இலங்கையில் உயிரை எடுத்தோம், தமிழகத்தில் மானத்தை வாங்குவோம் - அழியட்டும் தமிழன்..

Wednesday, July 20, 2011

தினமும் எதாவது ஆங்கில அல்லது ஹிந்தி - பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் வடநாட்டு - செய்தி சேனல்களைப் பார்க்கும் போது தோன்றியது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு. எந்த சேனலைத் திருப்பினாலும் "தமிழ் அமைச்சரின் ஊழல்" என்றே இந்த ஸ்பெக்ட்ரம் என்னும் விசயம் சொல்லப்படுகிறது. 

இன்று வரை இதில் எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. 1.76லட்சம் கோடி வருமான இழப்பு. இப்படி இழப்பு ஏற்படுத்த சாதாரண மந்திரிக்கு மட்டும் லஞ்சம் கொடுத்தால் போதுமா? இதை ஏன் வடநாட்டு மீடியாக்கள் சொல்வதில்லை? தெரிந்தும் சொல்ல மறுக்கின்றனவா? அவர்கள் அங்கே சொல்வதை இங்கே நமது அடிவருடிகளும் ஏதோ ராசாவும் தயாநிதி மாறனும் தான் ஊழல்வாதிகள் என்பதைப் போல் சித்தரிக்கிறார்கள்.
நேரடியாக ஊழல் மற்றும் லஞ்சம் நிகழ்ந்த காமன்வெல்த், ஆதர்ஷ் போன்றவை பற்றி இப்போது எந்தத் தொலைக்காட்சியிலும் ஆங்கில நாளிதழ்களிலும் செய்தியே வருவதில்லை. வராத மாதிரி பார்த்துக்கொள்ளப்படுகிறது என்றும் சொல்லலாம். ஏன் என்றால் காங்கிரஸுக்கு அது கெட்ட பெயரை உண்டு பண்ணிவிடும் நேரடியாக அந்தக் கட்சிக்காரர்களே அதில் ஈடு பட்டிருப்பதால். ஆனால் இந்த அரசு ஊழலை எதிர்ப்பது போலவும் காட்டவேண்டுமே, அதற்கு என்ன செய்வது?

'சிக்குனான்டா அடிம' என்பது போல் ராசாவை தேர்தல் நேரத்தில் அமுக்கினார்கள். அது ஒன்றை மட்டுமே வைத்து இன்று வரை இதை தேய் தேய் என்று தேய்க்கிறார்கள். கூட்டணியில் இருக்கும் கட்சி என்றாலும் நாங்கள் ஊழலை ஒரு போதும் ஊக்குவிக்க மாட்டோம் என்பது தான் இவர்கள் சொல்ல வருவது. அதிலும் செய்திகளில் தமிழ் அமைச்சர்கள், தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்று குறிப்பிட்டு கூறும் போது இதில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.

தன்னை வெறுத்த மாமியாரைக் கொன்ற சீக்கிய இனத்தவரை பிரதமராக்கி அழகு பார்ப்பவர் தான் அன்னை சோனியா (த்தா வச்சுருக்கான் பாரு தெளிவா. 'அன்னை சோனியா', 'புரட்சித்தலைவி அம்மா'னு). தன் கண்வனைக் கொன்றவர்கள் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் ஆதலால் அந்த இனத்தையே வேரோடு அழித்தாகிவிட்டது அங்கே. இன்னும் கொஞ்சம் நஞ்சம் அங்கே மிச்சம் இருப்பதும் சிங்களவனோடு கலந்து தமிழ் என்பது இலங்கையில் இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். 

அந்த அன்னைக்கு ஒரு இனத்தையே அதன் கலாச்சாரத்தையும் வேரையும் அழித்தும் தன் ரத்தவெறி அடங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம்? தமிழ் பேசுபவன் எங்கு இருக்கிறான் என்று தேடினால் இதோ தான் வாழ்க்கைப்பட்ட இந்திய நாட்டின் காலடியில் இருப்பது தெரிந்துவிட்டது. சொந்த நாட்டிலே போர் தொடுக்க முடியாது, இலங்கையில் செய்தது போல் பேடித்தனமாக பின் இருந்து தாக்க முடியாது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவு தான் இந்த "தமிழர்களின் ஊழல்".

உயிரைத்தான் வாங்க முடியவில்லை. மானத்தை வாங்கலாம் அல்லவா? ஒரு காலத்தில் நாம் பிஹாரிகளையும் ஜார்கண்ட்காரர்களையும் ஊழல்வாதிகள் என்று எள்ளினோம். இன்று லட்சம் கோடி ஊழல் என்று உலகமே வாயைத் திறந்து பார்க்குமாறு செய்தாகிவிட்டது.

சரி, அந்த லட்சம் கோடி ஊழலும் தமிழன் செய்தான் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் பணம் எங்கே என்று கேட்டால் 'அது ஊழல் இல்லை வருமான இழப்பு' என்றார்கள். எல்லா அமைச்சர்களும் அப்படித்தானே செய்தார்கள், பின் எதற்கு கைது? என்றால், "அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்தார்" என்கிறார்கள்.

இன்று வரை அந்த லஞ்சப்பணத்தையும் சரி, லஞ்சம் கொடுத்தவர்களையும் சரி இந்த அரசாங்கமும் வடநாட்டு மீடியாக்களும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் காரணம் நீரா ராடியா என்னும் வடநாட்டுக்காரி தானே? ரிலையன்ஸுக்கும் சம்பந்தம் உள்ளதே? டாடா கூட பேசினாரேப்பா? அவர்கள் மேல் எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன?

இன்றைய தேதியில் ரிலையன்ஸ் மீதும் டாடா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மறுதினமே இந்த அரசு (எந்த அரசாக இருந்தாலும்) கவிழ்ந்துவிடும். அவர்களைப் பற்றி எல்லாம் இரண்டு நாட்கள் செய்தி போட்டுவிட்டு அப்படியே மறந்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி, தயாநிதி என்று ஒவ்வொருவராக கைது செய்யப்படுகின்றனர். "Tamil Minister Arrested" என்று செய்திகள் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் மக்கள் சிரிதும் யோசிப்பதே இல்லையா? ஒரு அமைச்சர் எப்படி அத்தனையும் செய்ய முடியும்? "எனக்கு ஒன்னுமே தெரியாது"ன்னு ஒரு பிரதமர் சொல்றாரு. அமைச்சரவையில் வேறு யாருக்குமேவா தெரியாது? சரி ஊழல் நேரடியாகத் தெரிந்த ஆதர்ஷ், காமன்வெல்த் பற்றியெல்லாம் ஏன் யாருமே பேசுவதில்லை? மீடியாக்களும் மறந்துவிட்டனவா?

