சித்தப்பா...

Saturday, March 5, 2011

வாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்தேன். இரண்டு செருப்புகள் அதிகமாக இருந்தன. பெண்களின் செருப்பு. ஆனால் வீட்டிற்கு எப்போது பெண் சொந்தக்காரர்கள் வந்தாலும், எங்கள் தெருவே அலறும் படி சத்தம் கேட்கும் வீட்டிற்குள் இருந்து. ஆனால் இன்றோ ஒரு சத்தமும் கேட்காமல் வீடே அமைதியாக இருந்தது. மனதுக்குள் கிலியை உண்டாக்கும் அமைதி. வழக்கமாக ஓடும் மெகா சீரியலும் ஓடுவது போல் தெரியவில்லை. ‘இவ்வளவு அமைதியாக வீட்டை வைத்திருக்கும் அந்த சொந்தக்காரர் யாராக இருக்கும்’ என்று கணித்துக்கொண்டே கதவில் தொங்கவிடப்பட்ட்ருந்த துணியை விளக்கி உள்ளே நுழைந்தேன்.

என் சித்தியும் தங்கையும் வந்திருந்தனர். அவர்கள் இருந்த கோலமும் வந்திருந்த நேரமுமே ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தின. சித்தியின் கண்கள் வீங்கிப்போயிருந்தன. மிகவும் அழுதிருப்பார் என்று நினைக்கிறேன். நான் வந்ததை கூட கவனிக்காமல் கண்களையும் சிமிட்ட மறந்து நேராக சுவரை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். பாப்பா தான் “அம்மா, அண்ணே” என்று சித்தியை உசுப்பி, தன் கண்களால் என்னை காட்டினாள். என்னைப்பார்த்ததும் சித்தி “அய்யோ தம்பி இப்படி ஆகிப்போச்சே?!” மீண்டும் அழ ஆரம்பித்தார். கட்டிலில் அமர்ந்திருந்த தாத்தா “சரி அழாத, ஒன்னும் ஆகிருக்காது” என்றார். ஆச்சியும் “அய்யோ என் மக வாழ்க்க என்ன ஆகுமோ ஆண்டவா” என்று அழ ஆரம்பித்தார். தாத்தா கோபமுடன் ஆச்சியை நோக்கி “இப்போ நீ வாய மூடப்போறியா இல்லையா?” என்றார்.

இந்த களேபரங்களை கேட்டு அம்மா சமையல்கட்டு உள்ளிருந்து வந்தார். என்னைப்பார்த்ததும் மீண்டும் சமையல் செய்ய சென்றுவிட்டார். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் என் சித்தப்பாவை சம்பந்தப்படுத்தி தான் ஏதோ நடந்திருக்கவேண்டும் என எண்ணினேன். ஏனென்றால் இவர் தான் இப்போது வரவில்லை. சித்திக்கும் சித்தப்பாவுக்கும் சண்டை எதாவது இருக்குமோ? யாரிடமும் கேட்க மனது வரவில்லை. மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்து அம்மாவைக் கேட்டேன்.

“என்னமா ஆச்சு? சித்திக்கும் சித்தப்பவுக்கும் எதும் பிரச்சனையா?”

அம்மா யாரும் வருகிறார்களா எனப்பார்த்துக்கொண்டே, “அதெல்லாம் இல்ல. சித்தப்பா யாவாரம் நொடிச்சிப் போயி கடன் தொல்ல தாங்க முடியாம ஓடிப்போய்ட்டாராம்” மெதுவாக சொன்னார்

“சரி, இப்போ எங்க தான் இருக்காராம்?”

