ஜாதக தோசம்...

Friday, March 13, 2015

”Wish you a many more happy returns of the day" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பேப்பர் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டியை என்னிடமும் மேகாவிடமும் சேர்ந்தாற்போல் கொடுத்தார். சேல்ஸ்க்கும் அக்கௌண்ட்ஸுக்கும் முட்டிக்கொள்ளும் என்கிற அலுவலக பால பாடத்தின் படி எனக்கு அவரைப் பிடிக்காவிட்டாலும், அவர் கொண்டு வந்த அந்தப் பெட்டி என் முகத்தில் புன்னகை வரச்செய்தது.. சிரித்துக்கொண்டே வாங்கினோம் அந்தப் பெட்டியை.. அவரைத் தொடர்ந்து அலுவலக நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படி நண்பர்கள், உறவினர்கள் முன் ஜோடியாக என் பொண்டாட்டியுடன் நிற்பது மிகவும் கூச்சமாகத் தெரிந்தது.. ஆம், இன்றோடு எனக்குக் கல்யாணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்.. சால்ட்&பெப்பரை மறைக்க ஹேர் டை மாதிரி தொப்பையை மறைக்கவும் ஏதாவது இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் வயதில் இருக்கிறேன்.. ஆனாலும் மீண்டும் ஒரு முறை ஜோடியாக அனைவர் முன்னும் லேசான வெட்கத்துடன் நிற்பது கொஞ்சம் சந்தோசமாகத்தான் இருக்கிறது..



”சுகர் வந்துருமோ வெள்ளெழுத்து வந்துருமோன்னு பயப்படுற வயசுல இதெல்லாம் தேவையா நமக்கு?” பத்தாம் ஆண்டைக் கொண்டாடலாம் என்று மேகா சொன்ன போது இப்படித்தான் நான் கேட்டேன்..

“ஒலகம் ரொம்ப வேகமா போய்ட்டு இருக்கு குமரா. இப்பலாம் சினிமாவுக்கே மூனாவது நாள் வெற்றி விழான்னு கொண்டாடுறாங்க.. நாம பத்து வருசம் எந்த சண்டையும் இல்லாம வாழ்ந்திருக்கோம்.. நாம கொண்டாடக்கூடாதா?” என்றாள்..

”ஆமா படம் 100நாள் ஓடாதுன்னு தெரியும் அவைங்களுக்கு, அதான் மூனாவது நாளே கொண்டாடுறாய்ங்க.. நமக்கு என்ன? 100வது வருசமே கொண்டாடலாம்..”

“உனக்கு பிடிக்கலையா குமரா?”

“ஏ.. பவன் என்ன நெனைப்பா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. பவன் நேத்துல இருந்தே கேக்க ஆரம்பிச்சிட்டா, ‘எப்பம்மா அப்பா கூட இன்னொருக்க கல்யாணம் பண்ணப் போற?’ன்னு.. பிள்ளைகலாம் எதும் நெனைக்காது. நீ எதும் நெனைக்கிறீயா?”

”ச்சே ச்சே நான் என்னத்த நெனைக்கப்போறேன்?” பத்து வருச திருமண வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரே உருப்படியான பாடம், பெண்டாட்டி கேள்வி கேட்டால், அவள் விரும்பும் பதிலை - நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ - சொல்லிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் சோற்றுக்கு உத்திரவாதம் கிடையாது..

ஆனால் மேகாவையும் சும்மா சொல்லக்கூடாது. என் போன்ற ஒரு முசுடு மாப்பிள்ளை கிடைத்தாலும் இதுவரை அவள் என்னோடு சண்டை போட்டதே இல்லை. கோபம் வந்தாலும் சரி, சந்தோசமாக இருந்தாலும் சரி, என்னிடம் ஏதாவது நைஸாக கறக்க வேண்டும் என்றாலும் சரி, “குமரா” என்கிற ஒரு வார்த்தை போதும் அவளுக்கு. நான் சரண்டர் ஆகிவிடுவேன். அது என்னவோ பலரும் என் பெயரின் முதல் வார்த்தையை வைத்துக் கூப்பிட்டால் அவள் மட்டும் கடைசி வார்த்தையை வைத்துக்கூப்பிடுகிறாள். என்னங்க, அத்தான், மாமா போன்ற வார்த்தைகளை விட அந்த வார்த்தையில் எனக்கு அதிக உரிமை இருப்பதாகவே தெரிந்தது.