ஸ்பெக்ட்ரம் பற்றி பேசும் தமிழனும் மற்ற ஊழல் பற்றி பேசுகிறானா? ஏதோ ஊழல் என்றாலே தமிழ்நாடு தான் என்றாகிவிட்டது. வடநாட்டுக்காரன் எல்லாம் நம்மை நக்கலாகத்தான் பார்க்கிறான். இப்போது கூட கட்சிக்கு நாயை விட அதிகமாக விசுவாசமாக இருக்கும் சிதம்பரத்துக்கு அவர் தமிழன் என்கிற காரணத்தால் தான் செக் வைக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் வருகிறது.

"தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கு குணமுண்டு"
தமிழனையும் அழித்தாகிவிட்டது, அவன் குணத்தையும் மானத்தையும் அழித்துவிட்டு அவனை தலைகுனியச் செய்ய இப்போது அடுத்த மூர்க்கத்தனம் நடக்கிறது. நாம் நம் அடையாளத்தை இழக்கப் போகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக. நம் மானம் போகப்போகிறது. இதற்கு இலங்கையைப் போல் செத்துப்போய்விடலாம்.


மயிர்நீப்பின் வாழா கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

சரத்குமாரும் நாடார்களும் ஜாதியும் பின்ன ஞானும்..

Thursday, July 14, 2011

இன்று சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்த நாளாம். எங்கள் ஊர் பக்கம் எங்கு திரும்பினாலும் ப்ளக்ஸ் போர்டுகள் தான். அந்த ப்ளக்ஸ்களில் காமராஜர் உப்புக்கு சப்பானியாக மேலே ஒரு ஓரத்தில் ஒரு வளையத்திற்குள் சிரித்துக்கொண்டிருக்கிறார், கீழே வரிசையாக நாடார் குல விடிவெள்ளிகள் (அதான் எங்க ஊர் பயபுள்ளைக, ஸ்கூல் பசங்க கூட இதுல இருக்கிறது தான் மிகவும் அபாயகரமான விஷயம்), நடுவில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் நமது நாடார் குல நாயகன், சின்ன காமராஜர் சரத்குமார் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறார்.

என்னோட டவுட்டெல்லாம் யாருய்யா இந்த சரத்குமாரு? எதுக்கு அவரையும் காமராஜரையும் இணைத்து இப்படி அட்டூழியம் செய்கிறார்கள் என்பது தான். சிறு வயதில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது சக மாணவன் ஒருவன் சொன்னான், "யே சரத்து எங்க சொந்தக்காரு, தெரியும்ல? எனக்கு அதான் அவரப்புடிக்கும்" என்றான். 'பார்ரா இவனுக்கெல்லாம் ஒரு நடிகன் சொந்தக்காரரா இருக்கான். சே நமக்கு யாரும் இல்லையே? போன வாரம் கூட 'ரஜினி நமக்கு சொந்தக்காரன் எல்லாம் இல்ல. இனிமேல் ரஜினி மாமான்னு சொன்ன வாயில சூடு வச்சுருவேன் ரஸ்கல்' என்று அம்மா வஞ்சதை நினைத்துக்கொண்டேன். அப்போது அருகில் உள்ளவன் என்னிடம் கேட்டான். "நீங்க நாடாராடா?" என்று. "தெரிலடா" என்றேன். "நீ நாடாருன்னா சரத்து ஒனக்கும் சொந்தம் தான்டா" என்றான். 4ம் வகுப்புப் பையனின் பேச்சு இது.

'சாந்தரம் வீட்டுக்குப்போனவுடனே அம்மாகிட்ட..... வேணாம் வேணாம் அப்பா வந்ததும் கேப்போம், அம்மா அடிப்பாங்க' என்று முடிவு  செய்துகொண்டேன். சாந்தரம் வெளியில் அப்பா சைக்கிள் நிறுத்தும் ஓசை கேட்டது. வேகமாக வெளியில் சென்று அவர் வாங்கி வந்திருந்த பக்கோடா பொட்டலத்தை பிரித்துக்கொண்டே அப்பாவுக்கு கேட்காதவாறு மெதுவாகக் கேட்டேன், "அப்பா நாமா நாடாரா?"

"அத ஏன்டா கண்ணு இவ்ளோ மெதுவா பயந்துக்கிட்டே கேக்குற? தைரியமா சத்தமா கேக்கணும்" இவர் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை, அதான் இவ்ளோ தைரியம். இதே நான் சொல்லிருந்தா இந்நேரம் என் முதுகு வீங்கியிருக்கும். "நாமெல்லாம் நாடார் தான்டா" என்றார்.

அம்மாவுக்கு கேட்டுவிட்டது. "என்னது நாடாரா? பிள்ளைய கெடுத்து குட்டிசுவராக்குறதே நீங்க தான். டேய் இனிமேல் அப்பாகிட்ட போயி நாடாரு, ரஜினின்னு எதாவது கேட்ட தொடையில புடிங்கி வச்சுருவேன். ஹோம் வொர்க் நோட்ட எடு" அம்மாவின் கண்கள் பயமுருத்தின.

நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு மெதுவாக அப்பாவை எழுப்பினேன். "என்னப்பா கண்ணு?"

"யெப்பா சரத்து நமக்கு சொந்தக்காரனாப்பா?"

"இல்லடா கண்ணு யாரு அப்டி சொன்னது?"

"என் கிளாஸ்காரன் சொன்னியான்ப்பா. நம்ம நாடாரு தான? சரத்து நாடாரு எல்லாருக்கும் சொந்தக்காரன்னு அவன் தாம்ப்பா சொன்னியான்"

"இந்தா யே எந்திரி" அப்பா அம்மாவை எழுப்பிவிட்டார். போச்சி இன்னைக்கு நைட்டு அடி தான் என்று முடிவு செய்துவிட்டேன். அம்மா எழுந்தார். "மொத, நாளைக்கு பிள்ளைய ஸ்கூல்ல விடும் போது டீச்சர் கிட்ட சொல்லி வேற எடத்துல ஒக்கார சொல்லு"

"எதுக்குங்க?"

