நாம் படித்த வரலாறு நம் வரலாறு தானா?

Thursday, August 7, 2014

சென்னையில் இருக்கும் ஃபேஸ்புக், ப்ளாக் நண்பர்கள் எல்லாம் அடிக்கடி எதாவது புத்தக வெளியீடு, குறும்பட வெளியீடு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்வதாகச் சொல்வார்கள்.. எனக்கும் கூட அங்கெல்லாம் செல்ல வேண்டும், ஓசியில் சமோசா, டீ, அசோகா அல்வா எல்லாம் சாப்பிட வேண்டும் என ஆசையாகத்தான் இருக்கும்.. ஆனால் அசோகா அல்வாவிற்காக லாஸ் ஆஃப் பேயில் சென்னை செல்வது எல்லாம் டுவெண்டி மச் என்பதால் நான் அங்கெல்லாம் போனதில்லை.. இருந்தாலும் ஏதாவது நூல் வெளியீட்டு விழாவினை பார்த்துவிட வேண்டும் என பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்..  

பல நாள் கனவு ஒரு நாள் நிறைவேறும் தானே? ஜூலை மாத இறுதியில் எனது மதிப்பிற்குரிய திரு.ரத்னவேல் ஐயா அவர்கள் என்னை அழைத்தார்.. “ராம் குமார், ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் தேதி, சனிக்கிழம விருதுநகர்ல ஒரு புக் ரிலீஸ் function இருக்கு.. முடிஞ்சா வாங்க” என்று.. அவரிடம் எனக்குப் பிடித்த விசயம் இது தான்.. அவர் நினைத்தால் என்னை “கண்டிப்பா வா” என்று சொல்ல முடியும்.. அந்த அளவு அவருக்கு உரிமையும் உண்டு, நானும் அவர் பேச்சை மறுக்க மாட்டேன்.. ஆனாலும் அவர் அப்படிச் சொல்ல மாட்டார்.. ’நமக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல விசயத்தை நாலு பேருக்குச் சொல்வோம்.. பிடிச்சா, நேரம் இருந்தா வரட்டும், இல்லாட்டி வேண்டாம்’ இது தான் அவரின் policy.. எப்போதும் அடுத்தவரின் சூழ்நிலை, அவர்களின் constraints அறிந்து பேசக்கூடியவர்.. சனிக்கிழமை எனக்கு வேலை நாள் என்பதால் அப்படிச்சொன்னார், எங்கு நான் வேலைக்கு ஓப்பி அடித்து விடுவேனோ என்கிற அக்கறையில்.. ஆனால் அவருக்குத் தெரியாது, சேல்ஸ் வேலையின் பிறப்புரிமையே ஓப்பி அடிப்பது தான் என்பது.. ஃபேஸ்புக் நண்பர் திரு.அழகி அழகர் ராஜ் சாரும் என்னை அழைத்திருந்தார் நிகழ்ச்சிக்கு.. இவரும் நிறைய பெரிய ஆட்களின், நல்ல மனிதர்களின் பழக்கம் கொண்டவர்.. சனிக்கிழமை மாலை விருதுநகரில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டோம்..

சனிக்கிழமை மாலை அவர்கள் அனைவருக்கும் முன்பே நான் விருதுநகர் வந்துவிட்டேன்.. என்னையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.. எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றியோ, புத்தகம் பற்றியோ, எதுவும் தெரியாது.. ரத்னவேல் ஐயாவும், அழகர் ராஜ் சாரும் அழைத்தார்கள், போனேன் அவ்வளவே.. அங்கு இறங்கி மண்டபத்தின் உள்ளே நுழைந்த போது தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய நிகழ்ச்சி என.. அங்கு வரும் ஒவ்வொருவரையும் கை கூப்பி, கை கொடுத்து வரவேற்றுக்கொண்டிருந்தவர் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.. இது அவரின் பங்களிப்பில் செயல்படும், “பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்” என்னும் ஆய்வு மையத்தில் இருந்து வெளியிடப்படும் நூல்.. ’ஆஹா ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்னு சாதாரணமா நெனச்சா நம்ம ஆளுங்க Ex அமைச்சர் வரை பழக்கம் வைத்திருக்கிறார்களே’ என கொஞ்ச நேரம் ஆடித்தான் போனேன்.. நூலின் தலைப்பு, ”வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்”..





