ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...

Sunday, April 19, 2015

நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசை என்றாலும், தோஸ்து எவனும் அவர் படங்களைப் பார்க்க ரெடியாக இல்லை.. “காதுலயே விழுகாதுரா வசனம்.. வாயிக்குள்ளயே பேசுவாய்ங்க”, ”என்ன கதைன்னே புரியாதுரா” என்று எதையாவது சொல்லிச் சமாளித்து, என்னையும் போக விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும் கே டிவி, லோக்கல் கேபிள் டிவி உபயங்களில் அவரின் முக்கால்வாசிப் படங்களைப் பார்த்து, “ஏய் நாங்களும் மணிரத்னம் ரசிகன் தான் தெரியும்ல?” என்று பீத்த ஆரம்பித்திருந்தேன்.

அதுவும் MBA படிக்கும் போது தான் அவரும் ஒரு MBA என்று தெரிய வந்தது.. சொல்லவும் வேண்டுமா? “அதான்யா படத்த அவ்வளவு நேக்கா எடுக்குறாரு.. ’புரிஞ்வன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் தேட்டர் பக்கமே வந்துறாத’ன்னு தைரியாமா விடாப்பிடியா அவர்  இஷ்டத்துக்குப் படம் எடுக்குறார் பாரு. டெக்னீசியன்ட்ட எப்படி வேல வாங்குறாரு பாரு, அதான்யா MBA” என்று கண்ணாபிண்ணாவென்று பேசும் ரசிகன் நான்.. கிட்டத்தட்ட இருபத்திச்சொச்சம் ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அவரின் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போதும் மனதில் ஒரே சந்தோசம். மணிரத்னம் என்கிற பெயரைத் திரையில் காட்டும் போது வந்த ரெண்டு மூனு விசில் சத்தங்களோடு மானசீகமாகக் கை குலுக்கிக் கொண்டேன், “என் இனமடா நீ” என்று..




ரெண்டு மாடர்ன் ஆட்கள், ஆமாம் ஆணொன்று பெண் ஒன்று.. பார்க்கிறார்கள், பிடிக்கிறது, ஒன்றாக வாழ நினைக்கிறார்கள், நிற்க.. ஆனால் கல்யாணம், கில்யாணம் கமிட்மெண்ட் கிமிட்மெண்ட் எதுவும் கிடையாது.. இருவரும் கொஞ்ச நாள் வாழ்வார்கள், அதற்குப் பின் பிரிந்துவிட வேண்டும் என்கிற ம்யூச்சுவல் ஒப்புதலுடன்.. பிரியப்போகும் அந்தக் கடைசி நாட்களில் அவர்களுக்குள் இருக்கும் உண்மையானக் காதலைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேண்டாம் என நினைத்த அந்தக் கல்யாணத்தையே கட்டி அழுகிறார்கள். இது தான் கதை.. என்னது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உங்க இளைய தளபதி விஜய்யின் ‘பிரியமானவளே’வைப் பட்டி டிங்கரிங் செய்த மாதிரி இருக்கா? ஹலோ பாஸ், இது மணிரத்னம் படம். வாய் இருங்குங்கிறதுக்காகவெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. ஒன்லி குவாலிஃபைடு பீப்புள் தான் கேள்வி கேக்கணும், மைண்ட் இட்... கதை இவ்வளவு தான்.

நடிப்பில் துல்கர், நித்யா மேனனுக்கு அடுத்தபடி தான்.. நித்யா மேனனின் கண்கள் இருக்கிறதே, ஆத்தாடி என்னா பவர்ஃபுல். சில பெண்களின் கண்களைப் பார்த்தால், ’All the world's a stage'ல் ஷேக்ஸ்பியர் சொன்னது ஞாபகம் வரும் - wild eyes.. அப்படிப்பட்ட கண்கள் நித்யா மேனனுடையவை.. அந்தக் கண்களுக்கு நான் அடிமை.. அதுவும் ‘உருமி’ படத்தில் மலையாள பாணி முண்டு கட்டிக்கொண்டு, சைடு கொண்டையுடன் பிரபு தேவாவை ஒரு லுக் விடுவார் பாருங்கள், அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்திலும் அவர் நடிக்கும் முன்பே அவர் கண்கள் நடித்து முடித்துவிடுகின்றன. ஒரு சின்ன சிரிப்பிலேயே சந்தோசம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறார்.. அழகு, திறமை இரண்டும் இருக்கிறது.. ஒரே பெரிய குறை அவரின் எடை. குட்டையான அவர் உயரத்திற்கு இது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.. எடை, இடை இரண்டையும் குறைப்பது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது..



