தலைக்கூத்தல் - சிறுகதை...

Thursday, June 6, 2013

முன் குறிப்பு:
இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும்.


 ”டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எங்க அம்மாவ” பதட்டமுடன் சொல்ல வந்த கண்ணனை டாக்டர் தன் கோப பார்வையால் வாயடைக்க செய்தார்..

”டேய் கண்ணா நான் ஒங்க ஃபேமிலி டாக்டர் தான்.. அதுக்காக என்ன இந்த மாதிரிலாம் செய்ய சொல்லாதடா.. நான் படிச்சது இதுக்காக இல்ல” கண்களில் கோபம் இருந்தாலும் வார்த்தைகளில் அக்கறை இருந்தது டாக்டருக்கு.. எண்ணெய் பசை இல்லாத புசு புசு முடி, கழுத்தில் ஸ்டெத், முகத்தில் தெரியும் ஒரு பணக்கார மினுமினுப்பு, தொப்பை இல்லை என்கிற தைரியத்தில் இன் பண்ணப்பட்டிருக்கும் சட்டை - பார்த்தாலே தெரிந்துவிடும் இவர் ஒரு டாக்டர் என்று..

“இல்ல எனக்கு வேற வழி தெரில.. எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க.. இல்லனா வேற யாரு மூலமா செய்யலாம்னு சொல்லுங்க, ப்ளீஸ்..” இது வரை தன்னிடம் உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனிதர்களை மட்டுமே பார்த்துப்பழகிய டாக்டர் முதல் முறையாக உயிரை எடுக்க கெஞ்சும் ஒருவனை பார்க்கிறார்.. அவருக்கு கண்ணனை பார்க்க பார்க்க வெறுப்பு தான் வந்தது.

“இங்க பாரு, இதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க.. இது அஃபென்ஸ் தெரியுமா? பேசாம மதுரைக்கு அம்மாவ கொண்டு போற வழியப்பாரு.. சரியா? நான் இப்ப கெளம்புறேன்.. நாளைக்கு சாய்ங்காலம் வாரேன்..”

“டாக்டர் நான் தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லனு சொல்றேன்ல?” வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்த டாக்டர், அவன் பக்கம் திரும்பி, ”இன்னொருக்க இப்படி எதாவது சொன்ன, ஒன்ன நானே போலீஸ்ட்ட பிடிச்சி குடுத்துருவேன்.. ஒழுங்கா அம்மாவ கவனிச்சிக்கோ. இல்லேனா மதுரைக்கு கூட்டிட்டு போ...” அவனை பார்த்து முறைத்துக்கொண்டே கிளம்பிவிட்டார்...

அவர் கிளம்பும் வரை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தவன், கிளம்பிய பின் வீட்டிற்குள் வந்தான். மிக அழகான கிரானைட்டால் தரையிடப்பட்ட அந்த வீட்டின் உள்ளே ஒரு அறையில் இருந்து மருந்து, மூத்திரம், அழுக்கு துணி எல்லாம் கலந்த ஒரு வித விநோத வாடை அடித்துக்கொண்டிருந்தது. அந்த அறையின் பக்கவாட்டு சுவற்றில் அவன், அவன் மனைவி, அவன் பையன் சந்தோஷ், அவன் அம்மா மூவரும் குடும்ப ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தனர். அவன் அம்மா அந்த படத்தில் தன் பேரனை பார்த்து என்னவோ சொல்வது போல் சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவனும் புரிந்தது போல் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த படத்துக்கு நேர் கீழே ஒரு மரக்கட்டிலில் கிளை ஒடிந்த ஒரு முள் செடிக்கு கருப்பாக தோல் போர்த்தியது போல் ஒரு உருவம் படுத்துக்கிடந்தது. அது ஒரு சாய்ந்து படுத்திருக்கிறதா, மல்லாக்க படுத்திருக்கிறதா, குப்புறப் படுத்திருக்கிறதா என்று சொல்வது சற்று சிரமம்.. கூன் போட்ட அந்த உருவம் கிட்டத்தட்ட ஒரு பந்து போல் கிடந்தது அதற்கு மேல், கீழ், வலது, இடது பேதம் கிடையாது. அந்த உருவத்தின் பெயர் தனம்.. கடந்த 42 வருடமாக கண்ணனுக்கு அம்மா.. 

