50வது பதிவு!!!! - தூர்தர்ஷனில் சிறு வயதில் கவரந்த நிகழ்ச்சிகள்..

Tuesday, March 29, 2011

பலரும் பிளாக் ஆரம்பித்து மாதத்துக்கு 100பதிவுகள் வரைப் போட்டுக்கொண்டிருக்கும் போது, 3வருடங்கள் கழித்து வரும் 50வது பதிவை பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி. 50 நெருங்கிவிட்டதால். என் பதிவுகள் பலவும் பழைமையையும் பழைய நிகழ்வுகளையும் சார்ந்தே அமைந்திருப்பதை நண்பர்களில் சிலர் அறிந்திருப்பார்கள். எனக்கு எப்போதுமே இனிமையான பசுமையான பால்ய காலத்து விசயங்களை அசை போடப்பிடிக்கும். அந்த வரிசையில் என் 50வது பதிவாக சிறு வயதில் தூர்தார்ஷனில் என்னைக் கவரந்த சில நிகழ்ச்சிகளை (தமிழ் & ஆங்கிலம்) இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஜங்கிள் புக்:




சின்ன சின்ன சிட்டுகளாம் என்று தமிழில் ஆரம்பிக்கும் பாட்டு இது.. என் வயதொத்த அனைவரையும் தன்  சந்தோசங்களால் சிரிக்க வைத்த பாலு கரடியையும், பிரிவால் அழ வைத்த மௌக்லியையும், வில்லத்தனத்தால் பயமுறுத்திய ஷேர்கான் புலியையும் எப்படி மறக்க முடியும்? இதன் இரண்டாம் பாகமும் தூர்தர்ஷனில் போடப்பட்டது. மௌக்லி காட்டில் இருந்து ஊருக்குள் வருவது. ஆனால் அது முதல் பாகம் அளவுக்கு என்னைக் கவரவில்லை. அந்தக் காடும் காட்டு விலங்குகளும் சித்திரங்கள் தான் என்றாலும் அவை நம் கண் முன் நின்று நம்மிடமே பேசுவது போல் இருக்கும். ருட்யாட் கிப்லிங் (Rudyard Kipling) இந்தியாவில் நடப்பது போல் இந்தக் கதையை எழுதியிருப்பார். (அவர் இந்தியாவில் பிறந்தவர் தான், ஆங்கிலேயெ ஆட்சியின் போது)


அலிஃப் லைலா:




இந்த நாடகம் ஒவ்வொரு திங்களும் இரவு 9.30க்குப் போடுவார்கள். அரேபிய இரவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மர்மத்தொடர். எனக்கு இதில் வரும் கதாநாயகன் முகம் மட்டுமே நினைவில் உள்ளது இப்போது வரை. பார்ப்பதர்க்கு கண்ணாடி போடாத பாக்கியராஜையும் அனில் கபூரையும் கலந்த கலவை போல் இருப்பார். அவர் கோபப்படும் போது இடது மேல் உதடை உயர்த்தி கோபப்படுவர். இப்போது வரை நான் அதை தினமும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் வலது உதடை மட்டுமே உயர்த்த முடிகிறது. இடது உதடு சொல் பேச்சு கேட்கவில்லை. அதே போல் இந்தத் தொடரில் வரும் இன்னொரு பாத்திரமும் மனதில் உள்ளது. அது கதாநாயகனின் தோழனாக வரும் ஒரு மந்திரவாதி. அவர் ஒரு தோல் பையை எப்போதும் வைத்திருப்பார். தன் உள்ளங்கையை மடக்கி அதில் ஒரு முத்தமிட்டு, கையை விரித்து இவர் உரிய ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்தும் அந்தப் பைக்குள் வந்துவிடும். அதே போல் இவர் ஊதினால் அந்தப் பையில் இருந்து இவர் எது வர வேண்டும் என நினைக்கிறாரோ அது வந்து விடும். ஒரு முறை அவர் தண்ணீரை வெளியிட்டு எதிரிகளை சுற்றிவழைத்து கதாநாயகனைக் காப்பார். அப்போது நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பக்கத்து வீட்டு அக்கா சொன்னது, "பாவிங்க, தண்ணிய இப்படி செலவழிக்குராய்ங்க பாரு" என்று.


