வாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...

Tuesday, September 3, 2013

”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் அப்பாவிடம், யாருக்கும் தெரியாமல் அந்த கல்லூரி ஹாஸ்டலின் மாடிப்படிகளில் ஒளிந்து கொண்டு செல்ஃபோனில் அழுதுகொண்டிருந்தேன்.. 

பதிலுக்கு என் அப்பா, “ரொம்ப கஷ்டமா இருக்காப்பா? ஒன்னால முடிலேன்னா வந்துரு தம்பி” என்று அவர் பங்குக்கு அவரும் அழ ஆரம்பித்துவிட்டார். 

“அங்க இங்க கடன வாங்கி சேத்து விட்டுருக்கு, வரதாம்ல? ஒழுங்கா படிக்க சொல்லுங்க.. போகப்போக எல்லாம் சரியாகிரும்” எங்கள் இருவரின் அழுகையினூடே கூட என் அம்மா அதட்டுவது ஃபோன் வழியாக கேட்டது.. இந்த அம்மாக்கள் மட்டும் எப்படி இவ்வளவு practicalஆக இருக்கிறார்களோ? 

நானும் என் அப்பாவும் இப்படி கதறிக்கதறி அழுததற்கு பெரிதான காரணங்கள் எல்லாம் இல்லை.. மிக அற்பமான காரணம் தான்..

20வருடம் பொத்திப்பொத்தி வீட்டோடு வளர்ந்த என்னை ஹாஸ்டலில் சேர்த்து MBA படிக்க அனுப்பியிருந்தார்கள். எங்கா? எங்கள் வீட்டில் இருந்து ஏழு கடல் ஏழு மலை தாண்டி, மிகவும் கஷ்டப்பட்டு ஒன்னரை மணி நேரம் பயணம் செய்து தான் அந்த கல்லூரிக்கு வர வேண்டும்.. அவ்வளவு தூரம்!!! வாரத்தில் ரெண்டே ரெண்டு நாட்கள் தான் நான் வீட்டிற்கு போக முடியுமாம். இனி எப்படி தினமும் பால் சோறும் பக்கோடாவும் சாப்பிடுவேன்? எப்படி தினமும் ஆச்சி வீட்டிற்கு போய் டிவி பார்ப்பேன்? எப்படி தினமும் என் தம்பியோடு சண்டையிடுவேன்? எப்படி வாரவாரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்வேன்? என்பது போன்ற பல ‘எப்படி’க்கள் நிறைந்த ஹோம் சிக் பிரச்சனை தான். ஆனால் பின் அதே கல்லூரியில் பிரிவு உபச்சார விழாவில் விடிகாலை மூன்று மணி வரையில் நடு மைதானத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தோம்.

ஆம், இது போன்ற ஒரு செப்டம்பர் 2ம் தேதி தான் நான் மதுரை தியாகராஜர் நிர்வாகவியல் கல்லூரியில் சேர்ந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ‘என்னங்கடா இது ஞாயித்துக்கெழமலாம் தொறக்குறாய்ங்க?’னு பயந்துகொண்டே தான் சென்றேன்.. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், என் தன்னம்பிக்கையை அதிகரித்து, ஆண் பெண் இனக்கவர்ச்சியை, பேதத்தை குறைத்து, இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவனும் உனக்கு போட்டியாளன் தான் என உணர்த்தி என்னையும் இந்த உலகின் வாழ்க்கை ஓட்டப்போட்டியில் ஓட வைத்துக்கொண்டிருப்பது நான் அங்கு செலவழித்த 22 மாதங்கள் தான்.