பொதுவாகவே எனக்கு வரலாற்றில் கொஞ்சம் ஆர்வம் அதிகம்.. ஏனென்றால் அதில் இருக்கும் fantasy.. புத்தகத்தில் இருக்கும் விசயங்களை கற்பனை செய்து கொண்டு, அந்தக்கால மக்களின் வாழ்க்கையை மூளைக்குள் ஓட்டிப்பார்ப்பது ஒரு வித போதை & சுகம்.. வரலாற்றின் எச்சங்களாய் நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களையும், சிலைகளையும் பார்ப்பது உடம்புக்குள் ஒரு வித பயத்தையும், கிளர்ச்சியையும் ஒரு சேரக் கொடுக்கும்.. அதற்கும் மேல் இது என் சொந்த மண்ணின் வரலாற்றை பேசப்போகும் நூல்.. அதனால் இன்னமும் ஆர்வம்.. நூலை இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.. அதனால் அதில் உள்ளதைப்பற்றி இன்னொரு பதிவில் விபரமாகக் கூறுகிறேன்.. இப்போது அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் பேசிய, அங்கு நடந்த சில முக்கிய விசயங்கள் மட்டும் இந்தப்பதிவில்..

பேசிய அனைவருமே வரலாற்றின் மேல் நமக்கு இருக்கும் அசட்டையை சுட்டிக்காட்டினார்கள்.. வரலாற்றை, அதன் சின்னங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும் என்கிற அக்கறை அவர்களின் பேச்சில் வெளிப்பட்டது.. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு குளக்கரையில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் திரு.க.திருமாறன் அவர்கள் அதை படம் எடுத்து சென்றிருக்கிறார்.. இன்னொரு முறை அதை நேரில் பார்த்தால், மேலும் பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வந்த அவருக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி.. காரணம், அவர் மீண்டும் வந்த போது அங்கு குளம் இருந்ததற்கான சுவடு கூட இல்லையாம்.. கல்வெட்டு பற்றிக்கேட்டாலும் ஒருவருக்கும் அதைப்பற்றித் தெரியவில்லை.. மேலும் அவர் சமண மதக் கோயில்களும், சிலைகளும் எப்படி இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டன என்பதையும் விளக்கினார்.. அறியாமையாலும், வேண்டுமென்றேவும் இந்து மதச்சிற்பங்கள் போல் அவை மாற்றப்பட்டு விட்டதால் தமிழகத்தில் சமண மதம் பற்றிய ஆராய்ச்சிகள் முழுதாக செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் வருந்தினார்.. இப்போதும் ஃபேஸ்புக்கில் பலரும் தமிழரின் மதம் சமணம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் எது உண்மை என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்..

ஒவ்வொரு கல்வெட்டும் அது பதிக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி மட்டும் கூறுவதல்ல.. கல்வெட்டுக்கள் எல்லாம் பாலம் மாதிரி.. ஒரு ஊரில் இருக்கும் கல்வெட்டு அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஊரின் கோயில்களைப் பற்றியும், பிற விசயங்களைப் பற்றியும் தகவல்கள் கூறும் என்கிறார் வங்கியாளர் திரு.இரா.பாலச்சந்திரன்.. இவர் வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் வரலாற்றின் மேல் தனக்கு இருந்த தீராத ஆர்வத்தால் அதைப்பற்றியும் மிகுந்த ஆராய்ச்சி செய்பவர்.. சிவகாசிக்கு அருகில் இருக்கும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒன்றில் அங்கிருந்து பல கி.மீ. தள்ளி இருக்கும் T.மானகசேரி என்னும் கிராமத்தில் இருக்கும் இன்னொரு கோயிலைப்பற்றி செய்தி இருக்கிறது.. இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பலரும் அந்த கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் கோயில் திருத்தங்கல் தான் என்று ரொம்ப வருடங்களாக நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்..




