பெண் - புரிஞ்சுக்கவே முடியலையே!!!

Saturday, January 29, 2011

பெண்களைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் முழுதாக சொல்லி முடித்த நிறைவு வருவதே இல்லை. அவர்களை முழுதாகவும் சொல்லிவிட விட முடியாது. 'இவள் இந்த சூழ்நிலையில் இதைத்தான் செய்வாள்' என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அதற்கு நேரெதிராக ஒன்றை செய்து காட்டுவாள்.

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் வெளியே திருமங்கலம் செல்லும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் பல நூறு பேர்களோடு. சென்னைக்கு அருகில் என்கின்ற காரணத்தால் தாம்பரம் என்ற ஊரை எப்படி பாடாய்ப்படுத்துகிறோமோ அதே போல் தான் இந்த திருமங்கலமும் அவதிப்படுகிறது. நகரம் என்கின்ற "black hole" விரிந்துகொண்டே சென்று அருகில் இருக்கும் சிறு ஊர்களையும் தன் வசத்திற்குள் தன் வேகத்துனுள் கொண்டு வந்து விடுகிறது. அந்த சிறு ஊர்களும் சில வருடங்களில் "black hole" ஆகிவிடுகின்றன. கழுத்து அறுபடும் ஆட்டைப்போல முதலில் நகர மாற்றத்திற்கு மிரளும் இந்த ஊர்கள் சில நாட்களிலேயே அறுபட்ட ஆட்டின் நிலையை அடைந்து விடும். நம்ம சிவகாசி அந்த நிலைமைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்று மனதை தேற்றிக்கொண்டே பேருந்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். டிசம்பர் மாத குளிர் வேறு இந்த இரவில் என்னை கொடுமைப்படுத்துகிறது. காத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு; பேருந்து வருகிறது. அதைப்பிடித்து இடம் போட எத்தனிக்கும் மக்களின் நடவடிக்கைகளின் சத்தம் என்னையும் பேருந்து வருவதை கவனிக்க செய்தது.

கல்லூரியில் மூன்று ஆண்டுகள் day-scholar ஆக இருந்ததினால் எளிதாக இடம் பிடித்து விட்டேன் ஜன்னல் அருகில் இருக்கும் சீட்டில். கூட்டத்தினுள் நுழைந்து reserve பண்ணிய சீட்டை confirm ஆக்கினேன். சரியான கூட்டம். நின்று கொண்டிருந்த மக்கள் பலரும் இறங்கி ஓடினார்கள் - இன்னொரு பேருந்து வந்தது திருமங்கலம் செல்வதற்கு. எது முதலில் கிளம்பும் என்று தெரியாததாலும், என் சீட்டை இழக்க விரும்பாததாலும் நான் இந்த பஸ்சிலேயே இருந்து விட்டேன். 

அப்போது தான் அதை கவனித்தேன். நான் அமர்ந்து இருந்தது, டிரைவரின் பக்கவாட்டில் மூன்றாவது சீட், அதாவது முன்பக்கம் ஏறியவுடன், இடப்பக்கம் இருக்கும் முதல் சீட். என் சீட்டுக்கு அருகில் இருந்து டிரைவரின் முதுகுப்பக்கம் இருக்கும் சீட் வரை பையும் கூடையும் இருந்தது. பஸ்ஸில் இப்போது முன் பக்கம் ஏறும் யாரும் இடது புறம் செல்ல முடியாது. அந்த அளவிற்கு பை நிறைந்து இருந்தது. ஒரு இல்லாதவன், வீட்டில் இருந்து சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்லும் போதோ சென்று திரும்பும் போதோ அவன் துணிகள் கொண்டு செல்லும் பை எப்படி இருக்குமோ, அப்படியே இருந்தன அந்த பைகள். சரி, ஒரு ஐந்தாறு பெரியவர்கள் இருப்பார்கள், அதனால் தான் இவ்வளவு பெரிய லக்கேஜ் என்று எண்ணிக்கொண்டு அந்த பைக்கு சொந்தமான முகத்தை தேடினேன்.

டிரைவருக்கு பின்புறம் இருக்கும் சீட்டில் அந்த பெண் அமர்ந்து இருந்தாள். இந்த பஸ்ஸில் அந்த பைககளுக்கு சொந்தமான முகம் என்று அந்த முகத்தை மட்டும் தான் பொருத்திப்பார்க்க முடிந்தது. கருத்த தோல், சற்றே பருமனான உடல், முட்டைக்கண்கள், சேலைக்கு சம்பந்தமே இல்லாத சட்டை, முகத்தில் இருக்கவேண்டிய பளபளப்பு எலிவால் தடிமனில் நீண்டு இருந்த அவளின் கூந்தலில், அவ்வளவு எண்ணெய், கழுத்தில் அழுக்குத்தோய்ந்து கருப்பேறியிருந்த மஞ்சள் கயிறு, காதிலும் மூக்கிலும் இருக்க வேண்டிய ஆபரணங்கள் ஒரு காலத்தில் இருந்ததற்கான சுவடுகளாய் சிறு துளைகள். இதை எல்லாம் வைத்து அங்கிருந்த பொருட்களெல்லாம் அவளுடையது தான் என்று எண்ணிக்கொண்டேன். அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது. ஆறு மாதம் இருக்கலாம் அது பிறந்து. குழந்தைப்பேருக்கு பிறகு தான் இவள் பருமனாக மாறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. அழாமல் அமைதியாக இருந்தது குழந்தை. குளிருக்கு இதமாக மஞ்சளும் சிகப்பும் இடம்பெற்ற ஒரு ஸ்வட்டர் அணிந்திருந்தது அந்த குழந்தை. இவ்வளவையும் இவள் எப்படி தூக்கி சுமப்பாள் என்று வியந்தேன்! அப்போது என் அருகிலும் இருக்கும் அவளின் பொருட்களில் ஏதோ அசைவது போல் உணர்ந்தேன்.

ஆமாம், எவனோ ஒருவன் அவளின் பைகளில் தன் வெற்றுக்கால்களால் மிதித்து ஏறினான். எண்ணெய் தேக்காமல் காய்ந்து போய் புழுதி படர்ந்த அந்தக்கால்களின் அழுக்கு பட்டாலும் அந்த பைகளில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை, ஏனென்றால் அவை அவன் கால்களை விட அழுக்காக இருந்தன. இவன் மேல் ஒரு வித வெறுப்பு வந்தது, மற்றவர்களின் பொருட்களில் இப்படி நடந்து கொள்கிறானே என்று. பைகளில் மிதித்து ஏறி அவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவளை ஏற்றி விட வந்தவனா இல்லை உடன் செல்கிறவனா என்று தெரியவில்லை. அவன் வந்ததை உணர்ந்து கொண்டவள் அவன் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியாக வெளியே கார்த்திக் ஹோட்டலின் பிளக்ஸ் போர்டை பார்த்துக்கொண்டிருந்தாள். வெறும் பார்வை தான், அதில் அர்த்தம் ஏதும் இல்லை. கண்ணை சிமிட்டக்கூட மறந்துபோய் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும் அவளிடம் ஏதும் பேசாமல் பஸ்சுக்குள் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தலை கழுத்தில் ஒழுங்காக நிற்காமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஆடிக்கொண்டிருந்தது. தண்ணி போட்டிருந்தான் என்பது தெளிவாகியது. சிறிது நொடியில் அவன் சீட்டில் இருந்து எழுந்தான். பையை மிதித்துக்கொண்டே இறங்கினான். "பைய மிதிக்காதீங்க!" யாரும் பார்க்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே அவனிடம் சொன்னாள். அவன் எதையும் காதில் வாங்காமல் இறங்கினான்.

அவளிடம், "நான் சொல்ல சொல்ல கேக்காம நீ போரியாடி?" திக்கித்திணறி பேசினான்.

"நீங்களும் வாங்கன்னு தான சொல்றேன்" அவள் யாருக்கும் கேட்கக்கூடாது என்று சீட்டுக்கு பின் புறம் நின்ற அவனைப்பார்த்து கழுத்தை திருப்பி  மெதுவாக பேசினாள்.

"நீ போய் பிச்சை எடுடி. என்ன என்ன பொண்டுகபையன்னு நெனச்சியா? அவைங்ககிட்ட என்னால வர முடியாதுடி" கூறிக்கொண்டே அவளின் கண்களுக்கு கீழ் தன் முஷ்டியால் குத்தினான். அவளுக்கு அழுகை வரும் முன் கண்களில் நீர் வந்துவிட்டது. சேலையை கொண்டு தன் முகத்தை மூடி அழுகின்றாள் அவள். அவள் உடல் குழுங்குகிறது. கையில் குழந்தை எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தது. 

அவன் கீழின்றங்கி அவள் சீட்டிற்கு அருகில் வெளியே நின்றான். முதலில் அவள் இதை கவனிக்கவில்லை. அவன் சிகரட்டை எடுத்து பற்ற வைத்து புகையை அவள் முகத்திற்கு அருகில் வந்து ஊதினான். அந்த வாடை அவளுக்கு பழக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முகத்தில் இருக்கும் சேலையை விலக்கிக்கொண்டு அவனைப்பார்த்தாள். இன்னமும் அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது.

"ஏங்க உள்ளகக வாங்கங்க" - அழுததில் அவள் தொண்டை கட்டியிருந்தது.

"வரமுடியாது பொடி. என்ன மதிக்காம போரில? போடி போ" ஏதோ சாதனை புரிந்தவன் தெனாவட்டாக பேசுவாதைப்போல பேசினான்.

"ஏங்க இப்படி பண்ணுறிங்க? காலைல கேட்டதுக்கு வரேன்னு சொன்னிங்கள்ள? இப்போ என்னங்க ஆச்சி?" அவனை சமாதானப்படுத்தும் விதமாக, அதே நேரத்தில் யாரும் தன்னை கவனித்து விடுவார்களோ என்ற கூச்சத்தில் அவனிடம் பயந்து பயந்து பேசினாள். ஆனால் எல்லோரும் அவர்களைத்தான் பாத்துக்கொண்டிருந்தோம். அது அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

"நீயும் பேசாம எறங்கி வந்திரி" நாக்கை துரித்துக்கொண்டு கத்தினான்.
ரோட்டில் செல்பவர்களும் திரும்பிப்பார்த்து சென்றார்கள். "கத்தாம பேசுங்க. எல்லாரும் பாக்குறாங்க. தயவுசெஞ்சு உள்ள வாங்க" மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்.

"ஏய் முடியாதுன்னு சொல்லிட்டேன்லடி? ஒரு ஆம்பளைக்கு நீ இவ்வளவு தான் மரியாதை குடுப்பியா?"

"உங்களுக்கு அசிங்கமா தெரியலையாங்க இப்படி பண்றது? என் மானத்த ஏன் இப்படி வாங்குறிங்க?"

"நீ தாண்டி புருஷன் மானத்த வாங்குற ஊர்க்காரைங்க முன்னாடி" சிகரட் கையை சுட்டவுடன் அதை வீசி எறிந்துவிட்டு மீண்டும் பேருந்திற்கும் வந்தான்.