"எவனோ இவேன்கிட்ட சரத்குமாரு நாடாரு, நம்ம சொந்தக்காரன் தான்னு சொல்லிருக்கான். நாலாப்பு படிக்குறவன் பேசுற பேச்சாடீ இது? இந்த வயசுலயே சினிமாக்காரன ஜாதிய வச்சு பிரிக்குறாய்ங்க? நான் சொன்னத மொத செய்யி" என்னைப்பார்த்துச் சொன்னார் "கண்ணு, கண்ட கண்டவன எல்லாம் சொந்தக்காரன்னு சொல்லக்கூடாதுடா' என்று சொல்லி என்னைத் தூக்கி சுவரில் தொங்கும் காமராஜரின் படத்திற்கு அருகில் கொண்டு சென்று  "இவரு தான் நம்ம சொந்தக்காரரு, ஒனக்கு தாத்தா, சேரியா?" என்றார்.

எனக்கு அந்த வயசான ஆளைப்பிடிக்கவில்லை அப்போது. இப்போது விவரம் தெரிந்தவுடன் காமராஜரைப் பிடிக்கிறது, ஆனால் அப்பா அன்று சொன்னதும் தவறு என்றே படுகிறது. காமராஜர் வேறு ஜாதியாய் இருந்திருந்தால் என் அப்பாவிற்கு இந்த அளவிற்குப் பிடித்திருக்காது. நடிகனை ஜாதி வைத்து பிரிக்கக்கூடாது என்றவர் காமராஜரை மட்டும் அப்படி பார்த்தது எனக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் என் அப்பா அளவிற்குக் கூட யோசிக்காத பல அரைவேக்காடுகள் படித்தும் விவரம் தெரிந்தும் இந்த மாதிரி நடிகர்களை ஜாதிவாரியாகப் பிரித்துக்கொண்டு தேவையில்லாமல் பேனர் கட் அவுட் என்று வைத்து உயிரை வாங்குகிறார்கள். இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள ஒரு பதிவு. இந்த சரத்குமார் தனது ஆரம்ப கால சினிமா வாழக்கையில் ஜாதியை காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சேர்ந்ததும் தனக்கும் கட்சியில் நடிகன் என்கிற ஒரு நிலையைத் தாண்டிய அந்தஸ்து கிடைப்பதற்காக தன் ஜாதியை காட்ட ஆரம்பித்தார்.

அப்போது அந்த இன மக்களும் இவருக்கு கொஞ்சம் ஆதரவாக இருந்தனர். ஆனால் நக்மாவுடன் சுற்றிக்கொண்டும் தன் மனைவியை விவாகரத்து செய்த போதும் இவரை "எங்க ஆள்" என்று சொல்லிக்கொள்ள பலரும் கூச்சப்பட்டது உண்மை. பின்னர் தான் இவர் தி.மு.க.விற்கு வந்து தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதும் ஒன்றும் நாடார்கள் இவருக்குப் பெரிதாக ஒன்றும் ஆதரவளித்துவிடவில்லை. நாடார்களின் செல்வாக்கு மிகுந்த நெல்லையிலே தான் இவர் தோற்றார். அப்போதும் கூட இவருக்குப் புரியவில்லை ஜாதியில் பெரும்புள்ளியாக இருப்பது மட்டுமே அந்தக் குறிப்பிட்ட ஜாதிக்குத் தன்னை தலைவனாக்கப் போதுமானது இல்லை என்பது. இவரை தங்கள் ஜாதி என்று தான் கூறிக்கொண்டார்களே தவிர தங்கள் தலைவன் என்று யாரும் கூறிக்கொள்ளவில்லை.

அவர்களுக்கும் தெரியும், இந்த ஆளை தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் தன்னை அடுத்த காமராஜராக நினைத்துக்கொண்டு விடுவார் என்பது. ஏற்கனவே சென்ற வருட இறுதியில் சிவகாசியில் நடந்த நாடார் சங்க நூற்றாண்டு விழாவில் இவர் பேச்சுக்கு மட்டுமே எதிர்ப்பு இருக்கிறது இப்போது வரை மக்களிடம். எந்தத் தலைவனும் தன்னை தானே தலைவன் என்று  சொல்லிக்கொண்டது இல்லை. மக்கள் தான் தலைவர்களை அடையாளம் கண்டு தலைவன் ஆக்குகிறார்கள். ஆனால் இந்த ஆள், ஒரு சமுதாயத்தில் அந்த சமுதாயத்திற்காக இப்போது வரை பாடுபடும் மூத்தோர்களும் நல்ல தலைவனை எதிர் பார்த்து நிற்கும் மக்களும் நின்று கொண்டிருக்கும் ஒரு மேடையில், அந்த நிகழ்ச்சிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிக்கூட போடாமல் சொகுசாக 10நிமிடங்கள் மட்டும் வந்து மேடை ஏறி "நான் தான் உங்கள் தலைவன்" என்று சொன்னால் அதை உடனே நம்பி கைதட்ட மக்கள் ஒன்னும் எம்.ஜி.ஆர் காலத்தில் இல்லையே?!

இவர் இப்போது கூட தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் நாடார் வாக்கு வங்கியை மட்டும் நம்பி நின்றிருந்தால் வழக்கம் போல இன்னொரு தோல்வி தான் மிஞ்சியிருக்கும். மக்களை இவர்கள் இன்னும் இளிச்சவாயர்களாக நினைத்துக்கொண்டு, தான் சார்ந்த ஜாதியை எதாவது ஒரு பெரிய கட்சியில் அடையாளமாகக் காட்டி எதாவது ஒரு பதவியை அடைந்துவிடுகிறார்கள். இவர்களுடைய விசிட்டிங் கார்டை அன்றோடு மறந்துவிடுகிறார்கள்.

இப்போது வரை எனக்கு உண்மையிலேயே இவரது பிறந்த நாள் ஜூலை 14ல் தானா என்று ஒரு சந்தேகம் உண்டு. தன் ஜாதி மக்கள் உயிரையே வைத்திருக்கும் மறைந்து போன ஒரு தலைவரின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளை தன் பிறந்த நாளாக அறிவித்துக்கொண்டால் இவருக்கு அது மக்கள் மத்தியில் தலைவன் என்று கூறிக்கொள்ள சென்ட்டிமெண்ட்டாக உதவும் என்கிற நோக்கோடு கூட இருக்கலாம் அல்லவா?

