NOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...

Saturday, March 29, 2014

தேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் year end pressureல் சிக்கித்தவிப்பதால் நேராக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.. (’சிவகாசிக்காரன் பதிவு என்றாலே நீ................ளமா இருக்கும்’னு சொல்றவங்க எல்லாம் இதப்பாத்து சந்தோசப்பட்டுக்கோங்க)..

இந்திய தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத  அளவிற்கு இந்த தேர்தலில் இரண்டு முக்கிய விசயங்கள் பெரும் பங்காற்ற இருக்கின்றன.. ஒன்று, முதல் முறை ஓட்டுப்போடும் விடலைகள்.. இரண்டு, சமூக வலைத்தளங்கள்.. இந்த சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் அடிக்கடி, NOTA - None Of the Above (போட்டியிடும் எவனுக்கும் ஓட்டுப்போட எனக்கு விருப்பம் இல்லை) மற்றும் 49’O' பற்றி யாராவது எழுதுவதைப் பார்க்க முடிகிறது. எழுதுவது என்றால் சாதாரணமாக அல்ல, என்னமோ NOTAவும், 49'O'வும் இந்திய அரசியலையே புரட்டிப்போட்டு விடும், ஊழல் அரசியல்வாதிகளை எல்லாம் மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வைக்கும், காதை பிடித்துக்கொண்டு உக்கி போட வைக்கும், நம் காலில் விழுந்து கதற வைக்கும் என்கிற ரேஞ்சில் அடித்து துவைக்கிறார்கள்.. இந்த முதல் முறை ஓட்டுப்போட காத்திருக்கும் விடலைகளும் இதை எல்லாம் “வாவ், சூப்பர்யா” என்கிற ரேஞ்சில் வாய் பிளந்து கேட்டுக்கொண்டு புரட்சி செய்ய ரெடியாக இருக்கிறது.. சில பெரியவர்களும் கூட இதை பெரிய புரட்சி என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. சரி அவர்கள் எல்லாம் நினைப்பது போல் இந்த நோட்டாவும், 49’O’வும் அனைத்தையும் கிழித்துத்தொங்க விட்டுவிடுமா என்பது தான் இந்த பதிவு..



சரி, இந்த நோட்டா அல்லது 49ஓ என்றால் என்ன?

தேர்தல் நடக்கிறது.. மொத்தம் 10 பேர் போட்டியிடுகிறார்கள்.. அந்த பத்து பேரும் உருப்படியில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. யாருக்கும் ஓட்டுப்போட உங்களுக்கு விருப்பம் இல்லை. ஓட்டுப்போடாமல் வீட்டில் இருந்தால், நம் ஓட்டை வேறு எவனாவது அவன் கட்சிக்கு குத்தி விடுவான் என்றும் பயப்படுகிறீர்கள்.. அதனால் கவுண்டர் ”ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்”னு சொல்கிற மாதிரி ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கணும், போடாத மாதிரியும் இருக்கணும்னு நெனச்சு நம்ம கவர்மெண்ட் வச்ச ஆப்சன் தான் இந்த 49ஓ... நீங்கள் நேராக பூலிங் பூத்துக்கு சென்று, “எனக்கு யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லை”னு கெத்தாக கூறிவிட்டு, அதற்கென்று இருக்கும் ஒரு பாரத்தில் உங்கள் பொன்னான கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடலாம்.. இதனால் உங்கள் ஓட்டை பிறர் திருடுவதும் தடுக்கப்படும்.. நீங்களும் ஒரு குடிமகனாக உங்கள் கடமையை செய்தது போல் ஆகிவிடும்.. 

