உங்கள் வேலை தொடருமா? சீட் கிழியுமா?

Tuesday, March 24, 2015

பொருளாதார வல்லுனர்கள் 2015-16ம் ஆண்டை வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆண்டாக கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது வரும் ஏப்ரலில் இருந்து அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே மாணவர்களை அலேக்காகத் தூக்கிச் செல்ல காத்திருக்கின்றன. இந்த ஆண்டு கூட அதிக அளவில் on campus வேலை வாய்ப்பை வழங்கியவை start ups என்று சொல்லப்படும் புதிய நிறுவனங்கள் தான். சென்னையில் இருக்கும் “Great Lakes Institute of Management"ல் இந்த ஆண்டு ஒருவரை 57லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற மேலாண்மைக் கல்லூரியான "Faculty of Management Studies"ன் campus placementல் இந்த ஆண்டிற்கான சராசரி சம்பளம் 17லட்சம்!!! இதெல்லாம் எதிர்ப்படும் ஆண்டை வேலைவாய்ப்புகுப் பஞ்சம் இல்லாத ஆண்டாக நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன..

ஆனால் இன்னொரு புறம், நிறுவனங்கள் கொத்துக்கொத்தாக வேலையாட்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் TCS எடுத்த தேசத்தையே அலற வைத்த முடிவு எல்லோரும் அறிந்ததே.. IBM 5000 பேரை அனுப்பப் போகிறதாம்.. கடந்த ஆண்டில் மட்டும் பெங்களூருவில் 15000 ஐடி நிறுவன ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.. ஐடி நிறுவனங்கள் என்றில்லை, கோக் நிறுவனமும் உலகம் முழுக்க 8000பேரின் சீட்டைக் கிழிக்கவிருக்கிறது.. பல தனியார் வங்கிகளும் வேலையாட்களை வீசி எறிகின்றன.. வேலை கிடைப்பது எவ்வளவு எளிதானதோ, அதை விட வேலை போவது எளிதாகிவிட்டது.



திடீரென்று “Dear Ram Kumar, Your service is no more needed to us. You are sacked." என்று ஈமெயில் வந்தால் என்ன ஆகும்? அய்யோ இந்த வரியை டைப்பும் போதே கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.. ”திடீரென்று நம் நிறுவனம் நம்மை வேலையை விட்டு அனுப்பிவிடுமா?” என்றால், திடீரென்று எல்லாம் அனுப்ப மாட்டார்கள். வேலையை விட்டு அனுப்ப சில பல காரணங்கள் இருக்கும். Non performer மட்டும் தான் வேலை இழப்பார் என்பது மிக மிகத் தவறான எண்ணம்.. அதையும் தாண்டி பல விசயங்கள் இருக்கின்றன.. நம்மை நம் நிறுவனம் “சீக்கிரம் பத்திவிடுவதற்கான” அறிகுறிகளை அலசுவது தான் இந்தப் பதிவு.. இதில் ஏதாவது உங்களிடம் தென்பட்டால் திருத்திக்கொள்ளுங்கள், அல்லது resumeஐ தூசி தட்டி நௌக்ரியில் ஏற்றிவிடுங்கள். இப்போது கட்டுரைக்குள்..

1. அப்டேட் ஆகாமல் இருப்பது:
ஒரு காலத்தில் நாம் விழுந்து விழுந்து பார்த்து, வெள்ளி விழாப் படங்களாக எடுத்த விக்ரமனின் படங்கள் இப்போது ஏன் தொடந்து ஊத்துகிறது?  ஆனால் விக்ரமனை விட சீனியரான மணிரதனத்தின் ஒவ்வொரு படத்திற்கும் ஏன் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது? சிம்பிள், முன்னவர் இன்னும் ”லாலா” பின்னணி இசையிலும், 90களின் ’புது வசந்தம்’ காலத்திலுமே நின்று கொண்டிருக்கிறார்.. பின்னவர் கதை, தொழில்நுட்பம் என அனைத்திலும் இன்றைய காலத்திற்கு ஏற்றவராக அப்டேட்டாக இருக்கிறார்.. கிட்டத்தட்ட வேலையிலும் இப்படித்தான்..