“ஒன்னுமே தெரியாது. சித்திட்ட கூட சொல்லாம பொயிட்டாரு. என்ன ஏதுன்னு ஒரு தகவலும் தெரில. ம்ச், என் வாழ்க்க தான் இப்படி இருக்குனா என் தங்கச்சி வாழ்க்க அதுக்கு மேல இருக்கு” அம்மா தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டார். ஆனால் எதற்காக தன் வாழ்கையை நினைத்தும் வருந்துகிறார் எனத் தெரியவில்லை. அப்பா நல்லா தான் கவனித்துக்கொள்கிறார் அம்மாவை. ஆனால் இந்தப் பெண்கள் தான் சதா புலம்பிக்கொண்டே இருக்கிறர்கள்.

சித்தி, அவருக்கு நான் தான் முதல் குழந்தை. பிறகு தான் என் தங்கை எல்லாம். சிறு வயதில் நான் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்தேன். என் அம்மாவை வாரத்துக்கு ஒரு முறை பார்ப்பேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் என் சித்தி முகமும் ஆச்சி முகமும் தான் அப்போது. என் மேல் அவ்வளாவு பாசமாக இருந்தார். எனக்கு 6வயது இருக்கும் போது சித்திக்கு கல்யாணம் ஆனது. அப்போது அவர் என் ஆச்சி தாத்தாவிடம் பிரியாவிடை பெற்றதை விட, என்னை தான் தூக்கி வைத்துக்கொண்டு அழுதுகொண்டே டாட்டா காட்டி என்னை அம்மாவிடம் கொடுத்து சித்தப்பாவோடு சென்றார்.

அப்போது எனக்கு இந்த சித்தப்பாவை பிடிக்கவே இல்லை. ஆனால் விபரம் தெரிய ஆரம்பித்தபோது தான், அவர் எப்படிப்பட்ட உழைப்பாளி குடும்பத்தை எப்படி எல்லாம் முன்னேற்றுகிறார் என்று தெரிந்தது. பார்த்துக்கொண்டிருந்த கூலி வேலையை விட்டுவிட்டு, சொந்தக்காரர்கள் பலரின் எச்சரிக்கையையும் மீறி சொந்தமாக தொழில் ஆரம்பித்தார் விருதுநகரில். ஓஹோவென ஓடியது வியாபாரம். சில இறக்கங்கள் வந்தாலும் பல நேரம் ஏற்றம் தான். வாடகைக்கு இருந்த வீட்டையே விலைக்கு வாங்கி மார்பில் கற்களால் வீட்டை இழைத்தார். எங்கள் சொந்த பந்தத்தில் முதன் முதலாக டி.வி, கார், ஃபிரிட்ஜ், ஃபோன், ஏ.சி எல்லாம் வாங்கியது சித்தி தான். சித்தப்பா மீது தனி மரியாதையே வந்தது.

எங்கள் குடும்பத்தில் எந்த முடிவு என்றாலும் சித்தப்பாவை கேட்டே எடுப்போம். அவரும் மிகவும் சரியான, எல்லோரும் ஒத்துக்கொள்ளும் வகையில் தீர்க்கமான ஒரு முடிவைத்தான் சொல்லுவார். என் மாமா தன் காதலை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொன்ன போது, சித்தப்பா தான் அப்போது அல்லோரையும் சமாதானம் பண்ணி அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். மணநாளின் போது மாமா சித்தப்பா காலில் தான் முதலில் விழுந்து வணங்கினார், பிறகு தான் ஆச்சி தாத்தாவிடம் ஆசிர்வாதம்.

இப்படி சித்தப்பாவின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தன. அப்போது தான் ஆச்சியின் குரல் வந்தது. “இந்த மனுசனுக்கெல்லாம் யாவாரம் தேவயா? பேசாம ஒரு வேலைக்கு போயிருந்தா இப்படி யாருக்கும் பயந்து ஓடிப்போயிருக்க வேண்டிய அவசியம் வந்துருக்காதே?”