ஆனால் நாடாரின மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஓரளவிற்கு விவரமானவர்கள் தான். இதை உணர்ந்ததால் தான் சரத்குமாருக்குத் தனியாக நிற்கும் தைரியம் இல்லை. இப்போதும் கூட விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை சரத்குமாருக்கு கணிசமான அளவில் ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாருக்கும் திரையில் காணும் நடிகனை நேரில் காண்கிறோம் என்கிற ஆசை மட்டும் தான் உண்டே தவிர தலைவனாக்கும் ஆசையெல்லாம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் காமராஜரோடு இணைத்து இந்த ஆளை வைத்து போஸ்டர் ப்ளக்ஸ் வைப்பது தான் அசிங்கமாக உள்ளது.

மற்ற இன மக்களும் இப்போது இப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறார்கள். திரையில் கனவுத்தொழிற்சாலையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் தங்கள் பங்குக்கு இருக்கிறான் என்கிற சந்தோசம் அவர்களுக்குப் போதும். அவனே தலைவனாக நினைக்கும் போது தான் மக்களும் தங்கள் பவரை காட்டுகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது மட்டுமே தலைவனாகத் தகுதி இல்லை என்பதையும் மக்களும் உணர்ந்துள்ளனர். 

ஆனாலும் ஜாதி என்பது அனைத்தில் இருந்தும் தூக்கி எரியப்பட வேண்டும். ஒரு நடிகன் என்பவன் அவனுடைய நடிப்பாலும், தலைவன் என்பவன் நீதி தவராத நடுநிலையான தலைமையாலுமே நம்மைக் கவர வேண்டுமே ஒழிய ஜாதி மூலமாகவோ மதம் மூலமாகவோ கவர நினைத்தால் அது அவனின் முட்டாள் தனம் என்பதையே கார்த்திக்கும் சரத்குமாரும் இன்றைய தேதி வரை நமக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி முதலில் சொன்ன அந்த ஸ்கூல் மேட்டரை சொல்லி முடிக்கிறேன். மறுநாள் பள்ளி சென்ற போது வேறு இடம் மாறி உட்கார்ந்து கொண்டேன். அந்தப் பையன் ரீசஸ் பீரியடில் வந்து கேட்டான், "என்னடா நீங்க நாடாரா?"

"ஆமா"

"அப்ப சரத்து ஒனக்கும் சொந்தம் தான்"

"இல்ல எனக்கு காமராஜர் மட்டும் தான் சொந்தம்" வேகமாகத் திரும்பி ஓடினேன் ஒன்றுக்கு அடிக்க..

குத்துங்க எசமான் குத்துங்க..

Wednesday, July 6, 2011

'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது?' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24வயசுல கல்யாணம் பண்றதுனா சும்மாவா?) கல்யாணத்தில் கலந்து கொண்டுவிட்டு மாட்டுத்தாவணியில் நின்று கொண்டிருக்கிறேன். 'இந்த வெயில் காலத்துல கல்யாணம் பண்ணி இவைங்கலாம் என்ன பண்ணப்போறாய்ங்க?' என்று அவனுக்கு இன்று இரவு வரப்போகும் தலையாய பிரச்சனையை தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே வந்தது நம்ம சிவகாசிக்குப் போற பஸ்ஸு. இன்னும் ரெண்டரை மணிநேரம் கொதிக்கும் தார் டின் பயணம். ஒரு அரை லிட்டர் 7அப் பாட்டிலுக்கு தண்டம் அழுதுவிட்டு பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடிக்கலாம்னு பாத்தா ரெண்டு ஜன்னல் பக்கமும் வெயில். சாயந்திரம் ஆரம்பிக்கும் வேளையில் இது தான் தொல்லை. சரி காற்றோட்டமாவது இருக்குமே என்று ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்.

'இந்த வேக்காடுல எவனாவது பக்கத்துல உக்காந்தான்னா தாங்க முடியாது' - பையை எனக்கு அருகில் சீட்டில் போட்டு "ஆள் வாராங்க" என்று  யாரையும் உட்கார விடவில்லை. 'அதான் அத்தன சீட் காலியா இருக்குல? இங்கேயே வந்து மொக்கிறாய்ங்க'. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று கேட்ட அழகான பெண்ணுக்குக்கூட என் பதில் "ஆள் வாராங்க". என் இருக்கையைத் தவிர அனைத்தும் நிரம்பி விட்டன. கண்டக்டர் சீடியை போட்டுவிட்டு டிக்கெட் கொடுக்கவும் டிரைவர் காலரை தூக்கி விட்டு வண்டியை ஆன்செய்யவும் தான் மனதில் ஒரு சந்தோசம்.

"யெய்யா யெய்யா ஏறிக்கிறேன், நிறுத்துயா" கண்டக்டர் விசிலில் வண்டி நின்றது. ஒரு கிழவி ஏறியது வண்டியில். என் ஒரு சீட் மட்டுமே காலி. கண்டக்டரும் டிரைவரும் என் ஜென்ம விரோதி போல் தோன்றினார்கள். கிழவி ஏறியவுடன் முன்பக்கம் சென்றது. "எம்மா அந்த ரெண்டாவது சீட்ல எடம் இருக்கு பாரு" கண்டக்டர் சொன்னார். சொன்னார் என்ன சொன்னார், சொன்னான் படுபாவி. அது மெதுவாக என்னை நெருங்கியது. என் அருகில் வந்ததும் "என்னயா ஆம்பளயாள் கிட்ட ஒக்கார சொல்ற? நான் நின்னுகிட்டே வாரேன்" என்றது அந்த பேரழகுப் பாட்டி. நான் சீட் கொடுக்க மறுத்த அந்தப்பெண் கிக்கிபிக்கி என்று சிரித்தாள். என் வாழ்வின் உச்சகட்ட அவமானம். இப்போது யாரையாவது என் அருகில் அமர வைத்துக்கொண்டால் தான் ஓரளவாவது சமாளிக்கலாம். இல்லேனா அடுத்து ஒரு பொம்பள வந்தா என்ன எந்திரிக்க சொல்லிருவாய்ங்க.

மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி ஸ்டாப்பில் ஒரே ஒருவன் ஏறினான். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. 'அடச்சே அவன் தானா?' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு "டேய் மாப்ள" என்று கை காட்டினேன். முதலில் என்னை சரியாக அடையாளம் தெரியாமல் பின் சில மைக்ரோ செகண்டுகளில் தெரிந்து கொண்டது அவன் முகத்தில் ஓடியது. சிரித்துக்கொண்டே "டேய் மச்சீ" என்றான். அது என்னவென்று தெரியவில்லை. ஊரில் ஒழுங்காக கைலி கட்டிக்கொண்டு இருக்கும் வரை மாப்ளன்னு பேசுறாய்ங்க.. மெட்ராஸ் போயி முக்கா டவுசர் போட்டதும் வாயில இவைங்களுக்கு "மச்சீசீசீ"னு வந்துருது. ப்ளடி பாஸ்கர்ஸ்.

அருகில் வந்து அமர்ந்து கொண்டான். பல நாள் கழித்து பார்த்துக்கொண்டதால் நாங்கள் ஒன்னும் பின்னிப்பிணைந்து கொள்ளவில்லை. எனக்கு என் சீட் தப்பித்தது என்ற சந்தோசம், அவனுக்கு சீட் கிடைத்த சந்தோசம் அவ்வளவு தான். மூனு வருசம் ஒன்னாப் படிச்சதெல்லாம் எவனுக்கு வேணும்? படிச்சப்போ பிட் கொடுத்து காப்பாத்தினானோ இல்லையோ இப்போது என் சீட்டை காப்பாத்திட்டான். "அப்பறம் மச்சி, லைஃப்லாம் எப்டி போகுது?"

"நல்லா போகுதுடா. ஒனக்கு?"

"சூப்பரா போகுது மச்சி"

மச்சினு சொல்லாதடா மானங்கெட்டவனே. "என்னடா மதுரப்பக்கம்? நீ மெட்ராஸ்ல தான வேல செய்ற மாப்ள?"

"இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்தேன் மச்சி. நம்ம சோபாவோட கல்யாணம்டா! ஒனக்கு சொல்லல? நீ என்ன இங்க?"

"எனக்கும் ஒரு கல்யாணம்டா. ஸ்கூல் ஃபிரண்ட் கல்யாணம். சோபாக்கும் இன்னைக்குத் தான் கல்யாணமா? சொல்லவே இல்லையேடா? ஹிம் செம ஃபிகர். எவனுக்கோ குடுத்துவச்சுருக்கு பாரேன்"

"அதப்பத்தி ஒனக்கென்ன? நம்ம செட்ல என்னத்தவிர யாருக்குமே சொல்லலடா" பெருமையாக சொல்கிறான் என்று பார்த்தால் முகம் சோகமாக இருந்தது.

"ஏன் யாருக்கும் சொல்லல?" முகத்தை அவன் பக்கம் திருப்பி கேட்டேன். அவன் என்னை சட்டை செய்யாமல் வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான்.

என் தொடையில் ஏதோ உறுத்தியது. ஆஹா வைப்ரட்டரில் வைத்திருந்த ஃபோன். இவ்வளவு களேபரத்தில் அதை விட்டுவிட்டேன். வேகமாக எடுத்துப்பார்த்தேன். என் செல்லம் தான். 11மிஸ்டு கால்ஸ். 7எஸ்எம்எஸ். முதல் இரண்டு எஸ்.எம்.எஸ் சாதாரணமாக அடுத்த இரண்டு கெஞ்சல் தொனியில் கடைசி மூன்று 'என் மூஞ்சிலேயே முழிக்காத' என்னும் ரேஞ்சில்.

பதறிப்போய் ஃபோன் செய்தேன். கட் செய்தாள். மீண்டும் மீண்டும் கால் செய்தேன். அட்டண்ட் செய்து உடனே கட் செய்தாள். 'என்ன நெஞ்சழுத்தம்டீ ஒனக்கு!' கால் செய்வதை நிறுத்திவிட்டு எஸ்.எம்.எஸ் டைப் செய்தேன்.

"பொட்டச்சி சாகவாசம் மட்டும் வச்சுக்கிடாதடா மச்சி" அழுத்தமாக கலக்கமாக அவனிடம் இருந்து வார்த்தைகள் வந்தன. எஸ்.எம்.எஸ். டைப் செய்றத பாத்துருப்பானோ என்று பதறி ஃபோனை என் மடியில் கவுத்தி வைத்து  அவனைப் பார்த்தேன். அவன் அப்போது பார்த்த திசையிலே இப்போதும் பார்த்துக்கொண்டிருந்தான். நல்ல வேள எஸ்.எம்.எஸ்அ பாக்கல.

"என்ன மாப்ள சொன்ன?"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டுறத மொத நிறுத்துறா"

"எனக்குக்கூட தான் நீ மச்சின்னு கூப்டுறது கேவலமா இருக்கு"

"மெட்ராஸ்லயே அப்டித்தான் கூப்டுறாய்ங்க தெரியும்ல"

"யெப்பா ராசா இது மதுர. சரி மேட்டர சொல்லு. எதுக்கு 'பொட்டச்சி சவகாசம் வச்சுக்காத'ன்னு சொன்ன?"

"நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்"

"நான் என்னடா கேட்டேன்? ஓ ஒனக்கு மட்டும் சோபா பத்திரிக்கை வச்சதப் பத்தி கேட்டதா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?" ஏதோ காதல் தோல்வி கசமுசா என்று தெரிந்தது. ஆனாலும் எந்த விதமாகத் தோல்வி என்று தெரிந்துகொள்வதில் ஒரு ஆனந்தம் தானே? அதுவும் இவன மாதிரி ஒரு அப்பிராணி சிக்குனா எந்தப் பொண்ணு தான் விடுவா? ஆனாலும் மனதில் சோபா மேல் இருந்த பழைய கிரேஸ் கொஞ்சம் குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். போயும் போயும் இவன! அய்யோ ஆண்டவா. 