உறவினர், நண்பர் என கொஞ்ச பேரை அழைத்தோம்.. ஆனாலும் எனக்கு என்னமோ இந்த பத்தாவது வருச கொண்டாட்டம் கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது.. சொந்தக்காரர்கள் பலரும் கூட “என்ன பத்தாவது வருசத்துக்கேவா?” என்று நக்கலாக இளித்துக்கொண்டே கேட்டார்கள் அழைத்த போது.. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இந்த மேகா அசால்ட்டாக, “இனிமேல் ஒவ்வொரு வருசமும் பொறந்த நாள், மாதிரி இதையும் கொண்டாடலாம்னு இருக்கோம்” என்று டக்கென சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.. ”என்னது வருசா வருசமா!!!” என நான் டிபி வந்து மெலிந்து போன என் பர்ஸை நினைத்துக்கொண்டேன்..

ஒரு வழியாக எல்லோரையும் அழைத்து, இதோ இன்று விழாவும் நடந்துகொண்டிருக்கிறது. பத்து வருடத்திற்கு முன் நானும் மேகாவும் மட்டும் நின்றோம். இதோ இன்று எங்களுக்கு நடுவில் இந்த ரெண்டாங்கிளாஸ் பவனும் இப்போது சேர்ந்து விட்டது. எங்கள் இருவரை விட பவனுக்குத் தான் ரொம்ப சந்தோசம்.. சொந்தக்காரர் வீட்டு விசேஷம் என்றால் இங்கும் அங்கும் அலைந்து, என்னைப் பாடாய்ப் படுத்தும் பவன், இங்கு அமைதியாக ஆரம்பத்தில் இருந்து எனக்கும் மேகாவுக்கும் நடுவில் இப்போது வரை நின்றுகொண்டிருக்கிறது.. வந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை எங்கள் கைகளில் திணித்து விட்டு, செல்ஃபோன் கேமிராவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் உட்கார்ந்து கதை பேசிவிட்டு, வந்த வேலையைப் பார்க்கச் சென்றார்கள். ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா, ஒன்பதுக்குள் முடிந்து விட்டது.. உறவு, நட்பு எல்லாம் கிளம்பிவிட்டது..

என் குடும்பமும், மேகா குடும்பமும் மட்டும் தான் இப்போது வீட்டில்.. ஹாலில் எல்லோரும் ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்தோம்.. “பாருங்களேன் மைனி (மதினி) நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்துச்சி, குடுகுடுன்னு பத்து வருசம் ஓடிருச்சே?”  - இது எங்க அம்மா.. 

“ஆமா மைனி.. அந்நியாரம்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் செஞ்சோம்? இப்ப பாருங்க, மூனு மணி நேரத்துல ஒரு கல்யாணத்தையே நடத்தி முடிச்சிட்டாக?! தாலி மட்டும் தான் கட்டல”

”என்ன இருந்தாலும் இதெல்லா வெட்டிச்செலவு தான? இந்த துட்டு இருந்தா இந்த பவனு பிள்ளைக்கி ஏதாவது நக நட்டு செஞ்சிபோட்டிருக்கலாம்ல?”

“யாரு மைனி நாம சொல்றதெல்லாம் கேக்குறா? எல்லாம் அவுக அவுகளா முடிவு எடுத்துக்கிறாக.. இப்ப தெரியாது, இந்த பவனு வளந்து நாளைக்கு அது இப்டி செய்யும் போது தான் தெரியும்.. அப்ப பாக்கலாம் இவுக என்ன சொல்றாகன்னு” என்று சொல்லிவிட்டு, அதைப் பெரிய ஜோக்காக நினைத்து தான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தது என் அத்தை..

நான் மேகாவை முறைத்தேன்.. “ம்மா ஒனக்கு ஹார்லிக்ஸ் வேணுமா இல்ல காஃபி ஆத்தவா” என்று டக்கென பேச்சை மாற்றினாள் மேகா..

