மதுரை....

Wednesday, December 4, 2013




ஒவ்வொரு வாரமும் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் போது என் கண்ணில் பட்டுவிடும் காட்சி அது.. மதுரை மாட்டுத்தாவணியை தாண்டி திருமங்கலத்தை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு சிறிய ஏர்போர்ட். அங்கு தினமும் விடிகாலையும், மாலையும் ஒன்றிரெண்டு ஏரோப்பிளேன்கள் வந்து போகும். மாலையாகிவிட்டால், குழந்தை முதல் குடும்பம் முழுவதும் ஏதோ திருவிழா தேர் பார்ப்பது போல் கூட்டமாக விமான நிலைய காம்பவுண்ட் சுவர் அருகில் வந்துவிடுகிறார்கள். ஆசை ஆசையாய் விமானம் கிளம்புவதை பார்க்க காத்திருக்கிறார்கள். அவர்களின் அந்த அனுபவத்திற்கு மேலும் இனிமை சேர்க்க ஐஸ் க்ரீம் வண்டிகளும், சோளக்கருது வண்டிகளும், பலூன்காரரும் பாடுபட்டுக்கொண்டிருப்பார்கள். விமானம் கிளம்புவதை அண்ணாந்து பார்த்து மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். மீண்டும் மறுநாள் அதே நேரம், அதே இடம், அதே காத்திருப்பு, அதே மகிழ்ச்சி.. இது தினமும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே நடக்கும் சங்கதி தான். இன்னமும் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை கூட நிறுத்தி நிதானமாக ரசித்து, வாழ்வை அனுபவத்து வாழும் மக்கள் இருப்பதால் தான், வாழ்வை நிதானமாக ரசித்து வாழ நினைக்கும் பலருக்கும் பிடித்த ஊராக இருக்கிறது, மதுரை.

சிவகாசிக்கு அடுத்து எனக்கு பிடித்த, வீட்டில் இருப்பது போன்ற நிம்மதியை பாதுகாப்பு உணர்வை கொடுத்தது, கொடுப்பது மதுரை தான். “மதுரைல சுத்துன கழுத கூட வீடு வந்து சேராதுடா” - நான் முதல் முதலாக மதுரைக்கு போகிறேன் என்ற போது என் தாத்தா சொன்ன வாக்கியம் இது. ’என்னடா இது நம்ம தாத்தா ஓவர் பில்ட்-அப் குக்குறாரு?’ என ஆச்சரியப்பட்டுப்போனேன்.. ஆமாம், அவர் பொதுவாக எதையுமே பாராட்ட மாட்டார்.. எனக்கு தெரிந்து அவர் காமராஜருக்கு பிறகு positiveஆக சர்டிஃபிகேட் கொடுத்த ஒரே விசயம் மதுரை தான். வீட்டை விட்டு முதல் முறையாக தனியாக வெளியில் மூன்று நாட்கள் தங்க போகிறோம் என்கிற பயம் இருந்தாலும், தாத்தாவே பாராட்டு பத்திரம் கொடுத்ததால், மதுரையை நோக்கி ஓரளவு தைரியமாகவே போனேன். அப்போது எனக்கு தெரியாது மதுரை எனக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கப்போகும் ஊர் என்று.



அப்பா, தாத்தா, வேத ராஜா சார் என்று பலரிடமும் சிவகாசியில் இருந்து பல்கலைக்கு போக பஸ் ரூட் எல்லாம் கேட்டு பாக்கெட் டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன். மதுரை கிளம்பும் அந்த சுபயோக சுக தினத்தில் அதிகாலை அவசர அவசரமாக கிளம்பும் போது அந்த பாக்கெட் டைரியை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டது, நான் திருமங்கலம் வந்து இறங்கிய போது தான் உரைத்தது. செல்ஃபோன் எல்லாம் அப்போது (7,8 வருடங்களுக்கு முன்) நான் சினிமாவிலும் சாலையில் ஒன்றிரெண்டு பேரிடமும் பார்த்ததோடு சரி. வீட்டிலும் ஃபோன் கிடையாது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நான் மட்டும் தனியாக அந்த ஊருக்கே சம்பந்தம் இல்லாமல் நின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்தது. என் பக்கவாட்டில் யார் என்றே தெரியாத ஒரு ஜீவனின் முரட்டு குரல் கேட்டது, “டேய் தம்பி ஏன்டா அழுகுற?”

