரை அவிய்ங்க, இவிய்ங்க என்பதெல்லாம் பட்டிக்காட்டான் வார்த்தைகள்.. ‘அவனுக, இவனுக’ என்று சொல்வது தான் சிட்டி ஸ்டைல்.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும் ஒரு விசயம் தான் இது.. ஆனால் இன்றைய பொருளாதார தேடுதலின் முக்கிய அங்கமாக சென்னையிலும் பெங்களூருவிலும் ஒவ்வொருவராக பிழைக்க போவதால், தங்கள் வட்டார வழக்கு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட இவர்கள் அறியாமல் இருப்பது தான் வேதனையான விசயம்.. 

புதுக்கோட்டையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் மேனேஜரும், ஒரு சில டீலர்களும் என்னை கிண்டலடிப்பார்கள் நான் ‘வைவாய்ங்க’, ‘வசவு விழும்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால்.. ”அது என்ன கிராமத்தான் மாதிரி ‘வைவாய்ங்க’னு சொல்ற? டீசண்ட்டா ’திட்டுறாய்ங்க’னு சொல்லு” என்பார் என் மேனேஜர்.. எனக்கு புரியவில்லை, ரெண்டுமே தமிழ் வார்த்தை, அதில் ஒன்று டீசண்ட்டாகவும் இன்னொன்று எப்படி கிராமத்து வார்த்தையாகவும் மாறிப்போனது என்று.. வைவது என்பது எங்கள் பகுதிகளில் நாங்கள் பேசும் சொல். ஆனால் எங்கள் பகுதிகளிலும் பலர் இப்போது ‘திட்டுறான்’ என்று தான் சொல்கிறார்கள். நெல்லை பகுதிகளில் “ஏசுதாம்லே என்னைய” என்பார்கள் முன்பெல்லாம்.. இப்போது அவர்களும் “திட்டுதாம்லே” என்கிறார்கள்.. ’திட்டுறான்’ என்கிற வார்த்தை ஆல் ஓவர் தமிழ்நாடு பொதுவாகி விட்டது இப்போது.. 



இந்த மாதிரி பொதுவான வார்த்தைகள் வரும் போது தான் நம் பகுதியில் நாம் பேசிய வார்த்தைகளை மறக்க ஆரம்பிக்கிறோம்.. இப்போது எங்கள் பகுதியிலேயே நாங்கள் மறந்து கொண்டு வரும், ஒரு சில நல்ல வார்த்தைகளை பற்றி இங்கு சொல்லலாம் என்றிருக்கிறேன்.. முதலில் உறவு முறைகளை கூப்பிடுவதில் இருந்து ஆரம்பிப்போம்.. அப்பாவின் அம்மா, அப்பா; அம்மாவின் அம்மா, அப்பா என எல்லாருமே தாத்தா பாட்டி தான் இப்போது.. எங்கள் பகுதிகளில் அம்மாவின் அம்மாவை “மாம்மை/மாம்மே” என்பார்கள்.. அதாவது மாமனின் அம்மா.. அம்மாவின் அப்பாவை ”மாம்ப்பா” (மாமனின் அப்பா) என்பார்கள்.. நான் வளர்ந்தது சிவகாசி என்றாலும், என் அப்பாவின் ஊர் விருதுநகர் என்பதால் நான் “ஆச்சி” என்பேன், அது விருதுநகர் வழக்கு.. எங்கள் தெருவில் அம்மாவின் அம்மாவை ஆச்சி என்றும், அம்மாவின் அப்பாவை தாத்தா என்றும் சொல்லும் ஒரே ஆள் நான் மட்டும் தான்.. மற்ற அனைவரும் மாம்மே, மாம்ப்பா தான்.. அதே போல் அப்பாவின் அம்மாவை, “ஐயம்மா/ஐயாம்மா” என்போம்.. அப்பாவின் அப்பாவை “ஐயப்பா/ஐயாப்பா” என்போம்.. விருதுநகரில் நான் சிறுவனாக இருந்த போது தங்களது அப்பாவை எல்லோரும் ‘ஐயா’ என்று தான் அழைப்பார்கள்.. ஆனால் இப்போது அங்கும் மற்ற ஊர்களை போல் ’அப்பா’ தான்.. என் அக்காவும், அண்ணனும் இப்போதும் என் பெரியப்பாவை பற்றி பேசும் போது, ஐயா என்று தான் குறிப்பிடுவார்கள்..

