முத்துச்செல்வி...

Saturday, December 8, 2012

புது லோன் ஆபிஸர எப்படியாவது ‘கவர்’ பண்ணிரணும்னு கடலை, வாழைப்பூ, முந்திரியோடு வந்தவர்கள் ஒரு கணம் கொஞ்சம் அதிர்ந்துவிட்டார்கள் அந்த பெண்ணை பார்த்ததும். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டன இப்போது இந்த ஊருக்கு ஆபிஸராக அறியப்படும் அந்த முகத்தை கடைசியாக பார்த்து. வருடங்கள் ஆனாலும் மறக்கக்கூடிய முகமா அது? லேசாக சந்தேகம் இருந்தவர்கள் கூட, “ஒங்க எல்லாருக்கும் வணக்கம். நாந்தான் முத்துச்செல்வி, இந்த பேங்குக்கு புதுசா வந்திருக்குற லோன் செக்‌ஷன் ஸ்டாஃப்” என்று இரு கை கூப்பி புன்னகையுடன் அவள் சொன்னதை பார்த்ததும் லேசாக ஆடித்தான் போய்விட்டார்கள். அப்படியும் யாரென்று புரிந்துகொள்ளமுடியாத சில பெருசுகளுக்கு இள, மத்திய வயதுடைய ஆட்கள் ‘இது கூட தெரியாம இந்த ஊர்ல என்ன புடுங்குன?’ என்கிற தொனியில் உண்மையை சொன்னார்கள். சில நேரம் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்த கடலை, வாழை, முந்திரி தலைகள் எல்லாம் மெதுவாக வங்கியை காலிசெய்ய ஆரம்பித்தன. “அப்படி ஒன்னும் நாம லோன் வாங்கணும்னு அவசியம் இல்ல” என்பது போல் இருந்தது அவர்களின் செயல். 

இது, தான் எதிர்பார்த்தது தான் என்பது போல் அமைதியாக புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துச்செல்வி. “என்ன மேடம், சொந்த ஊர் வேணும்னு மேல வரைக்கும் சண்ட போட்டு கேட்டு வாங்கிட்டு வந்தீங்க? இங்க என்னடானா உங்க ஊருக்காரங்க இப்படி பண்ணுறாங்க?” - மேனேஜர்.

“அவங்க இப்படி பண்ணலேனா தான் சார் ஆச்சரியம்” சொல்லிக்கொண்டே தன் இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். இவளிடம் எதையும் கறக்க முடியாது என்று உணர்ந்துகொண்டு மேனேஜரும் தன் இருக்கைக்கு ஓடிவிட்டார். ’அவன் வந்தானா? நாம தான் சரியா பாக்கலையா?’ யாரையோ அவள் எதிர்பார்த்திருந்தாள்.

ஊருக்குள் அவளுக்கு யாரும் வீடு கொடுக்கவும் தயாராக இல்லை. எப்படியோ தன்னுடன் வேலை செய்யும் மற்றொரு பெண் குடியிருக்கும் வீட்டில் வீட்டு ஓனரின் முறைப்புக்கும் முனுமுனுப்புக்கும் இடையில் தங்கியிருக்கிறாள். அவளுக்கும் சரி, ஊர்க்காரர்களுக்கும் சரி, இருப்பு கொள்ளவில்லை.. இவள் அமைதியாக பழசை நினைக்க ஆரம்பித்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் அதே பழசை அசிங்கமாக பேச ஆரம்பித்தனர்.