“எல்லாம் என் தலயெழுத்தும்மா. இந்த மனுசன் சம்பாதிச்ச எந்த காசையும் சேத்து வச்சதே இல்ல.. எப்போ பாத்தாலும் அனாவசிய ஆடம்பர செலவு தான். ஏங்க நமக்கும் வயசுக்கு வந்த ஒரு பொட்டபிள்ள இருக்கு இருக்குனு படிச்சு படிச்சு சொல்லியும் இந்த மனுசன் இப்படி அறிவில்லாம நடந்து என்ன இப்டி அசிங்கப்படுத்திட்டு போயிடாரு”

“என்னடீ சங்கரி சொல்ற? வீடு இருக்குல?” தாத்தா பதட்டத்துடன் கேட்டார்.

“இல்லப்பா அதெல்லாத்தையும் அடமானம் வச்சுட்டுத்தான் போயிருக்கார். நகையயும் வித்துட்டார். இப்போ என்கிட்ட இருக்குறது இந்த தாலிக்கொடி மட்டும் தான்”

இவ்வளவு நேரம் பொருமையாக இருந்த தாத்தாவுக்கும் இப்போது கோபம் வந்துவிட்டது. “ இதெல்லாம் நீ ஏன் முன்னாடியே சொல்லல? பொண்டாட்டி நகையயும் இருக்குற வீட்டையும் வித்து அப்படி யாவாரம் பண்ணாட்டி தான் என்ன?”

“அவரு எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்னு சொன்னாருப்பா”

“ஆமா அவன் சொன்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு? எங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டா நாங்களாவது சொல்லிருப்போம்ல? இப்போ பாரு எம்புள்ளைய இப்டி நடுத்தெருல நிக்கவிட்டுட்டு பொய்ட்டானே” ஆச்சி சித்தப்பாவிற்கு மரியாதை கொடுப்பதை நிறுத்தினார். வழக்கம் போல புலம்ப ஆரம்பித்தார்.

“வீட்ட குடும்பத்த பாத்துக்க தெரியாதவன் எல்லாம் என்ன ஆம்பள? இவன நம்பி பொண்ண குடுத்தது எங்க தப்பு” – தாத்தா தன் பங்குக்கு சித்தப்பாவை வைய ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்பு வரை வீட்டில் சகல மரியாதையுடன் எல்லா முடிவுகளையும் எடுத்த ஒரு மனிதனின் மரியாதை பணம் இழந்ததால் எந்த அளவிற்கு பாதாளம் வரை சரிந்துவிடும் என்பதை கண்கூடாக பார்த்தேன். மனிதனை விட உறவை விட அவனின் செல்வத்திற்கும் செலவாக்குக்கு மட்டுமே மரியாதையும் மதிப்பும் உண்டு, அது கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களாக இருந்தாலும் சரி.

இவர்கள் யாரும் சித்திக்கு ஆதரவு சொல்வதாக எனக்குத் தெரியவில்லை. அவர் வருத்தத்தை யாரும் பங்கெடுப்பதாகவும் தெரியவில்லை. ஏதோ புலம்ப வேண்டுமே என்பதற்காக புலம்பினார்கள். அப்போது தான் ஃபோன் மணி அடித்தது. மாமா அழைக்கிறார். இவரிடமும் எல்லோரும் புல்ம்ப ஆரம்பித்தனர். எனக்கு அங்கு இருப்பதற்கே எரிச்சலாக வந்தது. என்னடா செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது தான் மோகனா கால் செய்தாள். மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. மெதுவாக ஃபோனை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்றேன்.

மோகனா என் காதலி. கல்லூரியில் என் ஜூனியர். ஃபோனை அட்டண்ட் செய்தேன் “சொல்றா”

“மொத இந்த சேரன் படத்துல வர மாதிரி டா போட்டு பேசுரத நிறுத்துங்க” – நிலைமை புரியாமல் செல்லமாக இவளும் கோபப்பட்டாள்.