இப்போது அவள் அருகே இன்னொரு பெண் அமர்ந்திருந்தாள். அந்த பெண் இவன் வருவதைக்கண்டு எழுந்தாள். ஆனால் அவன் மனைவி, "இல்லமா, நீ உக்காரு" என்று அவளை உட்காரவைத்தாள். ஒரு பாதுகாப்புக்காக குட இருக்கலாம்.

"புருஷன் நின்னுக்கிட்டு வரணும், யானோ எவளோ ஒருத்திக்கு நீ உக்கார இடம் குடுப்ப? நக்கல் தொனியில் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு பேசினான். திடீரென்று என்ன நினைத்தானோ, அவள் கையில் இருந்த குழந்தையை, "குடுடீ, என் புள்ளைய" எண்டு பற்றி இழுக்க ஆரம்பித்தான், "நீ மட்டும் போ, என் பிள்ள என் கிட்டே இருக்கட்டும்"

"என் புள்ளைய விடுங்க" தன் பங்குக்கு அவளும் குழந்தையை இழுத்தாள். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த குழந்தை தனக்கு ஒரு ஆபத்து என்றதும் அழ ஆரம்பித்தது. அவள் அழுதுகொண்டே குழந்தையை தன் பக்கம் இழுக்கிறாள். கடைசியில் குழந்தையை தன் வசமே இழுத்து காப்பாற்றிக்கொண்டாள். இதை எல்லாம் ஒரு இறையாண்மை மிக்க இந்தியக்குடிமகனாக சிந்தை அலைபாயாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். அவனை அரற்றி சத்தம் போட அங்கு யாருக்கும் அக்கறை இல்லை, நான் உட்பட.

குழந்தையை கவர முடியாத கோபத்தில் அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். "அம்மா" என்று ஒரு சிறிய கதறல். அவன் மீண்டும் இறங்கி விட்டான் பேருந்தில் இருந்து. கீழிருந்து அவளிடம் சொன்னான் "இனிமேல் ஜன்மத்துக்கும் நீ என்ன பாக்க முடியாதுடி. எங்க போறியோ அங்கேயே இருந்துக்கோ"

"என்ன இப்படி ரோட்ல வச்சு அடிக்குறீள? நாளைக்கு பாரு எங்க வீட்ல இருந்து உன்ன என்ன செய்றாங்கன்னு" மரியாதை குறைந்தது. பொது இடம் என்று அவள் அழுகையை எவ்வளவு தான் அடக்க நினைத்தாலும், அந்த கண்ணீருக்கு பொது இடம் தான் மிகவும் பிடித்தது. அடிக்கடி வந்தது அவள் கண்களின் வழியாக அந்த பொதுவை பார்த்தது.. இவள் இடத்தில் என் அம்மாவை வைத்துப்பார்த்தேன். இந்நேரத்தில் அவன் கன்னம் வீங்கி இருக்கும். காலில் விழுந்திருப்பான். 'நம்ம அம்மாவும் பெண் தான். அவங்க தைரியம் இவளுக்கு இல்லையே!'

'இவன மாதிரி ஆளெல்லாம் பிடிச்சி உள்ள போடணும்னே' பேருந்தில் பின் சீட்டுகளில் இருந்து ஒரு குரல் கேட்டது. 

'நடு ரோட்ல பொண்டாட்டிய அடிக்குறான், இவனெல்லாம் ஒரு ஆம்பளையா?' இன்னொரு குரல். எல்லாமே சத்தமாக. இந்தக்குரல்கள் எல்லாம் அவளை தான் தாக்கின, ஏனென்றால், அவர்கள் வைவது அவளின் கணவனைத்தானே? அவள் தானே கேட்கும், உணரும் நிலையில் இருந்தாள்? அவன் போதையில் தானே இருந்தான்? அவளுக்கு வறுமையும் கண்ணீரும் தான் நிறைவாக கொடுத்திருக்கிறான் போல ஆண்டவன்.

ரைவர் பஸ்சிற்குள் ஏறினார். "ஏங்க உள்ள வாங்க, பஸ்சு கெளம்பப்போகுது" அவள் பதட்டமாக அக்கறையுடன் அவனிடம் சொன்னாள். 

"வர முடியாது போடி"

'அவன் கிட்ட எதுக்குமா கெஞ்சுற?" பழம் விற்கும் ஒரு கிழவி சொன்னது, "படுபாவி போனா போறான் விடு". அந்தக்கிழவியின் அக்கறை வார்த்தையை விட அவளும் நம்மை, நாம் இப்படி அசிங்கப்படுவதை பார்க்கிறாளே என்ற எண்ணம் தான் அவளுக்கு அதிகமாக இருந்தது. மிகவும் கூனிக்குறுகி இருந்தாள். டிரைவர் பேருந்தை எடுத்தார். அவன் ஏறுவது போல் தெரியவில்லை. பேருந்து முன்னெடுத்து சென்றது. இவள் ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

நான் பதறினேன், இந்த பெண்ணிற்கு டிக்கட் எடுக்க காசு இருக்குமா? இவள் எந்த ஊருக்கு போவாள்? அங்கு இவளின் தாய் வீட்டில் நிலைமை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி இவளை புரிந்து கொள்வார்கள்? இவளுக்கும் சேர்த்து சம்பாதிக்க அங்கு யாரும் இருப்பார்களா? இவள் முதலில் தைரியமாக தன் வீட்டிற்கு செல்வாளா? அல்லது அவர்களிடமும் சொல்ல கூச்சப்பட்டு இந்த மானஸ்தி ஏதேனும் விபரீத முடிவு எடுத்துவிடுவாளோ? பிறந்த வீட்டில் இருந்து சமாதானம் செய்து இவளை இவனிடம் மறுபடியும் கொண்டு வந்து விட்டாள் இவள்  நிலை மீண்டும் இது தானா? என்னென்னவோ நினைத்துக்கொண்டே இருந்தேன்.

அவள் அழுது கொண்டே வந்தாள். திருமங்கலத்திற்கு டிக்கட் எடுத்தாள். பேருந்து பை பாஸில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் அருகில் என் சீட்டில் இவன் அவன் பின் பக்கத்தை முட்டு கொடுத்து நின்று கொண்டிருந்தான். அது அவன் தான். பஸ்ஸில் ஏறிவிட்டான் போல. அவள் அவனைப்பார்க்கவில்லை. அழுவதையும் நிறுத்தவில்லை. ஜன்னல் வழியாக வெளியே இருட்டை பார்த்துக்கொண்டே அழுதாள். இந்தப்பக்கம் திரும்பி மனிதர்களின் முகத்தை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. குழந்தைக்கு குளிரடிக்காதவாறு தன் சேலையால் மூடி இருந்தாள்.

கப்பலூரில் எனக்கும் முன் இருக்கும் சீட் காலியானது. அங்கு அவன் வந்து அமர்ந்தான். அவளும் அழுது முடித்திருந்தாள். கன்னங்கள் வீங்கி இருந்தன. குளிரும் அவளை அடித்திருக்க வேண்டும், ஜன்னலின் பக்கமிருந்து முகத்தை இந்தப்பக்கம் திருப்பினாள். அங்கு அவன் உட்கார்ந்து இருந்ததை கவனித்தாள். "என்னடி போயிருவேன்னு நெனச்சியா?" சிரித்தான் அசிங்கமாக அவன்.

அவள் ஒன்றுமே சொல்லாமல் அவனைப்பார்த்தாள். எனக்கு அவன் மீது எரிச்சலும் கோபமும் வந்திருந்தது. சிரிக்கும் அவன் முகத்தில் மிதிக்க வேண்டும் போல் இருந்தது. "ஏய் புள்ளைய இங்கிட்டு திருப்புடி" அவனை நோக்கி குழந்தையை திருப்ப சொன்னான்.

அவளும் திருப்பினாள். "உங்கம்மாவ அடிடா தம்பி, அடிடா அவள" சிரித்துக்கொண்டே சொன்னான்.

குழந்தையும் சிரித்தது. "புள்ளைக்கு நல்ல பழக்கமா சொல்லிக்குடுங்க" சொல்லிக்கொண்டே அவளும் மெலிதாக புன்னகைத்தால் அவனைப்பார்த்து.

அவள் சிரித்ததைப்பார்த்ததுமே எனக்கு அவள் மேல் மிகுந்த பச்சாதாபம் தான் வந்தது. மனம் கனமாக இருந்தது. திருமங்கலத்தில் இறங்கி அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்காளா என்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. அவள் அவனை விட்டு செல்லமாட்டாள். அவன்? தெரியவில்லை.

வீட்டில் வந்து நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். "அவா செஞ்சது சரியாமா?

"சரி தான்" ஒரு சலனமும் இல்லாமல் பதில் வந்தது.

"என்னம்மா இப்டி சொல்றீங்க?" 

"ஒரு பொம்பளயால வேற என்னப்பா செய்ய முடியும்? அவளுக்கு வாய்க்கப்பட்டது அவ்வளவு தான்" அம்மா சொன்ன அந்த வாக்கியத்தில் நிறைய அர்த்தம் இருப்பதாக தெரிந்தது. அதை ஆராய நினைத்தால் மனது லேசாக வலிக்கிறது, ஆண்களை நினைத்து வெட்கப்படுகிறது. யார் அவள் இடத்தில் இருந்திருந்தாலும் இப்படி தான் செய்திருப்பார்கள் என்று தேற்றிக்கொண்டேன் மனதை.

என் காதல்(கள்)... - சிறுகதை..

Tuesday, January 25, 2011

"நீ அடம்பிச்ச மாரியே கடைசில ஹீரோ சான்ஸ் கிடைச்சுறிச்சி போல? ம்ம் கலக்கு கலக்கு" வாழ்த்துகிறானா, பொறாமையில் பொங்குகிறானா என்றே கண்டுபிடிக்க முடியாத மாதிரி ஒரு சிரிப்போடு சொன்னான் என் ரூம்மேட். அசிஸ்ட்டன்ட் டைரக்டர் ஆவர்த்து முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

'நீ கடைசி வரைக்கும் முயற்சி செஞ்சுகிட்டே தான்டா இருப்ப' என்று நினைத்துக்கொண்டே "என்ன பாஸு, உங்க help இல்லாம இதெல்லாம் என்னால முடிஞ்சிருக்குமா?" என்று கூறிக்கொண்டே வெளியில் எனக்காக காத்திருந்த கம்பெனி காரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன் அந்த சிறிய மேன்சன் சந்து வழியாக. குனிந்து துவைத்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்துக்கொண்டே சென்றேன். அவள் டக்கென்று என்னை பார்த்தாள். பதட்டத்தில் வேறு எங்கோ பார்வையை அவசரமாக திருப்ப  அங்கிருந்த போஸ்ட் கம்பத்தில் 'நொங்' என்று முட்டினேன். அவள் சிரித்துக்கொண்டே, "பாத்துப்போங்கண்ணே" என்றாள். மேலே இருந்து அந்த உதவி இயக்குனர் சிரித்தான், அன்கு அது தான் மிகுந்த கடுப்பாக இருந்தது.

