சும்மா இருங்கப்பா..

Thursday, January 31, 2013

இதோ நான் நின்றுகொண்டிருக்கிறேனே ஒரு கரைச்சலான, வெயிலின் பிசுபிசுப்போடு, புழுதி பறந்து கொண்டு, காம்ப்ளெக்ஸ் கட்டிடங்களும், சைக்கிளின் பெல் சத்தத்தை தன் இன்ஜின் சத்தத்தால் ஓவர்டேக் செய்யும் வண்டிகளும் நிறைந்திருக்கும் இந்த சாலைக்கு எதிர்ப்புறம் தான் எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் இருக்கு.. நான் சாலையின் இந்தப்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கும் எனது சைக்கிளின் ஹேண்ட் பாரில் ஒரு கையை வைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என் மகனின் வருகைக்காக..

“10நிமிஷத்துக்கு முன்னாடியே திருத்தங்கல் தாண்டிட்டேன்னு சொன்னானே?” வாட்சை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் ஒரு பேருந்து நுழைந்தது. வேக வேகமாக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பேருந்து நிலையம் நுழைந்து அந்த பஸ்ஸை பார்த்தேன். அது மதுரையில் இருந்து வந்தது அல்ல. அடுத்த பஸ்ஸு வரதுக்குள்ள உங்களுக்கு சீக்கிரமா அவன பத்தி சொல்லிறேன்.

 பரமேஷ் போன வருசம் தான் பி.காம் முடிச்சான். எங்கூர்ல தான் படிச்சான். நல்லாத்தான் படிச்சிருப்பான்னு நெனைக்கிறேன். சும்மாவா? அதனால தான் படிச்சி முடிச்சவொடனே பேங்க் வேலைக்கு போயிட்டான். அவங்கூட படிச்ச பாதி பயலுக இன்னும் சும்மா தான் இருக்காய்ங்க. இது சூட்டிப்பான புள்ள. டக்குனு வேலைக்கு போயிருச்சி பாருங்க. இப்ப மதுரைல தான் வேல பாக்குறான். வாரவாரம் ஊருக்கு வந்துருவான். அங்கருந்து 3 மணிக்கு கெளம்புவான், இங்க சாந்தரம் 5மணிக்குக்குள்ள வந்துருவான். திரும்ப திங்கக்கெழம காலைல 7மணிக்கு இங்க இருந்து கெளம்பிருவான். பொறுப்பான பிள்ள. ஹ்ம் இவன இப்படி ஒரு நெலமைக்கு கொண்டு வர, நான்.... இருங்க இருங்க, ஒங்கட்ட நான் இதப்பத்தி பெறகு சொல்றேன். எம்பய வந்துட்டான்.. அவன வீட்டுக்கு கூட்டிட்டு போணும்ல? அந்தா பாருங்க, அந்த ஊதா பஸ்ல இருந்து எறங்கி வரானே.. ஆ, அந்த வெள்ள சட்ட தான், அவந்தான் பரமேஷ்..

“என்ன தம்பி அப்பையே வண்டி திருத்தங்கல தாண்டிருச்சினு சொன்ன?”

“பஸ்ஸ உருட்டு உருட்டுனு உருட்டிய்யாங்கப்பா, மதுரைல இருந்து விருதுநகருக்கு 1மணி நேரத்துல வந்துரான், ஆனா விருதுநகர்ல இருந்து நம்ம ஊருக்கு 1மணிநேரம் ஆக்குறான். ச்செய் என்ன தான் ரோடோ?”

இவன் இப்படித்தான். எல்லாமே டக்கு டக்குனு முடியணும். ஒரு பஸ்ஸு ஊர்ல இருக்குற மேடு பள்ளத்தலாம் தாண்டி வரணும்னுலாம் யோசிக்க மாட்டான். அவன் வேல நடக்கணும். நடக்கலேனா கோவம் தான். ஆமா, அதனால தான பேங்க்ல மேனேஜரா இருக்கான்? ஷ்ஷ் நான் மேனேஜர்னு சொன்னேன்னு அவன்ட்ட சொல்லிறாதீங்க. அவன் அங்க மேனேஜருக்கு அடுத்த லெவல்ல தான் இருக்கான் போல. எனக்கு அந்த பேரு வாய்ல நொழையாதனால மேனேஜர்னு தான் சொல்லுவேன். “எப்பா இப்டிலாம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க”னு அதுக்கும் கோவப்படுவான். ஹா ஹா என் பிள்ளைக்கு எப்பவுமே ஒரு கோவம் இருக்கும்.

“என்னப்பா நீங்க கூப்ட வந்திருக்கீங்க? வழக்காம நானே நடந்து வந்துருவேன்ல? இன்னைக்கு எதும் லீவா?”

“அதெல்லாம் இல்ல தம்பி, சும்மா தான்” அவன் பையை வாங்கி சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு, “ஒக்காருப்பா போலாம்”..

“சைக்கிள்லயா? இருக்கட்டும்ப்பா.. நீங்க வேணா ஓட்டிக்கிட்டு முன்னாடி போங்க. நா மெதுவா நடந்து வாரேன்”

“ஏ ச்சீ கிறுக்கா, ஒன்ன விட்டுட்டு நான் என்னத்த ஓட்டிட்டு போக? இந்தா நீ வேணா ஓட்டிட்டு போ, அப்பா நடந்து வாரேன்” - இந்தக்கால பிள்ளைகளுக்கு சைக்கிள்ல ஒக்காந்து வரதுக்கு எவ்வளவு கூச்சம் பாருங்களேன்!

