ஏன் கார்ப்பரேட் வேண்டும்?

Saturday, July 21, 2018

மோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு, நாட்டின் பாதுகாப்பின்மை என எதையும் சொல்ல முடியாமல் இவர்கள் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் தான் இந்த கார்ப்பரேட் மேட்டர்.. சரி கார்ப்பரேட்டுன்னு கத்துறவனெல்லாம் யாருன்னு பாத்தோம்னா கார்ப்பரேட்டிலோ கார்ப்பரேட்டுக்கோ வேலை செய்துகொண்டு, கார்ப்பரேட் தயாரித்த கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் கார்ப்பரேட் ஒழிகன்னு கூவிக்கிட்டு இருப்பான்.. சரி இப்ப நம்ம சங்கதிக்கு வருவோம்..

கார்ப்பரேட் என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? அதென்ன நாட்டிற்கு அவ்வளவு கேடான விசயமா? ஏன் இவ்வளவு எதிர்ப்பு? கார்ப்பரேட்டுகள் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காதா?

கக்கூஸ் போக ஒரு மறைவான இடம் கூட இல்லாதவனில் தொடங்கி, ஒரு வேளை உணவே பேராசையாக இருப்பவனும் உலகிலேயே அதிக விலைமதிப்பிலான வீட்டைக் கட்டியவனும் வாழும் அனைத்து நிலை மக்களும் வாழும் தேசம் இது.. இங்கு அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.. பெண்களுக்குக் கழிப்பிடம், ஏழைகளுக்கு வீடு, மருத்துவம், போக்குவரத்து, கல்வி என அனைத்துத் தரப்பு மக்களுக்குமானத் தேவைகளைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். இதற்கு நடுவில் டூவீலரில் போறவனில் இருந்து போர்ஷா கார் வைத்திருப்பவன் வரை வழுவழு ரோடு வேண்டும், அதுவும் ஓசிக்கு வேண்டும்..

ஒரு அரசாங்கத்திற்கான முழுமுதல் வருமானம் வரி.. அந்த வரியை நாம் எப்படிப் பார்க்கிறோம்? வரி என்றாலே வலிக்கிறதே நமக்கு? நாட்டில் வண்டிகளின் விற்பனையும் விலையும் ஏறிக்கொண்டே தான் போகிறது.. ஆனால் பெட்ரோல் மட்டும் லிட்டர் 10ஓவாய்க்கு வேண்டும் என்பார்கள் என்னமோ மாதம் 100லிட்டர் பெட்ரோல் போடுவது போல்.. சரி எல்லாம் செஞ்சிரலாம் வரியை ஒழுங்காக் கட்டுங்கடான்னா அதுவும் பிடிக்காது.. வரி கட்டவும் வலிக்கும், ஆனால் எல்லாம் ஓசியாகவும் வேண்டும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன தான் செய்யும்?

என்னது அரசு நிறுவனங்கள் மூலமான வருமானமா? அரசாங்க ஊழியர்கள் எல்லாம் பே கமிஷன் வேண்டும் என்று மட்டும் தான் பேயாகக் குதிப்பார்களே தவிர தங்கள் நிறுவனம் லாபமாக ஓட வேண்டுமே எனத் துளியும் யோசிப்பவர்கள் அல்லர்.. அரசு நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை விட அதிகமாக ஊதியம், பென்சன் போன்றவற்றிற்கே  செலவழிக்கின்றன.. சங்கமே அபராதத்தில் ஓடும் போது எங்கிருந்து நாட்டிற்காகப் பணம் எடுப்பது?

