மரியாத ராமண்ணா (தெலுங்கு) - சினிமா விமர்சனம்..

Tuesday, April 8, 2014

இப்ப ஒரு ரெண்டு மூனு மாசமா நம்ம ஏர்டெல் புண்ணியவாளன் நெட் பேக்குக்கு வழக்கமா கொடுக்கிறத விட ரெண்டு ஜி.பி அதிகமா தரான்.. அதனால மாசம் ஒன்னோ ரெண்டோ படம் டவுன்லோடு பண்ணி பாத்துட்டு இருக்கேன்.. பிறமொழிப்படங்கள் மட்டும் தான் ஸ்ட்ரிக்ட்டாக.. இந்திப்படங்கள் எல்லாம் ஹாலிவுட்டுடன் போட்டிக்கு போய்விட்டதாலும், நான் இந்திப்படம் பார்க்க காரணமானவரும் ஹாலிவுட்டுக்கு போய்விட்டதாலும், என் தகுதிக்கு தெலுங்கும், மலையாளமும் தான் சரி என முடிவு செய்து கொண்டேன்.. உடனே, ’அப்படினா, இப்ப தெலுங்கு, மலையாளப்படம் எல்லாம் பாக்க யார் காரணமா இருக்காங்க?’னு குதர்க்கமான கேள்வி கேக்கிறவங்களுக்கு எல்லாம் கேப்டனின் பிரச்சார சிடி அனுப்பி வைக்கப்படும், ஜாக்கிரதை..

மலையாளத்தை விட தெலுங்குப்படங்கள் ஒரு விதத்தில் வசதி.. அவை எல்லாம் நம் தமிழ்ப்படங்கள் மாதிரி லாஜிக், ஹீரோவின் தகுதி தராதரம் எல்லாம் பார்க்காது.. ரெண்டரை மணிநேரம் பொழுதுபோக்கு. அவ்வளவு தான். ஏற்கனவே நான் பார்த்த தம்மு, தம்மாருகம் போன்றவை எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நன்றாக பொழுதுபோயின. அந்த வகையில் சமீபகாலமாக கப்பார் சிங், அத்தரின்டிக்கி டாரிடி, பாட்ஷா போன்ற ஆக்சன், ஃபேமிலி படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.. இந்த மாதம் என் ஃபேவரைட் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மரியாத ராமண்ணா (2010) பார்க்கலாம் என்று முடிவு செய்து நேற்று தான் டவுன்லோடு பண்ணி முடித்தேன்..



இந்த இடத்தில் நான் ராஜமௌலியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. இவர் ஷங்கர் பாதி, கே.எஸ்.ரவிக்குமார் பாதி கலந்து செய்த கலவை. 2001ல் இருந்து இதுவரை இவர் இயக்கிய படங்கள் மொத்தமே ஒன்பது. அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.. இவரின் பல படங்களும் இந்தி, தமிழ் என்று பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் கல்லாவை நிரப்பியிருக்கின்றன.. அனைத்துப்படங்களுமே மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கர்ஷியல், குடும்பம், ஆக்‌ஷன், ஃபேண்டஸி ரகப்படங்கள் தான். இவரிடம் எனக்குப்பிடித்த விசயம், இதுவரை இவர் தெலுங்கை தாண்டி திறமையை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று இந்தியிலோ தமிழிலோ நேரடிப்படம் எடுத்து பெயரைக்கெடுத்துக்கொள்ளவில்லை. தனக்கு எது வலுவான இடமோ அங்கிருந்து அடி வெளுக்கிறார். அனைத்தும் சிக்ஸருக்கு பறக்கின்றன.. இவரின் ஒவ்வொரு படத்திலும், படப்பெயருக்கு அருகில் “an s.s.rajamouli film" என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி அடித்திருக்கும்.. தன் பெயரை ஒரு முத்திரை போல் குத்தி படத்தை வெளியிடுகிறார் என்றால் தன் திறமை மேல் அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையும், தைரியமும் இருக்க வேண்டும்? நம்பிக்கையும், திறமையும், ஆடியன்ஸின் பல்ஸை அறிந்து வைத்திருக்கும் நுணுக்கமும் தான் அவரின் படங்களை எல்லாம் பாக்ஸ் ஆஃபிசில் சிதறடிக்கின்றன.

