ரஜினி - The Most Powerful Magnet...

Monday, December 10, 2012

மெலிந்த தேகம், உப்பிய கண்ணம், ரொம்ப ரொம்ப சின்ன கண்கள், சரியாக வாரப்படாத பரட்டை தலை, வேற என்னய்யா இருக்கு இந்த மனுஷன் கிட்ட? இந்த ஆள் திரையில் தோன்றினால்,பிறந்த குழந்தை முதல் பல் போன பெருசுகள் வரை  இடம், பொருள், ஏவல், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என எல்லாவற்றையும் மறந்து ஏதோ தவ நிலையில் இருப்பது போல் திரையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் பெயரை சொல்லாமலே உங்களுக்கு இந்நேரம் நான் யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என தெரிந்திருக்கும் என்றாலும், கட்டுரைக்கென்று இருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து அவர் பெயரை சொல்வது தான் சரி.. அவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி..



ஒவ்வொரு நடிகரும் இன்று தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள உடலை குறைப்பது, பருமனாக்குவது, மாறுவேசம் போடுவது, வேசம் போட்டதை எண்ட் க்ரிடிட்ஸ் ஓடும் போது காட்டுவது என்று என்னென்னமோ செய்து நம்மை கவர நினைக்கிறார்கள்.. ஆனால் தான் நடிக்கும் காட்சியில் இவர் இழுவையாக “ஐய்” என்று சொன்னால் குழந்தைகள் குதூகலிக்கும், லேசாக கண் கலங்கினால் நமக்கு பொலபொலவென்று கண்ணீர் திறந்துவிடப்பட்ட கர்நாடகா அணை போல் கிளம்பிவிடும்.


 இங்கு நான் ரஜினியின் வரலாறு பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால் இந்திய சுதந்திர வரலாறு தெரிந்தவர்களை விட ரஜினி கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் லெவல் வரை வந்ததை தெரிந்தவர்கள், தெரிந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். ரஜினி என்னும் பிம்பம் என்னை ஆட்கொண்டதை கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம் என்றிருக்கிறேன். வேண்டுமானால் என்னுடன் தொடர்ந்து வாருங்கள், நீங்களும் உங்கள் பால்ய காலத்தில் ரஜினியை ரசித்தது, விமர்சித்தது, தியேட்டரில் ஆட்டம் போட்டது போன்ற நல்ல தருணங்களை நினைத்துப்பார்க்கலாம்.


குழந்தையாக இருக்கும் போது எல்லோருக்கும் ரஜினி என்பவர் ஒரு ஆதர்சம். மிகவும் சாதாரண மனிதனாக இருப்பார், விவரம் தெரியாதவராக ஜனகராஜோடோ செந்திலோடோ சேர்ந்து காமெடி செய்துகொண்டிருப்பார், ஆனால் எவனாவது தப்பு செய்தால், அவ்வளவு தான், பந்தாடிவிடுவார். அவன் போலீஸாக இருந்தாலும் சரி பொறுக்கியாக இருந்தாலும் சரி. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகளும் சேட்டைகளும் ஆக்ரோஷமான சண்டைகளும் அவர் மீது ஒரு வித பாசத்தை உண்டு பண்ணிவிடும் நமக்கு. நம் குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார். எங்கள் வீட்டில் இப்போதும் ரஜினி மாமா என்று தான் நானும் என் தம்பியும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் அவரை.. கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அப்படி சொல்லும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்கள், அது சொல்ல முடியாதது..