“இருடீ நானும் மைனியும் பேசிக்கிட்டு இருக்கோம்ல? கொஞ்ச நேரம் கழிச்சி குடிச்சிக்கிறேன்” என்னை இன்னும் டென்சன் ஆக்காமல் விடாது என் அத்தை என நினைத்துக்கொண்டேன். “இப்பக் கூட பாருங்க, இத்தன வருசம் மேகாவும் மாப்ளையும் சேந்து வாழுறதே பெரிய விசயம். இதெல்லாம் நடக்கும்னு நாம என்ன எதிர்பாத்தோமா?”

என் அம்மா கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். நான் எழுந்து என் அறைக்குள் சென்றுவிட்டேன்.. மேகா அடுப்படிக்குள் சென்று விட்டாள். என் மாமியாரின் குரல் மட்டும் தொடர்ந்து கேட்டது. “கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கும் போதே ஜோசியர் சொன்னாரே, இது இருதார ஜாதகம். இந்தப் பையனுக்கு மொத கல்யாணம் நெலைக்காதுன்னு? ஆனாலும் மாப்ளை மேகாவத்தான் கட்டிக்கிடுவேன்னாரு.. மேகாவும் அப்படித்தான் சொல்லுச்சி. ஏதோ லவ் மேரஜ் மாதிரி ரெண்டு பேரும் அடம் பிடிச்சில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாக? வாழ மரத்துக்குக் கூட தாலி கட்டி வெட்ட மாட்டேன்னு மாப்ள தான் அடம் பிடிச்சே சாதிச்சிட்டாரு கடைசி வரைக்கும்”

”இந்தக் கெழவிக்கு கண் முன்னாடியே பத்து வருசம் வாழ்ந்து காட்டுனாலும் திருப்தி வராது.. ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கு.. நீ கண்டுக்காத குமரா.. இந்தா ஹார்லிக்ஸ்”. என் மனதின் ஓட்டங்களை என்னை விட அதிகம் அறிந்திருப்பவள் மேகா தான் என நினைத்துக்கொண்டேன். 

“ஒங்கம்மா என்ன, நான் உன்ன கல்யாணம் பண்ணுன மூனே மாசத்துல அடிச்சி ஒங்க வீட்டுக்கு தொரத்தி விட்ருவேங்கிற நெனப்புலையே தான் கல்யாணம் பண்ணி வச்சாங்களா? இல்ல, அப்படி எதுவும் பண்ணணும்னு எதிர்பாக்குறாங்களா?”

“ஓய் என்ன வாய் நீளுது? எங்க அடிச்சி தொரத்து பாக்கலாம்.. மவனே நடக்குறதே வேற” புஜங்களைத் தட்டி பேட்டை ரவுடி மாதிரி சைகை செய்தாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.. “போடீ” என்றேன்.. என் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு மீண்டும் அடுப்படிப் பக்கம் சென்றாள். 

”ஆனா மைனி இப்ப வரைக்கும் எனக்கு அடிக்கடி அத நெனச்சி திக்கு திக்குன்னு தான் இருக்கு.. ஒருத்தனுக்கு நாலு ஜோசியக்காரன்கிட்டல கேட்டோம்? எல்லாரும் “ரெண்டு தார ஜாதகம், ரெண்டு தார ஜாதகம்”னு அதையேத் தான சொன்னாய்ங்க? அதுவும் இல்லாம இப்ப பத்து வருசத்துலயே இப்படி கொண்டாட்டம் தேவையா? ஊர் கண்ணே இங்க தான் பட்டுருக்கும்.. இது போதாதா? எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு மைனி அந்த ஜோசியக்காரன் சொன்னத நெனச்சி” மாமியாரிடம் மாட்டிக்கொண்ட என் அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது..

“ம்மா... ம்மா...”

“இருங்க மைனி என் பையன் கூப்டுறியான்.. இந்தா வந்துட்டேன்ப்பா”. அம்மா எங்கள் அறைக்குள் வந்தார். “என்னப்பா?”

“நீங்க தூங்கலையா? அப்பா எங்க?”

