ஏழரை சனி..

Saturday, November 10, 2012

”அய்யா, சுப்ரமணிய எங்க சார் கூட்டிட்டு வர சொன்னாருயா” - மதிய சாப்பாட்டு இடைவேளைக்கு முந்தைய வகுப்பில், பதினொன்னு D செக்‌ஷன் பய ஒருத்தன் வந்து எங்க தமிழ் வாத்தியார் கிட்ட சொன்னான். பத்தாப்பில் சரியாக படிக்காத ஆடுகாளி மாணவர்கள் படிக்கும் மூன்றாம் குரூப் வகுப்பு தான் 11D. அங்கிருந்து ஃபர்ஸ்ட் குரூப் 11A வகுப்பில் ஒரு மாணவனை தேடி ஒருவன் வந்திருக்கிறான் என்றவுடன் வகுப்பே அமைதியாக அவனை நோக்கியது.

“இங்க ரெண்டு சுப்ரமணி இருக்கான்யா.. ஒனக்கு யாரு வேணும்?”  புன்னைகை மாறாத முகத்துடன் அவனை பார்த்து கேட்டார் ஐயா. எனக்கு லேசாக பயம் கொடுக்க ஆரம்பித்தது. அந்த ரெண்டு சுப்ரமணில நானும் ஒருத்தன். குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க தான செய்யும்?

“செந்திலு ஃப்ரண்டு சுப்ரமணிய்யா” - அது நானே தான். இடக்கரடக்கல் காரணமாக உண்மையை சொல்லாமல் செந்தில பெயரை சொல்லி என் மானத்தை காப்பாற்றினான் அவன். தமிழய்யா அடுத்த கேள்வி அவனை கேட்கும் முன் நானே எழுந்து விட்டேன்.

“நீ தானா அது?” பதினொன்னு A காரனுக்கு, D காரனோட என்ன சம்பந்தம் என்கிற ஒரு வித சந்தேகத்தனமான பார்வையுடன் என்னை அவனுடன் அனுப்பி வைத்தார்.


சிவகாசியிலேயே பெரிய பள்ளியான எங்கள் பள்ளியின் பெரிய கட்டிடம் அது. எங்கள் வகுப்பு அந்த கட்டிடத்தின் கீழே முதலாவதாக இருக்கும்.. 11D முதல் மாடியில் நடுவில் இருக்கும்.. நான் ஒரு வித பதட்டத்துடன் அவனோடு படி ஏறினேன். அவன் என்னை நக்கலாக பார்த்து கேட்டான், “நீ தான் வசந்திய லவ் பண்றியா?”

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.. சவ்வு மிட்டாய்க்கு (11 D ஆசிரியர்)  எல்லாமே தெரிஞ்சு போச்சா என்று நினைக்கும் போதே கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. கண்கள் அடைத்து இருட்டாக தெரிந்தது. “ஒங்க சாருக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சா?” அழுவது போன்ற குரலில் அவனிடம் கேட்டேன்.


“ஆமா.. நீ சாந்திக்கும் செந்திலுக்கும் லவ் லெட்டர் குடுத்தது, சாந்தி தங்கச்சி வசந்திய அந்த கேப்ல லவ் பண்ணதுனு எல்லாமே எங்க சாருக்கு தெரியும்” என்று சிரித்த முகத்துடன் ஏதோ பசித்தவன் பிரியாணியை பார்த்தது போல் முகத்தை சந்தோசமாக வைத்துக்கொண்டு சொன்னான். எனக்கு ஓங்கி அவனை அறைய வேண்டும் போல் இருந்தது.. ஆனால் பதிலுக்கு அவன் அடித்தால்? ஆள் பார்ப்பதற்கு எருமைக்கெடா போல் இருந்தான். எத்தனை வருசம் ஃபெயில் ஆகியிருப்பான் என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்தால் அவன் மகனோடு ஒரே வகுப்பில் படித்தாலும் படிப்பான். இப்ப அவன் பயல பத்தி என்ன யோசனை? சவ்வு மிட்டாய் கிட்ட என்ன சொல்றது? எப்படி தப்பிப்பது என யோசித்துக்கொண்டே நடந்தேன்.

