வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...

Tuesday, November 18, 2014

சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்?’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பவர் தான் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்பவர். இவர் ஒரு நாள் தன் வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டிருக்கிறார்.. அவருக்கு எதுவுமே ஆகவில்லை.. இதை அவர் சொன்ன போது முதலில் யாரும் நம்பவில்லை என்றாலும் அவர் மீண்டும் மின்கம்பியைத் தொட்டுக்காட்டிய போது தான் நம்பியிருக்கிறார்கள்.. ஊரில் இருக்கும் ஒரு டிரான்ஸ்ஃபார்மரில் கூட அவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.. மருத்துவர்கள் அவரை சோதித்து விட்டு இதற்கான காரணம் தெரியாமல் மண்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.. இப்போது அவரது கிராமத்தில் அவரை மின்சார மனிதன் என்று செல்லமாக அழைக்கிறார்கள்’ என்று ஒரு துணுக்கு எழுதி அதற்கு ‘மின்சார மனிதன்’ என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு வாரப்பத்திரிகைக்கு அனுப்புவாராம்..

25,30 ஆண்டுகளுக்கு முன் துணுக்குச் செய்திகளுக்காகவே பல பத்திரிகைகள் வந்தனவே? அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவாராம்.. ஒன்று பிரசுரிக்கவில்லை என்றால் இன்னொன்றுக்கு என்று வரிசையாக அனுப்புவாராம்.. ஏதாவது ஒன்றில் அவர் பெயர் போட்டு அதுவும் பிரசுரமாகி விடுமாம்.. உடனே ஊர் பூரா ”நான் எழுதுனது புக்ல வந்திருக்கு பாத்தியா?” என்று அதைக் காட்டி சந்தோசப்படுவாராம்.. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்று  ஒருவனோ, அவனுக்கு மின்சாரம் ஷாக் அடிக்காது என்பதோ எதுவும் உண்மை கிடையாது.. சும்மா கை போன போக்கில் எதையாவது எழுதி அனுப்புவாராம்.. அது பிரசுரம் ஆகிவிட்டால் போதுமாம்.. ஒரு முறை பிரசுரம் ஆனதும், அது கொடுத்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் இதே போல் லண்டனில் ஒரு கதை, ஆஸ்திரேலியாவில் ஒரு கதை என்று எதையாவது அனுப்பி தன் பெயரில் அவை பிரசுரம் ஆவதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்..

ஒரு விசயம் உண்மையா, பொய்யா, நடந்ததா, இல்லையா என்பதை விட நம் பெயரில் அது வெளிவந்து அதை ஊர் முழுக்க, உலகம் முழுக்க தமிழ் தெரிந்த அனைவரும் வாசிப்பது ஒரு பெருமை தானே? புகழ்ச்சி தானே? போதை கொடுக்கும் தானே? அந்தப் பத்திரிகைகளிடமும் அவற்றையெல்லாம் உண்மை தானா என்று சரி பார்க்கும் அளவிற்கு அப்போது  தொழில்நுட்பமும் கிடையாது, நேரில் பார்த்து வர வசதியும் கிடையாது.. அதனால் பெயர் வந்தால் போதும் என்கிற எண்ணத்தில் எழுதும் பல துணுக்கு எழுத்தாளர்கள் அப்போது இருந்தார்கள் என்றார்.. பின் போகப்போக எப்படி  அதில் இருந்து தான் வெளிவந்து ஒரு சீரியஸ் ரைட்டர் ஆனேன் என்றும், அதில் அவர் பெற்ற கஷ்டங்களையும் கண் கலங்க குறிப்பிட்டார்.. ஆனால் அவர் சீரியஸ் ரைட்டர் ஆன கதை இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை.. அதனால் நமக்குத் தேவையானதை மட்டும் உறிந்து கொண்டு கட்டுரைக்குள் வருவோம்.. 

திரு.பாமரன் துணுக்கு மாதிரி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிய சங்கதிகள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா? இப்போதும் அது போல் எங்கேயோ நீங்கள் தினசரி பார்ப்பது போல், அனுபவிப்பது போல் உணர்கீறீர்கள் தானே? ஹ்ம் உண்மை தான், அன்றாடம் நாம் பார்க்கும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் தான் அவை.. மோடி சொன்னார், அவங்க டாடி சொன்னார், அப்துல் கலாம் சொன்னார், சார்லி சாப்ளின் சொன்னார் என்று வரும் அட்வைஸ்கள், பொன்மொழிகளில் இருந்து, ஐஏஎஸ் கேள்விகள் என்கிற லேபிலில் வரும் சப்பைக் கேள்விகளும், அன்றாட விசயங்களைப் பற்றிய பொது அறிவு என்று அனைத்தும் வருகின்றன இந்த வாட்ஸ்-அப்பில்.. ஆனால் அவற்றில் 90% பொய்யாக இருப்பது தான் இதில் இருக்கும் பெரிய கடுப்பு.. ஐஏஎஸ் செலெக்‌ஷன் கமிட்டில இருக்குற மாதிரி தினமும் ஒரு ஐஏஎஸ் கேள்வி கேக்குறாய்ங்க வாட்ஸ்-அப்ல.. கொடுமைடா சாமி.. அந்தக் கேள்விகள் தான் ஐஏஎஸ்சில் கேட்கப்படும் என்றால் எங்கள் மார்க்கஸ் கூட இன்று ஒரு ஜில்லா கலெக்டர் ஆகியிருக்கும்..

