ஜமீன் கோட்டையும் ஒரு லூசுக்கிழவியும் ..

Thursday, March 10, 2011

இதோ கிராமமா நகரமா என்று புரிபடாமல், உரக்கடையும் செல்பேசி கடையும் அடுத்தடுத்து இருக்கும், கிராமத்து அழுக்கில் இருந்து நகரத்துக்கு தூசிக்கி மாறிக்கொண்டிருக்கும் இந்த வளர்ந்து வரும் நகர கிராமம் தான் சிவகிரி. 

"எலேய், பசிக்குதுடா சோறு போடுங்கடா" - அந்த ஊரின் கல்யாண மண்டப வாயிலில் இருந்த கிழவி கத்திக்கொண்டிருந்தாள். அவள் கத்துவதில் ஒரு பயமோ தயக்கமோ இல்லை. தனக்கு இல்லாமல் சோறு காலியாகிவிடுமோ என்கிற கோபம் மட்டும் தெரிகிறது. 'எலேய்' என்று அவள் கத்துவதில் ஒரு சுதி தெரிந்தது. அந்த வார்த்தையை அவள் ராகம் பாடுவது போல் சொன்னாள். சேலை கட்டி அதன் மீது நைட்டி அணிந்திருந்தாள் அந்தக் கிழவி. நைட்டியை வேட்டி போல் மடித்து கட்டியிருந்தாள். கையில் ஒரு தூக்குவாளியும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலும் இருந்தன. அந்த தண்ணி பாட்டிலில் ஒரு கயிறை கட்டி கையில் தொங்க விட்டிருந்தாள். அவளை பிச்சைக்காரி என்றும் சொல்ல முடியாது. தலைக்கு எண்ணெய் தேய்த்து படிய வாரி கிளிப் மாட்டியிருந்தாள்.

"யேத்தா உனக்கு குடுக்காம வேற யாருக்கு குடுக்கப்போறான் நம்ம சுப்ரமணி? செத்த பொறு" ஒருவன் சொன்னான்.

"எவ்வளவு நேரண்டா பொறுக்குறது? இந்தப்பய ஊருக்கெல்லாம் சோறு போடுறான், எனக்கு ஒரு கை போடவேண்டியது தானடா? நீயும் நல்லா தின்னுட்டு தானடா வந்துருக்க? அவங்கிட்ட சொல்றா" கிழவி யாருக்கும் மரியாதை தரவில்லை.

"சரி நான் சொல்றேன்" என்று கூறிக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

"எலேய் சொல்லிட்டு போடா. டேய் நில்ரா.. அய்யோ.." கிழவி போலியாக அழுதாள். குரலில் அழுகை தெரிந்தது கண்ணில் நீர் வரவில்லை.

"எலேய் அவன் சோறு போடமாட்டேன்னு சொல்லிடான்டா. இன்னைக்கு நான் என்னத்தடா சமப்பேன்?" அந்த கிழவி தன் முரட்டுத்தன்மான கீச்சுக்குரலோடு கத்திக்கொண்டே பேருந்து நிலையத்துக்குள் வந்தாள். நேராக பயணிகளுக்கு போட்டிருக்கும் கல் இருக்கைக்கு அருகில் வந்து, அதற்கு பின்புறம் இருக்கும் கோழிக்கறிக் கடைக்காரனைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"எலேய் நான் கேட்டத போட்டுட்டியாடா? என்னடா பண்ற?" கடைக்காரனிடமும் அதிகார தொனியில் சற்றே கெஞ்சலோடு கேட்டாள்.

"அங்க நின்னு கேட்டாலாம் குடுக்கமுடியாது. இங்க வா தாரேன்" கையில் இருக்கும் கத்தியை அவளை நோக்கி நீட்டி அழைத்தான் கடைக்காரன்.

"நான் வரமாட்டேன்டா. அந்த சனியன் என்ன கடிச்சுரும். அன்னைக்கே என்ன தொரத்தி கீழ தள்ளி விட்ருச்சில்ல? நீயும் பாத்திலடா? மறந்துட்டியாடா?" அவன் கடைக்கு வெளியில் கறியை எதிர் பார்த்துக்காத்திருக்கும் நாயைக் காட்டி சொன்னாள்.

"இங்க வந்தாத்தான் தருவேன் கெழவி" அவன் அவளிடம் விளையாடிப்பார்த்தான்.