“அப்பாவும் மாமாவும் அப்பதையே வெளிய போனாக.. இன்னும் ஆளக் காணோம்”

“சேரி நீங்க போய் தூங்குங்க. லேட் ஆவுது”

“என்ன மைனி, மாப்ள என்ன சொல்றாரு?” என் அத்தை உள்ளேயே வந்துவிட்டது.. அதன் அக்கப்போர் இன்று இரவு முழுவதும் தொடரும் என்பது தீர்மானமாகிவிட்டது.. “மாப்ள ஆனா நெஜம்மா மாப்ள, எங்க மேகாவெல்லாம் படக்கு படக்குன்னு ஏதாவது பேசிருவா.. என்ன மாதிரி அவளுக்கு சூதானமா பேசத்தெரியாது.. நீங்க எதுவும் டக்குன்னு கோவப்பட்டு எதுவும் செஞ்சிறாதீங்க, சரியா?”

நான் என் மாமியாரைப் பார்த்து சிரிப்பது போல் முகத்தை வைக்க முயற்சி செய்தேன்.. ஆனால் முறைப்பும், கோபமும் என் முகத்தை விட்டுப் போவேனா என்றது. “சரி பவன் தூங்குறா, கொஞ்சம் மெதுவா பேசுங்க” என்றேன்..

“எம்மா நீ இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாத்தையும் ஒங்கூட மட்டும் வச்சிக்கோ.. சும்மா எங்களையும் டென்சன் ஆக்காத” தேவையான நேரத்தில் எல்லாம் வந்து, எனக்காக குரல் கொடுக்கும் நீ வாழ்க என மேகாவை மனதிற்குள் கும்பிட்டேன்..

“இல்ல பாப்பா, ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காதுல்ல.. ஒனக்கு ஒன்னும் தெரியாது”

“ஆமா நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, நாளைக்கு நைட்டு ட்ரெயின்ல உங்க கூட மேகாவும் சேந்து வந்துருவா.. போதுமா?” லேசான அதட்டலுடன் சொன்னேன்.. 

“சரி மாப்ள எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கு, நான் தூங்கப்போறேன்” கம்மென்று சென்றுவிட்டது என் மாமியார். அம்மாவும் ஹாலில் சென்று உறங்குவதற்கு ஆயத்தமானார்..

நான் கோபமாக கத்தும் போது மேகா மட்டும் என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள். இப்போது என் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். “ஓய் நான் கோவமா கத்துறேன், ஒனக்கு சிரிப்பு வருதா?”

“ஆமா ஒனக்கு அப்படியே கோவம் வந்துட்டாலும்.. எங்க நாளைக்கே என்ன எங்க அம்மா கூட போகச் சொல்லு பாப்போம்.. கொன்ற மாட்டேன் ஒன்னைய?”

“இத்தன வருசம் சண்ட போடாம, சந்தோசமா வாழந்தாலும் ஒங்கம்மா ஏன் அந்த ஜாதக மேட்டர எப்பப் பாத்தாலும் சொல்லிக்கிட்டே இருக்கு?”

“விடு, அது அப்படித்தான்.. சரி நீ ஏன் எங்கம்மா அதப் பத்தி எப்பப் பேசுனாலும் டென்சன் ஆகுற? உனக்கு அப்படி நடந்துருமோன்னு பயமா இருக்கா குமரா?” என் தலையைக் கோதிக்கொண்டே என் கண்களை நேராகப் பார்த்து, உதடு நிறைய புன்னைகையுடன் என்னிடம் கேட்டாள்.

“கண்டிப்பா நடக்காது” நான் என் கண்களைச் சிமிட்டாமல் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு சொன்னேன்.

“பெறகெதுக்கு டென்சன் ஆகுற?” என் தலையை இன்னும் இதமாகக் கோதிக்கொண்டே கேட்டாள்.

“இல்ல, இப்படியே ஒவ்வொரு தடவையும் ஒங்கம்மா சொல்லிக்கிட்டே இருந்தா, அது என்னமோ என்னை குத்திக்காட்டுற மாதிரியே இருக்கு”

“நான் தான் ஒன்ன இப்ப குத்தப்போறேன். அது ஒரு லூசுக்கெழவி கத்துதுன்னு பேசாம விடுவியா...”