எவனொருவனும் குழந்தையாக இருக்கும் போது ரஜினி படம் பார்த்திருந்தால் அவன் கண்டிப்பாக ரஜினி ரசினாக மாறிவிடுவான். பள்ளி போட்டிகளில் ரஜினி பாடல், மழையில் நனையும் போது ரஜினி பாடல், அப்பாவோடு வண்டியில் வேகமாக போகும் போதும் ரஜினி பாடல், ஃப்ரெண்ட்ஸோடு சண்டை போடும் போது அந்த சின்ன வயசிலேயே ரஜினியின் பன்ச் டயலாக்கில் சவால் விடுவது என அவன் வாழ்வில் அப்போதைய முக்கிய தருணங்கள் பலவற்றிலும் ரஜினி இருப்பார். ஏனென்றால் ரஜினியின் முக்கிய அம்சம் அவர் எல்லா படங்களிலும் ரஜினியாகத்தான் இருப்பார். மற்ற படங்களில் கதாப்பாத்திரங்கள் தான் தெரியும். ஒவ்வொரு நடிகரும் தன் ஒவ்வொரு படத்திலும் தன்னை வேறு மாதிரி காட்டிக்கொள்ள நினைப்பார். ஆனால் ரஜினி தன்னை எல்லா படங்களிலும் ரஜினியாக மட்டுமே காட்டிக்கொள்வார். இது ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் போன்றவர்கள் மட்டுமே சாத்தியம். ஆனால் ஒரு மசாலா ஹீரோவுக்கு இப்படி ஒரு பிம்பம், ஃபோர்ஸ், பலம் என்பது ரஜினி ஒருவருக்கு மட்டும் தான். இதில் இருக்கும் பெரிய ரிஸ்க், ஒவ்வொரு படத்திலும் அவர் அந்த பிம்பத்தை உடையாமல் அதே நேரத்தில் அதை விட சிறப்பாக செதுக்க வேண்டும்.. ஒவ்வொரு படம் வரும் போதும் அவரின் அடுத்த படம் மேல் அது மேலும் சுமையை ஏற்றி விடும். ஆனால் ரஜினி என்ன சாதாரண ஆளா? எல்லா சுமையையும் “ப்பூ” என ஊதித்தள்ளி விட்டு, தன் அடுத்த படத்திலும் ஸ்டைலாக “இதெப்டி இருக்கு?” என்று கேட்பார்.. நாம் ஸ்க்ரீனை பார்த்து “சூப்பர்” என்று விசில் அடிப்போம்..


எல்லா மனிதனுக்கும் திமிர் பிடித்த காலம் என்று ஒன்று வரும். அதாவது அந்த 15-20வயது.. அந்த வயதில் உலகில் தனக்கு மட்டும் தான் எல்லாமே தெரிந்தது போலவும், மற்ற எல்லாருமே ’முட்டாப்பயலுக’ என்றும் நினைத்து அலைந்து கொண்டிருப்போம். அப்படி ஒரு வயதில் ரஜினி ரசிகர்களுக்கும் லேசான தடுமாற்றம் வரும். ஒரு கூட்டத்தில் தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள “கமல் மஹாநதில பின்னிருப்பாரு, தெரியுமா?”, “அன்பே சிவம் மாதிரி ரஜினியால முடியுமா?” ”இப்ப வர சின்ன பயலுக கூட என்னமா நடிக்குறாய்ங்க? இந்த ஆளப்பாரு, சினிமாக்கு வந்ததுல இருந்து ஒரே மாதிரி நடிக்குறாரு!” என்று பிதற்றிக்கொண்டிருப்போம். ஒரு உண்மையை மறந்துவிடுவோம், சினிமாவில் மற்றவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் தன் மேனரிஸங்களை மாற்றி, உடலை வருத்தி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டினால் தான் முடியும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் ஒருவர் தாக்குப்பிடிக்கிறார் என்றால், அதற்கு பின் எவ்வளவு பெரிய உழைப்பு இருந்திருக்கும்? ரஜினி ஒருவருக்கு மட்டுமே அது சாத்தியம். சில நடிகர்களுக்கு இரண்டு மூன்று படங்கள் அது போல் ஒரு இமேஜை கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்களில் மக்களும் “என்னய்யா இவன் ஒரே மாதிரி நடிக்குறான்?” என்று திருட்டு விசிடி கூட வாங்க மாட்டார்கள். ஆனால் ரஜினி “நல்லவனுக்கு நல்லவன்”, ”அண்ணாமலை”, “படையப்பா” என்று நடித்தாலும், “வேலைக்காரன்”, “முத்து” என நடித்தாலும் படங்கள் சில்வர் ஜூப்ளி தான். ஏனென்றால் அங்கு எங்களுக்கு கதை முக்கியமில்லை.. ரஜினி என்னும் அந்த மனிதரின் நடை, அழகு, வசன உச்சரிப்பு, பன்ச் டயலாக், அந்த ஸ்டைல், வேகம் இது இருந்தால் போது.. கதையெல்லாம் தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் தேடுவது..


இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள்.. “ரஜினி இந்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?”, என்றும் “ஏம்ப்பா தமிழ்நாட்டுல சம்பாதிச்சத தமிழ்நாட்டுல முதலீடு செய்ய மாட்டாரோ?” என்றும், “இத்தன வயசுக்கு பிறகும் நடிக்கணுமா?” என்றும் ”இவ்வளவு செய்த ரசிகர்களுக்காகவாவது அவர் அரசியலுக்கு வர வேண்டாமா?” என்றும் சும்மா நய நயவென்று ஓலைப்பாயில் மோண்டுகொண்டிருப்பவர்களுக்கு இது தான் என் முதலும் கடைசியுமான பதில். மக்களுக்கு ஏதாவது செய்ய அவர் என்ன பொது சேவகரா இல்லை அரசியல்வாதியா அல்லது உங்களுக்கு சேவை செய்ய UPSC, TNPSC தேர்வெழுதி பாஸாகி வந்த அரசு ஊழியனா? அவர் ஒரு கலைஞன், நடிகன். நடிப்பது அவர் தொழில். அதில் சிறப்பாக செய்யவில்லை என்றால் கிழி கிழியென்று கிழியுங்கள், கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக மக்களுக்கு என்ன செய்தார் என கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒருவனை அவன் வேலையை மீறி எதையாவது செய் என்று கட்டாயப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஓட்டு போட்ட மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே முழு வேலையா இருக்கும் அரசியல்வாதிகளை கேள்விகேட்காத நாம் ஒரு நடிகரை ஏன் கேள்வி கேட்கிறோம்? நம் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியனை கேள்வி கேட்காத நாம், ஒரு பொழுது போக்கு துறை ஆசாமியை ஏன் கேட்கிறோம்? நமக்கு உதவ வேண்டும் என்று அவருக்கு கட்டாயம் கிடையாது.. நம்மால் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது.. மக்களுக்கு அவர் உதவவில்லை என நாம் குற்றம் சொல்லவும் முடியாது..



 இங்கிருந்து வெளிநாட்டில் போய் சம்பாதிக்கும் நம் நாட்டுக்காரர்களை அங்கிருப்பவரிகள் எல்லாம், “எப்பா இங்காரு, நீ எங்கூருல தான் லட்ச லட்சமா சம்பாதிச்சிருக்க, ஒழுங்கா இங்கேயே எல்லாத்தையும் குடுத்துட்டு போயிரு”னு சொன்னா எவ்வளவு அசிங்கமாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் கேள்வி. ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்ததை எப்படி உங்களால் வாய் கூசாமல் திருட முற்பட்டு அதற்கு புரட்சி என்னும் பெயரில் ஞாயம் கற்பிக்க முடிகிறது? நான் உங்களுக்கு லட்ச ரூபாய் கொடுக்கிறேன்.. உங்களால் என்னை என் எல்லா கவலைகளையும் மறக்கடித்து குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொள்ளாமல் சந்தோசப்படுத்த முடியுமா? ஆனால் ஒரு நடிகன் கடந்து இருபத்தைந்து வருடங்களாக வெறும் சொற்ப ரூபாயை வாங்கிக்கொண்டு என் கவலைகள், வேலைப்பளு, என எல்லாவற்றையும் ரெண்டரை மணி நேரம் மறக்க செய்து ஒரு வித மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுக்கிறான் என்றால், அந்த மனிதனிடம் அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்? எனக்கு ரஜினியை ரசிக்கும் அந்த நேர சந்தோசம் போதும்..


ரஜினியையும் அரசியலையும் அடிக்கடி இணைத்து அவரின் நிம்மதியையும் என்னைப்போன்ற ரசிகர்களின் நிம்மதியையும் கெடுப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது’ என்று கட்டாயப்படுத்த உங்களுக்கோ எனக்கோ உரிமையில்லை. அவர் என்ன செய்கிறாரோ அது அவர் விருப்பம். ஒரு வேளை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால், எப்போது எப்படி வரணும்னு அவருக்கு நல்லா தெரியும். அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும், வரிசையை மதித்து க்யூவில் நிற்பீர்களா? சாலை விதிகளை ஃபாலோ செய்வீர்களா? லஞ்சம் கொடுத்து உங்களுக்கு முன் முறையாக காத்திருப்பவனை பின்னுக்கு தள்ளி உங்கள் வேலையை மட்டும் வேகமாக முடிக்காமல் இருந்துவிடுவீர்களா? எந்த விதத்திலும் ஒரு நல்ல குடிமகனாக இல்லாத உங்களுக்கு ரஜினி போல் ஒரு நல்லவர் ஆள வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் ஏன் இருக்கிறது? ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என நினைத்தீர்களானால், அவர் ஆளும் அளவுக்கு உங்கள் தகுதிகளை வளப்படுத்திக்கொண்டு வாருங்கள்.