"எலேய் நானும் காசுதானடா குடுக்குறேன்? ஓசிலயா வாங்குறேன்? கொஞ்சம் இங்க வந்து குடுடா. அடியே பாப்பா நீயாவது சொல்றி" தன் தந்தையோடு கடைக்கு வந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையப் பார்த்துச் சொன்னாள்.

"ஆமா காசுகுடுத்துக் கிழிச்சா" புலம்பிக்கொண்டே அந்த குழந்தையிடம் கொடுத்து கிழவியிடம் கொடுக்குமாறு கூறினான்.

"இவ்வளவு நேரமாடா? அடேய் கறி வேண்டாம்டா ஈரல் மட்டும் போடுடா.. பாப்பா வேமா வாடீ. குடு குடு குடு.. " குழந்தையிடம் பெற்றுக்கொண்டாள். அந்த பாலித்தின் பைக்குள் பார்த்ததும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.

"எலேய் ஒன்ன என்னடா சொன்னேன்? ஏன்டா என்ன இப்டி அழவைக்குற? நான் போயி சமைக்கணும்டா. துட்டு குடுத்தேன்லடா பன்னெண்டு ரூவா? இப்டி கறியா போட்டு வச்சுரிக்கியேடா? எலேய் உன்னத்தான்டா" மும்முரமாக கறி வெட்டிக்கொண்டிருக்கும் அவனை அழைத்தாள். "எனக்கு ஒழுங்கா ஈரல மட்டும் குடுடா. நான் போயி சமைக்கணும்டா. வவுறு பசிக்குதுடா. எலேய்" கத்தினாள்.

அந்தக் குழந்தை அந்தப் பையை கிழவியிடம் இருந்து மீண்டும் வாங்கி கடைக்காரனிடம் கொடுத்து, அவன் சிறு மாறுதல்கள் செய்தவுடன் கிழவியிடம் மீண்டும் கொடுத்தாள். "திரும்பவும் பாரு.. எலேய்.. இங்க பாருடா, ஈரல்ல கறி ஒட்டிருக்கு. நான் குடுத்த துட்டுக்கு என்னடா மரியாத?"

"யேத்தா அத எடுத்து போட்டு சமைக்க வேண்டியது தான?" பஸ் ஸ்டாப்பில் பீடி பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் சொன்னான்.

"துட்டு குடுத்துருக்கேன்டா துட்டு. நான் சம்பாரிச்சத குடுத்து வாங்குறேன்டா. இப்டி குடுத்தா நான் என்னடா செய்வேன்" அந்த கறி ஒட்டியிருக்கும் ஈரல் துண்டை எடுத்துக்காட்டினாள்.

"சரி, சரி, அதெல்லாம் கழுவி போட்டுக்கோ. உன் பேத்தி நாலு நாள்ல ஊருக்கு வாராளாம்?"

"ஏலேய் என்னடா சொல்ற? ஒரு மாசம் ஆவும்னு சொன்னாலடா எம்மவ?" இவ்வளவு நேரம் கத்திக்கொண்டிருந்த கிழவி இப்போது அமைதியாகப் பேசினாள்.

"ஆமா, உம்மவ போன மாசம் சொன்னா, ஒரு மாசம் ஆவும்னு. நாந்தான லெட்டர படிச்சேன்?"

"ஆமாடா நீ தான படிச்ச? அப்ப அவ நாலு நாள்லயா வாரா?" மீண்டும் கேட்டாள்

"ஆமா. சரி, நீ தான் சமைக்கணும்னு சொன்னில? போ.." அணைந்து போன பீடியை மீண்டும் பற்ற வைத்தான்.

"உனக்கு இவள பத்தி தெரியுமாடா?" இன்னொருவன் பீடி குடிப்பவனிடம் கேட்டான்

"என்னடா சொல்லிட்ட? இவளப்பத்தி எல்லாம் எனக்கு தெரியும். பாக்க பிச்சக்காரி மாரி இருக்கான்னு நெனைக்காத, இவளுக்கு லட்சக்கணக்குல துட்டு வர வேண்டியிருக்கு. அப்டித்தான கெழவி?"

"ஆமா அடுத்த வாரம் ஒரு 18000ரூவா கெடைக்கும்னு அந்த வக்கீலு சொல்லிருக்கான். அதெல்லாம் கெடக்கட்டும் குஜராத்ல இருந்து வரணும்னாலே நாலு நாள் ஆவும்லடா?" கிழவி மனதிற்குள்ளேயே கணக்குப்போட்டு பார்த்தாள்.

"ஆமா, இன்னைக்கு சாந்தரம் கெளம்பிருவா. சரி அந்த வக்கிலு எவ்வளாவு ரூவா தாரேன்னு சொன்னாரு?"