“யுனிவர்சிட்டிக்கு போணும்ணே.. எப்படி போணும்னு தெரில” சொல்லும் போதே அழுகை இன்னும் ஜாஸ்தியானது.

“எலேய் இதுக்கெல்லாமாடா அழுவாய்ங்க? இரு இரு இப்ப சோழவந்தான், செக்கானூரணி போற பஸ்ஸு வரும்” என்று சொல்லிவிட்டு என் கூடவே காத்திருந்தார். அரைமணிநேரத்தில் செக்கானூரணி செல்லும் பேருந்து வந்ததும், என்னை அதில் ஏற்றிவிட்டு, “இங்காரு இது நேரா செக்கானூரணி போவும்.. அங்க எறங்கி மதுரைக்கு போற பஸ்ஸு எதுல ஏறுனாலும் அது யுனிவர்சிட்டி வழியாத்தான் போவும், என்ன? சரியா?” என்றார். 

“சரி.. நீங்க செக்கானூரணி வல்லயா?”

“ஓய் நான் தெக்குவாசல் போணும்டா, ஒன்ன கரெக்ட்டான பஸ்ஸுல ஏத்தி விடணும்னு தான் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தேன்.. நீ அழுகாம போ” என் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு போய்விட்டார்.. அந்த ஜன நெருக்கடியில் பேருந்தை விட்டு இறங்கிய சில நொடிகளிலேயே அவர் கரைந்து விட்டார். அவரைப்பார்த்தால் வேலை வெட்டி இல்லாதவன் போன்றும் தெரியவில்லை. அவரின் வேலைக்கு நடுவிலும் ஒரு விபரம் அறியாத சிறுவனுக்கு அரைமணிநேரம் ஒதுக்கி தைரியம் கொடுத்திருந்தார் அவர். அவரின் அந்த கம்பீர அதட்டல் குரல், கறுத்த தேகம் (என் அளவுக்கு கறுப்பு இல்லை), சஃபாரி ட்ரெஸ், கையில் கோல்டு வாட்ச், முறுக்கிய மீசை, பவுடர் முகம் என எதையும் என்னால் இப்போது வரை மறக்க முடியவில்லை. யார் என்றே தெரியாத ஒரு ஆள், பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் ஒரு பையனுக்காக அரைமணிநேரம் காத்திருந்து பஸ் ஏத்திவிட்டு, வழி சொல்லி அக்கறையாக அனுப்பி வைப்பது மதுரையில் மட்டும் தான் நடக்கும். அந்த மனிதன் தான் என்றில்லை, மதுரையில் பலரும் அப்படித்தான்.

நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவை அடைந்து, அந்த ஏரியாவில் எந்த தெரு என  சரியாக தெரியாமல் திணறிக்கொண்டிருந்தால், அங்கிருக்கும் யாரிடமாவது கேட்பேன்... சைக்கிளோ, பைக்கோ, அல்லது நடந்தோ கூட என்னுடன் வந்து சரியான தெருவிற்கு என்னை கையோடு அழைத்து சென்றவர்கள் தான் பலரும்.. மற்ற ஊர்களில் எல்லாம், ’அப்டியே லெஃப்ட்ல திரும்பி செகண்ட் ரைட்ல ஒரு கட் வரும் நேரா போயி அங்க ஒரு ஆலமரத்துல முட்டும், அதுல இன்னொருக்க லெஃப்ட் எடுத்து.............’னு கூகிள் மேப் போட்டு காட்டுவார்கள். ஆனால் நம் தேவையை தன் தேவையாக நினைத்து கூடவே இருந்து உதவுவதில் என்றுமே மதுரைக்கார மக்கள் தான் முதலில் இருப்பார்கள். பண உதவியோ, அல்லது வேறு உதவியோ, எனக்கு இதுவரை கிடைத்தது பெரும்பாலும் மதுரைக்கார நண்பர்களிடம் இருந்து தான்.