அத்தை மகள் நம்மை விட மூத்தவளாக இருந்தால் அண்ணி என சொல்லிவிடலாம் இப்போது.. அதே போல் மனைவியின் அக்காவையும், கணவனின் அக்காவையும் கூட அண்ணி என்று தான் சொல்கிறார்கள்.. அந்த உறவுகளை எல்லாம் எங்கள் பகுதியில் “மைனி” (மதினி என்னும் வார்த்தையின் மரூஉ) என்று தான் once upon a time சொன்னோம். அக்காவின் கணவனோ, தங்கையின் கணவனோ, அல்லது மனைவியின் அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் ‘மாப்ளை’ என்கிறார்கள் இப்போதெல்லாம்.. ஆனால் அக்காவின் கணவனாகவோ, மனைவியின் அண்ணனாகவோ , இருந்தால் ’மச்சான்’ என்று தான் சொல்ல வேண்டும்.. தங்கையின் கணவனாகவோ, அல்லது மனைவியின் தம்பியாகவோ இருந்தால் தான் ‘மாப்பிள்ளை’ என அழைக்க வேண்டும். ஒரு முறை மட்டும் மேலே இருக்கும் பாயிண்ட்டை வாசித்தால் லேசாக தலைவலியும் கிறு கிறுவெனவும் வரும்.. இன்னொரு முறை நிதானமாக வாசியுங்கள், புரியும்.. அதே போல், கொழுந்தியாள், நாத்தனாள் என்கிற உறவுமுறைக்கெல்லாம் இப்போதும் யாருக்கும் அர்த்தம் தெரியுமா என ஒரு கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும்.. 

நம்மை விட மூத்த, பக்கத்து வீட்டுக்காரரையோ, கடைக்காரரையோ, அல்லது சாலையில் செல்லும் ஒரு நபரையோ யாரை அழைக்க வேண்டுமானாலும் “அண்ணாச்சி” என்று தான் அழைப்போம் எனக்கு விபரம் தெரிந்த வயதில் கூட.. பின் அண்ணன்/அண்ணே என்று ஆனது கொஞ்சம் கொஞ்சமாக.. இப்போது ஸ்டைலாக ’அண்ணா’வாகி விட்டது. ’அண்ணே’ என்கிற வார்த்தை என்றாலே அது மதுரை தான்.. மதுரையில் ஒவ்வொருவரும் “அண்ணே” என்று கூப்பிடும் அழகே தனி.. ஆனால் அங்கு கூட எல்லா திக்கும் அண்ணா தான் இப்போது.. அண்ணே என்று யாரையாவது அழைத்தால் “நீங்க கிராமமா பாஸ்?” என்கிறார்கள்.. “அண்ணாச்சி”னு மட்டும் சொன்னோம், அவ்ளோ தான் அவன் சொத்துல பங்கு கேட்ட மாதிரி மொறைக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.. அண்ணாச்சி என்று கூப்பிடுவதை நிறுத்தியிருந்தாலும் இப்போது கொஞ்ச நாட்களாய் மீண்டும் அண்ணாச்சி என கூப்பிட ஆரம்பித்திருக்கிறேன்.. 

கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வயித்துப்பிள்ளைக்காரி என்போம்.. தாலி கட்டுவதை திருப்பூட்டுறது என்போம்.. சந்து என்று சொல்ல மாட்டோம், கடவு என்று தான் சொல்லுவோம். ”தம்பி கடவுக்குள்ள காயிற துணிய எடுத்துட்டு வா மழ வார மாரி இருக்கு” என என் ஆச்சி சொன்னது இப்போதும் ஞாபகம் உள்ளது.. மழை என்றதும் இதுவும் ஞாபகம் வருகிறது. மழைத்தண்ணீர் மாடியில் இருந்து விழும் குழாயை ‘மடாய்’ என்போம்.. இப்போது யாரும் மடாய் என்கிற வார்த்தையை பயன்படுத்துவாக எனக்கு ஞாபகம் இல்லை.. சோறு சாப்பிடும் தட்டை 'வட்டில்' என்போம். சோறு எடுக்கும் கரண்டியை 'சட்டுவம்' என்போம்.. பல ஊர்களிலும் அமைதியாக இருப்பதை, ‘அவன் பாட்டுக்க செவனே (சிவனே)னு இருக்கான்” என்பார்கள்.. எங்கள் பக்கம் அதை, “சூசோன்னு இருக்கிறவன ஏன்டா வம்பிழுக்கிற?” என்போம்.. சிவனேவும் சூசோவும் எப்படி நாம் பேசும் அர்த்தத்தில் வந்தன என எனக்கு சத்தியமாக ஐடியாவே இல்லை. 

”சீவனயும் (ஜீவன்) பலனயும் (பலன்) வாங்காத பெசாசே” என்பார் கோபமாக என் அம்மா, சிறு வயதில் நான் அடம் பிடிக்கும் போது.. இப்போதெல்லாம் அந்த வார்த்தையை ஏதாவது சர்ச் வாசலிலோ, சேனல் மாற்றும் போது ஏதாவது கிறிஸ்தவ போதகரின் வாயில் இருந்தோ தான் பெற முடிகிறது. ”ஒரே அச்சலாத்தியா இருக்கு”.. “டேய் அச்சலாத்தி படுத்தாம போடா” என்றும் என்னால் சிவகாசி பக்கம் இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. அச்சலாத்தி என்பதற்கு, எரிச்சல், தொந்தரவு என்று இடத்திற்கு தகுந்தவாறு பொருள் உண்டு.. அச்சலாத்தி என்கிற வார்த்தை எப்படி பயன்பாட்டுக்கு வந்திருக்கும், அல்லது எந்த வார்த்தையின் திரிபு, மரூஉ என்றும் யோசிக்கிறேன்.. ஆனால் பதில் தான் இல்லை.. 