சரி இப்போது மரியாத ராமண்ணா படத்திற்கு வருவோம். ஒரு கிராமம், அதில் ஊர்ப்பெரியவரான ஒரு தாதா குடும்பம், அந்த ரவுடிக்குடும்பத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம்/கொள்கை/செண்டிமெண்ட், அந்த செண்டிமென்ட்டை பயன்படுத்தி அவர்களின் எதிரி அதாவது கதையின் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக சொல்கிற படம் தான் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் செய்திருக்கும் நாகிநீடு & சன்ஸின் மேல் இதுவரை ஒரு குற்றம் கூட நிரூபிக்கப்பட்டதில்லை. தனக்கு ஒருவன் சிறு தீங்கு இழைத்தாலும் அவன் வம்சத்தையே அழித்துவிடும் கொடூர வில்லன் அவர். ஆனால் இவ்வளவு கொடூரமான ஆளாக இருந்தாலும், தன் வீட்டிற்குள் ஒருவர் வந்து விட்டால், ஒரு கடவுளைப்போல் அவரை உபசரிப்பார், அவன் பரம எதிரியாகவே இருந்தாலும். விருந்தோம்பல் என்பது அவர் குலவழக்கம் மற்றும் வீடு அவரின் கோயில் மாதிரி. அங்கு எப்போதும் சந்தோசம் மட்டுமே இருக்க வேண்டும், யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பது அவர் கருத்து. ஆனால் வீட்டிற்குள் வந்துவிட்ட எதிரி தப்பித்தவறி வீட்டு வாசலை தாண்டி வெளியே காலை வைக்கிறான் என்றால் அவன் நரகத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்கிறான் என்று அர்த்தம்.

இந்த சூழலில் ஊரை விட்டு ஓடிப்போன அவரின் பரம எதிரி ஒருவனின் மகன், ஊரின் பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் தன் பூர்வீக நிலத்தை விற்க வருகிறான். வந்தவன் ஊர் மக்களின் அறிவுரைக்கிணங்க ஊர்ப்பெரியவர் நாகிநீடுவிடமே உதவி கேட்டு செல்கிறான். அவனை வரவேற்று, உள்ளங்கையில் தாங்கி, வீட்டில் பந்தி பரிமாறும் போது தான் தெரிகிறது பயல், 28 வருடங்களாக தான்  பழிவாங்கத்துடிக்கும் எதிரியின் மகன் என்று. இதையும், அவர்களின் கொலை செய்யும் எல்லை வீட்டு வாசலை தாண்டித்தான் ஆரம்பிக்கிறது என்பதையும் அறிந்து கொண்ட நம் ஹீரோ என்னவெல்லாம் செய்து தப்பிக்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.



அதுவரை காமெடி பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுனில் இந்தப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம். காமெடி ஓவர் டோசாகி விட்டால் படத்தின் சீரியஸ்னஸ் குறைந்து விடும்.. சீரியஸ்னஸ் ஓவர் ஆகிவிட்டால் ஒரு ஆக்‌ஷன் படம் போல் காமெடி ஹீரோவுக்கு சூட் ஆகாமல் போய்விடும் என்கிற ரிஸ்க்கான மெல்லிய கயிற்றில் அழகாக பயணித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, டான்ஸ், காமெடி, நடிப்பு என்று பிரமாதப்படுத்திவிட்டார்.. என்னைக்கேட்டால் பல தெலுங்கு மாஸ் ஹீரோக்களை விட இவர் கொஞ்சம் லட்சணமாகவே இருக்கிறார். வீட்டிற்குள் அழகான, பாசத்தை மட்டுமே கொட்டும் ஒரு குடும்பம், வீட்டு வாசலில் கையில் கத்தி, அரிவாளுடன் நூறு பேர் கொல்ல காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் வீட்டில் இருந்து போகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முறையும் இவர் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.. ஹீரோயின் அக்மார்க் கமர்ஷியல் சினிமா ஹீரோயினாக இருக்கிறார். அது போக படத்தில் ரயில் வண்டி போல 20,30 பாத்திரங்கள் இருக்கின்றன.. 