அண்ணன்! 'நல்ல வேலை முதலிலேயே சொல்லிவிட்டாள்' வருங்கால தொல்லையில் இருந்து தப்பித்தாக எண்ணிக்கொண்டேன். அன்றே அவளும் இப்படி சொல்லியிருந்தால், நான் இன்று நிம்மதியாக இருந்திருப்பேன். நான் என்ன வேலை செய்கிறேன், வேலை செய்கிறேனா இல்லையா, நான் யார், என்னவாக இருக்கிறேன் இப்படி என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு நாள் என்னிடம் வந்து இதே சந்துக்குள் "உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" என்றாள். பக்கத்து வீட்டுப்பெண் தான் இவள். முதல் வருடம் கல்லூரி போய்க்கொண்டு இருக்கிறாள். 'இப்போது எதற்கு கூப்பிடுகிறாள் என்று புரியவில்லை. ஒரு வேளை நான் மாடியில் நின்று கொண்டு இவளை சைட் அடிப்பதை அந்த உதவி இயக்கம் சொல்லிருச்சான்னு தெரியல'.

"என்ன வி... ம்ம்ஹிரும்.. என்ன விஷயம்ங்க?" தொண்டை லேசாக அடைத்துக்கொண்டது. அங்கு ஆட்கள் வேறு யாரும் இல்லை. அதனால் இவள் வைதாலோ, இல்லை, செருப்பால் அடித்தாலோ கூட யாருக்கும் தெரியாது, இவளாக சொல்லும் வரை. 
கீழே குனிந்து அடைத்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடையை பார்த்துக்கொண்டே சொன்னாள், "எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. பாக்குறதுக்கு எங்க அப்பா மாரியே இருக்கீங்க. இது லவ்வான்னு எனக்கு தெரியல, ஆனா உங்க விருப்பம் தான் எனக்கு தேவ"

பாதகத்தி, ஒரே மூச்சில் சொல்லிவிட்டாள் மிக வேகமாக. எனக்கு தான் மூச்சு அடைத்துக்கொண்டது. "நான் அப்பறம் சொல்றேனே" என்று கூறி நகரப்பார்த்தேன். "உங்க செல் நம்பர் குடுங்க" என்று வாங்கிக்கொண்டாள். அன்று சாயந்தரமே அவள் காதல் எங்கள் காதல் ஆனது. தினமும் விடிந்தது முதல் மறுநாள் விடியும் வரை பேச்சு பேச்சு பேச்சு தான் போனில். உருப்படியாக ஏதும் கிடையாது. "எங்காவது வெளியே கூட்டிட்டு போங்களேன்" என்று பல முறை கேட்டிருக்கிறாள். நான் எதாவது சொல்லி சமாளித்து விடுவேன். இது வரை நான் வேளை இல்லாமல் வெட்டியாக இருப்பது அவளுக்கு தெரியாது. 

ஒரு நாள் கண்டிப்பாக படத்திற்கு சென்றே ஆக வேண்டும் என்று சாதித்து விட்டாள். நானும் வேறு வழி இல்லாமல், அவளை படத்திற்கு அழைத்து சென்றேன். படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது; ரசித்துப்பார்த்தேன். படம் முடிந்து வெளியில் வரும் போது அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு கேட்டாள், "இந்த படம் உங்களுக்கு பிடிச்சுருக்கா?'
"ஆமா. என்ன?"

"எனக்கு பிடிக்கல"

"நான் இந்த மாதிரி படம் தான் விரும்பி பாப்பேன்" - அனுபவித்து ரசனையோடு சொன்னேன்.

"இந்த மாதிரி படமா? நீங்க என்ன பண்றீங்க?" - பயம் கலந்த பொறுப்புணர்வோடு கேட்டாள்.

இத்தனை நாள் தோன்றாத கேள்வி இப்போது அவள் மனதில். "சினிமால ஹீரோவா நடிக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்" அவள் முகத்தை பார்க்காமல் சொன்னேன்.

"அப்பறம் செலவுக்கு எல்லாம் என்ன பண்றீங்க?" - என்னை கொபமேற்றிய முதல் கேள்வி அவளிடம் இருந்து வந்தது.

"இங்க பாரு, படத்துக்கு கூட்டிட்டு வர சொன்ன. வந்தேன்ல? செலவ பத்தி உனக்கு என்ன? நான் பாத்துக்கிறேன்" - வெறும் வார்த்தையாக வந்ததே தவிர அவள் கேட்டா கேள்விக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் பதில் என்னிடம் இல்லை.

"நெனச்சேன், நீங்க இந்த மாதிரி படத்துக்கு கூட்டிட்டு வரும் போதே நெனச்சேன் நீங்களும் அப்படி தான் இருப்பீங்கன்னு" - நடு ரோட்டில் அழ ஆரம்பித்துவிட்டாள். மெதுவாக நான் அவளை சமாதானப்படுத்தி அவள் வீட்டில் போய் சேர்த்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த முதல் மற்றும் கடைசி படம் அது தான். "கற்றது தமிழ்" தன் அது.

மறுநாள் முதல் அவளிடம் இருந்து போன் வரவில்லை. நான் போன் செய்தாலும் அட்டன்ட் செய்யவில்லை. "dont disturb me" என்று ஒரு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பினாள். அதற்கு நான் பதிலும் அனுப்பவில்லை, அவளை மீண்டும் அழைக்கவில்லை. அன்று தான் நான் முதல் முதலாக பெண்களின் கோழைத்தனத்தை உணர்தேன். இதிலேயே நான் சுதாரித்து இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது இல்லையா? நடிக்க அழைந்து கொண்டிருக்கும் போது ஒரு group dancer மீது காதல் வந்தது. அதுவும் இதே போல் அல்பாயுசில் முடிந்தது. காரணம் அவள் கூற்றுப்படி "நீ எனக்கு ஏதாவது கிப்ட் குடுத்துருக்கியா? ஒரே ஒரு புக் குடுத்த, அது என்னன்னு கூட எனக்குப்புரியல, சரியான சாம்பிரானியா இருக்க". முடிந்தது இவளின் சகாப்தமும். நான் பரிசளித்த புத்தகம் ஓஷோவின் "பெண்ணின் பெருமை" பாரதி பாஸ்கரின் தமிழ் மொழிபெயர்ப்பில்.

அதற்குப்பிறகும் இரண்டு காதல்கள், இரண்டுமே தங்கள் மூதாதையர்கள் போலவே அல்பாயுசில் என் மீதும் என் ரசனை மீதும் என் மனநிலை மீதும் பழி சுமத்தி சென்றன. என்னைப்பார்த்து பயந்தன, 'இவனால் இந்த உலகில் காலம் தள்ள முடியாது' என்று. அதை அக்கறை என்று அந்தப்பெண்கள் சொன்னாலும், எனக்கு அவர்கள் பயப்படுவதாகவே தோன்றியது 'இவனோடு சேர்ந்தால் நாமும் இந்த உலகில் நிம்மதியாக காலம் தள்ள முடியாது' என்று அவர்கள் பயப்படுவதாக. என் ரசனை ஒத்த பெண்கள் இவ்வுலகில் இருக்க முடியாதென்று தீர்மானித்தேன். பெண்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக்கொள்ள கூடாது என்று முடிவு செய்தேன். ஆனாலும் ஒருத்தி எனக்காக வருவாள் என்கிற நப்பாசை மட்டும் இருந்தது.  இரண்டு செகண்டில் என் பழைய காதல்கள் ஞாபகம் வந்து போயின.

போஸ்ட் கம்பத்தில் அடிபட்டது தான் வலித்தது, அழ வேண்டும் போல் இருந்தது. லேசாக கண்ணீர் வந்தது. யாராவது பார்த்தால் அவமானமாக இருக்குமே என்று மூளை சொல்லியது. மனம், இதற்காவது அழு என்று வற்புறுத்தியது. ஒரு அழுத்தமான நிம்மதியை உணர்ந்தேன். அழுத்தமான நிம்மதி! அது நிம்மதியா? இல்லை மனம் கனமாகவே இருக்கிறது. காருக்கு அருகில் வந்துவிட்டேன்.

பச்சை நிற போர்ட் பிகோ பாசம் பிடித்துப்போன பாறாங்கல் போல நின்றுகொண்டிருந்தது. டிரைவர் 'இவ்வளவு நேரமா?' என்பது போல் பார்த்தான். காரை முன்புறம் வழுயாக சுற்றி வந்து டிரைவர் பக்கவாட்டில் உள்ள கதவை திறக்கப்போனேன். "இது ப்ரொடியூசர் சீட்டு, பின்னாடி உக்காரு" என்றான். 'என்னங்கடா இது? ஒரு ஹீரோக்கு இவ்வளவு தான் மரியாதையா?' என்று நினைத்தவாறே பின் இருக்கையில் நுழைந்தேன். 'சரி தான் நம்ம ஊர்ல ரஜினி கமலையே அவன் இவன் என்று தானே பேசுவோம்' என்று ஊருக்குள்ளும் என் சினிமா கனவுக்குள்ளும் மூழ்கினேன்.

"இவனெல்லாம் என்னத்தையா நடிக்கப்போறான்?" என்ற குரல் அலை அலையாக காதில் விழுந்தது. குரலை கவனிக்க முனைந்த போது தான் நான் தூங்கிப்போயிருப்பதே எனக்கு புரிந்தது. கண் விழுத்துப்பார்த்தால் ஒருவர் கோபமாக நின்று கொண்டிருந்தார் காருக்கு வெளியில். நான் விழித்ததை பார்த்து, "டேய் மொத நாளே இப்டி வரியே, நீ எல்லாம் என்னத்த கிழிக்கப்போற? உன்ன ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாருஅந்த டைரக்டர் பன்னாடைய சொல்லணும்." எனக்கு முகம் எல்லாம் வெளிறிப்போனது. 'அய்யோ கோவத்தில் என்னை அனுப்பிவிடுவார்களோ' என்று பயந்தேன். "போடா போய் சீன் என்னனு கேளு" என்று அவர் என்னை மன்னித்து அனுப்பினார். மன்னித்திருப்பார் என்று நானாக எண்ணிக்கொண்டேன்.

யாரிடம் சீன் கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் பாட்டுக்க நடந்து கொண்டே இருந்தேன். அப்போது தான் ஒன்றை கவனித்தேன். காரில் இருந்து இறங்கியதில் இருந்து ஒருவன் என்னுடனேயே வந்துகொண்டிருந்தான். அவனிடம் கேட்கலாம் என்று எத்தனித்த போது, அவனே, "சார், சீன் சொல்லவா சார்?" என்றான்.. 'சாரா?' - எனக்கு ஒருத்தன் சிக்கி விட்டான். அவனை வளைத்துக்கொண்டேன் என் வலதுகைக்குள்.

"ஆமா, நீ யாருப்பா?" கொஞ்சம் சத்தமாக தெனாவட்டாக கேட்டேன்.

"நான் அசிஸ்ட்டன்ட் டைரக்ட்டரா இன்னைக்கு தான் சார் சேந்துருக்குறேன்"

"ஓ.. சரி சரி.. கார்ல என்ன ஒருத்தர் வஞ்சிட்டு போனாரே அவரு யாரு, ப்ரோடியூசரா?"