தினமும் இரவு ஃபேக்டரியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் எங்கள் அப்பா ஃபோன் அடித்து, “தம்பி இன்னைக்கு கடிச்சிக்கிட என்ன வாங்கிட்டு வர?” என்பார்.. கடிச்சிக்கிட - பெயரிலேயே அர்த்தம் இருக்கிறதே, இரவு உணவிற்கு side dish.. பெரும்பாலும் அந்த ’கடிச்சிக்கிட’ பக்கோடாவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? கடிச்சிக்கிட என்னும் வார்த்தையை சுஜாதா முதல்வன் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.. ”உப்புக்கருவாடு” பாடல் ஆரம்பிக்கும் ஒரு சில நொடிகளுக்கு முன் அர்ஜூனிம் மனிஷா கொய்ராலாவும் பேசும் போது, “பழைய சோறும், கடிச்சிக்கிட வெங்காயமும் போதாதா?” என்பார்.. 

தூங்கி முழித்த பின்னும் அதே களைப்பான முகத்துடன் இருப்பதை எங்கள் பக்கம், ‘தூக்கச்சடவு’ என்பார்கள். இறப்பு நிகழ்ந்த ஒரு வீட்டிற்கு செல்வதை “கேதம் கேக்க போறேன்” என்பார்கள்.. துஷ்டி என்று சொல்பவர்களும் உண்டு.. அதே போல் நான் சிறுவனாக இருந்த போது என் வயதொத்த, என்னை விட சிறிய பெண்களை “ஏப்ள” என்று தான் அழைத்தேன்.. வயது ஆக ஆக அப்படி அழைப்பதை நிறுத்திக்கொண்டாலும், இப்போதைய சிறுசுகள் யாரும் “ஏப்ள” என்று அழைப்பதாக தெரியவில்லை..

மேலும் பாத்திரம் கழுவுவதை, பாத்திரம் மினுக்குவது என்போம்.. மேலே இருக்கிறது என்பதை ஒசக்க/ஒசர (உயர) கெடக்கு என்போம்.. மாடியை மெத்து என்போம்.. “உண்ணாம்தாய்க்கா, முத்துக்குமார் அண்ணே எங்க ஆளையே காணோம்?” எங்கள் தெரு டெரரான உண்ணாமலைத்தாய் அக்காவிடம் கேட்டால் இப்போதும் அவர் சொல்வார், “அவேன் மெத்துல தூங்கிட்டு இருக்கியான்டா சாரதாக்கா பேராண்டி” என..

எங்கள் வீட்டில் இரும்பாலான ஒரு மக்/ஜக்/கப் இருக்கும் குளிப்பதற்காக.. அதை நாழி என்போம்.. (நாழியா, நாளியா என சரியாகத்தெரியவில்லை).. அந்த நாழி/ளி இப்போது எந்த இரும்புக்கடையில் உள்ளது என தெரியவில்லை.. குளிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்பை இப்போதும் பலர் கைப்பட்டை என்று தான் அழைக்கிறார்கள்.. 

எங்கள் ஊரில் இருக்கும்/இருந்த பெரும்பாலான வழக்கு சொற்களை கூறி விட்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது ஏன் இந்த பதிவு என நீங்கள் யோசிக்கலாம்.. போகிற போக்கை பார்த்தால் என் ஊர் பாஷையை நானே மறந்துவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது இந்த உலகமயமாக்கலால். அதனால் தான் ஒரு முறை எழுதிப்பார்த்துக்கொண்டேன்.. எழுதுவதின் பயன் என்னவென்றால் அவ்வளவு எளிதில் அது மறக்காது, அதனால் தான்... சிவகாசி வட்டார வழக்கு என்றில்லை, நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை என எல்லா வட்டார வழக்கும் மறைந்து கொண்டே தான் வருகின்றன.. பொதுவான வார்த்தைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.. நாமும் தமிழ் தானே பேசுகிறோம் என்கிற எண்ணத்தில் நம் வழக்கு மொழிகளை நமக்கு தெரியாமலே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.. எல்லோரும் ஊர்விட்டு ஊர் பிழைக்க போவது பிரச்சனை அல்ல.. அப்படி பிழைக்கப்போனதால் தான் வழக்கு சொற்கள் அழிகின்றன என குற்றம் சுமத்தும் ஒப்பாரி பதிவும் அல்ல.. ஹிந்தி, ஆங்கிலத்தால் தமிழ் சாகிறது என்பது போல் பழி போடும் தமிழ் உணர்வு பேசும் பதிவும் அல்ல.. ’அப்புறம் என்ன தான்யா இந்த பதிவு?’னு கேட்டா எனக்கு பதிலும் தெரில.. 

