தல படமும் மலமாடுகளும் - சிறுகதை..

Saturday, July 6, 2013

உங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா? 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவும் வேலை பாத்துட்டு இருக்குற எனக்கு இன்னைக்கு தான் அப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு.. ஆமா, ‘தல’யோட படத்துக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகப்போறேன்.. தேட்டரில் தெரிக்கும் விசில் சத்தம், தொண்டை கிழியும் கோஷம் என நினைத்துப்பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.. கேள்வி ஞானமாகவே இருந்த ஃபர்ஸ்ட் ஷோ இன்று எனக்கும் ஒரு அனுபவமாக போகிறது.. நானும் 4 பேரிடம் சொல்லி சந்தோசப்படுவேன் இனி.. ஆனா கரெக்ட் டயத்துக்கு தேட்டருக்கு போயிருவேனானு தான் தெரில..

எங்க ஊர்ல என்னமோ எனக்கு இந்த படத்த பாக்க பிடிக்கல.. அதனால மதுரைக்கு போயி பாக்கலாம்னு ப்ளான்.. பாட்டிய கொன்னு, வேலைக்கு லீவு போட்டு, காலையில 6மணிக்கே அலாரம் வச்சு, 6.30க்கு அம்மா தண்ணிய ஊத்தி எழுப்பிவிட்டதும் அவசர அவசரமா கெளம்பிட்டு இருக்கேன் இப்ப... படம் 9.30க்கு போட்ருவான்.. மணி இப்பயே 7ஆகப்போகுது.. எங்க ஊர்ல இருந்து மதுரைக்கு ரெண்டு மந்நேரம் ஆவும்.. ‘கடவுளே படம் போடுறதுக்குள்ள நான் தேட்டருக்கு போயிரணும்’னு அவசரத்தில் சாமியை வேண்டி நெத்தியிலும் வாயிலும் கொஞ்சம் விபூதியை போட்டுக்கொண்டு, ஏதோ ஞாபகம் வந்தவனாய் மீண்டும் கடவுளிடம், ‘கடவுளே இந்தப்படமாவது கண்டிப்பா ஹிட் ஆவணும்’ என எக்ஸ்ட்ரா வேண்டுதலையும் போட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினேன்..



காலையில ஏழு மணிக்கு எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு.. மெதுவா எட்டிப்பாக்குற வெயில், அதுல தெரியுற தூசித்துகள், கூட்டம் வர ஆரம்பிக்கும் டீக்கடை, வாக்கிங் போன அலுப்பில் அமர்ந்திருக்கும் சர்க்கரை பிண்டங்கள், மிக குறைவான பேருந்துகள், அதை விட குறைவான ஜன நடமாட்டம்னு எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு எனக்கே கொஞ்சம் அந்நியமாத்தான் தெரியுது இப்ப.. அஞ்சு நிமிசத்துக்கு ஒரு மதுர பஸ்ஸு உண்டு.. ஆனா இப்ப ஒன்னையும் காணோம்.. “இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?” என் செல்ஃபோன் அலறுகிறது.. 

“சொல்றா மாப்ள”

“.....”

“டே இல்லடா பஸ்ஸுக்கு தான்டா வெயிட் பண்றேன்.. கரெக்ட் டயத்துக்கு வந்துருவேன்டா..”

“...”

“சரி சரி படம் ஆரம்பிச்சுட்டா நீ உள்ள போயிரு.. நான் வந்து ஒனக்கு கால் பண்ணுறேன்”..

என் நண்பன் வேற அவசரப்படுத்துறான்.. அவன் மதுரைக்கு நேத்து நைட்டே போயி எனக்கும் அவனுக்கும் டிக்கெட் ரெடி பண்ணிட்டான்.. நான் தான் இங்க லேட் பண்ணிட்டு இருக்கேன்.. பஸ்ஸையும் காணோம்.. ஒவ்வொரு நொடியும் நான் ஃபர்ஸ்ட் ஷோவில் இருந்தும், தலயிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போற மாதிரி இருக்கு.. எவனாவது கார் வச்சிருக்குற ஃப்ரெண்ட்டுக்கு கால் பண்ணி வர சொல்லலாமானு யோசிச்சேன்.. காலையில 7மணிக்கே கூப்ட்டா கடுப்பாயிருவாய்ங்க.. அதும் ஒரு படத்துக்கு போணும்னு சொல்லி கார ஓசிக்கு கேட்டா காரித்துப்புவாய்ங்க.. அவைங்கலாம் படம் ரிலீஸ் ஆகி நல்லா இருக்கா நல்லா இல்லையானு ரிசல்ட் தெரிஞ்ச பிறகு சிடி வாங்கி வீட்டு ஹோம் தேட்டர்ல பாக்குறவய்ங்க.. நாம என்ன அப்படியா? ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ.. கெத்து.. மாஸு.. அய்யோ பஸ்ஸ இன்னும் காணோமே... ஒரு வெள்ளக் கலர் ப்ரைவேட் பஸ்ஸு ஒன்னு வேமா பஸ் ஸ்டாண்டுக்குள்ள வருது.. தூரத்துல தெரிஞ்ச அந்த பஸ் பக்கத்துல வர வர அதில் எழுதியிருக்கும் பெயர் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சது.. “மதுரை”..