இங்கே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.. நானும் வசந்தியும் பக்கத்து வீடு. எனக்கு அவளை பார்க்கும் போதும், பேசும் போதும் மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வாசிக்கத்தெரியாது. வரலாறு அவளுக்கு வராதலாறு. கணக்கு விடை கண்டுபிடித்துவிடுவாள், ஆனால் தப்பான விடையாக இருக்கும். தமிழில் லாரியை விட்டு ஏற்றுவாள். அப்படிப்பட்டவள் என்னிடம் தான் சந்தேகம் கேட்பாள். போதாதா? நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் சாக்கில் அவளிடம் அறிவாளி போல் சீன் போட்டு நூல் விட்டுக்கொண்டிருப்பேன். அவளுடைய அக்கா தான் சாந்தி. எங்கள் பள்ளியில் பாதி பேர் சாந்தியின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார்கள். எனக்கென்னமோ சாந்தியை விட வசந்தி தான் பிடித்திருந்தது. ஒரு வேளை காம்ப்படிசன் கம்மியாக இருந்ததால் வசந்தியை பின் தொடர்ந்தேனோ என்கிற கேள்விக்கு இப்போது வரை என்னிடம் பதிலில்லை.

சாந்தியை பின் தொடர்ந்த பலரில் ஒருவன் செந்தில். ஏழெட்டு முறை ஃபெயிலாகி, ஒன்றிரண்டு முறை ஆசிரியரை மிரட்டி பதினொன்றாம் வகுப்பிற்கு வந்துவிட்டவன் அவன். அவன் என்னுடன் பத்தாம் வகுப்பில் ஒன்றாக படித்தவன். பதினொன்றில் தன் இனமான D பிரிவிற்கு சென்று, ஜோதியோடு இரண்டற கலந்துவிட்டவன். ஒரு மழை பெய்து முடித்த மாலைப்பொழுதில் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் வந்தான் செந்தில். நன்றாக வளர்ந்தவன். நான் அவனின் நெஞ்சு உயரத்திற்கு தான் இருந்தேன். என்னிடம் ஒரு மடித்து வைத்த பேப்பரை எடுத்து நீட்டினான். அண்ணாந்து அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தேன். அது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தது. 

“என்ன இது?”

“லெட்டர்டா.. உங்க வீட்டுக்கு பக்கத்துல தான சாந்தி இருக்கா? அவா கிட்ட கொடுத்திரு” என்று சொல்லி அந்த லெட்டரை என் சட்டை பையில் போட்டான். என் பதிலுக்கு எதிர்பாராமல் ”ஒழுங்கு மரியாதையா குடுத்துட்டு நாளைக்கு என்னனு சொல்லு” என்று கிளம்பிவிட்டான். இவனுக்கெல்லாம் எப்படி சாந்திய லவ் பண்ணனும்னு தோனுது? படிப்பு வராது, ரவுடி மாதிரி இருக்கான். அவா அழகுக்கு இவனயெல்லாம் கண்டுக்கிடவே மாட்டா. எப்படியும் லெட்டரை கிழிக்கத்தானே போகிறாள், அதற்கு முன் நாம் படித்துவிடுவோம் என்று வாசித்தால் ஒரே எழுத்துப்பிழை. கருமம் என்று மடித்துவைத்து விட்டு அவளிடம் எப்படி கொடுப்பது என யோசித்தேன்.