வேலையில் சேரும் போது நீங்கள் விக்ரமன் போல் ஹிட் ஹிட்டாக அடிக்கலாம்.. ஆனால் சேரும் பொழுது இருந்த மாதிரியே வருடங்கள் பல கழிந்தும் அப்படியே இருந்தால், நீங்கள் தான் முதல் டார்கெட்.. சாதாரண ஆண்டிராய்ட் ஃபோனிலேயே மாதத்திற்கு ஒரு முறை ஆட்டோமெட்டிக்காக சாஃப்ட்வேரை அப்டேட் செய்துகொள்கிறோமே, நாம் பார்க்கும் வேலையிலும் அப்படி இருப்பது தானே ஞாயம்? யார் ஒருவர் காலத்திற்கு, தேவைக்கு ஏற்றவாறு மாறாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்த கம்பெனிக்கு போவதற்கு ரெடியாகிவிடலாம்..



அப்டேட் ஆகுவது ஒன்று அவ்வளவு சிரமம் அல்ல இப்போது. கையிலேயே ஃபோன் இருக்கிறது. வேலை சம்பந்தமான விசயங்களை, செய்திகளைப் படிக்கலாம். தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் பல ஆன்லைன், பார்ட் டைம் கோர்ஸ்களை படிக்கலாம். அது போக, பிற துறைகளில் இருக்கும் வேலைகளிலும் (cross function) உதவியாய் இருக்கலாம்.. அதாவது நீங்கள் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டில் இருந்தாலும், அக்கவுண்ட்ஸ் & ப்ரொடக்சன் ஆட்களிடம் அவர்கள் வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய துறையில் உங்களுக்கு திறமை கிடைக்கும். என்னைப் போல் சேல்ஸ் வேலையில் இருப்பவர்கள் வேற்று மொழிகள் கற்றுக்கொள்வது நல்லது.. மிக முக்கியம் இதெல்லாம் நம் பாஸ் காதுகளுக்கு எட்டுவது மாதிரி செய்ய வேண்டும். நாம் என்ன நல்லது செய்தாலும் நமக்கு மேல் இருப்பவர்களிடம் அதை படம் போட்டு காட்டுவது தான் மிக முக்கியம்..

2. அலுவலக உறவு:
சரி, அன்றாடம் அப்டேட் செய்து, வேலை சம்பந்தமான அனைத்துத் திறமைகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கெட்டிக்காரர் நீங்கள். ஆனால் அது மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. நீங்கள் உடன் வேலை செய்யும் நண்பர்களோடு எப்படி ஒத்துப்போகிறீர்கள் என்பதும் முக்கியம்.

காலையில் லேட்டாக டீ வருகிறது என்பதற்காக ஆஃபிஸ் பாயிடம் அறச்சீற்றம் கொள்வது, சாப்பாடு நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு யாரிடமும் பேசாமல் உங்கள் டிஃபன் பாக்ஸை மொக்குவது, மேனேஜரிடமும் வாடிக்கையாளர்களிடமும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது எல்லாம் உங்கள் பெயரை அநியாயத்திற்கு கெடுக்கும் விசயங்கள். சக வேலையாட்களுடன் சதா சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திறமையான ஆளை விட, அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒரு சராசரி ஆளையே நிர்வாகம் வேலையில் வைத்திருக்க விரும்பும். ஏனென்றால் சண்டை போடும் ஆள் திறமையானவனாகவே இருந்தாலும், அவன் சண்டையை பிறரின் உழைப்பை, உற்பத்தித் திறமையை குறைக்கக் கூடியது. 



அதற்காக வேலையே தெரியாமல் இருந்து கொண்டு, மௌன ராகம் கார்த்திக் மாதிரி எல்லோரிடமும் ஜாலியாகப் பேசினாலே போதும் என்று நினைப்பதும் மிகப் பெரிய முட்டாள்த்தனம். ஒரு வேலைக்கு aptitude & attitude இரண்டுமே சம அளவில் முக்கியம். கொஞ்சமாவது வேலை தெரிந்தால் தான், நல்ல நண்பரான உங்களை உங்கள் மேனேஜர் மேலே பேசிக் காப்பாற்ற முடியும். நீங்கள் நல்ல நண்பர் என்பதற்காக, உங்களுக்கு சப்போர்ட் செய்து, மேனேஜர் தன் வேலையையும் இழக்க விரும்பமாட்டார். அதனால் மேனேஜர், & உடன் வேலை செய்வோர்களிடம் நல்ல பழக்கம் இருந்தாலும் வேலையும் பார்க்க வேண்டும். என் பாஸ் அடிக்கடி சொல்வார், “மோசமாக வேலை செய்பவனை விட நாம் ஒரு படியாவது முன்னே நிற்க வேண்டும். அப்போது தான் நம் தலை உருளாது” என்று. எல்லோரும் இப்படி நினைக்கும் போது, யாரும் கடைசி இடத்திற்கு வர விரும்பாமல் உழைக்க எண்ணுவோம். அந்த எண்ணம் இருந்தாலே போதும்..