பஸ் நிக்குறதுக்கு முன்னாடியே ஓடியே போயி ஜம்ப் பண்ணி ஏறி என் ஃபேவரைட்டான ரெண்டாவது சீட்ல எடம் போட்டு ஒக்காந்துட்டேன்.. கண்டக்டர் என்ன ஒரு மாதிரி பாத்தான்.. ஏன் அப்படி பாக்குறான்னு தெரில.. பஸ்ஸு மெதுவா அது நிக்குற எடத்துக்கு வந்துச்சி.. 2காலேஜ் பிள்ளைக, வியாபாரத்த முடிச்சிட்டு சொந்த ஊருக்கு கெளம்புற சேட்டு, இன்னும் ரெண்டு மூனு பேரு மொத்தமே பஸ்ல 8பேரு தான் இருக்கோம்.. கண்டக்டரு என்ன இன்னொருக்க பாத்து மொறச்சான்.. இப்பத்தான் அதுக்கு அர்த்தமே புரிஞ்சது.. மொத்ததுலயே எட்டு பேரு ஏறியிருக்கிற பஸ்ஸுல குடுகுடுனு ஓடி வந்து அரக்கபறக்க சீட் போட்டா அவனுக்கு கடுப்பாகுமா ஆகாதா? கொஞ்ச நேரத்துல பஸ்ஸு கெளம்பிருச்சி.. மணி இப்பத்தான் கரெக்ட்டா ஏழு ஆகுது.. எப்டியும் ஒம்பதுக்குள்ள ஆட்டோ பிடிச்சாவது தேட்டருக்கு போயிரணும்னு முடிவு பண்ணிட்டேன்..

அந்த ரெண்டு காலேஜ் பிள்ளைகளும் எனக்கு பின்னாடி இருந்த சீட்ல தான் இருந்தாளுக. பஸ்ஸு கெளம்ப ஆரம்பிச்ச ஒடனே எல்லாரும் டப்பு டப்புனு அவங்க அவங்க சீட்டு ஜன்னல மூட ஆரம்பிச்சாய்ங்க.. ரொம்ப குளிரும் போல.. எனக்கு இந்த சிலு சிலு குற்றால சீசன் காத்து ரொம்ப பிடிச்சிருந்தனால நான் ஜன்னல மூடல.. எனக்கு பின்னாடி இருந்த காலேஜ் பிள்ளைகளும் ஜன்னலை மூடிட்டாங்க.. எனக்கு லேசா குளிர் அடிக்குற மாதிரி இருந்தாலும், பொம்பள பிள்ளைக முன்னாடி கெத்தா இருக்கணும்னு நான் ஜன்னல மூடாமலே குளிர தாங்கிட்டு எனக்கு குளிராத மாதிரியே இருந்தேன்.. அந்த பிள்ளைக ஏதோ பேசுறது என் காதுல விழுந்துச்சி.. சரி நாம குளிர தாங்கி கெத்தா இருக்குற மேட்டரத்தான் பேசுனாலும் பேசுவாளுகனு நெனச்சி என் காத கொஞ்சம் அந்தப்பக்கம் தீட்டி வச்சேன்..

“ஏன்டீ நம்மளுக்குலாம் எப்படி குளிருது? பாரு ஜன்னல கூட மூடிட்டோம்.. ஆனா அவன பாரு ஜன்னலயும் மூடாம எப்படிடீ இப்படி வரியான்?”

அதுக்கு அந்த இன்னொருத்தி சொன்னாள், “கறுப்பா இருக்கறவய்ங்களுக்குலாம் குளிராதுடீ.. அதான் அவன் இப்படி தொறந்து போட்டுட்டு வரியான்”...

இப்ப அந்த பஸ்ஸுல டப்புனு இன்னொரு ஜன்னலும் மூடுற சவுண்டு கேட்டுச்சி.. அது என் ஜன்னல் தான்னு வேற சொல்லணுமா?