தேர்தலின் முக்கிய அம்சமே நாம் யாருக்கு ஓட்டுப்போடுகிறோம் என்னும் ரகசியத்தை பிறருக்கு தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்பது தான்.. ஆனால் இந்த 49ஓ என்னும் அம்சம், அந்த ரகசியத்தை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.. நான் 49ஓ க்கு ஓட்டுப்போட்டால், தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட காசு கொடுத்த என் ஏரியாவின் அனைத்து கட்சி பூத் ஏஜெண்ட்டுகளும் கூட்டணி வைத்துக்கொண்டு என்னை வெட்டிவிடுவது போல் முறைப்பார்கள்.. பின் அடுத்த தேர்தலுக்கு என் வீட்டில் ஒரு ஓட்டுக்கு கிடைக்கும் பணமும் குறையலாம்.. சொல்ல முடியாது ஆளே கூட குறையலாம்.. அதனால் அதில் இருந்து தப்பிக்க, 49ஓ வை தேர்தலின் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் இருக்கும் பக்கத்திலேயே NOTA (None Of The Above) என்று தனி பட்டன் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்பது சிலரின் வேண்டுகோள்.. இவ்வளவு தான் 49ஓ மற்றும் NOTA வின் வரலாறு..



சரி இப்போது அந்த 49ஓ பற்றி பலரும் அளந்து விடும் கதைகளைப் பார்க்கலாம்..

1. ஒரு தொகுதியில் 49ஓ அல்லது நோட்டாவுக்கு விழும் ஓட்டு, அந்த தொகுதியில் அதிகம் ஓட்டுப்பெற்றவருக்கும் அவருக்கு அடுத்த அளவில் ஓட்டுப்பெற்றவருக்குமான வித்தியாசத்தை விட அதிகம் இருந்தால், அந்த தொகுதியில் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும்.. அதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பிரதிநிதி ஒரு லட்சம் ஓட்டு பெற்று (கற்பனைக்கு தாங்க, நெஞ்ச பிடிச்சுட்டு ஒக்காந்துறாதீங்க) முதல் இடத்தில் இருக்கிறார்.. இரண்டாம் இடத்தில் இருக்கும் தி.மு.க.க்காரர் 80,000 ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறார்.. முதல் இடத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் 20000 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருக்கிறார் எண்ணிக்கையின் முடிவில்.. அதே தொகுதியில் 49ஓ வை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 20001 அல்லது அதற்கு மேல் இருந்தால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும்..

2. அந்த தொகுதியில் அதிக ஓட்டு பெற்ற வேட்பாளரை விட 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்திருந்தால், அந்த வேட்பாளரை இனி தேர்தலிலேயே நிற்க முடியாமல் செய்துவிடலாம்..

3. 49ஓ தேர்தலில் நல்லவர்களை மட்டும் தான் கொண்டுவரும்..

4. 49ஓ மூலம் அரசியல்வாதிகள் எல்லாம் விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒழுக்கமாகவும், ஷங்கர் பட ஹீரோ மாதிரி தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்..

5. 49ஓ தேசத்திலும், அரசியலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிவிடும்..

இப்படி இனி யாராவது ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸ் அப்பிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, அட டீக்கடையில் பேசினாலோ கூட தயவு செய்து நம்பிவிடாதீர்கள்.. இது எல்லாம் தேசத்தை எப்படியாவது உயர்த்தி விட முடியாதா என்கிற நப்பாசையில் நம் 49ஓ ரசிகர்கள் கிளப்பிவிட்ட உச்சபட்ச கற்பனைகள்..

49ஓ வின் முக்கிய விசயமே தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவரின் ஓட்டு வேஸ்ட் ஆகிவிடாமலும், பிறர் அதை தவறாக பயன்படுத்திவிடாமலும் காப்பாற்றுவதற்காக, நம் அரசியலமைப்பு சட்டம் செய்து கொடுத்திருக்கும் ஒரு வசதி.. அதாவது வாத்தியாரையும் அவர் நடத்தும் பாடத்தையும் பிடிக்கவில்லை.. ஆனாலும் அட்டெண்டன்ஸ் வேண்டும் என்கிற சூழலில் கடமைக்கு வந்து கிளாசில் உட்கார்ந்துவிட்டுப்போவோமே அது போல் தான் இதுவும்.. 


சரி 49ஓ பத்தி தெளிவாகியிருக்கும்னு நெனைக்கிறேன்.. இப்ப 49ஓ பத்தி நம்ம மக்கள் அளந்துவிடும் கதைகள் உண்மையாகவே இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.. அதனால் பிரயோஜனம் ஏதாவது உண்டா என இப்போது பார்க்கலாம்..