“சைக்கிள்லாம் ஓட்டி ரொம்ப நாள் ஆயிருச்சிப்பா. இருக்கட்டும் வேண்டாம்”

“சரிப்பா, அப்ப அப்பா உருட்டிக்கிட்டே வாரேன். ரெண்டு பேரும் நடந்தே போவோம்”.. சொல்லிவிட்டு சின்ன வயசுல இவன் சைக்கிள் கேட்டு அடம்பிடிச்சத ஞாபகப்படுத்தி பாக்குறேன். ஹா ஹா, இவன் ரெண்டாப்பு படிக்கிறப்ப இருந்து சைக்கிள் வேணும் சைக்கிள் வேணும்னு கேட்டான். எட்டாப்பு படிக்கும் போது தான் தீவாளி போனஸ்ல கொஞ்சத்த மிச்சப்படுத்தி, ஏற்கனவே கடன் வாங்காத ஆளுங்கள எப்படியோ தேடிப்பிடிச்சி நெறையா கடன் வாங்கி ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். இப்ப நெனைச்சா லேசா சிரிப்பு வரவைக்குற இந்த விசயம் அன்னைக்கு எவ்வளவு கஷ்டத்துக்கு ஊடால நடந்துச்சினு தெரியுமா? ஹ்ம்....

“என்னப்பா சிரிக்குறீங்க?” 

ஓ, வெளியில் தெரியுற மாதிரி சிரிச்சிட்டேனோ? “அது ஒன்னுமில்ல தம்பி. ஒனக்கு சைக்கிள் எப்ப வாங்கிக்கொடுத்தேன்னு ஞாபகம் இருக்கா?”

“இல்லப்பா” என்று சுரத்தே இல்லாமல் சொல்லிக்கொண்டு புதுப்பட வால்போஸ்டர பாத்துக்கிட்டே வாரான்.. 



அது ஒரு கார்த்திகை நாள். ஊர்ல எல்லாரு வீட்லயும் வெளக்கு ஏத்தி வச்சி தீவாளிக்கி மிஞ்சிப்போன வேட்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த பொழுதடையுற வேளேல வெளக்கு, வேட்டு வெளிச்சத்துல இவன் சைக்கிள குறுக்க கால போட்டு ஓட்டிட்டு வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்கிது.. “கரி நாள்ல போயி சைக்கிள் வாங்கி குடுக்கிறியேப்பா?”னு கேக்காத ஆள் இல்ல. சைக்கிள் கடக்காரன் கூட, “நாளைக்கு டெலிவெரி எடுத்துக்கிறீங்களா அண்ணாச்சி?”ன்னான்.. நான் பரமேச பாத்தேன். அவன் நல்லா கண்ண பெருசா தொறந்துக்கிட்டு, மூக்கு பொடச்சிக்கிட்டு, அந்த சின்ன வாய அழுத்தி மூடிக்கிட்டு என்னைய பாத்தான். நான் திரும்பி கடக்காரன்ட்ட “இல்லண்ணாச்சி, நான் இப்பையே எடுத்துக்கிடுறேன்”னு சொல்லிட்டு அவன பாத்தேன். அவனோட அந்த பெரிய கண்ணுல லேசா தண்ணியும், மூடுன வாயில ஒரு ஓரமா ஒரு சிரிப்பும் இருந்துச்சி. இதுக்காண்டியே இன்னும் எவ்வளவுனாலும் கடன் வாங்கலாம்.

இந்த மாதிரி பழசெல்லாம் ஞாவத்துக்கு வரும் போது எங்க இருக்கோம், எவ்ளோ நேரம் ஆச்சுனு எல்லாமே மறந்துரும். பாருங்க இத யோசிச்சுக்கிட்டே எப்படி வீட்டுக்குள்ள வந்தேன்னே தெரில. வெளிலே இருக்கும் போது இருந்த சந்தோசம் வீட்டுக்குள்ள வந்ததும் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு. வெளில எல்லையே இல்லாம விரிஞ்சி இருக்குற ஒலகம் எதெதையோ ஞாபகப்படுத்தும். என்னென்னமோ நெனைக்க சொல்லும். ஆனா வீட்டுக்குள்ள வந்ததும், ‘இதாண்டா ஒன் எல்ல, நீ இனிமேலு இதுக்குள்ள தான் யோசிக்கணும், இதப்பத்தி தான் யோசிக்கணும், இதுக்குள்ள தான் வாழணும்’னு யாரோ நம்மள கட்டாயப்படுத்துற மாதிரியே இருக்கும்.

அதுலயும் இந்த நாலு நாளா ரொம்ப அச்சலாத்தியா இருக்கு வீட்டுக்குள்ள இருக்குறதுக்கே.. ஏன்னா,

“என்னம்மா இன்னைக்கு அப்பா வேலைக்கு போலையா?” - நான் ஒங்கட்ட மட்டும் சொல்லலாம்னு நெனச்சேன். இப்ப இவன் அவாகிட்ட கேக்குறியான். நான் அவனுக்கு சொல்ற மாரியே உங்களுக்கும் சேத்து சொல்றேன். ஆனாலும் இவனுக்கு எம்மேல, படிச்சிட்டு வேலைக்கு போனாலும் இன்னும் மரியாத இருக்க தான் செய்யுது. அதான் என்ட்ட கேக்காம வீட்டுக்குள்ள வந்ததும் அவாகிட்ட கேக்குறியான்.

“அது ஒன்னுமில்ல தம்பி. அப்பா ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சன. அதான் கொஞ்ச நாளு லீவு விட்டிருக்காங்க”

“அப்படியாம்மா?”. இந்த பயலுக கிட்ட இது தான் எனக்கு பிடிக்காத விசயம். வளருற வரைக்கும் அப்பா சொல்ற எல்லாத்தையும் நம்புவாய்ங்க. வளந்த பெறகு அம்மா என்ன சொல்லுறாளோ அதத்தான் நம்புவாய்ங்க. நான் என் பொண்டாட்டிய பாத்தேன், என்ன சொல்றான்னு கேக்க.