ஒரு காலத்தில் நாம் தகவல்கள் அறிந்து கொள்ள புத்தகங்களை மட்டும் தான் நம்பிக்கொண்டிருந்தோம்.. 25 வருடத்திற்கு முன் ”பிரேசில் கிராமத்தில் ஒருவனுக்கு மின்சாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, அவன் மின்சார மனிதன் என்று அழைக்கப்பட்டான்” என்கிற செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டால் நாம் நம்பிக்கொண்டும், அதை பிறரிடம் ஆச்சரியமாகக் கூறிக்கொண்டும் தான் இருந்திருப்போம், வேறு வழி இல்லை.. ஏனென்றால் அன்றையக் கால சூழல் அப்படி.. ஆனாலும் அப்போது சில அன்றாட, முக்கியமான விசயங்களை எந்த பத்திரிகையும் பொறுப்பில்லாமல் பொய்யாகத் தந்ததில்லை என்றே கணிக்கிறேன் என் ஞாபகத்திற்கு எட்டிய வரை..

இப்போது நாம் இருப்பதோ தொழில்நுட்ப யுகம்.. உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது.. நமக்குப் பிடித்த பாடலின் வரி மறந்து விட்டால் அதை தெரிந்து கொள்வதில் இருந்து, சமையல் ரெசிப்பி, பள்ளிக்கூட எதிரி, கல்லூரி நண்பன், நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, சினிமா, அரசியல் என்று எதையும் செல்ஃபோனில் பார்த்துவிடலாம்.. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று நொடியில் தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளத் தான் நாம் முயல்வதே இல்லை; சோம்பேறித்தனம்.. அதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.. கீழே நான் கொடுத்திருக்கும், எனக்கு வந்திருந்த சில வாட்ஸ்-அப் மெசேஜ்களைப் பாருங்கள், உங்களுக்கும் அவை வந்திருக்கலாம்..

1. ”இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.. அப்படி செய்தால் எண்ணி ஏழாவது நாளில் 12 மணி அடிக்கும் போது இந்தியா வல்லரசாகி விடும்.. ஒரு ரூ = ஒரு $ ஆகிவிடும்.. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? தேச பக்தி இருக்கும் எவனும் இதைச் செய்வான்” என்று செண்டிமெண்ட்டாக ட்ச் செய்து கீழே எதெது இந்தியப் பொருள், எதெது அந்நியப் பொருள் என்று பெரிய லிஸ்டே இருக்கும்..

2. கையில் தீக்காயம் பட்டுவிட்டால் தண்ணீர் ஊற்றுவதோ, துணியால் சுற்றி அணைப்பதோ கூட சமயங்களில் காயத்தை பெரிதாக்கலாம்.. வீட்டில் மாவு இருந்தால் தீக்காயத்தில் அதைக்கொட்டுங்கள்.. இது ஒரு வியட்நாம் மருத்துவ முறை.. காயத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் தழும்பே கூட மறைந்து விடும்.. என் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகனின் பெரியம்மா பெண் இப்படித்தான் செய்தாள்.. இப்போது அவள் கையில் தீப்பட்ட சுவடே இல்லை..

3. நீங்கள் ஸ்விஸ் பேங்கில் போட மறந்து போய், பாழாய்ப் போன இந்திய நாட்டு வங்கியில் போட்ட உங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்மில் நடு இரவில் நிற்கிறீர்கள்.. அப்போது எவனோ ஒருவன் உங்களை கத்தியை வைத்து மிரட்டுகிறான் உங்கள் காசையெல்லாம் கொடுக்கச்சொல்லி.. உடனே நீங்கள் பயப்படாமல், ஆழமாக உங்கள் மூச்சை இழுத்துக்கொண்டு, தீர்க்கமான முடிவுடன் உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யுங்கள்.. ஏற்கனவே ஏடிஎம்முடன் கல்யாணம் செய்து வைக்கப்பட்டிருக்கும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உங்கள் ஏடிஎம்மிற்கு அந்த நட்டநடு ராத்திரியிலும் போலீஸ் விரைந்து வந்து, சடுதியில் செயல்பட்டு அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள்..

4. ஃப்ரூட்டி கம்பெனியில் எய்ட்ஸ் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறுக்கன், எய்ட்ஸ் கிருமி இருக்கும் அவன் ரத்தத்தை ஃப்ரூட்டியில் கலந்து விட்டான்.. அதனால் யாரும் ஃப்ரூட்டி குடிக்காதீர்கள்..

போதும் உதாரணம் என்று நினைக்கிறேன்.. இவை அனைத்தும் உங்களுக்கும் வந்திருக்கிறது தானே? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், இதில் எத்தனையை நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்தீர்கள்? இது அத்தனையுமே பொய்.. வீட்டின் வரவு செலவு கணக்கைப் பார்க்கும், லேசான common sense இருக்கும் ஒருவனே சொல்லிவிடுவான் முதல் விசயம் சத்தியமாக சாத்தியம் இல்லை என்று.. அதிலும் 100% இந்தியப் பொருள் என்று எதையும் இன்றைய LPG பொருளாதாரத்தில் சொல்லிவிட முடியாது.. கடைசி விசயமும் அப்படித்தான்.. எய்ட்ஸ் கிருமி இப்படியெல்லாம் எளிதாக பரப்பப்பட வாய்ப்பில்லை என்கிற சிறிய பொது அறிவு போதும்.. ஆனாலும் ஃப்ரூட்டி குடிக்காமல் இருப்பது நல்லது தான் என்பதால் ஒரு வகையில் அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் மற்ற விசயங்களின் சீரியஸ்னஸ் தெரியாமல் ஃபார்வேர்டு செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்..