நீங்கள் விடிகாலை, நடு ராத்திரி, பட்டப்பகல் என எப்போது போய் மதுரையில் இறங்கினாலும், அங்கு அருகிலேயே ஏதாவது ஒரு கடையில் நிச்சயமாக சுட சுட புரோட்டா தயாராகிக்கொண்டிருக்கும். இன்றும் ரெண்டு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும் ஒரே ஊர் மதுரை தான் எனக்கு தெரிந்து. 4 வருடங்களுக்கு முன்பு வரை கூட நான் ’ஒத்த ரூவா இட்லி’ சாப்பிட்டிருக்கிறேன் மதுரையில். இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை. சிவகாசியில் நான் கல்லூரி படித்த காலத்தில் பாதி நாட்கள் மதுரை காமராஜர் பல்கலையில் தான் கிடப்பேன் அந்தப்போட்டி இந்தப்போட்டி என்று. மதுரை காமராஜ் பல்கலைக்கு வெளியே இருக்கும் கிராமம் வடபழஞ்சி.. நாங்கள் போட்டிகளுக்காக பல்கலை செல்லும் போதெல்லாம் பல்கலை கேண்டினை தவிர்த்துவிட்டு வடபழஞ்சியில் தான் சாப்பிடுவோம்.. 15ரூபாய்க்கு மட்டன் குழம்பு எங்கு கிடைக்கும்? அங்கு ஊற்றுவார்கள் கறியுடன். கறி பீஸ் எல்லாம் நாம் போகும் போது காலியாகிவிட்டால், நம்மிடம் அந்த கடைக்காரர் கெஞ்சும் தொனியில் பல முறை சாரி கேட்பார்.. கறி இல்லாத மட்டன் குழம்பை ஊற்றி விட்டு அதற்கான காசும் வாங்க மாட்டார். ரயிலடியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அந்த வெக்கை காற்றில் நல்லி எலும்பை உறிந்து கொண்டிருப்பதின் சுகமே தனி தான். 



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் - என் வாழ்வில் நான் மறக்க முடியாத இடம். நீங்கள் உங்கள் காதலியை எங்கு சந்தித்திருப்பீர்கள்? தியேட்டர், கோயில், ரெஸ்டாரெண்ட், ஏன் பஸ் ஸ்டாண்டில் கூட சந்தித்திருக்கலாம். உங்கள் காதல் காலத்தில் எத்தனை முறை சந்தித்திருப்பீர்கள்? குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது இருந்திருக்குமல்லவா? என் 4 வருட காதலில் நான் அவளை சந்தித்திருந்தது வெறும் 6முறை தான். அத்தனை முறையும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், மெரினா ஓட்டலுக்கு அருகில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில்..

பென்ச்சில் ஒரு மூலையில் நானும் இன்னொரு மூலையில் அவளும் அமர்ந்திருப்போம். அவள் உட்கார்ந்திருக்கும் அழகிலேயே தெரிந்துவிடும், ‘யார் கண்ணிலும் பட்டுவிடாமல் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்’ என்கிற சங்கடம். அவள் அன்று சமைத்த சப்பாத்தியை ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வந்திருப்பள் எனக்காக. அந்த பென்ச்சில் சர்ரென என் பக்கம் அதை தள்ளி விடுவாள். வெறும் சப்பாத்தி மட்டும் தான் இருக்கும். “என்ன ரானு வெறும் சப்பாத்தி தான் இருக்கு? குருமா, சட்னி எதுமே இல்லயா?”