“சின்ன பிரச்சனலாம் ஒன்னும் இல்ல. அவுக ஆபிஸ்ல மொதலாளிமாருக்குள்ள ஏதோ சொத்து தகராறு. அதனால கம்பெனிய இழுத்து மூடிட்டாங்களாம். எப்ப தொறப்பாங்க, எத்தன நாளு மூடிருக்க போறாங்கன்னு எதுவுமே தெரிலப்பா”

அவன் என்ன திரும்பி பாக்குறியான். நா வேற பக்கம் திரும்பலாம்னு பாக்குறேன், ஆனா முடியல. “எத்தன நாளா இப்டி இருக்குமாம்மா?”

“இப்பத்தாம்ப்பா ஒரு ரெண்டு நாளா”னு நான் சொல்லுறதுக்குள்ள அவ வாய தொறந்துட்டா, “செவ்வா கெழமேல இருந்தே வீட்ல தான் இருக்காக” சொல்லிக்கிட்டே என்ன மொறச்சு பாத்தா.. இந்த பொம்பளைக பிள்ள வளந்து ஒரு லெவலுக்கு வர வரைக்கும் புருஷன் அடிச்சாலும் புடிச்சாலும் அமைதியா தாங்கிக்கிட்டு நாலு வார்த்த கத்திக்கிட்டு சும்மா இருப்பாளுக. ஆனா புள்ள வளந்து பெரியவனாகி ஒரு லெவலுக்கு வந்தவொடனே புருஷனுக்கு மதிப்பே கெடையாது. 

”ஏம்ப்பா என்ட்ட மொதையே சொல்லல?” என்னப்பாத்து கேக்குறியான்.

“இல்லப்பா நீ வேற வெளியூர்ல வேல செய்யிற, உன்ட்ட சொல்லி நீ வேற அங்க டென்சனாக கூடாதுல்ல?”

“இதுல என்னப்பா டென்ஸன் இருக்கு? நா படிச்சி முடிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன். இனிமேல் நீங்க ஒக்காந்து ரெஸ்ட் எடுங்கப்பா அது போதும்” என்றான். எனக்கு பெருமையாக இருந்தது. எனக்கும் மனசுல இந்த நெனப்பு இருந்தாலும் யார்ட்டயும் இப்ப வரைக்கும் சொல்லல. இப்ப எம்மகனே சொல்லிட்டான். இனிமே நா எதுக்கு கஷ்டப்படணும்?

“சரிப்பா” என்றேன் சிரித்துக்கொண்டே.

அவள் சத்தம் வந்தது. “அதெல்லா ஒன்னும் வேண்டாம். ஒன் ஃப்ரெண்ட் கடைல எதாவது வேல இருந்தா அங்க சேத்துவுடு, இல்லேனா எதாவது பலசரக்கு கடைல சேத்துவுடு”

“ஏம்மா? அதான் நான் வேலைக்கு போறேன்ல? அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்களும் கெட்டு ஒட்டுறதலாம் மொத நிறுத்துங்க”

“அவன் சொல்றது சரிதான? நீயும் கெட்டு ஒட்டுறத நிறுத்துட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான? நா இத எத்தன தடவ சொல்லிருப்பேன்? இப்ப  பாரு அவனும் சொல்லுறியான். இப்பையாவது கேளு”

“தேவ இல்லாம என்ட்ட யாரும் பேச வேண்டான்னு சொல்லு பரமேசு” அவன்ட்ட விரல நீட்டி  எனக்கு எச்சரிக்கை கொடுக்கிறாளாம்.

“ஏம்மா? என்ன ஆச்சி?”

“அது ஒன்னும் இல்லப்பா.. இப்ப நீ சொன்னத தான் அப்பா அன்னைக்கே அவாகிட்ட சொன்னேன். அதுக்குப்போயி கழுத தங்கு தங்குனு குதிக்குது”

“பரமேசு, பெத்த பிள்ள எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் பெத்தவங்க அவங்க செலவ அவங்களே தான் பாத்துக்கிடணும். ஒனக்கு இன்னும் எவ்வளவு பொறுப்பு இருக்கு? வீட்டுக்கு தேவையான சாமானே நீ வேலைக்கு போன பெறகு தான் ஒன்னொன்னா வாங்கிக்கிட்டு இருக்கோம். இதுல இப்ப, இவுகளும் வேலைக்கு போலேனா, நீயே குடும்ப செலவையும் எப்படி பாப்ப? இத கேட்டதுக்கு தான் என்ன ரொம்ப வையுறாக, அன்னைக்கு அடிக்கவே வந்துட்டாக”

“எதுக்குப்பா தேவை இல்லாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எம்மா நீங்களும் வீட்ல வாயக்குடுக்காம இருங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் சும்மா இருங்க, அது போதும்.”

”வேண்டாம் பரமேசு, ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது”

“நீ வேலைய பாருப்பா, இவ இப்படித்தான் எதாவது கொழப்பிக்கிட்டு இருப்பா” நான் அவளை முறைத்துக்கொண்டே சொல்கிறேன்.

“ஆமாப்பா நாங்க சொன்னா கொழப்புற மாரி தான் இருக்கும். என்னமோ பண்ணுங்க. ஆனா நான் கெட்டு ஒட்டுறத ஒட்டிக்கிட்டு தான் இருப்பேன்”.

“ஏ இப்ப என்ன பண்ணனுங்கிற? இத்தன வருசம் நீயும் நானும் எப்டிலாம் கஷ்டப்பட்டிருக்கோம்? இப்ப கடவுள் புண்ணியத்துல இல்லங்காத அளவுக்கு இருக்கோம். பெறகு என்ன?”

“அதான் சொல்லிட்டேன்ல, ஒருக்க சொன்னா புரியிற ஜென்மங்களுக்கு சொல்லலாம். சிலதுகலாம் பட்டாத்தான் திருந்தும்” இவா இதே வார்த்தைய கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லிருந்தான்னு வைங்களேன், இவ காத பொளந்திருப்பேன், பல்ல ஒடச்சிருப்பேன். ஆனா, ஒரு வயசுக்கு மேல, பொண்டாட்டி என்ன சொன்னாலும், நமக்கு பிடிக்கலேனாலும் அடங்கித்தான் போக வேண்டியிருக்கு. 