நிஜமாகவே தீக்காயம் பட்ட ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் போகாமல் கையில் மாவை மட்டும் போட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? செப்டிக் ஆகி கையையே எடுக்க வேண்டியது தான்.. தீப்புண்ணிற்கு கையில் மாவு போடுவது சரியான முறை அல்ல என்பது கூகிளில் நீங்கள் அரை குறையாகத் தேடினாலே பதில் தெளிவாகக் கிடைத்துவிடும்.. அடுத்தது ஏடிஎம் விசயம்.. அந்த மெசேஜில் சொன்ன பாயிண்ட் சரி என்றே வைத்துக்கொள்வோம்.. எனது பின் நம்பர் 2222, அல்லது 7887 என்றோ இருந்தால் நான் என்ன செய்வது? சரி ரேண்டமாக 2591 என்கிற நம்பர் இருக்கும் ஒருவன் ஏடிஎம்மில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவகர் அனுப்பிய செய்தியை உண்மை என்று நம்பி, 1952 என்று தலைகீழாக அடித்துவிட்டு போலீசுக்காக காத்திருந்து கத்திக்குத்து பட்டு செத்துப்போனால் என்ன செய்வீர்கள்? மறுநாள் அதையும் வாட்ஸ்-அப்பில் அனுப்புவோம், அபப்டித்தானே? ஒரு செய்தியை, அதுவும் பின்விளைவுகள் மோசமாக ஏற்படும் சாத்தியம் உள்ள செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும் என்கிற அக்கறை கிஞ்சித்தும் நமக்கு இல்லையே?.. 

ஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்பும் நம் ஒவ்வொருவரையும் ஒரு மீடியாவாக மாற்றியிருக்கிறது.. நம் கருத்துக்களைப் படைக்கிறோம், சினிமா, அரசியலைப் பகடி செய்கிறோம்.. பத்திரிகைகள், செய்திச்சேனல்கள் போல் நாமும் ஹாட் நியூஸை முதன் ஆளாகக் கொடுக்க பதைபதைக்கிறோம்.. பந்தாவாக ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கி, 3G நெட் பேக் எல்லாம் போட்டுக்கொண்டு, வருபவர் போகிறவருக்கெல்லாம் வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்து, ஊர் ஞாயம் உலக ஞாயம் பேசும் நமக்கு, அதில் வரும் செய்தியின் உண்மைத் தன்மையை கூகிளில் 5நிமிடம் தேட மட்டும் கறி வலிக்கிறது.. ஒரு செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, ஏன் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை? 

சமீபத்தில் என் தோழி ஒருத்தி ஒரு அழகான பெண்ணின் ஃபோட்டோவையும், ஒரு வாய்ஸ் மெசேஜையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தாள். அந்த அழகான பெண் வீட்டிற்கு கேஸ் ரிப்பேர் செய்ய வருவது போல் வந்து, மயக்க மருந்து கொடுத்து, வீட்டில் இருக்கும் சாமான்களைத் திருடி விடுவாள் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருந்தது.. அந்தப் பெண் அந்த ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதத்திலேயே தெரிந்தது அது அவள் வீட்டிலோ, அல்லது அவளுக்கு பழக்கமான இடத்திலோ யாரோ எடுத்த ஃபோட்டோ என்று.. அவள் கொடுக்கும் போஸிற்கும் அந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை. என் தோழிக்கும் இதைச் சொன்னேன், “உண்மையை அறியாமல் பகிராதே” என்று.. “எதா இருந்தா உனக்கென்ன? பிடிச்சா ஃபார்வேர்டு பண்ணு, இல்லாட்டி டெலிட் பண்ணு” என்றாள்.. “உன் ஃபோட்டோவ போட்டு ஃபார்வேர்டு பண்ணவா?” என்றேன்.. கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.. மறுநாள் தினகரனில் அந்தப்பெண்ணின் ஃபோட்டோவைப் போட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தியை அப்படியே போட்டிருந்தார்கள். உடனே என் தோழி என்னை அழைத்து, “நேத்து பெரிய வெண்ண மாதிரி சொன்ன? இன்னைக்கு பாரு பேப்பர்லயே போட்டிருக்கான்” என்று அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பினாள்.. 

அடுத்த இரண்டு நாளில் பார்த்தால் அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. அந்தப் பெண் பாவம் எங்கோ வடநாட்டில் கேஸ் கம்பெனியில் வேலை செய்பவள். உடன் வேலை செய்யும் எவனோ ஒருவன், ஏதோ ஒரு சொந்தக் காரணத்தால் அவள் ஃபோட்டோவைப் போட்டு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறான் என்று பின்பு தான் தெரிய வந்திருக்கிறது.. அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? சரி நாம் தான் கூறுகெட்ட பாமர மக்கள், இந்த மீடியாவுக்கு என்னவாம்? ஒரு செய்தியைப் போடும் முன் ஆராய மாட்டார்களா, அது உண்மையா இல்லையா என்று? மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்னன்னைக்கு செய்தி வேண்டும். அது சரியோ தவறோ ஒரு ஹாட் நியூஸ் வேண்டும்.. கிடைத்ததைப் போடுவார்கள், மறுநாள் மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.. ஒருவர் தன் கையில் இரட்டை விரல்களைக் காட்டியதை மட்டும் வைத்தே, ஜெ.வுக்கு ஜாமீன் என்று அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் ஸ்க்ரோலிங் ஓட்டவில்லையா? அதற்கு எத்தனை சேனல்கள் மன்னிப்பு கேட்டன? மக்களாகிய நாமும் இதை மறுநாள் மறந்துவிடுவோம்.. ஞாபம் இருந்தாலும் கேட்க நமக்கென்ன அருகதை இருக்கிறது? நாமும் ஏடிஎம், மாவு, ஃப்ரூட்டி, என்று கண்டதையும் கிறுக்குத்தனமாக அவர்களைப் போல் பகிர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்? செய்தி நிறுவங்கள் பற்றி நான் சொன்னது ஒரு பானைச் சோறு தான், அதுவும் பழைய சோறு.. சுடு சோறு ஒன்றைக் கேளுங்கள், இன்டர்நேஷன்ல் லெவலில் நம் செய்தி நிறுவனங்கள் நாறிய கதை அது..