ச்சே இவளுக்க நம்மள இப்படி அசிங்கப்படுத்திட்டாளுகளேனு பயங்கர கடுப்பு எனக்கு.. நண்பனுக்கு ஃபோன் அடிச்சி பஸ் கிளம்பிட்டதையும் நான் 9மணிக்குள்ள வந்துருவேன்னும் சொல்லிட்டேன்.. பஸ் இப்ப எங்க ஊர தாண்டி இருக்குற திருத்தங்கல்லுக்கு வந்துருச்சி.. இங்கயும் ஒரு ரெண்டு மூனு பேரு ஏறுவாய்ங்கனு தான் நெனச்சேன்.. ஆனா வத வதனு கொத்தனார் வேலைக்கு போறவன், பயர் ஆபிஸ் வேலைக்கு போறவன்ல இருந்து பள்ளீடத்துக்கு போற பிள்ளைக வர நெறைய பேரு ஏறிட்டாங்க.. நான் இருக்கிற சீட்ல ஏதாவது ஸ்கூல் பயல ஒக்கார வைக்கலாம்னு பாக்குறதுக்குள்ள ஒரு ஏதோ ஒரு எருமை எம்மேல வந்து முட்டுன மாதிரி ஒரு ஃபீல்.. என்னனு சுதாரிச்சி பாத்தா என் பக்கத்துல, இல்ல இல்ல கிட்டத்தட்ட என் மேல ஏறி என் மடில ஒருத்தன் ஒக்காந்திருந்தியான்..


நான் அவன மொறச்சி பாக்குறேன்.. பயபுள்ள அவன் என்ன கண்டுக்காம அவன் பாட்டுக்க வேற எங்கயோ மொறச்சி பாத்துட்டு இருந்தியான்.. எனக்கு செம கடுப்பு. “ஹலோ கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க”னு அவன்ட்ட கோவமா சொல்லலாம்னு நெனச்சாலும், அவன் முழியும், மொறப்பும், முறுக்கு மீசையும், 10நாள் தாடியும் எனக்கு கொஞ்சம் பீதிய கொடுத்திச்சி.. அவன் பார்வையே அப்படித்தானானு எனக்கு தெரில.. ஒரு கோவமான திருட்டு முழி அது.. ஒங்கள அவன் பாத்தான்னா, அப்படியே மொறைக்குற மாதிரியே இருக்கும்.. நீங்களும் பதிலுக்கு மொறைச்சா அவன் அடிச்சாலும் அடிச்சிருவியான்.. கையில ஒரு பத்து செண்டிமீட்டருக்கு கறுப்பு கயறு, கழுத்துல இரும்பு சங்கிலி, பீடி குடிச்சனால கறுத்துப்போன ஒதடு, மஞ்ச பூத்த பல்லுனு பாக்குறதுக்கு கொஞ்சம் ரவுடி மாதிரி தான் இருந்தியான். அதனால நான் ஒன்னும் சொல்லாம போனா போகுதுனு லேசா என் ஒடம்ப அவன்ட்ட இருந்து கொஞ்சம் நகட்டி வச்சுக்கிட்டேன்.. சீட்ல நான் ஒரு ஓரமா நஞ்சு போன எலிக்குஞ்சு மாதிரி ஒடுங்கி ஒக்காந்திருக்கேன்.. அவன் சிம்மாசனத்துல இருக்குற ராஜா மாதிரி கம்பீரமா இருந்தான்.. கையில செங்கோலுக்கு பதிலா முன்னாடி சீட்டு கம்பிய பிடிச்சிருந்தியான்.. என்னோட ராஜ்ஜியத்துல பாதிய அவன் புடிங்கிட்டு போயிட்ட மாதிரி எனக்கு கடுப்பு.. எப்படியாவது என்னோட எடத்த அவன்ட்ட இருந்து மீட்டு நானும் கம்பீரமா ராஜா மாதிரி ஒக்காரணும்னு முடிவு பண்ணிட்டேன்..

அப்படியே மெதுவா என்னோட உடம்புக்கும் அவனோட கையிக்கும் எடையில சிக்கி தவிச்சிட்டு இருக்குற என்னோட வலது கைய கஷ்டப்பட்டு உருவி எடுத்து முன்னாடி இருந்த கம்பில வச்சேன்.. இப்படி வைக்கும் போது என்னோட கை முட்டிய லேசா மடக்கி வச்சேன்.. என் ஒடம்புக்கும் கைக்கும் கொஞ்சம் இடம் கெடச்சது இப்ப.. கொஞ்சம் சொகுசா ஒக்காந்த மாதிரி இருந்தது எனக்கு. என் கை முட்டி அவன லேசா இடிச்சது.. நானும் இது தான் சாக்குனு என் கையால ரொம்ப ரொம்ப மெதுவா, ஆனா பலமா அவனயும் அவன் கையையும் தள்ளுனேன் கொஞ்ச கொஞ்சமா.. வண்டிய ஓட்டுன டிரைவர் பாவி இப்ப ஒரு ஸ்பீடு பிரேக்கர்ல வேமா வண்டிய விட்டுட்டான்.. வண்டியே ஒரு குலுங்கு குலுங்குச்சி. என் பக்கத்துல இருந்த ரவுடி அந்த குலுக்கல்ல அப்படியே ஜம்ப் பண்ணி பழைய மாதிரி என் மடில ஏறி ஒக்காந்துட்டான்.. நானும் பழைய மாதிரி நஞ்ச எலிக்குஞ்சி மாதிரி ஆயிட்டேன்.. அவன் நான் என்ன நெலமைல இருக்கேன்னு கூட கண்டுக்கல.. பஸ்ஸுல ஏறுனதுல இருந்து இப்ப வரைக்கும் எங்கயோ பாத்து மொறச்சுட்டே தான் இருக்கான்.. ஆனா எங்க பாக்குறியான், எதுக்கு மொறைக்குறியான்னு தான் தெரில.. அய்யோ இப்ப என்ன பாத்து மொறைக்குறியான்.. நான் உதடே விரியாம லேசா சிரிக்க ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ள வேற பக்கம் பாத்து மொறைக்க ஆரம்பிச்சுட்டியான்..

