லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....

Saturday, December 13, 2014

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை தலைவர் படத்திற்கு விமர்சனம் எழுதியதில்லை என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமான விசயம் தான்.. ஏன் எழுதியதில்லை என்று யோசித்ததில் வந்த முதல் & ஒரே காரணம், அவர் படங்களை என்னால் விமர்சனக் கண்களோடு பார்க்க முடியாது.. ஒரு முக்கியமான இடத்திற்குப் போகிறீர்கள், அங்கு ஃபோட்டோ எடுப்பது ஒரு சுகம் என்றால், அனைத்தையும் மறந்து அந்த இடத்தைக் கண் கொட்டாமல் பார்ப்பது அதை விட சுகம்.. ரஜினி படம், ஃபோட்டோ எடுப்பதை மறந்து நம்மை ரசித்துப்பார்க்க வைக்கும் இடம் போன்றது.. படத்துக்குப் போனாமோ, என்ஜாய் பண்ணுனோமா என்று இருக்க வைப்பவை.. பட், ஒரு ஃபேஸ்புக் & பிளாக் பிரபலம் என்று ஃபார்ம் ஆக வேண்டுமானால் இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் நம் சமூகக் கடமையை ஆற்ற வேண்டுமல்லவா? அதனால் தலைவருக்கான என் கன்னி விமர்சனத்தைக் கொடுக்கிறேன்.. Lets begin.. 


கதை அல்ரெடி நேற்று இரவில் இருந்தே பலரும் பிரித்து மேய்ந்து துவைத்து அயன் செய்து விட்டார்கள்.. நாம ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே போயிருவோம்.. கோச்சடையானில் “பொம்மை ரஜினி” என்று ஊரே பேசியது.. அதை விட, “ஏ, ரஜினியால இனிமேலு நடக்கக் கூட முடியாதுப்பா, இதுல எங்க நடிக்கிறது? அதான் யாரையோ வச்சி பொம்மப்படம் எடுத்திருக்காய்ங்க” என்றெல்லாம் சொன்னார்கள்.. இந்தப் படம் அப்படிப் பேசியவர்களுக்கு எதிராக ரஜினி கொடுத்திருக்கும் செயல்முறை விளக்கம்.. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பியதும், “அந்த ஆள் அவ்வளவு தான், நடக்கக்கூட முடியாது” என்று பேசினார்கள்.. அடுத்தப் பொதுக்கூட்டத்தில், கரூர் என்று நினைக்கிறேன், மனுசன் விறுவிறுவென்று யார் உதவியும் இல்லாமல் படிகளில் துள்ளி ஏறி மேடைக்கு வந்தார்.. மொத்தத் தமிழ்நாடும் அன்று சந்தோசத்தில் அலறியது.. கிட்டத்தட்ட அதே மாதிரி தான், ”ஓ நண்பா” பாடலில் ரஜினி காட்டியிருக்கும் அந்த வேகம், நடனம், துள்ளல் எல்லாம்.. “தக்காளி மூனு மாசம் ஆஸ்பத்திரில படுத்துகெடந்து, ‘கண்ணா எப்படி இருக்கீங்க?’ என்று நடுங்கிய குரலில் வாய்ஸ் டேப் ரிலீஸ் பண்ணுன ஆளாடா இது?” என்று ஒவ்வொருத்தனையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.. அந்த ஒரு பாடல் போதும் ரசிகன் கொடுத்த 250ரூபாய்க்கு.. அதற்கு மேல் வருபவை எல்லாம் போனஸ்..


படத்தில், தற்கால ரஜினி செய்யும் ஸ்டைல், சேட்டைகள், அலப்பறைகள், முகபாவனைகள் எல்லாம், ‘தலைவர் இன்னும் ஃபார்மில் இருக்கிறார்’ என்று ஒவ்வொரு ரசிகனையும் மனதிற்குள் குதூகலம் அடையச்செய்பவை.. ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்ததும் ரசிகர்கள் லேசாக சோர்வாக ஆரம்பிக்கிறார்கள், ஆனால் குடும்பம் குட்டியோடு வந்தவன், அதன் பின் தான் படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறான்.. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஃப்ளாஷ்பேக்கில் ரஜினியின் ஹீரோயிஸமோ, பன்ச் டயலாக்கோ, சேட்டையோ, ஸ்டைலோ எதுவும் இருக்காது.. மனுசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீராப்பாய் நடந்து வருவதும், ராஜாவாய் கம்பீரம் காட்டுவதும், அணை கட்டுவதற்காக அனைத்தையும் இழப்பதும், பின் அவருக்கு ஏற்படும் முடிவும் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பது டவுட் தான்.. ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான் பெண்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் இந்தப் படத்தின் பக்கம் இழுத்து வரப்போகின்றன.. ஒரு குழாய் மைக்கை கையில் வைத்துக்கொண்டு, “உன் உடம்புல இந்தியனோட ரெத்தம் ஓடுனா வாடா” என்று சொல்கிற காட்சி மாஸ் & கிளாஸ்.. இந்த மாதிரி சின்னச்சின்ன விசயங்களில் தான் ரசிகர்களுக்கான ரஜினி தெரிகிறார்..