சரி எல்லோரும் விவசாயம் பார்த்து இந்தியாவை மிகப்பெரிய விவசாய நாடாக மாற்றினால் என்ன? பாஸ், இன்னைக்கு நிலைக்கு பலரும் விவசாயத்தை விட்டுட்டு நகரத்துக்கு வந்துட்டு இருக்காங்க.. அப்போ லாஜிக்படி விவசாயத்திற்கான தேவை அதிகரித்திருக்க வேண்டும்.. ஆனால் நம் விவசாயிகள் தக்காளியையும் வெங்காயத்தையும் கிலோ 150ரூ வரை விற்பார்கள், அடுத்த சில நாட்களிலேயே விலையில்லை எனச் சாலையில் வீசுவார்கள்.. அதுவும் போக நாம் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்து தான் இருக்கிறோம்.. அரிசிக்கும் பருப்புக்கும் எவனிடத்திலும் கையேந்திக்கொண்டு இருப்பதில்லை.. இந்த நேரத்தில் அனைவரும் விவசாயத்தின் பக்கம் திரும்பினால் மொத்தமாக அந்தத் துறையையே ஷட்டர் போட்டு மூடிவிடுவது தான் ஒரே வழி.. ஒரு சில “பசுமை விவசாயிகளின்” பகட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்.. மிகக் குறிப்பாக ஆடு, மாடு மேய்ப்பதைத் தேசியத் தொழிலாக ஆக்குவேன் என்பதெல்லாம் நம்மை கோவனத்தோடு அலைய விடுவதற்கான வேலைகள் தான்.. 

இப்ப என்ன தான்யா செய்யலாம் இந்த 120 கோடி ஜனங்களின் தேவைகளுக்கு? அம்பானி, அதானி, டாடா, பிர்லா, கோட்ரெஜ், வேதாந்தா, எனப் பெரும் முதலாளிகளைத் தான் தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும் அதுவும் சல்லிசு விலையில்.. ஏன் சல்லிசு விலை? ஏன்னா நாம கொடுக்கலேன்னா அவனுக்கு இடமும் வசதியும் கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன அதனால் தான்.. அதாவது இப்ப எல்லா கம்பெனிகளும் ஆந்திரா தெலுங்கானாவை மொய்ப்பது போல்.. சரி அவன் தொழில் தொடங்கிட்டானா? இப்ப என்ன செய்வான்? வேலைக்கு ஆள் எடுப்பான்.. எங்க இருந்து? அந்த நாட்டில் இருந்து.. சரி ஆள் எடுத்தாச்சி, அடுத்து? தனியார் கம்பெனிக்காரன் தொழில் தொடங்கிட்டுச் சும்மாவா இருப்பான்? லாபம் பாக்கணும்.. ஆளுங்கள சக்கையாப் பிழிவான், சுளையாய்ப் பணமும் தருவான்.. வேலை செய்பவன் கையில் பணம், முதலாளி கையில் பணம்.. வேலை செய்பவன் வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவான், சேமிப்பான்.. முதலாளி லாபத்தைக் கொண்டு இன்னொரு ஊரில் கிளை ஆரம்பிப்பான்..

இப்ப அந்த நிறுவனத்தைச் சுற்றி ஓட்டல், டீக்கடை, ஃபாக்டரி என்றால் டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ், மெக்கானிக் கடை, புதிதாகக் குடியிருப்புகள், ஆட்டோ சர்வீஸ், காய்கறி, பலசரக்கு, மருந்துக்கடை என ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.. சரி அந்த நிறுவனத்திற்கான மூலப்பொருட்கள் தருவதற்கு ஒரு கம்பெனி வேண்டுமே? பேக்கிங் செய்ய இன்னொரு கம்பெனி முளைக்குமே? பொருட்களைக் கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள் புதிதாக வருமே? ஆம், இப்படித்தான் பொருளாதாரம் வளரும்.. கார்ப்பரேட்டுகள் அதிகபட்சம் 10% வரை இந்தியாவில் வேலை வாய்ப்பைக் கொடுத்தால் அவனைச் சார்ந்து இன்னொரு 20-30% வேலை வாய்ப்பு உருவாகும்.. நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும், வரி வருமானம் கூடும், தொழில்வளம் பெருகும்.. 

இதனால் தான் சார் நாங்க கார்ப்பரேட்டை வரவேற்கிறோம்.. அதற்காக சிறு தொழில்களை வேண்டாம் என முடக்கவில்லை.. அவர்களுக்கு MSME லோன்கள் கொடுக்கப்படுகின்றன மிக அதிக அளவில்.. சரி இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக உள்ளூர்த் தொழிலான பட்டாசு, பின்னலாடை, அச்சுத் தொழில் போன்ற நிறுவனங்களை வைத்துச் செய்ய முடியாதா என்கிற கேள்வி எழலாம்..