முதலில் 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்தால் மறு தேர்தல் வந்துவிடும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே ஒரு தேர்தலை நடத்தவே நாடும், அரசியல்வாதிகளும் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.. இந்த நிலையில் மறுதேர்தல் வைத்தால் அதற்கும் செலவாகும். அதனால் பொருளாதாரம் என்ன ஆகும் என யோசித்துக்கொள்ளுங்கள்.. நாட்டின் வளர்ச்சிப்பணிக்கு செலவழிக்க வைத்திருக்கும் பணம் முழுவதும் தேர்தலுக்கு தான் செலவாகும்.. ஒரு தேர்தலுக்கு செலவழிக்கும் காசை திரும்ப எடுக்கவே இவ்வளவு கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள், மறுதேர்தலுக்கும் சேர்த்து செலவழித்தால் எப்படி சுரண்டுவார்கள் என யோசித்துக்கொள்ளுங்கள்..

என்னது? மறுதேர்தலிலும் 49ஓ வென்று, மாறி மாறி மறுதேர்தல் நடந்தால் கடைசியாக ஒரு நல்லவன் ஜெயிக்க மாட்டானா என்கிறீர்களா? எப்படிங்க ஜெயிப்பான்? நல்லவன் முதல் தேர்தல்ல சொந்த காசைப்போட்டு சுயேட்சையாக நிப்பான்.. ரெண்டாவது தேர்தல்ல கடன் வாங்கி நிப்பான்.. அதுவும் உங்க 49ஓ வால் செல்லாத தேர்தல் ஆகிவிட்டால், அவனால் எப்படி மூன்றாவது முறையும் நிற்க முடியும் தேர்தலில்? காசுக்கு எங்கே போவான்? So, don't worry, மீண்டும் அதே பழைய அரசியல்வாதிகள் தான் வருவார்கள்..

49ஓ வை பற்றி ஆதரித்து பேசும் யாராவது தங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சை உட்பட அனைத்து வேட்பாளர்களையும் தெரிந்து வைத்திருப்பார்களா? மேம்போக்காக 4,5 பெரிய கட்சி ஆட்களை பார்த்துவிட்டு “எனக்கு யாரையும் பிடிக்கல” என்று சொல்வது என்ன ஞாயம்? உண்மையில் நல்லவன் வர வேண்டும் என்றால் சுயேட்சை யாருக்காவது ஓட்டுப் போட வேண்டியது தானே? சொந்தக்காசை செலவழித்து தேர்தலில் நிற்கும் ஒரு சுயேட்சை கூடவா நல்லவனாக இருக்க மாட்டான்? கண்டிப்பாக நல்லவன் இருப்பான்.. ஆனால் நமக்கு, நம் இமேஜை கூட்டிக்கொள்ள வேண்டும்.. பெரிய புரட்சியாளன் போல காட்டிக்கொள்ள வேண்டும்.. அதற்கு இந்த ஒன்றுக்கும் உதவாத 49ஓ வை தூக்கிப் பிடித்துப்பேச வேண்டும்.. 

இந்த 49ஓ வை தமிழகத்தில் பிரபலமாக்கிய எழுத்தாளர் ஞானியே (கறுப்பா இருக்கிறவனுக்கு வெள்ளைச்சாமினு பேர் வச்ச மாதிரி இவருக்கு யாரோ ஞானினு பேர் வச்சிட்டாங்க), இப்போது அதையெல்லாம் தூக்கிவீசிவிட்டு ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.. ஹா ஹா அவர் செய்வது அதை விட பெரிய காமெடி.. ”நண்பர்களிடம் சில லட்சங்கள் கடன் வாங்கி தேர்தலில் நிற்கிறேன்.. நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் தேர்தல் செலவுக்கு” என்று ஃபேஸ்புக்கில் தன் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து உதவி கேட்கிறார்.. லட்சங்களில் கடன் வாங்கி தேர்தலில் நிற்கும் ஆள் ஒரு வேளை ஜெயித்துவிட்டால், அந்த கடனை எப்படி அடைப்பார்? தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற முறையில் சம்பாதித்து தானே? So, ஓட்டு அரசியலுக்கு வந்துட்டா எல்லாரும் 100% புத்தனாவோ இயேசுவாவோ இருக்க முடியாது.. 

