பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..

Saturday, December 27, 2014

என்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். 

இந்த உலகமே ஒரு சிறு காலனி போல் மாறிவிட்டது இப்போதெல்லாம்.. இந்த மதத்துக்காரனிடம் வேலைக்குப் போக மாட்டேன், இந்த ஜாதிக்காரனை தான் வேலைக்கு வைப்பேன் என்று சொன்ன காலமும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது, என்ன ஜாதி, என்ன மதம், எந்த ஊர், எந்த மொழிக்காரன் என எதுவும் தெரியாத ஒருவன் தான் நமக்கு பாஸாக, நமக்குக் கீழ் வேலை செய்பவனாக, நம் வாடிக்கையாளராக என்று நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அட பல நிறுவனங்களில் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நம்மையும் ஒரு உலகளாவிய வகையில் மெருகேற்றுவதற்காக, உலக அளவில், middle management என்று சொல்லப்படும் மேனேஜர் லெவல் வேலையாட்களிடம் அந்த நிறுவனங்களில் CEOக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்டிருந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில்.. அதை என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.. 



Expatriate CEOக்கள் (நம் நாட்டில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள்) சிலரிடம், ”இந்திய வேலையாட்கள் எப்படி?” என்று சமீபத்தில் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் காஃபி வித் டிடி மாதிரி நம்மைப் புகழ்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்குக் கழுவி தான் ஊற்றியிருக்கிறார்கள்.. கழுவி ஊற்றியவர்கள் சாதாரணமான டப்பா கம்பெனியில் CEOக்கள் கிடையாது.. அவர்கள் எல்லோரும் மிட்சுபிஷி, BMW, ஹயட், வால்வோ, MTS, லோரியல், ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், வேதாந்தா, நிசான் போன்ற படா கம்பெனிகளின் இந்தியப்பிரிவிற்கான CEOக்கள்.. அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும் ஒரு விதத்தில் உண்மை தானோ என்கிற எண்ணத்தை, சந்தேகத்தை எனக்குள் எழுப்பின.. 

அவர்கள் சொல்லும் முதல் கம்ப்ளெயிண்ட்டே நாம் எதற்கும் லேட்டாகத்தான் வருவோம் என்பது தான்.. கல்யாண வீடு, சினிமா தியேட்டர், ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன் என்று எதற்கும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கவோ, அல்லது ஹாயாக லேட்டாக போவதோ, நம் DNAவில் கலந்துவிட்ட விசயம்.. ஆனால் ஃபாரினில் இருந்து வந்த ஒரு CEO, போர்டு மீட்டிங் என்றால் 5 நிமிடம் லேட்டாக வருபவனையும், ஒரு get together, dinner, அலுவலகத்தில் ஒரு function என்றால் சர்வசாதரணமாக ஒரு மணிநேரம் லேட்டாக வருபவனையும் பார்த்தால் டென்சன் ஆகத்தானே செய்வான்?.. லேட்டாக வருகிறோமே என்கிற பிரஞ்கையோ குற்றவுணர்வோ கூட இந்தியர்கள் யாருக்கும் இல்லை என வருத்தப்படுகிறார்கள் அந்த CEOக்கள்.. நாம் லேட்டாக வருவது அடுத்தவர்கள் நமக்காக ஒதுக்கியிருக்கும் நேரத்தை, கொஞ்சம் கூட மதிக்காமல் அழிப்பதற்குச் சமம்.. இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய ஆட்கள் கூட இதை சட்டையே செய்யாமல் அவர்களும் லேட்டாக வருவதும், லேட்டாக வருவதை ஒரு கௌரவமாக நினைப்பதும் பன்னாட்டுத் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிறார்கள்..