விருதுநகர்-அருப்புக்கோட்டை மார்கத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்தில் ஒரு கல்வெட்டுக்கு மக்கள் பூஜை எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள்.. அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்த திரு. பாலச்சந்திரன் அவர்கள் அந்த கல்வெட்டை ஆராய்ந்திருக்கிறார்.. அதில் சோழ மன்னன் ஒருவன் இந்த ஊருக்கு கட்டிக்கொடுத்திருக்கும் சிவன் கோயிலைப் பற்றிய செய்தி இருந்திருக்கிறது.. ஆனால் கல்வெட்டை பூஜிக்கும் அந்த கிராம மக்களுக்கோ அப்படி ஒரு கோயில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை..  அருகில் தேடி அலைந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராம மக்கள் கொல்லைக்குப் போகும் இடம் வரை வந்துவிட்டார்.. அங்கு ஒரு சிறுவன் ஒரு திண்டில் குத்த வைத்து அமர்ந்து பேண்டு கொண்டிருந்தான்.. ‘அய்யே இங்க வந்துட்டோமா?!’ என்று அய்யறவாக திரும்ப நினைத்தவருக்கு பெரிய ஷாக்.. அந்தப்பையனைத் திரும்பி மீண்டும் பார்த்தார். அவன் குத்த வைத்து அமர்ந்திருந்த அந்தத் திண்டு ஒரு சிவலிங்கம்.. அவன் அந்த லிங்கத்தின் ஆவுடையார் மீது குத்த வைத்திருந்தான்.. அந்தக்கோயில் அப்போது அந்த ஊரில் திறந்த வெளி கழிப்பிடமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.. அந்த மக்களுக்கு அவர் அந்த கல்வெட்டு பற்றியும், அவர்களின் கழிப்பிடம் தான் அந்தப்பழமையான கோயில் என்றும் விளக்கிய பின் இப்போது அந்த கிராம மக்களே அந்தக் கோயிலுக்கு வேலி போட்டு பராமரித்து வருகிறார்களாம்.. ஹ்ம் இப்படியும் சிலர்..

வேறு சிலரும் இருக்கிறார்கள்.. சிவகாசியில் இருந்து 15 கி.மீ.ல் இருக்கும், வெம்பக்கோட்டையில் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.. அதில் ரோமானியர்களோடு பாண்டியர் கொண்டிருந்த வணிகம் பற்றிய குறிப்புகள் இருந்ததாக இவருக்கு ஒரு சந்தேகம்.. அதைப்பற்றி ஆராயலாம் என்றால், அந்த கல்வெட்டு இப்போது இருக்கும் இடத்தின் சொந்தக்காரர் விடவில்லை.. அங்கிருந்த ஒரு பெண் சாமியாடவும் ஆரம்பித்துவிட்டாராம்.. ”இவர் மெதுவாக நீங்க இப்படியெல்லாம் பண்ணுனா போலீஸை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று பொய்யாக மிரட்டியதும், வெறித்தனமாக வந்த சாமி சைலண்ட்டாக அந்தப்பெண்ணை விட்டு ஓடிவிட்டதாம்... இப்படித்தான் பலரும் பெரிய பெரிய பொக்கிஷங்களை அதன் அருமை தெரியாமல், தங்களை அறியாமலேயே சிதைத்து வருகிறார்கள் என்று வேதனைப்பட்டார்.. வெம்பக்கோட்டையை சுற்றிய பல பகுதிகளில் ரோமானியர்களின் வேலைப்பாடுகள் நிறைந்த, ரோமானிய மக்களின் காசுகள், சிறு குவளைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றனவாம்.. இன்னமும் பல இருக்கலாம், ஆனால் மக்களின் அறியாமையாலும், அரசுக்கு இதை சொன்னால் தங்கள் இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்னும் பயத்தாலும் பலரும் சொல்வதில்லை..