சரி 49 ஓ ஆதரவாளர்களின் கூற்றுப்படி மறுமறுமறுமறு..... மறு தேர்தல் நடந்து எல்லா தொகுதியிலும் நல்லவர்களே எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.. நம்மில் எத்தனை பேர் அவரிடம் சொந்த ஊர், சொந்த ஜாதி, உறவினர் என்கிற சப்பைப்பட்டுக்களுடன் உதவி என்று போய் நிற்கமாட்டோம்? தொகுதிக்கு ஒரு ஆளாவது அவரிடம் போய் தன் உறவினர் வீட்டுப் பிள்ளைக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுக்க சொல்வார் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை என்று.. அவருக்குப்பின் சொந்த ஊர் காண்டிராக்டர் ஒருவர் சொல்வார் ’எவ்வளவு கமிஷன் வேண்டுமென்றாலும் தருகிறேன், எனக்கு அந்த காண்டிராக்ட்டை முடித்து தாருங்கள்’ என்று.. இன்னொருவர் பி.எட் முடித்த தன் மச்சினனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கிக்கொடுக்க சொல்வார், எவ்வளவு லட்சமானாலும் பரவாயில்லை என்று.. அடுத்து ஒரு சொந்த ஜாதிக்காரர் டிரான்ஸ்ஃபருக்காக உதவி கேட்க காத்திருப்பார்.. இத்தனை பேர் பணத்தையும், உறவையும், ஜாதியையும் காட்டி உதவி கேட்கும் போது நல்லவன் கூட கெட்டவனாகத்தான் மாறுவான்.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் தான் செய்வான்..

ஓட்டு அரசியல் என்பதே இருக்கும் கெட்டவர்களில் சுமாரான கெட்டவனை தேர்ந்தெடுப்பது தான்.. எந்த மனிதனும் 100% நல்லவன் கிடையாது. நம்மில் இருந்து வரும் அரசியல்வாதியும் நம்மைப்போல் தான் இருப்பான்.. அவனை மட்டும் கறந்த பால் போல் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன ஞாயம்? நான் எப்போதும் சொல்வது இது தான்.. ஒரு நல்ல அரசியல்வாதி, & அரசு அதிகாரி வேண்டும் என்றால், முதலில் மக்கள் எல்லோரும் ஒழுக்கமான, சிறந்த குடிமகனாக மாற வேண்டும்.. இன்று அரசு அதிகாரிகளை லஞ்சம் வாங்குகிறான் என்றும், அரசியல்வாதிகளை ஊழல் பேர்வழி என்றும் தூற்றுகிறோமே, அவர்களை அப்படி மாற்றியது யார்? லஞ்சத்தையும், ஊழலையும் ஆரம்பித்து வைத்தது சாதாரண குடிமகனாகிய நாம் தானே? நாம் ஒரு சிறந்த குடிமகனாக வாழ்வோம் முதலில்.. பின் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் தன்னால் திருந்துவார்கள்.. ஏனென்றால் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் மக்களில் ஒருவர் தானே? நம்மில் இருந்து வருபவர்கள் தானே? ஒழுக்கம் என்பது ஒரு habit ஆக மாறிவிட்டால் எல்லோரும் நல்லவர்கள் தான்.. பின் 49ஓ வும் தேவையில்லை, நோட்டாவும் தேவை இல்லை.. இனியும் 49 ஓ வை ஏதோ பெரிய பிரம்மாஸ்திரம் போல் நினைத்துக்கொண்டிருக்காமல், உங்கள் தொகுதியில் நிற்கும் சுமாரான கெட்டவருக்கோ, சூப்பரான சுயேட்சைக்கோ உங்கள் ஓட்டைப்போடுங்கள்.. தயவு செய்து நோட்டா, 49 ஓ என்று உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்.. அதனால் பிரயோஜனம் துளியும் இல்லை.. 