இவன் உள்ளே வருவதை அந்த உருவம் தன் கோணல் வாயோடு கவனித்துக்கொண்டிருந்தது. வாயில் இருந்து லேசாக எச்சில் வடிந்து கொண்டிருந்தது. தனத்தின் அருகில் இவன் மனைவி ராணி உட்கார்ந்திருந்தாள். அவளும் இவனை கண்டு கொண்டாள்..

“டாக்டர் என்ன சொல்றாரு?”

“முடியாதுங்கிறான் கிறுக்குப்பய... நானும் எவ்வளவு காசானாலும் பரவாயில்லனு சொல்றேன்.. கேக்கவே மாட்றான்.. ஹ்ம் நாட்டுல காசு பணத்துக்கு அவ்வளவு தான் மதிப்பு போல?”

“அப்ப இன்னும் எத்தன நாளுக்கு நான் இந்த பீயத்தொடச்சிக்கிட்டு, பீத்துணிய அள்ளிப்போட்டுக்கிட்டு இருக்கிறதாம்?” ராணி மிகுந்த சலிப்புடன் கோபமாக அதே நேரத்தில் கணவனுக்கு அந்த கோபம் வருத்தமாக அறியப்பட வேண்டிய தொனியில் சொன்னாள்.

“எனக்கு மட்டும் என்ன ஆசையா? இரு இவன் இல்லேனா வேற டாக்டரு.. எவ்வளவு செலவானாலும் முடிச்சிற வேண்டியது தான்”..

இவர்கள் பேசுவது எல்லாம் தனத்தின் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது. அவள் காதில் விழுவதை பற்றி இவர்களுக்கு என்ன கவலை? அவளால் தான் பதில் பேச முடியாதே? இதுவே ஒரு மாதத்திற்கு முன்பு என்றால் தனத்தை கேட்டுத்தான் வீட்டில் எல்லாம் நடக்கும்.. ஆனால் இப்போது?

இவன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்வதை கேட்கும் போது அந்த கோணல் வாயிலும் லேசாக ஒரு சிரிப்பு.. தேவையில்லாத ஒரு ஞாபகம் வந்து போனது.. ”அய்யா எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல எம்புள்ளைய காப்பாத்தீருங்கய்யா.. என் உசுரே போனாலும் பரவாயில்ல.” சிரிப்போடு சிறு கண்ணீரும் வழிகிறது அந்த நினைவில்..

“ஏங்க இங்க பாருங்க உங்க அம்மா அழுகுறாங்க..”

“கெழவி இதால நம்ம தான் அழுகுறோம்.. சும்மா எதாவது தூசி விழுந்திருக்கும்.. இதுவா அழும்? சீக்கிரம் போயித்தொலையாம நம்மள தான் அழ வச்சிட்டு இருக்கு..”

கண்ணனின் இந்தப்பேச்செல்லாம் தனத்திற்கு பல தேவையில்லாத நினைவுகளை மனதில் தோண்டி எடுத்துக்கொண்டிருந்தன. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு வளந்த பய தான் கண்ணன். அவன் வயித்துல இருக்கும் போதே அவன் அப்பா ஏதோ சீக்கு வந்து செத்துபோய்யிட்டான். ரெண்டு கை, மூனு வயித்துக்கு சோறு போட்டுச்சி.. இப்ப வயிறு ரெண்டாயிருச்சி.. ஆனா உழைக்குறதுக்கு கையி?  அவளே, பக்கத்துல இருக்குற முனிசிபாலிட்டி ஸ்கூல்ல கூட்டி விட்டு சுத்தம் செய்யுற வேலைக்கு சேந்தா.. அவங்க ஜாதில யாரும் இந்த வேலயெல்லாம் பாக்க மாட்டாங்க.. ஆனா வயித்துக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாதுல? மகனப்படிக்க வச்சா.. சொந்த பந்தம் எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி தான். அவளுக்கு கண்ணன் தான் சொந்தம். கண்ணனுக்கு அவள் தான் சொந்தம். 