ரோட்டோரத்தில் முந்திரி வறுத்துக்கொடுக்கும் கடை வைத்திருந்தான் சுயம்பு. அதை கடை என்று சொல்ல முடியாது. சில கம்புகள் நட்டு, அதில் உலகின் முதல் தென்னை மரஓலையோ என்று நினைக்க தோன்றும் ஓலைகளை சாய்த்து வைத்திருந்தான். முந்திரி கடை என்று சொன்னால் முந்திரி எல்லாம் சண்டைக்கு வந்துவிடும். நான்கைந்து முந்திரிகளை வறுத்துக்கொண்டிருப்பான். சில நேரம் வறுக்க அடுப்புக்கரியும் இருக்காது.. வெறும் சட்டியில் கர் கர்ரென்று தேய்த்துக்கொண்டிருப்பான். வாயில் எப்போதும் பீடி புகைந்து கொண்டிருக்கும். எண்ணெய் பார்க்காத வறண்ட தலை. அவன் பொண்டாட்டி பெயர் ராணி. பெயருக்கு ஏற்றாற்போல் அவள் ராணி போல் அழகு தான். இந்த ராணிக்கு பிறந்தவர்கள் தான் முத்துச்செல்வியும், தங்கராசுவும். பேரிலாவது இருக்கட்டுமே என்று சுயம்பு ஆசை ஆசையாக தன் பிள்ளைகளுக்கு முத்து தங்கம் என்று பெயர் வைத்து அழகு பார்த்தான். கடையில் இருந்து பத்தடி தள்ளி அதோ ஓடை ஓரத்தில் ஒரு ஓலைக்குடிசை தெரிகிறதே, அது தான் இவர்கள் வீடு. இவன் தினமும் வறுத்துக்கொடுக்கும் அந்த 4,5 முந்திரியில் தான் வீட்டுச்செலவும் இவன் பீடிச்செலவும் பிள்ளைகள் படிப்பும் நடக்கிறது என்று நினைத்தால், நீங்கள் ஊருக்கு புதுசாக இருக்க வேண்டும்.

வறுக்கும் சொற்ப முந்திரி கொடுக்கும் வருமானம் போக மீதத்துக்கும் கடன் வாங்கி லாட்டரியை வெறி கொண்டு பேராசையுடன் சுரண்டுவது தான் அவன் முழு நேர தொழில். அவனுக்கு குடும்பத்து மேல அக்கறை இல்லையென்று யாராவது சொன்னால் கோவம் வந்துவிடும். “குடும்பத்து மேல அக்கர இருக்குறனால தான் லாட்டரி சொரண்டுறேன்.. காசு வுழுந்தா நானா அள்ளிக்கிட்டு போகப்போறேன்? எல்லாம் என் புள்ளைகளுக்கு தான?” என்று வியாக்கியானம் பேசுவான். 

ஊரில் இருக்கும் சில பெரிய மனிதர்கள், சுயம்பு லாட்டரி சுரண்டும் நேரத்திலோ, 4,5 முந்திரி வறுக்கும் நேரத்திலோ அவனின் ஓலைக்குடிசைக்கு அடிக்கடி வந்து போவதால் தான் வீட்டுச்செலவும் பிள்ளைகளின் படிப்பும் நடக்கிறது. சுயம்புவுக்கு இது தெரிந்தாலும் அவன் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஏன்னென்றால் சுரண்டலுக்கு அடிக்கடி பணம் கொடுப்பது ராணி தானே? ஆனால் ராணி இந்த விசயம் தன் பிள்ளைகளுக்கு எக்காரணம் கொண்டும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள். 

ஒரு நாள் சுயம்புவும் செத்துப்போனான். அவன் வாங்கிய கடனை சுட்டிக்காட்டியே ஊர் பெரிய மனிதர்கள் ராணியே கதி என்பது போல் கிடக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் பள்ளிக்கு போகும் நேரம், வரும் நேரம் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ராணியாலும் அவர்களை தடுக்கவோ அதட்டவோ முடியவில்லை. வெளியில் ஆணின் செருப்பு இருந்தால் முத்துச்செல்வியும் தங்கராசுவும் காத்துக்கொண்டிருப்பார்கள் அந்த செருப்பு வீட்டை விட்டு போகும் வரை. அப்போது முத்துச்செல்வி 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். 17 வயது. பெரிய மனுஷியாகி மூன்று வருடம் ஆகியிருந்தது. தங்கராசு 5ம் வகுப்பு. 

இருள் சூழ்ந்திருக்கும் அழுக்கான இரவில் லேசான அழுகையுடன் பொங்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மெதுவாக அடிக்கடி முத்துச்செல்வி அம்மாவிடம் கேட்பது உண்டு, “ஏம்மா இப்படி?”

எங்கோ பார்த்துக்கொண்டு அம்மா சொல்லுவாள்,”நாளைக்கு காலேல பசிக்குமே? பள்ளிக்கூடத்துக்கு காசு கெட்டணுமே?”

முத்துச்செல்வி பதில் பேசாமல் திரும்பி படுத்துக்கொள்வாள். தாயும் மகளும் அடிக்கடி செய்து கொள்ளும் சம்பாசனை இது. ”எப்படியாவது நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிரணும்” இது தான் ராணி அடிக்கடி சொல்வது. 