இரண்டாவது முக்கியமான விஷயம் நம் தேசியத் தொழிலைப் பற்றி.. அட அதாங்க, விவாதம் செய்வது. இந்தியர்கள் நாம் எதற்கெடுத்தாலும் விவாதம், விதாண்டாவாதம் செய்கிறோமாம்.. ஒரு மீட்டிங் என்றால், நம் ஆட்கள் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று எதையாவது கொழுத்திப் போட, அவரை வழிமொழிந்தோ, வழிமறித்தோ இன்னொரு ஆள் தொடர, இப்படியே போய் அந்த மீட்டிங் தன் இலக்கை விட்டுவிட்டு வேறு எங்கோ தறி கெட்டு ஓடும்.. ஒவ்வொருவரும் தன் கருத்தை வாந்தி எடுக்க ஆரம்பித்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் தங்களுக்கு வாய்ப்பு கிட்டாத வரை யாரும் வாயைத் திறப்பதில்லை மீட்டிங்குகளில்.. அப்படி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதும் அங்கு அநாகரிகமாகக் கருதப்படுகிறது.. ஒரு வேளை, மீட்டிங்கில் ஒருவனுக்கு வாய்ப்பே கிட்டவில்லை, ஆனால் அவன் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றால், அந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல் அது முடிந்ததும் தான் பேசுகிறான்.. ஆனால் இந்தியர்கள் மீட்டிங் ஹாலை ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஷூடிட்ங் ஸ்பாட் போல் ஆக்கிவிடுகிறார்கள்.



இந்தியர்கள் சரியான வாயாடிகள் என்பது அவர்களின் கருத்து. இங்கு யாரும் சும்மா இருப்பதில்லை. எங்கு பார்த்தாலும் எதையாவது, யாரைப்பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு. இது வேலையை மிகவும் கெடுக்கும் செயல் என்று பொறுமுகிறார்கள்.. அதுவும் அரசியல் என்றால் நம் ஆட்கள் விடிய விடிய அடித்துக்கொள்கிறார்களாம் விவாதம் என்னும் பெயரில். 



மூன்றாவது விஷயம் நமது பரந்து விரிந்த வித்தியாசங்கள். பல CEOக்களும் இந்தியாவிற்கு வரும் முன் இந்தி தான் இங்கு இருக்கும் மொழி, எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை முறையோடு தான் இருப்போம் என்கிற நினைப்பில் தான் வருகிறார்கள்.. ஆனால் இங்கிருக்கும் மேனேஜர் மலையாளியாக இருப்பான், அவனுடைய subordinate ஒரு பஞ்சாபி, சேல்ஸ் ஹெட் ஒரு மராட்டி ப்ராமின் என்று இருந்தால், பாவம் புதிதாக வரும் CEO என்ன ஆவார்? இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே? தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா? நம் பகுத்தறிவு என்ன ஆவது? நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது? ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம்? ஆனால் அதையெல்லாம் தப்பு என்கிறான் அந்த வெள்ளைக்கார CEO..

MTS நிறுவனத்தின் இந்தியாவிற்கான CEO நம் டெல்லி ஏர்போர்டில் முதல் முறையாக இறங்கும் போது தான் அதைக் கவனித்தாராம்.. நம் ஆட்கள் ஒரு எட்டு பேர் ஏரோப்பிளேனில் இருந்து இறங்குவதற்கான ஏணியை தள்ளிக்கொண்டு வந்தார்களாம்.. அவர் ரஷ்யாக்காரர்.. இதைப் பார்த்து பதறிப்போய், “டேய் எங்க ஊர்லலாம் ஒருத்தனே இந்த வேலைய செஞ்சிருவானேடா?” என்கிறார்.. அதே போல் இங்கிருக்கும் நமது சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஓட்டல் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற சேவைத்துறை நிறுவனங்களிலும் கூட அளவுக்கு அதிகமான ஆட்கள் இருக்கிறார்களாம்.. அங்கெல்லாம் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், கிடைத்தாலும் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் எங்கும் மெஷின் தானாம். அதை வேலை செய்ய ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானாம்.