ஒரு முறை கண்ணனுக்கு மஞ்சள் காமாலை. நோய் முத்திப்போயிருச்சி.. ”அய்யா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லய்யா எம்புள்ளய மட்டும் காப்பாத்திருங்கய்யா”னு அவா போகாத ஆஸ்பத்திரி இல்ல. எல்லாருமே கைய விரிச்சுட்டாங்க.. கடைசில ஒரு டாக்டரு 150ரூவா ஆகும்னாரு.. அந்த 150ரூவாய அவா எங்கேயோ புரட்டி குடுத்துட்டா.. ஆனா அத அடைக்குற வரைக்கும் அவா ரெண்டு நாளைக்கு ஒருக்க தான் சாப்பிட்டா.. மத்த நாளெல்லாம் பழைய சோறு ஊறும் வெறும் நீஸ் தண்ணி தான்.. அதும் பக்கத்து வீடுகள்ல கிட்டத்தட்ட பிச்சை மாதிரி எடுத்துத்தான்.. இதெல்லாம் கண்ணனுக்கு தெரியாது. அவளும் சொல்லிக்கிட்டது இல்ல.. அந்த நீஸ் தண்ணியின் புளிப்பு இப்பக்கூட அவளோட நாக்குல ஒரு மூலையில எங்கேயோ இருந்து அடிக்கடி எச்சி ஊறும் போது வந்துட்டுப்போகும்..

தனத்தின் மனசு பழைய விசயத்தலாம் அச போட்டுக்கிட்டே இருந்துச்சி.. அவளால தாங்கிக்கவே முடியாத வார்த்த, “எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்”.. நம்ம கண்ணனா இப்படி பேசுறான்னு அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம்.. இப்பக்கூட அறைக்கு வெளிய இருந்து அவன் குரல் கேக்குது. யார்ட்டயோ ஃபோன்ல பேசுறான்.. “ஆமா எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...”

தனத்துக்கு ‘ச்சீ’னு ஆகிருச்சி.. ’நாம உசுரையே வச்சிருந்த நம்ம மகன் நம்மள கொல்ல ஊர் பூரா பேரம் பேசுறானே.. இதயெல்லாம் பாக்குறதுக்கு கீழ வுழுந்த அன்னைக்கே போயிருக்கலாம்’னு நெனச்சிட்டு இருந்தா.. 

ஃபோன் பேசி முடிச்சிட்டு கோவமா உள்ள வந்தான்.. “என்னங்க என்ன சொல்றாங்க?” வழக்கம் போல ராணி கேட்டாள்..

“யாரும் ஊசி போட ரெடியா இல்ல.. ஆனா எனக்கு ஒரு ஐடியா இருக்கு”

“என்னங்க?”

“ஒன்னுமில்ல.. நீ நைட்டு நீ சீயக்கா, நல்லெண்ண எல்லாம் ரெடி பண்ணி வச்சிரு.. நான் வரும் போது இளநீ வாங்கிட்டு வரேன்.. தலைக்கூத்திரலாம், என்ன?” இதை தனம் கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கல.. மகனே பெத்த தாய கொல்லுவானானு அவளால இன்னும் நம்ப முடியல.. அவனையே வெறிச்சு பாத்துட்டு இருந்தா..

“என்னங்க சொல்றீங்க? நம்மளேவா?” ராணியும் பயந்துவிட்டாள்.

“வேற வழி? எத்தன நாளைக்கு இந்த கெழவிய சேவிச்சுக்கிட்டு, இந்த நாத்தத்துக்குள்ளயே கெடக்குறது? வீட்டுக்கு வந்தா ஒரு நிம்மதி இருக்கா?  அன்னைக்கே செத்துப்போகாம இத்தன நாளு கெடந்து என் சீவனையும் பலனையும் வாங்குது” தனத்தை பார்த்து கையை நீட்டிக்கொண்டே கத்தினான்.