"எவ்வளவு ரூவானா ஒனக்கு என்னடா? நான் எனக்காடா சேத்துவக்கிறேன்? அவளுக்கு தானடா? அவ நல்லா இருக்கணும்னு தானடா நான் இங்க இருந்து அவ கஷ்டத்த எல்லாம் படுறேன்?" எதையோ நினைத்து சொல்ல ஆரம்பித்தவள் டக்கென சுதாரித்து, "சேரிடா நான் போறேன். சோறு ஆக்கணும்"

"பாத்தியாடா கெழவிய? காசப்பத்தி கேட்டதும் கெளம்புறா. யேத்தா நில்லு. வீடு நெலத்த எல்லாம் உம்பேத்தி பேர்லயா எழுதப்போற?"

"அதெல்லாம் எங்க இருகுன்னே தெரிலடா. நீ பாத்தியா? போன வருசம் அந்த சீனிக்கண்ணு என்ன வீட்ட விட்டு பத்தி விட்டுட்டு என் வீட்ல அவேன் வந்து தங்கிகிட்டான்டா. இப்ப நான் அங்க தெரணைல படுத்துக்கெடக்கேன். எல்லாம் போச்சுடா" கிழவி எதையோ நினைத்துக்கொண்டிருப்பவள் போல பேசினாள்.

"சேரி, பேத்திக்கு அடுத்த வாரம் நல்ல கவனிப்பு தான?"

"அவள கவனிக்காம வேற யாரடா கவனிக்கபோறேன்? இந்த வக்கீலு துட்டு குடுத்த ஒடனே அவளுக்கு ஒரு செயினு வாங்கலாம்னு இருக்கேன்டா. ஏன்டா அவ குஜராத்துல நல்லா இருக்கால்ல?"

"நான் என்னத்த கெழவி கண்டேன்? ஆனா அவா இங்க வந்தா தான் நல்லா இருப்பா.. நீ தான் அவள ஒன் தோளுல தூக்கிக்கிட்டு அலஞ்சுகிட்டே இருப்பியே பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி?"

"ஆமாடா அவளுக்கு என்ன ரொம்ப புடிக்கும்டா. இல்ல வேண்டான்டா, அவ அங்கயே இருக்கட்டும். இங்க வந்து அவ என்னப் பாத்த ஒடனே நான் அவள அனுப்பி வச்சுறேன். அவ அங்க இருந்தா தான் நல்லா இருப்பா. இந்தப் பாவமெல்லாம் என்னோடயே போட்டும்டா"

"செரி செரி போயி சோத்த ஆக்கு" அடுத்த பீடியை பற்ற வைத்துக்கொண்டே கிழவியை கிளப்பினான்.

"எலேய் பசிக்குதுடா, சோறு ஆக்கப்போறேன்டா" இவ்வளவு நேரம் அமைதியாக கிழவி இப்போது மீண்டும் கத்த ஆரம்பித்தாள்.

"யார்னே இந்தக் கெழவி. லூசா?" பீடி குடிப்பவனிடம் அருகில் இருந்தவன் கேட்டான்.

"என்னது லூசா? இவளுக்காடா லூசு? இவ வெவரமானவடா?"

"பொறவு ஏன்ணே இப்டி பேசுறா?"

"உசுராவது மிச்சம் இருக்கடுமேன்னு தான்" பீடியை கீழே போட்டுவிட்டு சொன்னான்.

"யப்பா இந்த கெழவி தான் இந்த சிவகிரி ஜமின். இவ புருசன் செத்துப்போனதும் இவ சொத்த எல்லாம் இந்த ஊர்க்காரன் அடிச்சு புடிங்கிட்டான். இந்தா கல்யாணம் நடந்துகிட்டு இருக்கே இந்த மண்டபம், இது தான் இவளொட அரண்மன. புருசன் செத்ததும் இவ லூசு மாதிரி ஆகிட்டா. சரி, லூச எதுக்கு கொன்னுகிட்டுனு விட்டுட்டாங்க. ஆனா இவ லூசு இல்ல."

"அப்டியா? அந்த பேத்தி?"

"இவ மகள பலபேரு சேந்து கெடுத்துட்டாங்கப்பா, சரி பேத்தியவாச்சும் காப்பாத்துவோமேனு இங்க இருந்த ஒரு வேதக்கோயில் பாதர் கிட்ட குடுத்து அனுப்பிட்டா. இப்போ தான் ரெண்டு வருசமா அந்த பொண்ணும் இந்த கெழவிய வந்து பாத்துட்டு போது"

"எதோ வக்கிலு சொத்து காசு பதினெட்டாயிரம்னு?"