சரி அடுத்த ஸ்பீடு பிரேக்கர்ல அவன் செஞ்ச அதே டெக்னிக்க நாம செஞ்சு அவன தள்ளி ஒக்கார வச்சிராம்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்,... அடுத்த ஸ்பீடு பிரேக்கர் வந்துச்சி.. பஸ் ஸ்பீடு பிரேக்கர்ல ஏறுன ஒடனே நான் அப்படியே ஜம்ப் ஆகி அவன இடிச்சேன் பாருங்க, பயபுள்ள ஒரு இன்ச் கூட நகரல.. சிலை மாதிரி அப்படியே இருந்தான்.. ‘ஆள் கொஞ்சம் ஸ்ட்ராங் பாடி தான் போல”னு நெனச்சுக்கிட்டு வேற டெக்னிக் எதும் இருக்கானு யோசிச்சேன்..

இப்ப நம்ம ராஜா பாக்கெட்டுக்குள்ள கைய விட்டு ஒரு செல்ஃபோன எடுத்தாரு.. எங்கயோ ஒரு வருசத்துக்கு முன்னாடி செகண்ட் ஹேண்டுல வாங்குன சைனா ஃபோன் மாதிரியே இருந்திச்சி.. அவன் அதுல ஒவ்வொரு பட்டன அமுக்கும் போதும் அதுல இருந்து டொய்ங் டொய்ங்னு கேவலமா ஒரு சவுண்ட் வேற வந்துச்சி.. ஒரு 30செகண்டுல அத விட கொடூரமா ஒரு சவுண்டு.. “சம்பர பர பர சிப்பிப்பா பிலகண்டா குலகண்டா அந்தானு லவகுண்டா ஓம் சாந்தி சாந்தி”னு ஏதோ கலவரம் பண்ண போறவைங்க பாடுற மாதிரியே இருந்துச்சி.. அந்த ஃபோன் குடுக்குற சவுண்டுக்கு சடங்கு வீட்டுல கட்டுன கொழாய் ஸ்பீக்கர் கூட தோத்து போயிரும்.. அப்படி ஒரு அலறல்.. ஒரு அஞ்சு நிமிசம் போயிருக்கும்.. இப்ப அந்த ஃபோனல யுவனோட “உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது” பாட்டு.. இத மட்டும் யுவன் கேட்டா மியூசிக் போடுறதையே நிறுத்திட்டு, வெள்ளம் வந்தாலும் பரவாயில்லனு ரிஷிகேசுக்கே போயிருவாரு, அப்படி ஒரு ரணகொடூரம்.. இந்த மாதிரி டப்பா ஃபோன்லலாம் எப்படி பாட்டு கேக்குறாய்ங்கனே தெரில.. அதும் கொஞ்சம் கூட டீசன்சி இல்லாம, இப்படி ஸ்பீக்கர் போட்டு மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு.. ச்சே ச்சே.. எனக்கு யாராவது அவன எதுத்து கேக்க மாட்டாங்களா, சவுண்ட கொறச்சி வைக்க சொல்ல மாட்டாங்களானு ஒரே ஏக்கம்.. இப்ப இளையராஜா போட்ட, “என்னை தாலாட்ட வருவாளா”.. எனக்கு இவன் டேஸ்டு என்னனே புரிஞ்சுக்க முடியல.. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் புரிஞ்சுச்சி.. ஒங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு கூட, கேட்டாலே நாராசமா சுத்தமா பிடிக்காம போகணும்னு நெனச்சீங்கன்னா அத நீங்க சைனா ஃபோன்ல ஸ்பீக்கர்ல போட்டு கேட்டா போதும்.. 