ஆனாலும் எனக்கு வேலைக்கு போக பிடிக்கல. பரமேசு கிட்டயும் ரெண்டும் மூனு தடவ கேட்டுட்டேன் வேலைக்கு போறத பத்தி. அவன் தெளிவா சொல்லிட்டான், “நான் பாத்துக்கிறேம்ப்பா.. நீங்க வீட்ட மட்டும் கவனிச்சிக்கோங்க”.. எவ்வளவு பொறுப்பான அக்கறையான பிள்ள? பிள்ளைய நல்லாத்தான் வளத்திருக்கேன், இல்ல? ஞாயித்துக்கெழம பிள்ளைக்கு நல்லா கறி வாங்கி ஈரல் வதக்கி சோறு போட்டோம்.. வீட்ல சாப்பிடுறப்பலாம், அவன் ‘ஒடம்பு குண்டாயிருச்சி, ஒடம்பு குண்டாயிருச்சி’னு கவலப்பட்டுக்கிட்டே இருப்பான். எனக்கென்னமோ அப்படி தெரியுறதே இல்ல. அவனோட பழைய ட்ரெஸ் எல்லாம் சிறிசாயிருச்சி, ஆனாலும் அவன் ஒன்னும் குண்டான மாதிரி எனக்கு தெரில. ஞாயித்துக்கெழம நல்லா தூங்குனோம், சாந்தரம் டிவி பாத்தோம், திரும்ப திங்கக்கெழம காலேல அவன சீக்கிரம் எழுப்பிவிட்டு, பஸ் ஸ்டாண்ட்ல அவனுக்கு டாட்டா காட்டி அனுப்பிவச்சேன். அடுத்த சனிக்கிழம திரும்ப என் பிள்ளைய கூப்பிட வர வேல மட்டுந்தான் இருக்கு. இனிமேல் நான் சந்தோசமா சுதந்திரமா எங்கேயும் போலாம்.



வீட்டுக்கு வந்தேன். மணி காலை ஏழு. பேப்பரை எடுக்கிறேன். ஹ்ம் சாவகாசமா பேப்பர் படிச்சி எத்தன வருசமாகுது? அதுவும் டீ குடிச்சுக்கிட்டே படிக்குறது இன்னும் சந்தோசமா இருக்கு. ரொம்ப நேரமா பேப்பர் படிக்குறேன் போலனு நெனச்சி மணிய பாத்தேன். எட்டே கால். என்னது இவ்வளவு நேரம் ஆன மாதிரி இருக்கு, ஆனா கா மணிநேரம் தான் ஆயிருக்கா?னு நெனச்சுக்கிட்டே, பேப்பர முடிச்சிட்டு, குளிச்சி சாப்பிட்டு, டிவிய போட்டேன். ஒரு அர மணி நேரந்தான் பாத்தேன். அதுக்கு மேல பாக்க முடியல. எல்லா சேனல்லயும் சீரியல். பொம்பளைக எல்லாம் அழகா இருந்தாலும், இந்த சீரியல் எதுவுமே பாக்க சகிக்காது எனக்கு. சரி, வெளிய கெளம்பலாம்னு கெள்மபுனேன். 

“இந்தா, வரும் போது, மத்தியானம் கொழம்புக்கு வைக்க காய்கறி வாங்கிட்டு வாங்க”னு சொல்லி ஒரு லிஸ்ட் குடுத்தா..

”காசு?”

“என்ட்ட கேட்டா?”

“ஏ காசு இல்லாம இதெல்லாம் எப்படி வாங்குறது?”

“இதெல்லாம் வாங்கிட்டு வந்தா கொழம்பு வைக்கலாம். இல்லேனா காலேல ஆக்குன சோறும் பாலும் இருக்கு. நேத்து வாங்குன பக்கடா கொஞ்சம் இருக்கு. சாப்பிட்டுக்கோங்க”

என் கையில கொஞ்சம் காசு இருந்தாலும், இவா கிட்ட நான் ஒன்னும் சொல்லிக்கிடல.. பேசாம மார்க்கெட்டுக்கு போயி கொஞ்சம் காய்கறிலாம் வாங்கிட்டு வந்தேன். மத்தியானமும் டிவில சீரியல் தாங்க ஓடுது.. இது எப்ப முடியும்? சூடா சமைச்சு கொடுத்தா. ஹ்ம் டெய்லி வேலைக்கு போனா இப்டி சூடா சாப்புட முடியுமா? காலேல ஆக்குன சோற, டிஃபன் பாக்ஸுல கொண்டு போயி, மத்தியானம் அது ஆறிப்போயி குளு குளுனு இருக்கும். அதெல்லாம் சாப்பாடா? இதான் சாப்பாடு. சாப்புட்டுட்டு ஒரு தூக்கம் போட்டேன். சாந்தரம் டீ போட்டு எழுப்பிவிட்டாள். இப்பயும் டிவில சீரியல் தான் ஓடுது. நான் வேலைக்கு போறப்பலாம் நெனப்பேன், இந்த சீரியல் எல்லாம் நைட்டு மட்டுந்தான் போடுறாய்ங்கன்னு. ஆனா இப்பத்தான் தெரியுது, காலேல இருந்து நைட்டு வரைக்கும் அது பூமி சுத்துற மாதிரி நம்ம வீட்ட சுத்திக்கிட்டு இருக்குனு.

நைட்டு வெறும் சோறு மட்டும் தான் வச்சா. கடிச்சிக்கிட எதுவும் இல்ல. “என்ன ஒன்னத்தையும் காணோம்?” 

“என்ன வேணும்?”

“பக்கடா கிக்கடா இருக்கா?”

“இல்ல, மத்தியானமே காலி.. வேணும்னா போயி வாங்கிட்டு வாங்க” வீட்ல அன்றாட செலவுக்கு கூட என்னால காசு குடுக்க முடியல இப்பலாம்.