அன்று என் வீட்டுக்கு சந்தேகம் கேட்க வந்த வசந்தியிடம் இதை மெதுவாக தயங்கி தயங்கி சொன்னேன். அவள் சொன்ன பதில் என்னை தூக்கி போட்டது. “எங்க அக்காவும் செந்தில் கிட்ட ரொம்ப நாளா பேச முடியலையேன்னு வருத்தமா தான் இருந்தா. நல்ல வேள உன் மூலமா செந்தில் லெட்டர் குடுத்து விட்டுட்டாரு. எங்க அக்கா ரொம்ப சந்தோசப்படுவா” என்றாள். பள்ளியையே பின்னால் அலைய வைக்கும் சாந்தி, போயும் போயும் செந்திலை லவ் பண்ணுறாளா? நினைத்துப்பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் லெட்டரை கொடுத்தேன். அவள் தன் அக்காவிடமிருந்து இன்னொரு பதில் லெட்டரை கொண்டு வந்தாள். மறுநாள் அதை செந்திலிடம் கொடுத்தேன். அவன் என்னை தன் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக்கொண்டான்.

இப்படியே கொஞ்ச நாட்களாக அவன் லெட்டரை அவளிடம் கொடுப்பதும், அவள் தரும் பதில் லெட்டரை அவனிடம் கொடுப்பது என்றே அந்த காதலுக்கு தூதாக இருந்தேன். தூது என்ன தூது? கிட்டத்தட்ட மாமா வேலை. ஆமாம் அப்படித்தான் என் நண்பர்களும் என்னை கிண்டல் செய்தனர். செந்திலிடம் நான் வசந்தியை காதலிப்பதை சொன்னேன். அவன் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி, “என்ன மாதிரி உனக்கு கஷ்டமாலாம் இருக்காது, நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு. சீக்கிரம் ஓக்கே ஆகிரும்” என்று உசுப்பேற்றினான். மறுநாள் அவன் நண்பர்கள் எல்லோரும் பள்ளிக்கே தெரிய வைத்துவிட்டார்கள் என் காதலை. எவனை பார்த்தாலும் “சாந்தி தங்கச்சிய லவ் பண்றியா? சாந்தி தங்கச்சிய லவ் பண்றியா?”னு கேக்க ஆரம்பிச்சுட்டய்ங்க.

இப்படி லேசான பயத்துடன் ஒரு வித த்ரில்லான மகிழ்ச்சியை கொடுக்கும் பள்ளியில் பரப்பப்பட்ட காதலும், இன்னொரு காதலுக்கு லெட்டர் கொடுப்பதும் தொடர்ந்தது. என் பிறந்த நாள் வந்தது. செந்திலுக்கு மிட்டாய் கொடுக்கலாம் என்று தேடினால் ஆளைக் காணோம். மாலையில் அவன் நண்பர்களிடம் விசாரித்த போது ஒருவன் சொன்னான், “நீ இன்னைக்கு குடுத்த லெட்டர் சவ்வு மிட்டாய் கிட்ட மாட்டிருச்சிடா. அடி பின்னிட்டாரு. மத்தியானத்துல இருந்து அவன் ஸ்கூலுக்கு வரல” என்றான். எனக்கு லேசாக பயம் வந்தது. ’நாமளும் மாட்டிக்கிடுவோமோ?’
‘சே சே இல்ல, அவரு லெட்டர தான பாத்தாரு? அத நாம தான் குடுத்தோம்னு அவருக்கு எப்படி தெரியும்?’
‘ஒரு வேள வசந்தி கிட்டயோ சாந்தி கிட்டயோ கேட்டுட்டா? இல்ல செந்தில் ஃப்ரண்டு எவனாவது போட்டுக்கொடுத்துட்டா?’ இவ்வாறு பலவாறான சந்தேகங்களுடன் என் பிறந்த நாள் கனமான பயத்துடன் முடிவடைந்தது. இன்று என் பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் இதோ சவ்வு மிட்டாயை பார்க்க இதோ இந்த எருமைக்கெடாவுடன் வெட்டப்படும் ஆடு போல் போய்க்கொண்டிருக்கிறேன்..



