ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை...

Sunday, March 10, 2013

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் எப்போதும் உண்டு.. தாலி செண்டிமெண்ட் படம் ஒன்று ஹிட் ஆகிவிட்டால் அடுத்த ரெண்டு மூன்று வருடங்களுக்கு, “புருஷன்னா யாருன்னு தெரியுமா?” என்று தத்துவம் பேசும் படங்களாக வந்து தள்ளும்.. திடீரென்று ஒரு சாமி படம் வரும். டிவி, பத்திரிகை, நாடகம், தியேட்டர் என்று எங்கு பார்த்தாலும் சாமியாட்டம் தான் இருக்கும். படம் பார்க்கு போது தியேட்டரில் இத்தனை பேர் சாமியாடினார்கள் என்று புள்ளிவிவர செய்திகள் வாய் வழியாக வந்துகொண்டிருக்கும். குடும்ப கதைகள் சினிமாவை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமா? ஏதோ இப்போது சீரியல் வந்து என்னை போன்றவர்களை காப்பாற்றி விட்டது. பாட்ஷா வந்த இந்த 18 வருடங்களில் ஹீரோவுக்கான ”அவன் யாருனு தெரியுமா?” என்கிற ஃப்ளாஷ்பேக் கதை விஸ்வரூபம் வரை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் படம் வந்தால், நாம் சளிப்படைந்து அந்த ஹீரோவையும் இயக்குனரையும் கிண்டல் செய்யும் வரை நம்மை விடாமல் நம் முகத்தை பார்த்து பன்ச் டயலாக் பேசி சாகடிப்பார்கள்.. இப்போது சில ஆண்டுகளாய் தமிழ் சினிமாவில் காமெடி பட ட்ரெண்டு இருக்கிறது.


சுந்தர்.சி எப்போதும் விடாமல் வைத்திருந்த காமெடி சினிமாவை கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் எஸ்.எம்.எஸ் படம் மூலம் குத்தகைக்கு எடுத்தார். அடுத்து பாஸ்@பாஸ்கரன். இந்த ரெண்டு படங்களும் காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவமும் அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பார்த்து ஆக்‌ஷன் பக்கம்  போயிருந்த சுந்தர்.சி யே கூட மீண்டும் காமெடிக்கு வந்துவிட்டார். எங்கு பார்த்தாலும் காமெடி படங்கள். காமெடிப் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. கதையோடு சேர்ந்து வரும் காமெடி.. இதை சுந்தர்.சி படங்களில் அதிகமாக பார்க்கலாம்.. உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, முறை மாமன், எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, பஞ்ச தந்திரம் படங்களில் எல்லாம் காமெடி படத்தோடு சேர்ந்து வரும். அடுத்த வகை தனி காமெடி ட்ராக் வருவது. கரகாட்டக்காரன், வின்னர், ரன், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். மூன்றாவது spoof வகை காமெடி. தமிழ்ப்படம் தான் இதில் உருப்படியாக சொல்லும் ஒரே உதாரணம்.

முன்னாடியே சொன்னது போல் இப்போது காமெடி ட்ரெண்ட் தான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா ட்ரெண்டும் எப்போது முடியும் என்றால் ‘இந்த ட்ரெண்ட் தான் ஹிட் அடிக்கும்’ என்கிற நம்பிக்கையில் சிலர் மொக்கையாக படங்கள் எடுக்கும் போது தான். ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கூட பவர் இல்லையென்றால் ஒரு மொக்கை காமெடிப்படமாக தான் அமைந்திருக்கும். ஆனாலும் காமெடி ட்ரெண்டை முடித்து வைக்க மொக்கையாக வந்திருக்கும் ஒரு படமாக “ஒன்பதுல குரு” இருக்கும் என நம்பலாம்.


தங்கள் திருமண வாழ்வால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மூன்று நண்பர்கள் தங்கள் நண்பர்கள் குரூப்பில் அடுத்ததாக திருமணமாகப் போகும் இன்னொருவனை காப்பாற்றுவதாக நினைத்து அவனை கல்யாணத்திற்கு முந்தைய நாள் கடத்திக்கொண்டு போவதும் அதற்கு அடுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதையும் நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்ய, முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி நம்மை சில பல கொட்டாவிகளும், சேர் தேயும் அளவுக்கு அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி உட்கார வைத்தும் பக்கத்து சீட்டில் இருந்து கோபத்தில் வெளிவரும் கெட்ட வார்த்தைகளுக்கும் நடுவிலும் நம்மை இம்சிக்கிறது.

