சாமி காப்பாத்து - சிறுகதை..

Friday, March 29, 2013

குளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும் விருதுநகர் மாரியம்மனின் ஃபோட்டோ முன் நிறுத்தினான். ஃபோட்டோ உயரமாக மாட்டியிருந்ததால் அதன் அருகில் இருக்கும் ஸ்டூலில் நிப்பாட்டினான் வைரமுத்து. அப்பா எங்கேயோ தூக்கிட்டு போகிறாரோ என நினைத்த கண்ணன் சாமி படம் முன் வந்து அவர் இறக்கி விட்டதும், “எப்பா ஸ்கூலுக்கு கெளம்பிக்கிட்டு இருக்கேன், இப்ப எதுக்குப்பா இங்க கொண்டாந்து விட்டீங்க?”னு அலுத்துக்கொண்டே கீழே இறங்கினான்..

“அப்டிலாம் சொல்லக்கூடாதுப்பா.. சாமி கும்பிட்டாத்தான நல்லா படிக்க முடியும்?” கண்ணத்தில் பயபக்தியோடு போட்டுக்கொண்டே வைரமுத்து சொன்னான்.
“எப்பா ஏற்கனவே நாந்தாம்ப்பா ஃபர்ஸ்ட் ரேன்க்கு” ஸ்டூலில் இருந்து இறங்கிவிட்டான் கண்ணன். 

அவனை திரும்பவும் மேலே ஏற்றிவிட்டு, ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியை கொஞ்ச நேரம் மௌனத்தில் போட்டுவிட்டு ”நீ எப்பயுமே ஃபர்ஸ்ட் ரேன்க் தான் அறிவு.. ஆனா பரிச்ச எழுதுறதுக்கு, என் செல்லத்துக்கு நல்ல கை கால் சொகத்த கொடுக்குறது எல்லாமே நம்ம மாரியாத்தா தாம்ப்பா.. மாரியாத்தா தான் ஒன்ன ஃபர்ஸ்ட் ரேன்க் எடுக்க வைக்குறாப்பா. எங்க, அப்பா சொல்ற மாதிரி கும்பிடு பாப்போம்” தன் மகனின் இரண்டு கைகளையும் எடுத்து குவித்து சாமி கும்பிடக்கற்றுக்கொடுத்தான் வைரமுத்து..

“அப்பா சொல்றதலாம் அப்டியே திரும்ப சொல்லணும், என்ன?”

“சேரிப்பா”

கண்ண மூடிக்கோ.. எங்க சொல்லு, “சாமி.. காப்பாத்து”

இறுக்கி கண்ணை மூடிக்கொண்டான், “சாமி காப்பாத்து”

“என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு” - லேசாக கண்களை திறந்து கொண்டு அப்பாவும் கண்களை மூடியிருக்கிறாரா என்று பார்த்தான். அவரும் மூடியிருப்பதை பார்த்துவிட்டு தன் கண்களை மூடிக்கொண்டான்.

“என் கை கால் மேலுக்கு.. எப்பா மேலுனா என்னப்பா?”

“மேலுனா ஒடம்புப்பா.. சரி சொல்லு என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு”

“என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு”

“தம்பி கண்ண மூடுனு சொன்னேன்.. கண்ண மூடிட்டு சொல்லு, நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“எம்மா அப்பா ஏற்கனவே பெரிய ஆளு..ஸ்கூலுக்கு போயி படிக்க போறாங்களாம்” ஏதோ ஜோக் சொல்லிவிட்டதை போல் விழுந்து விழுந்து சிரித்தான் அந்த ஐந்து வயது யூ.கே.ஜி. க்ளாஸ் டாப்பர். அம்மாவிடம் இருந்து பதில் வரவில்லை.. அவளுக்கு இது ரொம்ப பிஸியான நேரம்.. பிள்ளையையும் கணவனையும் கிளப்பி பள்ளிக்கும் வேலைக்கும் அனுப்ப வேண்டுமல்லவா? சமையல் வேலையை அவசர அவசரமாக செய்து கொண்டிருந்தாள் லெட்சுமி.

“தம்பி சாமி கும்பிடும் போது சிரிக்க கூடாது. ஒழுங்கா சொல்லு.. நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“ம் வெரி குட்.. எங்க கண்ண தொறங்க” அவன் நெற்றியில் திருநீரு இட்டு அதை ஊதிவிட்டான் வைரமுத்து. அடிக்கடி வெரிகுட், குட் பாய், ஐயம் ரியலி சாரி என்று தன் பையனிடம் மட்டும் ஆங்கிலம் பேசுவார்கள் வைரமுத்துவும் அவன் மனைவு லட்சுமியும். அதாவது ஆங்கில மீடியத்தில் படிக்கும் பையனுக்கு தாங்களும் ஆங்கிலத்தில் பேசினால் தான் ஆங்கில அறிவு சிறப்பாக வரும் என எண்ணியதால் இருவரும் அப்படி பேசிக்கொண்டிருப்பார்கள்.

“எப்பா சாமி எதுக்குப்பா கும்பிடுறோம்?”

“சாமி தாம்ப்பா நம்ம எல்லாரையும் காப்பாத்துது. நம்ம எல்லாருக்கும் சாமி தாம்ப்பா நல்லது செய்யும். யாரு என்ன தப்பு செஞ்சாலும் சாமி அவங்கள தண்டிச்சிரும்”

“தப்பா?”

“ஆமா.. பொய் சொல்லுறது, மத்தவங்கள அடிக்கிறது, ஸ்கூல்லயும் வீட்லயும் சேட்ட செய்யுறது, சொன்னடி கேக்காம இருக்குறது, நெறையா சீனி சேவு திங்குறது இந்த மாதிரிலாம் தப்பு செஞ்சா சாமி வந்து நைட்டு கண்ண குத்திரும்” வைரமுத்து சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணன் பயத்தில் தன் அப்பாவின் கையை இருக பிடித்துக்கொண்டான்.