“யே, வீட்ல ஆளா இருக்காங்க. அதான் டா னு சொன்னேன். சரி என்ன மேட்டர் சொல்லு”

“ஓஹ் அப்போ வீட்ல ஆள் இருந்தா சார் என்கிட்ட பேச மாடிங்க, அப்டித்தான?”

“அதான் இப்போ உன் கால அட்டண்ட் பண்ணுனேனா? இங்க ஒரு சீரியஸ் விசயம். சரி சொல்ல வந்தத சொல்லு மொதல” சற்று கோபக்குரலில் பேசினேன்.

“எதுக்கு இப்டி எரிஞ்சி விழுரிங்க? சரி சொல்றென். ப்ராஜக்ட் டேட் announce பண்ணிட்டாங்க. Services Marketingல தான் பண்ணப்போறேன். நீங்க தான் எனக்கு எந்த ப்ராஜக்ட்னாலும் சேத்துவிடுறேன்னு சொன்னிங்கல்ல? அதனால நாளைக்கு ஒழுங்கா மதுரைக்கு வந்து எனக்கு ஒரு ப்ராஜக்ட் ரெடி பண்ணானும், சரியா?”

“நிலைமை புரியாம பேசாத. இங்க வீட்ல ஒரு பிரச்சன. என்னால வர முடியுமான்னு தெரியல”

“இங்க பாருங்க, உங்கள நம்பித்தான் நானும் எந்த ப்ராஜக்ட்டும் ட்ரை பண்ணல. நீங்க என்ன பண்ணுவிங்களோ ஏது பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது. நாளைக்கு வரணும், இல்லேனா என்கிட்ட இனிமேல் பேசவே வேண்டாம்” – என் பதிலை எதிர் பார்க்காமல் எதிர் முனை நின்று போனது.

மீண்டும் மீண்டும் அவளை அழைத்தேன். என் அழைப்பை அவள் ஏற்கவே இல்லை. சரி, நடந்தது நடந்து போச்சி, இங்கு இருந்தால் நம்மையும் இவர்களோடு சேர்ந்து சித்தப்பாவுக்கு எதிரியாக்கி விடுவார்கள். எதாவது சொல்லி நாளை மதுரை கிளம்ப வேண்டும் என் எண்ணிக்கொண்டே ஹாலுக்கு வந்தேன். அவர்களும் இப்போது தான் மாமாவிடம் பேசி முடித்திருந்தார்கள்.

“மாமா என்னம்மா சொன்னாங்க?” அம்மாவிடம் மெதுவாக கேட்டேன்.

“இப்போ சித்திய யாரு பாத்துக்கிறதுன்னு அவனும் உங்க அத்தையும் கேக்குறங்க. அவா புருசன் சரியில்லைனா அது அவா வீட்டு பிரச்சனை. இவாரெல்லாம் ஒரு ஆம்பளையானு கேக்குறான். பெத்த பிள்ளையயும் பொண்டாட்டியையும் நடுத்தெருல விட்டுட்டு போயிட்டாராம். இருக்குற செலவுல இவளையும் வச்சுப் பாத்துக்க முடியாது. அதனால சித்தப்பா வீட்டு சைடுல யார்கிட்டயாவது சித்திய அனுப்ப சொல்றான்”

தன் பணத்துக்கு பங்கு வருகிறது, தனக்கு ஒரு பிரச்ச்னை வருகிறது என்றதும் சித்தப்பாவின் மீது பழி போட்டு எப்படி தப்பிக்கத் துடிக்கிறது என் மாமாவின் மனது? அவரை பலிகடாவாக்கி, அவரை முன்னிலைப்படுத்தி இவர் தப்பிக்கொள்ளாப் பார்க்கிறார். “அதுக்கு நீங்க எல்லாம் சம்மதம் சொல்லிட்டிங்களா?”