‘சொல்லாமலே’ படத்தில் நாக்கை வெட்டிக்கொள்ளும் முன் லிவிங்க்ஸ்டன் கடைசியாக தனக்கு பிடித்தமான பெயர்களை எல்லாம் சொல்லிப்பார்ப்பாரே, அது போன்ற ஒரு பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம். எங்க ஊர் பாஷை சீக்கிரம் வழக்கில் இருந்து போய்விடுமோ என்கிற பயம் எனக்கு அதிகமாகிவிட்டதால் அந்த வார்த்தைகளை எல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு, எங்கள் வழக்கு சொற்களின் ஞாபகார்த்தமாக இந்த பதிவு.. முடிந்தால் உங்கள் ஊர் வட்டார வழக்கு சொற்களையும் கூறிவிட்டு செல்லுங்களேன் கமெண்ட்டில்.. உங்களுக்கும் ஞாபகார்த்தமாக இருக்கும்.. :-)

மதுரை....

Wednesday, December 4, 2013




ஒவ்வொரு வாரமும் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் போது என் கண்ணில் பட்டுவிடும் காட்சி அது.. மதுரை மாட்டுத்தாவணியை தாண்டி திருமங்கலத்தை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு சிறிய ஏர்போர்ட். அங்கு தினமும் விடிகாலையும், மாலையும் ஒன்றிரெண்டு ஏரோப்பிளேன்கள் வந்து போகும். மாலையாகிவிட்டால், குழந்தை முதல் குடும்பம் முழுவதும் ஏதோ திருவிழா தேர் பார்ப்பது போல் கூட்டமாக விமான நிலைய காம்பவுண்ட் சுவர் அருகில் வந்துவிடுகிறார்கள். ஆசை ஆசையாய் விமானம் கிளம்புவதை பார்க்க காத்திருக்கிறார்கள். அவர்களின் அந்த அனுபவத்திற்கு மேலும் இனிமை சேர்க்க ஐஸ் க்ரீம் வண்டிகளும், சோளக்கருது வண்டிகளும், பலூன்காரரும் பாடுபட்டுக்கொண்டிருப்பார்கள். விமானம் கிளம்புவதை அண்ணாந்து பார்த்து மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். மீண்டும் மறுநாள் அதே நேரம், அதே இடம், அதே காத்திருப்பு, அதே மகிழ்ச்சி.. இது தினமும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே நடக்கும் சங்கதி தான். இன்னமும் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை கூட நிறுத்தி நிதானமாக ரசித்து, வாழ்வை அனுபவத்து வாழும் மக்கள் இருப்பதால் தான், வாழ்வை நிதானமாக ரசித்து வாழ நினைக்கும் பலருக்கும் பிடித்த ஊராக இருக்கிறது, மதுரை.

சிவகாசிக்கு அடுத்து எனக்கு பிடித்த, வீட்டில் இருப்பது போன்ற நிம்மதியை பாதுகாப்பு உணர்வை கொடுத்தது, கொடுப்பது மதுரை தான். “மதுரைல சுத்துன கழுத கூட வீடு வந்து சேராதுடா” - நான் முதல் முதலாக மதுரைக்கு போகிறேன் என்ற போது என் தாத்தா சொன்ன வாக்கியம் இது. ’என்னடா இது நம்ம தாத்தா ஓவர் பில்ட்-அப் குக்குறாரு?’ என ஆச்சரியப்பட்டுப்போனேன்.. ஆமாம், அவர் பொதுவாக எதையுமே பாராட்ட மாட்டார்.. எனக்கு தெரிந்து அவர் காமராஜருக்கு பிறகு positiveஆக சர்டிஃபிகேட் கொடுத்த ஒரே விசயம் மதுரை தான். வீட்டை விட்டு முதல் முறையாக தனியாக வெளியில் மூன்று நாட்கள் தங்க போகிறோம் என்கிற பயம் இருந்தாலும், தாத்தாவே பாராட்டு பத்திரம் கொடுத்ததால், மதுரையை நோக்கி ஓரளவு தைரியமாகவே போனேன். அப்போது எனக்கு தெரியாது மதுரை எனக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கப்போகும் ஊர் என்று.



அப்பா, தாத்தா, வேத ராஜா சார் என்று பலரிடமும் சிவகாசியில் இருந்து பல்கலைக்கு போக பஸ் ரூட் எல்லாம் கேட்டு பாக்கெட் டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன். மதுரை கிளம்பும் அந்த சுபயோக சுக தினத்தில் அதிகாலை அவசர அவசரமாக கிளம்பும் போது அந்த பாக்கெட் டைரியை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டது, நான் திருமங்கலம் வந்து இறங்கிய போது தான் உரைத்தது. செல்ஃபோன் எல்லாம் அப்போது (7,8 வருடங்களுக்கு முன்) நான் சினிமாவிலும் சாலையில் ஒன்றிரெண்டு பேரிடமும் பார்த்ததோடு சரி. வீட்டிலும் ஃபோன் கிடையாது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நான் மட்டும் தனியாக அந்த ஊருக்கே சம்பந்தம் இல்லாமல் நின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்தது. என் பக்கவாட்டில் யார் என்றே தெரியாத ஒரு ஜீவனின் முரட்டு குரல் கேட்டது, “டேய் தம்பி ஏன்டா அழுகுற?”

“யுனிவர்சிட்டிக்கு போணும்ணே.. எப்படி போணும்னு தெரில” சொல்லும் போதே அழுகை இன்னும் ஜாஸ்தியானது.