“நான் சப்பாத்தி மட்டும் தான் சமைச்சேன். குருமாலாம் அம்மா வச்சாங்க.. அதான் அதை எடுத்துட்டு வரல. நான் சமைச்சத மட்டும் நீங்க சாப்பிட்டா போதும், சரியா?” அந்த பதட்டத்திலும் பயத்திலும் கூட என்னை அரட்டுவாள் அவள். ’சர்தான் போடீ’ என கெத்தாக மனதிற்குள் நினைத்துக்கொண்டு, தண்ணீர் தவித்தாலும், விக்கல் எடுத்தாலும் அத்தனை சப்பாத்தியையும் குருமா, சட்னி என எந்த சைடு டிஷ்சும் இல்லாமல் நான் விழுங்கித்தொலைய வேண்டும் என்பது என் அப்போதைய விதி.. சப்பாத்தி சாப்பிட்டு முடியும் வரை தான் எங்கள் நேரம். சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்பிவிடுவாள். சாப்பாத்தி டப்பாவை அவளிடம் இருந்து வாங்கி அதை சாப்பிட்டு முடிக்கும் நேரத்திற்குள் பேசுவது தான் எங்கள் காதல் வார்த்தைகள். குடும்ப ஃபோட்டோ, அவள் project சம்பந்தமான சந்தேகங்கள், வீட்டு பிரச்சனைகள், கல்லூரி கலகலப்புகள், என அவள் வரிசையாக ஒப்பித்துக்கொண்டிருப்பாள். நான் சப்பாத்தியை மென்றுகொண்டிருப்பேன். நான் சப்பாத்தி டப்பாவை காலியாக்கும் போது “அப்புறம், வேற என்ன?” என்பாள். அதற்கு அர்த்தம், ‘நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சிட்டேன், என் டிஃபன் பாக்ஸை குடு நான் போகணும்’ என்பதாகும். அதிக பட்சம் 15 நிமிடங்கள் பேசியிருப்போம். சின்ன சின்ன கிஃப்ட், சில சமயம் ஏதாவது கோபம் என்றால் ஒன்றுமே பேசாமல் அவள் சப்பாத்தி டப்பாவை என் பக்கம் தள்ளுவாள். நானும் ஒன்றுமே பேசாமல் அதை தின்று முடித்து அவள் பக்கம் தள்ளுவேன், அவள் கம்மென்று அதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். 

4 வருடங்கள், வெறும் ஆறே ஆறு சந்திப்புகள் என்றாலும் அந்த சந்திப்புகளின் இனிமை, படபடப்பு, த்ரில், தந்தி போல் பேசிக்கொண்ட வார்த்தைகள், என அத்தனையும் இப்போதும் நினைவில் உள்ளன. தினமும் ஃபோனிலும் மணிக்கணக்கில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த பக் பக் மாட்டுத்தாவணி நிமிடங்கள் தான் அப்படியே இருக்கின்றன இன்னமும் மனதில். அவள் வீடு பெரியாருக்கு அருகில். நானும் அவளை பார்த்து விட்டு பெரியார் வழியாகத்தான் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவள் போகும் பஸ்ஸில் நான் போகக்கூடாது. நான் அவளுக்கு  முன்பே கிளம்பி பெரியாருக்கு போய் காத்திருக்க வேண்டும். அவள் அடுத்த 5நிமிடங்களில் வருவாள். பத்தடி தூர இடைவெளியில் என்னோடு எதிர்ப்புறம் இருக்கும் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து நான் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் ஏறுவதை தூரத்தில் இருந்து கவனித்து விட்டு செல்வாள். எங்கள் அடுத்த சந்திப்பு நிகழப்போகும் அடுத்த 6மாத சொச்ச நாட்களுக்கு இந்த நினைவுகளே போதும் போதும் என்கிற அளவிற்கு மனம் திருப்தியாக இருக்கும். 

இப்போதும் அவள் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கிறாள் தினமும் குருமாவுடன், அமெரிக்காவில் தன் கணவனுக்காக...