என் B.Sc., காலத்தை பற்றியோ MBA காலத்தை பற்றியோ சொல்ல ஆரம்பித்தால் பல 'Five point someone' கதைகள் கிடைக்கலாம். ஆனால் இங்கு என் தியாகராஜர் நிர்வாகவியல் கல்லூரியின் ஒரு சில சிறப்பான விசயங்களை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

1. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் ஆசிரியர் பதில் சொல்லாமல் டபாய்க்க முடியாது. ஒரு முறை ஒரு மாணவனின் கேள்விக்கு பதில்  சொல்லாமலேயே ஆசிரியர் வகுப்பை விட்டு கிளம்ப பார்த்தார். அந்த மாணவன் அவரை மறித்து, ’நான் இங்கு படிப்பதற்கு தான் பணம் கட்டியிருக்கிறேன். என் சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டு போங்கள்’ என்று தைரியமாக ஆங்கிலத்தில் கேட்டான்.. வேறு எந்த கல்லூரியாக இருந்திருந்தாலும் அவன் அன்றோடு அந்த கல்லூரியை மறந்திருக்க வேனியது தான். ஆனால் எங்கள் கல்லூரியில் அந்த ஆசிரியர் அவனிடம், ‘மன்னிக்கவும், எனக்கு இப்போது நீ கேட்டதற்கு பதில் தெரியவில்லை, நான் மாலைக்குள் சொல்லிவிடுகிறேன்’ எனக்கூறி மறக்காமல் மாலை கடைசி வகுப்பு முடிந்த பின் எங்கள் வகுப்பிற்கு வந்து சந்தேகத்தை தீர்த்தார்.

2. ஆணும் பெண்ணும் attendance ஆர்டர் படி தான் அமர வைக்கப்பட்டார்கள். ஆனால் என் கெட்ட நேரம் எனக்கு அந்த பாக்கியம் இல்லை(எனக்கு முந்தையவரின் பெயர் ராஜ பாண்டியன், பிந்தையவரின் பெயர் ராம் ரஞ்சித்). ஆண் ஒரு row, பெண் ஒரு row என்கிற பிரித்தாளும் சூழ்ச்சி கிடையாது. பெயர் வரிசைப்படி உட்கார்ந்து கொள்ளலாம். ஈவ் டீசிங், பெண்களை கிண்டல் செய்தது என ஒரு புகார் வந்தது இல்லை.

3. இரவு 2மணி வரை இண்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் லேப்பும், நூலகமும் இருக்கும். நூலகர் இரவு 2 மணி வரை விழித்திருப்பார் தினமும். நாங்கள் பாதி பிறந்த நாள் விழாக்களை கொண்டாடிய இடம் எங்கள் கம்ப்யூட்டர் லேப் தான்.

4. 24 மணிநேரமும் காஃபி கொடுக்கும் ஒரு மெசினும், அந்த மெசினை சுற்றி சில சிமெண்ட் பென்சுக்களும், அழகான புல்வெளித்தரையும், சிறிது வெளிச்சமும் இருக்கும். இரவு நேரத்தில் கம்ப்யூட்டர் லேப்பும், நூலகமும் வேண்டாத, வேறு சில பல புது பாடங்களை கற்றுக்கொள்ள விரும்பும் காதலர்கள் தங்கள் காதலை வளர்ப்பது அங்கு தான். படிப்பாளிகள் சிலரும் தாங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்க உதவியதற்காக அந்த காஃபி மெசினுக்கு மிகவும் கடமைப்பட்டிருந்தார்கள்.

5. சிலபஸ் என்கிற சிறுபிள்ளைத்தனம் அங்கு கிடையவே கிடையாது. தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் என்ன சிலபஸ் என்பதே எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் study holidaysல் படித்துக்கொள்ள வேண்டும். மற்றபடி பாடவேளைகளில் case study மூலம் தான் எங்களுக்கு நிர்வாகவியலையும், விற்பனை நுணுக்கத்தையும் சொல்லிக்கொடுத்தார்கள்.

6. Internals தேர்வுகளுக்கு பெரும்பாலும் பாடப்புத்தகத்தை கையில் கொடுத்துவிடுவார்கள், ‘முடிந்தால் பாஸ் ஆகிப்பார்’ என்று. ம்ஹிம் ஒன்றும் பண்ண முடியாது. ஏனென்றால் தேர்வில் கேள்வி பதில் இருக்காது. சூழ்நிலையை கொடுத்து அதற்கான முடிவை எடுக்க சொல்வது போல் தான் வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும். புத்தகத்தை புரட்டுவது வேஸ்ட்.. கான்செப்ட் தான் முக்கியம் மனப்பாடம் அல்ல..

