என் தாத்தா சிவாஜி...

Sunday, September 30, 2012

”ஒரு ஜீப்ல ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் காட்டுக்கு வேட்டையாட போனாங்களாம்” - என்னை தூங்க வைக்க கதை சொல்ல ஆரம்பித்தார் எங்கள் அப்பா..
“ம்.. சரி” - இது நானு..
“ரெண்டு பேரும் ட்ரெஸ்ல பாம், கத்தி, துப்பாக்கி எல்லாம் மாட்டி வச்சிருந்தாங்க”
“யாருப்பா வண்டி ஓட்டுனாங்க?”
“நேத்து யாரு ஓட்டுனா?” - என்னை செக் பண்ண கேள்வி கேட்கிறார் என நினைப்பேன். பின்பு தான் புரிந்தது அவர் நேற்று சொன்னதை மறந்து கேட்கிறார் என்று..
“நேத்து ரஜினி மாமா ஓட்டுனாங்க”
“அப்படின்னா இன்னைக்கு சிவாஜி தாத்தா தான் வண்டி ஓட்டுறாங்க. காட்டுக்குள்ள வண்டி வேமா போகுது”
“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா?”
“ரஜினி மாமா போற வண்டி விழுமா? எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”
“சரி பெறகு என்ன ஆச்சி?”
“.....”
“ப்பா... எப்பா...” - அப்பா கண் அயர்ந்திருப்பார்.. “எப்பா எந்திரிங்கப்பா.. அடுத்த என்னப்பா ஆச்சி?” - தட்டி எழுப்ப ஆரம்பித்துவிடுவேன் அவரை..
மெதுவாக கண் விழித்து, எனக்கு கதை சொல்வதை உணர்ந்து, “அப்போ எதுத்தாப்ல ஒரு யான வந்துச்சி”
“பெரிய யானையாப்பா?”
“ம் ஆமா பெரிய காது, நீளமா தந்தம் எல்லாம் இருக்கும்.. அப்படியே வேமா காருகிட்ட வருது”
“வந்து?”
”காருகிட்ட அப்டியே வந்து நிக்குது” - இதை சொல்வதற்குள் மீண்டும் ஒரு முறை கண் சொக்கி தூங்க ஆரம்பித்திருப்பார் என் அப்பா.. நான் வழக்கம் போல ‘எப்பா எப்பா’ என்று கத்திக்கொண்டிருப்பேன்..
”இப்ப கத்தாம தூங்க போறியா நாளைக்கு மிஸ்கிட்ட சொல்லவா?” - அம்மாவின் குரல் வரும் போது என் குரல் நின்றுபோகும்.
என் அப்பா கதையை முழுதாக சொல்லாமல் முடித்திருந்தாலும் எனக்கு என்ன நடக்கும் என தெரியும். அந்த யானையை ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் தூக்கி போட்டு பந்தாடியிருப்பார்கள். எத்தனை தடவை கேட்டிருப்பேன் இந்த கதையை? ஆனால் தினமும் புதிதாக கேட்பது போல் என் அப்பா அவ்வளவு அழகாக சொல்லுவார்.
 


நான் அப்போது பார்த்திருந்த ஒரே சிவாஜி படம் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டும் தான். ஒரு சில ரஜினி படங்கள் பார்த்திருந்தேன். எங்கள் சொந்தக்காரர்கள் தான் வெளியூரில் தங்கி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே பல காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அப்பாவிடம் “எப்பா ரஜினி மாமா எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க?” என்று அம்மா இல்லாத சமயம் கேட்டதுண்டு. அம்மா இருக்கும் போது கேட்டால் எனக்கு நல்லா வசவு விழும் அதான். அப்பாவும் “அவங்க வேலயெல்லாம் முடிஞ்சதும் கண்டிப்பா வந்துருவாங்க” என்பார். நானும் நம்பிக்கொண்டிருப்பேன் என்றாவது ஒரு நாள் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை மடியில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று.

என் அப்பா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர். என் பெயர்க்காரணம் கூட அதனால் அமைந்தது தான். என் பெரியப்பாவும் என் அண்ணனுக்கு கணேசன் என்றும் அக்காவுக்கு சாந்தி என்றும் பெயரிட்டு அழகு பார்த்தார். நல்ல வேளை என் தம்பி பிரபு என்னும் பெயரில் இருந்து தப்பித்துவிட்டான்.

எனக்கு ரஜினி மாமா அளவுக்கு சிவாஜி தாத்தாவை பிடிக்காது. நான் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்த பல படங்களில் சிவாஜி தாத்தா கஷ்டப்படுவார், கடைசியில் இறந்து போய்விடுவார். “ச்சே என்ன இப்பிடி இருக்காரு நம்ம தாத்தா? மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே?! நம்ம வீட்டுக்கு வரப்ப கேக்கணும்” என நினைத்துக்கொள்வேன்.


கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது.. சிவாஜி நமக்கு சொந்தக்காரராய் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஒரு பத்து வயது இருக்கும். அதே பக்கத்து வீட்டில் அதே டிவியில் ’தங்கப் பதக்கம்’ படம் பார்த்தேன். அப்போது தான் அவர் நடிப்பின் பிரமாண்டம் எனக்கு லேசாக புரிந்தும் புரியாதது போன்றும் இருந்தது.. சௌத்ரியினுடைய பேச்சும் கம்பீரமான நடையும் ஒரு வித பயத்தை கொடுத்தாலும், ஜெகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் அதை அவர் வெளிக்காட்ட துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என் அப்பா தான் கண் முன் வந்தார். சிவாஜி மாதிரி சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போடுவதாலோ என்னவோ சிவாஜியை அதற்கு பின் எப்போது பார்த்தாலும் என் அப்பாவின் சாயல் அங்கு இருக்கும்..



ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்க்கும் போது அதில் எது நாடகம், எது படத்தில் நடப்பது என புரியாமலே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி அந்த படத்திலும் செத்துப்போவது எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்னும் பாடலை இப்போது கேட்டாலும் பார்த்தாலும் கண் கலங்கிவிடும். நம் கண் முன் நின்று தன் குடும்ப நிலையை எண்ணி அவர் வருந்தி பாடுவது போலவே இருக்கும்.



ஒரு நிமிடம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., சிவபெருமான், ராஜ ராஜ சோழன், அப்பரென்று யாரை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. கண்டிப்பாக சிவாஜி எல்லார் போலவும் இருப்பார். நானெல்லாம் சின்ன வயசுல சாமி கும்பிடும் போது கண்ணை மூடியவுடன் சிவபெருமான் ரூபத்தில் சிவாஜி தான் மனதிற்குள் நிற்பார். சிவபெருமானுக்கே கூட டவுட் வந்திருக்கலாம், ‘யாருடா இவன் நம்மள விட நம்ம ரோல அலப்பறையா பண்ணுறான்!’னு..



’பர்ஸ்ட் ரஜினி, செகண்ட் சிவாஜி’ என்று பிடித்த நடிகர்களை வரிசை படுத்தி பேசும் போது சொல்வேன். ஆனாலும் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் ஏன் ஒன்றாக நடிப்பதில்லை என்று ஒரு கேள்வியை எனக்குள் மட்டுமே கேட்டுக்கொள்வேன். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம், ‘படிக்காதவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினியும் சிவாஜியும் வெளுத்துவாங்கியிருப்பார்கள். ரஜினி நடித்த படங்களில் எப்போதும் என் ஆல் டைம் ஃபேவரைட்டில் “படிக்காதவன்”ம் ஒன்று. அந்தப்படம் பார்த்ததில் இருந்து ஃபர்ஸ்ட் செகண்ட் எல்லாம் கிடையாது. பிடித்த நடிகர்கள் என்றாலே ரஜினியும் சிவாஜியும் தான்.

வளர்ந்தவுடன் நண்பர்களிடம் ரஜினி ’மாமா’, சிவாஜி ’தாத்தா’ என்று உறவு முறை சொல்லி கூறுவதை நிறுத்தியிருந்தாலும் மனதிற்குள் அந்த உறவை இப்போது வரை வைத்துக்கொண்டுதானிருக்கிறேன். 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தும், ’ஞானஒளி’ கோயில் மணியடிக்கும் அந்தோணியையும், ’பாரத விலாஸ்’ குடும்ப தலைவனையும், ’தில்லானா மோகனாம்பாள்’ சிக்கலையும், ’வசந்த மாளிகை’ சின்ன துரையையும், ’தெய்வ மகன்’ல் ”ஹொட்டேல் ஸ்டார்ட் பண்ணபோறேன் டேட்” என்று நெகத்தை கடித்துக்கொண்டே வரும் அந்த சுட்டி சிவாஜியையும், கர்ணனையும், ’முதல் மரியாதை’ மலைச்சாமியும், ’வியட்நாம் வீடு’ ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்று எத்தனையை சொல்ல? அவர் நடித்த எந்த படத்திலும் அவரது நடைப்பை குறை சொல்ல முடியாது..



‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும். சினிமாவிலும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் நடிகர்கள். சிவாஜியே ஒரு பேட்டியில் அவரது ‘ஓவர் ஆக்டிங்’ பற்றி கேட்கப்பட்ட போது, “சினிமாங்குறதே நிஜ வாழ்க்கைக்கும், நிஜத்துக்கும் மீறிய ஒரு விசயம் தானே? அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும்? இயல்பை மீறியது தானே நடிப்பு?” என்பது போல் பதில் சொல்லியிருப்பார். 