“அதெப்படிப்பா சொல்லுவோம்? அந்த மனுசன் செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா? இவள எதுக்கு அனுப்புவோம்?” – தாத்தா ஆரம்பித்தார் மீண்டும் சித்தப்பாவை வைய.. ஆச்சி பக்கத்து வீட்டுப் பெண்களிடம் தன் மகளின் சோகத்தை சொல்ல ஆரம்பித்தார். அந்தப் பெண்களும் “மனுசன் இப்படியா செஞ்சுட்டு போவான், படுபாவி” என்று போலியாக துக்கப்பட்டனர்.

அனைவரின் செயலும் எனக்கு வெறுப்பை ஊட்டியது. அவரை இடைமறித்து நான் பேச ஆரம்பித்தேன். “உங்க பையனுக்கும் உங்களுக்கும் சித்தப்பா செஞ்ச எவ்வளாவோ நல்ல விசயங்க எல்லாம் மறந்துபோச்சுல? அந்த ஆளு உங்க பொண்ண நேத்து வரைக்கும் எப்படியெல்லாம் பாத்துக்கிடாரு? சித்தி என்னைக்காவது கஷ்டம்னு வந்து நின்னுருக்காங்களா? இப்போ ஒரு நஷ்டம்னு வந்ததும் எல்லாரும் சேந்து அவரையே வைரிங்க? அவரு உங்களுக்கும் சேத்து தானே செல்வழிச்சாரு? அப்போ எல்லாரும் சேந்து தானே அனுபவிச்சோம்? இப்போ கஷ்டம்னு வந்ததும் அவரை அசிங்மா பேசுரிங்க, சித்திய அவங்க வீட்டுக்கு அனுப்பலாமான்னு யோசிக்குரிங்க. அந்த மனுசன் நல்லா வாழ்ந்தது தான் பெரிய தப்பு. அதான் இப்போ கஷ்டப்படும் போது எல்லாரும் அவர மதிக்க மாட்றிங்க” பட படவென்று பேசினேன் நான். “சரி என்னமும் பண்ணுங்க. எனக்கு நாளைக்கு மதுரைல மீட்டிங் இருக்கு. காலைல சீக்கிரம் கிளம்பணும். நான் தூங்கப்போறேன்”

இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. என் சித்தி என்னும் ஒரு பெண்ணை ஒரு பொறுப்பை என் சித்தப்பாவிடம் 18வருடங்களுக்கு முன்பு கொடுத்தார்கள். இத்தனை காலம் என் சித்தியை அவர் சந்தோசமாக வைத்திருந்தது யாருக்கும் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் ஒருவன் தன் பொறுப்பில் இருந்து தடுமாறும் போது அவன் மீது தான் எத்தனை விமர்சனங்கள்? அவன் அத்தனை நாட்களாக சேர்த்து வைத்த மதிப்பும் மரியாதையும் உறவுகளும் மொத்தமாக அவனை விட்டு செல்கின்றன. சென்றாலும் பரவயில்லை, ஊர் மத்தியில் அவனை அசிங்கப்படுத்துகின்றன. எல்லோருக்கும் அவர்களின் வாழ்க்கையும் பிரச்சனையும் தான் முக்கியம். எவ்வளவு சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்?

மறுநாள் நான் மதுரைக்கு கிளம்பினேன். இன்னைக்குள்ள இவளுக்கு எப்படியாவது ஒரு ப்ராஜக்ட் ரெடி பண்ணிகொடுத்திரணும் என்று முடிவெடுத்துக்கொண்டு கிளம்பினேன். அவல் பெரியாரில் காத்திருந்தாள். மாறி மாறி அலுவலக அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எங்கள் பேச்சுக்கு இடையே இப்படி வரும் தொந்தரவு அவளுக்கு எரிச்சலாக இருந்தது. ஆபிஸ் போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்தாள். அவளோடு எனக்கு மதுரையில் தெரிந்த ஒவ்வொரு நிறுவனமாக சென்று, கடைசியில் ஒரு வழியாக ஒரு மருத்துவமனையில் அவளுக்கு ப்ராஜக்ட் வாங்கிக்கொடுத்து, “I love u so much” என்று அவளின் பாராட்டைப் பெற்று அவளுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு சிவகாசிக்கு பஸ் ஏறினேன்.