“அடிப்பாவி ஒங்கம்மாவையே லூசுன்னு சொல்ற?”

“நீ எங்கம்மாவ அப்படிச் சொன்னா எனக்கு கஷ்டமாயிருக்கும்ல, அதான் ஒனக்கு முன்னாடி நானே சொல்லிட்டேன். அடுத்து நீ சொல்ல மாட்டில, அதான் அப்படி.. சரி இன்னும் கொஞ்சம் பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. இரு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துறேன். தூங்கிறாத, நெறையா பேசணும்”.

“ஹ்ம் சரி, வேமா வா” சிரித்துக்கொண்டே சொன்னேன் நானும்.. 

இது தான் மேகா.. என்னைச் சுற்றி ஒரு நல்ல விதமான சூழலை உருவாக்கிக்கொண்டே இருப்பாள், சாதுர்யமாக பிரச்சனைகளைக் கையாளுவாள், அவளுடைய வேலைகளையும் முடித்துவிடுவாள். எப்போதும் புன்னகை மட்டும் மாறாது அவள் உதட்டில். இன்னமும் ஹாலில் இருந்து என் மாமியார் புலம்பும் சத்தம் மட்டும் கேட்டது.. 

நான் மெதுவாக நடந்து சென்று கிச்சனுக்குள் பார்த்தேன். மேகா வர எப்படியும் இன்னும் கால்மணிநேரம் ஆகும் போல் தெரிந்தது. என் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.. மணி இரவு 9.30 இப்போது.. என் ஃபோனை எடுத்தேன்.. அறைக் கதவை சத்தம் கேட்காத அளவுக்கு மெதுவாகச் சாத்தினேன்.. ஃபோனில் நம்பரை அழுத்தினேன்.. என் காதில் வைத்து சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.. மூன்றாவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது எதிர்முனையில்.

“ராம்... நல்லாருக்கியா? ஃபங்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா?” பெண் குரல்..

“ஹ்ம் சூப்பரா முடிஞ்சிருச்சி.. பேசலாமா இப்ப? டைம் ஆயிருச்சி?”

“கொஞ்சம் லேட் தான்.. மார்னிங் பேசுவோமா? இல்லன்னா நாளைக்கு நைட் வழக்கம் போல ஏழு மணிக்கு கூப்பிடு, சரியா?”

“ஹ்ம் சரி.. குட் நைட்”

“டேக் கேர்”

ஃபோனை வைத்து விட்டு, மெதுவாக ஓடும் காற்றாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. ராணி... என்னவளாக இருந்திருக்க வேண்டியவள். ஜாதி, மதம், அந்தஸ்து, இனம், வயது, என காதலைப் பிரிக்க இருக்கும் இத்தனை காரணங்களில் ஒன்று போதாதா எங்களையும் பிரிக்க? பிரிந்து விட்டோம்.. ஆனால் பிரியும் போது, கண்களை முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை கீழே விட்டுவிடாமல், லேசானப் புன்னகையுடன் அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்றென்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. “டேய் என்னைக்கு இருந்தாலும் நான் தான் ஒன் பொண்டாட்டி. ஆனா என்னால தான் ஒங்கூட எப்பயுமே இருக்க முடியாதே? நீ ஒரு நல்ல பொண்ண ஒடனே கல்யாணம் செஞ்சிக்கோ.. நான் ஒங்கூட இருந்தா எப்படி பாத்துக்குவியோ அதே மாதிரி அவளையும் பாத்துக்கோ.. அவ ரூபத்துல நான் தான் ஒங்கூடவே இருக்கேன்னு நெனச்சிக்கோ.. அவ கூட சண்டையே போடாத. அவ தான் நான். சரியா?”

”என்ன ஃபேனையே மொறச்சு பாத்துக்கிட்டு இருக்க?” என்னை நிகழ்காலத்துக்குக் கூட்டி வந்தது மேகாவின் குரல். 

“ஒன்னுமில்ல நீ தான் நெறையா பேசணும்னு சொன்னீல, அதான் முழிச்சி இருக்க ட்ரை பண்ணுனேன்”

“நெறையா பேசலாம், ஆனா நாளைக்குப் பேசலாம்.. ரொம்ப டயர்ட்டா இருக்கு குமரா..”