மதுரை காமராஜர் பல்கலையில் நடந்த தென்னிந்தய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான youth festivalல் நாங்கள் காமராஜர் பல்கலை சார்பாக கலந்து கொள்ள சென்றிருந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். நாங்கள் பங்கேற்ற Quiz முதல் நாளே முடிந்து விட்டதால் அடுத்த மூன்று நாட்களும் கேரளம், ஆந்திரம், கன்னடம் ஒவ்வொரு மாநில பல்கலையின் பெண்கள் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தோம் ஜாலியாக.. இங்கு நாங்கள் நாங்கள் என குறிப்பிடுவது ஏதோ 10,12 பேரை அல்ல. நானும் அனீஷ் என்னும் என் மாப்புவும் தான்.. அவனும் மதுரைக்கார பயல் தான். நாங்கள் follow செய்த ஒரு பெண்கள் கும்பல் மிமிக்ரி போட்டி காண போனதால் நாங்களும் மிமிக்ரி போட்டி நடக்கும் அரங்கினுள் நுழைந்தோம். அப்போது மேடையில் ஒரு பையனை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். மைக்குக்கு அருகில் நிற்க வைத்தார்கள். கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தான் அவன். மைக்கை மெதுவாக தொட்டுப்பார்த்தான் அவனிடம் இருந்து அது எவ்வளவு தூரத்தில் நின்றுகொண்டிருக்கிறது என அறிந்து கொள்ள.. இரண்டு முறை அதை டொக் டொக் என்று தட்டிவிட்டு ஆரம்பித்தான். அனைவரும் சினிமா நடிகர், கிரிக்கெட் வீரர் என செய்ததையே செய்ய, அவன் மட்டும் வித்தியாசமாய்,மனித குரல்களை மிமிக்ரி செய்யாமல், பறவைகள், விலங்குகள், நம்மை சுற்றி இருக்கும் ஒலிகள் என அனைத்தையும் துல்லியமாக மிமிக்ரி செய்தான். அவன் மிமிக்ரியை முடித்த போது அரங்கம் முழுவதும் ஒரு விதமான பயங்கர அமைதி நிலவியது. பின் மெதுவாக எழுந்த கைதட்டல் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் தொடர்ந்தது. கைதட்டல் எல்லாம் ஓய்ந்து முடிந்ததும் அவன் சார்ந்த பல்கலையின் பெயரை சொன்னார்கள்.

கண்ணனூர் யுனிவர்சிட்டி அது. நானும் அனீஷும் ஒருவரை பார்த்து ஒருவர் ஈஈஈ என இளித்துக்கொண்டோம். ஏனென்றால் கேரளத்துப்பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அப்போது ஒரு சபதம் போட்டிருந்தோம் (அனீஷ் இப்போதும் அந்த சபதத்தை கை விடவில்லை). அந்த பையன் மூலம் எங்கள் சபதத்தை சாதிக்க வாய்ப்பிருக்குமா என இருவரும் ஒரே நேரத்தில் நினைத்ததால் வந்த சிரிப்பு அது. வேக வேகமாக போய் அந்த பையனுக்கு கை கொடுத்து அவனை நண்பனாக்கி கொண்டோம். அடுத்த மூன்று நாட்களும் அவனுடனேயே சுற்றி, அவனுடனேயே உண்டு, கடைசி நாளில் அவனை ரயில் ஏற்றி விடும் வரை அவனுடன் தான் இருந்தோம், அவனுடன் மட்டும் தான் இருந்தோம் வேறு எதைப்பற்றியும் அவனிடம் கேட்காமல். பெண்களை பற்றிக்கூட நினைக்க விடாத ஒரு கலகலப்பான மனிதன் அவன். அவனோடு பேசிக்கொண்டிருக்கும் போது உலக அழகியே வந்தால் கூட கண்டுகொள்ள மாட்டோம், அப்படி பேசுவான். தமிழ் சினிமா மிகவும் ரசித்து பார்ப்பான் அவன். இன்று வரை தொடர்பில் இருக்கும் அவன் உடன் பிறந்தோர் இரண்டு பேர். அவர்களுக்கும் கண் தெரியாது. வரலாற்றில் M.Phil முடித்துவிட்டு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். மதுரை எனக்களித்த நல்ல மனிதர்களில் அவன் ஒரு முக்கியமான ஆள்.

மீனாட்சி அம்மன் கோயில் சிற்பங்களை பற்றி அவனிடம் கூறி, அவன் கைகளை என் கைகளால் பற்றி, அந்த சிற்பங்கள் மீது அவற்றை தவழ விட்டு, சிற்பங்களை அவன் கைகளால் ரசித்து சிரித்த அந்த நொடி, உண்மையிலேயே தெய்வீகத்தை கண்ட நொடி. மீனாட்சி அம்மன் கோயிலை ஒரு கண் தெரியாதவன் ரசித்தான், அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது இப்போதும் உடம்பு புல்லரிக்கும்.