வகுப்புக்குள் அந்த எருமைக்கெடா தான் முதலில் நிழைந்தது. ஏதோ எதிரி நாட்டு மன்னனை இழுத்து வந்த பெருமையுடன் நான் வரும் திசையை கை காட்டி சொன்னான், “சார் அந்த சுப்ரமணி வந்துட்டியான்”

”வாங்க ஹீரோ சார்” - சவ்வு மிட்டாயின் அந்த விநோத குரல் என்னை வரவேற்றது. ஆம் அது விநோத குரல் தான். கரகரப்பான கீச்சுக்குரல்.. வகுப்பினுள் நுழைந்த என்னை பார்த்ததும் மாணவர்களுக்குள் சல்சலப்பு. நான் செந்திலை தேடினேன். அவன் ஆளையே காணோம். நான் சீக்கு வந்து கோழி போல் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். என் அருகில் மெதுவாக வந்து காப்பு ஏறிப்போன தன் விரல்களால் என் மெல்லிய காது மடலை கவ்வி தூக்கினார். “ஸ்ஸ்ஸ்ஸ் சார் சார் சார்” என நான் கத்திக்கொண்டே பாதங்களை எக்க ஆரம்பித்தேன். அவர் இன்னொரு கையால் தன் பையில் இருந்த லெட்டரை எடுத்து “இத நீ யாருக்கிட்ட வாங்கிட்டு வந்து யாருக்கிட்ட குடுத்த?”

“எத சார்?”

“எதையா?” என் காதை இன்னும் அழுத்தினார். காது முழுவதும் ஒரு வித சூடு பரவியது. அந்த லெட்டரை விரித்து வாசிக்க ஆரம்பித்தார். டார்லிங், செல்லம் என்கிற செல்ல வார்த்தைகளும், செந்திலின் அம்மா அப்பாவை, அவள் அத்தை மாமா என்று குறிப்பிட்டிருந்ததும், அந்த வலியிலும் என் காதுகளில் விழுந்தன. நல்ல வேள செக்ஸியா எதுவும் எழுதல என்று நினைத்துக்கொண்டேன். இல்லேனா அந்த கோவமும் என் காதில் தானே பாயும்? ஒரு அளவுக்கு மேல் வலியை தாங்க முடியவில்லை. “ஸ்ஸ்ஸ் சார் சார் நான் தான் சார் குடுத்தேன். சாந்திக்கிட்ட வாங்கி செந்தில் கிட்ட குடுத்தேன் சார்”.

நான் சொன்ன மறுநொடி காதில் இருந்து அவர் விரல்கள் விடுபட்டன.. தப்பித்தோம் என நினைக், ‘சொத்’ - என் செவிட்டில் ஒரு அறை விழுந்தது. “ஏன்டா வீட்ல கஷ்டப்பட்டு படிக்க அனுப்புனா இங்க வந்து படிக்காம மாமா வேல பாக்குறிங்களோ?”

”சாரி சார்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார்”

“அப்ப நேத்து வரைக்கும் பண்ணதுக்கு? ஒன்னலாம் ஹெட் மாஸ்டர் கிட்ட சொல்லணும்டா. என்னமோ A செக்‌ஷன் பயலுக தான் ஒழுக்கமானவைங்க, D செக்‌ஷன்னாலே ஆடுகாளிங்குற மாதிரி பேசுறான்ல, அவன் கிட்ட ஒன்ன காட்டி சொல்லணும், ‘பாருய்யா A செக்‌ஷன்லயும் பொறுக்கிப்பயலுக இருக்காய்ங்க’னு”

“சார் சார் வேண்டாம் சார். ப்ளீஸ் சார்” முட்டிக்கொண்டு வந்த அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. மதிய சாப்பாட்டு மணி அடிக்கப்பட்டது.

“உங்க வீட்ல சாப்பாடு குடுக்க வருவாங்களாடா?”