ஆனாலும் ஹீரோவை விட விஞ்சி நிற்பது நாகிநீடுவின் பாத்திரம் தான். ஒரு ஊர்த்தலைவராக, தாதாவாக, வீட்டிற்குள் பாசமான பெரியவராக என்று இவரின் நடிப்பும், பேச்சும், குரலும், கண்களும், அவற்றையெல்லாம் ஒரு கெத்தாக காட்டும் மீசையும் அருமையிலும் அருமை. சமகாலத்தில் தமிழ் சினிமாவில் இதே மாதிரி ஆள் என்றால் ஜெயப்பிரகாஷ் தான். ஆரம்ப காட்சியில் தன் கிராமத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்க வரும் கம்பெனி ஆட்களை தன் வீட்டில் உபசரித்து நன்றாக கவனித்துக்கொண்டிருப்பார். அதில் ஒருவன் இவரின் பணிவிடையை ஓவர் அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருப்பான். எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டிருப்பான். இவரும் அது எதையும் கண்டுகொள்ளாமல் சிரித்த முகத்துடன் சாந்தமாக எல்லா பணிவிடைகளையும் செய்வார். எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது அவனுக்கு முன் இவர் வாசலில் போய் நின்றுவிடுவார். அவனின் கால் சரியாக அந்த வாசலை தாண்டி ஒரு எட்டு வைக்கும் போது அருகில் உலக்கை குத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து அதை வெடுக்கென பிடுங்கி இவன் கழுத்தில் ஓங்கி ஒன்னு விடுவார். அவ்வளவு தான், ரெண்டு பேர் வந்து அவனை எங்கோ அள்ளிக்கொண்டு போவார்கள். மீண்டும் சிரித்த முகத்துடன் மற்ற ஆட்களிடம், “நீங்க ஹைதராபாத் போற வரைக்கும் ஓட்டல் ஒன்னும் சரி இருக்காது. அதனால இத எடுத்துக்கோங்க”னு ரெண்டு பெரிய டிஃபன் கேரியர்ல சாப்பாடு கொடுத்து அனுப்பிவைப்பார். நமக்கே இந்த ஆள் தான் இப்போது உலக்கையால் அடித்த ஆளா என்று டவுட் வரும் அளவிற்கு மிகவும் பாந்தமாக பேசுவார். அந்த பாத்திரம் ஒரு முழுமையை அடைவது அந்த இடத்தில் தான். சினிமாவில் தான் இப்படிப்பட்ட பெரிய மனிதர்கள் சாத்தியம் என்றாலும், அவரின் பாத்திரம் மேல் நமக்கு நிச்சயம் மரியாதை வரத்தான் செய்கிறது.



ஒரு சுவாரசியமான ஒன்லைனை, இன்னும் சுவாரசியமான திரைக்கதையால் அழகுபடுத்தியிருப்பார் ராஜமௌலி. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண, அல்லது ஹீரோ எதையோ பண்ணப்போக அதைப்பார்த்து ஹீரோயின் இம்ப்ரஸ் ஆகும் வழக்கமான ராஜமௌலி டெக்னிக் இந்தப்படத்திலும் உண்டு. ஆனால் ஒன்றிரெண்டு விசயங்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். ஹீரோயின் மேல் முறைப்பையனுக்கு வரும் காதல், ஹீரோ மேல் ஹீரோயினுக்கு வரும் காதல், ஹீரோயின் மேல் ஹீரோவுக்கு வரும் காதல் எல்லாம் சினிமாவுல கூட நடக்குமாங்கிறது டவுட்டு தான். பொசுக்கு பொசுக்குனு காதல் வந்துருது மை லார்ட்.. அதிலும் வில்லன்கள் துரத்தி வரும் போது ஹீரோவிடம்  ஹீரோயின் தன் காதலை சொல்கிறாள். அது வரை அவளை காதலிக்கும் எண்ணமே இல்லாதவன், புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்தவன் திடீரென ஓடுவதை நிறுத்திவிட்டு ஒரு டயலாக் சொல்கிறான் பாருங்கள், “நான் ஓடிப்போயி என் உயிர காப்பாத்திக்கணும்னு நெனச்சேன்.. ஆனா ஒன்ன மாதிரி ஒரு பொண்ண விட்டுட்டு ஓடிப்போயி நான் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வாழ்வோ சாவோ அது உன் கூடத்தான்”னு... எப்பா சாமி ஒரு ஃபிகரு லவ் பண்ணுறேன்னு சொன்ன உடனே நம்ம பயலுக உசுர கொடுக்கிற அளவுக்கு எல்லாம் போயிருவாய்ங்களா என்ன? ஆனா அதுக்காக நீங்க நெனைக்கிற மாதிரி ஹீரோ ஆவேசம் வந்து எல்லா வில்லன்களையும் அடித்து துவம்சம் எல்லாம் பண்ண மாட்டார்.. ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஹீரோயின் ஹீரோவை காப்பாற்றி குடும்பத்தினரையும் சமாதானப்படுத்திவிடுவாள். Happy endings.. :-)