திருச்சுழி அருகில் முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட ஒரு சிறு தடுப்பணை இருந்திருக்கிறது.. அதைப்பற்றிய கல்வெட்டு எல்லாம் கிடைத்த பின் அங்கு சென்று பார்த்தால், அந்த அணை இருந்ததற்கான சுவடே இல்லை.. லோக்கல் செங்கல் சூளை ஆட்கள் அந்த அணையின் கரையில் இருக்கும் மண்ணை எல்லாம் செங்கல் செய்ய எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.. இப்போது அது வெறும் பொட்டல்.. அந்தக் கல்வெட்டை மட்டும் வைத்து என்ன பண்ண முடியும் இனி? என நொந்து போய் கேட்டார் நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான திரு.பொ.ராசேந்திரன் அவர்கள்.. பள்ளிகளிலும் கூட வடநாட்டவர்களின் வரலாறு தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.. பானிபட் போரைப்பற்றி ஒரு தமிழ்ச்சிறுவன் தெரிந்து கொள்வதை விட, தன் மண்ணில் சேரனும், சோழனும், பாண்டியனும் ஆண்டதைப் பற்றி தெரிந்து கொள்வது தானே முறை? அப்போது தானே அவனுக்கு அவன் மண் மீது ஒரு மரியாதை வரும்? வெள்ளூர் என்னும் ஊரில் பாண்டியனுக்கும் சோழனுக்கு நடந்த மிகப்பெரிய போர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.. ஆனால் அது தமிழ்நாட்டின் எந்த வரலாற்றுப்புத்தகத்தில் உள்ளது? என்றெல்லாம் பல கேள்விகளை அடுக்கினார் ஆசிரியர்.. ஹ்ம் நம் நாட்டில் சமூக ஆர்வலர்களிடம் கேள்விகள் பல கொட்டிக்கிடக்கின்றன.. ஆனால் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களோ அந்தக் கேள்விகளை சட்டை செய்வதாகவே தெரியவில்லை..

தொல்லியல் துறை என்பதே, சோம்பேறிகள் ஒரு வேலையும் செய்யாமல் பொழுதை ஒப்பேற்றும் துறை. யாராவது ஒன்றிரெண்டு பேர் தான் உண்மையான ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும், பொறுப்புடனும் அங்கு வேலை செய்வார்கள். சரி பொறுப்பில் இருப்பவர்கள் தான் சரியில்லை, பொது மக்களிடமாவது அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரலாற்றை காப்பாற்றலாம் என்றால், “இதுனால எனக்கு என்ன யூஸ்?” என்று அனைத்தையும் பணமாகவே அணுகும் மிடில் கிளாஸ் புத்தி மக்களையும் தடுக்கிறது என்றார் பசுமை நடை மூலம் மதுரையைச் சுற்றி அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள்.. தாண்டிக்குடி அருகில் முதுமக்கள் தாழிக்கும் முந்தைய முறையான அடக்கம் செய்தல் பற்றியும் பேசினார்.. ஒரு மன்னனையோ, அல்லது அந்த சமூகத்தில் பெரிய ஆளையோ இறந்த பின் புதைத்து அதை கற்களால் மூடிவிட்டு, சுற்றிலும் மிக உயரமான தட்டையான கற்களை நட்டு வைத்துவிடுவார்கள்.. மன்னனைப் புதைத்த இடத்தில் அவன் பயன்படுத்திய பொருட்கள், வாள் எல்லாம் இருக்கும்.. ஒரு சிறு குடுவையில் அவனுக்கு சாப்பிட தானியங்களும் போடப்பட்டிருக்குமாம்.. அந்த தானியங்கள் இன்று வரை கெடாமல் இருக்கின்றன.. அதாவது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உணவுப்பொருட்களை கெட விடாமல் வைத்திருக்கும் அந்த தொழில்நுட்பம் தமிழனிடம் இருந்திருக்கிறது.. தொல்லியல் துறையின் முக்கியமான பணி என்பது கடந்த காலத்தின் இது போன்ற ஆச்சரியமான விசயங்களை நிகழ்காலத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படுவது தான் என்கிறார் அவர்.. ஹ்ம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களிலும் சரியான வேலையாள் கூட இல்லாத நாட்டில் அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் மிகப்பெரிய பேராசை தான்.. 