“இல்ல சார்”

“சரி ஒங்க அப்பா அம்மாவா கூட்டிட்டு வா”

“சார் ப்ளீஸ் சார் வேண்டாம் சார். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார்” அழுகையினால் வார்த்தையும் குரலும் சரியாக வரவில்லை. மற்ற வகுப்பு மாணவர்கள் வராந்தாவில் போய்க்கொண்டிருக்கும் போது இங்கு நடக்கும் களேபரங்களை பார்த்துக்கொண்டே சென்றார்கள். இந்த வகுப்பில் மட்டும் எல்லோரும் அமைதியாக இந்த கிளாடியேட்டர் சண்டையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சரி இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்னு எழுதிக்குடு, ஒன்ன விட்டுறேன்” சினிமாவில் சொத்தை எழுதி கேட்கும் வில்லன் கும்பல் தலைவன் போல் பேசினார். ஆளை விட்டால் போதும் என்று எழுத ஆரம்பித்தேன். அழுததில் என் மூக்கு ஒழுக ஆரம்பித்து விட்டது. லெட்டரை எழுதி அவரிடம் கொடுத்தேன். சத்தமாக வாசித்தார். “மதிப்பிற்குரிய ஐயா, இனிமேல் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் - என்னடா இது லெட்டரு? இனிமேல் என்ன பண்ண மாட்டனு எழுது.. ஒன்ன எதுக்கு மன்னிக்கணும்னு எழுது” என்றார். ஒவ்வொரு முறையும் நான் எழுதுவதில் குற்றம் குறை சொல்லி, கடைசியில் ஆரம்பம் முதல் கடைசி வரை நடந்த அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டார். நல்ல வேளையாக என் - வசந்தி காதல் பற்றி அவரும் கேட்கவில்லை, ஆர்வக்கோளாறில் நானும் எதையும் உலறவில்லை. 

நான் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை மடித்து தன் பையில் வைத்துக்கொண்டு, “சரி போய் சாப்புடு. சாப்ட்டு வரும் போது உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வா”

“சார் அதான் லெட்டர் எழுதிட்டேன்ல சார்? ப்ளீஸ் சார், அவங்கலாம் வேண்டாம் சார்” இப்போது மூக்கோடு சேர்ந்து என் கண்களும் ஒழுக ஆரம்பித்துவிட்டன.

“வீட்ல இருந்து கூட்டிட்டு வா, இல்லேனா இந்த லெட்டர ஹெட்மாஸ்டர் கிட்ட குடுத்துருவேன். என்ன பண்ண நீயே சொல்லு?” நான் அழுதுகொண்டே நின்றேன். என் பதிலுக்கு எதிர்பாராமல், “போ போயி வீட்ல இருந்து கூட்டிட்டு வா” என்று சொல்லி அவர் சாப்பிட கிளம்பிவிட்டார்.

என் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டதில், பலரும் சொன்னவைகளின் சாராம்சம் இது தான் - ஹெட் மாஸ்டர் கிட்ட மேட்டர் போயி டி.சி கிழியுறத விட பேசாம வீட்ல இருந்து கூட்டிட்டு வந்து நாலு அடி வாங்கிக்கிடலாம். ஆனால் எனக்கு வீட்டில் சொல்ல மிகவும் அசிங்கமாய் இருந்தது. ஒரு பதினொன்றாம் வகுப்பு மாணவன் அவன் பெற்றோர்களிடம் போய் “என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரு லவ் பண்ணாங்க. நான் தான் அவங்களுக்கு லெட்டர் குடுத்து ஹெல்ப் பண்ணேன்”னு சொன்னா என்ன நினைப்பாங்க தங்கள் பிள்ளையை பற்றி? ’இப்ப யோசிச்சி என்ன பண்ணுறது? இவ்வளவு பண்றவன் மொதையே யோசிச்சிருக்கணும்’ என்று நானே என்னை நொந்துகொண்டு பள்ளிக்கு வெளியில் இருக்கும் ஃபோன் பூத்துக்கு சென்று பக்கத்து வீட்டு எண்ணை அழைத்தேன்.