7. Externals என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக தேர்வுக்கு நாங்கள் படிப்பது தான் இன்று வரை நினைத்தாலும் சிரிப்பை வரவழைப்பது. தேர்வுக்கு முந்தைய இரவு தான் புத்தகத்தை பார்ப்போம்.. மிரட்சியோடு என்ன செய்வது என தெரியாமல் தெய்வத்தின் மேல் பழியைப்போட்டு ஆளுக்கு ஒரு பாடத்தை (unit) படித்து மற்றவருக்கு கதை (!!!) சொல்ல வேண்டும் என பிரித்துவிடுவோம். இரவு 10மணிக்கு அவரவர் எங்காவது சென்று படித்துக்கொள்ளலாம். மீண்டும் 1மணிக்கு கதை சொல்ல வர வேண்டும். எனக்கு ஒதுக்கிய பாடம் எனக்கு புரிகிறதோ இல்லையோ, நான் படித்தேனோ படிக்கவில்லையோ ஆனால் ஒரு மணிக்கு கண்டிப்பாக நான் படித்ததை புரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது நான் எத்தனை முறை படிக்காமல் சும்மா கதை அளந்துவிட்டு அவர்களும் அதை நம்பி தேர்வில் எழுதி மார்க் வாங்கியிருப்பார்கள் என நினைக்கும் போது..

8. ஹாஸ்டலில் உணவு சரியில்லை என்று ஒரு நாள் மொத்த மாணவர்களும் காலையில் சாப்பாட்டை புறக்கணித்து வகுப்பிற்கு வந்துவிட்டோம்.. கவனிக்கவும், வகுப்பை விட்டு வெளியில் போய் ஸ்ட்ரைக் செய்யவில்லை, அமைதியாக வகுப்பிற்கு வந்துவிட்டோம். சில நிமிடங்களில் விசயத்தை கேள்விப்பட்டு கல்லூரி முதல்வர் வந்தார். எங்களை எவ்வளவோ சமாதானப்படுத்தி மீண்டும் சாப்பிட அழைத்துப்போக முயற்சி செய்தார். ’சாப்பாடு நன்றாக இல்லாத வரை சாப்பிட மாட்டோம்’ என உறுதிபட சொல்லிவிட்டதால், மீண்டும் சமையல் செய்ய சொன்னார் ஹாஸ்ட்லில்... அதன் பின் பல நாட்கள் காலையில் எங்களோடு தான் முதல்வர் உணவு அருந்துவார். அதன் பின் உணவில் பிரச்சனை வந்ததே இல்லை.

9. ஒரு சில முக்கியமான பாடங்களை அதற்கான specialistகளை வைத்து தான் நடத்துவார்கள். அவர்கள் எல்லாம் வார நாட்களில் வர மாட்டார்கள். வார இறுதிகளில் தான் அந்த வகுப்புகள் நடக்கும். வார இறுதியை இழந்தது போன்ற எண்ணம் துளியும் இருக்காது. ஏனென்றால் விடுமுறையில் யாரோ ஒரு உறவினரோடு பேசுவது போல் தன வகுப்பே இருக்கும்.

10. எங்கள் கல்லூரியின் இயக்குனர் மாதத்தில் ஓரிரு நாட்கள் தான் வருவார். அவர் இருக்கும் அந்த ஓரிரு நாட்களும் கல்லூரியில் ஒரு எறும்பு தும்மினால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருக்கும். அவர் வராந்தாவில் நடந்து சென்று கொண்டேயிருப்பார். திடீரென ஒரு வகுப்பில் நுழைந்து அந்த ஆசிரியரை மாணவர்களோடு அமர சொல்லிவிட்டு அவர் பாடம் எடுக்க ஆர்மபித்துவிடுவார். அது marketing, finance, systems, production என எதுவாக இருந்தாலும் நடத்துவார். அவர் ஒரு Jack of all trade and a master too... ’நீங்கள் எதற்கும் லாயக்கல்ல’ என்று அடிக்கடி எங்கள் ஈகோவை சீண்டிப்பார்ப்பார், ‘இல்லை எங்களால் முடியும் என நாங்கள் செய்து காட்டுவதற்காக’..

11. ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் அது அவனின் சொந்த விசயம் கல்லூரியின் வகுப்பை பாதிக்காத வரை என அடுத்தவரின் பெர்சனலுக்குள் மூக்கை நுழைக்காத கல்லூரி அது.

12. தோழன் என்று இங்கு யாரும் இல்லை. இங்கு இருக்கும் எல்லோரும் எல்லோருக்கும் போட்டியாளர் தான். கொஞ்சம் அசந்தாலும் நம் வாய்ப்பை நம்மோடு இருக்கும் இன்னொருத்தன் பறித்துக்கொள்வான். அதனால் ஒருவனை விட ஒருவன் இன்னும் இன்னும் திறமையாக இருக்க வேண்டும் என்கிற ஆரோக்கிய போட்டி எப்போதுமே உண்டு.

13. இன்று எனக்கு வகுப்பிற்கு வரப்பிடிக்கவில்லை என்றால், பேசாமல் ஹாஸ்டலிலோ வீட்டிலோ படுத்து உறங்கிக்கொள்ளலாம். அன்றைய வகுப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு மட்டும் “Due to personal reason I'm on leave" என்று மட்டும் அனுப்பினால் போதும், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.

14. கல்லூரியில் ஏதாவது கலைநிகழ்ச்சி என்றால் எந்த எல்லைக்கும் சென்று ஆட்டம் போடலாம். அது மறுநாள் வகுப்பிலோ, internalsயிலோ எதிரொலிக்காது. 

15. எந்த காரணத்தைக்கொண்டும் உங்கள் அம்மாவோ அப்பாவோ கல்லூரிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். உங்கள் பிரச்சனை உங்களோடு முடிக்கப்பட்டுவிடும்.

16. ஆணும் பெண்ணும் வராந்தாவில், வகுப்பில், வளாகத்தில், cafeteriaவில் என எங்கும் எப்போதும் ஒன்றாக சுற்றலாம். ‘வகுப்பு நேரத்தில் ஏன் இங்கு இருக்கிறாய்?’ என யாரும் கேட்கமாட்டார்கள். 

17. கல்லூரியின் ஆரம்ப நாளில் சீனியர்கள் சின்ன சின்ன ராகிங் செய்வார்கள். அது அடுத்த நாள் அவர்கள் நம் தோள் மீது கை போடுவதற்கான ஆரம்பப்புள்ளியாகத்தான் இருக்கும்.

18. ஐ.பி.எல். குதூகலமும், ரகுமானின் ஆஸ்கர் கொண்டாட்டமும், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் அதிர்ச்சியும் என எங்கள் ஹாஸ்டல் டிவி ரூமின் ஒவ்வொரு இன்ச் சுவரும் தரையும் அறிந்திருக்கும் எங்களின் நவரசங்களை.

19. ஒருவன் அவன் வாழ்நாளில் என்றுமே வாங்கியிராத அடியை அவன் பிறந்த நாள் அன்று தான் வாங்குவான். கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்தியை அணைக்க குனியும் போது விழும் பாருங்கள் அடி, அவன் ஜென்மத்திற்கு அடுத்து பிறந்த நாள் கொண்டாட மாட்டான்.

20. திடீரென எங்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒரு சிறு தொகையை கொடுத்து, குறிப்பிட்ட கால நேரமும் கொடுத்து அதற்குள் அதை எத்தனை மடங்கு பெருக்கிக்காட்டுகிறோம் என போட்டி வைப்பார்கள்.

21. மாணவர்களே ஆசிரியர்களுக்கு நேரடியாக feedback கொடுப்போம்.. எங்கள் feedbackஆல் வேலை பறிபோன ஆசிரியர்களும் உண்டு :-(

22. ஏதாவது முக்கியமான பாடம், அல்லது எங்கள் இயக்குனரின் வகுப்பு என்றால் பெரும்பாலும் மாலை 7மணிக்கு மேல் தான் நடக்கும். 