“இனிமேல் சேட்ட செய்யாம சொன்னடி கேப்பியா?”
கண்ணனுக்கு அழுகை வருவது போல் இருந்தது, “கேப்பேம்ப்பா” லேசான பயத்துடன் தான் சொன்னான்.. அவனுக்கு சாமியை பிடிக்கவில்லை. ப்ரேமா மிஸ்ஸை விட சாமி மிகவும் கோவமான ஆளாக தெரிந்தது அவனுக்கு. இனிமேல் அப்பா சாமி கும்பிட சொன்னாலும் கும்பிட கூடாது என்று முடிவு செய்துகொண்டான்.

“சரி வா.. ஸ்கூலுக்கு லேட்டாவுது, சாப்புட்டு கெளம்பலாம்.. தேய் சோறு எடுத்துட்டு வாத்தா”. ரேடியாவில் சவுண்டை மீண்டும் வைத்துவிட்டு அம்மாவை அழைத்தார் அப்பா. அப்பா எப்போதும் அம்மாவை வா போ என்று தான் அழைப்பார்.. ஆனால் அம்மா மட்டும் ஏன் அப்பாவை வாங்க போங்க என்று அழைக்கிறார் என்று கண்ணனுக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம். ஆனால் இதை யாரிடம் கேட்பது என குழப்பமாக இருந்ததால் அவன் கேட்டதேயில்லை. ஏற்கனவே நிறைய கிராஸ் கொஸ்டீன் கேட்பதாக அவனை அவன் அம்மா வேறு கண்டித்திருக்கிறார்.

அவர்கள் இப்போது தங்கியிருக்கும் வீட்டை வீடு என்று சொல்ல முடியாது. ஒரே ஒரு பத்துக்கு பத்து அறை. அதில் தான் ஒரு ஸ்டூல், ஒரு பலா கட்டில், ஒரு சிறிய சிமிண்ட் தொட்டி, ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, சில பல பாத்திரங்கள், கொஞ்சம் துணிமணி, நிறைய சாமி ஃபோட்டோ, ஒரு ட்ரான்சிஸ்டர், ஒரு வாட்ச், வைரமுத்துவுக்கு கம்பெனி கொடுத்த ஒரு சைக்கிள் என்று வாழ்ந்துவருகிறார்கள் அந்த மூவரும். படுப்பது, சாப்பிடுவது, உட்காருவது, உறங்குவது எல்லாம் இந்த இடத்தில் தான். இந்த மாதிரி வீட்டில் இருப்பதில் இருக்கும் ஒரே பிரச்சனை வயித்தால போனா அடிக்கடி முள்ளு காட தேடி ஓட முடியாது. நல்ல விசயமும் இருக்கு. ஒன்னுக்கு கூட போக வசதி இல்லாத இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க யாரும் வரமாட்டாங்க. ஆனால் ஒரு நிரந்தர சொந்தக்காரர் வரப்போகிறார் அந்த வீட்டுக்கு. ஆமா கண்ணனுக்கு ஒரு தம்பியோ தங்கையோ சீக்கிரம் விளையாட வந்துவிடுவார்கள். லட்சுமி இப்ப ஆறு மாசம்.

லெட்சுமி வட்டிலில் சோறு எடுத்து வந்து கண்ணனுக்கு மட்டும் கொடுத்தாள். வைரமுத்துவுக்கு வைக்கவில்லை. அவன் கேள்வியோடு தன் மனைவியை பார்த்தான். ”எம்மா அப்பாவுக்கும் சோறு போடுங்கம்மா” விவரம் தெரியாமல் கண்ணன் கேட்டான்.

“இருந்த கொஞ்ச நஞ்ச அரிசில ஒனக்கு தான் சோறு போட முடியும். ஒங்கப்பாவுக்கு இத்தன நாள் சோத்த வடிச்சி நான் என்னத்த கண்டேன்? ஒனக்கு சோறு போட்டாலாச்சும் நீ கடைசி காலத்துல அம்மாவுக்கு மூனு வேள கஞ்சி ஊத்த மாட்டியா? அதான்” சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கண்ணனுக்கு சத்தியமாக அவன் அம்மா என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. எதற்கு அழுகிறாள் என்றும் புரியவில்லை.

“ஏ கொஞ்சம் பொறுத்துக்கோத்தா. கோவப்படாத.. இன்னைக்கு நைட்டு அரிசி, பலசரக்கு சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துறேன். இன்னைக்கு எங்க மொதலாளி கண்டிப்பா அட்வான்ஸ் குடுத்துருவேன்னு சொல்லிருக்காரு”

“நீங்க அட்வான்ஸ் வாங்குங்க, அரிசி வாங்குங்க, பலசரக்கு வாங்குங்க, எனக்கு கவலை இல்ல. ஆனா கடன்காரன எதுக்கு வீடு வரைக்கும் வர விடுறீங்க?”

“என்னது? வீட்டுக்கா? அபப்டியெல்லாம் யாரும் வந்திருக்க மாட்டாங்களே? நான் என்ன அந்த அளவுக்கா வச்சுக்கிடப் போறேன்?”

”சும்மா நடிக்காதீங்க.. கஷ்டத்துல கடன் வாங்குறது எல்லா எடத்துலயும் நடக்குறது தான். அதுக்காக கடன்காரன் வீட்டுக்கு வரது அசிங்கமா தெரில? சோறு திங்கிறோமோ இல்லையோ மொத அவன்ட்ட வாங்குன கடன திரும்ப கொடுத்திரணும்னு அக்கற வேண்டாம் மனுசனுக்கு?”