கேரளத்தைச் சேர்ந்த அருண் என்னும் நபர் நம் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.. அதாவது தனக்கு நாசாவில் ETயைப் பற்றி, அதாவது வேற்று கிரக ஜீவராசிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்திருப்பதாகவும், அதே நேரத்தில் உலகப்புகழ் பெற்ற MITயில் இருந்தும் டாக்ட்ரேட் படிப்புக்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. இது நடந்தது 2012 ஆகஸ்டில்.. கேரள சேனல்களும், மாத்ருபூமியும், The Hindu, The New Indian Express, Telegraph போன்ற ஆங்கில நாளேடுகளும் கவர் ஸ்டோரிகளாகப் போட்டுத் தள்ளின.. இவரின் பேட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளேடுகளிலும் வந்தன.. இதை எல்லாம் உண்மை என்று நம்பிய மத்திய மனிதவள மேம்பாட்டு மையமும் அந்தப் பையனுக்கு பாராட்டு விழா நடத்தியது.. அவனும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலமாக, தான் பிரதமர் மோடியை சந்தித்து அரைமணிநேரம் உரையாடியதாகவும், தேசத்தின் ஆராய்ச்சிக்கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்தே இருப்பதாக மோடி சொல்லியிருப்பதாகவும் கப்சா விட்டிருக்கிறான்.. நம் மீடியாக்களும் டைமிங்காக, ரைமிங்காக அவனைப் பற்றிய கட்டுரைகளைப் போட்டுத் தள்ளயிருக்கின்றன.. இரண்டு வருடங்கள் இதே சங்கதி ஓடிக்கொண்டிருந்தன கடந்த அக்டோபர் வரை..

கடைசியில் MITயில் இருக்கும் சில மலையாளிகள் மூலம் விசாரித்த போது அவனுக்கும் MITக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்திருக்கிறது.. நாசாவிலும் இந்தப் பையனைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.. பின் இவன் யாரென்று தேடிப்பிடித்து விசாரித்தால் இவன் சிறுவயதிலேயே அமெரிக்கா செல்லும் ஆசையில் இருந்தவனாம்... நண்பர்கள் எல்லாரும் வெளிநாடு செல்வதால், ஒரு வித ஏக்கத்தில் தானும் அப்படி கப்சா விட்டானாம்.. அவன் கப்சாவை எல்லாம் உண்மை என்று நம்பிய நம் நான்காம் தூண்களாக பத்திரிகைகள் அதை அச்சில் ஏற்றினவாம், இந்த ஜனங்கள் நாம் எதைச் செய்தி என்று கொடுத்தாலும் படிப்பார்கள் என்று.. ஆனால் அவனோ பூடானில் ஒரு கல்லூரியில் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.. நாசா, MIT, ராஜ்நாத் சிங், மோடி சந்திப்பு எல்லாமே அவன் கச்சிதமாகச் சொன்ன பொய்கள்.. 

உலகம் முழுக்க செய்தி சேகரிப்பாளர்களை வைத்திருக்கும் இன்றைய நவீன நாளேடுகள் கூட எதனால் கோட்டை விட்டன? லேசான ஒரு விசாரணை செய்திருந்தாலே இவன் ஒரு ஃப்ராடு என்று தெரிந்திருக்குமே? ஏன் செய்யவில்லை? அவசரம், எல்லாம் அவசரம்.. செய்தியை நான் தான் முதலில் தருவேன் என்கிற அவசரம், என் செய்தி வெப்சைட்டில் தான் ஸ்க்ரோலிங் முதலில் ஓட வேண்டும் என்கிற அவசரம், நான் தான் இந்தியாவின் இந்த அறிவாளியை முதன் முதலாகப் படம் பிடித்து பேட்டி எடுத்தேன் என்று தண்டோரா போட அவசரம்.. ஆனால் இப்போது என்ன நடந்தது? அவனை வாழ்த்திய அனைத்து பத்திரிகைகளும் என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது மூடிக்கொண்டு இருக்கின்றன.. அப்போது சுடச்சுட செய்தி கொடுக்க முடியாத Deccan Chronicle, BBC, மனோரமா போன்றவைகள் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு அவன் ஃப்ராடுத்தனத்தை கிழிக்கின்றன.. இப்போது சுடச்சுட செய்தியும் ஸ்கோரிலிங்கும் போட அவர்களுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது..