பாருங்கள் தலைவரின் பிறந்த நாளுக்கு ஒரு போஸ்ட் போட நினைத்தால் அது எங்கெங்கோ நம்மை சுற்றியடித்து விட்டது. சரி விசயத்துக்கு வருவோம். மற்றவர் போல் நாம் தலைவரை இங்கேயே தொழில் தொடங்கவோ, அரசியல்  ஆரம்பிக்கவோ சொல்லவில்லை.. வருடத்திற்கு ஒரு படம், அல்லது ரெண்டு வருடத்திற்காவது ஒரு படம் நடிக்க வேண்டும்.. அவ்வளவு தான்.. அந்த சிறிய விசீகரமான உலகின் மிக சக்திமிகுந்த கண்களை நாங்கள் அடிக்கடி பெரிய திரையில் பார்த்து தொண்டை கட்டும் அளவுக்கு விசில் அடிக்க வேண்டும். படம் பார்த்த அன்று இரவு ஏதோ தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி மனதில் இருக்க வேண்டும். அந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக உறங்க வேண்டும். இதையெல்லாம் நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் அனுபவிக்க, தலைவரின் இந்த பிறந்த நாளில், இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளையும், நல்ல டைரக்டர்களையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். ஒரு வேளை அவர் நடிப்பதை நிறுத்தினாலும் அவரின் படங்கள் கொடுத்த மகிழ்ச்சி எங்களுக்கு போதும். இப்போதைக்கு சிவாஜி 3D தான் எங்களின் கவனம் முழுதும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு ரஜினி மாமா...


ஒரு சின்ன லிஸ்ட். எனக்கு பிடித்த ரஜினியின் 15 படங்கள். முதலில் 5 என முடிவு செய்து, அது 10 ஆகி பின் 10ம் காணாமல் இப்போது 15. பதினைந்தும் கம்மி தான். எல்லா படங்களும் பிடித்த படங்கள் தான். விட்டுப்போன் மற்ற படங்கள் என்னை மன்னிக்கட்டும். இந்த பதினைந்து படங்களுக்கு ரேன்க் எல்லாம் இல்லை. எல்லாமே சமமாக பிடிக்கும். ஒரே நேரத்தில் இவை அனைத்தும் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகினால் பதினைந்து புது டிவிக்கள் வாங்க கூட தயங்க மாட்டேன். இனி லிஸ்ட்

1. ஆறிலிருந்து அறுபது வரை
2. முள்ளும் மலரும்
3. தில்லு முல்லு
4. படிக்காதவன்
5. பணக்காரன்
6. தளபதி
7. வீரா
8. அண்ணாமலை
9. பாட்ஷா
10. முத்து
11. படையப்பா
12. சிவாஜி
13. குரு சிஷ்யன்
14. மன்னன்
15. நான் சிகப்பு மனிதன்

மீண்டும் சொல்கிறேன், ரஜினி என்கிற நடிகரை பாருங்கள். அவரின் தனி மனித சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க உங்களுக்கோ எனக்கோ தகுதியோ உரிமையோ கிடையாது.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்..

15 comments

  1. nalla karuthukal thalavar parthal ( suppose ) romba santhosa paduvaar.anpulla rajinikanth padam pathutu nanum rajini mamanu sollithirinthavan thaan. evanavathu avara cinemavilthaan neeyellam biskothudanu 5 vayasulaye kaththunuvan.athukku amma thalaila kotti utkaara vaippanga.nice feel bro.thanks 4 this page

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Thangaraj Vishwanathan.. ரஜினி படம் என்றாலே நாம் குழந்தைகள் ஆகிவிடுவோம்..