பாடல்கள், இசை, காட்சியோடு ஒன்றச்செய்யும் ஒளிப்பதிவு, ஒரு பாத்திரமாகவே வரும் ஹீரோவின் இத்துப்போன சைக்கிள் (மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வருமே ஒரு பலூன் ஹீரோ & கோவை காப்பாற்ற, அது மாதிரி இந்த சைக்கிள்) என படத்தில் நம்மை போரடிக்காமல் ரெண்டே கால் மணிநேரம் கட்டிப்போட பல விசயங்கள் திரைக்கதையில் உண்டு.. இல்லாமலா இந்த படத்தை கன்னடம், பெங்காளி, இந்தி என்று எடுத்து எல்லா இடத்திலும் ஹிட் அடித்திருக்கிறார்கள்? ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும், ஊரின் பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சொல்லும் அந்த பின்னணிப்பாடல் சூப்பர்.. 

இந்தப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்கிறார்கள் இப்போது.. நம்ம சந்தானம் தான் ஹீரோவாம். தன் அதிகப்பிரசங்கித்தனத்தையும், ஓவர் டயலாக்கையும் அடித்து விடாமல், கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்கும். படத்தின் அடிநாதமான அந்த வீடும், அதன் ”சம்பிரதாயமும்” தான் ஹீரோ, வில்லன் அனைத்தையும் விட முக்கியம். அதை கெடுக்காத அளவிற்கு கொடுத்து, கிளைமேக்ஸில் இருக்கும் சிறு குறையையும் மாற்றி அமைத்தால் படம் நிச்சயம் தமிழிலும் பட்டையைக்கிளப்பும்.. தெலுங்கில் ரெட்டி ரெட்டி என்பார்கள்.. தமிழ் சினிமாவின் இலக்கணப்படி அது தேவராகவோ கவுண்டராகவோ இருக்கும்.. வேறு எந்த ஜாதி வீரமானதாக காட்டப்பட்டிருக்கிறது தமிழ் சினிமாவில்?

அடுத்ததாக “நான் ஈ” மிகப்பெரிய வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகளாக ராஜமௌலி இயக்கிக்கொண்டிருக்கும் என் டார்லிங் அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் ’பாகுபலி’யை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. 9படங்களில் கொடுத்த வெற்றியை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றியைக்கொடுக்க ராஜமௌலிக்கு வாழ்த்துக்கள்.. என் டார்லிங்கிற்கு வாழ்த்துக்கள் எல்லாம் வேண்டாம்.. ஸ்க்ரீனில் நீ வந்தா மட்டும் போதும்.. நீ வந்தா மட்டும் போதும்.. :-D

14 comments

  1. கடைசிப் பாராவை அப்படிபே வரிக்கு வரி வழிமொழிகிறேன். ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் உண்மை.. உடலும் உயிரும் அனுஷ்காவுக்கு மட்டும் தான்..

      Delete
    2. உயிர் ஒக்கே.. உடல்?