எனக்கு 6 வயதாக இருக்கும் போது, அப்பா ‘கர்ணன்’ படத்திற்கு கூட்டிச்சென்றார். வேலையெல்லாம் முடித்து வர லேட்டாகும் என்பதால் நைட் ஷோ தான் கூட்டி செல்வார். அம்மாவிடம் அடிவாங்கி கஷ்டப்பட்டு ஹோம்-வொர்க் செய்த பையனை, அதுவும் 6 வயசு பையனை நைட் ஷோவுக்கு ‘கர்ணன் படத்துக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது எவ்வளவு கொடுமைனு உங்களுக்கு தெரியாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் நான் தூங்கிவிட்டேன். என் அப்பா என்னை அடித்தார், கிள்ளினார், என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹீம் நான் எழவே இல்லை. அவருக்கு ஒரே வருத்தம், நான் அந்த க்ளைமேக்ஸ் போர் காட்சியையாவது பார்த்திருக்க வேண்டும் என்று. எனக்கு என் அப்பா மேல் கோவம் வந்ததே தவிர சிவாஜி மீது அப்போது கோவம் வரவில்லை.15, 16 வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தலைக்கு ஏறும் அந்த காலத்தில் என் அப்பாவை பயங்கரமாக கிண்டலடிப்பேன், அவர் சிவாஜி ரசிகர் என்கிற ஒரே காரணத்துக்காக. “அவா வீட்டுக்குள்ள கால வச்சதும் இவரு கையி அப்டியே துடிக்குமாம்!! என்னமா ஏமாத்துறாய்ங்க? அவருக்கு நீங்க ஃபேன் வேற?” என்று முதல் மரியாதை க்ளைமேக்ஸில் இருந்து வசந்த மாளிகை, தங்க பதக்கம் என்று நான் கிண்டல் செய்த அனைத்து படங்களையும் இப்போது மீண்டும் தேடித்தேடி விரும்பி பார்க்கிறேன்.

ஏதோ ஒரு வெளிநாட்டு பல்கலையில்  நடிப்பு பற்றிய பட்டிய பாடப்பிரிவிற்குரிய டிக்ஸ்னரியில் சிவாஜியை பற்றி பெருமையாக “முகத்தில் கிட்டத்தட்ட 60 விதமான பாவங்களை காட்டும் திறமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என ஆனந்த விகடனில் வந்த ‘ஹாய் மதனி’ல் ஒரு முறை சிவாஜியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை  மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும். ஆனா அந்த மனுசன் செஞ்ச எல்லா நடிப்பும் நம்மை ஆச்சரியப்படவும் அழவும் மெய்மறக்கவும் வைத்தன.

சுஜாதா, சிவாஜி போன்ற கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களின் மூச்சு கலந்திருந்த இந்த காற்றில் நமது மூச்சும் கலந்திருக்கிறது என்பதே நமக்கு மிகவும் பெருமையான விசயம் தான். இன்றைக்கு நாம் மிகப்பெரும் நடிகர்கள் என்று சொல்லும் எல்லோருமே சிவாஜி சாப்பிடும் போது சிதறிய பருக்கைகளை தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு பெரிய நடிகர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாளை அக்டோபர் ஒன்று, ’கலைத்தாயின் தவப்புதல்வன்’ சிவாஜியின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய இந்த பதிவு சிவாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும், என் அப்பாவிற்கும் சமர்ப்பணம்..

5 comments

  1. Here I refer to my daughterinlaw (USA GIRL) about our Sivaji Ganesan as Indian Marlon brando.She enjoyed the song paattum naanae in thiruvilaiyaadal.in a very interesting manner.
    Good writing friend .thanks ..DK d.karuppasamy.

    ReplyDelete
  2. @Karuppasamy Duraichamy Nadar : சிவாஜி யாரோடும் ஒப்பிட முடியாத கலைஞன் சார்.. நீங்கள் உங்கள் மருமகளுக்கு சிவாஜியின் அனைத்து படங்களையும், பாடல்களையும், பாடலுக்கு அவர் வாய்சைக்கும் அழகையும் காட்டுங்கள்.. அமெரிக்காவில் ஒரு die hard fan உருவாகிவிடுவார் (என் தாத்தா) சிவாஜிக்கு..

    ReplyDelete
  3. // நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும்.// nice...
    //கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும்.//
    //“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா?”
    “ரஜினி மாமா போற வண்டி விழுமா? எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”//
    ha ha......

    ReplyDelete
  4. அருமையான எழுத்து நடை மற்றும் நடிகர்திலகத்தின் சிறப்பை பற்றிய கட்டுரை. என் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா ? உங்கள் பெயரிலேதான்

    ReplyDelete
    Replies
    1. தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி..

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One