முக்கால்வாசிப்படம் அணை கட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது.. இரண்டாம் பாதி மெதுவாகச் சென்றாலும் நிறைவாய் இருக்கிறது.. ஒரு படத்தின் கதை மெதுவாய் நகர்ந்தாலும் போர் அடிக்கக் கூடாது.. இரண்டாம் பாதி அப்படித்தான், நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் விளக்கிக்கொண்டிருப்பார்கள்.. மேதாவி சினிமா ஞானிகளுக்கு அதெல்லாம் போர் அடிக்கலாம்.. எனக்கு இரண்டாம் பாதி தான் மிகவும் பிடித்திருந்தது.. கதையின் முக்கியத்துவமே அந்தக் காட்சிகள் தானே? அதை அப்படிச் சொன்னால் தானே அழகு? சும்மா, ரெண்டு சவால், நாலு ஃபைட்டு என்று எடுத்தால் இப்போது நடிக்கும் மற்றவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிக்கும் “இந்தியனே வா” பாடல் அங்கங்கு வந்து அணை கட்டுவதை படத்துடன் அழகாகக் காட்டுகிறது.. இந்த இடத்தில் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.. இரண்டு டூயட், ஒரு இண்ட்ரோ சாங்க் மட்டும் தான் படத்தில்.. மற்றவை எல்லாம் கதையின் பின்னணியில் வருபவை.. அந்த இரண்டு டூயட்டும் அழகாக எடுத்திருக்கிறார்கள்..  



படத்தில் இரண்டு ஹீரோயின் என்றாலும், என் பார்வை முழுவதும் அனுஷ்கா மீது தான்.. சோனாக்‌ஷி சின்காவை விட இவருக்குக் காட்சிகள் குறைவு என்றாலும், அந்த ஒரு சில காட்சிகளிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார்.. நகை திருடும் காட்சியில் கேபினுக்குள் ரஜினிக்கு அவ்வளவு அருகில், அவருக்கு ஈடாக சரி சமமாய் அசால்ட்டாக நடித்திருப்பதற்காகவே அனுஷ் செல்லத்திற்கு என் கிஸ்சஸ்.. சோனாக்‌ஷி சின்ஹா வழக்கமான கிராமத்தின் நல்ல, அப்பாவி, கொஞ்சம் விபரமான & பணக்கார ஹீரோவை லவ்வும் பொண்ணு.. தலைவருக்கும் நம்மள மாதிரி தான் டேஸ்ட் போல.. கொஞ்சம் கொழுக் மொழுக்குனு தான் அவர் படங்களில் ஹீரோயின் இருப்பார்கள், சிவாஜி & எந்திரன் விதிவிலக்கு.. இதிலும் அப்படித்தான் இரண்டு கொழுக் மொழுக் ஹீரோயின்கள்.. ரெண்டு ஹீரோயின்களும் லட்டு மாதிரி இன்னும் அழகாக இருக்கிறார்கள் பாடல்களில்.. ரஜினி படம் என்றாலே கவர்ச்சி கம்மியாக இருக்க வேண்டும் என்பது இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது..


சந்தானத்தின் கவுன்ட்டர் டயலாக்குகள் & உவமைகள் எல்லாம் சூப்பர்.. இந்த ஆளு எங்க இருந்து தான் இது மாதிரி உவமைகளை எல்லாம் பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. கடைசிக் காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் வரும் போது, “இவர் பேரு தான் finishing குமாரு” என்று அவரையும் கலாய்க்கத் தவறவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இருக்கும் அந்த வழக்கமான “ஊர்ப் பெரிய மனுஷ, பெரிய குடும்ப கும்பல்” இந்தப் படத்திலும் உண்டு.. அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு டயலாக் என்று சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு சோசியலிசம் போற்றப்பட்டிருக்கிறது,.. அந்த பிரிட்டீஷ் வில்லனின் பொண்டாட்டி மாதிரி இந்திய வைஸ்ராய்களுக்கெல்லாம் பொண்டாட்டிகள் அமைந்திருந்தால் இந்திய சுதந்திரம் மிக எளிதாய் கிடைத்திருக்கும்.. ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் மட்டும் தான் எடுபடவில்லை.. 


பாடல்கள் சூப்பர்.. பின்னணி இசை, படமே அடக்கி வாசிக்கப்பட்டிருப்பதால் அதுவும் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது.. ரத்னவேலுவின் உழைப்பு பல காட்சிகளில் தெரிகிறது.. கண்ணை உறுத்தாமல் பல நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.. ஹீரோயிச வசனங்கள் எங்குமே இல்லாமல், தத்துவம் & சில தேசப்பற்று வசனங்கள் இருப்பது ரஜினி படத்தில் பெரிய வித்தியாசம்.. வசனங்களில் லேசான அரசியல் வாடை இருந்தாலும், ரஜினி அதற்குப் பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.. ஷங்கரின் பிரமாண்டம் எல்லாம் வருடக்கணக்கில் நேரம் எடுத்தால், கே.எஸ்.ரவிக்குமாரின் பிரமாண்டம் நாள் கணக்கில் மட்டுமே நேரத்தை எடுக்கிறது.. மனுசன் மிலிட்டரியில் பெரிய ஆஃபிசராக ஆகியிருக்க வேண்டியவர்.. தப்பித்தவறி சினிமாவிற்குள் வந்துவிட்டார் போல.. இவ்வளவு பெரிய, பிரமாண்டமான படத்தை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எடுத்திருப்பதற்காகவே அவருக்குப் பெரிய சபாஷ் போட வேண்டும்.. பிரமாண்ட அணை கட்டிய லிங்கேஷ்வரனுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டியவர் இந்த பிரமாண்டமான படத்தை ஆறே மாதத்தில் கொடுத்த நம் finishing குமார்..


இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள்.. ரஜினியைக் கட்டி வைத்து அடிக்கும் போதோ, அல்லது அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிறகோ ஒரு சோகப்பாட்டைப் போட வேண்டும், நாம் தியேட்டரில் தலைவருக்காகக் கதறி அழ வேண்டும் என்றெல்லாம் இன்னும் எதிர்பார்க்காதீர்கள்.. பன்ச் டயலாக் பேசிக்கொண்டும், பறந்து பறந்து வில்லன்களை அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.. இப்போதெல்லாம் இரண்டாவது படத்திலேயே பக்கிகள் பன்ச் டயலாக் எல்லாம் பேசுகிறார்கள்.. பன்ச் டயலாக்கிற்கான மதிப்பே போய்விட்டது அவர்களால்.. இன்னமும் தலைவர் அதையெல்லாம் பேசுவது அவர் கௌரவத்திற்கும் மாஸிற்கும் அழகல்ல.. அதனால் அவர் இப்போது ஒரு நீட்டான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.. மக்களின் ரசனையும் மாறிவிட்டது.. இன்னமும் அழுகாச்சி செண்டிமெண்ட், பன்ச் டயலாக், விஷ்க் விஷ்க் சவுண்ட், 20 பேரை அடிப்பதெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.. தனக்கு இருக்கும் பிம்பத்தை உடைத்துத் தானும் நல்ல கதை இருக்கும் படங்களில் நடிப்பேன் எனத் தலைவர் எந்திரனைத் தொடர்ந்து இதிலும் காட்டியிருக்கிறார்.. அவரே மாறிவிட்ட போது நாம் இன்னமும் படையப்பா, பாட்ஷா மாதிரி 20 வருடங்கள் ஏன் பின் தங்கி இருக்க வேண்டும்? நாமும் இந்த மாற்றத்தைப் பின் தொடர்வோம்.. ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா????



மொத்தத்தில், ஒரு பெரிய கண்டத்தில் இருந்து மீண்டு வந்து, “நான் இன்னமும் அதே வேகமும் துள்ளலும் இருக்கும் பழைய ரஜினி தான்” என்று நிரூபித்திருப்பதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.. அவர்கள் கொண்டாடத் தயங்கினாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப் படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மூன்று மணிநேரம் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை ரசித்து விட்டு வாருங்கள்.. ரஜினி படத்தில் ரஜினியைத் தவிர வேறு என்ன இருந்தால் நமக்கென்ன, இல்லாவிட்டால் நமக்கென்ன? மொத்தத்தில், லிங்கா- எங்க தலைவர் வந்துட்டார்யா கிங்கா, பவர்ஃபுல்லா..

13 comments

  1. Seems like all Rajini fans love this one and you are not an exception! :)

    ReplyDelete
    Replies
    1. No... Rajini fans are totally disappointed.. General audience like this.

      Delete
  2. லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....= ஒரு ஃபேஸ்புக் & பிளாக் பிரபலம் என்று ஃபார்ம் ஆக வேண்டுமானால் இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் நம் சமூகக் கடமையை ஆற்ற வேண்டுமல்லவா? அதனால் தலைவருக்கான என் கன்னி விமர்சனத்தைக் கொடுக்கிறேன்.. Lets begin.. =Ram Kumar.

    மகிழ்ச்சி. வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
  3. Replies
    1. அண்ணே நீங்களும் தலைவர் ரசிகரா? சொல்லவேயில்ல?

      Delete
  4. வணக்கம்
    சொல்லிய விதம் சிறப்பு... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. படம் சிறப்பாக இருப்பதால் தான் சொல்லிய விதமும் சிறப்பாக இருக்கிறது சார்.. நன்றி

      Delete
  5. கோவில்பட்டியில் ஒரு முறை மற்றும் சிவகாசியில் ஒரு முறை என்று மொத்தம் இரண்டு முறை பார்த்துவிட்டேன்.சில ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் பல ரஜினி ரசிகர்களுக்கும் பெண்களுக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும். தலைவர் படத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது தலைவரை மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. //தலைவர் படத்தில் நாங்கள் எதிர்பார்ப்பது தலைவரை மட்டுமே.// அது...

      Delete
  6. Semma ram
    Train fight ah konjam detail ah pugalndhirukkalam. Bec I was astonished during that scene.
    Semma fight.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One