“சரி சரி இன்னைக்கு நைட்டு அதையும் குடுத்துறேன். பாரு பிள்ள பாத்துக்கிட்டு இருக்கியான். அவனும் சாப்பிடாம இருக்கியான். உன் அழுகைய பெறகு நடத்து. அவன் சாப்பிடட்டும்.. நீ சாப்பிடுப்பா” மகனின் முதுகில் தட்டிக்கொடுத்து அவனை சாப்பிடச்சொன்னான் வைரமுத்து.

கண்ணனுக்கும் அழுகையாக வந்தது ஏனோ. அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை என்பது மட்டும் தெரிந்தது அவனுக்கு. சாப்பிட பிடிக்காமல் அப்படியே இருவர் பேசுவதையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஆமா ஒங்க மொதலாளி குடுக்குற அட்வான்ஸ்ல நீங்க எத்தன வேலையத்தான் செய்யுறீங்கன்னு பாப்போம். வீட்டுக்கு ஆம்பளையானது நாலு காசு சம்பாதிச்சு பொண்டாட்டி பிள்ளைகள சந்தோசமா பாத்துக்கணும். சோத்துக்கு வழி இல்லேனாலும் பரவாயில்ல, கண்ட கண்ட கடன்காரனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கே? இதுக்கா எங்க அம்மாவும் அப்பாவும் என்ன கட்டிக்குடுத்தாங்க? இந்த லட்சணத்துல நமக்கு இன்னொரு பிள்ள வேற.. இருக்குற ஒன்னையே கஷ்டப்பட்டு வளக்க வேண்டியிருக்கு.. நான் என்ன செய்ய?” மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் லட்சுமி.

“அதான் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லுறேன்ல? அப்புறம் எதுக்கு ஒப்பாரி வைக்குற? பிள்ளைய வளக்குறது ஒனக்கு கஷ்டமா இருக்கா?” வைரமுத்துவுக்கு கோவம் வந்துவிட்டது. அப்பாவுக்கு கோவம் வந்தால் என்ன ஆகும் என்று கண்ணனுக்கு தெரியும். அமைதியாக சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“என்னமோ பண்ணித்தொலைங்க. இனிமேல் எவனும் கடன்காரன் வீட்டுக்கு வரக்கூடாது. அவ்வளவு தான் சொல்லிட்டேன். ஒவ்வொருத்தியும் புருசன் கிட்ட அத வாங்கிக்குடு இத வாங்கிக்குடுனு கேக்குறாளுக. நமக்கு அதுக்கு தான் குடுப்பன இல்லேனாலும் கடன் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னா அதுக்கும் குடுப்பன இல்ல.. எல்லாம் நம்ம தலையெழுத்துனு போக வேண்டியது தான். என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ இனிமேல் வீட்டுக்கு எவனும் தேடி வரக்கூடாது, அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“ம் சரி பாத்துக்கிறேன்”. இதற்குள் தனக்கு வைக்கப்பட்டிருந்த கொஞ்சமான சோறை கண்ணன் சாப்பிட்டு முடித்துவிட்டான். அவனுக்கு அம்மா மேல் ஒரே கோவம் அப்பாவுக்கு சோறாக்கி கொடுக்கவில்லை என்று. அரிசி இருந்தால் தான் சோறாக்க முடியும் என்று அவனுக்கு எப்படி தெரியும்? அம்மா தினமும் காலை அப்பாவுடன் சண்டை போடுவதும் அவனுக்கு பிடிக்காது. தன் நல்ல அப்பாவை இந்த அம்மா தான் சண்டை போட்டு கோவப்பட வைக்கிறாள் என்பது அவன் எண்ணம். 

அப்பா அவனை சைக்கிளில் முன்னாடி உட்கார வைத்துக்கொண்டு பள்ளிக்கு கூட்டிப்போகிறார். ”எப்பா கடன்காரங்கன்னா யாருப்பா?” மகனின் இந்த கேள்வியை வைரமுத்து கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவனுக்கு எப்படி சொல்வது? சொன்னாலும் தான் அப்பன் என்கிற மதிப்பு குறைந்துவிடுமே? இன்னொருத்தனின் காசில் தான் தான் உண்ணும் உணவில் இருந்து போடும் ஆடை படிக்கும் படிப்பு என்று எல்லாமே இருக்கிறது என்று தெரிந்தால் இந்த பிஞ்சு மன்சு என்னவாகும்? தன் அப்பாவை பற்றி அதுவும் மட்டமாகத்தானே நினைக்கும்?

“அதாவதுப்பா, இப்ப அப்பாக்கு சம்பளம் போட லேட் ஆகுது.. ஆனா வீட்டு செலவுக்கு காசு வேணும்ல? அதான் அப்பா சம்பளம் போடுற வரைக்கும் ஒன்னொரு ஆள்கிட்ட கொஞ்சம் காசு வாங்கிட்டு வருவேன். அவங்க தான் கடன்காரங்க. சம்பளம் போட்ட ஒடனே அவங்களுக்கு திருப்பி குடுத்துருவேன். புரியுதா?”

“அவங்க எதுக்குப்பா வீட்டுக்கு வாராங்க?”

“அது அப்பா ஃபேக்டரில வேலையா இருக்குறனா அங்க பாக்க முடியாதுல, அதான் வீட்டுக்கு வாராங்க.. சரி சரி வெட்டிக்கத பேசாம, நேத்து நடத்துன குள்ள குள்ள வாத்து பாட்ட படி பாப்போம்..”