வேலைல இருந்து நின்ன இந்த ஒரு வாரமா வீட்டு செலவெல்லாம் நாந்தான் பாத்துக்கிறேன். இன்னைக்கு நைட்டு சோத்துக்கு பக்கடா வாங்குற இந்த பத்து ரூவாயோட என் கையில் இருக்குற காசு எல்லாம் போயிருச்சி.

நாளைக்கு காலேல 9மணிக்கு தான் எந்திரிக்கணும்னு கங்கனம் கட்டிக்கிட்டு படுத்தேன். பாத்தா, கரெக்ட்டா எப்பயும் போல, அஞ்சரைக்கு முழிப்பு தட்டிருச்சி. அதுக்கு மேல எவ்வளவு பொரண்டு படுத்தாலும் தூக்கமே வரல. ரொம்ப போர் அடிக்குது. சீக்கிரம் எந்திரிச்சிட்டேன். ஒரு வேலையும் இல்ல. ஒரு நாள் ரெண்டு நாள்னா நல்லா இருந்தது. ஒரு வாரமா இப்டியே இருக்குறது, கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்கு. வெளிய எங்கேயாச்சும் போலான்னா கைல காசு இல்ல. சோறு சரியா ஆக்கல, கொழம்பு தண்ணியா இருக்குனு நான் எதாவது குத்தம் சொன்னா, இவளுக்கு இப்பலாம் கோவம் ரொம்ப வருது.. அடிக்கடி குத்திக்காமிக்குறா, “நீங்க குடுக்குற காசுக்கு இதத்தான் ஆக்கிப்போட முடியும்”னு.. நாளைக்கு குடுக்க என்ட்ட காசே இல்லையே, நாளைக்கு என்னத்த வப்பா?

வழக்கம் போல பையன் இந்த வாரம் வந்தான். அவன் வந்து இருந்த ரெண்டு நாளும் பொழுது ஏதோ சுமாரா போச்சு. மத்த நாள் எல்லாம் ரொம்ப மோசம். படுத்தா தூக்கம் வரல, வீட்டுக்குள்ளயே எவ்வளவு நேரம் அடஞ்சு கெடக்க? வெளிய போணும்னா எவனாவது தெரிஞ்சவன் வருவான். அவன் கூட டீக்கடைக்கு போணும்னா அதுக்கு கூட காசு இல்ல. பையன் கிட்ட கேக்கலாம்னா சொல்றீங்க? அது நல்லா இருக்காது. ஒரு பையன் தான் அப்பன் கிட்ட கூசாம என்ன வேணும்னாலும் கேக்கணும். அதே மாதிரி ஒரு வயசுக்கு பிறகு அப்பனுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சி அப்பன் கேக்குறதுக்கு முன்னாடியே கொடுத்திரணும். ஆனா இவன் என்ன வேலைக்கு போக வேண்டான்னு சொல்லி 2வாரம் ஆகிருச்சி, இது வரைக்கும், “என்னப்பா, செலவுக்கு என்ன பண்ணுறீங்க? எதுவும் வேணுமா?”னு கேக்கவே இல்ல. அதே மாதிரி முன்னாடி மாதிரி என் கிட்ட சிரிச்சி பேசுறது இல்ல. நான் என்ன கேட்டாலும் ஒரு வார்த்தையில மட்டும் தான் பதில் சொல்றான். என்ன கண்டுக்கிற மாதிரியே இல்ல. நேத்து “எப்பா எதாவது திங்க இருக்கா?”ன்னான். 

”எதுவும் இல்லையேப்பா”

“வேலாயுத நாடார் கடேல பக்கடா வாங்கிடு வரீங்களா?”

“அம்மாட்ட காசு வாங்கி தாப்பா”

“இருக்கட்டும்ப்பா, பெறகு பாத்துக்கிடலாம்”

அடுத்து அவன் ஒன்னும் சொல்லல.. எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சி, பிள்ளைக்கு கேட்ட பலகாரம் கூட வாங்கி குடுக்க முடியலையேனு. இந்தா, இன்னைக்கு காலேல திரும்ப மதுரைக்கு கெளம்பிட்டான். எப்பவும் ரொம்ப நேரம் டாட்டா காட்டுவான், இன்னைக்கு சும்மா ரெண்டு தடவ மட்டும் பேருக்கு கைய வீசுன மாதிரி இருக்கு, கவனிச்சீங்களா?

நா வீட்டுக்கு வந்தேன். தலைல முடி பங்கர மாதிரி வளந்திருக்கு. முடி வெட்டணும். கையில காசு இல்ல. இவா கிட்ட இருக்கு. பய, ஒவ்வொரு மாசமும் சம்பளம் வந்ததும் இவா கிட்ட கொஞ்சத்த குடுக்குறியான். “ஏ எனக்கு முடி வெட்டப்போணும், ஒரு அம்பது ரூவா குடேன்”