இவன் இப்படியே ஒவ்வொரு பாட்டையா போட்டு எனக்கு பிடிக்காம ஆக்கிருவானோனு பயமா வேற இருந்துச்சி.. நான் இப்ப இன்னொருக்க என் கைய மெதுவா கைபிடி கம்பியில தள்ளிக்கிட்டே கொண்டு போயி அவன இடிச்சி கொஞ்சமா தள்ளி ஒக்கார பாத்தேன்.. அவன் திரும்பி என்ன ஒரு மொற மொறச்சியான்.. நானே பழைய மாதிரி என் கைய எடுத்துட்டு, என் நஞ்சு போன எலிக்குஞ்சு பொசிசன்ல ஒக்காந்துட்டு அவன பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சேன்.. எனக்கே கேவலமா இருக்கு என்ன நெனச்சி.. இவன் டார்ச்சர்ல இருந்து தப்பிக்கலாம்னு நெனச்சு என ஃபோன எடுத்தேன்.. மதுரையில டிக்கெட்டோட காத்திருக்குற நண்பன் எனக்கு 4தடவ கால் பண்ணிருக்கான்.. ஃபோன் எப்படியோ சைலண்ட் மோடுக்கு மாறிட்டனால எனக்கு கேக்கல..

ஃபோன திரும்ப சவுண்ட் மோடுக்கு மாத்திட்டு என் நண்பனுக்கு நான் ஃபோன் அடிச்சேன்.. அவன் ஃபோன எடுத்து என்னமோ சொன்னான்.. எனக்கு சுத்தமா கேக்கல.. எல்லாம் நம்ம சடங்கு வீட்டு கொழாய் ஸ்பீக்கர மகிமை.. ஆனா சமஸ்தான ராஜாவ எதுவும் சொல்ல முடியாதுல? அதனால கம்முனு பொத்திக்கிட்டு என் கைய ஃபோன் ரிசீவர் பக்கத்துல பொத்துனாப்புல வச்சிட்டு கொஞ்சம் பேசுனேன் நண்பன்ட்ட.. அவன் “டேய் ஒன்னுமே கேக்கலடா.. கொஞ்சம் சத்தமா பேசு”ன்னான்.. நான் என்னத்த சத்தமா பேசுறது? சரினு சொல்லிட்டு என் முழு பலத்தோட சத்தமா பேசுனேன்.. “டேய் இங்க எனக்கு பக்கத்துல ஒரு மலமாடு ஒக்காந்துட்டு சவுண்ட்டா மொக்கத்தனமா சைனா செட்ல பாட்டு கேட்டு உசுர வாங்கிறியான்டா, அதான் ஒன்னும் கேக்கல.. நான் அங்க 9மணிக்கு வந்துருவேன்.. வெயிட் பண்ணு”னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணுறேன், அந்த மலமாடு என்னயே பாத்து மொறச்சுட்டு இருக்கு.. எனக்கு ஏதோ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சது அப்ப.. அட ஆமா, சடங்கு வீட்டு கொழாய் செட்டு இப்ப ஓடல... நான் என் ஃப்ரெண்டுட்ட கத்துனது எல்லாம் நம்மாளு காதுல தெளிவா விழுந்துருச்சி..

அவன் என்னையே மொறச்சி பாத்துட்டு இருந்தியான். எனக்கு என்ன பண்ணனே தெரில.. ஒரு வேள அடிச்சாலும் அடிச்சிருவானோனு வேற பயமா இருந்துச்சி.. நான் ஒரு மாதிரி அசடு வழிஞ்ச மாதிரி அவன பாத்து சிரிச்சுட்டு கீழ குனிஞ்சி சீரியஸா என் ஃபோன நோண்டுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.. இப்ப அவன் மெதுவா குனிஞ்சு என் முகத்துக்கு நேரா அவன் முகத்த கொண்டு வந்து மொறச்சி பாத்தியான்.. எனக்கு இவ்ளோ பக்கத்துல அவனோட மொகறைய பாக்கவே பயமா இருந்துச்சி.. “நான் மலமாடா?”னு மண்டைய ஆட்டிக்கிட்டே பல்ல கடிச்சிக்கிட்டே என்ன பாத்து கேட்டான்.. “மதுரேல தான எறங்குற? இரு மகனே ஒன்ன வச்சுக்கிறேன்”னு சொல்லிட்டு அந்த செகண்ட் ஹேண்ட் டப்பா சைனா செல்லுல யாருக்கோ கூப்பிட்டான், “டேய் மாப்ள இங்க பஸ்ஸுல ஒருத்தன் கொஞ்சம் ஓவரா வெளாண்டுட்டான்.. நீ ஒரு எட்டே முக்காக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துரு”னு சொல்லிட்டு என்ன பாத்து மொறச்சுக்கிட்டே சிரிச்சான்.. எனக்கு என்ன பண்ணனே தெரில.. வண்டி இப்பத்தான் திருமங்கலம் வருது.. 