“குள்ள குள்ள வாத்து..
குவா குவா வாத்து..
தலையை மெல்ல சாய்த்து..
மேலும் கீழும் பாத்து..” பள்ளி வரும் வரை கையையும் காலையும் தலையையும் ஆட்டிக்கொண்டே பாட்டுப்பாடிக்கொண்டிருந்தான் கண்ணன்.
காலையில் பள்ளியில் விட்டுவிட்டு பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு போய் விடுவான் வைரமுத்து. மதியம் சோறு கொடுப்பது சாய்ந்தரம் பள்ளியில் இருந்து அழைத்து வருவதும் லட்சுமியின் வேலை. அவள் ஒன்றும் சும்மா இல்லை. வீட்டில் அணுகுண்டு டியூப் ஒட்டிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு வாரம் நாள் கடந்திருக்கும். காலையில் வழக்கம் போல் கண்ணன் மட்டும் தான் சாப்பிடுகிறான். அம்மாவோ அப்பாவோ சாப்பிடுவதில்லை. மத்தியானமும் சாப்பிடுகிறார்களா என்று அவனுக்கு தெரியவில்லை. இரவில் மட்டும் கொஞ்சமாக எல்லாரும் சாப்பிடுகிறார்கள். அப்பா சொன்ன கடன்காரர்கள் இன்னமும் வீட்டுக்கு வருகிறார்கள் என்பது கண்ணனுக்கு அம்மாவின் அழுகை மூலமும் அப்பாவின் அரட்டல் மூலமும் தெரிந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதில்லை. 

கண்ணனுக்கு தன் அம்மாவும் அப்பாவும் பேசாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. வீட்டிற்கு வந்தாலே அவனுக்கு அழ வேண்டும் போல் இருக்கும். வீட்டில் வெறும் வானொலி சத்தமும் அம்மா பெட்டி ஒட்டிப்போடும் சத்தமும் மட்டும் தான் கேட்கிறது. யாரும் பேசும் சத்தம் கொஞ்சம் கூட கேட்கவில்லை. கண்ணன் மட்டும் அடிக்கடி அவன் அம்மாவிடமும் அப்பாவிடமும், “எம்மா இன்னைக்கு புது ரைம்ஸ் சொல்லிக்குடுத்தாங்க, படிக்கவா?” “எப்பா நான் ஒரு ரைம்ஸ் பாடுறேன் கேக்குறீங்களா?” என்று ரெண்டு வரி பாடுவான். வழக்கமாக அவனை சிரித்து ஊக்குவிக்கும் அவர்கள் அவனை கண்டுகொள்ளாமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து அவனும் சோகாம ரைம்ஸ் பாடுவதை நிறுத்திவிடுவான்.

கண்ணனுக்கு தன் க்ளாஸில் தன்னுடன் படிக்கும் ஷியாமா, சுந்தர், ப்ரவீன், வர்சினி, ப்ரின்ஸ் இவர்களை போல் தன் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து தன்னை தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு கொண்டு வந்து விட்டு கூட்டிப்போக வேண்டும் என்னும் ஆசை. வீட்டில் யாருமே பேசாமல் இருப்பது அவனுக்கு கவலையாக இருந்தது. ஒரு நாள் மாலை அவன் அம்மாவிடம் ரைம்ஸ் பாடும் போது தான் தன் வீட்டில் இருக்கும் மாரியம்மன் ஃபோட்டோவை கண்டான் கண்ணன். அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, ‘சாமி நமக்கு எப்பயுமே நல்லது தாம்ப்பா செய்யும்’..

மெதுவாக ஸ்டூலில் ஏறி நின்று இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்களை மூடிக்கொண்டு “சாமி காப்பாத்து. எங்க அம்மாவையும் அப்பாவையும் பேச வையி.. இனிமேலு அவங்க சண்டையே போடக்கூடாது, ப்ளீஸ்.. நான் இனிமேலு சீனி சேவுலாம் சாப்பிட மாட்டேன்” என்று வேண்ட ஆரம்பித்துவிட்டான். அவன் சாமியிடம் வேண்ட வேண்ட உதடு துடித்தது, கண்கள் கலங்கின, மூக்கு பெரிதானது.. அழ ஆரம்பித்துவிட்டான். இவன் வேண்டுவது லட்சுமியின் காதில் விழுந்துவிட்டது. அவளும் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு, “ஒங்க அப்பா பொறுப்பா இருந்தா நான் எதுக்குப்பா அவுக கூட பேசாம இருக்கப்போறேன், சரி அழுகாத” என்று கூறி மகனோடு அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். மாரியம்மன் எப்பவும் போல் சிரித்துக்கொண்டிருந்தது.

மாலை வழக்கமாக ஏழு மணிக்கு வரும் வைரமுத்து அன்று மணி ஏழை தாண்டியும் வரவில்லை. லட்சுமியும் கண்ணனும் வாசலில் அவனுக்காக உட்கார்ந்திருந்தார்கள். நேரம் தான் ஆகிக்கொண்டே இருந்தது. ஃபயர் ஆபிசில் வேலை செய்யும் ஆண் தான் வழக்கமாக வரும் நேரத்தில் வரவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதற்கடுத்த நொடிகள் மிக மிக கஷ்டம் கொடுப்பவை. என்னவாகியிருக்குமோ என்கிற பயம் ஏதேதோ தப்புகளை கற்பனை செய்ய ஆரம்பிக்கும் ஆனால் அந்த கற்பனையை கட்டுப்படுத்தவும் முடியாது..