"அவரு மேனேஜர் சார், இங்க எல்லாமே அவர் கண்ட்ரோல் தான். ப்ரோடியூசரே அவர் சொல்றத தான் கேப்பாரு"

அவனோடு பேசிக்கொண்டே இரண்டு மாடி ஏறி ஷூட்டிங் நடக்கும் அந்த தளத்திற்குள் வந்தேன். "சரிப்பா, சீன சொல்லு" என்றேன்.

"சார் ஹீரோயினும் இருக்காங்க, ரெண்டுபேருக்கும் சேர்த்து சொல்லிரேனே?" - என்ன அவசரம் அவனுக்கோ?.

"ஒஹ் இது டூயட் சீனா? யாருப்பா ஹீரோயின்" - எதிர்பார்ப்பும் சந்தோசமும் மனதில் நிரம்பி கேட்டேன்.

"அந்தா, சிகப்புகலர் டிரஸ் போட்டு டைரக்டர் கிட்ட இருக்காங்களே அவங்க தான்" - அவன் கை நீட்டிய திசையில் பார்த்தேன். மனதில் இருந்த எதிர்பார்ப்பும் சந்தோசமும் முகத்தில் வலிந்தது.

"சார் போலாமா?" - அவன் அரட்டல் தொனியில் கேட்பது போல் இருந்தது. என் முகத்தில் ஏதும் தெரிந்திருக்குமோ அவனுக்கு?

ஹீரோயின் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தோம். அருகில் செல்ல செல்ல உணரப்படும் சமுத்திரத்தின் பிரம்மாண்டத்தைப்போல, அவளின் அழகு என்னை பயமுறுத்தியது. ஆம் பயமுறுத்தும் அழகு. ஆனால் கள்ளம் கபடமற்றது. ஷேக்ஸ்பியர் சொன்னது போல அவளது கண்கள் உண்மையிலேயே "wild eyes", இரண்டு கதவுகள் கொண்ட நீண்ட கூரை வீடு போன்ற கூரான மூக்கு,  ரத்தம் வடிகிறதோ என்று எண்ணத்தக்க செவ்விதழ்கள். இதற்கு கீழ் வர்ணிக்கலாம் என்றால் அந்த சிகப்பு ஆடை அவள் கழுத்தில் இருந்து பாதம் வரை தடை உத்தரவு போட்டது, வர்ணிப்பதற்கு.

"வாப்பா" கவனம் கலைத்தார் இயக்குனர், "இது தான் சீன்" என்று எதையோ சொல்ல ஆரம்பித்தார். குரலை மாற்றி ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சி பூர்வமாக நடித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்னும் தெரிவது போலும் தெரியவில்லை, என் மண்டையில் ஏறுவதுபோலும் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது, இந்த சீன் மாதிரியே எல்லா சீனும் இருந்தால் இந்தப்படம் கண்டிப்பாக வெளிவராது.

"சரி எல்லாம் படத்தோட ப்ரோமோக்கு உதவுமே? வரச்சொல்லு" - டைரக்டர் தன் வழக்கமான குரலில் பேசும் போது நினைவுக்கு வந்தேன். "இதான்பா சீன். பத்திரிகைல இருந்து வந்துருக்காங்க, அவங்க பேசிட்டு போனதும் ரிஹர்சல், ஓகே?" - பத்திரிகை, ரிஹர்சலா? எனது வயிற்றில், காலையில் குடித்த டீ காந்தியது, கொதித்துக்கொண்டு மேல் எழும்பியது. 

பத்திரிகைகாரன் கடைசி வரை அவளிடமே கேள்வி கேட்டான். நான் ஒரே ஒரு போடோவுக்கு மட்டும் போஸ் கொடுத்தேன். அவள் பேட்டிக்கு பேசும் போது அவளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொண்டேன். ஊர் விசாகப்பட்டினம், படிப்பது, பி.ஏ. ஆங்கிலம் முதல் வருடம், கல்லூரி அழகி என்ற பட்டம் (குடுக்கலாம் தப்பில்லை).. தமிழ் தெலுகு ஆங்கிலம் கலந்து கொச்சையாக பேட்டி கொடுத்தாள்.

டைரக்டர் நகர்ந்த போது அவளிடம் கேட்டேன், "நீங்க விசாகப்பட்டினத்துல எந்த காலேஜில் படிக்குறிங்க?"

"ஏன் சொன்னா தெரியப்போகுதா?" - இப்போது நல்ல தமிழில் பேசி என்னை நோஸ்கட் செய்தாள். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. ப்ரொடக்சன் மேனேஜர் முதல் யார் திட்டியும் வராத துக்கம் இவள் இப்படி கேட்டதும் வந்துவிட்டது.

அவளே தொடர்ந்தாள். "ஹலோ என்ன சோகமாகிட்டிங்க? எனக்கே அது என்ன காலேஜின்னு தெரியாதுங்க. எனக்கு ஊர் கோவைப்பக்கம் ஒரு கிராமம். நாயக்கர் பூணு, அதனால தெலுகு பேசுவேன். பேரும் அனாமிகா இல்ல, என் பேரு விஜயலட்சுமி.  டைரக்டர் தான், 'ஆந்திரா பொண்ணுன்னு சொல்லு யார் கேட்டாலும்'னு சொல்லிட்டார். அதான் அப்படி சொன்னேன். உங்கள கோபப்படுத்தியிருந்தா சாரி"

நான் "பரவாயில்லைங்க" என்று சொல்வதற்குள் கூப்பிட்டுவிட்டான், இந்த இங்குள்ள உதவி. இந்த உதவிகள், உதவி செய்கிறார்களோ இல்லையோ, நல்லா உயிரை வாங்குகிறார்கள். படத்தின் முதல் காட்சி, முதல் ஷாட், முதல் டேக். நானும் அவளும் கோவிலில் சாமி கும்பிடுவதாக. காலை 11 மணி முதல் மாலை 6.30 வரை எடுத்தார்கள் அந்த ஒரு காட்சியை. இன்றைய ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது. கிளம்பலாம் என்று காரை தேடினால், ஒன்றும் இல்லை. "எப்பா நாளைக்கெல்லாம் கார் வராது, சீக்கிரம் எப்படியாது வந்துரு. உனக்கும் தாம்மா" - காலையில் எறிந்து விழுந்த மேனேஜர் இப்போது அக்கறையுடனும் கண்டிப்புடனும் சொன்னார்.

அவர் 'உனக்கும் தாம்மா' என்று சொன்னா போது தான் அருகில் அவளும் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு கான்ட்ராஸ்ட்டாக பச்சை வண்ண துப்பட்ட அணிந்திருந்தாள். "இப்போ என்னங்க பண்ணலாம்?" - அவள். பயந்து போனது போல் இருந்தாள். 

"என்னங்க ஆச்சு?"

"காலைல கார் வந்தது, எங்க சித்தி வீட்டில் இருந்து வந்துட்டேன், இப்போ எப்படி போறதுன்னு தெரியல" கிட்டத்தட்ட அழுது விட்டாள்.

"நீங்க எங்கங்க போகணும்?"

"எங்க சித்தி வீட்டுக்கு" - டக்கென்று ஒரு நீர் உருண்டை அவள் கண்களில் இருந்து நேராக உதட்டருகில் விழுந்தது. சிறு குழந்தை போல் இருந்தாள்.

"அது எங்க இருக்கு?"

"சோழிங்கநல்லூர்"

"சரிவாங்க நான் கூட்டிட்டுப்போறேன்" பேருந்து, ரயில் பின்பு ஆட்டோ என்று மூன்று விதமான பயணம் மேற்கொண்டு சென்றோம். அவளிடம் பணம் இருந்ததால் எல்லாப்பயணமும் சுமூகமாக சென்றுகொண்டிருந்தது. பல விஷயங்கள் பேசினோம். அவள் சென்ற வருடம் தான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, படிக்க வசதி இல்லாமல் இப்போது நடிக்க வந்திருக்கிறாள். நடிப்பில் அவளுக்கு ஆசை இருந்தது. என்னைப்பற்றி கேட்டாள். என்னைப்பற்றி எனக்கு பிடித்ததைப்பற்றி, படங்கள், புத்தகங்கள் பற்றி பேசினேன். 

"ஒஹ் நீங்க ரொம்ப வாசிப்பீங்களா?" ஒரு விதமான நக்கல் தொனியில் கேட்டாள்.

'மீண்டும் அதே அவமானமா' என்று நினைத்து, "ஆமா" என்று சொல்லி வாயை மூடவில்லை, சிரிக்க ஆரம்பித்துவிட்டால், நான் ஏதோ ஜோக் சொன்னது போல.

"இப்போ ஏன் சிரிக்குற?" அவள் சிரிப்பை முழுதாக ரசிக்கும் பொறுமை இழந்து கேட்டேன்.

"இல்ல, வாசிக்கிறதுன்னா, ஒரு டபுள் மீனிங் கேட்டா வார்த்த, அதான் சிரிச்சேன்" நானும் சிரிக்க ஆரம்பித்தேன். "சரி என்ன மாறி படம் பாப்பிங்க?"

'நீ என்னிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து போவதற்கு காரணமாக சொல்லவேண்டிய அனைத்துப்படங்களையும் பார்ப்பேன்' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. "சேரன், மிஸ்கின், பாலா, செல்வராகவன், மகேந்திரன், பார்த்திபன் இவர்கள் படமும் இன்னும் சிலரின் ஒரு சில படங்களும்" என்றேன்.

"நீங்க சொன்னா எல்லாரு படமும் நல்ல இருக்கும்ல? அதுவும் தவமாய் தவமிரிந்தும், சித்திரம் பேசுதடி படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு?" - உணர்ந்து அனுபவித்து பேசினாள்.

என் மனதில் ஒரு ஆனந்தம். வாழ்வில் நான் கண்ட, என் ரசனைக்குட்பட்ட பெண் இவள் தான் என்று. "ஒஹ். நீ இந்த மாதிரி படம் தான் பாப்பியா?"

"எல்லா படமும் பாப்பேன். எனக்கு பிடிச்சுருக்கணும், புதுசா இருக்கணும், ரசிக்க வைக்கணும் அவ்ளோ தான்" - எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாள் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவ்வளவு இயல்பாக எளிமையாக! நான் அவளின் ரசிகனானேன். "இது தான் எங்க சித்தி வீடு".. அவள் சித்தி வீடு இவ்வளவு சீக்கிரம் வரும் என்று தெரிந்திருந்தால், நான் இவளை நடக்க வைத்தே அழைத்து வந்திருப்பேன். வீட்டிற்குள் நுழையும் முன் என்னிடம் திரும்பி, "ரொம்ப தேங்க்ஸ், ஆஆ, பாருங்க இவ்ளோ நேரம் பேசிருக்கோம், உங்க பேரைக்கூட சொல்லல நீங்க? உங்க பேர் என்ன?"

எனக்கு ஞாபகம் வரவில்லை. 'அய்யய்யோ, என் பேரு என்ன?'.. "என் பேர் முகுந்தன்" என்றேன் நீண்ட தவிப்புக்குப்பிறகு. "அட, "நிலா நிழல்"ல ஹீரோ பேரும் முகுந்தன் தான். ஓகே பை, நாளைக்கு பாக்கலாம்" வீட்டிற்குள் மறைந்தாள்.