“எலேய் இதுக்கெல்லாமாடா அழுவாய்ங்க? இரு இரு இப்ப சோழவந்தான், செக்கானூரணி போற பஸ்ஸு வரும்” என்று சொல்லிவிட்டு என் கூடவே காத்திருந்தார். அரைமணிநேரத்தில் செக்கானூரணி செல்லும் பேருந்து வந்ததும், என்னை அதில் ஏற்றிவிட்டு, “இங்காரு இது நேரா செக்கானூரணி போவும்.. அங்க எறங்கி மதுரைக்கு போற பஸ்ஸு எதுல ஏறுனாலும் அது யுனிவர்சிட்டி வழியாத்தான் போவும், என்ன? சரியா?” என்றார். 

“சரி.. நீங்க செக்கானூரணி வல்லயா?”

“ஓய் நான் தெக்குவாசல் போணும்டா, ஒன்ன கரெக்ட்டான பஸ்ஸுல ஏத்தி விடணும்னு தான் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தேன்.. நீ அழுகாம போ” என் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு போய்விட்டார்.. அந்த ஜன நெருக்கடியில் பேருந்தை விட்டு இறங்கிய சில நொடிகளிலேயே அவர் கரைந்து விட்டார். அவரைப்பார்த்தால் வேலை வெட்டி இல்லாதவன் போன்றும் தெரியவில்லை. அவரின் வேலைக்கு நடுவிலும் ஒரு விபரம் அறியாத சிறுவனுக்கு அரைமணிநேரம் ஒதுக்கி தைரியம் கொடுத்திருந்தார் அவர். அவரின் அந்த கம்பீர அதட்டல் குரல், கறுத்த தேகம் (என் அளவுக்கு கறுப்பு இல்லை), சஃபாரி ட்ரெஸ், கையில் கோல்டு வாட்ச், முறுக்கிய மீசை, பவுடர் முகம் என எதையும் என்னால் இப்போது வரை மறக்க முடியவில்லை. யார் என்றே தெரியாத ஒரு ஆள், பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் ஒரு பையனுக்காக அரைமணிநேரம் காத்திருந்து பஸ் ஏத்திவிட்டு, வழி சொல்லி அக்கறையாக அனுப்பி வைப்பது மதுரையில் மட்டும் தான் நடக்கும். அந்த மனிதன் தான் என்றில்லை, மதுரையில் பலரும் அப்படித்தான்.

நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவை அடைந்து, அந்த ஏரியாவில் எந்த தெரு என  சரியாக தெரியாமல் திணறிக்கொண்டிருந்தால், அங்கிருக்கும் யாரிடமாவது கேட்பேன்... சைக்கிளோ, பைக்கோ, அல்லது நடந்தோ கூட என்னுடன் வந்து சரியான தெருவிற்கு என்னை கையோடு அழைத்து சென்றவர்கள் தான் பலரும்.. மற்ற ஊர்களில் எல்லாம், ’அப்டியே லெஃப்ட்ல திரும்பி செகண்ட் ரைட்ல ஒரு கட் வரும் நேரா போயி அங்க ஒரு ஆலமரத்துல முட்டும், அதுல இன்னொருக்க லெஃப்ட் எடுத்து.............’னு கூகிள் மேப் போட்டு காட்டுவார்கள். ஆனால் நம் தேவையை தன் தேவையாக நினைத்து கூடவே இருந்து உதவுவதில் என்றுமே மதுரைக்கார மக்கள் தான் முதலில் இருப்பார்கள். பண உதவியோ, அல்லது வேறு உதவியோ, எனக்கு இதுவரை கிடைத்தது பெரும்பாலும் மதுரைக்கார நண்பர்களிடம் இருந்து தான்.

நீங்கள் விடிகாலை, நடு ராத்திரி, பட்டப்பகல் என எப்போது போய் மதுரையில் இறங்கினாலும், அங்கு அருகிலேயே ஏதாவது ஒரு கடையில் நிச்சயமாக சுட சுட புரோட்டா தயாராகிக்கொண்டிருக்கும். இன்றும் ரெண்டு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும் ஒரே ஊர் மதுரை தான் எனக்கு தெரிந்து. 4 வருடங்களுக்கு முன்பு வரை கூட நான் ’ஒத்த ரூவா இட்லி’ சாப்பிட்டிருக்கிறேன் மதுரையில். இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை. சிவகாசியில் நான் கல்லூரி படித்த காலத்தில் பாதி நாட்கள் மதுரை காமராஜர் பல்கலையில் தான் கிடப்பேன் அந்தப்போட்டி இந்தப்போட்டி என்று. மதுரை காமராஜ் பல்கலைக்கு வெளியே இருக்கும் கிராமம் வடபழஞ்சி.. நாங்கள் போட்டிகளுக்காக பல்கலை செல்லும் போதெல்லாம் பல்கலை கேண்டினை தவிர்த்துவிட்டு வடபழஞ்சியில் தான் சாப்பிடுவோம்.. 15ரூபாய்க்கு மட்டன் குழம்பு எங்கு கிடைக்கும்? அங்கு ஊற்றுவார்கள் கறியுடன். கறி பீஸ் எல்லாம் நாம் போகும் போது காலியாகிவிட்டால், நம்மிடம் அந்த கடைக்காரர் கெஞ்சும் தொனியில் பல முறை சாரி கேட்பார்.. கறி இல்லாத மட்டன் குழம்பை ஊற்றி விட்டு அதற்கான காசும் வாங்க மாட்டார். ரயிலடியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அந்த வெக்கை காற்றில் நல்லி எலும்பை உறிந்து கொண்டிருப்பதின் சுகமே தனி தான். 