படம் ஹிட் ஆக குத்துப்பாடலும் கவர்ச்சி டான்ஸும் இருந்தாலே போதும் என்கிற காலம் எல்லாம் எல்லாம் போய் இப்போது பவர் ஸ்டார் தலை காட்டினாலே போதும் என்றாகிவிட்டது. வால் போஸ்டர் முழுதும் பவரை பார்த்து தியேட்டருக்கு போய் ஏமாறாதீர்கள். சம்பந்தமே இல்லாமல் ஆரம்ப பாடலில் பவரை காட்டுகிறார்கள். மீண்டும் படம் முடிந்தவுடன் “அடுத்து பார்ட் 2 ல மீட் பண்ணுறேன்” என்று சொல்லும் போது மட்டும் வருகிறார் பவர். ‘ஐயய்யோ பார்ட் 2 வேறயா?’ என்று பலரும் பதறிவிட்டார்கள். பவரின் இடது கை சுண்டு விரலில் பேண்ட் எய்ட் சுற்றி இருக்கிறது. தலைவருக்கு என்ன ஆகிவிட்டதோ, இப்போது சரியாகியிருக்குமோ என என் நெஞ்சம் பதறுகிறது. விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக சொல்லவும்.

நாயகர்களுக்கு பில்லா, ரங்கா, குரு, கோச்சடையான் என்று பெயர் வைத்ததில் காமெடி இருக்கும் என்று நினைத்து கடுப்பை கிளப்பியிருக்கிறார்கள். பழைய படங்களில் இருந்து வசனங்கள், கதாபாத்திரங்கள், என்று சுட்டு, காமெடி என்னும் பெயரில் மொக்கையான காட்சிகளை வைத்து, யார் ஹீரோ, யார் காமெடியன் என தெரியாமல் குழம்பி, ஏன் க்ளைமேக்ஸில் திடீரென்று அப்படி ஒரு வில்லி?, ஹீரோ புசுக்கென்று எப்படி திருந்துகிறான்? என உங்களுக்குள் 1008 கேள்விகள் எழும். காமெடி படத்தில் இருக்கும் பெரிய ரிஸ்க், அந்த காமெடி மொக்கையாக அமைந்து விட்டால் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கவே முடியாமல் போய்விடும். ஆக்‌ஷம் படங்கள் சில மொக்கையாக இருந்தால் கூட சண்டைக்காக பார்க்கலாம். ஆனால் காமெடி படத்தில் காமெடி மொக்கையாகி விட்டால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.


அதற்காக படத்தில் காமெடியே இல்லை என்று சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன் ஒன்னே முக்கால் தடவையும், இடைவேளைக்கு பின் ரெண்டே கால் தடவையும் சிரித்தேன். எழுத்து போடும் போது, ‘அழகு தேவதை’ லஷ்மி ராய் என போடுகிறார்கள்.. இவர்களுக்கு காமெடிக்கு தான் அர்த்தம் தெரியாது என்று பார்த்தால் அழகு என்பதற்கும் தேவதை என்பதற்கும் கூட அர்த்தம் தெரியவில்லை. ஒரு வேளை அழகு தேவதை என்று லஷ்மி ராயை சொன்னதை கூட நாம் காமெடி என்று நினைத்துக்கொள்வோம் என்று நினைத்திருப்பார் போல இயக்குனர். லஷ்மி ராயை வைத்து க்ளைமேக்ஸில் வரும் ட்விஸ்டை பார்த்து என் பக்கத்தில் ஒருவர் கொதித்தெழுந்து ஹீரோ, இயக்குனரில் இருந்து தியேட்டர் ஓனர் வரை செந்தமிழில் கிழித்துவிட்டார். ரெண்டு புது வார்த்தைகள் கூட நான் கற்றுக்கொண்டேன். சரி பேக் டூ விமர்சனம், ப்ரேம்ஜி அமரன் திடீரென்று வருகிறார், திடீரென்று அப்பீட் ஆகிவிடுகிறார். ஒரு காட்சியில் ”நான் பிரியாணில பிஸி” என்று மறைமுகமாக உண்மையை சொல்லி கழண்டுகொள்கிறார். பாவப்பட்ட ஏதோ ஒரு தயாரிப்பாளரின் பணத்தில் ஒரு கும்பல் மஞ்சள் குளித்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