நான் திருமங்கலத்துலயே எறங்கி எஸ்கேப் ஆகிரலாம்னு எந்திரிச்சேன்.. அவன் என்ன பாத்து, “என்ன?”னு கேள்வி கேக்குற மாதிரி மண்டைய ஆட்டுனான்.. “இல்ல கொஞ்சம் அர்ஜென்ட்டா ஒன்னுக்கு வருது.. போயிட்டு வந்துரட்டா?”னு பாவம் போல கேட்டேன்.. “பரவாயில்ல பஸ்ஸுலயே அடிச்சிவிடு”னு சொல்லிட்டு வேற பக்கம் திரும்பிட்டான்.. எனக்கு இப்ப ஒன்னுக்கு கூட வரல.. ஆனா அழுகை தான் பயங்கரமா வர மாதிரி இருந்துச்சி.. சரி நம்ம நண்பன கூப்பிட்டு அவனுக்கு தெரிஞ்ச ஆள கூட்டிட்டு வர சொல்லலாம்னு அவனுக்கு ஃபோன் அடிச்சேன்.. மேட்டர சொன்னேன்..

“டேய் ஏன்டா வரும் போதே பிரச்சனைய இழுத்துட்டு வர?”

“நீ தானடா என்ன கத்தி பேசச்சொன்னா? ஒன்னால பாரு என்ன ஒன்னுக்கு கூட போக விட மாட்றியான்டா.. ஏதாவது பண்ணு.. நீயும் ஒரு 4,5 பேர பெரியாருக்கு கூட்டிட்டு வா”

“போடா எனக்கு வேற வேல இல்ல? அங்க வந்து ஒங்கூட சண்ட போட்டா இங்க யாரு படத்த பாக்குறது? 300ரூ வேஸ்ட் ஆகிரும்.. நீ எப்படியாவது அவன சமாளிச்சிட்டு மெதுவா வா, நான் தேட்டர்ல ஒனக்கு வெயிட் பண்ணுறேன்”னு சொல்லி கால கட் பண்ணிட்டான்.. திரும்ப நான் ரெண்டு மூனு தடவ கூப்பிடுறேன்.. ம்ஹீம் அவன் ஃபோன எடுக்கவே இல்ல.. பஸ்ஸு வேற பெரியார நெருங்கிக்கிட்டே இருக்கு.. எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி.. நாக்கும் தொண்டையும் வறண்டு போச்சி.. என்ன பண்ணனே தெரில..

“பாஸ் தெரியாம சொல்லிட்டேன் பாஸ்.. சாரி.. என்ன விட்ருங்களேன், ப்ளீஸ்”

“எந்த ஊருக்காரன்டா நீயி?”

“சிவகாசிக்காரன் பாஸ்”

“சிவகாசில இருந்து மதுரைக்கு எதுக்கு வர? என்ட்ட அடி வாங்கவா?”

“பாஸ் வேணும்னா நீங்களும் என்ன கெட்ட வார்த்தைல கூட வஞ்சிருங்க.. ஆனா அடிக்கலாம் செய்யாதீங்க”

அவன் நான் பொலம்புறத எல்லாம் கேக்க ரெடியா இல்ல. வழக்கம் போல வேற எங்கயோ பாத்து மொறைக்க ஆரம்பிச்சுட்டான்.. பெரியார் பஸ் ஸ்டாண்டும் வந்துருச்சி.. ”வாப்பா தம்பி”னு என கைய பிடிச்சி கூட்டிட்டு போறான்.. “காப்பாத்துங்க யாராச்சும்”னு கத்த நெனச்சாலும் கத்தவும் பயமா இருக்கு.. பஸ் படில நானும் அவனும் எறங்குறோம்.. கீழ அவன விட பெருசா 4 மலமாடுங்க நின்னுட்டு இருந்ததுங்க.. என்ன அதுங்கட்ட காட்டி, “மாப்ள நாம்பாட்டுக்க செவனேனு வந்துட்டு இருக்கேன், என்ன பாத்து ‘மலமாடு’னு கமெண்ட் அடிக்கிறாய்ன்டா”னு சொன்னான்.. அதுல ஒருத்தன் என்னோட பிடறில அடிக்க வந்தான்.. அப்ப என் ஃபோன் சவுண்ட் குடுத்துச்சி.. “இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?”

எனக்கு பீதியாகிருச்சி.. பஸ்ல வேற இவன் விஜய் பாட்டு கேட்டுட்டு வந்தியான்.. விஜய் ரசிகனாத்தான் இருப்பியான்.. நான் அஜித் ரசிகன், அதும் மொத நாள் மொத ஷோவுக்கு போறவன் தெரிஞ்சா என்ன இன்னும் டார்ச்சர் பண்ணுவானேனு நெனைக்கும் போதே எனக்கு இன்னும் பயம் அதிகமாயிருச்சி.. என்ன பிடறில அடிக்க வந்தவன் அப்படியே நிப்பாட்டிட்டான்... 