3.உங்களுக்கான வேலை கம்மியாக்கப்படுவது:
எல்லோருக்கும் கம்மியாக வேலை செய்ய, சீக்கிரமே வேலையை முடித்து, வீட்டுக்குப் போய், இன் பண்ணி, மணிக்கட்டு வரை கட்டிப்போட்டிருக்கும் முழுக்கை சட்டையையும், பெல்ட் மாட்டி இடுப்பை இறுக்கும் பேண்ட்டையும் கடாசி விட்டு, வெறும் கைலியுடன் கால் ஆட்டிக்கொண்டு டிவி பார்க்க ஆசை தான்.. ஆனால் அப்படி ஜாலியாக இருப்பதை உங்கள் நிறுவனம் கண்டு கொள்ளாவிட்டால் ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் பார்க்கும் வேலை, உங்களை அறியாமலே நிர்வாகத்தால் குறைக்கப்பட்டு வருகிறதா, நீங்கள் மிக கேசுவலாக இருப்பதாக உணர்கிறீர்களா? ரொம்ப டேஞ்சர். பாஸிடம் இருந்து அதிக வேலை கிடைத்தால், அவன் ஏமாளி என்பதை விட, நிர்வாகம் அவனை மிகவும் நம்புகிறது, இந்தக் கம்பெனிக்கு அவனது உழைப்பு தேவை, அவனை கம்பெனி மிகவும் நம்புகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.



வேலைக்கு சேர்ந்தவுடன் அனைத்தும் கிடைத்துவிட்டது என்று எண்ணி, டெஸ்க்கை தேய்த்துக்கொண்டு, ஜாலியாக காலாட்டிக்கொண்டு இருக்காமல், தேடித்தேடி வேலையைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் மேனேஜர்களும் நிர்வாகமும் கம்பெனியின் சொத்தாகப் பார்ப்பார்கள். இப்போதெல்லாம் கம்பெனிகள் டார்கெட்டை முடிப்பவனை விட அதற்கு மேல் முடிப்பவன் தான் வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதனால் வேலை குறைகிறது என்று மகிழ்வதை விட, அதிக வேலையை பொறுப்பாக செய்வது உங்கள் வேலையை உங்களிடம் இருந்து பிரிக்க விடாமல் செய்யும்.

4. கம்மியான ஊதிய உயர்வு:
நம் கம்பெனி நமக்கு கொடுக்கும் மதிப்பை, நாம் அந்த ஆண்டு பெறும் ஊதிய உயர்வை வைத்து தெரிந்துகொள்ளலாம். அனைத்து வேலையாட்களுக்கும், தகுதி & அனுபவத்தை மட்டும் வைத்து, சீரான ஊதிய உயர்வு கொடுக்கும் காலமெல்லாம் என்றோ மலையேறிவிட்டது. “நீ வேலை செய்தால் உனக்கு hike.. இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. வேலையை விட்டுப்போ, பாரபட்சமே கிடையாது” - இது தான் அனைத்து நிறுவனங்களின் இன்றைய தாரக மந்திரம். ஆமாம், ஒரு பிச்சைக்காரனுக்கு ஓசியில் ஒரு ரூபாய் கொடுக்கவே நாம் பல முறை யோசிக்கும் போது, நம் கம்பெனி மட்டும் எப்படி வேலையே செய்யாத ஒருவனுக்கு ஓசியாக சம்பளமும் ஊதிய உயர்வும் கொடுக்கும்?



இந்த ஆண்டு தனியார் துறையில் சராசரியாக 11% ஊதிய உயர்வு கிடைக்கும் என்று மனித வள மேம்பாட்டு வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.. Performerகளுக்கு 20% வரைக்கும் கூட கிடைக்குமாம். நீங்கள் 20% கிடைக்கிறதா என்று கூட பார்க்க வேண்டாம், அந்த 11% கீழே போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் விலைவாசியெல்லாம் 8-9% அதிகரித்திருக்கும் நிலையில் உங்களது ஊதிய உயர்வு 9%க்கும் கீழ் இருப்பது நிச்சயம் உங்களுக்கு நஷ்டமே. சராசரிக்கும் கீழே கிடைத்திருக்கும் ஊதிய உயர்வு “நீ எங்கள் நிறுவனத்துக்கு தேவையில்லை என்கிற நிலையில் இருக்கிறாய், ஜாக்கிரதை” என நிர்வாகம் மறைமுகமாக எச்சரிப்பதற்குச் சமம். 