ஆனால் இன்னமும் நாம் டெக்னாலஜியை நம்பாமல் ஆட்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம். இது தான் எந்த வேலையை செய்வதற்கும் ஆட்கள் கூட்டமாக வருவதற்கான காரணமாம். ஆனால், வெளிநாட்டில் டெக்னாலஜியை பயன்படுத்தி ஆட்களைக் குறைத்து, எட்டு பேர் பார்க்கும் வேலையை ஒருவனை செய்ய வைத்தால் ஆகும் செலவை விட, இந்தியாவில் எட்டு மனிதர்கள் செய்யும் போது குறைவாகத் தான் ஆகிறது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். ’அப்புறம் ஏன்டா இதை ஒரு பிரச்சனையா சொல்றீங்க?’ என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் ஒலித்தால் நான் பொறுப்பல்ல.. ஒரு CEO சொல்கிறார், “எங்கள் ஊரில் கடினமான ஒன்றை நகர்த்த வேண்டும் என்றால் அதன் அடியில் சக்கரம் பொருத்துவோம்.. ஆனால் இந்தியாவில் இன்னும் இருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டாலே போதும், நகர்த்தி விடலாம்” என்கிறார் நகைச்சுவையாக.. அதாவது நம் மேன் பவர் என்னும் அசாத்திய மனித சக்தியை பெருமையாகவும் சொல்கிறார்கள், அதே நேரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஒருத்தன் மோசமாக வேலை செய்கிறான் என்றால், அவனை மோசமாக வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் மோசமான வேலைக்காரன் என்றாலும், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மிகவும் பெர்சனால எடுத்துக்கொள்கிறான். அவன் மட்டும் இல்லை, உடன் வேலை செய்வோரும் இப்படிப் பேசுவதை தவறாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வேலை என்பது, கூலி பெறுவதற்காக கொடுக்கும் உழைப்பு என்பதையும் தாண்டி, மக்களால் ஒரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் காலத்தில் வேலையாட்களை விட, மேலதிகாரிகள் தான் மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். எந்த வேலையாளையும் மோசம் என்று சொல்ல முடியாமல், அனைவரையும் சுமார் என்கிற வரையறைக்குக் கீழ் குறிப்பிட்டு, அவரை “அவமானப்படுத்த” எந்த இந்திய மேலதிகாரியும் விரும்புவதில்லையாம். தனிப்பட்ட முறையில் ஒருவரின் வேலை மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அப்ரைசல் காலத்தில் நம் இந்திய மேனேஜர்கள் பெரும்பாலும் அதை எல்லாம் மறைக்கத்தான் பார்க்கிறார்களாம். வேலையை வேலையாக மட்டும் பார்க்காமல் இருப்பதால் நடக்கும் தவறான செயல் என்கிறார்கள். ஒருவன் வேலை செய்யவில்லை என்றால், தைரியமாக “செய்யவில்லை” என்று கூறவேண்டுமாம்.. மாலையில் வேலை முடிந்ததும் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு ஃப்ரெண்டாக பேசலாமாம். ஆனால் வேலையில் எ பாஸ் இஸ் எ பாஸ் என்று இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேலையை, பெர்சனலோடு, கௌரவத்தோடு எக்காரணமும் இணைக்கக்கூடாது என்கிறார்கள்.

”இண்டிபெண்டென்ஸ் டே” படத்தில் ஒரு சாதாரண மிலிட்டரி ஆளான வில் ஸ்மித் அந்த நாட்டின் ஜனாதிபதியை ரொம்ப கேசுவலாக “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்பார்.. அந்த ஜனாதிபதியும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்.. பொதுவாக பல ஆங்கிலப் படங்களிலும் எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்துக்கொள்வார்கள். யாரும் யாரையும் “சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” போட்டு அழைக்கவே மாட்டார்கள்.. ’அதெப்படிய்யா அங்கெல்லாம் கம்பெனி ஓனரையே ”மிஸ்டர்.ஸாம்”னு பேரச்சொல்லியே கூப்புடுறாய்ங்க?” என நான் வியந்திருக்கிறேன்.. ஆனால் அங்கு பழக்கமே அது தானாம். ஆனால் இங்கு இந்தியாவில் பெயர் சொல்லி ஒருவன் அவன் மேலதிகாரியை அழைத்தாலே அவன் காலி.. 