      Delete
  2. Happy Birth Day Thalaivaa

    ReplyDelete
  3. நாங்க ஒரு தடவ விஷ் பண்ணா நூறு தடவ விஷ் பண்ணா மாதிரி...... வேர்ல்ட் ஸ்டார் ரஜினி சாருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..... உங்கள் கோச்சடையான் படத்துக்காக " i am waiting"......

    ReplyDelete
  4. ///////////ரஜினி என்கிற நடிகரை பாருங்கள். அவரின் தனி மனித சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க உங்களுக்கோ எனக்கோ தகுதியோ உரிமையோ கிடையாது../////// ----வேண்டாம் தனி மனித --- மூக்கை நுழைக்க வேண்டாம் ---இதே போன்ற - இதைவிட அதிகமான தகுதிக்ள சிம்புக்கு விஜய்க்கு தல - க்கு இருக்கிறது - இல்லை என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் மேனியாக் கருத்து என நான் சொன்னால் நான் மேனியா என்றுதான் நீங்கள் சொல்வீர்கள் ஒரு மாயையான பலவீனமான மாஸ் ஆக எல்லோரும் சொன்னால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை, பிரமாதமான நடிகர் என்றால் சிவாஜியோ கமலோ விக்ரமோ கூட இல்லையா விசில் அடித்து பரவசப்படவேண்டும் பயித்தியம் பிடிச்சு அமெரிக்காவில கூட 2000 ரூபய்க்கு பட டிக்கட் வாங்கி முதல் நாளில் ஒரு குப்பை படத்தை பார்த்து பரவசமாக் ஆகவேண்டும் என்றால் ஆகிக் கொள்ளுங்கள் அப்படி ஆகாதவன் முட்டாள் மடையன் என்றால் யார் முட்டாள் என பட்டி மன்றம் நடத்தத் தேவையில்லை. நல்ல சினிமாவை உலக சினிமாவை ரசிப்பதில் உள்ள விஷய ஞானம் பற்றி நீங்கள் உட்பட சிலாகிக்கிறீர்கள் - குப்பை தெலுங்குப்படம் பார்ப்பத்ற்கு உலகமே அழிஞ்சிருந்தாலும் பரவாயில்லை என சிறப்பு கட்டுரை படைக்கிறீர்கள் ஆகவே நான் சிலிர்த்ததை பார்த்து நீங்களும் சிகிர்ப்படையுங்கள் என்றால் அது ஆவறதில்லை. கட்டுரை எழுதி கொண்டாடி தமிழ் உலகமே மந்தகாசத்தில் உள்ளது என்றால் அந்த மந்தகாசத்தைப் பார்த்து வருத்தபடத்தான் முடியும் அரசியல் சொந்தக் கருத்துகளில் நுழையத்தேவையில்லைதான் - அதை மீறி ”வெட்டி இஸ்டைலை” தான் நான் விரும்புவேன் என்றால் மிகப் பெரிய ஸ்டைலை சிவாஜியும் எம்.ஜி.ஆரும் முன்பே செய்துவிட்டார்கள். பன்ச்சும் டயலாகும் வெட்டி என்பது தெரியாதா அதே பன்ச்சை சிம்புவோ விஜய்யோ செய்தால் கோபம் வருகிறது வெறுப்பு வருகிறது புரியல.

    ReplyDelete
    Replies
    1. இங்கு நான் ரஜினியை வைத்து பட்டிமன்றன் நடத்தவில்லை.. விஜய், அஜித், சிம்பு, எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களை ஒப்பிடவில்லை.. எனக்கு பிடித்திருக்கிறது, அதை பகிர்ந்திருக்கிறேன். ரஜினி என்பவரை என்னால் மற்ற சினிமாவுக்குள்ளோ இல்லை சினிமா சம்பந்தப்பட்ட அளவீடுகளிலோ (உலகத்தரம் போன்ற) வைத்து பார்க்க முடியாது.. ரஜினி என்பதே ஒரு தனி உலகம் மாதிரி.. அது எப்படி இருக்கிறதோ அப்படி ரசிப்பேன்.. அவ்வளவு தான்.. நான் படித்த படிப்பு, என் அறிவு, திமிர் இதுவெல்லாம் எதுவும் வேலை செய்யாது நான் ரஜினி படம் பார்க்கும் போது.. அது ஒரு விதமான போதை.. நான் அதற்கு அடிமை என்றும் சொல்லலாம்.. :-) ஒரு படத்திற்கு நாங்கள் செலவழித்தால் உங்களுக்கு என்ன?