5. உங்கள் கருத்துக்கு மதிப்பில்லை:
"சார் நாம பேசாம இப்படி செஞ்சா என்ன?” என்று வேலை சம்பந்தமான discussionல் எதையாவது நீங்கள் ஆர்வமுடன் சொல்ல வரும் போது உங்கள் பாஸ் உங்கள் கருத்தைக் காது கொடுத்து கேட்கிறாரா? நீங்கள் சொல்லும் கருத்தை, நிர்வாகம் பரிசீலிக்கிறதா? இந்த இரண்டு கேள்விக்கும் இல்லை என்று பதில் சொன்னால், சீக்கிரம் உங்கள் ஈமெயிலில் “you are fired” என்கிற கடிதத்தை எதிர்பார்க்கலாம். உங்களிடம் யாரும் கருத்து கேட்கவில்லை, அல்லது உங்களது கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால், உங்களது கருத்துக்களை நிறுவனம் பிரயோஜனமாகக் கருதவில்லை என்று அர்த்தம். 



சோர்ந்து விடாமல், ’ஏன் நம்மிடம் யாரும் காரணம் கேட்பதில்லை?’ என்று யோசியுங்கள். உங்கள் நண்பர்களிடமும், மேனேஜரிடமும் feedback கேளுங்கள். உங்கள் சிந்தனையை மேம்படுத்த எண்ண செய்யலாம் என்று பாருங்கள். 

6. கம்பெனிக்கு தேவைப்படாத துறையில் இருப்பது:
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு மதியம் வீட்டில் வந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போவதற்காகவே வேலைக்கு ஆட்களை நியமித்திருந்தார்கள் அந்தந்த ஃபேக்டரிகளில்.. அவர்களின் தினப்படி வேலையே மதியமாகி விட்டால், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையாட்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பாடு வாங்கி வருவது தான். காலப்போக்கில் ஓட்டல்களும், போக்குவரத்துச் சாதனங்களும் அதிகரித்துவிட்டதால் “மதியம் சாப்பாடு வாங்கும் வேலை”க்குச் செல்பவர்களின் தேவை முற்றிலுமாக ஒழிந்து விட்டது. 



உங்கள் நிறுவனம் செலவைக் குறைக்க நினைத்தாலோ, அல்லது காலப்போக்கில் ஒரு துறை தேவையல்ல என்னும் நிலை வந்தாலோ, நீங்கள் அந்தத் துறையில் எவ்வளவு பெரிய வஸ்தாதாக இருந்தாலும், உங்களுக்கு வேலை போவது உறுதி தான். “இவன் நன்றாக, குறித்த நேரத்திற்கு, சூடு ஆறுவதற்குள் சோறு கொண்டு வந்தவன்” என்பதற்காகவெல்லாம் யாரையும் நிரந்தரமாக வேலையில் வைக்கவில்லை எங்கள் ஊரில் ஃபேக்டரிகளில். அது தான் எல்லா நிறுவனங்களுக்கும். ஏற்கனவே சொன்னது போல், உங்கள் வேலையைத் தாண்டிய cross functional அறிவு இருந்தால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும். அல்லது மதியம் சோறு வாங்கிக்கொடுக்கும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றும் கம்பெனி ஏதாவது இருந்தால் அங்கே போய் ஒட்டிக்கொள்ளலாம்.

7. கம்பெனியின் பிரச்சனைகள்:
நீங்கள் நல்ல வேலையாளாக, அனைவரிடமும் நன்றாகப் பழகுபவராக, அனைத்திலும் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் உங்கள் கம்பெனி கடனில் மூழ்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? கம்பெனியில் நிதிநிலை மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருங்கள், ஷேர் மார்க்கெட்டில் நம் கம்பெனி எப்படி இருக்கிறது, எவ்வளவு தூரம் வெளியில் இருந்து முதலீடு செய்திருக்கிறது என்றெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நிதிநிலைமை மட்டுமல்ல, கம்பெனியின் உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் அடிக்கடி வெளியேறுவதும், வேலையாட்கள் சீக்கிரம் வேலையில் இருந்து விலகிவிடுவதும் (attrition rate), மோசமான வேலையாட்கள் இருப்பதும் கூட நல்ல நிறுவனத்திற்கான அறிகுறி அல்ல..