வேதாந்தா நிறுவனத்தில் CEO சொல்கிறார், “இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகபட்ச மரியாதை என்னை எரிச்சலூட்டுகிறது” என்று.. ஒவ்வொரு முறை அவர் வரும் போதும் மாலை போட்டு, பொட்டு வைத்து, மிகவும் பவ்யமாக குனிந்து வணக்கம் சொல்லி, ஒவ்வொருவரும் “சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பது அசிங்கமாக தெரிகிறதாம். தன் சக ஊழியனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு என்கிறார். பதவி என்பது ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் இடம். அதற்காக ஒருவருக்கு கூழைக்கும்பிடு போட்டு, மரியாதை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஸ்ட்ரிக்ட்டாக. ”இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறோம், உன் பொறுப்பை நீ கவனிக்கிறாய், என் பொறுப்பை நான் கவனிக்கிறேன்” என்கிற எண்ணம் இருந்தாலே தேவையற்ற மரியாதைகள் விலகிவிடும் என்றும் விளக்கம் கொடுக்கிறார்..

ஆனால் இன்னொரு CEOவின் கதை அப்படியே தலைகீழ்.. முதல் நாள் அவருக்கு “Respected sir" என்று ஆரம்பித்து வந்திருந்த ஈமெயிலைப் பார்த்து காண்டாகி, எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆஃபிசில் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம். இப்போது அந்த CEO தன் ஆஃபிசில் எல்லோரையும் ஜீ போட்டு அழைக்கிறாராம், ”ராம்குமார்ஜீ சொல்லுங்கஜீ” என்று.. Hierarchyக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச முக்கியத்துவம் தான் அனைத்திற்கும் காரணம், அது ஒரு ஆரோக்கியமான நிறுவனத்திற்கு, அதன் உலகளாவிய வளர்ச்சிக்குத்தடை என்கிறார்கள்.. இதைப் படிக்கும் யாரும் உங்கள் நிறுவனத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு எடுத்துப்போகிறேன் பேர்வழி என்று நாளையே உங்கள் பாஸை பேர் சொல்லி அழைத்துவிட்டு, அப்ரைசலில் ஆப்பு வாங்காதீர்கள்..

பொதுவாக நம் மக்கள் ஒரு பொறுப்பை ஏற்கவும், முடிவை எடுக்கவும் மிகவும் தயங்குபவர்கள்.. விடிய விடிய விவாதிப்போமே ஒழிய உருப்படியாக ஒரு முடிவை எடுக்க மாட்டோம். முடிவை எடுத்துவிட்டாலும் அதை வழிநடத்திச் சொல்ல யாரும் முன்வர மாட்டோம்.. வேலை இடங்களிலும் இதே தான்.. ஒரு பொறுப்போ, அல்லது ஒரு முடிவெடுக்கும் சூழலோ வந்தால் எல்லோரும் அதை நம் பாஸ் இருக்கும் திசையை நோக்கித் திருப்பி விடுவோம்.. அவர் அவரின் பாஸிற்குத் திருப்பி விடுவார்.. இது தான் ஒவ்வொரு அலுவலகத்திலும் அன்றாட வேலை பலருக்கும்.. இதற்கான முக்கிய காரணம், தோல்வி பயமும், நம்மை யாரும் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையும் தான். எந்த எண்ணமும் நம்மிடம் இருந்து சீக்கிரம் மறைய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்..