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் - என் வாழ்வில் நான் மறக்க முடியாத இடம். நீங்கள் உங்கள் காதலியை எங்கு சந்தித்திருப்பீர்கள்? தியேட்டர், கோயில், ரெஸ்டாரெண்ட், ஏன் பஸ் ஸ்டாண்டில் கூட சந்தித்திருக்கலாம். உங்கள் காதல் காலத்தில் எத்தனை முறை சந்தித்திருப்பீர்கள்? குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது இருந்திருக்குமல்லவா? என் 4 வருட காதலில் நான் அவளை சந்தித்திருந்தது வெறும் 6முறை தான். அத்தனை முறையும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், மெரினா ஓட்டலுக்கு அருகில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில்..

பென்ச்சில் ஒரு மூலையில் நானும் இன்னொரு மூலையில் அவளும் அமர்ந்திருப்போம். அவள் உட்கார்ந்திருக்கும் அழகிலேயே தெரிந்துவிடும், ‘யார் கண்ணிலும் பட்டுவிடாமல் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்’ என்கிற சங்கடம். அவள் அன்று சமைத்த சப்பாத்தியை ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வந்திருப்பள் எனக்காக. அந்த பென்ச்சில் சர்ரென என் பக்கம் அதை தள்ளி விடுவாள். வெறும் சப்பாத்தி மட்டும் தான் இருக்கும். “என்ன ரானு வெறும் சப்பாத்தி தான் இருக்கு? குருமா, சட்னி எதுமே இல்லயா?”

“நான் சப்பாத்தி மட்டும் தான் சமைச்சேன். குருமாலாம் அம்மா வச்சாங்க.. அதான் அதை எடுத்துட்டு வரல. நான் சமைச்சத மட்டும் நீங்க சாப்பிட்டா போதும், சரியா?” அந்த பதட்டத்திலும் பயத்திலும் கூட என்னை அரட்டுவாள் அவள். ’சர்தான் போடீ’ என கெத்தாக மனதிற்குள் நினைத்துக்கொண்டு, தண்ணீர் தவித்தாலும், விக்கல் எடுத்தாலும் அத்தனை சப்பாத்தியையும் குருமா, சட்னி என எந்த சைடு டிஷ்சும் இல்லாமல் நான் விழுங்கித்தொலைய வேண்டும் என்பது என் அப்போதைய விதி.. சப்பாத்தி சாப்பிட்டு முடியும் வரை தான் எங்கள் நேரம். சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்பிவிடுவாள். சாப்பாத்தி டப்பாவை அவளிடம் இருந்து வாங்கி அதை சாப்பிட்டு முடிக்கும் நேரத்திற்குள் பேசுவது தான் எங்கள் காதல் வார்த்தைகள். குடும்ப ஃபோட்டோ, அவள் project சம்பந்தமான சந்தேகங்கள், வீட்டு பிரச்சனைகள், கல்லூரி கலகலப்புகள், என அவள் வரிசையாக ஒப்பித்துக்கொண்டிருப்பாள். நான் சப்பாத்தியை மென்றுகொண்டிருப்பேன். நான் சப்பாத்தி டப்பாவை காலியாக்கும் போது “அப்புறம், வேற என்ன?” என்பாள். அதற்கு அர்த்தம், ‘நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சிட்டேன், என் டிஃபன் பாக்ஸை குடு நான் போகணும்’ என்பதாகும். அதிக பட்சம் 15 நிமிடங்கள் பேசியிருப்போம். சின்ன சின்ன கிஃப்ட், சில சமயம் ஏதாவது கோபம் என்றால் ஒன்றுமே பேசாமல் அவள் சப்பாத்தி டப்பாவை என் பக்கம் தள்ளுவாள். நானும் ஒன்றுமே பேசாமல் அதை தின்று முடித்து அவள் பக்கம் தள்ளுவேன், அவள் கம்மென்று அதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். 