“என்ட்டலாம் காசு இல்ல” - இவளும் இப்ப என் கிட்ட சரியா பேசுறது இல்ல. நான் எது கேட்டாலும் எரிஞ்சி விழுற மாதிரியே பேசுறா. எதுக்கெடுத்தாலும் எம் பையன என் கூட ஒப்பிட்டு பேசுறா. “சின்னப்பையன், அவனுக்கு இந்த குடும்பத்து மேல இருக்குற அக்கற, வேலைக்கு போய் சம்பாதிக்கணுனு இருக்குற சுறுசுறுப்பு இவ்வளவு பெரிய ஆம்பள ஒங்களுக்கு இல்லையா?”னு அடிக்கடி குத்திக்காமிக்குறா. இத்தன நாளா வீட்ல, ‘ஒரு ஆம்பள’னு எல்லாரும் என்ன சார்ந்து இருந்த அந்த பிம்பம் இப்ப கொஞ்ச கொஞ்சமா ஒடையுது. என்னால இத தாங்க முடியல. வீட்டுக்கு வர சொந்தக்காரங்க யாரும் என்ட்ட சரியா பேசுற மாதிரியே தெரில. எல்லாரும் எம்பையன பத்தி வெசாரிக்குறாங்க, என் வீட்டுக்காரிகிட்ட பேசுறாங்க. நான் ஒரு மூலையில இருக்கேன். எனக்கு இந்த வீட்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்த முக்கியத்துவம் இல்ல. எல்லாமே என் பையனுக்கு போயிருச்சி. பக்கத்து வீட்ல, சொந்தக்காரங்க வீட்ல எதுவும் முக்கிய விசேசம்னா எம்பையனுக்கு தான் மொத ஃபோன் பண்ணி சொல்றா.. எனக்கு அது ரொம்ப லேட்டா தான் தெரியுது. எனக்கு இந்த குடும்பத்துல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்த பேரு, முக்கயத்துவம் எல்லாம் இப்ப எம் பையனுக்கு போயிருச்சி. எனக்கு அவன் மேல பொறாமையா கோவமானு தெரில, ஏதோ ஒன்னு இப்ப வருது. ஒரு வீட்ல பையன் வளந்து வேலைக்கு போனதும் அந்த வீட்ல இருக்குற தகப்பனோட மரியாத கொஞ்சம் கொறையத்தான் செய்யுது. வெளிய எப்படியோ, ஆனா பொண்டாட்டிக்கு கண்டிப்பா பிள்ள மேல பாசம் கூடிரும், புருசன் மேல வெறுப்பு கூடிரும்.



என்னால இப்ப வீட்ல முன்னாடி மாதிரி தைரியமா படுக்க முடியல. கம்பளிய ஒடம்பு பூரா சுத்திக்கிட்டு ஒடம்ப வளைச்சி, ஒரு மாதிரி சுருட்டிக்கிட்டு படுத்துக்கெடக்கேன். கூனிக்குறுகி படுத்திருக்கேன்னு சொன்னா பொறுத்தமா இருக்கும். எப்பையுமே படுத்தே கெடக்கேன். தூக்கம் வரலேனாலும், படுத்துக்கெடக்கேன். உடம்பு தெம்பா இருந்தாலும் மனசுக்குள்ள ஏதோ நான் ஒரு சீக்காளி மாதிரி நெனச்சி சுருண்டு படுத்து கெடக்கேன்.

நான் வீட்டுக்கு சரியா காய்கறி எதுவும் வாங்கிக்குடுக்காம அவா சரியா சமைக்குறதும் இல்ல. வேலைக்கு போலேன்னாலும் நாந்தான் இந்த குடும்பத்துக்கு தலைவன். ஒரு ஆம்பளையா நாந்தான் எல்லாத்தையும் வாங்கிக்குடுக்கணும். வீட்டுக்கு பெரிய ஆம்பளன்னு காட்ட இனிமேல் வீட்டுக்கு எல்லாம் நான் தான் என் காசுல வாங்கணும்னு முடிவு செஞ்சேன். இன்னைக்கு அவா அடுப்படியில இருக்குறப்ப தான் அத செஞ்சேன். மெதுவா சத்தம் வரமா அலமாறிய தொறந்தேன்.  கையெல்லாம் லேசா நடுங்குது. யாரோ நெஞ்சுக்குள்ள திடு திடுனு ஓடுற மாதிரி இருக்கு. வேக வேகமா பெருமூச்சா வருது. சத்தம் வராம மூச்ச விட்டுக்கிட்டே, அவளோட பர்ஸ எடுத்தேன். நெறைய ரூவா தாளா இருந்தது. அதுல ஒரே ஒரு நூறு ரூவா தாள மட்டும் உருவி எடுத்துக்கிட்டு திரும்பவும் அந்த பர்ஸ எடுத்த எடத்துலேயே வச்சுட்டேன். ரெண்டு நாளைக்கு வழக்கம் போல காய்கறி வாங்கலாம்னு முடிவு பண்ணிக்கிட்டு மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்தேன். நான் காய்கறி வாங்கிட்டு வரத பாத்தவொடனே கேட்டா,

“ஏது காசு?”

“அதெல்லாம் ஒனக்கு எதுக்கு? போயி இன்னைக்காவது நல்ல கொழம்பா வையி”..

ஒரு ரெண்டு நாள் அந்தக்காச வச்சு ஓட்டுனேன். இன்னொரு நாள் அவா பக்கத்து வீட்டுல பேசிக்கிட்டு இருக்கும் போது, அதே மாதிரி மெதுவா அலமாறிய தொறந்து பாத்தேன், அங்க அவா பர்சு இல்ல. பீரோலுக்குள்ள இருக்குமோனு அங்கயும் பாத்தேன், அங்கயும் இல்ல. பீரோல மூடும் போது அவா சேல கீழ நழுவி விழுந்துச்சி. அதுல ரெண்டு நூறு ரூவா நோட்டு இருந்துச்சி. இந்த பொம்பளைகள நெனச்சி பெருமப்படுறதா, இல்ல, சிரிக்குறதானே தெரியல. நல்லா சேத்து வைக்குறாளுக, ஆனா காச ஒழிச்சு வைக்குறேங்குற பேர்ல ஆம்பளைங்க கண்டுபிடிக்குற மாரியே வப்பாளுக.. ஒவ்வொரு சேலையா எடுத்து பாக்குறேன், ஒவ்வொன்னுக்குள்ளேயும், நூறு ஐநூறுனு இருக்கு. மெதுவா ஒரு ஐநூறு ரூவாய எடுத்து என் சட்ட பாக்கெட்டுல வைக்குறப்ப,

“என்னங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

“அது, அது வந்து, பீரோல ஒதுக்கிட்டு இருக்கேன், ஒரே தூசியும் தும்பட்டையுமா இருக்கு, அதான்”னு சொல்லிக்கிட்டே அவா சேலைய எல்லாம் எடுத்து அவசர அவசரா உள்ள வைக்குறேன். லேசாக உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. சாதாரணமா பேச நெனச்சாலும் நாக்கு குளற ஆரம்பித்துவிட்டது.