”சரிம்மா தூங்கு” நான் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் தலையைக் கோதிவிட ஆரம்பித்தேன்.. என் தோள்களில் தலையைப் புதைத்துக்கொண்டு தூங்கினாள்..



அன்று ராணி சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் மேகாவுடனான என் பந்தத்தை, மேகாவின் அன்பையும் விட அதிக பலமாக இணைத்திருக்கிறது என நம்புகிறேன். அந்த ஜாதக தோசம் ஒரு வகையில் உண்மை தான்.. எனக்கு இரு தாரம் தான்.. ஒன்று என் அருகில், இன்னொன்று என் நினைவில்..

25 comments

  1. அட! எதிர்பார்க்காத முடிவு! அருமையான நடை. இனிய பாராட்டுகள்.

    நிறைய எழுதுங்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா.. எழுதுகிறேன்.. :)

      Delete
  2. Replies
    1. வெற்றி வெற்றி... ஷைனிங் ஸ்டாரே பாராட்டிய வெற்றின்னு போஸ்டர் ஓட்டப்போறேன்.. I feel blessed thalaiva..

      Delete
  3. அருமை ராம்குமார்.

    ReplyDelete
  4. சூப்பர் ராம், இப்போது நமக்கு முந்தைய தலைமுறையினர் செய்வதை கண்முன் காட்டினீர்கள்..... கடைசி டிவிஸ்ட் எதிர்பாராதது....

    ReplyDelete
    Replies
    1. //இப்போது நமக்கு முந்தைய தலைமுறையினர் செய்வதை கண்முன் காட்டினீர்கள்// நம்ம தலைமுறையிலும் இது இருக்குங்க.. என்ன ஒன்னு, ரொம்ப ஈசியா கள்ளக்காதல்னு சொல்லிப்பழகிட்டோம் அதையும்.. அதான் பிரச்சனை :-(

      Delete
  5. முடிவு ரெம்ப நல்லா இருக்கு ராம் :) :)

    ReplyDelete
  6. முடிவு நெருங்கும் போது அய்யய்யோ ஒரு மாதிரி போகுதே னு பாத்தேன்... But superb... Nice Nice nice...

    ReplyDelete
    Replies
    1. //அய்யய்யோ ஒரு மாதிரி போகுதே // அப்படி ஒரு எண்ணம் படிப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதை முதலிலேயே தீர்மானித்துவிட்டு எச்சரிக்கையாகத்தான் எழுதினேன்.. :) ஆனாலும் பெண்கள் பலருக்கும் இதுவே பிடிக்கவில்லை.. நம்ம ஃபீலிங் அவங்களுக்குப் புரியுமா? :P

      Delete
  7. வாவ்!!!! அருமையான கதை!!!! நடையும்! சொல்ல வார்த்தைகள் இல்லை! மிகவும் ரசித்தோம் நண்பரே!

    ReplyDelete
  8. ஜாதகத்தை புதுமையாக கையாண்டு இருக்கின்றீர்கள் யதார்தமான நடை அருமை நண்பரே வாழ்த்துகள் நான் தங்களது தளத்திற்க்கு முதல் முறையாக வருகிறேன்
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 8
    நண்பரே தங்களுக்கு அபுதாபியிலிருக்கும் நண்பர் சிவபாலன் தெரியுமா ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. நான் உங்களை ஏற்கனவே மதுரை பதிவர் சந்திப்பில் பார்த்தேன் சார்..

      ஆமாம், அவர் என் அண்ணன் தான்.. கல்லூரி சீனியர்.. :)

      Delete
    2. சந்தோஷம் நல்லது நண்பரே, தங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்கிறேன் நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும்.
      நன்றி
      கில்லர்ஜி

      Delete
    3. கண்டிப்பாக வருகிறேன் சார் :)

      Delete
  9. enjoyed the story. Keep writing

    ReplyDelete
  10. Online Gambling in India
    Most Indian 썬시티 Casinos are made 라이브 배팅 of land-based casinos that offer a lot of gaming and plenty of gambling. However, they may 비트코인갤러리 still be 빡촌 후기 the 스마일 먹튀 most important of them all!

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One