பொதுவாக நம் ஆட்கள், பாஸ் எதை கேட்டால் சந்தோசப்படுவாரோ அதைத் தான் சொல்வார்கள் அது தவறாகவே இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும்.. உண்மையை பட்டென்று போட்டு உடைக்கும் தைரியம் இல்லாதவர்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவே முடியாது என்று தெரிந்தாலும் பாஸ் கேட்கும் போது “முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன் சார்” என்பார்கள். புத்திசாலி பாஸ்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒருத்தன் ”முடிந்த வரை” என்று சொன்னாலே அவன் ஒன்றையும் முடிக்க மாட்டான் என்று. நம் ஆட்கள் வக்கனையாக பேச மட்டும் தான் லாயக்கி, ஆனால் செயல் “ஆளப்பாத்தா அழகு, வேலையப்பாத்தா எழவு”ங்கிற ரேஞ்சில் தான் இருக்கும் என்கிறார்கள்.. 




அடுத்தது, நம் ஆட்களிடம் இருக்கும் work life balance.. இரவு 12 மணிக்கு பாஸிற்கு மெயில் அனுப்பி வேலை மேல் தனக்கு இருக்கும் காதலைக் காட்டுவார்கள். இந்த ஒரு விசயத்தை வைத்தே இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள் நம் ஃபாரின்  CEOக்கள். முதலில், ஒருவன் வேலை நேரம் முடிந்த பின்னும், வேலை செய்கிறான் என்றால் அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் தகுதி அற்றவன். அடுத்ததாக அவன் குடும்பத்திற்குள் வேலையின் பிரச்சனைகளை கொண்டு சென்று, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சிறுசிறு பிரச்சனைகள் வந்து, அது ஒரு கட்டத்தில் அவன் வேலையைக் கெடுக்கும். சரியான நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தெரிந்தவன் அலுவலக நேரத்தைக் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு time management மிகவும் முக்கியம், இந்தியர்களுக்கு அந்தக் கலை போதாது என்கிறார்கள்..




Time managementல் நாம் மோசமாக இருப்பது தான் அவர்களை மிகவும் வெறுப்பேற்றும் செயல் என்று அந்தக் கட்டுரையை படிக்கும் போதே உணர்ந்தேன்.. பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைத் தான் சொல்லியிருந்தார்கள் அந்தக் கட்டுரையில். ஒரு CEOவின் BPயை எகிற வைக்கும் ஒரே விசயம் என்றால், அது மீட்டிங்கிற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை அவரின் செகரட்டரி அவசர அவசரமாக ரிப்போர்ட் தயார் செய்வது தானாம். ”இந்தியர்களுக்கு எதையும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கச் செய்வது தான் பிடித்திருக்கிறது.. அந்த ஒரு பரபரப்பு வந்தால் தான் அவர்கள் வேலையே செய்கிறார்கள்.. அந்த வேலையும் பெரும்பாலும் சரியாகவே முடிந்து விடுகிறது.. ஆனால் அதனால் எங்களுக்குக் கிடைக்கும் டென்சன் சொல்லி மாளாது” என்று அவர்கள் நொந்து போகும் அளவிற்கு நம் ஆட்கள் பாடு படுத்தியிருக்கிறார்கள்.. 

இவ்வளவு தான் அந்தக் கட்டுரை.. இது முழுக்க முழுக்க middle management ஆட்களுக்கான கட்டுரை.. இதைப் படித்துவிட்டு front line ஆட்களோ, சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களோ, அடிமட்ட அடிமைகளோ உங்கள் லோக்கல் மேனேஜரிடம் ட்ரைப் பண்ணி டவுசரை கிழித்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகாசிக்காரன் கம்பெனி சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது.. வேண்டுமானால் நீங்கள் இன்னும் 2,3 ஆண்டுகளில் ப்ரொமோசன் ஆகி மேனேஜராக வரும் போது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் இந்தப் பழக்கங்களை கொண்டு வாருங்கள்.. உங்கள் நிறுவனம் உங்களை ஒரு முன்மாதிரி மேனேஜராகப் பார்க்கும்.. Best wishes :-)

10 comments

  1. பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..= எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். - சிவகாசிக்காரன் = எங்கள் அருமை Ram Kumar இன் அருமையான பதிவு. எனக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை Ram Kumar.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. தேவையான விசயங்களை தேர்ந்தெடுத்துக்கற்றுக்கள்ளலாம்..