“ஏங்க உங்க அம்மாவுக்கு கேக்க போகுது”

”கேக்கட்டுமே நல்லா.. அப்பையாவது சொரண வந்து நைட்டு நான் வாரதுக்குள்ள சாவுறாளானு பாப்போம்” சொல்லிக்கொண்டே வெளியே கிளம்பிவிட்டான் கண்ணன்.

ராணிக்கு அதற்கு மேல் அவளின் அத்தைக்கு அருகில் உட்கார்ந்து அவள் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் இல்லை. அவளும் அந்த அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்.



மாலை கண்ணன் வீட்டிற்கு வந்தான். வாசலில் அவன் வண்டியை நிறுத்தும் சத்தம் தனத்திற்கு தெளிவாக கேட்டது. கையில் இரண்டு இளநீர்காய்களை தூக்கிக்கொண்டு தனம் இருக்கும் அறைக்கு வந்தான். அவன் கையில் இருக்கும் இளநீரை பார்த்ததும் அவள் அந்த கோணல் வாயில் ஒரு சிரிப்பு வந்தது. கைகளில் இருந்த இளநீரை பார்த்ததும் அவள் உதட்டின் சிரிப்பு இன்னும் அகலமானது. “இன்னும் சாகலையா?” என்பது போல் அவன் அவளை பார்த்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டான். 

அடுத்த கொஞ்ச நேரத்தில் கண்ணனும் ராணியும் அவள் அறைக்கு முகத்தில் எந்த வித தயக்கமோ சலனமோ இல்லாமல் ஒரு திடமான எண்ணத்தோடு வந்தார்கள்.. 

”எம்மா எம்மா இந்த எள்நீய கொஞ்சம் குடிங்கம்மா” அவள் அருகில் வந்து டம்ளரில் இருக்கும் இளநீரை கண்ணன் அவள் வாயருகே கொண்டு போனான். தனம் அவனை மெதுவாக பார்த்தாள். பூ விழுந்த, கோடுகளால் சூழப்பட்டு ஒரு பள்ளத்துக்குள் கிடந்த அவளின் அந்த இரண்டு சிறிய கண்களும் அவனிடம் என்னவோ கேள்வி கேட்பது போலவே அவனை பார்த்தன. டம்ளரை உதட்டருகில் கொண்டு போனான். தனம் கொஞ்சம் கொஞ்சமா உறிய ஆரம்பித்தாள் அந்த இளநீரை. இவனின் சிறு வயதில் 150 ரூபாய் கடனுக்காக அவள் குடித்த நீஸ் தண்ணியின் புளிப்பு சுவை இந்த இளநீரில் அவளுக்கு தெரிந்தது. இளநீரின் சுவை மொத்தமாக மறந்து, வெறும் நீஸ் தண்ணியை குடிப்பதாக நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக பருகிக்கொண்டிருந்தாள். 

“வேமா குடிங்கம்மா.. எவ்வளவு நேரம் தான் நான் குனிஞ்சுக்கிட்டே கைய நீட்டிக்கிட்டே நிக்குறது? கையெல்லா வலிக்குது”.. தனத்தின் கண்களில் பெயர் அளவிற்கு கூட கண்ணீர் வரவில்லை. மெது மெதுவாக இரண்டு இளநீரையும் குடித்து முடித்தாள்..

“ஏய் இந்தா நீ இப்ப எண்ணெய தேச்சி விடு”

“ஏங்க எனக்கு பயமா இருக்குங்க.. இதுலாம் பாவமில்லையா?”

“கஷ்டப்படுறவங்கள கொன்னு நாம அவங்க கஷ்டத்த கொறைக்கிறோம்.. இது பாவமில்ல புண்ணியம்” காமாலையில் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்த அவன் சொன்னான் இப்படி..

அவள் கையில் இருந்த கிண்ணத்தை வேகமாக புடிங்கினான். ”சரி நீ போயி அண்டால தண்ணிய ஊத்தி வையி நா வரேன்”..