இவன் கறுப்பு. அவா தமன்னாவ விட செகப்பு. இவன் ஒடிஞ்சு விழுற விளக்கமாத்து குச்சி மாதிரி ஒல்லி. அவா தள தளன்னு பால்கோவா மாதிரி. இவன் குட்டை. அவா ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். அந்தக் கூந்தல்? அடர்த்தியாக அவள் இடுப்புவரை தொங்கிக்கொண்டிருக்கும். வெள்ளிகிழமையானால் நாங்கள் எல்லாம் செத்துவிடுவோம், அவளின் ஈரமான பின்னாத நீண்ட கூந்தலைப் பார்த்து. ஹோம்லி கேர்ள்னு சொல்லுவாய்ங்களே அது அவளுக்கு தான் பொருந்தும். அவ்வளவு அடக்கஒடுக்கமான அமைதியான பெண். ஒரு பெண் எப்படி இருந்தால் ஆணுக்குப் பிடிக்குமோ அதை விட அதிகமாகவே அவளிடம் எல்லாம் இருந்தன. ஆனால் இவன்? சரி வேண்டாம். சோகமாக இருப்பவனப் பத்தி தப்பா நெனைக்கக்கூடாது. அவனே ஆரம்பித்தான்.


"நாங்க காலேஜ் டேஸ்க்கு அப்புறம் சென்னைல ஒரு  இன்டர்வியூ நடக்கும் போது மீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பழக்கம்டா. மொத ஒரு வருசம் ஃபிரண்ட்ஸா தான் இருந்தோம். அப்பறம் தான் நாங்க லவ் பண்றோம்னு எங்களுக்கே தெரிஞ்சது." ஏதோ கேன்சர் இருப்பதை டாக்டர் கண்டுபிடித்தது போன்ற சோகத்தில் சொன்னான்.

"சரி இப்போ எதுக்குடா இன்னொருத்தன கல்யாணம் பண்றா? எதுவும் சண்டையா?"
"ஹிம்" விரக்தியாகச்சிரித்தான் "இப்போ வரைக்கும் நான் அவகிட்ட ஒரு தடவ கூட சண்ட போட்டது இல்ல" ஒரு பெருமூச்சோடு ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

"மாப்ள என்ன தான்டா பிரச்சன? ஏன்டா இந்த கல்யாணத்துக்கு அவா ஒத்துக்கிட்டா?"

"நானும் அவளும் வேற வேறயாம்"

"வேற வேறனா? வேற வேறயா இருந்தாத்தான்டா எல்லாம் சரியா நடக்கும்" என் புத்திசாலித்தனமான ஜோக்கை அவன் ரசிக்கவில்லை. பேசாமல் இவனைத் தள்ளிவிட்டு அந்தப் பாட்டியை உட்காரச்சொல்லலாமா என்று யோசித்தேன்.


"வேற வேற ஜாதிடா. அவங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்களாம்" அவன் சொல்லும் தொனியிலேயே தெரிந்தது சோபா இவனை கழட்டி விட சொன்ன வார்த்தை தானே அன்றி அதில் ஒன்றும் உண்மை இல்லை என்று. சோபா மட்டுமா எல்லாப் பெண்களுக்கும் இது ஒரு நல்ல ஆயுதம் தானே. இந்த ஜாதிங்குற ஒன்னு இல்லாமலே இருந்திருந்தா பொண்ணுங்கல்லாம் என்ன காரணம் சொல்லுவாளுக?
"சரி மாப்ள, அது நீ லவ்வ ப்ரொபோஸ் பண்ணும் போதே தெரியாதா அவளுக்கு? அப்ப சொல்ல வேண்டியது தானடா?"

"மொத ப்ரொபோஸ் பண்ணதே அவா தான்டா" குண்டைத்தூக்கிப் போட்டான்.

"டேய் என்னது அவா ப்ரொபோஸ் பண்ணுனாளா? அவள அமைதியான பயந்த சுபாவம் உள்ள பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம் எல்லாரும்?"

"ஆமாடா. அத நானும் லவ்வுன்னு தான் நம்பிக்கிட்டு இருந்தேன். மொத எல்லார்கிட்டயும் என்ன பெஸ்ட் ஃபிரண்ட் பெஸ்ட் ஃபிரண்ட்னு சொல்லியே பேசிட்டு இருப்பா. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பெறகும் நான் மத்தவங்க முன்னாடி அவளோட பெஸ்ட் ஃபிரண்ட் தான். லவ்வர்னு சொன்னா அவளப்பத்தி தப்பா நெனைப்பாய்ங்களாம். நானும் சரி நம்ம ஆளோட பேர் கெட்டுப்போயிறக்கூடாதேன்னு கம்முனு இருந்தேன்டா" என் முகம் பார்க்கவேயில்லை அவன். இந்தப் பசங்க எல்லாவனுமே இப்படித்தான். தைரியம் கெடையாது. இதே ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைனா இந்நேரம் முகத்துக்கு நேரா பாத்து தைரியமா அழுதுகொண்டோ கோவத்தோடோ நியாயம் கேட்பாள். இவனுங்க ஒன்னத்துக்கும் ஆக மாட்டானுங்க.

"இப்படித்தான்டா ஒரு தடவ, என் கூட பாஸ்கர்னு ஒருத்தர் வேல செய்யுறாரு. அவர் கிட்ட இவள லவ் பண்றதப் பத்தி சொன்னேன். அவரும் 'வாழ்த்துக்கள் பாஸ், கலக்குங்க'ன்னு சொன்னாரு. இத அவாகிட்ட சந்தோசமா சொன்னேன்டா. அதுக்கு என் கூட எப்படி சண்ட போட்டா தெரியுமா?"

"ஆமா நீ பாட்டுக்க அவளுக்கு முன்னப்பின்ன தெரியாதவங்க கிட்ட சொன்னா அந்த்ப்பொண்ணுக்கு கோவம் வரத்தான செய்யும்?" என்னால் அவனிடம் எப்படியெல்லாம் கரக்க முடியுமோ அந்த மாதிரியெல்லாம் பேசினேன்.

"டேய் டெய்லி பேசும் போதே அவா சொல்ற கண்டிஷன் என்ன தெரியுமா? 'நாம லவ் பண்றது யாருக்குமே தெரியக்கூடாது'னு தான் சொல்லுவா" எனக்கு ஏதோ கள்ளக்காதல் கதையைக் கேட்பது போல் இருந்தது. "ஒனக்கே தெரியும் நானும் கண்ணனும் எப்படி பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு. நான் அவன் கிட்ட கூட இப்போவரைக்கும் சொல்லலடா. இந்த மேட்டர் தெரிஞ்ச ரெண்டாவது ஆளே நீ தான்"

கொஞ்சம் பெருமையாக இருந்தது. சுடச்சுட நண்பர்களோடு அரட்டை அடிக்க ஒரு விஷயம் கிடைத்ததால். "சரி அவளுக்கு யாருனே தெரியாத ஆள் கிட்ட சொன்னதுனால அவளுக்கு என்னப் பிரச்சனையாம்?"