இது தான் இன்றைய நிதர்சனம்.. எந்த ஒரு விசயத்தையும் நிறுத்தி, நிதானமாகப் பார்த்து, ஆராய்ந்து செல்வதற்கெல்லாம் யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை.. அந்த விசயம் சரி என்றால் கொண்டாட்டம், தவறு என்றால் ஒரே ஒரு சாரி.. அவ்வளவு தான்.. அறிவியலும் முன்னேற்றமும் தரத்தைக் காவு வாங்கிக்கொண்டன.. தரத்தை விட ஜிகினா வேலைகள் தான் பெரியது என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டன.. அதற்கான உதாரணங்கள் தான் நமது வாட்ஸ்-அப் மெசேஜ்களும், நான் மேலே சொன்ன நம் நாளிதழ்கள் மற்றும் செய்திச்சேனலகளின் லட்சணங்களும்.. ஹாட் நியூஸைத் தரத்துடிக்கும் பத்திரிகைகள் எதற்குமே பெஸ்ட் நியூஸைத் தர வேண்டும் என்கிற அக்கறைக் கொஞ்சம் கூட இல்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் தான் தங்களைத் தாங்களே நான்காம் தூண் என்று பெருமையாக அழைத்துக்கொள்கிறார்கள்..

சரி அவர்களுக்குத் தான் அக்கறை இல்லை.. ஒரு மனிதனாக சக மனிதன் மேல் அக்கறைக் கொண்ட நாமாவது இனி அக்கறையாக இருப்போம்.. நமக்கு வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பிறரிடம் பகிர்வோம்.. இனி மெசேஜை ஃபார்வேர்டு செய்யும் முன் கூகிள் ஆண்டவரை ஒரு முறை தரிசித்து விட்டு ஃபார்வேர்டு செய்யுங்கள்.. இங்கே பாருங்கள் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் எனக்கு வந்திருக்கும் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் இது.. ”044-40504050 என்னும் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுனா உங்க நம்பருக்கு 3G டேட்டா கார்டு 1GB கொடுக்கிறார்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த ஆஃபர்.. நேரத்தை வீணாக்காமல் வேகமாகக் கால் செய்..” அடப்பாவிகளா டேய் அது அமேசான் காட்டை அழிக்கும் எர்வாமேட்டின் காரனோட நம்பர்டா.. ஃபோன் கீன் பண்ணித் தொலஞ்சிறாதீங்க.. உங்கள ஜென்மத்துக்கும் தூங்க விட மாட்டாய்ங்க.. 

எத்தனை சிவகாசிக்காரன் வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது போலயே....

ஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...

Tuesday, November 4, 2014

வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” (!!!!!) கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் இதே போல் அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உங்களுக்கு ஞாபம் இருக்கலாம்.. 

சரி எதற்கு சம்பளம் கூட்டிக் கொடுக்க வேண்டுமாம்? ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு வங்கியில் வேலையும், வாடிக்கையாளர் சேவையும் உருப்படியாக இருக்கிறது? ஸ்டேட் பேங்க்கை தவிர்த்து உருப்படியாக ஒரு வங்கியும் கிடையாது.. ஹ்ம் கொஞ்சம் அப்படியே உங்கள் மனதில் ஒரு அரசு வங்கிக்குள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்..

ஜூம் செய்யப்பட்ட ஒரு விஏஓ அலுவலகம் போல எங்கும் பேப்பராக நிறைந்து, எல்லோரும் ஒரு வித உர் முகத்துடன் உட்கார்ந்து கொண்டு, தரையில் காகிதங்கள் பரவி, நத்தையை ஜெயிக்க வைக்கும் வேகத்தில் வரிசை நகர்ந்து கொண்டு, எரிந்து விழும் கேஷ் கவுண்டர்கள் என்று அது ஒரு விதமான கெட்ட கனவின் பிறப்பிடம்.. இன்று ஒரு சாதாரண மனிதனிடம் கேளுங்கள் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆசை என.. அவன் வாயில் இருந்து வரும் முதல் இரண்டு பெயர்கள் தனியார் வங்கிகளாகத் தான் இருக்கும்.. அரசு வங்கிகளில் தொடங்கப்படும் புதிய சேமிப்புக் கணக்குகள் கூட பெரும்பாலும் பிஎஃப், மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அரசு சார்ந்த விசயங்களுக்காக அரசு மூலம் ஆரம்பிக்கப்படும் கணக்குகள் தான்.. அதில் பணம் போட/எடுக்க செல்லும் மக்களைக் கூட ”ஏய் இந்தா இங்க வா...” “சும்மா ஏன் தொனத்தொனன்னு நச்சரிக்குற? பேசாம அங்க போய் ஒக்காரு போ..” “இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுனா நாளைக்குத் தான் காசைக் கொடுப்பேன்” என ஏதோ ஐந்தறிவு ஜீவன் போல் நடத்துவார்கள் நம் அரசு வங்கிகளில்.. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க வேண்டுமானால் ஏதாவது கிராமத்து வங்கிக்குப் போய்ப் பாருங்கள்..

சரி இதையெல்லாம் விடுங்கள், உங்கள் கணக்கில் பணம் போட ஒரு அரசு வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது? அதுவே தனியார் வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள்.. எனது டீலர்கள் பலரும் NEFT/RTGS முறையில் பணம் கட்டுபவர்கள் தான்.. பல கிராமங்களில் இருக்கும் 30 வருட, 35 வருட பேங்க் அனுபவஸ்த மேனேஜர்களுக்கு கூட அப்படியென்றால் என்னவென்றே தெரியாது.. சொகுசாக கிராமத்தில் வந்து காதைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.. அட அந்த வங்கியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆட்களைக் கூட நாய் போல் குரைக்க வைத்து, வாடிக்கையாளரிடம் எரிந்து விழ வைத்து, அசமந்தமாக வேலை பார்க்க வைத்து கெடுத்து விடுவார்கள்.. இரண்டும் கிழட்டு மேனேஜர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் RTGS எப்படி அனுப்புவது என்று.. அதைக் கற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அவர்கள் என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்தது. “இவன் எப்படா பிரான்ச்ல இருந்து கெளம்புவான்?” என்பது போலேயே முறைத்துக்கொண்டிருந்தார்கள்..