“பாஸ் நீங்க தல ஃபேனா?” அந்த மலமாடுகளில் ஒன்னு என்ன பாத்து கேட்டுச்சி.. எனக்கு ஆமானு மண்டைய ஆட்டுறதா, இல்லனு மண்டைய ஆட்டுறதானே புரியல..

“அட சும்மா சொல்லுங்க பாஸ்.. நீங்க தல ஃபேனா?” லேசா ஒரு நல்ல சிரிப்பு சிரிச்சி திரும்பயும் கேட்டான்.. நான் கொஞ்சம் தயக்கமா, “ஆ.. ஆமா”ன்னேன்..

“அட பார்ரா.. பாஸ்ஸு மொதயே சொல்லிருக்கலாம்ல?”ன்னான் என்கூட பஸ்ல வந்த மலமாடு..

“ஏங்க?” நான் என்ன நடக்குதுனே புரியாம கேட்டேன்..

“அட நாங்க எல்லாருமே தல ஃபேன்ஸ் தான் பாஸு.. கைய குடுங்க” இவ்ளோ நேரம் என்ன ஜென்ம விரோதியா பாத்த அந்த மலமாடுகள் கூட்டம் என்ன டக்குனு நண்பனா  ஏத்துக்கிட்டு என் கைய குலுக்குச்சிங்க...

“சரி என்ன காலங்காத்தாலையே மதுரைக்கு?”

“இல்ல தல படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்கலாமேனு”

“அட நாங்களும் அதுக்கு தான் பாஸு போறோம்.. வாங்க போலாம்”னு என் கூட பஸ்ல வந்த மலமாடு என் தோள் மேல கைய போட்டு தேட்டருக்கு என்ன கூட்டிட்டு போச்சி..

தேட்டர் வாசல்ல நான் இந்த மலமாடுங்க கூட வர்ரத பாத்த என் ஃப்ரெண்டு லேசா மெரண்டுட்டான்.. அவன்ட்ட நடந்த கதையெல்லாம் ரெண்டு பேரும் சிரிச்சுட்டே சொல்லி தேட்டருக்குள்ள போனோம்.. ”சரி சரி படம் ஆரம்பிக்க போது.. தலய பாத்துட்டு வந்து நம்ம கதைய கண்டினியூ பண்ணலாம்”னு சொல்லிட்டு படத்த பாக்க ஆரம்பிச்சோம்.. வழக்கம் போல ட்ரைலர்ல மெரட்டுன தல, படத்துல சொதப்பிட்டாரு.. சோகமா வெளிய வந்தேன்..



ச்சே தல இப்படி பண்ணிட்டாரேனு சோகமா வரும் போது, “பாஸு”னு ஒரு குரல் கேட்டுச்சி.. மெல்ல திரும்பி பாத்தேன்.. அந்த மலமாடு தான் என்ன கூப்பிட்டான்.. சிரிச்சுட்டே கை அசைச்சி கூப்பிட்டான்...

படம் நல்லா இல்லாத சோகத்தில் இருந்த நான் கஷ்டப்பட்டு சிரிச்சுட்டே அவன் பக்கத்துல போனேன்.. “என்ன பாஸு சோகமா இருக்கிங்க?”

“படம் நால்லா இல்லையேங்க”

“அட விடுங்க பாஸு.. தல படம் ஃப்ளாப் ஆனா என்ன? தல ஃபேன் நீங்க ஃப்ரெண்ட்டா கெடச்சிட்டீங்கல்ல? தல அடுத்த படத்துல கலக்குவாரு.. அப்ப பாத்துக்கலாம்.. வாங்க நாம ஜானகிராம்ல சாப்டுட்டு சிவகாசிக்கு போலாம்” என் தோள்ல உரிமையோட கைய போட்டு அந்த மலமாடு என்ன சாப்பிட கூட்டிட்டு போச்சி...

33 comments

  1. ethaarthamaaka irukku ..!

    nantri..

    ReplyDelete
  2. haa haa.....

    நல்ல கதை......
    அதெப்படி ராம், அனுபவத்தை கதை மாதிரி சொல்றிங்க???

    தல, தலைப்புல இருந்ததுனால பதிவை படிக்க வேண்டியதா போச்சு. தல ராக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அய்யயோ இதுல என் சொந்த அனுபவம்னு பாத்தா பஸ்ல படுற அவஸ்தை மட்டும் தான்.. வேற எதுவும் இல்ல...

      Delete
  3. பய பயணத்துடன்... 'மல' கிடைச்சாட்சி 'தல'யால் ...!

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் ஆமா.. எனக்கு ஒரு அடியாள் கெடச்சாச்சி...

      Delete
  4. ஹாஹா.... கதையா அனுபவமா? இனிமே அந்தப் பாட்டைக் கேட்கவே முடியாது போலிருக்கே...