      Delete
  5. Blog is superb.. Having more eye opening message

    ReplyDelete
  6. //
    ஏனென்றால் அங்கு எங்களுக்கு கதை முக்கியமில்லை.. ரஜினி என்னும் அந்த மனிதரின் நடை, அழகு, வசன உச்சரிப்பு, பன்ச் டயலாக், அந்த ஸ்டைல், வேகம் இது இருந்தால் போது.
    //
    90களுக்கு பின் வெளிவந்த அதிசிய பிறவி, நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன், பாபா, குசேலன் போன்ற படங்கள் ஊத்திக் கொண்டதற்கு என்ன காரணம்? அப்படங்களில் நிச்சயம் நீங்கள் சிலாகிக்கும் ரஜினி இருந்தாரே?

    யார் நடித்த படமாக இருந்தாலும் கதை, திரைக் கதை இரண்டும் நன்றாக இருப்பது அவசியம். அது இல்லை என்றால் ஊத்திக் கொள்ளும்.

    ஆனால் ஒன்று, ரஜினியின் மாஸ் இந்திய அளவிலேயே வேறு யாருக்கும் கிடையாது என்பது தான் உண்மை. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அது அப்படியே இருக்கிறது. ஆனால் இன்னமும் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. இப்போதே அவருக்கு 62 வயது. ரஜினியின் தீவிர ரசிகர்களால் அவரை அமிதாப் தற்போது செய்யும் பாத்திரங்களை போன்ற பாத்திரங்களில் பார்த்து ரசிக்க முடியுமா என்பது பெரிய கேள்வி.

    ரஜினியின் மாஸ் போனால், இயாக்குனர்கள் அவருக்கான கதையை தயாரிப்பதில் இருந்து பின் வாங்குவார்கள். ரஜினியால் கமல் போல, MGR போல தனக்கான கதையை யோசித்து தயாரிக்க முடியாது. அந்த நாளில் அவரது சகாப்தம் முடிவுக்கு வரும்.

    ReplyDelete
  7. @SathyaPriyan: நீங்கள் பெரிய ஜோசியக்காரராக இருப்பீர்கள் போலயே? பாண்டியன் படம் ஃப்ளாப்பா? ஹிட்டோ ஃப்ளாப்போ, நான் ரஜினி ஹிட் கொடுத்தால் மட்டும் ரசிப்பேன் என்றே சொல்லவில்லையே? ரஜினி ஸ்கிரீனில் வந்தாலே எனக்கு கொண்டாட்டம் தான்.. //ந்த நாளில் அவரது சகாப்தம் முடிவுக்கு வரும்.// இந்த உலகில் எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு உண்டு. எல்லாமே ஒரு நாளில் முடிவுக்கு வரும்.. ஆனால் ஒரு சில மட்டுமே முடிந்த பின்னும் அதனுடைய தாக்கத்தை என்றென்றும் நிலைத்திருக்க செய்யும்.. அப்படி ஒரு சகாப்தம் தான் ரஜினி..

    ReplyDelete
  8. ரஜினியை பற்றிய ஆராய்ச்சியையே தொடர்ந்து நடத்துங்கள். நான் ஜோசியனா என்ற ஆராய்ச்சி தெவையற்றது. கருத்தை கருத்தாக பாருங்கள்.

    நீங்கள் திரையில் ரஜினி இருந்தாலே எங்களுக்கு போதும் என்று சொன்னதற்கு பதில் தான் முதல் பத்தி.

    ஆக் படத்தில் கொடூரமான வில்லனாக வந்து அஜய் தேவ்கனிடம் செருப்படி வாங்குவார் அமிதாப். ரஜினி விஜய் படத்தில் வில்லனாக நடித்தால் நீங்கள் பார்ப்பீர்களா? இல்லை என்று சொல்வதற்கு நான் பெரிய ஜோசியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    பின்னூட்டத்தை நீங்கள் சரியாக படித்தீர்களா என்ற சந்தேகம் இருப்பதால் நான் எழுதியதை கீழே மறுபடியும் எழுதுகிறேன்.