யாரோ சைக்கிளில் வருவது போல் இருந்தது. “எம்மா அது அப்பாவோட சைக்கிள் சத்தம் தான்” சந்தோசமாக சொன்னான் கண்ணன். ஆனால் அருகில் வரும் போது தான் தெரிந்தது, அது கணேசன் என்று. அவன் தான் வைரமுத்துவின் சைக்கிளில் வந்திருந்தான். கணேசன் தினமும் மதியம் வைரமுத்துவிற்கும் அவனைப்போன்று டவுனில் இருந்து வேலைக்கு வரும் பிறருக்காகவும் அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வாங்கி வரும் வேலை பார்ப்பவன். சைக்கிளை நிறுத்திவிட்டு கொஞ்சம் பீதியாகவும், அந்த பீதியை வெளிக்காட்டாமல் இருக்க சிரிக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்தான்.

“என்ன கணேசா அவுக சைக்கிள்ள நீ வந்திருக்க? அவுகள எங்க?” அம்மா கணேசனை பார்த்ததும் வாசலில் இருந்து எழுந்து கொஞ்சம் பதட்டத்துடனும் பயத்துடனும் கேட்டாள். 

“இல்லக்கா இன்னைக்கு ஃபேக்ட்ரி பக்கம் மழை பெஞ்சது. எல்லா வெடியையும் கேஸ் பெட்டில அடுக்கி வச்சிருந்தோம். கேஸ் பெட்டி எல்லாம் மூடாம இருந்துச்சி. மழை வரத பாத்த ஒடனே அண்ணாச்சி வேமா தார்ப்பாய எடுத்துட்டு மூடுறதுக்கு ஓடுனாங்க. கேஸ் பெட்டி மேல ஏறி வேமா தார்ப்பாய விரிச்சி விடும் போது ஒரு கேஸ் பெட்டில இருந்த கத்தி அண்ணாச்சி கணுக்கால்ல நரம்ப வெட்டி விட்டுருச்சிக்கா” வேகமாக, எப்படியாவது சொல்லிவிட வேண்டுமே என்கிற பதட்டத்தில் கணேசன் சொல்லிவிட்டான். கணுக்கால் நரம்பு அறுந்துவிட்டால் ஒரு மனிதன் தன் ஆயுசுக்கும் நடக்க முடியாது.. நொண்டிக்கொண்டே செல்ல வேண்டியது தான்.

“என்ன கணேசா சொல்ற?” லட்சுமி உடைந்துவிட்டாள். கண்ணனை தன் கையோடு அணைத்து இடுப்பில் சாய்த்துக்கொண்டு “இப்ப அவுக எங்க இருக்காக?” என்றாள்.

“இங்க தான்க்கா டவுன்ல நம்ம பிராபகரன் ஆஸ்பத்திரில. ஒடனே ஆபரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம். இந்நியாரம் ஆபரேசன் நடந்துக்கிட்டு  இருக்கும்” கணேசனுக்கும் லேசாக கண்ணீர் வந்திருக்க வேண்டும். கண்கள் எல்லாம் கலங்கியிருந்தன.

“ஆபரேசன் பண்ணுற அளவுக்கு வெட்டுற வரைக்கும் நீங்கலாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? இப்ப நா என்ன செய்யுவேன்?” அவள் அழுகையை  நிறுத்தவே இல்லை.

“எக்கா அழாதீங்க.. வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்” கணேசன் கண்ணனை சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு லட்சுமியோடு சைக்கிளை உருட்டிக்கொண்டே ஆஸ்பத்திரி வரை சென்றான். 

அங்கு வைரமுத்துவை வைத்திருக்கும் அறைக்கு வெளியே ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். “அவர் தான்க்கா மொதலாளி” என்றான் கணேசன். லட்சுமி கத்திக்கொண்டே வரை நோக்கி ஓடி வந்தாள்.. ”அண்ணாச்சி என் வீட்டுக்காரர இபப்டி மூலையில ஒக்கார வச்சுட்டீங்களே அண்ணாச்சி” என்று அவரிடம் கையேந்துவது போல் நின்று அழுதுகொண்டிருந்தாள்.

“ச்சே அப்படியெல்லாம் சொல்லிறாதம்மா.. நாங்க அப்படி விட்ருவோமா? ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சதா டாக்டரு சொல்லிருக்காரு.. நீ ஒன்னும் சங்கடப்படாத.. எல்லா செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல வைரமுத்து எந்திரிச்சு நடந்தே எங்க ஃபேக்டரிக்கு வந்துருவான் பாரேன்” கணேசனிடம் லட்சுமியை உள்ளே அழைத்து செல்லுமாறு சைகை காட்டினார்.

லட்சுமியும் கண்ணனும் உள்ளே சென்றார்கள். வைரமுத்து லேசாக முனகிக்கொண்டிருந்தான். அவனை அப்படி அவ்வளவு சோர்வாக அவள் பார்த்ததே இல்லை.. அவனது வலது கால் தொடையில் இருந்து பாதம் வரை பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. “என்னங்க ஒங்களுக்கு இப்படி ஆகிருச்சே. அய்யோ நான் என்ன பண்ணுவேன்?” என்று வீறிட்டு அழுக ஆரம்பித்துவிட்டாள். 

கண்ணனுக்கு தன் அப்பாவை இப்படிப்பார்க்க பிடிக்கவில்லை. ஒரு சின்ன கத்தி தன் அப்பாவை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்கும் என்று அவனால் நம்பமுடியவில்லை. தன் அப்பா தான் உலகிலேயே பெரிய பலசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தான் அவன். அப்படிப்பட்ட ஒரு பலசாலி இப்படி கிடந்து முனகுவதை பார்க்கும் போதும் அவனாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. முனகிக்கொண்டிருக்கும் வைரமுத்துவின் கை விரலகளை பிடித்துக்கொண்டு, “எப்பா எந்திரிங்கப்பா.. எப்பா வாங்கப்பா வீட்டுக்கு போலாம், எப்பா...” என்று அழுது கொண்டே அவன் கை விரல்களை இழுக்க ஆரம்பித்தான். ஒரு குடும்பத்தில் உழைக்கும் ஆண் நோய்பட்டு படுத்துவிட்டால் அந்த குடும்பமே படுத்துவிடுமல்லவா?