உண்மையில் உலகம் என்றால் என்ன என்கிற பிம்பம் இந்த் கல்லூரிக்கு வந்த பின்பு தான் தெரிந்தது. அதாவது நாம் எதை கனவு என நினைக்கிறோமோ, அது தான் நிஜம். எதை நிஜமான உலகமாக நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அது தான் பெரும்பாலும் கற்பனை. ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம், அவன் அந்தரங்கத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதை, ஆண் பெண் பேதமற்று பழகுவது, சிலபஸ் என்னும் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடாம இருப்பது என்று இன்று நம் சராசரி கல்லூரிகளில் இருக்கும் எந்த தவறுகளையும் தன்னுள் எடுத்துக்கொள்ளாமல் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தான் தமிழகத்தில் MBAவிற்கு இன்று அதிகம் சிபாரிக்கப்படும் கல்லூரியாக இருக்கிறது.

வாழ்க்கையை நானும் மிக மிக practicalஆக அறிய ஆரம்பித்தது இது போன்ற ஒரு செப்டம்பர்2ல் தான் ஆறு ஆண்டுகளுக்கு முன்.. இன்னும் வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அந்த ஆரம்பப்புள்ளி கற்றுக்கொடுத்த வழியில் தான் இதுவரை மகிழ்ச்சியாக தைரியமாக நடந்துகொண்டிருக்கிறேன்.. 

என் கல்லூரியின் நினைவாக, மாணவப்பருவத்தின் நினைவாக....................

21 comments

  1. பிறந்த நாள், திருமண நாள், வீட்டு கிரகப்பிரவேசம் நாள், நன்பர்களின் முக்கிய தினங்கள் போல கல்லூரியில் சேர்ந்த நாளாஇயும் நினைவில் வச்சிருந்து பதிவிட்டது சிறப்பு வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா என் வாழ்வின் மோசமான நாள் என்று நினைத்திருந்ததால் தான் அதை ஞாபகம் வைத்திருக்கிறேன் :-)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நுட்பமான கல்வி என்னும் உளி கொண்டு உங்களைப் பக்குவமாகச் செதுக்கிய கல்லூரி குறித்து எத்தனை சிலாகித்து எழுதியிருக்கின்றீர்கள்! எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தம்பி ராம்குமார் போன்ற அறிவுஜீவிகளின் முகநூல் நட்பும், பிளாக்கில் அவர்கள் எழுதும் கட்டுரைகளையும் படித்து உணரும் பேறு பெற்றவனாக இருக்கிறேன். வாழ்த்துக்கள் ராம்குமார்! மேதாவித்தனம் இல்லாத பாமரத்தனமான பகிர்வுகள் தொடரட்டும்!

    நட்புடன் சி.என்.இராமகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணே உங்க வஞ்சப்புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நீங்கள் என் எழுத்துக்களை வாசிப்பது தான் என் பேறு..

      Delete
  4. கலகல்ப்பான கல்லூரி நினைவுகள்...!

    ReplyDelete
  5. மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. இப்படி ஒரு கல்லூரியா என வியக்க வைக்கிறது... நினைவுகள் தொடரட்டும்....

    ReplyDelete
  7. கல்லூரி ஸ்ட்ரைக் இல்லாமல் சத்யாகிரகம் மூலம் மாணவர் பிரச்சனை தீர்க்க இன்று எத்தனை கல்லூரிகளால் முடியும்...?

    இப்படி ஒரு கல்லூரி எல்லாம் கனவுக் கல்லூரி... ஆனால் எங்கும் நண்பர்கள் நிறைந்திருக்கையில் நான் படித்த சிறைச்சாலை கூட எனக்கு கனவுக் கல்லூரி ஆகிப்போனது எனது நண்பர்களால்..

    சிலநேரம் எனது கல்லூரிக் காலத்திற்கும் சென்று வந்தேன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல நண்பர்கள் கிடைத்தால் எங்கும் எப்போதும் இன்பம் தான் நண்பா

      Delete
  8. தலைப்பைப் பார்த்துவிட்டு எதைப்பற்றி எழுதியிருப்பீர்கள் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். கல்லூரி வாழ்க்கை - நட்பு, காதல், படிப்பு, தோழர்கள் - என்று மறக்க முடியாத விஷயங்களைப் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெகு அற்புதமாக உங்கள் கல்லூரியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் இப்படி ஒரு கல்லூரியா என்று வியந்துதான் போனேன்.
    படிப்பு என்பது வேலை தேடுவதற்கு அல்ல; வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க என்று சொல்லிக் கொடுக்கும் இந்தக் கல்லூரியைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஆச்சரியப்பட வைத்தது.

    பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
    வாழ்த்துக்கள் ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை சந்தித்தது எனக்கும் மிக மிக மகிழ்ச்சி அம்மா :-)

      ஆம் எங்கள் கல்லூரி எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்தது.. அந்த சுதந்திரத்தை நாங்களும் முழுதாக முறையான முறையில் அனுபவித்தோம்.. உண்மையில் வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும், என்பதை அங்கு தான் அறிந்து கொண்டோம் அம்மா..

      Delete
  9. அழகனா அனுபவங்கள்... நான் குறுந்தகவலில் சொல்லியது போல், உங்கள் கல்லூரி ஒரு வகையில் சொர்க்கம் தான்... குறைகள் நிறைகள் என்று நீங்கள் கூறினாலும், நான்கு வருடம் கிட்டத்தட்ட சிறை வாசம் அனுபவித்த எனக்கு எவற்றை படிக்கும் போது என் மனம் பொறாமையில் பொங்குகிறது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா உண்மை தான்.. என் கல்லூரி நண்பர்கள் பலரும் கூட இதைப்படித்து விட்டு சந்தோசப்பட்டார்கள்.. சில நல்ல விசயங்களை அடிக்கடி நினைத்துப்பார்ப்பதும் நல்லது தானே..

      Delete
  10. இந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைக்காது ராம், மதுரை வந்தா இந்த கல்லூரிக்கு போகனும்போல ஆசை வருது, படிச்ச கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் இந்த பதிவு சூப்பர். அரவிந்தன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நல்லா ஆசைப்படுங்க.. ஆனா போன பிறகு கஷ்டப்படக்கூடாது.. தூக்கம் இருக்காது, டென்சன் என்று எல்லாம் இருக்கும்..

      Delete
  11. பரிட்சைக்கு முந்தின நாள் கத சொல்றது, இது மட்டும் தான் நீங்க சொன்னதுல எங்க காலேஜ்ல (இல்ல இல்ல, ஸ்கூல்ல :( ) நடக்குதுனு சொல்ல முடியும்!

    இப்டி எல்லாம் எழுதி எனக்கு பொறாமய உண்டு பண்ணக்கூடாது ஆமா! :’( :)

    //மாணவர்களே ஆசிரியர்களுக்கு நேரடியாக feedback கொடுப்போம்.. எங்கள் feedbackஆல் வேலை பறிபோன ஆசிரியர்களும் உண்டு :-( //

    இப்டி நான் குடுத்தேன் பாருங்க ஒருக்க, இவங்க இன்னும் கொஞ்சம் நல்லா நடத்தலாம்னு, எனக்கு தான் என்கொயரி வச்சாங்க, ரெண்டு மணி நேரம்! :/

    குடுத்து வச்சவங்க தான் நீங்க! :)


    ReplyDelete
    Replies
    1. ஹ்ம் ஆமா உண்மையிலேயே ரொம்ப நல்ல காலேஜ்.. :-) பொறாமை வேண்டாம், நானும் UGயில் உங்களைப்போன்ற காலேஜ் தானே? PGயில் உங்களுக்கும் என்னைப்போல் காலேஜ் கிடைக்கும். :-)

      Delete
  12. ரொம்ப பொறாமையா இருக்கு,,, என்ன செய்ய கிட்டத்தட்ட நீங்க சொன்ன எல்லா விஷயமும் இருக்குற தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரிலதான் நானும் படிச்சேன்னு மனச தேத்திக்க வேண்டியது தான்,,,

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா தேத்திக்கோங்க தேத்திக்கோங்க..

      Delete
  13. வாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...=சிவகாசிக்காரன் = எங்கள் அருமை Ram Kumar இன் அற்புதமான பதிவு. நம்முடன் நேரில் பேசுவது போல் இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One