“நான் அலமாறில நூறு நூவா காணப்போனப்பவே நெனச்சேன், நீங்க தான் இப்படி பண்ணிருப்பீங்கன்னு.. சொந்த வீட்லயே திருட்டுத்தனம் பண்ண வெக்கமா இல்ல ஒங்களுக்கு?” என் மூஞ்சுக்கு நேரா கைய நீட்டி கேக்குறா.

“ஏ இப்ப எதுக்கு கூப்பாடு போடுற?” என்னோட அசிங்கமான செயல மறைக்க கோவப்படுற மாதிரி கத்துறேன்.

“ஆமாப்பா நா கூப்பாடு தான் போடுறேன். தாந்தான் சம்பாதிக்கிறது இல்ல, பிள்ள சம்பாதிக்குறதயும் சேத்து வைக்காம, இப்படி திருடுற அப்பன இப்பத்தான் பாக்குறேன்.”

”நா வீட்டு செலவுக்கு தான எடுக்குறேன்”

“வீட்டு செலவுக்கு சொந்த வீட்லயே திருடணுமா? உங்களுக்கு இப்படி காசு எடுக்கணும்னு அவசியமாங்க? ஏங்க, வீட்ல ஒரு பெரிய ஆளு, நீங்க தாங்க சம்பாதிச்சு குடுக்கணும், பிள்ள வேலைக்கு போனாலும் தெம்பு இருக்குற வரைக்கும் சம்பாதிக்கணும்னு அன்னைக்கே சொன்னேனே கேட்டிங்களா? உங்களால பையன் கிட்ட வாய தொறந்து காசும் கேக்க முடியல.. இத்தன நாளா நீங்க பாத்துக்கிட்டு இருந்த வீட்டு பொறுப்பையும் அவன் கிட்ட கொடுக்க உங்க தன்மானமும் எடம் கொடுக்கல, இன்னைக்கு பாருங்க, அதனால திருடுற அளவுக்கு வந்துட்டீங்க. நான் அன்னைக்கு என்ன சொன்னேன்? ஒங்க சக்திக்கு, ஒங்க உடம்பு ஒத்துழைக்குற அளவுக்கு ஒரு வேல பாருங்கன்னு, கேட்டிங்களா? இப்படி ஒரு திருட்டுப்பய மாதிரி பயந்து, ஒடுங்கி.. உங்கள பாக்குறதுக்கே எனக்கு இப்ப அசிங்கமா இருக்குங்க” அவா உதடு துடுக்குது. கண்ல தண்ணி கட்டுது. அழ ஆரம்பித்துவிட்டாள்.

அழுதுக்கிட்டே பேசுறா, “இந்த வயசுல, நம்ம செலவுக்கே கூட பையன எதிர்பாக்குற அளவுல தாங்க இருக்கோம். நாம ஒன்னும் கவர்மெண்ட் வேல பாத்து பென்சன் கெடைக்குற அளவுல இல்ல. இருக்குற வரைக்கும் நீங்களும் நானும் சோத்துக்கு இன்னொரு ஆள் கிட்ட கையேந்த கூடாதுன்னு தான் அன்னைக்கே நீங்க வேலைக்கு போகலனு முடிவு செஞ்சப்ப வேண்டான்னு சொன்னேன். பெத்த பிள்ளையாவே இருந்தாலும் எத்தன நாளைக்கு தாங்க நாம அவன்கிட்ட போயி நிக்க முடியும்? அவனே நமக்கு செய்யுறேன்னு சொன்னாலும், வேண்டாம்ப்பானு சொல்லி நம்ம சோத்துக்கு நாம தாங்க ஒழைக்கணும். அதாங்க ஒங்களுக்கும் எனக்கும் மரியாத. பெத்து வளத்து ஆளாக்கி வேலைக்கு போற வரைக்கும் தான் பிள்ள. வேலைக்கு போனதும் அவனும் ஒரு மனுசன். அவனுக்குனு பொறுப்பு வந்துரும், அவன் அதுக்கு ஏத்த மாரி போயிருவான். அத புரிஞ்சிக்கிட்டு நாம் தான் ஒதுங்கி நிக்கணும். அதுக்காக பிள்ளைய ஒதுக்க சொல்லல, அவன எப்பையுமே எல்லாத்துக்குமே சின்ன விசயத்துக்கு மொதக்கொண்டு எதிர்ப்பாக்க வேண்டான்னு தான் சொல்றேன்” அழுதுக்கிட்டே இருந்தா ரொம்ப நேரமா.. நா என்ன செய்யனு தெரியாம அவளையே பாத்துக்கிட்டு நிக்குறேன், கையில எடுத்த அந்த ஐநூறு ரூவாய அந்த சேல மடிப்புக்குள்ளேவே வச்சுட்டு..



இந்த வாரம் சனிக்கிழம சாந்தரம் எனக்கு ஃபோன் வந்துச்சி. ஆமா எம்பையன் தான். “எப்பா திருந்தங்கல் தாண்டிட்டேன், பஸ் ஸ்டாண்டுக்கு வந்துறீங்களா?”

“இல்லப்பா அப்பா ஒரு வேலையில இருக்கேன்”

“என்னது வேலையா?”

“ஆமாப்பா நேத்துல இருந்து ஒரு பலசரக்கு கடையில சேந்திருக்கேன்”

“நாந்தான் ஒங்கள வேலைக்கிலாம் போக வேண்டான்னு சொன்னேன்ல?”

“இருக்கட்டும் பரவாயில்லப்பா, பெறகு பேசுறேன், வீட்டுக்கு பாத்து போயிட்டு வா” ஃபோனை வைத்துவிட்டேன்.

நைட்டு வீட்டுக்கு போறப்ப என் பையனுக்கு பிடித்த வேலாயுத நாடார் கடை பக்கடாவும் மிச்சரும் என் காசில் சந்தோசமா வாங்கிட்டு வேகமா என் சைக்கிளை அழுத்திக்கிட்டு இருக்கேன் எங்க வீட்டுக்கு போற பாதையில..