சந்திரகாந்தா:


வாராவாரம் ஞாயிறு காலை 9 மணிக்குப் போடப்பட்ட நாடகம். "சந்திரகாந்தா சந்திரகாந்தா அவள் கதையே..." என்று வரும் அருமையான பாடல். சுடச்சுட இட்லி தின்று கொண்டே பார்ப்பதால் டபுள் சந்தோசம். (அப்போதெல்லாம் வாரத்தில் ஞாயிரில் மட்டும் தான் இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் ஐட்டங்கள்.) பிற நாடகங்களைப்போல் இதில் ஆரம்பத்திலேயெ பாடல் வராது. முதலில் ஒரு சிறு முன்குறிப்பு கொடுப்பார்கள், சந்திரகாந்தாவைத் தேடிச்செல்லும் இளவரசன் பற்றி. இடை இடையில் பாடல் வரும். "இந்த சூழ்நிலையிலே இளவரசனின் நினைவிலே உருகுகின்றாள் சந்திரகாந்தா.. உருகுகின்றாள் சந்திரகாந்தா" என்கிற வரியை இப்போதும் முனுமுனுத்து உருகிக்கொண்டிருக்கிறேன். இதில் வரும் எஃகு என்னும் வில்லனும், பண்டிதரும், மறக்க முடியாதவர்கள். அதே போல் சேட்டக் என்னும் குதிரையும் மறக்கவே முடியாத ஒன்று. பல நேரங்களில் நல்லவர்களை எதிரிகளிடம் இருந்து காக்க தக்க சமயத்தில் வந்து நம் வயிற்றில் பாலை வார்ப்பது இந்த சேத்தக் தான்..

சுரபி


ஞாயிறு இரவு 9.30க்குப் போடுவார்கள். அரை மணி நேர நிகழ்ச்சி.  பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி. மிகவும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பழக்க வழக்கங்களைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். அப்படித்தான் நான் Dead Sea பற்றி அறிந்து கொண்டேன், அங்கே யாரும் மூழ்கிவிட முடியாது என்று. டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) நான் தீவிர ரசிகன். தொகுத்து வழங்கும் ஆணின்  பெயர் சித்தார்த் என்று நினைக்கிறேன். இப்போது மதுரை வானொலியிலும் கோடை எப்.எம்.லும் இருக்கும் சுந்தர ஆவுடையப்பனின் குரலுக்கு நான் இவரின் முகத்தையே கற்பனை செய்து கொள்வேன். ரேணுகா மற்றும் அந்த ஆணின் சிரித்த முகமும் அதற்கு கொடுத்த எளிய தமிழ் மொழி மாற்றமும், அவர்களின் உடைகளும் மறக்கமுடியாதவை.

மகாபாரதம்:


இந்த நாடகத்தைப் பற்றி நினைத்தாலே எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் நான் போட்ட சண்டை. அவள் அந்த சண்டைக்குத் தண்டனையாக தனது வீட்டிற்கு இனி மகாபாரதம் பார்க்க வரக்கூடாது என்று சொன்னாள். நானும் அதற்குப் பின் இதைப் பார்த்தது இல்லை. எங்கள் வீடும் ஆச்சி வீடும் பக்கத்துப் பக்கத்து தெருவில் இருந்தன. ஞாயிறு காலையில் என்னை எழுப்பி விட வருவார் இந்த நாடகம் பார்ப்பதற்கு. எழுத்துப் போட ஆரம்பிக்கும் போது கேட்கும் சங்கொலி, நாடகத்தின் இடையிடையில் அண்ட வெளியில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு கம்பீரக்குரல் கேட்கும். அந்தக் குரல் சொல்லும் கருத்துக்கள் எதுவும் புரியாது என்றாலும், அந்தக் குரல் நம்மை வசீகரித்து 'என்ன தான் சொல்றாய்ங்க?' என்று கவனிக்க வைக்கவல்லது..


மேலும் சாந்தி, யுக், ஷக்திமான், ஸ்ரீகிருஷ்ணா போன்ற பலவும் மறக்க முடியாதவை. அதிலும் ஷக்திமானில், இரண்டு கைகளையும் குறுக்காக ஒன்றின் பின்புறத்தை மற்றொன்று பார்ப்பது போல் வைத்து "இருள் நீடிக்கட்டும்" என்று சொல்லும் வசனம் அப்போது எங்கள் பள்ளியில் பிரபலம். தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஆச்சியிடம் என்றைய சாந்தி மற்றும் யுக் கதைகளைப்பற்றி கேட்பேன். சாந்தி கதையை மட்டும் சொல்லுவார். யுக் அவருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது சாந்தி போல குடும்பக்க்கதை  (ஏக் கர் கி ககானி என்று ஹிந்தியில் நாடகம் போடும் போது சொல்வார்கள்) இல்லை. சுதந்திரப் போராட்ட கதை. இன்னொரு முக்கியமான விசயம், 3மணி அவர் தூங்கும் நேரம். 2.30க்கு சாந்தி ஆரம்பித்து 3 மணிக்கு முடிந்து விடும். ஆச்சியும் சாந்தி முடிந்ததும் 4 மணி வரைத் தூங்கிவிடுவார். அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே எனக்கு கடைசி வரைத் தெரியாமல் போனது. !