“இல்லைங்க தனியா போக ஒரு மாதிரி இருக்கு.. நீங்க இத முடிங்க.. சேந்து போவோம்..”

“சரி அந்த ஃபேன ஃபுல் ஸ்பீடுல வையி” என்று கூறிக்கொண்டே கையில் எண்ணெய்யை அள்ளி, வெள்ளை வெளேர் என மின்னிக்கொண்டிருந்த, பல நாள் கவனிக்கப்படாமல் இருந்த தனத்தின் கூந்தலில் குளிர தேய்த்தான். மீண்டும் ஒரு முறை தலையில் எண்ணெய் விட்டான். அடுத்து அவள் முகத்தில் கை கால்களில் எல்லாம் குளிர தேய்த்தான்.. காத்தாடி மிக வேகமாக குளிர் காற்றை அறை முழுவதும் பரவ விட்டுக்கொண்டிருந்தது. ஊரில் இருக்கும் எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, தானும் கண்ணனும் எண்ணெய் வாங்க காசு இல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து கழித்த ஒரு தீபாவளி அவளுக்கு ஞாபகம் வந்தது எங்கோ ஒரு மூலையில். சட்டென்று அந்த ஞாபகம் மறைந்து, தனத்திற்கு உடல் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவளுக்கு தன் மகன் செய்வதையெல்லாம் பார்க்கும் போது அழுகையோ சிரிப்போ எதுவுமே இப்போது வரவில்லை. சொல்லப்போனால் அழுவதற்கும் சிரிப்பதற்கும் அவள் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை.. காத்தாடி முழு வேகத்தோடு ஓசை எழுப்பிக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தது.. காத்தாடியின் ஓசை, தனத்தில் அடித்தொண்டையில் இருந்து வரும் வேகமான மூச்சுக்காற்றின் ஓசையை வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மூச்சையும் மிகவும் கஷ்டப்பட்டு வறண்டு போன அந்த தொண்டைக்குழிக்குள் இருந்து மிக மிக மெதுவாக ஆழமாக எடுக்க முயற்சி செய்தாள்.. பாதி மூச்சு பாதியிலேயே நின்றது.. ஒரு சில மூச்சு தான் தொண்டையையும் தாண்டி வாய் வழியாக காற்றை எடுத்து அவள் நுரையீரலுக்கு அனுப்பிக்கொண்டிருந்தன..

ஒருவழியாக அவள் உடம்பில் எண்ணெய்யை அழகாக பரவ விட்டுவிட்டான்.. அவள் உடல் இப்போது முன்னை விட வேகமாக நடுங்கியது.. மூச்சு விட ரொம்ப சிரமப்பட ஆரம்பித்துவிட்டாள். “என்னங்க, ஒங்கம்மாவுக்கு இப்படி நடுங்குது?”

“ஆமா.. சரி ஒரு கை பிடி.. தூக்கிட்டு போய் குளிப்பாட்டிருவோம்”

“என்னங்க, பாக்கவே ரொம்ப பாவமா இருக்குங்க.. விட்ருவோம்ங்க”

“ஏன்டீ இப்டி அரகொறையா விட்டுட்டு போயி, சாகாம, இன்னும் நம்மள பாடாப்படுத்துனா என்ன பண்ணுவ? ஒழுங்கா ஒரு கை பிடி”.. ஒரு வேளை மாமியார் பிழைத்துக்கொண்டால், மீண்டும் பீ அள்ளிப்போட வேண்டுமோ என பயந்து ராணியும் ஒரு கை பிடித்தாள்.. தனத்தில் உடல் மிகவும் குளிராக இருந்தது.. இருவரும் தனத்தை வீட்டின் பின் பக்கம் அள்ளிக்கொண்டு சென்றனர்.. அங்கு ஒரு அண்டாவில் தண்ணீர் நல்ல குளிரில் இருந்தது தலைக்கூத்த...