மதுரைக்காரனாக இல்லாமல், அங்கு வந்து போகும் ஒரு விருந்தாளியாக அந்த ஊரோடு நல்ல அனுபவம் இருக்கும் எனக்கே இப்போதெல்லாம் சினிமாக்களில் காட்டப்படும் மதுரையை பார்க்க பார்க்க அந்தப்படம் எடுத்தவர்கள் மீது கோபமும் வெறுப்பும் தான் வருகிறது. எவனோ ஒருத்தன் மதுரையை ரவுடிகளின் கூடாரமாக சித்தரித்து போய்விட்டான். அதற்கு பின் வரிசையாக ஒவ்வொருவரும் மதுரை என்றால் வெட்டு, குத்து, கொலை என்றே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சினிமாவில். இதுவரை 8 ஊர்களில் பிழைப்பிற்காக இருந்திருக்கிறேன். நான் பார்த்தவரை அன்பும், கரிசனமும், பாசமும், மனிதனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் ஒரே ஊர் என்றால் அது மதுரை மட்டும் தான்.

என் வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்களையும், மனிதர்களையும், அனுபவங்களையும் கொடுத்திருக்கும் ஊர் தான் மதுரை. மிக மிக சாதாரணமான, அன்றாட வாழ்க்கையை நிதானமாக ரசித்து வாழும் மக்கள் நிறைந்த ஊர் அது. இப்போது எனக்கும் அந்த ஊருக்கும் இருக்கும் ஒரே பந்தம், நான் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் போது, மதுரை வழியாக செல்வது மட்டும் தான். சமீபத்தில் நண்பனின் திருமணத்திற்கு மதுரை சென்றிருந்தேன். இரவு 12 மணி, நண்பனின் உறவினர் என்னை மாட்டுத்தாவணியில் வந்து அழைத்துப்போவதாக சொல்லியிருந்தார். நான் மெரினா ஓட்டலுக்கு முன் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தேன். அந்த இடத்தில் குருமா இல்லாத சப்பாத்தி சாப்பிட்ட நினைவுகள் மனதை முழுதாக ஆக்கிரமித்தன. இதற்கு முன்பும் அந்த ஞாபகங்கள் எல்லாம் வந்தாலும் அடுத்த வேலைப்பளுவில் மறந்துவிடும். ஆனால் அதே இடத்தில் இரவு 12மணியில் அருகில் யாரும் இல்லாமல்  பழைய நினைவை அசைபோடுவது வலி நிறைந்தது. நண்பனின் உறவினர் வந்த 10 நிடங்கள், 10மணி நேரம் போல் கடந்தது. அவருடன் மதுரை வீதிகளை கடந்து பெரியார், காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் என மண்டபத்தை நோக்கி சென்ற போது மனது முழுக்க ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. 

உடம்பில் ஏதாவது காயம் என்றால் அதை ஆறவிடாமல், ஓயாமல் நோண்டிக்கொண்டே இருப்போமே? அந்த வலியில் ஒரு வித சுகத்தை உணர்வோமே? அது போல் நண்பனின் கல்யாணம் முடிந்ததும் அவசர அவசரமாக மண்டபத்தில் இருந்து கிளம்பி, யுனிவர்சிட்டி, திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், என சுற்றி கடைசியாக மாட்டுத்தாவணி மெரினா ஓட்டல் முன் வந்து ஒரு நொடி அந்த பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில் வெற்றுப்பார்வையை வீசினேன். சில வருடங்களுக்கு முன் மனம் முழுதும் மகிழ்ச்சியை கொடுத்த இடங்கள், சம்பவங்கள், இன்று நினைத்து பார்க்கும் போது வெறும் வலியையும், ஏக்கத்தையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நினைவுகள் ஆறாத புண் போல் வலித்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வலியை ஒரு சுகமாக உணர தொடங்கிவிட்டேன். அடிக்கடி புண்ணை நோண்டி வலியில் சுகம் காணுவதை போல், இனி அடிக்கடி மதுரை போய், அங்கு ஒரு காலத்தில் மகிழ்ந்திருந்த இடங்களை எல்லாம் பார்த்து, வருந்தி, ஏங்கி, பெருமூச்சு விட்டு, திருப்தி பட்டுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.. பார்க்கலாம், வாழ்க்கை என்ன முடிவு செய்திருக்கிறது என்று..