22 comments

  1. ஓட்டு அரசியல் என்பதே இருக்கும் கெட்டவர்களில் சுமாரான கெட்டவனை தேர்ந்தெடுப்பது தான்.. எந்த மனிதனும் 100% நல்லவன் கிடையாது. நம்மில் இருந்து வரும் அரசியல்வாதியும் நம்மைப்போல் தான் இருப்பான்.. = எங்கள் அருமை Ram Kumar இன் அருமையான அரசியல் பதிவு. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் ராம்குமார். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் ராம். நம் தொகுதியில் சுமாரான கெட்டவர் யார் என்று பார்த்து ஓட்டுப் போட வேண்டிய நிலையில்தான் இன்ற மக்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.. 49ஓ வால் ஏதாவது பிரயோஜனம் என்றாலாவது அதை தேர்ந்தெடுக்கலாம்.. ஒன்றும் இல்லாததற்கு ஏன் இந்த பம்மாத்து எல்லா?

      Delete
  3. முன்பை விட இப்போது மக்கள் யோசிக்கத் தொடக்கி விட்டார்கள் என்பது மட்டும் வரவேற்கத்தக்க உண்மை... முற்றிலும் மாற்றம் வருவது நாளாகும்...

    நமக்குள் இருப்பதை பார்க்கத் தொடக்கி விட்டாலே, பிரச்சனையும் இல்லை; பிறகு அனைத்திலும் எதிர்ப்பார்க்கும் மாற்றத்தையும் காணலாம் - என்பதை நன்றாகவே சொல்லி உள்ளீர்கள்...

    ReplyDelete
  4. தேவையில்லாத ஒன்று இந்த நோடா.... ஒருவருடைய ஓட்டு கள்ள ஓட்டாக போடமுடியாதபடி செய்வதைத் தவிர வேறெந்த உபயோகமும் இதில் இல்லை.....

    ஓட்டு போடும் நேரம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சிலரது ஓட்டு வேறு சிலரால் போடப்பட்டு விடக்கூடிய நாட்கள் இது! :)))

    ReplyDelete
    Replies
    1. கள்ள ஓட்டு விழாமல் தடுக்கத்தான் 49ஓ.. ஆனால் தேர்தலில் இந்த 49ஓ வால் கிடைக்கும் பயனை விட, கள்ள ஓட்டால் கிடைக்கும் பயன் தான் அதிகம், though கள்ள ஓட்டு தவறு என்றாலும்..

      Delete
  5. ஒரு தேர்தலை நடத்தவே நாடும், அரசியல்வாதிகளும் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.. இந்த நிலையில் மறுதேர்தல் வைத்தால் அதற்கும் செலவாகும். அதனால் பொருளாதாரம் என்ன ஆகும்---நாம் இப்படியே கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான் . ஆனால் அரசியல்வியாதிகள் மட்டும் 2 அல்லது 3 தொகுதிகளில் நின்று எல்லாவற்றிலும் வெற்றி பெற்று மற்ற 2 இடங்களை காலி செய்து, வரும் தேர்தலில் அடுத்த நாட்டுக் காரனா செலவழிக்கிறான்? சமீபத்தில் ஆம் ஆத்மி புதுடில்லியில் ஆட்சியை துறந்ததினால் அடுத்து ஒரு தேர்தல். இதற்கு யார் செலவு செய்கிறார்கள். எதோ நம்மால் இவனுங்களை நேரடியாக நசுக்க முடியவில்லை. இப்படியாவது ஆப்பு வைக்கலாம் என்ற எண்ணத்தில் பல வாக்காளர்கள் இருக்கிறார்களே. அவர்களுக்காக இது உதவட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உதவட்டும் உதவட்டும் என்றால் எப்படி உதவுகிறது சார்? பிரயோஜனமே இல்லாத டம்மி பீஸ் அது.. ஆம்ஆத்மியை நம்பியது அடுத்த தவறு.. சரி விடுங்கள் நம் மக்கள் 49ஓ, ஆம் ஆத்மி என்று போகாத ஊருக்கு தான் வழி தேடுவார்கள்.. முட்டி மோதி, பட்டு திருந்தி வரட்டும்..