என் அம்மாவை கூப்பிட சொன்னேன். என் அம்மா வந்து “ஹலோ என்னடா இந்த நேரத்துல?” என்று சொல்லி முடிக்கும் முன் கட கடவென எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டேன். “என்னடா இப்படி பண்ணிட்ட?” தன் மகனா இப்படி என நம்பமுடியாமல் கேட்டார். “ப்ளீஸ்மா யாருக்கிட்டயும் சொல்லிறாதீங்க. நீங்க மட்டும் ஸ்கூலுக்கு வாங்க. அப்பாவ கேட்டா ஊருக்கு போயிருக்காங்கன்னு சொல்லிருங்க”. அப்பாவுக்கு மட்டும் இது தெரிந்தால் என்னை வெளுத்துவிடுவார் என்று தெரியும். அடுத்த வாரத்தில் இருந்து கடன் வாங்கி, வாரத்தில் எட்டு நாட்கள் என்னை அடிப்பார். அடித்தால் தான் பிள்ளை உருப்படும் என்பது அவர் பாலிஸி. “ம்மா சொல்லுங்கம்மா”

அம்மா திரும்பவும், “என்னப்பா இப்படி பண்ணிட்ட?” என்று சொல்லி ஃபோனை வைத்தார். அவரும் அழுதிருக்க வேண்டும். 

மதியம் நான் சாப்பிடவில்லை. மதிய வேளை முதல் வகுப்பு பிசிக்ஸ். பிசிக்ஸ் டீச்சர் வந்து புரியாத எழுத்துக்களை போர்ட்டில் எழுதி ஏதோ கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். என் கண்கள் வாசலை நோக்கி என் அம்மாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. தூரத்தில் கிரவுண்டில் அம்மா யாரிடமோ விசாரித்துக்கொண்டிருந்தார். அவர் என் வகுப்பை நோக்கி கையை காட்டினார். அம்மாவுக்கு அருகில் அப்பாவும், தாத்தாவும்!!! எனக்கு அடிவயிற்றில் அடைக்க ஆரம்பித்துவிட்டது. தொண்டை வறண்டு போய்விட்டது. நான் வேகமாக பிசிக்ஸ் மிஸ் கிட்ட “மிஸ் எங்க அம்மா வந்திருக்காங்க. நான் பாத்துட்டு வந்துறேன்” என்று என் அம்மா வந்த திசையை நோக்கி கை காட்டி நடந்தேன்.



நான் வருவதை பார்த்ததும் என் அப்பா வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு விறுவிறுவென முன்னேறினார். என் அம்மா அவரை தடுக்க வேகமாக வந்தார். என் தாத்தா அந்த இருவரின் வேகத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் வேகமாக நடக்க முயன்றார். என் அப்பா என்னை அடிக்க கையை ஓங்குவதற்குள் என் அம்மா அவரை தடுத்துவிட்டார். அதற்குள் தாத்தாவும் “மாப்ள எதா இருந்தாலும் வீட்ல போயி பாத்துக்கிடலாம். மொத அந்த வாத்தியார் எங்க இருக்காருனு கேளுங்க” என்றார்.

அந்த மூவரையும் நான் சவ்வுமிட்டாயின் வகுப்புக்கு அழைத்துப்போனேன். என் அப்பா அம்மவை பார்த்ததும் அவர் ஒன்றுமே பேசாமல் நான் அவரிடம் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை அவர்களிடம் காமித்தார். அவர்கள் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே, ”ஒங்க மவன் செஞ்சிருக்குற வேலைய பாத்தீங்களா?” என்றார். அம்மா அழ ஆரம்பித்து விட்டார். “சார் நாங்க இவன இனிமேல் ஒழுங்கா பாத்துக்குறோம் சார். ஹெட் மாஸ்டர் கிட்டலாம் சொல்லிறாதீங்க சார்” என்று அம்மா அவரிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