'நிலா நிழல் முகுந்தனா? இவள் சுஜாதா வாசிப்பாளா? ஆச்சரியமாக இருந்தது. இவள் புத்தகம் படிக்க மாட்டாள் என்று நானாக முன்பு எண்ணிக்கொண்டதை நினைத்து சிரித்தேன். வீட்டிற்கு போக பிடிக்கவில்லை. மனம் சந்தோசமாக இருந்தது, அங்கு போனால் அந்த உதவி இருப்பான், ஈஈஈ னு இழிச்சுக்கிட்டு. அப்படியே OMR இல் இருந்து ECR செல்லும் சாலையில் நடந்தேன். எல்லாமே பிடித்தது எனக்கு. "கலைஞர் கருணாநிதி சாலை" என்று போட்டிருந்தது. எனக்கு அந்த கலைஞர் கருணாநிதியையும் பிடித்தது. 

தினமும் அவளை நான் அவள் சித்தி வீட்டில் விட்டு வருவது தொடர்ந்தது. எங்கள் படம் முடிவது போல் தெரியவில்லை. எனக்கும் இந்தப்படம் முடியவே வேண்டாம் என்று தோன்றியது. என்னை இது வரை இவள் எங்கும் அழைத்து செல்ல சொன்னதில்லை, அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை. அர்த்தமுள்ள இந்து மதம் கொடுத்தேன். "என்கிட்டே ஏற்கனவே ஒன்னு இருக்கு, இருந்தாலும் உனக்காக வச்சுக்கிறேன்" - இப்போதெல்லாம் அவள் என்னை மிக அன்னியோன்யமாக ஒருமையில் தான் அழைக்க ஆரம்பித்தாள். என் கண் முன் "நீ வேண்டாம்" என்று சொன்ன அந்த பெண்கள் வந்து போனார்கள். அந்தப்பெண்களின் ரசனை மீது எனக்கு வர வேண்டிய கோபம் மொத்த பெண் வர்கத்தின் மீதே வந்தது. இவர்களை எல்லாம் எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று மனதில் ஒரு லட்சியவெறி கொண்டேன். இவள் மேல் உள்ள காதலை விட அந்த வெறி எனக்கு பெரிதாக இருந்தது.

எங்கள் இருவரின் மனதிலும் காதல் இருந்தது இருவருக்கும் புரிந்தது. யார் முதலில் சொல்வது என்று தயக்கம். ஒரு நாள் அவளை அவள் சித்தி வீட்டிற்கு கூட்டி செல்லும் போது, என் கையை பிடித்துக்கொண்டாள்.  என் முகத்துள் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தாள். ஒன்றுமே நடக்காதது போல் நான் நடந்தேன். "நான் ஒன்னு சொல்லட்டுமா?" என் முகம் பார்த்து கேட்டாள்.

"என்ன சொல்லு" சாலையை நேராக பார்த்துக்கொண்டு நான்.

"நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? எனக்கு உங்கள பிடிச்சிருக்கு" இப்போது அவள் முகத்தை மெதுவாக பார்க்கிறேன். வெட்கத்தில் கீழே குனிந்தாள். ஒரு பெண் வெட்கப்படுவதை, ஏன் ஒரு பெண்ணையே இப்போது தான் பார்க்கிறேன்.

"என்கிட்டே அப்படி என்ன இருக்குன்னு என்ன பிடிக்குது உனக்கு?"

"தெரியல, ஆனா உங்கள பிடிக்கிறது, நீங்க தான் வேணும்னு மனசு சொல்லுது" - திடீரென்று மரியாதையாக பேசினாள். அங்கு அவள் நிற்க வில்லை, அவள் உருவில் என்னை வேண்டாம் என்று சொன்ன பெண்களின் சோக உருவம் தான் எனக்கு தெரிந்தது. அவர்கள் சோகமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. மேலும் அவர்களை வாழ்க்கை முழுதும் அழ வைக்க எண்ணினேன். 

அவள் சித்தி வீடு வந்துவிட்டது. "நான் வரேன்" என்று வேகமாக கிளம்ப நினைத்தேன்.

"ஏதாவது சொல்லிட்டு போங்க" ஏக்கமாக கேட்டாள்.

"நீ சொல்றதுல எனக்கு விருப்பம் இல்ல விஜி. என்னால உன்ன வச்சு நல்ல வாழ முடியாது. அதே மாதிரி, நம்ம பழக்கம் காதலாக இருக்கும்னு நான் எதிர்பாக்கல. நீ தப்பா நெனச்சுகிட்டா ஐயாம் சாரி.." - அவள் முகத்தில் என்ன விதமான உணர்ச்சி வருகிறது என்று பார்த்தேன்.

ஒன்றுமே சொல்லாமல் ஒரு விரக்த்தியான சிரிப்போடு உள்ளே சென்றாள். என்னை வேண்டாம் என்று மறுத்த பெண் வர்கத்திற்கு, நான் இன்று வேண்டாம் என்று கூறி என் திமிரை காட்டி விட்டேன். மனதில் ஒரு ஆனந்தம். விஜி போன சோகம் இருந்தாலும் இந்த ஆனந்தம் பரமானந்தமாக இருக்கிறது. அதே OMR-ECR ரோடில் சென்றேன். கலைஞர் கருணாநிதி சாலை. எனக்கு இப்போது கருணாநிதியை ரொம்ப பிடித்தது.. 

மறுநாள் காலை விடிந்ததும் மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். அவள் போன் பண்ணினால், நான் அட்டன்ட் செய்ய வில்லை. 'dont disturb' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். எனக்கு இதெல்லாம் தவறு என்று தெரிந்தாலும் சந்தோசமாக இருந்தது. எனக்கு பிடிக்காத பெண் இனத்தை பழி வாங்கிய ஒரு திருப்தி என்று சொல்லலாம். அன்று முதல் நான் ஷூட்டிங் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்தேன். ஒரு நாள் பொழுது போகாமல் செய்தித்தாள் எடுத்து வாசித்தேன். அந்த செய்தி என் கண்ணில் பட்டது. "சோழிங்கநல்லூரில் புதுமுக நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா?"

அந்த சேதியை படித்தவுடன் எனக்கு தோன்றியது, 'என்னை அன்று ஒருத்தி வேண்டாம் என்று சொன்னபோதே நான் இப்படி ரோசக்காரனாய் செத்துப்போயிருந்தால் இன்று இவள் செத்திருக்க மாட்டாள். என் காதல்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த எல்லாமே என் ஈகோ தான். என்னிடம் ஈகோ இருந்தது காதல் இல்லை,  ஆனால் இதோ இவளது ரோசமான ஈகோவிலும் காதலே நிரம்பி வந்து என்னை மீண்டும் களவாடத்துடிக்கிறது. ரோசக்காரி நான் இல்லாமல் இருந்துவிடுவாள? மாட்டாள். இதோ என்னை களவாடிச்செல்கிறது அவளின் காதல். நான் மேலே பறக்கின்றேன். என் கண்கள் விட்டத்தைப்பார்த்து லேசாக மூடுகின்றன, கையில் குளிர்ச்சியை உணர்கிறேன், என் அறையில் ரத்த வாசனை..

முத்தமிழுடன் நான்காவது தமிழ் - அறிக்கைத்தமிழ் - முத்தமிழ் அறிஞரின் முத்தான ஆயுதம்....

Friday, January 21, 2011

ஆறாம் வகுப்பில் இருந்தே "தமிழ் மூன்று வகைப்படும், அவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழாகும்" என்று மனப்பாடம் செய்ய வைத்தும் மண்டையில் கொட்டியும் எனக்கு தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் விவரம் தெரிய ஆரம்பித்தப்பிறகு இதனோடு சேர்த்து இன்னும் ஒரு தமிழ் இருப்பதாகவே எனக்குப்படுகிறது. அது தான் அறிக்கைத்தமிழ்.

இயல் தமிழுக்கும் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் இன்னார் தான் வழிகாட்டி என்றோ, இவர் தான் உருவாக்கியர் என்றோ கூறமுடியாது. ஆனால் இந்த அறிக்கைத்தமிழை உருவாக்கியவர், செயல்படுத்துபவர், உயிர்ப்போடு வைத்திருப்பவர், ஏகபோக உரிமை பெற்றவர் (வேறவேற ஆள் இல்லை, ஒருத்தர் தான்) நமது கலைஞர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் முதல்வர் (ஷெப்பா... முடியல, எத்தன பட்டம்?) கருணாநிதி.

முத்தமிழுக்கு இருக்கும் விளக்கம் போல இந்த நான்காவது தமிழுக்கும் விளக்கம் உள்ளது. இயல் தமிழின் இயல்பான நடையைக்கொண்டு நாடகத்தமிழ் பாணியில் கற்பனைக்கு எட்டாத விசயங்களை நாராசமாய் கூறுவது தான் இந்த அறிக்கைத்தமிழ் எனப்படுவது.

சரி, இந்த அறிக்கைத்தமிழ் எப்படி தோன்றியது?

அறிக்கைத்தமிழுக்கு முன்னோடி, மேடைத்தமிழ். இதை பிரபலப்படுத்தி, ஒரு பெரிய புரட்சியே செய்தவர் அறிஞர் அண்ணா. மேடைத்தமிழில் ஒன்றும் பெரிதாக  ஆக்கப்பூர்வமாக இருக்காது. இது நாடகத்தமிழைப்போல் ஒரு நாடகமே. நடிகர்களுக்கு பதிலாக அரசியல்வாதிகள் நடிப்பார்கள். மேடை நாடகம் எப்படி கற்பனையோ, அதே போல் மேடைத்தமிழும் கற்பனை தான். என்ன ஒன்று நாடகத்தமிழை விட அதீத கற்பனையாக இருக்கும். ஆனால் எல்லாமே நீங்கள் நம்பும் படி இருக்கும். உண்மை என்று நம்பி அவர்களுக்கு ஓட்டு குத்தியவர்களை, அவர்கள் குனிய வைத்து குத்தினார்கள். அப்படிப்பட்ட கும்மாங்குத்துக்கு மிகச்சிறந்த உதாரணம், மேடையில் அறிஞர் அண்ணா, "எங்களுக்கு வாக்களித்தால் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்" என்று சீறினார் (பொடி போட்டு மூக்கைத்தான் சீறினார், மக்கள் தான் அந்த சீற்றத்தை வேறமாதிரி எடுத்துக்கொண்டார்கள்). கடைசியில் அந்த அலங்கார மேடைத்தமிழ் தேர்தலில் வென்றது. 'நமக்கெல்லாம் ஒரு படி அரிசி உண்டு' என்று நம்பிய மக்களுக்கு இன்னொரு மேடையில் அதற்கு பதில் கிடைத்தது.
"ஒரு பிடி நிச்சயம் ஒரு படி லட்சியம்"
இந்த மாதிரி எகனை மொகனையில் மேடையில் பேசி மக்களை ஏமாற்றி வந்ததே மேடைத்தமிழ் எனப்பட்டது.