      Delete
  6. நோட்டாவால் எந்த புரட்சியும் நடக்காது என்பது உண்மைதான்! அருமையான விளக்கம்! ஆனால் இருப்பதில் கொஞ்சம் கெட்டவனுக்கு ஓட்டுப் போடுதலும் நோட்டாவுக்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! மொத்தத்தில் நமது தேர்தல் முறையில் மாற்றம் வரவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் முறையில் மாற்றம் வந்து யோக்கியவே தேர்வானாலும் நாம் அவனை கெடுத்து விடுவோம் சார். மாற்றம் வர வேண்டியது தேர்தல் முறையிலோ, அரசியல் அமைப்பு சட்டத்திலோ இல்லை.. முதலில் மாற வேண்டியது நாம் தான்.. பின் எல்லாம் மாறிவிடும்

      Delete
  7. எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. உங்கள் இந்த பதிவு படித்ததிலிருந்து எனக்கு சில சந்தேகங்கள்.



    உங்களின் இந்த பதிவு 49 ஒ தேவையற்றது என்பதா அல்லது எந்த முறையில் ஒரு நல்லவன் தேர்ந்தேடுக்கபட்டாலும் அவனையும் நம் மக்கள் கெட்டவர்களாக மாற்றிவிடுவார்கள் என்பதா?



    சுயேட்சை வேட்பாளரை தெரியாத பாமர மக்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் தவறு என்று சொல்லிவிட முடியாது அவர்களுக்கு தெரிந்தது சில பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அவர்களும் மிக மோசமானவர்கள் தான் எனில் அவர்களுக்கு ஒரு ஓட்டுபோடுவதை விட ஒரு ஒட்டு வீணாவதே மேல் தானே?



    நீங்கள் சொல்வது போல 49ஒ மூலம் மருமறு......மறு முறை தேர்தல் நடக்கும்போது சொந்த காசை போட்டு சுயேட்சையாக நிற்பவன் ஒரு கட்டத்தில் நிற்காமல் போகலாம் ஆனால் அந்த பெரிய கட்சி வேட்பாளருக்கும் பல முறை தேர்தல் நடந்தால் காசு செலவாகும் தானே என்ன தான் காசு அதிகமாக இருந்தாலும் ஒரு தடவை ஜெயிப்பதற்கு எவ்வளவு காசு செலவழிக்க அவர் தயாராக இருப்பார். மக்கள் தன்னை தேர்ந்தெடுக்க விருப்பப்படவில்லை என்பதும் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் இதன்மூலம் அவருக்கு தெரியவரும் மீண்டும் ஒரு கட்டத்தில் அந்த கேட்டவரே ஜெயித்தாலும் அத்தனை முறை தேர்தல் நடந்ததையும் மக்கள் தன்னை தேர்ந்தெடுக்க எவ்வளவு யோசித்தார்கள் என்பதும் இதன்மூலம் அவருக்கு நன்றாக நினைவில் இருக்கும் அதனால் ஜெயித்தபிறகு முன்னர்போல அநியாயமாக செயல்படாமல் கொஞ்சம் நியாயமாக செயல் படவேண்டும் என்று நினைபதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் இந்த பதிவு 49 ஒ தேவையற்றது என்பதா அல்லது எந்த முறையில் ஒரு நல்லவன் தேர்ந்தேடுக்கபட்டாலும் அவனையும் நம் மக்கள் கெட்டவர்களாக மாற்றிவிடுவார்கள் என்பதா?// ரெண்டுமே தான்..

      //சுயேட்சை வேட்பாளரை தெரியாத பாமர மக்கள் இருக்கிறார்கள். அது அவர்களின் தவறு என்று சொல்லிவிட முடியாது அவர்களுக்கு தெரிந்தது சில பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அவர்களும் மிக மோசமானவர்கள் தான் எனில் அவர்களுக்கு ஒரு ஓட்டுபோடுவதை விட ஒரு ஒட்டு வீணாவதே மேல் தானே? // அதற்கு ஓட்டுப்போடாமலே இருக்கலாமே? 49ஓ பற்றி தெரிகிறது ஆனால் சுயேட்சையை பற்றி தெரியவில்லையா?