“ஒங்க பயல ஹெட்மாஸ்டர் கிட்ட சொல்லி ஸ்கூல விட்டு நிறுத்துறது என் ஆசை இல்ல. பிள்ளைங்க என்ன பண்றாங்கன்னு பெத்தவங்களுக்கு தெரியணும்னு தான் உங்கள கூட்டிட்டு வர சொன்னேன். இனிமேலாவது பொறுப்பா பாத்துக்கோங்க” - பேசிக்கொண்டே என் அப்பாவின் கையில் இருந்த அந்த லெட்டரை வாங்கி கிழிக்க ஆரம்பித்திவிட்டார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா வீட்ல சொல்லிருக்கவே வேண்டாமே என நொந்து கொண்டேன்.

என் தாத்தா சற்று கோவமான குரலில் அவரிடம் “அப்ப நாங்க கெளம்பலாம்ல?” என்றார். “ஹிம் போயிட்டு வாங்க சார், பையன பாத்துக்கோங்க” என்றார் மறுபடியும். அவருடைய வகுப்பில் இருந்து கீழே இறங்கினோம்.



“வீட்டுக்கு வா ஒனக்கு இருக்கு” என்று மிரட்டினார் அப்பா. “வேற என்னடா?” - இது தாத்தா..

“ஒன்னும் இல்ல தாத்தா”

“சரி நீ ஒம்பாட்டுக்க கிளாஸ்க்கு போ. சாந்திரம் பத்திரமா வீட்டுக்கு வா. நாங்க பொயிட்டு வரோம்” என்று என் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார். அம்மாவின் கண்களில் பையன் இப்படி பண்ணிவிட்டானே என்கிற வருத்தம் தான் இருந்தது. அதே வருத்தம் என் அப்பாவின் கண்களில் கோபமாக சிவந்திருந்தது.

வகுப்பிற்கு சென்றுவிட்டேன். மாலை பள்ளி முடிந்தது வீட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஒரே யோசனை. எங்காவது போகலாம் என்றால் எங்கு போக? என்ன செய்ய? யார் வீட்டில் டிவி பார்க்க? வசந்தியை எப்படி பார்க்க? சோற்றுக்கு என்ன செய்வது என்று பல கேள்விகள்.. வேறெங்கும் செல்வதற்கும் பயமாக இருந்தது. எங்கோ தொலைந்து போய் கஷ்டப்படுவதற்கு பதிலாக வீட்டில் கொஞ்சம் அடிவாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து சைக்கிளை வீட்டிற்கு அழுத்தினேன்.

பள்ளியிலும் சாலையிலும் தெருவிலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. பிரமையா அல்லது நிஜமாகவே என்னைத்தான் பார்க்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை. நேராக வீட்டிற்குள் நுழைந்தேன். என்னை யாரும் சட்டை செய்தது போலே தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கு மேல் அப்பாவும் வேலையில் இருந்து வந்தார். அவரும் என்னை எதுவும் கேட்கவில்லை. இரவு சாப்பிட்டு விட்டு உறங்கினோம். தூக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன்.

“அதாங்க அவனுக்கு நேரம் சரியில்லை. அதான் இப்படிலாம் பண்ணிட்டான்”

“எனக்கு வர கோவத்துக்கு அவன ரவ ரவையா உரிச்சிருப்பேன். மொளச்சு மூனு எல விடல, அதுக்குள்ள என்ன வேலையெல்லாம் பாக்குறான் பாத்தியா?”

“விடுங்க, அதான் ஜோசியக்காரரு சொல்றாருல, அவனுக்கு இப்ப ஏழரை சனி நடக்குது, அப்படித்தான் இருப்பான்னு. இன்னும் ஏழு வருசம் இப்படித்தான் இருக்கும். நாம தான் சூதானமா பாத்துக்கணும். நீங்க பாட்டுக்க அடிக்க, அவன் எதாவது பண்ணிக்கிட்டா?”