முத்துச்செல்விக்கும் வாத்தியார் மகன் அந்தோணிக்கும் ஒரு விதமான காதல் இருந்தது. அந்தோணிக்கு அவள் மேல் இருக்கும் பச்சாதாபம் காதலாக மாறியிருந்தது. அவளுக்கும் சாய்ந்து அழ ஒரு தோள் கிடைத்ததால் அவன் அன்பை ஏற்றுக்கொண்டாள். தன் குடும்ப சூழல், அம்மாவிடம் அழுதது என எல்லாவற்றையும் தினமும் அவனிடம் சொல்லி சிறிது நேரம் அழுதால் தான் அவள் மனம் லேசாக இருக்கும். அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்லத்தெரியவில்லை என்றாலும் அவளுடைய தலையை மெதுவாக வருடிவிட்டுக்கொண்டு அவள் அழுது முடிக்கும் வரை காத்திருப்பான்.

ராணியின் உடல் மோசமானாலும் பெரிய மனிதர்களின் மனம் அதை விட மோசமாக இருந்தது. தினமும் ரணம் தான். எங்கே தான் மறுத்தால் மகளை பாழாக்கிவிடுவார்களோ என்ற பயத்திலேயே ராணி எப்போதும் சம்மதித்தாள்.

ஒரு நாள் பள்ளியில் இருந்து அக்காவும் தம்பியும் வரும் போது தங்கராசு கேட்டான், “ஏன்க்கா, தேவுடியா மவன்னா என்னது?”

கோவமும் அழுகையும் முட்டுக்கொண்டு நிற்க அவனை பார்த்து “ஏன்டா கேக்குற?”

“இல்லக்கா என்ன எல்லாரும் அப்படித்தான் கூப்புடுறாய்ங்க.. எங்கூட யாருமே பேச மாட்றாய்ங்க. நான் பேசுனாலும் ’தேவுடியா மவனே’னு சொல்லி அடிக்குறாய்ங்கக்கா” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் தங்கராசு. ஏன் எதற்கென்றே தெரியாத வலி அவனுக்கு. அவனோடு சேர்ந்து முத்துசெல்வியாலும் அழத்தான் முடிந்தது. இருவரும் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். இருபரும் வீட்டுக்கு அருகில் வரும் போது வீட்டுக்கு வெளியில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தனர். பெண்களும் நின்று கொண்டிருந்ததால் முத்துச்செல்விக்கு உண்மை புரிந்துவிட்டது.

ராணி இறந்ததில் பிறகு பள்ளிக்கு போக வேண்டும் என ஆசையாக இருந்தாலும் அவர்களால் முடியவில்லை. இத்தனை நாள் அவர்கள் வீட்டிற்கு வந்த பெரிய மனிதர்களால் இனிமேல் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன? தன் அம்மா செய்த வியாபாரத்தை தன் அம்மாவை விட நல்ல மூலதனத்துடன் செய்ய ஆரம்பித்தாள் முத்துச்செல்வி. அவளுக்கு தன் அம்மா சொன்னது எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ”எப்படியாவது நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிரணும்”.. தரையில் தன்னை அந்த பெரிய மனிதர்கள் உருட்டும் போதும் அவள் வாயில் முனுமுனுப்பது அதை தான்.சிறிய பெண் என்பதால் அவள் வயதொத்த ஆண்களில் இருந்து எல்லோரும் அவளை பயன்படுத்திக்கொண்டனர். காலையில் அப்பன் வந்துபோயிருப்பான், இரவில் மகன்காரன் கதவைத்தட்டுவான். தன் அம்மா சொன்ன அதே வார்த்தையை தங்கராசுவிடம் தினமும் மந்திரம் போல் சொல்ல ஆரம்பித்தாள். “எப்படியாவது நாம் படிச்சிரணும்”...

அவள் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு பெரிய மனிதனும் அவள் கண்களுக்கு அறிவியல் புத்தகமாகவும் கணக்கு புத்தகமாகவும் தான் தெரிந்தார்கள். படுத்த நேரம் போக கிடைத்த நேரமெல்லாம் படித்தால். படுத்தலும் படித்தலும் அவளின் முழு நேர வேலையாகிப்போனது. தெருவில் அவள் நடந்தாலே பெண்கள் கரித்துக்கொட்டினர். சாபம் விட்டனர். 