அரசியில் கூட்டங்களுக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாக விடுத்து மக்களும் செய்தித்தாளுக்கு மாறினார்கள். அப்போது தான் மேடைத்தமிழும் அறிக்கைத்தமிழாக உருமாறியது. அண்ணாவின் பட்டறையில் சம்மட்டி அடிக்கேன்றே தேர்ந்தெடுத்து தயாரிக்கப்பட்ட கருணாநிதி தான் இதை சினிமா நடிகர் போஸ்டர் மாதிரி பேமஸ் ஆக்கினார். பேச்சாக மேடையில் இருந்த எகனை மோகனை எழுத்தாக செய்தித்தாளில் அறிக்கையாக வந்தது. அவர் எழுதும் அறிக்கைக்காகவே மக்கள் செய்தித்தாள் வாசித்தனர். அனல் கக்கும் வார்த்தைகளை அள்ளிவீசுவார் ஆளும் கட்சியின் மீது (13 வருட வனவாசத்தின் போது தானே வீறு கொண்டுப்பாயும் வேங்கையாக அறிக்கைப்போர் செய்தார்). ஆனாலும் அவரை வாசித்து விட்டு தேர்தல் என்று வரும் போது மக்கள் என்னமோ அவரை மறந்துவிடுவார்கள். 

அறிக்கைத்தமிழ் அவரை காப்பாற்றியதோ இல்லையோ, ஆண்டவன் எம்.ஜி.யாரின் மரணம் மூலம் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தான். அதற்குப்பிறகு ஒரு முறை மாற்றி ஒரு முறை என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்தார். இவருடைய அறிக்கைகள் இந்த காலகட்டத்தில் தான் தாறுமாறாக கடமையை செய்தன. ஆளும் கட்சியாக இருக்கும் போது எதிர் கட்சியை தூற்றும், எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சியின் தலைவியை ஒரு மஞ்சள் பத்திரிகை அளவிற்கு கேவலமாக அசிங்கப்படுத்தும். 

சினிமாக்காரர்களைப்பற்றி அறிக்கை என்றால் "நானும் ஒரு சினிமாக்காரன். இவர்களோடு இருக்கும் போது தான் என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது" என்பார்.
ஹரிஜன மக்களைப்பற்றி என்றால் முந்தைய பத்தியில் சினிமாக்காரன் என்று உள்ள இடத்தில் தாழ்த்தப்பட்டவன் என்று மாற்றி படிக்கவும். இது தான் இவரின் கொள்கை அறிக்கை எல்லாம்.

தமிழ் தமிழ் என்று உயிரை விடும் இவரின் அறிக்கைகள், கைக்கெட்டும் தூரத்தில்  தமிழனின் உயிர் போகும் போது மும்முரமாக டில்லிக்கு தந்தி கொடுக்கும் (நாட்டுப்பணி முக்கியம் அல்லவா?)
ஆனால் 'கழகமே குடும்பம்' 'குடும்பமே கழகம்' என்று குழப்பிக்குழப்பி பேசி மந்திரிப்பதவிக்கு மட்டும் தள்ளாத வயதிலும் அவசரமாக டில்லி சென்று தேவைப்படும் துறையை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் உயிராக காட்டிக்கொளும் தமிழனுக்கு தந்தி மட்டும் தான்.

பிறர் ஆட்சியில் ஊழல் நடந்தால் "பாரீர் கொடுமையை, நாட்டின் சீரழிவை" என்று கட்டுரை நடையில் கவிதை ஒன்று வரும். அதே இவர் ஆட்சியில் நடந்தால் "தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் மந்திரியாக இருந்தால் இப்படி பாடு படுத்தலாமா?" என்று சாக்கடை மனம் வீசும். 

"ஒருவரால் இவ்வளவும் செய்ய முடியுமா?" என்று எழுதும் பேனா, மறுநாளே அதை மாற்றி எழுதும். வியாபாரப்போட்டி வந்தாள் சொந்தத்தையே தூக்கி எறியும், மந்திரியாக இருந்தாலும் மண்டியிட வேண்டும் தாத்தாவிடம். வியாபார பேரம் முடிந்த உடன் அறிக்கை வரும் "கண்கள் பணித்தது, இதயம் இனித்தது" என்று. (நாக்கில் தான் எனக்கெல்லாம் இனிக்கும் இவருக்கு மட்டும் இதயத்தில் தான் இனிக்கும். ஓவர் சுகராக இருக்குமோ? என்னே அறிக்கைத்தமிழின் மகிமை?!)


தேர்தலில் தோற்றால் மக்களை கேவலமாக சாடி அறிக்கை வரும். அதே ஜெயித்தால் "எங்கள் திட்டத்தின் வெற்றி" என்று அவர்களே அவர்களை பாராட்டி அறிக்கை வரும். அறிக்கைத்தமிழில் பகுத்தறிவும் ஒரு காமடி பீசாக வரும். 

"தூரத்தில் இருந்து பார்த்தாலும் மஞ்சள் வண்ணம் பளீர் என்று தெரியும்; அதனால் தான் நான் மஞ்சள் வண்ண துண்டு அணிகிறேன்" என்பதில் இருந்து தஞ்சை பெரியகோயிலின் புறவாசல் வழியாக வருவது வரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நொண்டி சாக்கு கண்டிப்பாக இருக்கும் இந்த அறிக்கைத்தமிழில்.

தீபாவளிக்கு வாழ்த்து வராது, அதுவே பகுத்தறிவுக்கு உட்பட்ட ஈஸ்டர் போன்ற திருவிழாவிற்கு வாழ்த்து வரும். மக்களும் மழுமட்டைகள் போல எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு எருமை மாடு போல் இருப்பார்கள். தேர்தலில் தோற்பீர்கள் என்று கருத்துக்கணிப்பு வந்ததும் இவர் விட்ட அறிக்கை தான் உலகப்புகழ் பெற்றது.
"2ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி இலவச நிலம், இலவச வேலை (ஓசில காசு வந்தா அது இலவச வேலை தானே?!)" என்று ஒரு வெயிட்டான அறிக்கை வந்தது. என் வயசுப்பசங்கள் எல்லாம் "girl friend இல்லாத இளைஞர்களுக்கு இலவச girl friend" என்று அறிக்கை வராதா என ஏங்கினோம். செயலில் மட்டுமே ஏமாற்றும் இவர் இந்த விஷயத்தில் எங்களை அறிக்கையிலே ஏமாற்றி விட்டார்.

'அவர்கள் டிவி கொடுப்பதே வியாபாரம் பெருகத்தான். எங்கே, டிவி கொடுப்பவர்களை கேபிள் கனெக்சனும் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்' என்று பிற கட்சிகள் சொன்னாலும் நாம் காதில் வாங்கவில்லை. ஆனால் நமது அறிக்கைத்தலைவர் அதற்கும் ஓர் அறிக்கை விட்டார். "பசு தான் கொடுக்க முடியும் அதைக்கட்ட கயிறுமா கொடுக்க முடியும்?" என்று ஆதம்சிமித்தே ஆஆவென்று வாய் பிளக்கும் படி பொருளாதாரக்கேள்வி கேட்டார் நமது தானைத்தலைவர். டிவி என்றதும் நாமும் ஈஈஈஈ என்று இளித்துக்கொண்டு குத்து குத்தென்று குத்தினோம். டிவி யும் கொடுத்தார்கள். பார்ப்பதற்கு கரண்ட் மட்டும் தான் இல்லை, மற்ற எல்லாமும் இருந்தது. 

தேர்தலில் ஜெயித்தாலும் அறிக்கை மட்டும் குறைந்ததே இல்லை. கட்சியினரைப்பற்றி யாராவது உண்மையை எழுதினால், "என் குடுமபத்தைப்பற்றி ஏன் இப்படி எழுதுகிறார்கள்?" என்று அறிக்கையில் கண்ணீர் வடியும், சில சமயம் கோபமும் கொப்பளிக்கும். குடும்பம் முழுதும் கட்சியில் இருந்தால் அப்படித்தானே இருக்கும்?

சம்பந்தமே இல்லாமல் திடீரென்று ஒரு நாள் "என் பெயரில் இருக்கும் சொத்துக்கள்" என்று ஒரு அறிக்கை வரும். ஒரு அரசு அலுவலக பியூன் கூட அதை விட அதிக சொத்து வைத்திருப்பான். 'குடும்பத்துல இருக்குற எல்லாரு சொத்துக்கணக்கையும் காட்டுங்க" என்று யாரவது கேட்டால், ஒரு இரண்டு நாளைக்கு அறிக்கைக்கு லீவு வந்து விடும். மக்கள் ஓரளவு உஷார் ஆனால், அறிக்கை 1800 களுக்கு சென்று விடும் 'நான் ஒரு கீழ்ஜாதி, அதனால் தான் என்னை யாரும் மதிப்பது இல்ல, ....." அது இதுவென்று ஏதேதோ கிடக்கும் அந்த அறிக்கையில். 

இந்த அறிக்கைத்தமிழைப்பற்றி தெளிவாக தெரிந்தாலும் இன்னமும் தமிழன் காத்துக்கொண்டு தான் இருக்கிறான், இவரின் இந்த வருட தேர்தல் அறிக்கையில் என்னென்ன இலவசங்கள் வரும் என்று. சொரணை இருக்கும் தமிழன் என்றால், அவன் என்ன செய்வான் தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் வரும் தேர்தல் முடிவு வந்தவுடன் சொல்கிறேன்...

ஆடுகளம் - தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் தவறான மதுரை புரிதல்..

Saturday, January 15, 2011

ரிலீசான முதல் நாள் நான் பார்த்த எந்தப்படமும் எனக்குப்பிடித்ததில்லை (உ.ம். மதுர, சச்சின், ஆழ்வார், பையா, அயன், சுறா, வேட்டைக்காரன், வில்லு, அழகிய தமிழ் மகன், மேலும் பல விஜய் அஜித் படங்கள்). இந்தப்படங்கள் முதல் நாள் மட்டும் அல்லாது என்று பார்த்திருந்தாலும் எனக்கு பிடித்திருக்காது. இதனாலேயே நான் முதல் நாள் படம் பார்ப்பதை சென்டிமென்ட்டாக தவிர்த்து வந்தேன். ஆனால் என் சென்டிமென்ட்டை சுக்குநூறாக்கிய படங்கள் இரண்டு. ஒன்று தலைவரின் எந்திரன், மற்றொன்று ஆடுகளம். சன் பிக்சர்ஸ்காரர்கள் உருப்படியாக கொடுத்திருக்கும் மற்றொரு படைப்பு.

எல்லாமே சரியாக அமைந்திருக்கும் படம். பொல்லாதவன் படத்தை ஒட்டிய அதே திரைக்கதை என்று பொல்லாதவனின் சாயல் இருந்தாலும் படம் ரசிக்கும் படியாகவே உள்ளது. பாடல்கள், தனுசின் நடிப்பு (cock giving என்று சொல்லும் இடம், இடைவேளை சேவல் சண்டை காட்சியில் சேவலை விடும் போது அவர் கொடுக்கும் ஒரு பார்வை, அருமை), வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட ஹீரோயின் டாப்சி (ஒரே குறை, அவருடைய நடிப்பு  inversely proportional to அவரது கலர்) என்று இரண்டரை மணி நேரம் உக்கார்ந்து ரசிக்கப்போதுமான அம்சங்கள் உள்ள படம். ஆனால் இப்படிப்பட்ட மதுரை மண் சார்ந்து எடுக்கப்படும் படங்கள் மதுரை என்ற நகரை எவ்வளவு அசிங்கமாக, அந்த மக்களை எவ்வளவு கேவலமாகவும் கொரூரமாகவும் சித்தரிக்கிறதோ அதையே தான் ஆடுகளமும் செய்திருக்கிறது.