      Delete
  2. Time Management - ISO வகுப்புகளில் பாடம் எடுக்க Time கிடைப்பதில்லை... என்னதான் எடுத்தாலும்... ம்... என்னத்தை சொல்ல...?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. விடுங்கண்ணே.. அது நம்ம பழக்க வழக்கம்.. ஒன்றும் செய்ய முடியாது..

      Delete
  3. அட்டகாசமான கட்டுரை அண்ணா ! டைம் மேனேஜ்மென்ட்-ல நானும் ரொம்ப மோசமா தான் இருந்தேன் . ஒரு முறை டைம் கீப்அப் பண்ணாததால ஒரு அருமையான ஆப்பர்சுனிட்டியகூட மிஸ் பண்ணிருக்கேன் . அதிலிருந்து கொஞ்சம் திருந்தி , இப்போதான் ஒழுங்கா இருக்கேன் .

    மரியாதை விஷயத்துல எனக்குத்தெரிஞ்சு Expatriate CEO க்கள் மட்டும் தான் நீங்க சொல்றமாதிரி இருக்காங்க . மத்தபடி பெரும்பாலும் இந்தியர்கள் மேனஜரா இருக்கப்போ , அவங்ககிட்டலாம் வளைஞ்சு குனிஞ்சி பேசலைனா , ஏதோ அவங்க பொண்ண சைட் அடிச்சமாதிரி நம்மேள காண்டாகிடறாங்க.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் நாம் அப்படித்தான் இருந்து ஆக வேண்டும்.. இது மாறுவது கஷ்டம்.. இந்தக் கட்டுரையில் நான் ”இது தான் சரி, இதெல்லாம் தவறு” என்று எதையும் சொல்லவில்லை.. எஸ்பாட் சி.ஈ.ஓ.க்களின் பார்வையில் இந்தக் கட்டுரை உள்ளது அவ்வளவே..

      Delete
  4. late going to home only they thinking as they are working

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. அப்படி வேலை செய்தால் தான் நமக்கு வேலை செய்த திருப்தியே வரும்..

      Delete
  5. அருமையான கட்டுரை.கார்த்தி நிறுவனத்திலும் அப்படித்தான்,எல்லோரும் பெயர் சொல்லித்தான் பேசிக் கொள்வர். விட 17 வயது மூத்தவர்.அவரை பற்றி சொல்லும்போது அவர் பெயர் சொல்லி பேசியதால் அவரும் கார்த்தி வயதுதான் என் நான் நினைத்துக் கொண்டேன்,. நேரில் பார்த்த பொது ஆச்சரியமாகி விட்டது.
    இதை விட கொடுமையான விஷயம் நம்மிடம் என்னவென்றால் '' அவன் (அவரெல்லாம் கிடையாது ) என்னிடம் வேலை பார்த்தான் என்பார்கள்.அரசு உத்தியோகம்தான். எனது தந்தையே ஒரு தலைமை ஆசிரியர். அவரும் அப்படித்தான் சொல்வார். ''அவன் எங்கிட்டதான் வேல பார்த்தான்'' என்னவோ இவருடைய காசை சம்பளமாக கொடுத்தது போல்தான்.''I AM WORKING இன் .....கம்பெனி '' போய்,
    i AM WORKING FOR ....COMPANY என்பதும் போய் I AM WORKING WITH என்று சொல்வார்கள் அவர்கள். நாம் மரியாதை கொடுத்து மேலதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்து பதவி உயர்வு பெறுவோம்.திருந்தவே மாட்டோம்.
    கார்த்திக் அம்மா KARTHIK AMMA

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் செயல்பாடுகள் நமக்கு ஆச்சரியம்.. நமது செயல்பாடுகள் அவர்களுக்கு ஆச்சரியம்.. விடுங்கள்.. நமக்கு எது சரியோ அதை பின்பற்றுவோம்.. அவ்வளவே.. :)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One