பிரகாஷ்ராஜ் எப்பவும் போல டீ குடிப்பது மாதிரி மிகச்சாதாரணமாகத் தன் பங்களிப்பைச் செய்துவிட்டார்.. அலட்டல் இல்லாத நடிப்பு.. அவரின் மனைவியாக வரும் லீலா சாம்சன், ஒரு நல்லப் புதுவரவு. பிரகாஷ்ராஜிற்கும் அவருக்கும் உண்டான காதலை இருவரும் சொல்லும் இடம் அவ்வளவு அழகு. கோயிலில் மழையில் நனைந்து கொண்டே “வீட்டுக்கு எப்படி போறதுன்னு மறந்துட்டேன்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வசனம் போதும் அல்சைமர் என்பதின் அர்த்தத்தை நம் மக்களுக்கு உணர்த்த.. துல்கர் சல்மான் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோக்களைப் போல் அழகாக இருக்கிறார். அரவிந்த் சாமி மாதிரி அப்படியே நடிக்கிறார். தனித்துவம் எதுவும் இல்லை.

படத்தில் சில இடங்களில், மிகச்சில இடங்களில் மட்டுமே மணிரத்னம் டச் இருக்கிறது.. ஆஸ்பத்திரி காட்சி, பிரகாஷ்ராஜ் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் காட்சி, துல்கர் இரண்டு நாட்கள் என்ன ஆனார் என்பது, கடைசியில் லீலா “கணபதி எங்க?” என்று கேட்பது, இதில் மட்டுமே எனக்கு அவரின் டச் தெரிந்தது.. வசனம் யாரோ இரு ஃபேஸ்புக்/பிளாக் எழுத்தாளர்கள் பேசுவது போல் இருந்தன.. அவரின் காதல் படங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாமே ஏன் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போல் பேசுகிறார்கள் என்றுப் புரியவில்லை. நிஜத்தில் எவனாவது/எவளாவது நம்மிடம் அப்படிப்பேசினால் காதல் வராது, எரிச்சல் தான் வரும். மௌனராகம் கார்த்திக் மட்டுமே exception. ஒரு ஜாலிப் பேர்வழிக்கு அது தான் சரி.. ஆனால் எல்லாப் படத்திலும் - ரோஜாவில் ஆரம்பத்தில் வரும் அரவிந்த் சாமி, பம்பாயில் நாசரிடம் பேசும் அரவிந்த் சாமி, உயிரே படம் முழுக்க ஷாருக், அலைபாயுதேவில் மாதவன், ஷாலினி இருவரும், ஆயுத எழுத்தில் மூன்று ஜோடிகளும் - அனைவர் பேசுவதும் ஒரே மாதிரி, அவர்கள் வாழும் சமூகச் சூழலில் இருந்து விலகி, முழுக்க பக்குவப்பட்ட ஒரு மேடைப்பேச்சாளன் பேசுவது போலவே இருக்கிறது.. இந்தப் படத்திலும் அப்படித்தான். சில இடங்களில் வசனங்கள் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவர்கள் பேசுவது ரொம்பச் செயற்கையாக இருக்கிறது.

Living Togetherஐப் பற்றிச் சொல்ல வருவது மாதிரி அப்படியே போய் கடைசியில் கல்யாணம் தான் ஒரே வழி காதலுக்கு என்பது போல் முடிக்கிறார். அந்த லிவிங் டுகெதரையாவது உருப்படியாகக் காட்டினாரா என்றால் அதுவும் இல்லை.. மிக மிக மேம்போக்காகக் காட்டியிருக்கிறார்.. லிவிங் டுகெதரின் நன்மைகள், பிரச்சனைகள் என்று எதையுமே சொல்லவில்லை. அந்த வகையில் இது ஒரு வழக்கமானப் படமாகவே தெரிகிறது.. பிற படங்களில் காதலிப்பார்கள், கடைசியில் கல்யாணம் செய்து கொள்வார்கள்; இந்தப் படத்தில் லிவிங் டுகெதராக இருக்கிறார்கள் கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.. லிவிங் டுகெதரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் அவர்கள், அதை நன்றாக அனுபவித்தார்கள் என்பதற்கும் காட்சிகள் இல்லை, அது வேண்டாம் என்று கல்யாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் தெளிவானக் காட்சிகள் இல்லை..