மதுரையை மையமாக வைத்து மிகப்பெரிய வெற்றி அடைந்து இந்த சம்பிரதாயத்திற்கு அடிகோலிய படம் காதல். இதற்குப்பின் பல படங்கள் மதுரையை வைத்து வந்து விட்டாலும், அவற்றில் பல விஷயங்களில் ஒரே சாயல் தான் உள்ளது. ஆனால் இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் அவை பெரும்பாலும் மதுரையை தவறாக சித்தரிப்பதாகவே உள்ளது.

இப்படிப்பட்ட மதுரையை மையமாக வைத்து வரும் படங்களால் அறியப்படும் முதல் செய்தி, "மதுரையில் இருப்பவர்கள் நம்பிக்கை துரோகிகள்". எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் கோபக்காரர்களே தவிர நம்பிக்கை துரோகி என்று ஒருவரையும் காட்ட முடியாது. பழக்கத்திற்காக எதையும் செய்யும் மக்கள் அவர்கள். துரோகம் செய்ய அஞ்சுபவர்கள். சுப்ரமணியபுரம் படத்தில் இந்த விஷயம் ஒத்துக்கொள்ளும் படி இருந்தது. மற்ற  அனைத்து மதுரை படங்களிலும் கொஞ்சம் ஓவர் தான்.

அவர்களைப்பற்றி காட்டப்படும் இன்னொரு விஷயம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள், sentimental/emotional idiots, ரவுடித்தனம் செய்பவர்கள். அதாவது சமுதாயத்தில் எதெல்லாம் கெட்டது என்று சொல்லப்படுகிறதோ அதையெல்லாம் செய்பவன் தான் மதுரையில் நிரம்பி இருக்கிறான் என்று தான் இன்றைய சினிமாக்கள் காண்பிக்கின்றன. மதுரையில் இருப்பவனெல்லாம் ரவுடியா? மதுரை படம் என்றால் யாராவது யாரையாவது துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள் கத்தியோடு! சினிமாகாரர்களை பொறுத்தவரை மதுரை என்பது இன்னும் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலேயே இருக்கும் ஒரு லூசுத்தனமான கிராமம். இவர்கள் எல்லாம் கொஞ்சம் மதுரையை பற்றி தெரிந்து கொண்டு படம் எடுக்கலாம். மதுரையை சுற்றி இருக்கும் அனைத்து கல்வித்தலங்களும் பெயர்போனவை. இவர்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று எதை வைத்து காட்டுகிறார்கள்?

அதே போல் இன்னொரு மிக மோசமான செயல், மதுரை ஹீரோ என்றாலே அவன் அசிங்கமாக இருக்க வேண்டும், அல்லது அசிங்கமான ஹீரோ என்றால் கதை மதுரையில் நடக்க வேண்டும். கதாநாயகி அழகாக இருந்து அவனை உயிராக என்ன வேண்டும். இந்த அழுக்கு ஹீரோ அழகு ஹீரோயின் தியரிய கண்டுபுடிச்சவன் மட்டும் சிக்குனான்னா நாக்கப்புடுங்குற மாதிரி நாப்பத்தெட்டு கேள்வி கேக்கணும். எல்லா ஊரிலும் இப்போது பெண்கள் மிகவும் கவனத்துடனும் திட்டமிடலுடனும் தான் ஆண்களை தேர்வு செய்கிறார்கள். இவன் போவானாம் "I am love you" என்று சொல்லுவானாம், ராத்திரி பொரோட்டா வாங்கி குடுப்பானாம், அவளுக்கு அந்த அழுக்கு ஹீரோ மேல் காதல் வந்து விடுமாம். என்ன கொடும தமிழ் டைரக்டர்ஸ் இது?
இதே போல் மதுரை மக்களைப்பற்றி காட்டும் இன்னும் பல விஷயங்கள் 
*அவர்களுக்கு அறிவு மந்தம்
*குரலை உயர்த்தி கத்தி பேசுவார்கள்
*ஆண் - வெட்டி முண்டம் வீணா போன தண்டம்
*எவ்வளவு நல்ல பெண் என்றாலும் அந்த வெட்டி முண்டத்தை தான் லவ் பண்ணும்
*நடுத்தெருவில் அரிவாளை தூக்கிக்கொண்டு யாரையாவது துரத்துவது.
*பெண்கள் தாவணி போட்டுக்கொண்டு ஊரில் திரிவது (தாவணி என்ற ஒரு வழக்கொழிந்த ஆடை இருப்பது சினிமா பார்த்தால் மட்டுமே தெரிகிறது. இலவச டிவி இல்லாத இடத்தில் கூட நைட்டி எல்லாம் வந்துருச்சே பாஸ்?)
*கொலை என்பது மிகவும் மலிந்து போனதாக இருக்கும். 
*ஆண்கள் டவுசர் தெரியத்தான் லுங்கி கட்டுவார்கள்
*எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனை மதுரைக்காரன் "ஏய், என்ன?" என்று மிக துணிச்சலோடு நடு ரோட்டில் கேட்பான்.
*ஜாதி என்பது மதுரையில் மட்டுமே உள்ளது, உலகில் வேறு எந்தப்பகுதியிலும் ஜாதி என்ற ஒரு மனிதத்தன்மை அற்ற செயல் இருப்பதே இல்லை. மதுரைக்காரன் ஜாதி வெறி பிடித்தவன்.
*மதுரை ஹீரோ வேலைக்கே செல்ல மாட்டான். 
இப்படியெல்லாம் ஒரு ஊரைப்பற்றி தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல  படம் எடுக்கும் இயக்குனர்களை என்ன செய்வது? சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவள் சென்னைப்பெண், மதுரை என்னும் ஊர் அவளுக்கு சினிமாவில் மட்டுமே பரிச்சயம். ஆனால் அவள் சொல்கிறாள், அவளுக்கு பிடிக்காத ஊர் மதுரை தானாம். அங்கு ஒரே ரவுடிகளும், சல்லிப்பசங்களும் (இது அவள் கூறிய அதே வார்த்தை) இருப்பார்களாம். பெண் அடிமை மிக்க ஊராம். பாருங்கள் நமது இயக்குனர்கள் இந்த அழகான பண்பாடு மிக்க ஊரை எப்படி பிறரிடம் எடுத்து செல்கிறார்கள் என்று. 

நானும் காத்துக்கொண்டிருக்கிறேன், ஏதாவது ஒரு படம் மதுரையின் உண்மை முகத்தையும் அந்த மக்களின் வாழ்க்கையையும் காட்டாதா என்று...

பொய் சத்தியம்...

Thursday, January 6, 2011

எப்போதோ பெய்த மழையில் பதிந்த டிராக்டர் தடம் அப்படியே மாறாமல் கல் போன்று இருந்ததைப்பார்க்கும் போதே தெரிந்தது, இப்போது இந்த கிரௌண்ட்டில் சிறுவர்கள் யாரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று. இது உண்மையில் கிரௌண்ட் கிடையாது. ஊருக்கு நடுவில் இருக்கும் ஒரு சாதாரண தீப்பெட்டி ஆலை - ஸ்டார் மேட்ச் தீப்பெட்டி பாக்டரி. ஞாயிற்றுக்கிழமையானால் நாங்கள் இங்கு தான் கிரிக்கெட் விளையாட வருவோம். நாங்கள் என்றால் ராஜா அண்ணே, குமார் அண்ணே, அன்பு, கணேஷ், சிவாத்தம்பி பின்பு நான்.

பாக்டரியை சுற்றி இரும்பு வேளியும், உயரமான இரும்பு கேட்டும் இருக்கும். எல்லோரும் கேட்டின் மீது ஏறி உள்ளே  போவார்கள். நான் மட்டும் மேலே ஏறுவதற்கு பயந்து கொண்டு, வேளிக்கம்பி வழியாக புகுந்து செல்வேன். சட்டை கிழிந்தால் ஆச்சி அடிப்பார்கள் என்ற பயம் இருந்தாலும், மேலே ஏறுவதை விட இந்த பயம் பெரியதாக தெரியவில்லை. உள்ளே தரை முழுவதும் புற்களாக இருக்கும். பல அடி தூரம் சென்ற பின் தான் கட்டிடமே ஆரம்பிக்கம். இந்த பூகோள அமைப்பு தான் அந்த இடத்தை எங்களின் ஓவல் மைதானமாக்கியது. சுவற்றில் கரிக்கட்டையால் மூன்று கோடுகள் செங்குத்தாக போட்டு, அதன் மேல் இரு சிறு கோடுகள் போட்டால் எங்கள் ஸ்டம்ப் தயார். இது பாட் செய்பவனின் ஸ்டம்ப். பௌலிங் போடுபவனுக்கு சில அடி தூரம் தள்ளி இருக்கும் அந்த வேப்ப மரம் தான் ஸ்டம்ப்.

எனக்கு கிரிக்கெட்டில் சுத்தமாக எதுவும் தெரியாது. வீட்டில் இருந்தால், 'கூரை கடையில தேங்காய் சில்லு வாங்கிட்டு வா', 'உப்பு வாங்கிட்டு வா' என்று ஆச்சி ஓயாமல் வேலை சொல்லுவார் என்று பயந்து இவர்களோடு ஐக்கியம் ஆகிவிட்டேன். அவர்களும் என்னை ஆள் கணக்குக்காக வைத்திருந்தார்கள். பந்து வாய்க்காலில் விழுந்தால் நான் தான் எடுக்க வேண்டும், நான் தான் கடைசி பேட்ஸ்மேன். எனக்கு பௌலிங் கொடுக்க மாட்டார்கள், கொடுக்க மாட்டார்கள் என்பதை விட, என் திறமை அவர்களை அப்படி செய்ய வைத்தது. 
டாஸ் எல்லாம் போடுவது கிடையாது. யாரையாவது குனிய சொல்லுவார்கள்; பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன். 
என் முதுகுக்குப்பின்னால் விரல்களை மடக்கி 'இது யாருக்கு?' - குமாரண்ணே..
"சிவாத்தம்பிக்கு" - நான்..
"இது?"
"எனக்கு"
இப்படியே வரிசையாக ஐந்து பேருக்கும் சொல்லி முடித்து நிமிர்ந்து பார்த்தால், "டே ராமு நீ தான்டா லாஸ்ட் பேட்டிங்" என்பார்கள். 
'ச்சே, இந்த தடவையும் நாம கரக்ட்டா சொல்லலையே' என்று என் விதியை நொந்து கொண்டு பீல்டிங் செய்ய ஆரம்பிப்பேன்.
ஒன் பிச் கேட்ச், ஆப் சைடு மட்டும் தான் ரன், பந்து சுவரை தாண்டி வெளியே விழுந்தால் பேட்ஸ்மேன் அவுட் போன்ற மிக கஷ்டமான விதிமுறைகள் எல்லாம் உண்டு. LBW மட்டும் கிடையாது. ஏனென்றால் எங்கள் யாருக்கும் அது என்னவென்றே தெரியாது.