4 வருடங்கள், வெறும் ஆறே ஆறு சந்திப்புகள் என்றாலும் அந்த சந்திப்புகளின் இனிமை, படபடப்பு, த்ரில், தந்தி போல் பேசிக்கொண்ட வார்த்தைகள், என அத்தனையும் இப்போதும் நினைவில் உள்ளன. தினமும் ஃபோனிலும் மணிக்கணக்கில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த பக் பக் மாட்டுத்தாவணி நிமிடங்கள் தான் அப்படியே இருக்கின்றன இன்னமும் மனதில். அவள் வீடு பெரியாருக்கு அருகில். நானும் அவளை பார்த்து விட்டு பெரியார் வழியாகத்தான் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவள் போகும் பஸ்ஸில் நான் போகக்கூடாது. நான் அவளுக்கு  முன்பே கிளம்பி பெரியாருக்கு போய் காத்திருக்க வேண்டும். அவள் அடுத்த 5நிமிடங்களில் வருவாள். பத்தடி தூர இடைவெளியில் என்னோடு எதிர்ப்புறம் இருக்கும் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து நான் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் ஏறுவதை தூரத்தில் இருந்து கவனித்து விட்டு செல்வாள். எங்கள் அடுத்த சந்திப்பு நிகழப்போகும் அடுத்த 6மாத சொச்ச நாட்களுக்கு இந்த நினைவுகளே போதும் போதும் என்கிற அளவிற்கு மனம் திருப்தியாக இருக்கும். 

இப்போதும் அவள் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கிறாள் தினமும் குருமாவுடன், அமெரிக்காவில் தன் கணவனுக்காக...




மதுரை காமராஜர் பல்கலையில் நடந்த தென்னிந்தய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான youth festivalல் நாங்கள் காமராஜர் பல்கலை சார்பாக கலந்து கொள்ள சென்றிருந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். நாங்கள் பங்கேற்ற Quiz முதல் நாளே முடிந்து விட்டதால் அடுத்த மூன்று நாட்களும் கேரளம், ஆந்திரம், கன்னடம் ஒவ்வொரு மாநில பல்கலையின் பெண்கள் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தோம் ஜாலியாக.. இங்கு நாங்கள் நாங்கள் என குறிப்பிடுவது ஏதோ 10,12 பேரை அல்ல. நானும் அனீஷ் என்னும் என் மாப்புவும் தான்.. அவனும் மதுரைக்கார பயல் தான். நாங்கள் follow செய்த ஒரு பெண்கள் கும்பல் மிமிக்ரி போட்டி காண போனதால் நாங்களும் மிமிக்ரி போட்டி நடக்கும் அரங்கினுள் நுழைந்தோம். அப்போது மேடையில் ஒரு பையனை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். மைக்குக்கு அருகில் நிற்க வைத்தார்கள். கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தான் அவன். மைக்கை மெதுவாக தொட்டுப்பார்த்தான் அவனிடம் இருந்து அது எவ்வளவு தூரத்தில் நின்றுகொண்டிருக்கிறது என அறிந்து கொள்ள.. இரண்டு முறை அதை டொக் டொக் என்று தட்டிவிட்டு ஆரம்பித்தான். அனைவரும் சினிமா நடிகர், கிரிக்கெட் வீரர் என செய்ததையே செய்ய, அவன் மட்டும் வித்தியாசமாய்,மனித குரல்களை மிமிக்ரி செய்யாமல், பறவைகள், விலங்குகள், நம்மை சுற்றி இருக்கும் ஒலிகள் என அனைத்தையும் துல்லியமாக மிமிக்ரி செய்தான். அவன் மிமிக்ரியை முடித்த போது அரங்கம் முழுவதும் ஒரு விதமான பயங்கர அமைதி நிலவியது. பின் மெதுவாக எழுந்த கைதட்டல் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் தொடர்ந்தது. கைதட்டல் எல்லாம் ஓய்ந்து முடிந்ததும் அவன் சார்ந்த பல்கலையின் பெயரை சொன்னார்கள்.

கண்ணனூர் யுனிவர்சிட்டி அது. நானும் அனீஷும் ஒருவரை பார்த்து ஒருவர் ஈஈஈ என இளித்துக்கொண்டோம். ஏனென்றால் கேரளத்துப்பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அப்போது ஒரு சபதம் போட்டிருந்தோம் (அனீஷ் இப்போதும் அந்த சபதத்தை கை விடவில்லை). அந்த பையன் மூலம் எங்கள் சபதத்தை சாதிக்க வாய்ப்பிருக்குமா என இருவரும் ஒரே நேரத்தில் நினைத்ததால் வந்த சிரிப்பு அது. வேக வேகமாக போய் அந்த பையனுக்கு கை கொடுத்து அவனை நண்பனாக்கி கொண்டோம். அடுத்த மூன்று நாட்களும் அவனுடனேயே சுற்றி, அவனுடனேயே உண்டு, கடைசி நாளில் அவனை ரயில் ஏற்றி விடும் வரை அவனுடன் தான் இருந்தோம், அவனுடன் மட்டும் தான் இருந்தோம் வேறு எதைப்பற்றியும் அவனிடம் கேட்காமல். பெண்களை பற்றிக்கூட நினைக்க விடாத ஒரு கலகலப்பான மனிதன் அவன். அவனோடு பேசிக்கொண்டிருக்கும் போது உலக அழகியே வந்தால் கூட கண்டுகொள்ள மாட்டோம், அப்படி பேசுவான். தமிழ் சினிமா மிகவும் ரசித்து பார்ப்பான் அவன். இன்று வரை தொடர்பில் இருக்கும் அவன் உடன் பிறந்தோர் இரண்டு பேர். அவர்களுக்கும் கண் தெரியாது. வரலாற்றில் M.Phil முடித்துவிட்டு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். மதுரை எனக்களித்த நல்ல மனிதர்களில் அவன் ஒரு முக்கியமான ஆள்.