கண்ணன், தனத்தை தரையில் சுவரோடு சாய்த்து உட்கார வைத்தான்.. தனத்தின் உடல் குளிரில் இன்னும் அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் கூட லேசாய் சொருகிப்போயிருந்தன.. ஒவ்வொரு மூச்சும் ஒரு வறட்சியான சத்தத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. ஒரு கைப்பட்டையில் தண்ணீரை எடுத்து எண்ணெய் வழிந்து கொண்டிருந்த தன் தாயின் தலையில் ஊற்றினான். குளிர்ந்த நீர் பட்டதும் தனம் கொஞ்சம் வேகமாக எம்பினாள் தரையில் இருந்து. மகனுக்கு எந்த எதிர்ப்பும் காட்டக்கூடாது என்று அவள் மனம் நினைத்தாலும், உடல் இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ளத்தானே எத்தனிக்கும்?

“ஏய் எங்கம்மாவ கொஞ்சம் அழுத்திப்பிடிடீ..” மனைவிக்கு கட்டளை இட்டுக்கொண்டே அடுத்த சொம்பு நீரை எடுத்து ஊற்றினான். இந்த முறை முதல் தடவையை விட இன்னும் அதிகமாக எம்பினாள் தனம். காற்று அவள் வாய் வழியாக உள்ளே போனாலும், உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்ற முடியாமல் அவள் தொண்டையும் முதுகுத்தண்டுவடமும் தவித்தன. கொர் கொர் என்கிற சத்தம் மட்டும் தான் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது. சுற்றி நடக்கும் அனைத்தும் தனத்தின் கண்கள் வழியாக மூளைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை பட ஆரம்பித்தது. கண்கள் சொருகின. உடலில் வெறும் உணர்ச்சி தான் இருந்ததே தவிர, அந்த உணர்ச்சி முன்பை போல் எம்பி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது. சில செம்பு நீரூற்றலுக்கு பிறகு தனம் அதிகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டாள். முன்னைப்போல் எம்பவில்லை.. ஆனால் உடலில் வெறும் துடிப்பும் நடுக்கமும் மட்டும் தான். தொண்டையில் சத்தமும் வரவில்லை.. 

“ஏங்க.. ப்ச் ஏங்க பாருங்க இங்க.. தண்ணி ஊத்துறத நிறுத்துங்க.. மூச்சு சத்தம் கூட வரலைங்க.. ஒடம்பு மட்டும் நடுங்குது.. கண்ணெல்லாம் மூடிட்டாங்க பாருங்க.”

“ஹ்ம் ஆமா பாத்தேன்.. இருந்தாலும் முழு அண்டாவையும் ஊத்திருவோம்.. பேப்பர்ல பாக்குறது இல்ல? தீடீர்னு பொழச்சி வந்தாலும் வந்துரும் எங்க அம்மா.. அதனால எல்லா தண்ணியவும் ஊத்திருவோம்”..

முழு அண்டாவும் காலியான போது, தண்ணீர் பட்ட சுவரும் தனமும் ஒரே மாதிரி தான் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார்கள்.. “ஏ உன் கைய எடு” என்றான்.. 

ராணி தனத்தின் மீது இருந்த தன் கையை எடுத்தாள்.. தனம் சுவரோடு சாய்ந்து மெதுவாக தரையில் சரிந்தாள். கண்ணன் தனத்தில் அருகில் வந்து, அவள் பால் கொடுத்த மாரில் காதை வைத்து இதயம் துடிக்கிறதா என பார்த்தான்.  துடிக்கவில்லை. அவனை தூக்கி ஆடிய கையில் நாடி இருக்கிறதா என பார்த்தான். நாடித்துடிப்பும் அடங்கியிருந்தது. துடிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டவுடன் அவன் முகத்தில் ஒரு பெருமூச்சு.. “ஏ தொடைக்க துண்ட எடுத்துட்டு வா”

தனம் அழகாக துடைக்கப்பட்டு, குளியலின் அடையாளமே இல்லாமல் தன் படுக்கையில் வேறு ஒரு ஆடையுடன் கிடத்தப்பட்டாள். கண்ணனுக்கு தன் அம்மா இல்லாதது மனதில் ஏதோ குறைந்த ஒரு உணர்வை லேசாக கொடுத்தது. நகத்தை கடித்துக்கொண்டு யாருக்கு முதலில் சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது...