31 comments

  1. சிவகாசிக்கு அடுத்து எனக்கு பிடித்த, வீட்டில் இருப்பது போன்ற நிம்மதியை பாதுகாப்பு உணர்வை கொடுத்தது, கொடுப்பது மதுரை தான்

    தமிழ் சினிமா மிகவும் ரசித்து பார்ப்பான் அவன். இன்று வரை தொடர்பில் இருக்கும் அவன் உடன் பிறந்தோர் இரண்டு பேர். அவர்களுக்கும் கண் தெரியாது. வரலாற்றில் M.Phil முடித்துவிட்டு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். மதுரை எனக்களித்த நல்ல மனிதர்களில் அவன் ஒரு முக்கியமான ஆள்.

    மீனாட்சி அம்மன் கோயில் சிற்பங்களை பற்றி அவனிடம் கூறி, அவன் கைகளை என் கைகளால் பற்றி, அந்த சிற்பங்கள் மீது அவற்றை தவழ விட்டு, சிற்பங்களை அவன் கைகளால் ரசித்து சிரித்த அந்த நொடி, உண்மையிலேயே தெய்வீகத்தை கண்ட நொடி. மீனாட்சி அம்மன் கோயிலை ஒரு கண் தெரியாதவன் ரசித்தான், அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது இப்போதும் உடம்பு புல்லரிக்கும்.

    அருமை. எங்கள் Ram Kumr இன் பதிவை பகிர்வதில் மிக்க பெருமைப் படுகிறேன். எனக்கு எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து பிடித்த் ஊர் மதுரை தான். இந்த அற்புதமான பதிவை படிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை ராம்குமார். நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் :-)

      Delete
  2. ஒரு வருட காலம் மதுரையில் இருந்துள்ளேன்... அவை மறக்க முடியாத நாட்கள்...

    ReplyDelete
    Replies
    1. மதுரை யாராலும் மறக்க முடியாத ஊராகத்தான் இருக்கும் அண்ணே

      Delete
  3. படிக்கப் பெருமையாக இருந்தது
    நானும் மதுரைக்காரன் என்பதால் மட்டும் இல்லை
    'உங்களைப் போல மதுரை விரும்பி என்பதாலும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் :)

      Delete
  4. நினைவுகள் என்றுமே சுகமானவை
    அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நினைவுகள் சுகமானவை தான்.. ஆனால் வலி நிறைந்த சுகம் சார்..

      Delete
  5. காதல் .படிப்புடன் உங்கள் மனதில் மதுரை ஒன்றறக் கலந்துவிட்டது அறிந்து இந்த மதுரைக் கார ஜோக்காளியும் மகிழ்கிறான் !
    த/ம 4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Bagawanjee சார்

      Delete
  6. மதுரையப் பற்றிய அருமையான மலரும் நினைவுகளுடன் உங்கள் கடந்தக் கால காதலின் சோக கீதமும் கலந்து இப்பதிவை மறக்கமுடியாத பதிவாக மாற்றிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி manjooraja அவர்களே :)

      Delete
  7. மதுரை பற்றிய நினைவுகள்.....

    பல சமயங்களில் மதுரை வழியாகச் சென்றிருந்தாலும், மதுரையில் தங்கி கோவில் பார்த்தது ஒரே நாள். மதுரை செல்லவேண்டிய காலம் எனக்கும் வந்துவிடாதா! சில நாட்கள் அங்கே தங்கி ஒரு ரவுண்டு வர ஆசை..... பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சில நாட்கள் மதுரையில் தங்கி அந்த மக்களுடன் பழகிப்பாருங்கள் சார்.. அவ்வளவு வெள்ளந்தியான மக்கள்..

      Delete
  8. மதுரைல எனக்கும் கூட மறக்க முடியாத அனுபவம் எல்லாம் இருக்கு. உண்மைல மதுரக்காரங்க பாசக்காரங்க தான், மதுரைல இருந்து எங்க பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் வந்தாங்க, நல்லா பழகுவாங்க, என் தம்பி கைக் கொழந்தையா இருந்தப்போ அவங்க வீட்ல ஒரு தொட்டில் இருக்கும் அவனுக்காக, எப்பவும் அங்கயே வச்சுப்பாங்க அவன, அவ்வளவு நல்லா பாத்துப்பாங்க. ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க, எப்பவும் போலவே :) அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் மதுரை மக்கள் அப்படித்தான்.. ஆமா, உங்களுக்கு என்ன மறக்க முடியாத அனுபவம்? ;)

      Delete
  9. +Special lunch
    +Kallalagar temple
    +Meenaktchi temple
    - most of the men grooming their big mustache (symbol of brave)
    - People are Too rough

    -


    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் உண்மை தான்.. இன்னமும் மதுரை கிராமங்களில் பெரிய மீசைகளை பார்க்க முடியும்.. டவுன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. //People are Too rough // எனக்கு தெரிந்து அப்படி கிடையாது..