மீனாட்சி அம்மன் கோயில் சிற்பங்களை பற்றி அவனிடம் கூறி, அவன் கைகளை என் கைகளால் பற்றி, அந்த சிற்பங்கள் மீது அவற்றை தவழ விட்டு, சிற்பங்களை அவன் கைகளால் ரசித்து சிரித்த அந்த நொடி, உண்மையிலேயே தெய்வீகத்தை கண்ட நொடி. மீனாட்சி அம்மன் கோயிலை ஒரு கண் தெரியாதவன் ரசித்தான், அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது இப்போதும் உடம்பு புல்லரிக்கும்.

மதுரைக்காரனாக இல்லாமல், அங்கு வந்து போகும் ஒரு விருந்தாளியாக அந்த ஊரோடு நல்ல அனுபவம் இருக்கும் எனக்கே இப்போதெல்லாம் சினிமாக்களில் காட்டப்படும் மதுரையை பார்க்க பார்க்க அந்தப்படம் எடுத்தவர்கள் மீது கோபமும் வெறுப்பும் தான் வருகிறது. எவனோ ஒருத்தன் மதுரையை ரவுடிகளின் கூடாரமாக சித்தரித்து போய்விட்டான். அதற்கு பின் வரிசையாக ஒவ்வொருவரும் மதுரை என்றால் வெட்டு, குத்து, கொலை என்றே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சினிமாவில். இதுவரை 8 ஊர்களில் பிழைப்பிற்காக இருந்திருக்கிறேன். நான் பார்த்தவரை அன்பும், கரிசனமும், பாசமும், மனிதனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் ஒரே ஊர் என்றால் அது மதுரை மட்டும் தான்.

என் வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்களையும், மனிதர்களையும், அனுபவங்களையும் கொடுத்திருக்கும் ஊர் தான் மதுரை. மிக மிக சாதாரணமான, அன்றாட வாழ்க்கையை நிதானமாக ரசித்து வாழும் மக்கள் நிறைந்த ஊர் அது. இப்போது எனக்கும் அந்த ஊருக்கும் இருக்கும் ஒரே பந்தம், நான் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் போது, மதுரை வழியாக செல்வது மட்டும் தான். சமீபத்தில் நண்பனின் திருமணத்திற்கு மதுரை சென்றிருந்தேன். இரவு 12 மணி, நண்பனின் உறவினர் என்னை மாட்டுத்தாவணியில் வந்து அழைத்துப்போவதாக சொல்லியிருந்தார். நான் மெரினா ஓட்டலுக்கு முன் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தேன். அந்த இடத்தில் குருமா இல்லாத சப்பாத்தி சாப்பிட்ட நினைவுகள் மனதை முழுதாக ஆக்கிரமித்தன. இதற்கு முன்பும் அந்த ஞாபகங்கள் எல்லாம் வந்தாலும் அடுத்த வேலைப்பளுவில் மறந்துவிடும். ஆனால் அதே இடத்தில் இரவு 12மணியில் அருகில் யாரும் இல்லாமல்  பழைய நினைவை அசைபோடுவது வலி நிறைந்தது. நண்பனின் உறவினர் வந்த 10 நிடங்கள், 10மணி நேரம் போல் கடந்தது. அவருடன் மதுரை வீதிகளை கடந்து பெரியார், காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் என மண்டபத்தை நோக்கி சென்ற போது மனது முழுக்க ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. 

உடம்பில் ஏதாவது காயம் என்றால் அதை ஆறவிடாமல், ஓயாமல் நோண்டிக்கொண்டே இருப்போமே? அந்த வலியில் ஒரு வித சுகத்தை உணர்வோமே? அது போல் நண்பனின் கல்யாணம் முடிந்ததும் அவசர அவசரமாக மண்டபத்தில் இருந்து கிளம்பி, யுனிவர்சிட்டி, திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், என சுற்றி கடைசியாக மாட்டுத்தாவணி மெரினா ஓட்டல் முன் வந்து ஒரு நொடி அந்த பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில் வெற்றுப்பார்வையை வீசினேன். சில வருடங்களுக்கு முன் மனம் முழுதும் மகிழ்ச்சியை கொடுத்த இடங்கள், சம்பவங்கள், இன்று நினைத்து பார்க்கும் போது வெறும் வலியையும், ஏக்கத்தையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நினைவுகள் ஆறாத புண் போல் வலித்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வலியை ஒரு சுகமாக உணர தொடங்கிவிட்டேன். அடிக்கடி புண்ணை நோண்டி வலியில் சுகம் காணுவதை போல், இனி அடிக்கடி மதுரை போய், அங்கு ஒரு காலத்தில் மகிழ்ந்திருந்த இடங்களை எல்லாம் பார்த்து, வருந்தி, ஏங்கி, பெருமூச்சு விட்டு, திருப்தி பட்டுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.. பார்க்கலாம், வாழ்க்கை என்ன முடிவு செய்திருக்கிறது என்று..


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One