“மேடம் மயக்க மருந்து கொடுத்திருக்கோம்.. அவரு கொஞ்ச நேரம் தூங்கட்டும், தொந்தரவு பண்ணாதீங்க” என்று லட்சுமியையும் கண்ணனையும் வெளியே அழைத்து வந்துவிட்டாள் அங்கிருந்த ஒரு நர்ஸ். லட்சுமி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.

ரெண்டு மூன்று வாரங்களாக கண்ணன் பள்ளிக்கு போகவில்லை. ஆஸ்பத்திரியில் தான் தங்கியிருந்தான் அவன் அம்மாவுடன். தங்கள் வீட்டை விட அந்த ஆஸ்பத்திரி அறை அவனுக்கு பெரியதாக இருந்தது. அடிக்கடி ஆச்சியும் தாத்தாவும் மட்டும் வந்து பார்த்துவிட்டு கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு போவார்கள். முதலாளி ஆஸ்பத்திரி செலவை மட்டும் தானே பார்த்துக்கொள்வார்? சாப்பாட்டிற்கு எதாவது வழி வேண்டுமே? அதனால் தான் தன் அம்மா அப்பா கொடுப்பதை அவள் அமைதியாக ஏற்றுக்கொள்வாள். ஒரு சில கடன்காரர்கள் வந்தாலும் முன்பு போல் பயந்து போகாமல், தைரியமாக, “இப்ப அவுக கொஞ்சம் மேலுக்கு முடியாம இருக்காக, உங்களுக்கு கூடிய சீக்கிரத்துல எல்லா காசையும் கண்டிப்பா குடுத்துருவாக.. இத்தன நாளு பொறுத்துக்கிட்டீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க” என்பாள்.. ஆஸ்பத்திரியிலேயே அணுகுண்டு டியூப் ஒட்ட ஆரம்பித்துவிட்டாள்.

வைரமுத்துவை குளிப்பாட்டுவதில் இருந்து, சோறு ஊட்டி, உடம்பை பஞ்சால் துடைத்து, அவனுக்கு கழுவி விடுவது வரை எல்லாமே பார்த்துக்கொண்டாள். இப்போதெல்லாம் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வதில்லை. வாழ்வில் பெரியதாக ஒரு கஷ்டம் வரும் போது அது வரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் பனித்துளி போல் ஆகிவிடுமே? கிட்டத்தட்ட அவன் காலில் அடிபட்டு ஒரு மாதம் ஆகியும் இன்னும் அவனால் ஒரு பிடிப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. கணவனுக்கு மிக ஆறுதலாக இருந்தாள். கண்ணனுக்கு தன் அம்மாவும் அப்பாவும் இப்போதெல்லாம் சண்டை போடாமல் பேசிக்கொள்வதை மிகுந்த ஆச்சரியமாக பார்த்தான். தான் அன்று சாமியிடம் அம்மாவும் அப்பாவும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என வேண்டியதை நினைத்துக்கொண்டான். அவனுக்கு சாமி மேல் கோவம் வந்தது, தான் வேண்டியதை நிறைவேற்றுவதற்காக அப்பாவை இப்படி ஆக்கிவிட்டதால்.

சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் அந்த மாரியம்மன் ஃபோட்டோவை தூக்கி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக்கொண்டான் கண்ணன். அதை தூக்கி தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்கள் நிறைந்த பொட்டலில் போட்டு விட்டான்.. அந்த வீட்டில் அடுத்து லட்சுமியும் வைரமுத்துவும் சண்டை போடவேயில்லை. கண்ணனுக்கு ஒரு தம்பியும் பிறந்தான். வீட்டில் எப்போதும் சந்தோசமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருந்தது. இந்த சந்தோசத்தின் ஒலிகள் அருகில் பொட்டல் காடில் இருக்கும் மாரியம்மனின் காதிலும் வைழுந்திருக்கும் போல.. எப்போதையும் விட அந்த ஃபோட்டோவில் அதிகமான சிரிப்பு இருந்தது..

36 comments

  1. வணக்கம் சார்.

    எப்பவும் உங்க்அ கதைகலை ரசிக்குரது போள ரசித்தேன், நைஸ் இந்த கதையும்! கண்ணன் கதை பாத்திரம் மணதில் நிண்றது

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி Mahesh சார் :-)

      Delete
  2. அந்த சின்ன பையன்... ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அவனோட உணர்வுகள், அந்த மழலையா அவன் நெனைக்கிறத எல்லாம் சொல்லி இருக்ற விதம்.

    நான் முன்னாடி ஒரு குறும்படம் பாத்தேன் (அது ஆனா வேற மாதிரி கதை), அதுல வந்த சின்ன பையன் எனக்கு இந்த கத வாசிச்சப்போ கண்ணுல வந்தான்.

    நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. //ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அவனோட உணர்வுகள், அந்த மழலையா அவன் நெனைக்கிறத எல்லாம் சொல்லி இருக்ற விதம். // ஏன்னா நானே ஒரு குழந்தைப்பையன் அதான்..
      நன்றி கண்மணி..

      Delete
  3. // வாழ்வில் பெரியதாக ஒரு கஷ்டம் வரும் போது அது வரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் பனித்துளி போல் ஆகிவிடுமே?// true. Very nice.