”ஒனக்கு ஏன் இவ்வளவு அழுத்தம்? என் கூட வந்துரு நான் ஒன்ன பாத்துக்கிறேன்” தனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான நேரத்தில் அந்தோணியை பார்த்த போது சொன்னான்.

“எங்க வர? ஒங்கப்பா என்ன ஏத்துக்கிவாரா?” - இது வரை அந்தோணியின் அப்பா மட்டும் தான் அவளிடம் வராத அந்த ஊரின் பெரிய மனுசன்.

“இல்லனா நாம ஓடிப்போயிரமாம் முத்து. நீ தயவு செஞ்சி இந்த வேலைய விட்டிரு”

“ஒங்கூட ஓடி வந்து? அப்ப என் தம்பிய யாரு பாப்பாங்க? அவன் பொம்பளையா இருந்தாலாவது என்ன மாதிரி எதாவது செஞ்சி பொழப்பான். பாவம், ஆம்பளயா பொறந்துட்டான்” விரக்தியாக சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அறிவுகெட்டத்தனமா பேசாத. அவன ஏதாவது வேல செஞ்சி பொழைக்க சொல்லு”

“முடியாது அந்தோணி. படிக்குற காலத்துல மனசு படிப்பு மேல தான் இருக்கணும். அவன் எந்த கஷ்டமும் இல்லாம படிக்கணும். படிச்சி நல்ல வேலைக்கு போகணும்”

”எங்கூட இப்ப வர முடியுமா? முடியாதா?”

“கொஞ்ச நாள் ஆகட்டும் அந்தோணி”

“கொஞ்ச நாள்னா?” சற்றே கோபமாக கேட்டான்.

“தங்கராசு படிச்சு முடிக்குற வரைக்கும்”

அந்தோணி நக்கலாக சிரித்தான். ”உனக்கு ஒடம்பு சுகம் ரொம்ப பிடிச்சு போச்சு, இல்ல முத்து?”

“ச்சீ நீயும் இப்படி பேசாத அந்தோணி, அசிங்கமா இருக்கு”

“பின்ன என்ன? ஒனக்கு நல்ல வாழ்க்க வேணும்னு, என் கூட வாழணும்னு ஆச இருந்தா வந்துரு”

“எங்க போய் பொழைக்க? ஒனக்கு என்ன வேல தெரியும்?”

“எதுவும் தெரியாது. ஆனா எப்படியாவது உன்ன காப்பாத்துவேன்”

“இல்ல அந்தோணி, என் தம்பி படிப்பு முடியுற வரைக்கும் பொறுத்துக்கோ.. அதுக்கு பிறகு நீ எங்க கூப்டாலும் வாரேன்”


அவன் முகத்தை ஒரு வித ஏக்கத்தோடு கருணையை எதிர்பார்த்து பார்த்தாள். அவன் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பிவிட்டான். அவளும் அவனை தடுக்கவில்லை. தன்னை தேடி வரும் யாரையும் அவள் ஏனென்று கேட்டதில்லை, போகும் போது தடுத்ததில்லை என்றாலும், அந்தோணி மட்டும் விதிவிலக்கு. இப்போது அவனும் மற்றவர் போல் ஆகிவிட்டான். அவள் மீதிருக்கும் உரிமையை அவன் இழந்துவிட்டதாகவே கருதினாள்.

பக்கத்து ஊரில் கல்லூரியில் சேர்ந்தாள். அந்தோணியை இடையில் சந்தித்தாலும் பேசிக்கொள்வது இல்லை. வைராக்கியமாக படித்தாள். கல்லூரி முடிக்கும் நேரத்தில் ஒரு நாள் அவனே அவளிடம் வந்து, “ஒனக்காக நான் எவ்வளவு காலம்னாலும் காத்துக்கிட்டு இருப்பேன் முத்து” என்றான். அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. “கண்டிப்பா நானே ஒன்ன தேடி வருவேன் அந்தோணி”. தன்னை அந்தோணி புரிந்து கொண்டதில் அவளுக்கு நிம்மதி. அன்று இரவே அவளும் அவள் தம்பியும் ஊரை விட்டு போய்விட்டனர். தன்னை கட்டிக்கொண்டு அவன் ஊரின் ஏச்சையும் பேச்சையும் கேட்கக்கூடாதென்று அவள் அவனை விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். தன்னை அவன் புரிந்து கொண்டதே போதும் அவளுக்கு.

