மழைக்கால ஆஸ்பத்திரி..

Monday, November 23, 2015

ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண்டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்த  ஆஸ்பத்திரிக்காவது போலாம்னு பாத்தா வெளிய நசநசன்னு மழை.. 

ஒரு வழியா மதியம் மழை விட்டு லேசா தூரும் போது, ஒரு கையில குடையையும், இன்னொரு கையில அம்மாவின் மணிக்கட்டையும் பிடித்துக்கொண்டு, நடக்கப் பழகும் பிள்ளை போல் மெதுவாகத் தள்ளாடி ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.. அங்கு நிற்கிறது பொங்கலுக்கு வேட்டி சேலை வாங்க நிற்கும் கும்பல் போல் ஒழுங்கற்ற ஒரு வரிசை.. முக்கால்வாசி குழந்தைகள் தான்.. இந்த மழை தான் டாக்டர்களுக்கு எவ்வளவு பெரிய வரத்தைக் கொடுக்கிறது? தனக்குக் காய்ச்சல் என்றால் பொறுத்துக்கொள்ளும் மனது, பிள்ளைகளுக்கென்றால் துடிதுடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறதே?!

“ம்மா இந்த வரிசைல நின்னு அடுத்த வாரம் டாக்டர பாக்குற வரைக்கும்லாம் நான் உயிரோட இருக்க மாட்டேம்மா.. வாங்க பேசாம வீட்டுக்கே பெயிரலாம்” - மேலுக்கு முடியாத போது, உடன் ஒரு ஆள் இருந்தால் இந்த மனம் தான் எவ்வளவு கோழையாகவும், பிறர் சார்ந்தும் மாறிவிடுகிறது? தனிமையில் இதை விட அதிக வலியைத் தாங்கிய நான் இன்று அம்மா அருகில் இருக்கும் தைரியத்தில் மிகவும் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.. நான் பண்ணும் அலம்பலை எல்லாம் கண்டுகொள்ளாமல் சீட்டு எடுத்து வைத்தார் அம்மா.. தரை முழுவதும் ஈரம், சகதி, அழுக்கு, ஒரே நசநசப்பு. இதெல்லாம் அந்தச் சூழலை இன்னும் எரிச்சலூட்டுவதாய் மாற்றியது. இதில் எப்படி பிள்ளைகளைத் தரையில் விளையாட விடுகிறார்கள் என ஆச்சரியமாய் இருந்தது. ஹ்ம் இப்படிலாம் விளையாட விட்டதால் தான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி வந்திருக்கிறார்கள் என சமாதானம் செய்து கொண்டேன்.

”48. ராம்குமார்” என்று நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைப் பேப்பரில் அந்தப் பெண் எழுதினாள்.. இப்போது தான் அந்த லிஸ்டில்  எட்டாவதாக இருந்த ‘நிகிதா’ என்கிற பெயர் வாசிக்கப்பட்டது.. ‘இன்னும் 40 பேரா?’ என சோர்ந்து விட்டேன். ’நிகிதா’ - அந்தப் பெயர் எங்கள் ஊருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாததாய் இருந்தது.. மெதுவாக அந்த லிஸ்டில் இருக்கும் பிற பெயர்களைப் பார்த்தேன், அவைகளும் அப்படியே. தக்‌ஷா, தீப்தி, வேததர்ஷினி, அஜித்குமார், ரோஹித்.. ஹா ஹா இப்போதெல்லாம் சிவகாசியில் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர் எல்லாம் ஆச்சரியமாய் இருக்கிறது.. பட்டன் இல்லாமல் ஊக்கு குத்தியிருக்கும், எந்நேரமும் அழுதுகொண்டிருக்கும் அந்த அழுக்கு ஸ்வெட்டருக்குப் பெயர் அஜித் குமார். தங்கள் வாழ்க்கை தான் நவீனமாக மாறவில்லை, அட்லீஸ்ட் பெயரிலாவது கொஞ்சம் மாடர்னாக இருப்போம் என மக்கள் முடிவு செய்திருப்பார்கள் போல..  தீக்குச்சி அடுக்கிக்கொண்டும், தீப்பெட்டி ஒட்டிக்கொண்டும் அன்றாடங்காச்சிகளாய் இருக்கும் நம் பிழைப்பு, இந்தக் குழந்தைகள் மூலமாகத்தான் மாறப்போகிறது என்கிற அவர்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாகத் தான் அந்த மாடர்ன் பெயர்களை நான் பார்க்கிறேன்..

ஒத்தக் குடையைப் பிடித்துக் கொண்டு, மழையில் தான் நனைந்தாலும், பிள்ளைகளை நனையவிடாமல் தூக்கிக்கொண்டு அம்மாமார்கள் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னும் பொறுப்புத் தான் இந்தப் பெண்களை எவ்வளவு அழகாக மாற்றிவிடுகிறது? ரஜினி பட முதல் ஷோ மாதிரி கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.. எண்ணெய் பார்க்காத கந்தல் தலை, அழுக்கு உடுப்பு, ஒரே அழுகை, ஒழுங்கில்லாமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுவது, ஊசி குத்துவதற்கு முன்பே வரும் வீல்ல்ல்ல் சத்தம் என சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரி ஒரு சந்தையைப் போல் அலறிக்கொண்டிருந்தது, இந்த அமைதியான ஞாயிற்றின் மதியத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்..