பந்து சுவரை தாண்டி வெளியில் போனாலும், லெக் சைடு சென்றாலும், சாக்கடைக்குள் விழுந்தாலும் நான் தான் வேகமாக சென்று எடுத்து வரவேண்டும். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன், 'பேசாம ஆச்சி சொல் பேச்சு கேட்டுக்கிட்டு கூரைக்கடைக்கு போயிருந்தா கூட இவ்வளோ அலைச்சல் இருந்துருக்காது. அடுத்த வாரம் எல்லாம் வெளாடவே வரக்கூடாது' என்று. ஆனால் மறுவாரம் ராஜாண்ணே வீட்டில் பொய் "அண்ணே மணி பத்தாகப்போகுது, வேமா வாங்கண்ணே ஸ்டார் மேட்ச்க்கு போவோம்' என்று அவர்களை இழுத்துச்செல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.

"ஒனக்கு சூடு சொரணையே கெடையாது தம்பி, போனவாரம் தான, சாக்கடைக்குள்ளலாம் கையை விட சொல்லுறாங்க, நான் போகமாட்டேன்னு சொன்ன? இப்போ அவைங்கள விட நீ தான் மொத ஆளா கெளம்புற?" என்று அம்மா குறைபட்டுக்கொள்வார்.
அன்றும் வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தோம். குமார் அண்ணே தான் பேட்டிங். யார் பால் போட்டாலும் விளாசிடுவார் விளாசி. அன்று ஆரம்பம் முதலே அவர் தான் பேட் பிடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் என்னை கருவிக்கொண்டிருந்தார்கள், அவர் பெயரை நான் ஒன்றாம் இடத்திற்கு சொல்லியதால். சிவாத்தம்பி பால் போட்டுக்கொண்டிருந்தான். ராஜாண்ணே ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தார். கணேஷும் அன்புவும் போர் லைனுக்கு பக்கத்தில் இருந்தனர். நான் நடுவில், எதற்கும் சம்பந்தமே இல்லாமல், கிரௌண்டில் நுழைந்துவிட்ட ஒரு பார்வையாளனைப்போல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

'ச்சே குமாரண்ணே எவ்வளோ அழகா பாட்டிங் பண்றாங்க, நமக்கு மட்டும் ஏன் பாடிங் வர மாட்டேங்குது?' என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது தான் ராஜாண்ணே குரல் கேட்டது..

"டே ராமு அந்த பந்த புடிடா" - நாய் துரத்தும் போது 'காப்பாத்துங்க' என்று அபயக்குரல் எழுப்புவது போல் இருந்தது அவர் கத்தும் தொனி.

நான் தரையில் தேடிக்கொண்டிருந்தேன். சிவாத்தம்பி கத்தினான், "டே மயிரு உன் மண்டைக்கு மேல பாருடா"

'ஐயோ மண்டைக்கு மேலயா?' என்று பயந்து கொண்டே மேலே பார்த்தேன். ஆமாம் அந்த சிவப்பு நிற ரப்பர் பந்து, சினிமா கிராபிக்ஸில் துப்பாக்கியில் இருந்து வரும் குண்டு போல, என்னை நோக்கி அசுர வேகத்தில் வந்தது. 

"ஹி ஹி ஹி" குமாரண்ணே நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தார்.

"அவுட்சாட்" என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஆனந்தமாக ஓடிவந்தான் சிவாத்தம்பி. 

"டே, உனக்கு இத விட வேற கேவலம் தேவ இல்லடா. ராமு உன்ன கேட்ச் புடிச்சி அவுட் ஆக்கிருக்காண்டா. போ போ அந்த மூலைல பொய் உக்காரு" ராஜாண்ணே தன் பங்குக்கு குமார் அண்ணனை வெறுப்பேத்தினார்.

"எவம்டே அங்க? ஒருவாட்டி சொன்னா அறிவு வராதா? வாராவாரம் இதே ரோதனையா போச்சு" - பாக்டரி வாட்ச்மன் வைதுகொண்டே கையில் ஒரு குச்சியுடன் வந்தார்.

அன்றைய ஆட்டம் முடிந்தது. அவர் கையில் சிக்காமல் ஒரு வழியாக தப்பித்து ஓடி எங்கள் தெருவிற்குள் வந்தோம். தெரு இன்று கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது. ஆண்களும் பெண்களும் தங்கள் வீட்டிற்கு வெளியிலும் ராஜாண்ணே வீட்டை சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாண்ணே வீட்டில் ஒப்பாரி சத்தம் கேட்டது.

ராஜாண்ணே அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். ஒரு சனிகிழமை காலையில் எங்கள் கிரிக்கெட் டீம் காலைக்கடனை கழிக்க புறப்பட்டது. இந்த ஒரு மாதத்தில் யாரும் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை. நாங்கள் எல்லோரும் ராஜாண்ணேனும் விளையாட வர வேண்டும் என எண்ணினோம்.

"நாளைக்கு வெளாட போவுமாடா?" ராஜாண்ணனே கேட்டார். எல்லோருக்கும் சந்தோசம். 
"ஹ்ம்ம் இப்போ ராமுவும் நல்ல பிளேயர் ஆகிட்டான்" என்று குமாரண்ணே சொன்னார்.

"எப்போரிந்து?" - ராஜாண்ணே..

"அன்னைக்கு என்ன கேட்ச் புடிச்சான்ல? அப்பொல இருந்து!" - எனக்குப்பெருமையாக இருந்தது.

"ஆமா, அது கைக்கு வந்த கேட்ச்சு, பச்ச புள்ள கூட புடிச்சுரும் அத" என்று அடஹி மிக சாதாரணமாக சொன்னார் ராஜாண்ணே.
"அதெல்லாம் இல்லண்ணே. அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சு தெரியுமா? ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன்" - என் வாழ்நாள் சாதனையைப்போல் அதை விளக்க முயற்சித்தேன்.

"அது உனக்கு உயரமாடா? நெஞ்சு உயரத்துக்கு கூட வரல"

"பொய் சொல்லாதீங்கண்ணே. பிடிச்ச எனக்கு தான் தெரியும் அது எவ்ளோ உயரத்துல இருந்து வந்துச்சுன்னு"

"டே பந்து வருதுன்னு உனக்கு சொன்னவனே நான் தான். எனக்கே சொல்றியா நீயி?"

"அண்ணே சத்தியமா சொல்றேண்ணே, பந்து அவ்ளோ உயரம் வந்துருக்கும்" என்று பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தின் உயரத்தை சுட்டிக்காட்டி சொன்னேன்.

"நானும் சத்தியமா தான்டா சொல்றேன், அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சி. ஏதோ ஒரு கேட்ச் புடிச்சாலும் புடிச்ச, இந்தளவுக்கு ஆடுறியே டா"

அவரின் இந்த பேச்சு எனக்கு மிகுந்த கோபம் ஊட்டியது. "எங்க என் கைல, உங்க படிப்பு மேல சத்தியம் பண்ணுங்க, அது நெஞ்சு உயரத்துக்கு தான் வந்துச்சுன்னு?" கையை ராஜா அண்ணனை நோக்கி நீட்டினேன்.

"ஆமாடா, சத்தியமா அப்டி தான் வந்துச்சு" - அசால்ட்டாக சத்தியம் செய்து விட்டார் கொஞ்சமும் யோசிக்காமல், கொஞ்சமும் பயம் இல்லாமல்.

"நானும் சத்தியமா சொல்றேன் அது இந்த மரம் அளவுக்கு உயரமா வந்துச்சி." என் கையில் நானே சத்தியம் செய்து கொண்டு அதை காற்றில் ஊதி விட்டேன். எனக்கு நன்றாகத்தெரியும் அது உயரமாகத்தான் வந்தது. அப்படியே ராஜா அண்ணனையும் எச்சரித்தேன், "அண்ணே பொய் சத்தியம் செஞ்சா பெயில் ஆகிருவாங்கண்ணே"..

"அப்டியா? அப்ப போய் ஒழுங்கா படி. இல்லாட்டி பெயில் ஆகிருவ" என்று நக்கலாக சொல்லி சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு நான் ஒரு கேட்ச்யும் பிடிக்கவில்லை. முழுஆண்டுத்தேர்வு நெருங்கியதால் நாங்களும் அவ்வளவாக விளையாட செல்லவில்லை. பரீட்சை நெருங்க நெருங்க எனக்கு பயம் மிகவும் அதிகரித்தது. 'ஒரு வேளை பந்து உயரம் கம்மியாக தான் வந்திருக்குமோ?'. ஆனாலும் அது மிக உயரத்தில் இருந்து வந்ததாகவே எனக்கு ஞாபகம். ஒரு வேளை முதல் கேட்ச் என்பதால் அப்படியா? உயரமாக வந்தது என்று முழுதாக நம்பிய நான் இப்போது குழப்பத்தில் இருந்தேன்; உண்மையிலேயே அது உயர்மாகத்தன் வந்ததா என்று..

ராஜா அண்ணே எப்போதும் போல் அமைதியாக படித்துக்கொண்டிருந்தார். பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பமானது. பழையபடி எல்லோரும் மீண்டும் விளையாட ஆரம்பித்தோம். ஒரு நாள் காலை விளையாட போகும் போது, "டே ரிசல்ட் போட்டுட்டாங்கலாம்டா" என்று சிவாத்தம்பி சொன்னான். எனக்கு மிகவும் பீதியாகிவிட்டது. என்னைப்போன்று சுமாராகப்படிக்கும் பலருக்கும் தெரியும் ரிசல்ட் வரும் வரை விடுமறை நாள் எவ்வளவு கொடூரமாகவும் ராட்சசத்தனமாகவும் இருக்கும் என்று.

நான் ரிசல்ட் பார்க்கவே செல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிவாத்தம்பி வந்து சொன்னான் "டே ராமு நம்ம செட்ல ராஜா அண்ணன தவிர எல்லாரும் பாசுடா" என்று.

என் மனதில் அந்த சத்தியம் ஞாபகம் வந்தது. 'அப்போ நாம உயரத்துல வந்த பந்தத்தான் கேட்ச் பிடிச்சுருக்கோம்" என்று நினைத்துக்கொண்டேன். அதற்குப்பின் ராஜா அண்ணன் படிக்கவும் போக வில்லை, விளையாடவும் வர வில்லை. பெயிலாகிப்போனதால் நாங்கள் விளையாடச்செல்லும் அதே ஸ்டார் மேட்ச் பாக்டரியில் அவர் வேலைக்கு சென்று விட்டார். "அன்னைக்கு பொய் சத்தியம் பண்ணுனனாலதான் நீங்க பெயில் ஆகிட்டீங்க" என்று அவரிடம் என்னால் இப்போது வரை சொல்ல முடியவில்லை..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One