கடைசியாகப் பேச வந்தார் முன்னாள் அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.. அவரும் வரலாற்றின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் அலட்சியம் குறித்து பேசினார்.. மேலும் தமிழ்நாட்டின் வரலாறு என்றாலே சோழர்களைப் பற்றித்தான் அதிகம் படிக்கிறோம்.. பாண்டியர்களுக்கும் அதற்கு இணையான வரலாறு உண்டு என்றார்.. சோழர்களிடம் மட்டும் தான் “பள்ளிப்படை” என்கிற வழக்கம் இருந்ததாகக் கூறுகிறார்கள்.. அதாவது ஒரு மன்னனோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் நினைவாக ஒரு கோயில் கட்டப்படும். அது தான் பள்ளிப்படை என்றழைக்கப்படும். திருச்சுழிக்கு அருகில் பள்ளிமடம் என்றொரு இடம் இருக்கிறது.. பள்ளிப்படை என்பது தான் மரூவி பள்ளிமடம் ஆகிவிட்டது.. பாண்டியர்களிடமும் இந்தப்பழக்கம் உண்டு என்றார் அவர்.. ஒரு அரசியல்வாதியாகப் பேசாமல் வரலாற்றுக்காதலனாக, சொந்த பூமியின் மீது அக்கறை கொண்ட ஒரு மண்ணின் மைந்தனாக அவர் பேசிவது மிகவும் சிறப்பு..

பொதுவாகவே பலரும் அங்கு வருந்திக்கூறிய விசயம், தமிழக வரலாறுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று தான்.. உண்மை தானே? முகலாயப்பேரரசுகளைப் பற்றியும், டெல்லி சுல்தான் பற்றியும், ராஜபுத்திரர்களின் கௌரவம் பற்றியும் தெரிந்து ஒரு தமிழ் மாணவன் என்ன செய்யப்போகிறான்? அவன் சார்ந்த மண்ணின் வரலாறு தெரியாமல் அவன் எப்படி தன் மண்ணைப் பற்றி உயர்வாக நினைப்பான்? அப்படியே தமிழக வரலாறு என்றாலும் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம், கல்லணை என்று மேம்போக்காகத்தான் பாடங்களில் வருகின்றன.. பாண்டியர்களின் வரலாற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.. சோழர்களுக்கு சற்றும் குறைந்ததல்ல பாண்டியர்களில் வரலாறு.. சொல்லப்போனால் கப்பல் படையை வைத்து போர் தான் புரிந்தான் சோழன்.. ஆனால் ரோமானியர்களோடு கடல் வாணிபம் செய்து, நல் உறவு வைத்திருந்தான் பாண்டியன்.. ஆனால் பாண்டியனின் துறைமுகமாகிய கொற்கை இப்போது எங்கிருக்கிறது என்றாவது யாருக்காவது தெரியுமா? இஸ்லாமியர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, நாம் கடல் வழியாக அரபு நாடுகளுடன் வாணிபம் செய்தவர்கள்.. இதெல்லாம் எந்த வரலாற்றுப்புத்தகத்தில் வரப்போகிறது? இன்னும் சில வருடங்கள் கழித்து நாம் இப்படி சொன்னால் யாராவது நம்பவாவது செய்வார்களா? 

ஆனால் எனக்கு சிறியதாக ஒரு சந்தோசம் இந்த நிகழ்ச்சியில்.. பொதுவாக நாகரிகம் எல்லாம் ஆற்றங்கரை ஓரத்தில் தான் இருக்கும்.. தொழில் முன்னேற்றம் வந்த பின் தான் மக்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பிழைக்க ஆரம்பித்தார்கள் என்னும் தகவல் உண்டு.. ஆனால் 2000 ஆண்டு பழமையான ரோமானிய நாணயங்களும், பல கல்வெட்டுக்களும் காய்ந்து போன பூமியான விருதுநகர் மண்ணில் இருந்து கிடைத்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்..ஒரு வேளை அப்போது எங்கள் மண் செழிப்பாக இருந்திருந்ததா, அல்லது இப்போது இருப்பது போலவே அப்போதும், மழையை நம்பாமல் உழைப்பை நம்பிய மக்கள் மிகுந்து இருந்தார்களா என்று தெரியவில்லை.. ஆனாலும் என் மண் 2000 ஆண்டு பழைமையான வரலாறை சுமந்து திரிவதில் எனக்குப்பெருமையும் சந்தோசமும் தானே?.. 