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தானே? பெரிய பிரச்சனை வரும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன.. பெரிய ஆட்களாக ஆனவுடன் சின்ன வயதில் நடந்ததை மறந்துவிடுகிறோம்.. பெருசு வர வர சிறுசு மறைந்துகொண்டே வரும்..

      Delete
  4. அருமையான சிறுகதை ராம்குமார். நெஞ்சை நெகிழ வைக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் Ram Kumar

    ReplyDelete
  5. இரு கோடுகள் தத்துவம்... நெகிழ்ச்சியான கதையாக...

    வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
    Replies
    1. அது என்னண்ணே இரு கோடுகள் தத்துவம்?

      Delete
    2. இரு கோடுகள் - அது ஒரு பழைய படத்தில் வரும்... (தெரிந்து கொண்டே... இது தானே வேணாங்கிறது... ஹிஹி... அப்படியே நேரம் இருந்தால் பழைய பாடல்களை ரசிக்க வாங்க என் தளத்தில்... அதை விடுங்க...

      உங்கள் தள அறிமுகம் நமது நண்பர் தளத்தில் :

      Visit : http://veeduthirumbal.blogspot.com/2013/04/blog-post_4.html

      காலையிலேயே தெரிவிப்பதற்குள்... வேறென்ன... மின் வெட்டு தான்...

      நன்றி...

      Delete
    3. எல்லோருக்கும் முன்பாக நண்பர் திடங்கொண்டு போராடு சீனு SMS அனுப்பி சொல்லிவிட்டார் அண்ணே.. உங்களுக்கும் ரொம்ப நன்றி :-)

      Delete
  6. நல்ல கதை.. உங்கள் கதைகளில் சின்ன பையன்கள் அதிகம் இடம்பெறுகிறார்கள் - இதுவரை அவதானித்ததில் :-)
    ஒரு ஆலோசனை : நடுவில போடுற வெள்ளைக்கார படங்கள் கதையில் இருந்து கொஞ்சம் அந்நியப்பட்டது போல தோன்றுகிறது. நம்ம கலருல ஒரு சின்ன பையன் சாமி கும்பிடுராப்புல போட்டா இன்னும் நல்லா இருக்கும் :-)
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அந்த சின்னப்பையன் நாந்தான்.. என் சின்ன வயது ஞாபகங்கள் தான் நான் எழுதும் பல கதைகள்.. என் சின்ன வயது அனுபவங்களை வைத்து 10,15 நாவல்கள் எழுதலாம்.. சேரனும் விக்ரமனும் அதை வைத்து பல படங்கள் கூட எடுக்கலாம்.. :P

      //நம்ம கலருல ஒரு சின்ன பையன் சாமி கும்பிடுராப்புல போட்டா இன்னும் நல்லா இருக்கும் :-)// அப்படித்தான் தேடுகிறேன் ஒவ்வொரு கதைக்கும்.. ஆனால் சரியான படங்கள் கிடைப்பதில்லை.. இனி முயல்கிறேன்..

      Delete
    2. //ஹா ஹா அந்த சின்னப்பையன் நாந்தான்.. // நினைச்சேன்.. உங்கள் இந்த வட்டார எழுத்து நடையும் நேட்டிவிட்டியும் நுணுக்கமும் அனுபவம் இருந்தால் மட்டுமே சாத்தியம். நல்லா இருக்கு..

      Delete
  7. கடைசியில் கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன்....ம்...ம்....தீரவில்லையே!

    படிக்கிறவர்களுக்கு அப்போதுதான் ஒரு நம்பிக்கை வரும் இல்லையா?
    வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கதையில் நல்ல முடிவு இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.

    Anyway, பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கதையில் நல்ல முடிவு இருக்க வேண்டும் // ஆனால் வாழ்க்கையே ஒரு கதையாக இருந்தால்???

      //கடைசியில் கஷ்டங்கள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன்....ம்...ம்....தீரவில்லையே!// அந்தக்கதை நடந்த 17 வருடங்களுக்கு பின் அவர்களின் கஷ்டம் பெரும்பாலும் தீர்ந்துவிட்டது.. அந்த மாரியம்மன் இப்போதும் சிரித்துக்கொண்டு தான் இருக்கிறார் Ranjani Narayanan அம்மா :-)

      Delete
    2. ஆனால் வாழ்க்கையே ஒரு கதையாக இருந்தால் :-)

      Delete
    3. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..

      Delete
  8. வணக்கம் நண்பரே ....

    நெடுகிலும் மிகைப்படுத்தாமல் யதார்த்த சொல்லாடல்களை கொண்டு வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை மிக நேர்த்தியாய் சொல்லிய விதம் சிறப்பு ...

    சில சில காட்சிகள் கண்ணுக்கு காட்சியாகின, இதுதான் வெற்றி .. அதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  9. அருமையான கதை சொல்ல வார்த்தைகளில்லை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லோகன்..

      Delete
  10. பதிவிட்ட முதல் நாளே படித்துவிட்டேன், படித்த இடத்தில இருந்து பின்னூட்டம் இட முடியவில்லை, அதன் பின் தொடர்ச்சியாக கணினி உபயோகிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை...

    படிக்கும் பொழுது லேசாய் ஒரு சந்தேகம் இருந்தது இதில் வரும் சில காட்சிகள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம் என்று, பின்னூட்டம் பார்த்து உறுதி செய்து கொண்டேன், காரணம் கதை முழுவதும் எதார்த்தமான வார்த்தைகள்....

    அருமையான கதை...