மேலே வீடும், கீழே ஆஸ்பத்திரியும் என ஒன்றாகக் கட்டியிருந்தார் அந்த டாக்டர். மேலேயிருந்தும் ஒரே சத்தம். நிறைய உறவுக்காரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். டாக்டரின் மனைவி கீழே வந்து அவரை அழைத்தார். கிளம்பிய டாக்டர் வெடுவெடுவென மேலே ஏறினார்.. நம் நிகிதா, அஜித் போன்றோர்களின் பெற்றோருக்கெல்லாம் ஒரே கடுப்பு, ’பிள்ளைக்கு மேலு நெருப்பா சுடுது, இத்தன பேரு காத்துக்கெடக்கோம் இந்தாள் பாட்டுக்க பொண்டாட்டி கூப்ட்ருச்சின்னு பின்னாடியே போறியான் பாரு’ என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ’நம்ம கஷ்டமெல்லாம் எங்க தெரியப்போகுது, இவன் பிள்ளைகளுக்கு வந்தா தெரியும்’ போன்ற சாபங்களும் சில பல கெட்ட வார்த்தைகளும் முனுமுனுக்கப்பட்டன.. பத்தே நிமிடத்தில் கீழே வந்துவிட்டார். மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார். இப்போது மேலே இருந்து ஒரு பெண் கையில் பெரிய தட்டுடன் கீழே இறங்கி வந்தார்.

“டாக்டர் பையனுக்கு இன்னைக்குப் பொறந்த நாளு.. இந்தாங்க எல்லாரும் மிட்டாயி எடுத்துக்கோங்க” என்று வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு கொடுக்கப்பட்டது. அந்த மிட்டாயை எடுக்க எனக்குக் கைகள் கூசின.. ’என்னய்யா மனுசன் இந்த ஆளு? பையனோட பொறந்த நாளுக்குக் கூட அவசர அவசரமா ஓடி, அஞ்சே நிமிசம் தலையக் காட்டி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு வருவதற்கா இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இத்தனை பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு?’ என அவர் மேல் எனக்கு பரிதாபமாய்ப் போய்விட்டது. டாக்டரைப் பார்த்துக் கருவிய வாய்கள் எல்லாம் இளித்துக்கொண்டே மிட்டாயை மென்று கொண்டிருந்தன. ‘அடுத்தது ராம் குமார்’ - அழைப்பு வந்தது.

“இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? ரெண்டே நாள்ல சரியாப்போயிரும்” சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்து, முதுகில் லேசாக ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவைத்தார்.. முகத்தில் ஒரு சின்ன கவலை, எரிச்சல், விரக்தி, கடுகடுப்பு ஏதாவது இருக்க வேண்டுமே? எவ்வளவு தேடினாலும் இல்லை. ஹ்ம் பழகிப்போயிருக்கும். ’விடுமுறை, நல்ல நாள், பொல்ல நாள், ராத்திரி, பகல், மழை, வெயில், தீபாவளி, பொங்கல் என எது வந்தாலும் தன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்துக்கொண்டு நமக்காகவே உழைக்கும் மருத்துவர்கள், டிரைவர்கள், போலீசார் போன்றவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்? நம்மைப் போல் விரும்பிய நேரத்தில் ஒன்றுக்கு இருக்கக் கூட முடியாதே இவர்களால்? இவர்களின் குடும்பத்தினருக்கான நாட்களை அல்லவா இவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர்களின் சாபம் நம்மை என்ன செய்யும்? ஒரு வேளை அவர் குடும்பத்தினரும் பெருந்தன்மையாக நமக்காக பொறுத்துக்கொள்வார்களோ?! அப்பாவோடு படத்திற்குப் போக வேண்டும், தூங்கும் போது அப்பா கதை சொல்ல வேண்டும், விசேஷ வீடுங்களுக்குக் கணவனோடு செல்ல வேண்டும் என அந்தக் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்? உண்மையில் நாம் அந்த குடும்பத்தினருக்குத் தான் கடமைப் பட்டிருக்கிறோம்.’ என பலவாறாக யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன்.. 

ஊசி போட்டு அழுது கொண்டிருந்த ரோஹித்தை அவன் அம்மா கொஞ்சிக்கொண்டிருந்தார், ‘தம்பி பாரு நீயும் படிச்சி நாளைக்குப் பெரிய டாக்டர் ஆகணும், இது மாரி நம்மளும் எல்லாத்துக்கும் ஊசி போட்ரலாம், சேரியா?’ என்று.. எனக்கு ரோஹித்தின் வருங்கால குடும்பத்தை நினைத்துக் கவலையாக இருந்தது.. அவர்களுக்காகவாவது நமக்கு நோய் நொடி எதுவும் வந்துவிடக்கூடாது என இறைவனை மனது வேண்டுகிறது.. 

10 comments

  1. Super... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் புரிதல் எல்லாருக்கும் உண்டு.. ஆனால் தன்க்கென்று வரும் போது அந்தப் புரிதலை மீறிய கோபம் வருகிறதே?!

      Delete
  2. Super... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...

    ReplyDelete
  3. Super... இந்த புரிதல் மட்டும் இருந்தால் போதும்... சமுதாயத்தின் மீது மதிப்பும் அக்கறையும் தானே வரும்...

    ReplyDelete
  4. மருத்துவத்தில் மாடிகட்டி கோமானாக வாழ்வோருக்கு மத்தியில் சில நல்லுள்ளமுமுண்டு.

    ReplyDelete
  5. வணக்கம்
    நல்ல சிந்தனை.... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. வணக்கம்
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One