அப்போது தான் ஞாபகம் வந்தது, காலையில் இருந்து அணைத்து வைக்கப்படிருந்த என் ஆபிஸ் போன். வேகமாக எடுத்து ஏன் செய்தேன். வரிசையாக மிஸ்டுகால் மெசேஜ்களாக வந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு கால் வந்தது. என் பாஸ் தான் அழைத்தார்.

“என்ன சார், காலைல இருந்து போன் swith off ல இருக்கு? டீலர் எல்லாம் என்ன கூப்பிடுராங்க. என்ன இப்படி irresponsibleஆ இருக்கிங்க? போன ஆஃப் பண்ணி வைக்குற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்திருச்சி, இல்ல சார்?” மிகவும் கோபமாகப் பேசினார் பாஸ்

“சார் அப்படியெல்லா இல்ல சார்.” பயந்துபோய் வரண்டுபோன தொண்டையில் இருந்து கஷ்ட்டப்பட்டு குரலை அழைத்து வந்தேன்.

“பின்ன எப்படி சார்? எதாவது ப்ராப்ளம்னா என்கிட்ட சொல்லிருக்கலாமே?”

“சார் அது வந்து, எங்க சித்தப்பா தொழில் நஷ்டமாகி வீட்ட விட்டு ஓடிப்பொயிட்டாரு சார். சித்தி கொழந்தைங்க எல்லாரையும் விட்டுட்டு ஓட்டிபொயிட்டான் சார் அந்த ஆளு. அந்த ஆளத் தேடி தான் சார் மதுர வந்தேன். இப்படி நடுரோட்ல விட்டுட்டு போறவனா சார் ஆம்பள? அவன நெனச்சா அசிங்கமா இருக்கு சார். குடும்ப மானத்த வாங்கிட்டான் சார். இத நான் எப்படி சார் உங்க கிட்ட சொல்லி பெர்மிஷன் கேக்குறது?”

“அய்யோ, சாரி சார். நீங்க அந்த வொர்க்க பாருங்க. எனக்கு call divert போட்ருங்க. நான் பாத்துக்கறேன். உங்க ப்ராப்ளம் சால்வ் ஆனதும் சொல்லுங்க” பாஸ் தன் கோபம் மறந்து மிகவும் அக்கறையுடன் சீரியஸாக சொல்லிவிட்டு துக்கமாக ஃபோனை வைத்து விட்டார்.

என் சித்தப்பாவை இப்படி மற்றானிடம் பேசிவிட்டோமே என்கிற கவலையை விட, பாஸிடம் இருந்து எப்படியோ தப்பித்தோம் என்கிற திருப்தி எனக்கு அதிகமாக இருந்தது. பேருந்து சிவகாசி நோக்கி, அழுது கொண்டிருக்கும் என் சித்தியை பார்க்க என்னை அழைத்துப்போனது.

6 comments

  1. Mohana, vadamalayan hospital innum marakalaya ram ithellam. good story. Thanimai unna yosikka vekuthunu nenaikuren

    ReplyDelete
  2. என் ப்லாக் விசிட் செய்ததற்கு நன்றிங்க. நீங்கள் குறிப்பிட்ட "பேரை சொல்லவா" பதிவையும் இப்பொழுதுதான் வாசித்தேன். நல்லா எழுதுறீங்க...
    Follow பண்றேன். :-)

    ReplyDelete
  3. @Rajeh: உண்மை தான்..
    @Chitra: நன்றி சித்ரா..

    ReplyDelete
  4. ரொம்ப விருப்பப்பட்டு படித்த கதை. நடையோட்டம் அற்புதம்.

    ReplyDelete
  5. @நேதாஜி: மிக்க நன்றி.. :-)

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One