அதுவும் பிரகாஷ்ராஜ் குடும்பத்தைக் காட்டியவுடனேயே க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிந்துவிடுகிறது நமக்கு. அடுத்தும் இரண்டு மணிநேரம் படத்தை இழுத்திருப்பது தான்  செம போர் ஆகிவிட்டது. முதல் பாதி ரொம்ப இழுவை. இரண்டாம் பாதியில் கடைசி அரைமணி நேரம் சூப்பர், மற்றபடி முதல் பாதி அளவுக்கு அது மோசம் இல்லை. மிகச்சின்னதாகப் படத்தை எடுத்திருக்கலாம்.. படத்தின் பெரிய ஆறுதல் பி.சி.ஸ்ரீராம் தான்.. அந்த வீட்டை, டபுள் டெக்கர் பஸ்சை, மும்பையின் சந்தடியை, ரயிலை, குக்கர் ஆவியை, துல்கர் சல்மானை என அனைத்தையும் அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். இசை என்னமோ எனக்குப் பிடிக்கவில்லை. வர வர ரெஹ்மான் ஏன் இப்படி மொக்கையாகிவிட்டார் என வருத்தமாக இருக்கிறது. அந்தக் கர்னாடகப் பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது..



கடைசியில், ஒரு அழகான உறவு வேண்டுமானால் கல்யாணம் என்கிற பந்தம் தேவை என்று மணிரத்னம் அழகாக முடித்திருந்தாலும், நம் ஆட்கள் அது எல்லாத்தையும் விட, லிவிங் டுகெதராக துல்கரும் நித்யாவும் போட்ட ஆட்டத்தை மட்டும் தான் மனதில் வைத்திருப்பார்கள், துல்கர் மேல் பொறாமைப் படுவார்கள்.. அது தான் மனித இயல்பு.  நம் மக்கள் ‘தேவர் மகன்’ படத்தில்  கடைசியில் நாசரைக் கமல் வெட்டியவுடனேயே தியேட்டரில் இருந்து கிளம்பிவிடுவார்கள், “போங்கடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா” என்கிற வசனம் ஓடும் போது தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டில் கூட்டம் வருவதற்கு முன் முதல் ஆளாக சைக்கிளை எடுத்துக் கிளம்பிவிட வேண்டும் என்று ஓடுவார்கள். ‘காதல்’ படத்தில் கடைசியில் பரத் வாங்கும் அடி, படும் அவஸ்தை எல்லாம் நம் மக்களுக்கு மண்டையில் ஏறாது. ’நியூ’ படத்தில் அழகான அம்மா செண்டிமெண்ட் உண்டு. ஆனால் எவன் அந்தப் படத்தில் அதையெல்லாம் கவனித்தான்? நம் மக்களுக்குப் படத்தில் என்ன வேண்டுமோ, எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் தான் எடுத்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட இந்தப் படமும் அப்படித்தான்..

ஆனால் இன்னொரு பக்கம் லிவிங் டுகெதர் எல்லாம் நம் இளைஞர் மத்தியில் வரவேற்பு பெருமா என்றும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் ஆசையை இன்னொருவர் மேல் திணிக்கக்கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது, எந்நேரமும் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்க வேண்டும், அழுகக் கூடாது, எப்போதும் ஜாலி தான் என்பது மிஷின் மாதிரி வாழும், பாசமே அறியாத வெளிநாட்டானுக்கு ஏற்றதாக இருக்கலாம். நம் இளைஞர்களுக்குப் பாசம் காட்ட, கோபம் வந்தால் கத்த, சோகத்தில் தோளில் சாய்ந்து அழ, விடிய விடிய மொக்கை போட, எந்த கஷ்டத்திலும் விட்டுவிட்டுப்போகாத ஒரு துணை வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்றைக்கும்... செக்ஸ் என்பதையும் தாண்டி, வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நம் இளைஞர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இது போன்றப் படங்களைப் பார்க்கும் நம்ம பசங்க காதல் என்கிற பெயரில் கசமுசா வேண்டுமானால் செய்வார்களே ஒழிய, லிவிங் டுகதர் அளவுக்கு அவர்களுக்குத் தைரியமும் கிடையாது, பொறுமையும் கிடையாது என்பது என் கருத்து.. உப்புச்சப்பில்லாத லிசிங் டுகெதருக்குப் பதில் கல்யாணமே பெட்டர் என்கிற விசயம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.. லிவிங் டுகெதர் இன்னும் 20 ஆண்டுகளுக்காவது இங்கு வராது என்பது என் கணிப்பு. அதனால் இதை வெறும் கதையாக, படமாக மட்டும் பார்க்கலாம். தேவையில்லாமல் நம் வாழ்க்கை முறையோடு தொடர்புப் படுத்துவது சரியல்ல.. 