எல்லோரும் மிக மொக்கையாய் நடித்திருக்கிறார்கள், சத்யனை தவிர. கேட்கும் போது சுமாராக இருந்த ரெண்டு பாடல்கள் கூட படத்தில் மிக மொக்கையாக இருக்கின்றன. மொத்தத்தில் கதையோடு இழையோட வேண்டிய காமெடியாகவும் இல்லாமல், பழைய படங்களில் இருந்து காட்சியையும் வசனத்தையும் சுட்டிருந்தாலும், ஒரு spoof படமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது ஒன்பதுல குரு. இனி காமெடி ட்ரெண்ட் முடிந்து வேறு ஒரு ட்ரெண்ட் திரையுலகில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கலாம். கல்யாணம் முடிந்து வாழ்க்கையின் இன்பத்தையே தொலைத்து நகைச்சுவை என்றால் என்னவென்றே தெரியாத சில மத்திய வயது ஆண்களுக்கு வேண்டுமானால் இந்த படம் பிடிக்கலாம்.. மற்றபடி ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை..

டிஸ்கி:
1. முப்பது ரூபாய் டிக்கெட்டை கொடுத்து எழுபது ரூபாய் வாங்கிய தியேட்டரை எதிர்த்து பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு போராட வேண்டும்.. தியேட்டருக்குள் பெருச்சாளி வேறு ஓடுகிறது..
2. பேசாம வசந்த மாளிகைக்கே போயிருக்கலாம்..



நீங்கள் இந்த விமர்சனங்களையும் ரசிக்கலாம்..

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல).. 

ஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

 

 

 

12 comments

  1. எல்லாமே இந்த படாது கிழிச்சுட்டாங்க உங்க பங்குக்கு நீங்களும் நல்ல கிளிச்சுடிங்க

    ReplyDelete
    Replies
    1. அப்பறம் என்னங்க கொஞ்ச நேரம் கூட உட்கார வைக்க முடியாவிட்டால் அந்த படத்தை என்ன தான் செய்வது? நாகரிகம் காரணமாக தான் மிக சாதாரணமாக எழுதியிருக்கிறேன்.. செம கடுப்பாகிருச்சி தியேட்டர்ல..

      Delete
  2. அந்த ரெண்டு புது வார்த்தைகள் என்ன? சொன்னா நாங்களும் வொகாப்லரி டெவெலப் பண்ணிக்குவம்ல?
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு திங்க கிழம.. அது போக சிவ ராத்திரிக்கும் மறுநாள்.. அதனால நான் கெட்ட வார்த்தை பேச மாட்டேன். ஆல்சோ ஐயம் எ டீசண்ட் ஃபெல்லவ்..

      Delete
  3. நன்றி...

    பார்க்கும் எண்ணம் இல்லை....

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்னால தப்பிச்சிட்டீங்க.. நான் ஃபேஸ்புக்ல ஒரு உத்தமர் போட்ட ஸ்டேட்டஸால மாட்டிக்கிட்டேன்.. :-(

      Delete
  4. ///பேக் டூ விமர்சனம்,// அப்போ இவ்ளோ நேரம் எழுதினது விமர்சனம் இல்லையா... ஐயையோ ஓடுங்க அது நம்ம நோக்கி தான் வருது....

    ஒன்பதுல குரு - படம் பார்காதவங்களுக்கு
    தியேட்டர்ல ஏழரை - படம் பார்த்தவங்களுக்கு... ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. //அப்போ இவ்ளோ நேரம் எழுதினது விமர்சனம் இல்லையா... ஐயையோ ஓடுங்க அது நம்ம நோக்கி தான் வருது.... // இந்த ஒத்த வரிக்காகவே உங்களுக்காக ஸ்பெசலா ‘லொள்ளு தாதா பராக் பராக்’ விமர்சனம் எழுதி அனுப்புறேன் நண்பா

      Delete
  5. நல்ல வேளை தில்லியில் வெளிவராது! :) வந்தாலும் பார்த்திருக்க மாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை சார் தப்பிச்சீங்க.. :-)

      Delete
  6. Ennaiya mathiri neengalum kasta patu irukengaley......

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்களும் நம்பி ஏமாந்தவரா? வெரி குட் வெரி குட்...

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One