இதோ இன்று ஊர் பெருசுகள் அவளை ”ஔசாரி” என்றும் ”தேவடியா” என்றும், “இவா கிட்ட லோன் வாங்குனா வெள்ளாம உருப்பட்டாப்ல தான்”என்று வசைமாறி பொழிந்து கொண்டிருந்தனர். எத்தனை நாளைக்கு? மழை காலம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மீண்டும் வங்கிக்கு வந்துவிட்டனர் லோன் கேட்டு.

“முத்து என்ன தெரியுதாம்மா? நாந்தான் முருகேசேன்.. ஒரு நாள் சயின்ஸு புக்கு வாங்கணும்னு என்கிட்ட கேட்டியே?” என்று வலிந்து கொண்டே வந்தது அன்றைய பெரிய மனுசனாகிய இன்றைய கிழடு. 

அவள் அதற்கும் புன்முறுவலுடன் “நல்லா ஞாபகம் இருக்குங்க” என்று அவன் லோனை சான்க்‌ஷன் பண்ணினாள். ரொம்ப நன்றி என்று கும்பிடு போட்டுவிட்டு திரும்பிய அந்த பெருசு முனுமுனுத்தது, “ஔசாரி, இவ அப்பன் வீட்டு காச எடுத்து குடுக்குற மாரில பேசுறா?”..

தன் காதில் விழுந்தாலும் அவள் அதை கண்டுகொள்ளவில்லை. அவளிடம் லோன் கேட்டு வரும் பலரும் லோன் கிடைக்கும் வரை, அவள் முன்பு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு, முதுகுப்பக்கம் “ஔசாரி”, “தேவுடியா” என்று தான் விளிக்கிறார்கள். அவளுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. தான் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு அன்று அவர்கள் செய்த “உதவி” தான் காரணம் என நம்பினாள். இன்று தன்னை திட்டுபவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் தன் மேல் பைத்தியமாக இருந்தவர்கள் தான் என்று நினைக்கும் போது அவளுக்கு அவர்களை நினைத்து சிரிப்பாக வந்தது. அவளை திட்டும் எல்லோரும் இப்போதும் அவள் கண்ணுக்கு அறிவியலாகவும், கணிதமாகவும், வங்கி தேர்வு புத்தகமாகவும் தான் தெரிந்தார்கள்.

இதோ இன்று அவள் தேடிய அவன் வந்து விட்டான். அந்தோணி!! லோன் கேட்க நின்று கொண்டிருக்கிறான். 

“அந்தோணி” ஆச்சரியமும் சந்தோசமும் கலந்து அழைத்தாள் அவனை. அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல், ஒரு வங்கி அதிகாரியை சந்திப்பது போலவே வந்தான். கூடவே மூக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் ஒரு பாவாடை சட்டையும் அவன் கையை பிடித்து நடந்துவந்தது. 

”நல்லாருக்கியா? என்ன பண்ணிட்டிருக்க? அப்பா என்ன பண்ணுறாரு? என் தம்பியும்  இப்ப பேங்க்ல தான் இருக்கான்”

“என்ன வெளைய போடுறீங்க?”

“கரும்பு”

லோன் சம்பந்தமாக கேட்டால் மட்டுமே அந்தோணி பதில் அளிப்பதை கண்டு அவளும் அவனிடம் எதுவும் பெர்சனலாக கேட்கவில்லை.

“இங்க லேண்ட் ஓனர் சைன் பண்ணனும்” என்று காட்டினாள்...

“லூர்து, ஏ லூர்து” திரும்பி அழைத்தான் யாரையோ.. அங்கு வயிற்றை தள்ளிக்கொண்டு அந்தப்பெண் வந்து “A.லூர்து” என கையெழுத்து போட்டாள். தான் எதிர்பார்த்தபடி அந்தோணி நன்றாக வாழ்வதை எண்ணி மகிழ்ந்தாள். சிரித்த முகத்துடன் அவனுக்கும் லோன் பாஸ் பண்ணினாள். அவனும் அவன் மனைவியும் லோன் வாங்கி திரும்பியவுடன், அவன் மனைவியிடம் சொன்னான், “தேவுடியா எப்படி ஈஈனு இளிக்குறா பாத்தியா?” என்று..

முத்துச்செல்வியின் முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை. ஆனால் கண்களில் மட்டும் ஏனோ தெரியவில்லை, கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. மேனேஜர் அறைக்கு போனாள் ட்ரான்ஸ்ஃபர் கேட்க..