      Delete
  10. நல்லா இருந்தது நண்பா... அந்த கண் தெரியாத நண்பரை கேட்டதைச் சொல்லுங்கள்..

    இந்த மதுரை குருமாவின் மூலம் ஏதோ சேதி சொல்ல வருவது போல் தெரிகிறதே... சீக்கிரம் பெண் பார்க்கச் சொல்லுங்கள்... :-)

    ReplyDelete
    Replies
    1. //அந்த கண் தெரியாத நண்பரை கேட்டதைச் சொல்லுங்கள்.. // கண்டிப்பாக சொல்கிறேன் நண்பா...
      //இந்த மதுரை குருமாவின் மூலம் ஏதோ சேதி சொல்ல வருவது போல் தெரிகிறதே..// அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. ஏதோ ஒரு ஃபீல் அவ்ளோ தான்.. நேத்து மப்பு கொஞ்சம் ஓவர் ஆயிருச்சி.. வேற ஒன்னும் இல்ல..
      //சீக்கிரம் பெண் பார்க்கச் சொல்லுங்கள்... :-)// எதுக்கு? வாழ்க்கை பூரா குருமா இல்லாம சப்பாத்தி சாப்பிட்டு விக்கி சாகவா?

      Delete
    2. no Ram, to make Kurma

      Delete
  11. சினிமா பைத்தியங்கள் (நடிகர் தவக்களை க்கு கூட ரசிகர்மன்றம் உண்டு),
    கரகாட்டம்,
    வைகை ஆறு,
    ஜிகிர்தண்டா,
    நையாண்டி குழுக்கள் (விவேக், வடிவேலு, robo ஷங்கர், comedy boys, முனைவர் ஞான சம்பந்தன், மதுரை முத்து, மூர்த்தி கோபி....),
    தமுக்கம் மைதான சித்திரை பொருட்காட்சி,
    போத்தீஸ்,
    ஆர்த்தி drive in Restaurant
    அமெரிக்கன் கல்லூரி - (Inter College Quiz இற்கு எனக்கு முதலில் முதல் பரிசு கிடைத்த இடம்)
    அப்பா அடிக்கடி வேலை விஷயமாக செல்லும் ஊர்
    எனது CA தேர்வுகள்

    போன்றவை "மதுரை" என்றதும் எனக்கு ஞாபகம் வருபவை. . . :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாநகராட்சியில் இருக்க வேண்டிய அனைத்தும் இருந்தும், மக்களின் வாழ்க்கை முறையை அவ்வளவு சீக்கிரத்தில் அசைத்து பார்க்க முடியாத ஊர் என்றால் அது மதுரை தான்.. வளர்ச்சி வேறு, வாழ்க்கை முறை வேறு என்பதை புரிந்த மக்கள் அவர்கள்..

      Delete
  12. நினைவுகளினூடே வெளிவந்த காதல் கதையும் அதன் நேட்டிவிட்டியும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது.... மதுரையைப் பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாமோ...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் சில விசயங்களை கூற முடியாதே?!

      Delete
  13. en madurai
    நன்றி -சிவகாசிக்காரன்!!!

    ReplyDelete
  14. Thank you. Naanum Maduarikkaran thaan

    ReplyDelete
  15. Semma na! //இப்போதும் அவள் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கிறாள் தினமும் குருமாவுடன், அமெரிக்காவில் தன் கணவனுக்காக...// literally cried :( :( Aprum Madurai Malli enna aachu na?

    ReplyDelete
    Replies
    1. no feelings.. மதுரை மல்லி தான் எல்லாரும் எழுதுறது தானே? இது என் பெர்சனல் நினைவுகள் :-)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One