    தலைவா உணர்ச்சிப் போராட்டங்களில் இருந்து வெளிவந்து டைம்மிஷின் போன்ற ஒரு படைப்பைக் கொடுக்கவும்

    ஆவலுடன்
    உங்கள் வாசகன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா முயற்சி செய்றேன் தல... டைம் மிஷின் மாதிரி வேணும்னா அதுக்கான ஸ்பார்க் எங்கேயாவது கிடைக்கணும்.. பாக்கலாம்.. ஆனா கொஞ்ச நாளைக்கு இந்த மாதிரி கதையில இருந்து லீவ் எடுக்கணும்.. அடுத்த கதை கொஞ்சம் வேறு மாதிரி தான் இருக்கும்.. நோ பீலிங்க்ஸ்.. ஹோக்கே?...

      Delete
  11. //அடிக்கடி வெரிகுட், குட் பாய், ஐயம் ரியலி சாரி என்று தன் பையனிடம் மட்டும் ஆங்கிலம் பேசுவார்கள் வைரமுத்துவும் அவன் மனைவு லட்சுமியும். அதாவது ஆங்கில மீடியத்தில் படிக்கும் பையனுக்கு தாங்களும் ஆங்கிலத்தில் பேசினால் தான் ஆங்கில அறிவு சிறப்பாக வரும் என எண்ணியதால் இருவரும் அப்படி பேசிக்கொண்டிருப்பார்கள்.//
    arumaiyana observation....very nice....

    Ram indha kadahi ya vidunga...general aha enaku oru doubt...namma indian country la oru child pethu valakaeve namma kasta padavendiruku....aanna indha kadhai la adutha oru kolanthaium ready aha irukae...idhu enna yelai manitharkalin apppavi thanam..ennna appadi cheya vendum...thanaku porulathara summai irukum podhu...idhu thevaiya? enaku remba naala indha doubt iruku..idhu ennoda thanni patta karuthu than...just asking???

    ReplyDelete
    Replies
    1. ஒன்றிற்கு மேற்பட்ட பிள்ளைகள் பெற்றுக்கொள்வது என்பது இன்று வரை சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாக இருப்பது தான்.. இது அறியாமையா என்று தெரியவில்லை.. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம் பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல.. அதனால் அவர்களால் பத்து பிள்ளைகளை பெற்றாலும் அனைத்தையும் ஒரேஅன்புடன் வளர்க்க முடியும் :-) நகரங்களில் எப்படி என்று தெரியவில்லை

      Delete
    2. பொருளாதார நிலையை வைத்து ஒரு பிள்ளையுடன் நிறுத்திக்கொள்வது நகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது என்பது என் கருத்து. இதனால் பல பிரச்சினைகள் வருகின்றன. மொத்த கவனமும் ஒரு பிள்ளைக்கே கிடைக்கிறது. கேட்கும் எல்லாமும் கிடைக்கிறது. அதனால் பெரும்பாலான குழந்தைகள் அரகன்ட் (arrogant) ஆக வளர்கின்றன. எல்லாமே தன்னுடையது எண்டேன்னும் மனப்பான்மை வருகிறது. பங்கிடுதல், சகோதர பாசம் எல்லாமும் என்னவென்றே தெரிவதில்லை.. ஆனால் இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் எங்கள் பக்கத்து வீடுகளில் அக்காவுக்கோ அண்ணனுக்கோ ஏதேனும் தின்பண்டம் கொடுத்தால், எங்க பாப்பாவுக்கு ஒன்னு குடுங்க என்று கேட்டுவாங்கிசெல்வார்கள்... இதெல்லாம் பொருளாதாரத்தை தாண்டி வருவது. பத்து பிள்ளை பெறுவது வேண்டுமானால் அறியாமையாக இருக்கலாம். இரண்டு மூன்றேல்லாம் அந்த கணக்கிலே சேராது. எல்லாரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
      -பாரதி.

      Delete
    3. //கேட்கும் எல்லாமும் கிடைக்கிறது. அதனால் பெரும்பாலான குழந்தைகள் அரகன்ட் (arrogant) ஆக வளர்கின்றன// இது மிக மிக உண்மை.. ஒரே பிள்ளையாக வளரும் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.. நினைத்ததை சாதிக்க வேண்டும், அல்லது எதையாவது உடைக்க வேண்டும், யாரையாவது அடிக்க வேண்டும் இது தான் அவர்களின் rule.. ஒரு பிள்ளையாக வளரும் போது அதற்கு தன் மனதில் இருக்கும் விசயங்களை ஷேர் செய்ய ஆள் கிடைக்காது.. என்ன தான் நண்பனாக இருந்தாலும் அவனிடம் குடும்பத்து விசயங்கள் எல்லாவற்றையும் சொல்ல முடியாது.. அப்போது ஒரு உடன்பிறப்பு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தோன்றும்.. உடன் பிறப்புகள் இருப்பது நல்லது..

      Delete
    4. ஆம்.. எல்லாருமே ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் சகோதரத்துவம் என்பதும் புத்தகங்களில் மட்டுமே படிக்கக்கூடிய ஒன்றாகிவிடும். சண்டை போடவாச்சும் ஆள் வேண்டாமா? சண்டை போட்டு பேசாம இருந்தாலும் அவ என்ன செய்யிறா என்று அவளுக்கு தெரியாமல் எட்டி பார்க்கும் அனுபவம் இன்றைய குழந்தைகளுக்கு புரியுமா என்று தெரியவில்லை..

      Delete
    5. ஆம்.. உண்மையான குழந்தை பருவத்தை இன்றிருக்கும் குழந்தைகள் இழந்து கொண்டிருக்கின்றன.,. வயதுக்கு மீறிய திணிப்புகள் தான் அவர்களின் மீது நடக்கின்றன.. பாவம்..

      Delete
  12. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி @Asiya Omar... :-)

      Delete
  13. மிக அருமையான சிறுகதை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One