ஆனால் படமாகப் பார்த்தாலும் ரொம்ப சுமார் தான். மொக்கையான முதல் பாதி, சற்றே சுமாரான இரண்டாம் பாதி, ஓரளவு நல்ல க்ளைமேக்ஸ். ஆனாலும் நான் எதிர்பார்த்தது, மணி லிவிங் டுகதெருக்கு ஞாயம் கறிபித்திருப்பார், அதிலும் இருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டலாம் என ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” போல் ideal relationshipஐக் காட்டுவார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.. ஆனால் அந்தக் க்ளைமேக்ஸ் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. யாரோ ஒரு இயக்குனர் இந்த க்ளைமேக்ஸை வைத்திருந்தால் சூப்பர் என்று தாராளமாகச் சொல்லியிருப்பேன். மணிரத்னம் இப்படி ஒரு சாதாரணமானக் க்ளைமேக்சை வைத்திருப்பது நிச்சயம் ஏமாற்றம் தான். மணிரத்னம் என்கிற இயக்குனருக்கு இது ரொம்ப ரொம்பச் சுமாரான படம்.. மணிரத்னம் என்கிற தயாரிப்பாளருக்கு பழைய ஃப்ளாப்கள் அளவுக்கு இல்லாமல் ஓரளவு வசூலைக் கொடுக்கும் moderate hit படம். அவ்வளவு தான்.

மணிரத்னத்திற்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் வொர்த்தா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சின்ன அட்வைஸ்.. இனிமேலாவது முழுக்க முழுக்க டெக்னீசியன்களை நம்பி படம் எடுக்காதீர்கள். கதை, திரைக்கதையைத் தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது உங்கள் படங்களில் இப்போதெல்லாம்.. படத்தில் ஒரே மாதிரியான பாத்திரங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வசனம் கொஞ்சமாவது இயல்பாக இருக்கட்டும். உங்கள் சினிமா வாழ்க்கையில் ‘பம்பாய்’ படம் வரை இருந்த மணிரத்னத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறோம்.. விரைவில் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு படம் எடுங்கள்.. இது போல் ஏ செண்டர் படங்கள் எல்லாம் உங்களை சினிமா விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்க வைக்கும்,  ஆனால் ரசிகர்களிடம் இருந்து விலக்கித் தான் வைக்கும்..



படத்தில் ஒரு வசனம் வரும், “நல்ல படத்துக்கு மொக்கை க்ளைமேக்ஸ்” என்று.. “ஓகே கண்மணி - மொக்கை படத்துக்கு நல்ல க்ளைமேக்ஸ்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்..

6 comments

  1. ம்ஹீம்... வெறும் கதையாக பார்த்தாலும் பிடிக்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்..

      Delete
  2. "எனது மணிக்கு அட்வைசா" என சுகாசினி மேடம் பொங்கி எழாமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. சுகா மேடம் பொங்கும் அளவுக்கெல்லாம் நான் டெவலப் ஆகல பாஸ் இன்னும்..

      Delete
  3. நல்ல விமர்சனம்.
    \\புரியப்போகும் அந்தக் கடைசி நாட்களில்\\ பிரியப்போகும்??

    \\ஹலோ பாஸ், இது மணிரத்னம் படம். வாய் இருங்குங்கிறதுக்காகவெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. ஒன்லி குவாலிஃபைடு பீப்புள் தான் கேள்வி கேக்கணும், மைண்ட் இட்... கதை இவ்வளவு தான்.\\LOL

    ReplyDelete
    Replies
    1. ஆம் typo error.. இப்ப திருத்திட்டேங்க.. ரொம்ப நன்றி :)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One