நான் ஏதோ அரசு வங்கிகள் மீது அபாண்டமாகப் பழி போடுவது போல் நினைக்காதீர்கள்.. கிராமங்களில் இருக்கும் அரசு வங்கிகளைக் கண்கூடாகப் பார்ப்பதால், அடிக்கடி அதன் பிரச்சனைகளை அனுபவிப்பதால் தான் இதைச்சொல்கிறேன்.. ஒரு சில நல்ல கிளைகளும் மேனேஜர்களும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் பொதுவாக அரசு வங்கி என்பது நான் சொல்வது போல் தான் இருக்கிறது.. ஒரு ஸ்ட்ரைக் செய்வதற்கு ஒன்றாகக் கூடி விடும் இவர்கள், என்றாவது இந்த அக்கறையை வேலை செய்வதில் காட்டியிருக்கிறார்களா? மொத்தமாக கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம், ஏதாவது பேங்கிங் சம்பந்தமான கோர்ஸை மொத்தமாகப் படிப்போம் என்று ஒன்று சேர்ந்திருக்கிறார்களா? ஆனால் ஸ்ட்ரைக் என்றால் வந்துவிடுவார்கள் முதல் ஆளாக.. ஒரு கவுண்ட்டரில் இருக்கும் ஊழியர் ஏதாவது வேலையாகக் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டால், அங்கு நின்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை தன் கவுண்ட்டருக்குள் அனுமதிக்காமல், அவர் வரும் வரை காத்திருக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் தானே இங்கு அதிகம்? தனியார் வங்கிகள் எல்லாம் வரவில்லை என்றால் இவர்களின் வேலை இதை விட மோசமாக இருந்திருக்கும்.. சரி இப்போது எதற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு? வங்கியில் என்ன குறையாகவா சம்பளம் கொடுக்கப்படுகிறது? 

முதலில் ஒரு விசயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.. உடல் உழைப்பு அல்லாத பிற வேலைகளை அளவிட முடியாது.. அதாவது ஒரு லோடுமேன் இத்தனை மூட்டை சுமந்திருக்கிறான் என கணக்கிட முடியும்.. அதை வைத்து அவன் உழைப்பிற்குக் கூலி கொடுக்க முடியும்.. அதுவே ஒரு software engineer இத்தனை வேலை செய்திருக்கிறான் என்று அளவிட முடியாது.. அதனால் இங்கு அவனின் உழைப்பை அளவிட்டு கூலி கொடுக்க முடியாது, ஆனால் அவன் தகுதிக்கு கூலி கொடுக்க முடியும்.. So, உடல் உழைப்பை அளவிட முடிந்த வேலைகளுக்கு உழைப்பிற்கு ஏற்றபடியும், புத்தியைப் பயன்படுத்தும் வேலைக்கு அவனின் தகுதிக்கு ஏற்பவும் கூலி கிடைக்கும்.. அதாவது இந்த இடத்தில் BE என்னும் தகுதிக்கு.. இதில் வங்கி வேலை என்பது இரண்டாவது ரகம்.. இங்கு உங்கள் வேலை உங்கள் அறிவைச் சார்ந்து இருக்கிறது.. உடல் உழைப்பு தேவைப்படும் வேலையில் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் உங்கள் உடல் அதிகம் உழைக்க வேண்டும்.. அதாவது தினமும் 100மூட்டை சுமக்கும் லோடுமேன் 120 மூட்டை சுமந்தால் அவனால் அதிகம் சம்பாதிக்க முடியும்.. அவனுக்கு உடல் தான் மூலதனம், அதனால் அதை அவன் அதிகம் உழைப்பதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும்.. அதே போல் புத்தியை பயன்படுத்தி வேலை செய்பவன் அதிகம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்? தன் புத்தியை, தன் திறமையை அதிகம் வளர்க்க வேண்டும்...

இரண்டு software engineerகள் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சேரும் போது அவர்களுக்கு அந்த BE என்னும் தகுதிக்கு ஏற்ப 15000ரூ சம்பளம் தரப்படுகிறது.. இருவரில் ஒருவன் அவன் வேலைக்கு என்ன என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தானாக கற்றுக்கொள்கிறான்.. அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடிக்கிறான்.. அப்பப்போ update ஆகும் தன் வேலை சம்பந்தமான சமாச்சாரங்களயும் தெரிந்து வைத்துக்கொள்கிறான்.. அந்த இன்னொரு ஆள் இருக்கானே அவன், மாசாமாசம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கேண்டினுக்கும், ரெஸ்ட் ரூமுக்கும், அலைந்து கொண்டு ஒரு வேலையும் பார்க்காமல், வேலைக்குத் தேவையான தன் தகுதியையும் வளர்த்துக்கொள்ளாமல் அப்படியே இருக்கிறான்.. ஒரு வருடம் முடிகிறது.. சம்பளம் யாருக்குமே கூட்டவில்லை.. வேலை செய்தவனுக்கும் கூட்டவில்லை.. செய்யாதவனுக்கும் கூட்டவில்லை.. இதில் வேலை செய்தவனை விட செய்யாதவனுக்குத் தான் கடுப்பு அதிகம்.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான்.. ”சம்பள உயர்வு வேண்டும், நான் காலை 8மணியில் இருந்து மாலை 8 மணி வரை நாயாக அலுவலகத்தில் இருக்கிறேன், எனக்கு ஏன் சம்பளம் கூட்டவில்லை?” என பொங்குகிறான்.. ஒழுங்காக வேலை பார்த்து தன் திறமையை வளர்த்துக்கொண்டவனோ ‘இங்கு இல்லையா, என் திறமைக்கு இன்னொரு இடம் இருக்கும்’ என்று இன்னொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் 30000 ரூபாய் சம்பளத்திற்கு.. அந்த அறிவை வளார்த்துக்கொள்ளவே விரும்பாத ஆள் சம்பள உயர்வு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறான்.. இது software என்றில்லை, நான் இருக்கும் சேல்ஸ் வேலைக்கும், ஆசிரியர் வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் கூட இது பொருந்தும்.. உங்கள் ஆரம்ப சம்பளம் தகுதியை வைத்தும், அடுத்தடுத்த சம்பள உயர்வு உங்கள் updation மற்றும் வேலை சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்வதை வைத்தும் இருக்கும்.. இப்போது இதே இடத்தில் வங்கி ஊழியர்களை வைத்துப் பாருங்கள்..