"அதெல்லாம் இவளா சொல்றது. இவ பிச்ச எடுத்து தான் சாப்டுறா. பேத்தி வரும் போது மட்டும் அக்கம் பக்கம் கொஞ்சம் காசு குடுத்துட்டு போவா, பாட்டிய பாத்துக்க சொல்லி"

"பாவம்ணே"

"அதான்டா அந்த கெழவியும் நம்புறா. தான் குடும்பம் செஞ்ச பாவம் தான் இத்தனைக்கும் காரணம்னு இங்க இருந்து எல்லா கஷ்டத்தையும் இவளே படுறா. 'சாகுற வரைக்கும் நான் கஷ்டப்பட்டா என் பேத்திக்கு கொஞ்சம் இந்த பாவத்தோட கஷ்டம் கொறயுமே'னு சொல்லி எல்லா கஷ்டத்தையும் தானே படுறா. ஜமீன் பேர்ல இருக்குற 60000ஏக்கரும் இவ புருசன் பேர்ல தான் இன்னும் இருக்கு. ஆனா ஊர்க்காரன் சாப்பிடுறான்"

"இவளும் பேத்தியோட போயிற வேண்டியதுதானே?"

"அந்த பொண்ணும் கூப்பிட்டுகிட்டு தான் இருக்கு. எங்க தான் பேத்தியோட சேந்து இருந்தா அந்தப் பாவம் பேத்திக்கும் வந்திருமோன்னு இவ தனியாவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா."

அந்தக்கிழவி இப்போது கல்யாணவீட்டு வாயிலில் நின்றாள். "எலேய் கொழம்பு இருக்குடா எனக்கு. நானே காசு குடுத்து வாங்கிட்டேன். கொஞ்சம் சோறு மட்டும் குடுடா. எலேய்" மண்டபத்தில் இருக்கும் காவலாளி "அதெல்லாம் ஒன்னும் இல்ல, போடீ வெளில" கம்பை எடுத்துக்கொண்டு விரட்டினான்.

"எலேய் அடிக்காதடா. நான் போயிரேன்டா, அடிக்காதடா"  அவளுக்கு அந்த அரண்மனையில் இருந்து இப்போது தான் விரட்டப்படுவது வருத்தமாகவே இல்லை. அது பழகிப்போய்விட்டது அவளுக்கு. கிழவி அந்த மண்டபத்தை அவளின் அரண்மனையை பார்த்துக்கொண்ட, அதில் இருக்கும் எண்ணற்ற சாபங்களை எண்ணிக்கொண்டே அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்றாள்.

 "எலேய் காசு வாங்குனிலடா பன்னெண்டு ரூவா? அரிசி என்னடா ஆச்சி? எலேய்? நான் சம்பாரிச்ச காசுடா" கிழவி தன் வழகமான கத்தலை ஆரம்பித்தாள், அடிக்கடி அந்த மண்டபத்தை திரும்பிப் பார்த்துக்கொண்டே எப்போது தன் பரம்பரையின் சாபங்கள் முடிவுபெறும் என்று..

11 comments

  1. @ராஜகோபால்: நன்றிங்க..

    ReplyDelete
  2. கிழவி அந்த மண்டபத்தை அவளின் அரண்மனையை பார்த்துக்கொண்ட, அதில் இருக்கும் எண்ணற்ற சாபங்களை எண்ணிக்கொண்டே அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்றாள்.

    ......மனது கனத்து தான் போய் விட்டது

    ReplyDelete
  3. @chitra: நேரில் பார்த்த போது எனக்கு அழுகையே வந்து விட்டது.. இங்கே என்னால் சரியாக அந்த நிகழ்வுகளை படைக்க முடியவில்லை.. மிகவும் வருந்துகிறேன்.. அங்கு ஒரு உணர்ச்சி போராட்டமே நடந்தது.. அந்த கிழவிக்குள் அவ்வளவு சோகம், ஆனால் அவள் வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை

    ReplyDelete
  4. மனது கனத்து தான் போய் விட்டது

    எனக்கும்தான். மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. படிக்கும் போதே காட்சிகள் கண் முன்னே விரிந்தது ...
    அருமையிலும் அருமை சகா

    ReplyDelete
  6. நன்றி டக்கால்டி..

    ReplyDelete
  7. eluthu nadai pidithirukkirathu ... varnanaikal arumai .

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One