    //
    ரஜினியின் மாஸ் இந்திய அளவிலேயே வேறு யாருக்கும் கிடையாது என்பது தான் உண்மை.
    //

    ReplyDelete
  9. @Ram Kumar,

    நாம் விவாதிக்கும் இந்த விஷயம் உப்பு பெறாத விஷயம் என்பதால் இத்துடன் எனது விவாதத்தை முடித்து கொள்கிறேன்.

    ரஜினி நாசமாக போக வேண்டும் என்று நினைக்கும் கூட்டம் ஒன்று இருக்கலாம். நிச்சயமாக நான் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் கிடையாது. நானும் ரஜினியை ரசிப்பவனே.

    நடிகர் சிவாஜி கணேசனின் கடைசி 20 ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? எனக்கு நினைவில் இருப்பது ஜல்லிக் கட்டு, தாவணிக்கனவுகள், தேவர் மகன், முதல் மரியாதை நான்கு தான். சிவாஜி என்ற நடிகனின் நட்சத்திர அந்தஸ்து போனவுடன் தமிழகம் இழந்தது சிவாஜி என்ற நடிகனை.

    தமிழ் சினிமா வர்த்தகமும், தமிழ் சினிமா பிரம்மாக்களும், தமிழ் சினிமா ரசிகர்களும் ஒன்று சேர்ந்து சிவாஜி என்ற நடிகனை சிவாஜி என்ற நட்சத்திரத்திற்கு பலி கொடுத்து விட்டனர்.

    மூன்று முடிச்சு படத்தில் தனது வேலைக்காரியை கற்பழித்து விட்டு வெளியே வந்து வியர்வையை துடைத்து விட்டு சிகரெட்டை வாயில் தூக்கி போடும் காட்சி,

    அவள் அப்படித்தானில் ஸ்ரீப்ரியாவிடம் அடி வாங்கி விட்டு சட்டென்று அவரை கண்டு பயந்து நடுங்கி, பின் வெளியே வந்து ஒன்றும் நடக்காதது போல தலையை சிலுப்பிய காட்சி,

    என்று இப்படி இன்னும் பல காட்சிகள் எனது கண்ணிலேயே இருக்கிறது. ரஜினியை சிலாகிக்கும் நீங்கள் அதையெல்லாம் பார்த்திருப்பீர்களா என்பது கூட சந்தேகமே.

    நீங்கள் ஆயிரம் சொன்னாலும், என்னை பொருத்த வரை ரஜினி என்ற வில்லனிடம், ரஜினி என்ற ஹீரோ பிச்சை எடுக்க வேண்டும். வேட்டையனையும், மொட்டை பாஸையும், சிட்டியையும் பார்த்து ரசிப்பதுடன் மட்டும் அல்லாமல், அவர் அந்த வில்லத்தனத்தை மற்ற ஹீரோக்களிடமும் திரையில் காட்டினால் சிவாஜிக்கு கடைசி காலத்தில் ஏற்பட்ட நிலை ரஜினிக்கு ஏற்படாது.

    அந்த நிலை ரஜினிக்கு ஏற்படாமல் இருக்க ரஜினியை நடிகராக மட்டும் பார்க்க உங்களை போன்ற அவரது தீவிர ரசிகர்கள் முன் வர வேண்டும். மற்றபடி எனது கருத்து உங்கள் மனதை வருத்தமடைய செய்திருந்தால் மன்னியுங்கள்.

    ReplyDelete
  10. சத்யப்ரியன் சார் வெரி நைஸ் நாகரிகமான இடுகை நன்றி சார்

    ReplyDelete
  11. sir,
    Rajini as an actor his best movies are before 1980 what satyapriyan told is correct. innum oru "parattai" pol oru rowdy character seyya aal illai

    ReplyDelete
  12. sivakasi sir

    during 2009 you have written about vaiko's election.but he was defeated by huge force
    now it is 2014 what is the present condition
    kindly write about this also

    ReplyDelete
  13. sir
    You know about bharathi raja first film "16 vayathinile" Super duper hit in the year 1977. The same was made in hindi by the same bharathi raja with same sridevi Instead of kamal amol palekar and instead of rajini it was suresh oberoi utter flop. At that time bharathi raja comment was "Not able to find suitable actor for parattai role like rajini in tamil". If he tried with Rajini and Kamal as he did in tamil it should be a super duper hit

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One