அரசு வங்கியில் வேலைக்கு சேரும் நான் அரசு உத்தியோகம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் செக்கு மாடு மாதிரி பணத்தை எண்ணவும், சீல் குத்தவும், கையெழுத்துப் போடவும் நன்றாகக் கற்றுக்கொண்டேன்.. காலம் பூராவும் இதே வேலை தான்.. ஏதாவது ப்ரொமோசன் கிடைத்தால் லோன் அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போடுவேன்.. அவ்வளவு தான்.. இந்த வேலைக்கு எனக்கு வருடத்திற்கு 1000ரூ ஊதிய உயர்வு போதாதா? இன்று ஒரு அரசு வங்கியில் நீங்கள் கிளர்க் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் 16000ரூபாய் சம்பளம்.. ஒவ்வொரு வருடமும் 1000ரூபாய் உயர்வு இருக்கும்.. ஆஃபிசராக சேர்ந்தால் 25000ரூபாய் சம்பளம், இரண்டாயிரம் ரூபாய் வருடாவருடம் ஊதிய உயர்வு இருக்கும்.. அனுபவத்திற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வேறுபடும்..  அது போக அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், லோன் சலுகைகள் என்று வேறு பலவும் இருக்கும்.. இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வங்கி ஊழியர்களுக்கு? ஏன் ஸ்ட்ரைக் செய்கிறார்கள்?

ஐயா வங்கி ஊழியர்களே, நீங்கள் வங்கியில் வேலைக்குச் சேரும் போது இவ்வளவு தான் சம்பளம் என்று தெரிந்து தான் சேர்கிறீர்கள்.. வாரத்தில் 6 நாட்களும் வேலை இருக்கும் என்பதும் தெரியும் தானே? வருடத்திற்கு இவ்வளவு தான் increment இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. எல்லாம் தெரிந்து தான் வேலைக்குச் சேர்கிறீர்கள்.. பின் எதற்கு வேலைக்கு சேர்ந்த பின் மட்டும் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும்? ஒன்று இவ்வளவு கஷ்டமான வேலைக்கு வந்திருக்கவே கூடாது.. சரி வந்துவிட்டீர்கள், இந்த வேலை பிடிக்கா விட்டால் வேறு வேலைக்கு போக வேண்டியது தானே? அதையும் செய்யாமல் ஏன் ஸ்ட்ரைக் செய்கிறீர்கள்? ஏனென்றால் உங்களால் வேறு வேலைக்குப் போக முடியாது.. ஒரு கல்லூரி lecturer மாதிரியோ, மென்பொருள் வல்லுநர் மாதிரியோ, சேல்ஸ் ஆட்கள் மாதிரியோ உங்கள் திறமையை வளர்த்திருந்தால் எங்காவது செல்லலாம்.. ஆனால் நீங்கள் தான் ஒரே இடத்தில் கடிவாளம் கட்டிய குதிரை போல் அல்லவா உட்கார்ந்து விட்டீர்கள்? கம்யூட்டர் தெரியாது, கஸ்டமர் சர்வீஸ் தெரியாது, எந்த விதமான up-gradationஐயும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்காது.. பின் எந்த தைரியத்தில் ஊதிய உயர்வை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? 

உங்கள் வேலை கம்ப்யூட்டர் வந்த பின் பாதியாக குறைந்து விட்டது சார்.. ஏடிஎம் மிஷின் வைத்து விட்டீர்கள்.. ஆன்லைன் பேங்கிங் கொண்டு வந்துவிட்டீர்கள்.. உங்கள் வேலையே பாதியாகக் குறைந்த பின் சம்பளம் மட்டும் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும்? வங்கியில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப்பேசினேன்.. பணம் எண்ணுவதில் வரும் தவறு, லோன் கொடுப்பதில் நேரும் தவறுகள் என்று வங்கி வேலையில் அதிகம் ”ரிஸ்க்” (!!!!) இருப்பதால் ஊதிய உயர்வு வேண்டும் என்றார்.. அதை விட அவர் சொன்ன இன்னொரு விசயம், மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்லாம் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் அதை ஈடுகட்டும் வகையில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.. நல்ல வேளை எம்பி, எம்.எல்.ஏ சம்பளத்தோடு எல்லாம் அவர் போட்டி போடவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டேன்.. 