      //ஆனால் அந்த பெரிய கட்சி வேட்பாளருக்கும் பல முறை தேர்தல் நடந்தால் காசு செலவாகும் தானே என்ன தான் காசு அதிகமாக இருந்தாலும் ஒரு தடவை ஜெயிப்பதற்கு எவ்வளவு காசு செலவழிக்க அவர் தயாராக இருப்பார்// பாஸ் அவங்களுக்கு எல்லாம் கம்பெனிகளும், கட்சிகளும் காசை கொட்டுக்கொடுக்க ரெடியாக இருக்கின்றன..

      //மக்கள் தன்னை தேர்ந்தெடுக்க விருப்பப்படவில்லை என்பதும் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் இதன்மூலம் அவருக்கு தெரியவரும் // அப்படி என்றால் ஒவ்வொரு தேர்தலில் தோற்கும் ஒரு வேட்பாளர் அடுத்த முறை நல்லது செய்வாரே? ஏன் செய்யவில்லை? கடந்த முறை தோற்றவர் தான் ஜெயலலிதா.. இந்த முறை ஜெயித்ததும் மக்களுக்கு நன்மையாக செய்து தள்ளி விட்டாரோ? ஆனாலும் நம்ம அரசியல்வாதிகள ரொம்பத்தான் நம்புறீங்க..

      //அதனால் ஜெயித்தபிறகு முன்னர்போல அநியாயமாக செயல்படாமல் கொஞ்சம் நியாயமாக செயல் படவேண்டும் என்று நினைபதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?// அப்படி நினைக்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்ன? முதலில் மக்கள் திருந்த வேண்டும் என நான் சொல்கிறேன்.. ஆனால் நாம் யாரும் அதைப்பற்றி பேச தயராக இல்லை.. இன்னமும் வசதியாக அரசியல்வாதிகளை மட்டுமே கை காட்டிக்கொண்டிருக்கிறோம்.. சூப்பர்.. நம் நாடு முன்னேறிய மாதிரி தான்

      Delete
  8. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன்
    அருமை நண்பரே
    இனி தொடர்வேன்

    ReplyDelete
  9. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அறிமுகத்தில் உங்கள் தளத்திற்கு வந்தேன். நீங்களே சொன்னபடி பதிவு கொஞ்சமாகஅல்ல, நீளம்தான். என்றாலும் அர்த்தமுள்ளது. இதுபற்றி எனது பதிவுக்கேள்விக்குப் பதில் இருக்குமோ என்று வந்தேன்.. நல்லவேளை இல்லை! http://valarumkavithai.blogspot.in/ நன்றி நண்பரே! தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்தக்கேள்விக்கு பதில் தெரியவில்லை சார்.. நீங்களே சொல்லிருங்களேன்..

      Delete
    2. வணக்கம் நண்பரே, பதில் எனது அடுத்த பதிவில் இருக்கிறது. நிற்க. நோட்டாவினால் பயனே இல்லை என்ற ஒரேயடியாக மறுக்க முடியாது. “மறுக்கும்“ வாய்ப்பு என்பது மறுதேர்தல் என்பதைவிடவும், உளவியல் விளைவுகள் மக்களிடத்திலும், வேட்பாளர்களிடத்திலும், எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் ஆணையத்து ஜனநாயகச் சிந்தனையிலும் பிரதிபலிக்கும் என்பதே எனது கருத்து. மாற்றங்கள் உடனடியாக வராவிடினும், மாறும் என்னும் இந்தச் சொல்லைத் தவிர அனைத்தும் மாறும் அல்லவா? வேறு வழிகளை யோசிக்க இது உதவும் நண்பா

      Delete
  10. நண்பர் திண்டுக்கல் தனபாலன் மூலம்தான் நானும் இங்கு வந்தேன். நோட்டோ பற்றிய விரிவான அலசல். பல தெரியாத தகவலும் கூட.

    ReplyDelete
  11. அதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பிரதிநிதி ஒரு லட்சம் ஓட்டு பெற்று (கற்பனைக்கு தாங்க, நெஞ்ச பிடிச்சுட்டு ஒக்காந்துறாதீங்க)😂😂😂😂

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One