ஒரு சில கொசுறுகள்:

1. நிகழ்ச்சிக்கு உண்மையான ஈடுபாட்டுடன் விரும்பி வந்தவர்கள் என்றால் சில ஃபேஸ்புக் நட்புக்களும், VVV கல்லூரியின் சில மாணவிகளும், ஒன்றிரெண்டு விரிவுரையாளர்களும் தான்.. வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லோக்கல் திமுக ஆட்கள் தான்.. கல்லூரிகளில் நமக்கு சம்பந்தம் இல்லாத துறையில் செமினார் நடக்கும் போது கூட்டம் காட்டுவதற்காக கட்டாயமாக அழைத்துப்போய் உட்கார வைப்பார்களே, அது போல் தான் அந்த கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள்.. யார் பேசுவதையும் கேட்காமல் அவர்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள் ஜாலியாக..



2. அனைத்தையும் முன்னின்று நடத்தியதால் அடிக்கடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.. அவர் தங்களை கடக்கும் போதெல்லாம் ஒரு சில கரை வேட்டிகள் படார் படார் என்று எழுந்து விரைப்பாய் நிற்பதும், வணக்கம் வைப்பதுமாக இருந்தார்கள்.. இதனால் அடிக்கடி சிறு சலசலப்புகள் வந்து கொண்டிருந்தன.. ஒரு லிமிட்டிற்கு மேல் கடுப்பான அவர், அவர்களைப் பார்த்து ஒரு முறை முறைத்தார் பாருங்கள், அதன் பின் சும்மா சும்மா வணக்கம் போட்ட பார்டிகள் எல்லாம் அடங்கிவிட்டார்கள்.. அரசியலுக்கு எதிர்பாராமல் ஒரு விபத்து போல் வந்திருந்தாலும், தன் பார்வையாலேயே கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரிடம் ஆற்றல் இருப்பது பெரிய விசயம்..

3. திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் பேசும் போது ஆரம்பத்தில் அடிக்கடி கடவுள் கடவுள் என்று குறிப்பிட்டார்.. கொஞ்ச நேரத்தில் சுதாரித்துக்கொண்ட அவர், அதன் பின் இயற்கை என்று மாற்றிக்கொண்டார்.. பகுத்தறிவு....



4. ஒரு நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதற்கென்று காசு கொடுத்து photographer, videographer எல்லாம் வரவழைத்திருப்பார்கள்.. நமக்கு படம் வேண்டும் என்றால் அவர்களை அணுகி வாங்கிக்கொள்ளலாம்.. ஆனால் இந்த செல்ஃபோன் வந்தாலும் வந்தது, கல்யாண வீடு, குடும்ப நிகழ்வுகள், கோயில் பண்டிகை, சுற்றுலாத்தலங்கள் என்று எங்கு போனாலும் அந்த நொடியை சந்தோசமாக அனுபவிக்காமல் ஃபோட்டோ எடுப்பதிலேயே பலரும் பாதி நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.. சரி உங்கள் நேரம் நீங்கள் செலவிடுங்கள்.. ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் இப்படி மேடையை மறைத்துக் கொண்டிருந்தால் nokia பிளாக் & வொயிட் ஃபோன் வைத்திருக்கும் என் போன்ற பாவப்பட்ட ஆட்கள் என்ன தான் செய்வது? இப்பலாம் கல்யாண வீடுகளில் கூட தாலி கட்டுவதை செல்ஃபோன் கேமராக்கள் மட்டும் தான் பார்க்கின்றன.. மற்ற அனைவருக்கும் அந்த கேமராவை பிடித்திருப்பவரின் முதுகு மட்டும் தான் தெரிகின்றன.. எப்பா திடீர் ஃபோட்டோகிராபர்களா, உங்களுக்குள்ள இருக்கிற பாலுமகேந்திரா, தங்கர் பச்சானை எல்லாம் உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், பொது நிகழ்ச்சிகளில் வேண்டாம்..



5. எங்களை ஒரு குடும்ப நண்பர் போல் வரவேற்றதாகட்டும், ரத்னவேல் ஐயாவின் பெயரை மேடையில் நன்றியுடன் குறிப்பிட்டதாகட்டும், தன் தொண்டர் படை உருவாக்கிய சிறு சலசலப்பை - அது தனக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் என்றாலும் - ஒரு பார்வையிலேயே அடக்கியதாகட்டும், எங்களை சாப்பிட அழைத்துச்சென்றதாகட்டும், திரு.KKSSR உடன் பேசிக்கொண்டிருந்தாலும், நாங்கள் கிளம்புவதை அறிந்து வேகமாக வந்து கைகொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்ததாகட்டும், திரு. தங்கம் தென்னரசுவிடம் ஒவ்வொரு அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன.. இவரின் இந்த நல்ல பண்புகள் என்றும் மாறாமல் இப்படியே இருக்கட்டும்..