27 comments

  1. அருமை ராம்குமார். உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன். நம்மைப் போன்ற மக்களின் வாழ்க்கையை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். அருமையான எழுத்தாற்றல், இது சிறுகதை அல்ல, வாழ்க்கை. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Ram Kumar.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்.. இது எல்லா வீட்டிலும் கிட்டத்தட்ட நடப்பது தானே?

      Delete
  2. நல்லதொரு படைப்பு. பெரும்பாலோர் வாழ்க்கையில் இது போன்ற தருணங்கள் வரும். கடைசி வரை உழைப்பதே மேல். மகனின் திருமணத்திற்கு பிறகு நிலைமை மாறலாம். மனித உறவுகள் எப்போதும் மாறக் கூடியது.
    www.fetna.org

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.. உறவுகளின் பாசம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலையின் பொருட்டே அமைகிறது.. எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்

      Delete
  3. அன்பின் திரு ராம்குமார்,

    யதார்த்தமான நடை. அருமையான கரு. உள்ளம் நெகிழச் செய்தது. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பவள சங்கரி அவர்களே :-)

      Delete
  4. யதார்த்தமான கதை... பல நினைவுகளை மீட்டியது...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணே.. ஃப்ளேஷ்பேக் & ஃபீலிங்க்ஸ்ஸா? கண்டினியூ..

      Delete
  5. நல்ல நடை.. யதார்த்தம் ..மிக அருமை.

    ReplyDelete
  6. Really Nice.... its very touching one

    ReplyDelete
  7. நல்ல பதிவு நண்பா, கண்கலங்க வைப்பதே உங்கள் வேலையா? இருந்தாலும் இதில்
    மாற்று கருத்து உண்டு.எந்த உரிமையில் சிறு வயதில் இருந்து தன குழைந்தைக்கு எல்லாம்
    செய்கிறார்களோ,அதே உரிமையில் மகனிடம் எதுவும் கேட்க உரிமை இருக்கிறது.அதை செய்ய வேண்டியது ஒவ்வொரு மகனின் கடமையும் கூட. அதே போல் திருமணத்திற்கு பின்னும் இருப்பவன் தான் உண்மையான ஆம்பளை என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து உண்மையில் நல்ல கருத்து தான்.. ஆனால் நிஜம் என்று ஒன்று இருக்கிறதே? நிஜத்தில் பலரும் நீங்கள் சொல்வது போல் இருப்பதில்லையே?

      Delete
  8. மிகவும் அருமையான கதை! அருமையான நடை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி திரு.s suresh :-)

      Delete
  9. யதார்த்தத்தின் அப்பட்டமான பதிவு அன்புக்குரியவர்களுக்கு செய்வதாகட்டும் தான தர்மமாகட்டும்... தன் உழைப்பில் பெற்ற பணத்தில் செய்ய முயல்வதே சிறப்பு. வீட்டுக்குள் இருக்கும் அம்மாவுக்கு உலகம் நன்றாகவே விளங்கியிருக்கிறது.

    பகிர்ந்த ரத்தினவேல் ஐயாவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலாமகள் அவர்களே :-) அம்மா வீட்டிற்குள் இருந்தாலும் எல்லோரையும் விட உலகை அறிந்தவர், மிகுந்த ப்ராக்டிக்கலாக இருப்பவர் அம்மா மட்டும் தான்.. //பகிர்ந்த ரத்தினவேல் ஐயாவுக்கு நன்றி.// அவருக்கும் எப்போதுமே என் நன்றிகளும் உண்டு :-)

      Delete
  10. The reality of middle class family...The feel of Indian father...The coherence of incidences and the narrative superb....well depicted.

    ReplyDelete
    Replies
    1. Thank u so much Mr.Mohamed Adam Peeroli :-) After all we are all sons of Indian fathers only na, so the feel is real and the incidents are good.. Thanks

      Delete
  11. அருமை.... கதை மாந்தர்கள் சொல்வது போல பல வீடுகளில் இது தான் நிதர்சனம்.

    சிறப்பான கதை நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே :-)

      Delete
  12. என் வீட்டில் நடக்கும் கதை. இந்த கதை ஆரம்பிக்கும் போது பஸ் ஸ்டாண்டில் இருந்து கணேஷ் தியேட்டர் வழியாக உங்கள் வீட்டின் வரவேற்பறை , சமயலறைக்கே வந்துவிட்டேன். இழுத்துக்கொண்டேபோய்விட்டாய் உன் நடையில். பல இடங்களில் என் அம்மா அப்பாவை பேசுவது நியாபகம் வந்துவிட்டது. தந்தை ஓரத்தில் இருப்பார் என சொல்லும் போது கண்ணை முட்டிக்கொண்டு அழுகை வந்துவிட்டதுடா.. வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த அருமையான எழுத்து சுகம்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிடா.. இது நம்மை போன்ற முதல் தலைமுறை படிப்பாளிகள் இருக்கும் வீட்டில் நடந்து கொண்டிருப்பது தானே? என்ன தான் வெளியிலேயே திரிந்து ஊர் உலகத்தை அறிந்து கொண்டது போல் பேசினாலும், அப்பா என்பவர் கொஞ்சம் practical knowledge இல்லாதவர் தான்.. வீட்டிலேயே இருந்தாலும் அம்மா தான் practical knowledgeல் பெஸ்ட்.. ரொம்ப நாட்களாக எழுத நினைத்தது, இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது :)

      Delete
  13. நேரில் ஒரு குடும்பத்துடன் சிலநாட்கள் தங்கிய உணர்வு தந்த அருமையான கதை ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா :-)

      Delete
  14. அருமை.. அருமை..

    இன்றைய வாழ்வியலை அப்படியே புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அமைதிச்சாரல் :-)

      Delete
  15. அருமை... நல்ல மொழி ஆளுமை ராம்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One