"அதுக்கு அவா சொன்ன காரணம் தான்டா என்ன ரொம்ப வருத்தப்பட வச்சது மச்சி" சாகப்பொற நேரத்துலையும் இவன் மச்சியை விட மாட்டான் போல "அதாவது நாளைக்கு இவளுக்கு மாப்ள பாக்கும் போது அந்த மாப்ள வீட்டுக்காரங்க அவருக்கு சொந்தக்காரங்களா இருந்து அவரு இவளப் பத்தி அவங்க கிட்ட தப்பா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு கேட்டாடா!"

 "டேய் அவா ஒன்னத்தானடா லவ் பண்ணிக்கிட்டு இருந்தா? பெறகு ஏன்டா அப்டி சொன்னா?"

"நானும் அதத் தான்டா கேட்டேன். 'நாளைக்கே என்னவேணும்னாலும் நடக்கும்'னு சொன்னாடா"

எனக்கு அவன் மீது லேசாக பச்சாதாபம் வந்தது. "டேய் நம்ம சோபாவாட இப்படியெல்லாம் பேசுனது? ரொம்ப நல்ல பொண்ணுன்னுலடா நெனச்சுக்கிட்டு இருக்கோம்"

"எவளையும் அப்டி மட்டும் நெனைக்காதடா. அவளுக தேவைக்கு மட்டும் நம்மள யூஸ் பண்ணிட்டு ஒரு டிஸ்ஸு பேப்பர் மாதிரி தூக்கிப்போட்டுட்டு போயிடுவாளுக" என்னால் அவன் சொன்ன உவமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

'இதாவது பரவாயில்லடா. ஒரு தடவ என்ன நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல வெயிட் பண்ண சொன்னா. சாந்தரம் 4 மணிக்குப் போனேன். ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவா வரவே இல்ல. கால் பண்ணா அட்டண்ட் பண்ணல, எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை வரல. எனக்கு ரொம்ப பயம் ஆகிருச்சி. வீட்டுக்குப்போகவும் மனசு இல்ல. 8மணிக்கு மேல எனக்கு கால் பண்ணாடா."

"நீ அப்போ வரைக்கும் ஸ்டேஷன்லயா இருந்த?"

"ஆமா' அவன் முகம் மாறியது. "போன் பண்ணி 'ஸாரி செல்லம் கொஞ்சம் லேட் ஆகிருச்சி. இந்தா வந்துறேன்'னு சொல்லிட்டு என் பதிலுக்குக் கூட வெயிட் பண்ணாம ஃபோன வச்சுட்டா. நான் நாய் மாதிரி எவ்ளோ நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். 8.30க்கு வந்தா"

"நல்லா நாலு கேள்வி கேட்டியாடா?"

"அப்படி கேக்கணும்ன்னு தான் இருந்தேன். ஆனா அவளப்பாத்ததும் அவா மேல இருந்த கோவம் எல்லாம் போயிருச்சி"

"அதான்டா இவளுக நம்ம தல மேல ஏறி ஆடுறாளுக" என் கோவம் எனக்கு. கால் கட் பண்ணிய என்னவள் இப்போது வரை திரும்ப என்னை அழைக்கவும் இல்லை, ஒரு எஸ்.எம்.எஸ் கூட இல்லை.

"உண்மை தான்டா. நான் அமைதியா இருந்ததப் பாத்துட்டு 'நான் இப்போ சொல்றத கேட்டு நீ கோவப்படக்கூடாது'னு சொன்னா. இனிமேல் கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னேன்."

"ஆமா இதுக்கு மேல என்னடா நடக்கணும் நம்மள அவமானப்படுத்த? சரி அப்டி அவா என்ன சொன்னா?"

"ஹா ஹா" சோகத்தில் சிரிப்பவனின் நிலையை அவன் வலியை உணர்ந்தேன். "பெருசா ஒன்னும் சொல்லலடா. 'ஸாரி செல்லம், என்ன பொண்ணு பாக்க வந்திருந்தாங்க, அதான் லேட்டு'ன்னு சொன்னா. அவா எதுக்கு சாரி சொல்றான்னு பாத்தியா? லேட் ஆனதுக்கு ஸாரியாம், பொண்ணு பாக்க வந்தது ஏதோ சாதாரண விசயம் மாதிரி சொன்னாடா"

எனக்கு சோபா இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவளாக இருப்பாளா என்று தோன்றியது. அதுவும் அவள் வாயில் இருந்து இவனையெல்லாம் 'செல்லம்' என்று சொல்லியிருக்கிறாள் என்றால் இது காலக்கொடுமை தான். "அடுத்து என்ன தான்டா ஆச்சு? நீ என்ன சொன்ன?"

"ஓஹ் அப்டியா? நீ என்ன சொன்னனு கேட்டேன். அதுக்கு அவா 'மாப்ள வீட்ல எல்லாருக்கும் என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் மாப்ளைய புடிச்சிருக்கு'னு சொன்னா."

"டேய் என்னடா இது? அவா கல்யாணம் இப்போ வேண்டாம்னு கூட வீட்ல சொல்லலையா?"

"எதுக்கு சொல்லணும்னு கேட்டாடா! 'நான் தான் முன்னாடியே சொல்லிருக்கேனே நம்ம லவ்வுக்குலாம் எங்க வீட்ல ஒத்துக்கிட மாட்டாங்கன்னு, இப்போ எனக்கு மாப்ள வேற பாத்துட்டாங்க. என்னால எப்டி வீட்ல சொல்லமுடியும்டா? என்னப் பத்தி தப்பா நெனைக்க மாட்டாங்களா? என்ன ஆனாலும் நீ தான்டா என்னோட பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னா. அன்னைக்குல இருந்து மச்சி, யார் 'பெஸ்ட் பிரண்ட்'னு சொன்னாலும் எனக்கு யாரோ என் பொறப்ப பத்தி தப்பா பேசுற மாதிரி இருக்கு"

"டேய் இப்படியெல்லாமாடா அவா நடந்துகிட்டா? அதான்டா சிம்பு எதோ ஒரு படத்துல சொல்லுவானே ஜீன்ஸ் போட்டவயெல்லாம் கெட்டவ இல்ல. அடுத்து என்னதுடா சுடிதார் போட்டவளா இல்ல சேல போட்டவளா?" என்னை அவன் முறைத்தான். "ஸாரி மாப்ள"