    ReplyDelete
  5. நானும் நிறைய மலமாடுகளுடன் பஸ்சில் பயணம் செய்திருக்கிறேன்.... அப்போது எனக்கு தொன்றியதை வார்த்தையாக்கி விட்டீர்கள்.... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பஸ்ஸுல இந்த மாதிரி அவஸ்தை படுறது தானே நம்ம தலையெழுத்து?

      Delete
  6. உங்கள் செல்லில் மட்டும் நீங்கள் விஜய் பாடலை ரிங் டோனாக வைத்திருந்தாள் அன்று உங்கள் நிலைமை மூத்திர சந்துதான்...

    ReplyDelete
    Replies
    1. என்ன பாத்து ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிருப்பான் :P

      Delete
  7. //‘கடவுளே இந்தப்படமாவது கண்டிப்பா ஹிட் ஆவணும்’// தல ரசிகன் ஹா ஹா ஹா
    //சிலு சிலு குற்றால சீசன் காத்து ரொம்ப பிடிச்சிருந்தனால நான் ஜன்னல மூடல.. // அடேயப்பா அம்புட்டு தூரம் வீசுதா என்ன

    //அவன இடிச்சேன் பாருங்க, பயபுள்ள ஒரு இன்ச் கூட நகரல.. சிலை மாதிரி அப்படியே இருந்தான்.. // ஹா ஹா ஹா எத்தன தடவ நாங்களும் ட்ரை பண்ணிருக்கோம் மிடில பாஸ்

    //ம்பர பர பர சிப்பிப்பா பிலகண்டா குலகண்டா அந்தானு லவகுண்டா ஓம் சாந்தி சாந்தி”// நட்ட நாடு ராத்திரியில தன்னந்தனியா இப்படி சத்தமா சிரிக்கிற ஒரே ஆள் நாந்தான்...

    ReplyDelete
    Replies
    1. // நட்ட நாடு ராத்திரியில தன்னந்தனியா இப்படி சத்தமா சிரிக்கிற ஒரே ஆள் நாந்தான்...// வீட்டுல கல்யாணத்துக்கு ரெடி பண்ணுறாங்களோ? என்ஜாய்..

      Delete
  8. ஹஹஹ ... செம்ம ....மாம்ஸ் .(கதையோட்டம் மட்டுமே) . உள்கருத்துக்கு நோ ....

    ReplyDelete
    Replies
    1. உள்ள தான் கருத்தே இல்லையே? இது சும்மா ஒரு சீரியஸ் கதை எழுதுறதுக்கு முன்னாடி ஜாலியா ஒரு ட்ரை அவ்ளோ தான்..

      Delete
  9. super bosss.....nice writing...

    ReplyDelete
  10. மல மாடு! :) பல சமயங்களில் இப்படி மாட்டிக்கொண்டு அவஸ்தை பட நேர்ந்திருக்கிறது.

    ஒரு முறை பெங்களூரிவிலிருந்து சேலம் வரும்போது ஒரு மலமாடு பக்கத்தில். போதாக்குறைக்கு அவர் பை வேறு பக்கத்தில்.... ஏதோ கொஞ்சமா ஒட்டிட்டு இருந்தேன் சீட்டில்!

    ReplyDelete
    Replies
    1. பஸ்ல இந்த மாதிரி அவஸ்தைகள் இல்லாமல் நம்மால் என்றுமே பயணிக்க முடியாது.. :-(

      Delete
  11. எப்பவும் மெகாஹிட் ட்ரைலர்கள் தருவது தல மட்டும் தான்.

    எல்லா இடத்திலும் 'நான்' என்று சொல்வதால், இதை கதையாக மனம் ஏற்க மறுக்கிறது, உங்கள் அனுபவமாகவே பதிகிறது.:)

    ReplyDelete
    Replies
    1. Ha ha this is a story only.. Most of my stories are written as first person only..

      Delete
  12. அய்யோ, எனக்கு இந்தக் கதை வாசிக்கும் போது, வடிவேலு தான் நியாபகம் வந்தாரு :) சிரிச்சேன் நல்லா!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, நாம எல்லாருமே basically காமெடி பீஸ் தான்..

      Delete
  13. மலமாடு மடில ஏறி ஒக்காந்துட்டான் :)) ஹா....ஹா........

    ReplyDelete
    Replies
    1. என் நிலமை உங்களுக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா? :-(

      Delete
  14. மலமாடுகள்(Ajith fans) கதை நன்றாக உள்ளது

    ReplyDelete
  15. பஸ்'ல ரெண்டாவது சீட்'டு 'லெப்ட்டா ரைட்டா... எதுக்கு கேக்குறேன்னா வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே......

    ReplyDelete
    Replies
    1. நான் என்னைக்குமே லெஃப்ட் தான் பஸ்ல மட்டும்.. அரசியல்ல பல நேரங்களில் ரைட்...

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One