“என்னமோ பண்ணித்தொல. ஏதோ ஜோசியம் ஏழரனுலாம் சொல்றனால அவன் தப்பிச்சான். இல்லேனா அவன் பண்ண வேலைக்கு கொன்னே போட்டிருப்பேன்”

’என்னடா இது அவனவன் ஏழரை வந்தா உயிரே போன மாதிரி பயப்படுறாய்ங்க, நம்மள மட்டும் அப்பாக்கிட்ட இருந்து காப்பாத்திருச்சி?’ என எனக்கு அந்த ஏழரையை நினைத்து சந்தோசமாக இருந்தது. ஏழரைக்கும் சனி பகவானுக்கு நன்றி சொல்லி நிம்மதியாக உறங்கப்போனேன்..

20 comments

  1. கதைல வர்ற மைன்ட் வாய்ஸ் எல்லாமே ரொம்ப சிரிப்பா இருக்கு.. :)
    ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. போட்ருக்க படங்கள் கூட நல்லா இருக்கு.
    நன்றி இப்படி ஒரு கதை தந்ததற்கு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்மணி.. அந்த மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு சிரிப்பா இருந்தாலும், அந்த நிலையில் இருந்த மாணவன் அன்றைக்கு மிகவும் வருத்தமாக அவமானமாக தான் உறங்கப்போனான்

      Delete
  2. நல்லதொரு கற்பனை! அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. சொந்தக்கதை சோக கதை !

    இனிய தீபாவளி வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. எல்லாம் அந்த வயசுல நடக்குறது தானே?

      Delete
  4. நம்ம ஸ்கூல்-ல இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சிபிஐ-யை விட பயங்கரமான விசாரணை நடக்குமே.

    இந்த கதையை படிக்கும் போது ஸ்கூல் ஞாபகங்கள் எல்லாம் வருது.

    Thanks for Sharing.

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. அந்த பருவ மாற்றத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சஞ்சலங்களை போக்க முயற்சி செய்யாமல் அதை பெருசாக்கி, மாணவர்களை குற்றவாளி போல் எல்லோர் முன்னரும் அசிங்கப்படுத்தி அவர்களை இன்னும் மோசமானவர்களாக மாற்றுவது தான் நம் பள்ளி அப்போது செய்தது.. 8 வருடங்கள் ஆகிவிட்டன.. இப்போதும் அப்படி தான் உள்ளதா என்று தெரியவில்லை

      Delete
  5. எங்கள் அருமை ராம்குமாரின் அற்புதமான பதிவு.
    என்ன அருமையான உணர்ச்சி வெளிப்பாடு; இழையோடும் நகைச்சுவை.
    படித்துப் பாருங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் ராம்குமார்.
    (ஆனால் ஆசிரியருக்கு பட்டப் பெயர் வைப்பது எனக்கு என்னவோ போல் படுகிறது)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. அந்த வயதில் ஆசிரியருக்கு பட்டப்பெயர் வைப்பதெல்லாம் சகஜம் தானே? பட்டப்பெயர் வைத்திருக்கும் ஆசிரியர்கள் தான் காலம் கடந்தும் நம் நினைவில் இருக்கிறார்கள்.. அது போல் நம்மை ஏதோ விதத்தில் கவரந்த ஆசிரியருக்கு தான் பட்டப்பெயர் வைக்கிறோம்.. :-)

      Delete
  6. simply superb!! i remember my school days :)

    ReplyDelete
  7. Anna. Awesome anna. I remember my school days . It was your own experience or others experience ?

    ReplyDelete
    Replies
    1. thanks karthick.. its an organised incidents of many peoples' experience

      Delete
  8. அருமை அருமை பள்ளிகூட வாழ்கையை அப்படியே கண்முன் நிறுத்தியது ...! தெளிவான நடை வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One