அசோகா அல்வா சாப்பிட முடியவில்லையே என ஏங்கிய பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தால் கூட இவ்வளவு அற்புத விசயங்கள் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.. என்னை அழைத்துச்சென்ற ரத்னவேல் ஐயாவிற்கும், அழகர் ராஜ் சாருக்கும் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் தகும்.. புத்தகத்தை இனி தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.. படித்து விட்டு அதில் இருக்கும் செய்திகளையும் விரைவில் பகிர்கிறேன்.. :)

9 comments

  1. புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நேரில் பார்த்த ஓர் உணர்வு
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சார் :-)

      Delete
  2. இது எவ்வளவு பெரிய நிகழ்ச்சி என.. அங்கு வரும் ஒவ்வொருவரையும் கை கூப்பி, கை கொடுத்து வரவேற்றுக்கொண்டிருந்தவர் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.. இது அவரின் பங்களிப்பில் செயல்படும், “பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்” என்னும் ஆய்வு மையத்தில் இருந்து வெளியிடப்படும் நூல்.. ’ஆஹா ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்னு சாதாரணமா நெனச்சா நம்ம ஆளுங்க Ex அமைச்சர் வரை பழக்கம் வைத்திருக்கிறார்களே’ என கொஞ்ச நேரம் ஆடித்தான் போனேன்.. நூலின் தலைப்பு, ”வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்”.. = எங்கள் அருமை மகன் Ram Kumar இன் அற்புதமான, நான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் அனைவரும் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். இது ஒரு மகத்தான பணி, காலம் காலமாக நிற்கும், நமது சந்ததிகளும் பயன்பெறப் போகும் பணி. மகத்தான மாமனிதர்கள் இதன் பின்னே உழைக்கிறார்கள், திரு முத்துகிருஷ்ணன் தவிர அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். திரு Thangam Thenarasu அவர்கள் பணி மிகவும் போற்றத் தக்கது, தனியாக நான் எழுதுகிறேன். Ram Kumar புத்தகம் படித்து விட்டு எழுதுங்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. நீங்களும் எழுதுங்கள்.. முடிந்தவரை பலருக்கு எடுத்துச்செல்வோம்..

      Delete
  3. இந்த பதிவிலே நிறைய வரலாறு அறிந்து கொண்டேன்... ரத்தினவேல் ஐயா சொன்னது போல புத்தகத்தில் உள்ள விவரங்களை பதிவாக தர வேண்டும் ராம்...

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அந்தப்புத்தகம் வாங்கிப்படியுங்கள் அண்ணே.. நிறைய விசயம் உள்ளது..

      Delete
  4. சிறப்பான பகிர்வு! எனக்கும் தமிழ் நாட்டில் தமிழர் வரலாறு புதைக்கப்படுகிறதோ என்ற அச்சம் உண்டு. தமிழ் பாடநூல்களில் தமிழர்களின் வரலாறு பெரிய அளவில் இல்லை என்பது வருத்தமான விஷயம்! இன்னொரு விஷயம் எங்கள் ஊர் கோயிலில் ஏழு கல்வெட்டுக்கள் இருந்ததாம்! இன்று ஒன்று கூட கிடைக்கவில்லை! அந்த கல்வெட்டுக்களின் பிரதி மியுசியத்தில் இருக்கிறது என்பது ஆறுதலான ஒன்று! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த நூலின் ஆசிரியர்கள் அது போன்ற கல்வெட்டுக்களையும், வரலாறுகளையும் தான் தேடி வருகிறார்கள் சார்.. எங்கு, என்ன என்கிற விபரம் சொன்னால் அவர்கள் அதைப்பார்த்துக்கொள்வார்கள்..

      Delete
  5. அருமையான பதிவு . வாழ்த்துக்கள்.
    புத்தகம் பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One