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மேனேஜர் சரியான திருட்டுப் பேர்வழி.. பில் இல்லாமல், டீலர்களிடம் பேரம் பேசி, பாதி விலைக்குப் பொருளை விற்று மொத்த காசையும் அவர் எடுத்துக்கொள்வார். கம்பெனிக்கு “டேமேஜ்” என்று ரிப்போர்ட் கொடுத்துவிடுவார். அவர் மட்டுமல்ல, அந்தக் கம்பெனியின் பல மேனேஜர்களும் அப்படியே என்பதால், கம்பெனிக்குள் இது பெரிய விசயமாகப் படவில்லை. ஆனால் வெளியே சக போட்டியாளர்கள், டீலர்கள் என்று அனைவரும் அந்தக் கம்பெனி ஆட்களை திருடன் போல் தான் பார்ப்பார்கள். நான் வேலையில் சேர்ந்த இரண்டாவது நாளிலேயே ஒரு டீலர் கேட்டார், “சார் உங்களுக்கு எவ்வளவு பங்கு?” என்று. ஒரே மாதத்தில் அந்தக் கம்பெனியில் இருந்து பறந்துவிட்டேன். அது போன்ற நிறுவனத்தில் வேலை செய்வது உங்கள் எதிர்காலத்தையே கெடுத்துவிடும். சீக்கிரம் கிளம்புவது உங்களது profileக்கு நல்லது. 


பணம் கையாடல், பெண்களை டார்ச்சர் செய்வது போன்ற பொதுவான காரணங்களைத் தாண்டிய, இந்த ஏழு பாயிண்டுகள் தான் பெரும்பாலும் வேலை போவதற்கான அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருப்பதாக நினைத்தாலும் இன்றில் இருந்தே அதை விட்டு வலகுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த ஆரம்பியுங்கள். பார்க்கும் வேலையைக் காதலியுங்கள். வேலையைப் பற்றிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தூக்கிக் கடாசுங்கள். அப்ரைசல் வேறு நெருங்கி விட்டது. இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது நல்ல இன்க்ரீமெண்ட்டும் ப்ரொமோசனும் கிடைக்க வாழ்த்துக்கள்..



பின் குறிப்பு:
இது நான் சமீபத்தில் ”The Economic Times"ல் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு..

17 comments

  1. அருமையான பதிவு... உண்மையை அப்படியே சொல்லிச் செல்கிறது

    ReplyDelete
  2. போராடினால் பலன் தானாக வரும்...

    ReplyDelete
    Replies
    1. போராடவா? வாங்குற சம்பளத்துக்குக் கூட வேலை செய்யாம, சம்பளம் இன்னும் கூட வேணும்னு போராட்டம் பண்ணுறவைங்கட்ட இதெல்லாம் சொல்லாதீங்கண்ணே..

      Delete
  3. தனியார் நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்கும் நம் போன்றோருக்கு மிக மிக உபயோகமான விஷயங்கள்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்கூல் பையன் நண்பா.. அதனால் தான் படித்தவுடன் பகிர்ந்து விட்டேன்..

      Delete
  4. அருமையான பதிவு! வேலை பார்ப்பவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி.
    தங்கள் தளத்தை தொடர்கிறேன்.
    த ம 3

    ReplyDelete
  5. நீங்கள் சொல்லியிருப்பது, ஐ.டி துறையை மட்டும் குறிக்காமல் எல்லா துறையையும் குறிக்கிறது.. நல்ல பதிவு... வாழ்த்துகள்! எகோநோமிக் டைம்ஸ்-க்கும், மொழிபெயர்த்த ராம்குமாருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. ஐடி துறைக்குத் தான் ஊர் முழுக்க எழுதுகிறார்களே? நாம் நமக்கு எழுதுவோம்னு தான்..

      Delete
  6. பயனுள்ள தகவல் நண்பரே....
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  7. இது ஐடி என்று இல்லை. எல்லா தொழில்களுக்கும் பொருந்தும் ஒன்றாகத்தான் தெரிகின்றது. இருந்தாலும் எங்களைப் போன்ற டீச்சர்ஸ்கு கொஞ்சம் ஜாலிதான்...இருந்தாலும் எங்கள் மனசாட்சிதான் முதல் எஜமானர்....

    ReplyDelete
    Replies
    1. டீச்சர்ஸ்க்கு என்ன சார் குறை? நிறையா சம்பளம், அதை விட நிறையா லீவு.. என்ஜாய் பண்ணுங்க.. அடுத்து ஒரு ஸ்ட்ரைக் பண்ணப்போறீங்களாமே? வாழ்த்துக்கள்.. (y)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One