சிவகாசி - கிட்டத்தட்ட 100ஆண்டு காலமாய் பட்டாசுத் தொழிலையும் அச்சுத் தொழிலையும் நம்பிப் பிழைக்கும் (பிழைத்த??) ஊர்.. இங்கு என்ன சம்பளம் தெரியுமா ஒரு வேலையாளுக்கு? வெறும் 4000ரூபாய்.. ஆபிஸ் மேனேஜர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் சம்பளமே 5இலக்கத்திற்குப் போகாது பெரும்பாலும்.. PF, ESI, Gratuity பற்றியெல்லாம் இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை.. சரி லாபத்தில் அந்த முதலாளிகள் ஊருக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? மூன்று தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் பிழைக்கத் தெரியாமல் கொஞ்சம் எய்டட் பள்ளி & கல்லூரிகளைக் கட்டிவிட்டுப் போனதோடு சரி.. இப்போது இருப்பவர்கள் எல்லாம் international பள்ளிகளையும், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளையும் தான் கட்டுகிறார்கள்.. Strictly no for employees’ children without capitation fees என்று போர்டு மாட்டாத குறை தான்.. இன்றும் மாலை நேர சிவகாசிச் சாலைகளில் மினி பஸ்சில் போனால் 2 ரூபாய் மிச்சப்படுத்தலாமே என அரசு பஸ்களில் ஏறாமல் மினி பஸ்களில் நசுங்கிப் போய் வீடு திரும்பும் எத்தனையோ அச்சாபிஸ் & பட்டாசு ஃபேக்டரி ஊழியர்களைப் பார்க்கலாம்.. அதே சாலையில் BMW, Audi, Porsche, Jaguar கார்களும் பறந்து கொண்டிருக்கும்.. 

ஒரு ஊருக்குள், ஒரு ஜாதிக்குள் என உருவாக்கப்படும் தொழில்களால் இப்படியான ஏற்றத்தாழ்வுகள் தான் உருவாகும்.. கார்ப்பரேட்டுகள் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யும் வினையூக்கிகள்.. அங்கு ஜாதி, மதத்திற்கு இடமில்லை.. நிஜமான சமத்துவபுரங்கள் அவை.. ஒவ்வொருத்தனும் சொந்தக் காசில் கல்யாணம் செய்துவிடலாம், வீடு வாங்கிவிடலாம் என நம்பிக்கையூட்டுபவை அவை.. நல்லாப் படித்தால் நல்ல வேலையில் அமர்ந்து வயக்காட்டிலும், ஃபாக்ட்ரியிலும் பிழியப்படும் பெற்றவர்களைக் காப்பாற்றி விடலாம் என்கிற பாசிடிவ் எனர்ஜியைக் கொடுப்பவை அவை..

இனியாவது கார்ப்பரேட்டைக் குறை சொல்லும் முன், கொஞ்சம் யோசித்துவிட்டுக் குறை சொல்லவும்.. இந்த தேசத்தை, இத்தனைக் கோடி மக்களை நிஜமான வளர்ச்சிக்குக் கூட்டிச் செல்லப்போபவை அவை தான்..

7 comments

  1. காவி டவுசர் என சிம்பிளா சொல்லிட்டு போயிடுவாய்ங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவன் சொல்றான்னுலாம் யோசிச்சோம்னா கடைசி வரை அந்தக் கூமுட்டைகள் நம்மையும் சேர்த்துத் தான் மிதித்துக் கொண்டிருப்பார்கள்..

      Delete
  2. எல்லாம் சரி, இப்படியே போனால்...?

    ReplyDelete
    Replies
    1. 120கோடி பேருக்குமான முன்னேற்றத்திற்கு இன்னும் 50ஆண்டுகளுக்கு இது தான் வழி..

      Delete
  3. நலம் தானே... இரண்டரை வருடம் கழித்து...

    தொடர்க...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணே.. நீங்க எப்படி இருக்கீங்க?

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One