நம்மில் பெரும்பாலானவர்கள் நம் அன்றாட வேலையையே ஏதோ பெரிய சாதனை போல் நினைத்துக்கொள்கிறோம்.. அதற்கு சரியான உதாரணம் தான் நண்பர் சொன்ன ”ரிஸ்க்”.. ஏன்யா பணத்தை கவனமாக எண்ணுவதும், சரியான ஆளுக்கு லோன் கொடுத்து அதை ஒழுங்காக வாங்குவதும் தானே உங்கள் வேலை? என்னமோ அதை பெரிய ரிஸ்க் என்கிறீர்கள்? உங்களின் அந்த வேலைக்குத் தானே சம்பளம் வருகிறது? உங்கள் வேலையில் என்ன விதமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறீர்கள் என்று சம்பளம் அதிகம் கோருகிறீர்கள்? அடுத்த விசயம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி.. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் இருப்பார்களா இந்த மத்திய அரசு ஊழியர்கள்? அவர்களை பென்ச் மார்க்காக வைத்திருப்பதெல்லாம் மிகவும் அபத்தம்.. அப்படி மத்திய அரசு ஊழியர் அதிகம் சம்பளம் வாங்குவது போல் இருந்தால், நீங்களும் படித்து அந்தப் பரிட்சையை க்ளியர் செய்து அந்த சம்பளத்தை வாங்க வேண்டியது தானே? இந்திய ஜனாதிபதிக்கும் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்.. முடிந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகுங்கள் உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.. ஆனால் நீங்கள் பார்க்கும் செக்கு மாட்டு வேலைக்கு ஜனாதிபதி சம்பளம் வேண்டும் என எதிர்பார்ப்பது தான் தவறு..

இன்னும் சிலர் சொல்கிறார்கள் விலைவாசியெல்லாம் கூடிவிட்டதால் சம்பள உயர்வு வேண்டுமாம்.. போன வருடத்தை விட இந்த வருடம் மாச சம்பளத்தில் 2000 முதல் 4000 வரை உயர்வு கிடைக்கிறது.. இந்தப் பணம் போதாதா அதிகரிக்கும் விலைவாசியை சரிக்கட்ட? உங்களின் ஒரு வருட ஊதிய உயர்வு தான் இந்திய நாட்டில் பலருக்கும் மாதச்சம்பளமே.. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு 30000ரூபாய் சம்பளம் வாங்கும் வேறு நிறுவன ஊழியனையும், அதே அளவு சம்பளம் வாங்கும் வங்கி ஊழியனையும் எடுத்துக்கொள்ளுங்கள்.. அவனுக்கு சலுகைகளே கிடையாது.. ஆனால் இந்த வங்கி ஊழியர்களுக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், ஹவுஸிங் அலவன்ஸில் இருந்து, லோனுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வரை எவ்வளவோ இருக்கின்றன.. அதையெல்லாம் கணக்கிட்டுப்பார்த்தால் அவர்கள் சம்பளத்தின் மதிப்பு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தான்.. 

இனியும் ஸ்ட்ரைக் அது இதுவென்று சொன்னால், அரசாங்கம் கூச்சமே படாமல் கூண்டாடு மாற்றிவிட்டு இளைஞர்களைக் கொண்டு வரலாம்.. பாவம் டிகிரி முடித்துவிட்டும், இன்ஜினியரிங் முடித்துவிட்டும் வேலை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.. இப்போதைய ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் கூட அவர்களை விட கவனமாக வேலை செய்வார்கள்.. சம்பள உயர்வினால் வரும் பண வீக்கம் கூட குறையும் அதனால்..

வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்றும் ஸ்டரைக்குகிறார்கள்.. இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கலாம்.. அதற்கும் என்னிடம் ஒரு பிளான் உள்ளது.. அதாவது வாரத்தின் ஏழு நாளும் பேங்க் இயங்கும்.. வேலை செய்பவர்கள் வாரத்தின் ஏதாவது இரண்டு நாட்கள் லீவு போட்டுக்கொள்ளலாம்.. திங்களும் செவ்வாயும் ஒருவர் லீவு போட்டால் இன்னொருவர் புதனும் வியாழனும் போடலாம்.. வங்கியில் அன்றாட வேலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த off இருக்குமாறு மேனேஜர் பார்த்துக்கொள்ள வேண்டும்.. மக்களும் வாரத்தின் 7நாட்களும் வங்கி இருப்பதால் பயன்பெறுவர், இவர்களுக்கும் கேட்டது போல் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்..

இன்னொரு முக்கிய விசயம் தனியார் துறையில் இருப்பது போல் online performance appraisal போன்ற விசயங்களை அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும்.. அதை பாரபட்சம் இல்லாமல் சரியாக கவனித்து வேலையை, வேலையாட்களை அளவிட வேண்டும்.. வேலை செய்பவன் செய்யாதவன் என எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு ஊதிய உயர்வு கொடுப்பதை விட இது போன்ற நவீன உத்திகளால் ஒழுங்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பைல்ஸ் வரும் அளவிற்கு சீட்டைத் தேய்க்கும் ஆட்களுக்கு ஆப்பும் அடிக்கப்படும்.. கம்பெனிக்காகவோ, வாடிக்கையாளர்களுக்காகவோ இல்லாமல் அட்லீஸ்ட் தன் ஊதிய உயர்வுக்காகவாவது ஒரு தனியார் நிறுவன ஊழியன் பயந்து போய் வேலை பார்ப்பான்.. அந்த எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் வராத வரை அவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்..

பி.கு: இந்தக் கட்டுரை, தன் கடமையை ஒழுங்காக செய்யும் வங்கி ஊழியர்களைக் குறிப்பிடவில்லை..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One