10 comments

  1. எனது அருமை Ram Kumar அவர்கள் எழுதிய கதை. கிராமத்தில் நடப்பதை நிதர்சனமாக காண்பிக்கிறது. திரு கி.ரா. அவர்கள் கதை படிப்பதைப் போலிருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். "சில நேரங்களில் சில மனிதர்கள்". வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார் :-) நான் இது வரை கி.ரா.வை படித்ததில்லை.. சுஜாதா suggest செய்திருப்பதால் கோபல்லபுரத்து மக்கள் படிக்கலாம் என்றிருக்கிறேன்..

    ReplyDelete
  3. அருமையான கதை! படித்ததும் வலித்தது!

    ReplyDelete
  4. கதைக்களம் அருமையாக இருந்தது ! ஆனால் கதையின் போக்கும் முடிவும் எனக்கு பிடிக்கவில்லை! எதிர்மறையாய் கதை இருக்கிறது ! முழுக்க முழுக்க ஒரு பாவப்பட்ட ஜீவனாகவே கதாநாயகியை சித்தரிப்பதில் கவனம் செலுத்தியது(தெரிந்தோ தெரியாமலோ ) போல தெரிகிறது ! அந்த ஊரில் ஒரு நல்ல உள்ளம் கூடவா இல்லை ? ஒரு படைப்பில் இருக்கும் மனிதம் தான் அதை மேன்மையானதாக மாற்றுகிறது ! அது தான் இந்தக்கதையில் இல்லை !

    bicentennial man திரைப்படத்தின் பாதிப்பு எந்திரனில் நன்றாகவே தெரியும் ! ஆனால் இரண்டு திரைப்படங்களின் முடிவுகளையும் பார்க்கும் போது தான் bicentennial man எதில் உயர்ந்து நிற்கிறது என்பது விளங்கும் ! எந்திரன் தன்னை dismantle செய்து கொள்ளும் போது 'மனிதனுக்குள் நிறைய கெட்ட குணங்கள் இருக்கிறது ! நல்ல வேளை! நான் மனிதனாக பிறக்கவில்லை! ' என சொல்லும் .

    ஆனால் bicentennial man எந்திரம், ஒரு மனிதனாக தான் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் ! 'ஒரு எந்திரமாக அழிவதை விட ஒரு மனிதனாக சாக விரும்புகிறேன் 'என கேட்கும் !

    அந்த மனிதம் படைப்பில் அவசியம் இருக்க வேண்டும் என கருதுகிறேன் ! உதாரணமாக , உங்களது சித்தப்பா , செல்லாக்காசில் அந்த மனிதத்தை நீங்கள் காணலாம் ...

    ஒரு masala cinema வை யாரும் மாய்ந்து மாய்ந்து விமர்சிக்க வேண்டாம் ... ஆனால் ஒரு parallel cinema வை பற்றி கண்டிப்பாக அனைவரும் விவாதிக்க வேண்டும் ... தரமான கதைகளை தந்த நபர், தரப்போகிற நபர் என்பதால் தான் உங்கள் தலையில் உரிமையுடன் கொட்டுகிறேன் ....

    இந்த கதைக்களனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா !













    ReplyDelete
    Replies
    1. //ஒரு பாவப்பட்ட ஜீவனாகவே கதாநாயகியை சித்தரிப்பதில் கவனம் செலுத்தியது(தெரிந்தோ தெரியாமலோ ) போல தெரிகிறது ! // ஹா ஹா தெரிந்தே செய்தது தான் அது.. ஊரில் அப்படி இருக்கும் பெண்ணுக்கு உதவி செய்ய யாரும் வர மாட்டார்கள்.. வேண்டுமானால் அவளை மேலும் துன்புறுத்தாமல் ஒதுங்கிப்போவார்கள்.. மனதில் என்ன இருக்கிறதோ அது தான் மனிதம்.. இங்கு பல மனங்களில் பிறரின் சோகத்தை நோண்டி சிரிக்கும் குரூரம் தான் இருக்கிறது..
      நண்பா வழக்கு எண் 18/9 பற்றி நீங்கள் சொன்ன கருத்தை ஒட்டி நான் சொன்னேன்.. ஞாபகம் இருக்கிறதா?

      Delete
  5. அருமை..... வலைச்சரம் மூலம் இங்கே வந்தேன். தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  6. an excellent story. but the ending should have been positive,

    ReplyDelete
  7. an excellent story. but the ending should have been positive,

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One