      Delete
    3. ஹலோ தெரியாத மாதிரியே கேக்காதீங்க.. இது அடல்ட்ஸ் ஒன்லி ப்ளாக் கிடையாது..

      Delete
  2. நல்ல விமர்சனம்...
    படம் பார்க்கலாமோ என்ற எண்ணம் வந்துவிட்டது...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாத்துருங்க..

      Delete
  3. விமர்சனம் அருமை. குறிப்பாக அந்த 'சைக்கிள்' கதாபாத்திரத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்தது, 'மாஸ் மஹா ராஜா' ரவி தேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் விமர்சனத்தில் நான் குறிப்பிட மறந்த விசயம் அது.. தகவலுக்கு நன்றி :-)

      Delete
  4. பொசுக்கு பொசுக்குனு காதல் வந்துருது மை லார்ட்.. = அருமை ராம்குமார்.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம். உங்கள் பாணியை ரசித்தேன். படம் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை ராம் குமார். ஆனாலும் பார்க்க நினைத்திருக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சார் :-)

      Delete
  6. தம்மாருகம் படத்தைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டதை படித்ததும் எனக்கொரு ஞாபகம் வந்தது.அந்த தம்மருகம் படம் வெளியிடும் முன் ஆந்திரத்தில் பல முன்னணி சேனல்கள் கவுண்ட்-டவுன் டைமர்கள் எல்லாம் வைத்தார்களாம்.நானும் ஆசைப்பட்டு பார்த்தேன்.ஏதோ கிராபிக்ஸ் காட்சிகள்,சார்மியின் கிளாமர் பாட்டு னு படம் போச்சு.படம் பிடிக்கவில்லையேனும் நீங்கள் கூறியதுபோல் டைம்பாஸ் ஆச்சு.முடிந்தால் ராஜமௌலியின் இயக்கத்தில் என் தலைவர் என்.டி.ஆர் நடித்த யமதொங்கா படத்தையும் பவன்கால்யானின் ஆல் டைம் ப்ளாக் பஸ்டரான ஜல்சா வையும் பாருங்க அண்ணா.இப்போலாம் தெலுங்கு படம் பாக்கிறதுக்கு டைம் கிடைக்கறதுள்ள,அதே டைம் எங்க சேலத்துல என்.டி.ஆர்,ராம் சரண் படங்களைத்தவிர்த்து வேறு எதுவும் ரிலிஸாகறதில்ல!!ஆம கேட்க மறந்துட்டேன்,என்.டி.ஆரோட ராமய்யா வஸ்தாவய்யா பாத்திங்களா?

    ReplyDelete
    Replies
    1. இப்பத்தாங்க கொஞ்சம் கொஞ்சமா தெலுங்கு படம் பார்க்க ஆரம்பிக்கிறேன்.. மாதாமாதாம் நெட் பேக்கில் 1GB மிஞ்சும்.. அதில் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பேன்.. எனக்கு என்னமோ என்.டி.ஆர்., மகேஷ் பாபுவை எல்லாம் விட பவன் கல்யாணை தான் பிடித்திருக்கிறது.. அவர் ஒரு ஆந்திர அஜித் என்று கேள்விப்பட்டிருந்ததால் அவர் மேல் எக்ஸ்ட்ரா பாசம்.. இந்த மாசம் ‘மனம்’ பார்க்கலாம் என்றிருக்கிறேன் :-)

      Delete
  7. யாரோ உங்ககிட்ட தப்பா அடிச்சுட்டாங்க்கனா!!இப்ப இருக்க தெலுங்கு ஹீரோக்கள்ள நம்பர் 1 இவரு தான்.ஆனா இவரு ஒரு டான்ஸ் ஆடத்தெரியாத விஜய்னு தாங்னா நான் கேள்விபட்ருக்கேன்.ஆனா தெலுங்கானா ல இவருக்கு செம மாஸ்.என்.டி.ஆர் பத்தி நான் ஆல்ரெடி ஒரு சின்ன பதிவு போட்டுருக்கன் ணா!படிச்சி பாருங்க னா!

    http://vimarsanaulagam.blogspot.com/2014/05/baadhshaa-telugu-2013.html

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One