"அவான்னு இல்லடா எல்லாப் பொண்ணும் அப்படித்தான். அதான் பொட்டச்சி சகவாசம் வச்சுக்கிடாதன்னு சொன்னேன். அவளுக்கு நான் ஒரு மோதிரம் வாங்கிக்கொடுத்தேன்டா. ஹிம் இன்னைக்குக் கூட அவ கைல இருந்தது. கல்யாணத்துகு ஒரு மாசத்துகு முன்னாடி ஃபோன் பண்ணா. ரொம்ப நாளைக்குப் பிறகு கூப்டுறாளேன்னு சந்தோசமா அட்டண்ட் பண்ணேன். 'GRT கடை எத்தன மணி வரைக்கும் தொறந்து இருக்கும்? நீ கூட எனக்கு ஒரு தடவ ரிங் வாங்கிகுடுத்தேல'னு கேட்டா. எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லு?"

"சரி விட்ரா. எதுக்கு டென்ஷன் ஆகுற? அதான் உன்ன விட்டு போயிட்டால? இன்னும் எதுக்கு வருத்தப்படணும்?"

"இல்லடா இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இவளுக எல்லாருமே இப்படித்தான்டா. கல்யாணம் ஆகுற வரைக்கும் சப்ஜெக்ட்ல டவுட் க்ளியர் பண்றதுல இருந்து, ஊர் சுத்திக்காட்டி, துணிமணி எடுத்துக்கொடுத்து, அடிக்கடி கிஃப்ட் வாங்கிக்கொடுத்து, நல்லா கவனிச்சி, டெய்லி வாட்ச்மேன் வேல பாக்குறதுக்கு ஒருத்தன் வேணும் இவளுகளுக்கு. அவனுக்குப் பேரு லவ்வர். அது கூட அவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவாளுக. மத்தவங்களுக்கு அவன் ஒரு பெஸ்ட் ஃபிரண்ட். ஒரு காலத்துல லவ்வரும் ஃபிரண்ட் புருஷன் இது எல்லாத்துக்குமே வேற வேற அர்த்தம்டா. ஆனா இன்னைக்கு புருஷன் லவ்வர் பெஸ்ட் ஃபிரண்ட்னு பேரு மட்டும் தான் வேற வேற. ஆனா எல்லாருக்கும் வேல என்னமோ ஒன்னு தான்"

அனுபவப்பட்டவன் சொல்வது எல்லாமே எனக்கு சரி என்று தோன்றியது. மீண்டும் ஆரம்பித்தான். "அது எப்டிடா லவ் பண்றவன் கிட்டயே தைரியமா 'நாம லவ் பண்றத வெளிய சொல்லாத'ன்னும், 'எனக்கு மாப்ள பாக்குறாங்க'னும், சொல்ல முடியுது? ஏன்னா இவளுக பொம்பளைகளாம். கெட்ட பேர் எடுத்தா குடும்பத்துக்கே அசிங்கமாம். நம்மல மட்டும் என்ன ரோட்லயாடா பெத்துவிட்ருக்காய்ங்க? நம்ம குடும்பத்துக்குலாம் மானம் ரோஷம் கெடையாதா?" கோவத்தில் மிகவும் சத்தமாகப் பேச ஆரம்பித்தான்.

"மாப்ள பைய பேசுடா" அவன் தொடையில் கையை வைத்து அழுத்தினேன். அதற்குள் வண்டி விருதுநகர் வந்துவிட்டது.

"காதல்னாலே எல்லாரும் தப்பா புரிஞ்சு வச்சுருக்காங்கடா. காதல்னா என்னன்னு தெரியுமா?"

எனக்கு பயமாகிவிட்டது. இவ்வளவு நேரம் வருத்தம் இனிமேல் தத்துவமா என்று பயந்துவிட்டேன். "மாப்ள நான் இங்க தான் எறங்கணும். உன்கிட்ட ஃபோன்ல பேசுறேன்டா"

"சிவகாசில தானடா ஒங்க வீடு?"

"இல்ல மாப்ள சித்தி வீட்ல வேல இருக்கு"

"டேய் பட்டிக்காட்டான் மாதிரி மாப்ளன்னு கூப்டாதடா"

"சரி மாப்ள வரேன்" என்று ஒரு வழியாக இறங்கி அவன் மொக்கையில் இருந்து தப்பித்து அடுத்த சிவகாசி பஸ்ஸுக்கு காத்திருந்தேன். தொடையில் ஒரு நமநமப்பு. ஆஹா போன் அடிக்குது. எடுத்துப் பார்த்தேன். என்னவள். அட்டண்ட் செய்தேன்.

"என்ன செல்லம் கோவமா? நான் நெறையா மெசேஜ் அனுப்பியும் கால் பண்ணியும் நீ கண்டுக்கவே இல்லையா, அதான்டா உன் கால கட் பண்ணிட்டேன். சாரிடா எரும. அதுக்காக என் கூட பேசாம இருந்திருவியாடா?"

"இட்ஸ் ஓகேடா செல்லம். ஒம்மேல எனக்கு கோவம் வருமாடா? பஸ்ல பழைய ஃபிரண்ட் ஒருத்தன பாத்தேன். அவன் கூட பேசிக்கிட்டே..."

"அப்போ உன் ஃபிரண்ட்ட பாத்தா என்ன மறந்துருவல்ல?"

"இல்லமா இது கொஞ்சம் சீரியஸ் விசயம்டா.... " முழு கதையையும் அவளிடம் சொன்னேன். 

"சே இப்டியெல்லாமாடா பொண்ணுங்க இருப்பாங்க?" என்றாள் என்னவள். நல்லவள்.

"ஆமா கண்ணு. அதானாலத் தான் அவன் இப்போ எல்லா பொண்ணுங்க மேலையும் வெறுப்பா இருக்கான்"

"சரி நீ நம்ம மேட்டர இன்னும் யார்கிட்டயும் சொல்லலையே? உன் ஃப்ரண்ட் கிட்ட சொல்லிட்டியா? நீ பாட்டுக்க ஓட்ட வாய் மாதிரி யார் கிட்டயும் சொல்லிறாதடா"

நினைத்துக்கொண்டேன் 'குத்துங்க எசமான் குத்துங்க'..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One