இதெல்லாம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழிலும் பல நல்ல நாடகங்கள் வந்தன. காத்தாடி ராமமூர்த்தி இயக்கி நடித்த "ஸ்ரீமான் சுதர்சனம்" என்னும் குடும்ப சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம், விவேக்கின் "மேல்மாடி காலி" என்னும் நகைச்சுவை நாடகம். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் போன்று ஒன்று வருமா? வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் இருந்து அழைத்து வரும் அம்மாவிடம் "எம்மா இன்னைக்கு ஒலியும் ஒலியும்ல என்ன பாட்டுலாம் போடுவாங்க?" என்பேன். அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்லுவார் "வால் போஸ்டர் எல்லாம் பாத்துக்கிட்டே வா, இன்னைக்கு என்ன படம்லாம் வந்துருக்குன்னு. அதுல இருந்து தான் பாட்டு போடுவாங்க" என்பார். 

ஆனால் ஒரு முறை கூட அவ்வாறு எங்கள் ஊரில் ஓடும் படத்தின் பாடலை ஒளியும் ஒலியுமில் போட்டதில்லை.. அதே போல் புதன் கிழமைகளில் இரவு 7.20 க்கு ஒளிபரப்பப்படும் "சித்ரகார்" மூலம் தான் "பர்தேசி, பர்தேசி - ராஜா ஹிந்துஸ்தானி", "தூ ச்சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் - மொஹ்ரா"  போன்ற பல ஹிந்திப்படப் பாடல்களும் பிரியமான பாடல்கள் வரிசையில் வந்தன.. தொடர்ந்து பல வாரங்களாக அவர்கள் முதல் பாடலாக பர்தேசி பாடலைத்தான் போட்டார்கள். இப்போது வரை அந்தப்பாடல் ஒரு எவர்கிரீன் தான். தூர்தர்ஷனைப் பற்றி இன்னும் நிறைய இப்படி பேசிக்கொண்டே போகலாம்..

டிஸ்கி : தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது என்ன மாதிரி நிகழ்ச்சிகள் இருந்தது என்று பாருங்கள். வரலாறு மற்றும் அதன் புனைவுகள், இதிகாசங்கள், இலக்கியங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட நாடகங்கள், பொது அறிவு சார்ந்த விசயங்கள் என்று நமக்குக் கற்பிக்க பலவும் இருந்தன. ஆனால் இப்போது கேபிள் சேனல்களில் போடப்படும் நாடகங்களைப் பார்த்தால்........... சரி விடுங்க, அதப் பத்தி பேசுனா வாயில் ரொம்ப அசிங்க அசிங்கமா வரும்..

11 comments

  1. WOW! 50th post! Congratulations!!!! :-)

    ReplyDelete
  2. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள். கேபிள் டிவி வந்துதான் நம்மை சீரழித்தது

    ReplyDelete
  3. உண்மை தான் எல் கே :-(

    ReplyDelete
  4. neenga sollurathula chitrahar mattum irukku.... SUNDAY 8.30 ku. 25 varusama veetla only doordarshan so no tension.

    ReplyDelete
  5. @ஜீவன்பென்னி: அப்படியா? இந்த வாரம் பாக்கணும்.. நன்றி ஜீவன்பென்னி

    ReplyDelete
  6. enakku chandhraganthavum sri krishnaa vum avvvvvlo pudikkum..chandraganthala Dhamdhamthaai ah marakkave mudiyathu.. yenna atha solli than na en thangachiya bayapaduthuven.. aliff laila kooda nyabagam irukku.. Ellathayum viday suda podura Vasantham Colony nadagam romba super ah irukkum Tuituion pora kavalai illadoi nu pattu varum.. atha miss pannitingale..

    ReplyDelete
  7. Anonymous said...

    enakku chandhraganthavum sri krishnaa vum avvvvvlo pudikkum..chandraganthala Dhamdhamthaai ah marakkave mudiyathu.. yenna atha solli than na en thangachiya bayapaduthuven.. aliff laila kooda nyabagam irukku.. Ellathayum vida sunday podura Vasantham Colony nadagam romba super ah irukkum Tuition pora kavalai illadoi nu pattu varum.. atha miss pannitingale..

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One