கதவை திறந்து கொண்டு கண்ணனின் மகன் சந்தோஷ் பள்ளி, டியூசன் என அனைத்தையும் முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவனை பார்த்ததும் கண்ணன் பெருங்குரலெடுத்து கதறினான், “டேய் சந்தோஷ் அய்யம்மாவ பாத்தியாடா? நம்மளலாம் விட்டுட்டு போயிட்டாங்களேடா”..  தனம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்ம் தன் மகனுக்கு தன் மேல் இருக்கும் இந்த பாசத்தை நினைத்து பூரித்துப்போயிருப்பாள்.. அப்படி அழுதான் கண்ணன்...

அந்த அறையின் பக்கவாட்டு சுவற்றில் அவன், அவன் மனைவி, அவன் பையன் சந்தோஷ், அவன் அம்மா மூவரும் குடும்ப ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தனர். தனம் அந்த படத்தில் தன் பேரனை பார்த்து என்னவோ சொல்வது போல் சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவனும் புரிந்தது போல் கேட்டுக்கொண்டிருந்தான்.



பின் குறிப்பு:

தலைக்கூத்தல் (தலைக்கு ஊத்தல்) என்பது தென் மாவட்டங்களில், குறிப்பாக எங்கள் விருதுநகர் மாவட்டத்தில், வீட்டில் பராமரிக்க முடியாத முதியவர்களை கொலை செய்யும் டெக்னிக்கிற்கு பெயர். இது அந்த கொலைகாரர்களால் இங்கு தவறாக பார்க்கப்படுவதில்லை!!!

38 comments

  1. கொடுமையான நிகழ்வு என்றாலும் பல நாட்கள் கழித்து உங்கள் சிறுகதையை பார்ப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபக் ராம்.. இனி பழைய மாதிரி எழுத நினைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்..

      Delete
  2. 'பக்கா'வாக ஒரு கொலை... இப்படி பீயைத் தின்னும் மிருகங்களுக்கு விரைவில் சாவு வரட்டும்... முன்பு இது போல் நடந்தது என்று இனிமேல் கதையாகவே இருக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த மக்கள் இதை கொலை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கிறுக்குகளாக இருக்கிறார்கள்..

      Delete
  3. மனசு தாங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்.. ஆனால் செய்யும் அவர்களுக்கு மனம் வருகிறதே?

      Delete
  4. Replies
    1. கருணை எல்லாம் இல்லை, வெறும் கொலை மட்டும் தான் அம்மா..

      Delete
  5. படிக்கப் படிக்க மனம் பதறியது
    இது நிச்சயம் கொடூரக் கொலைதான்
    சொலிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்

      Delete
  6. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... சாக வேண்டிய வயதானாலும் ஒரு நொடியில் சாவதே சாலச்சிறந்தது என்று நினைக்கவைக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. ஒரு நொடியில் செத்தாலும் இழுத்துக்கொண்டு செத்தாலும், தானாக வந்த உயிர் தானாகத்தான் போக வேண்டும்.. 10 மாதத்தில் வர வேண்டிய பிள்ளையை 5 மாதத்தில் கையை விட்டு நோண்டி எடுத்தால் என்ன ஆகுமோ அதே தான், ஒழுங்காக சாக வேண்டியவரை நாமே கொல்வதும்..

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //கிளை ஒடிந்த ஒரு முள் செடிக்கு கருப்பாக தோல் போர்த்தியது போல் ஒரு உருவம் படுத்துக்கிடந்தது.// அடடே என்ன ஒரு வர்ணனை

    // தனத்தின் உடல் குளிரில் இன்னும் அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தது. // இந்த வரியை என்னால் தாண்ட முடியவில்லை, என் உடல் இன்னும் பலமாய் நடுங்கத் தொடங்கியது.. உங்கள் வரிகளில் அத்தனை உணர்வுகள்

    என்ன ஒரு கொடுமையானா மனிதர்கள். இயற்கை கொடுத்த உயிரை இப்படியா போட்டு அழிப்பது... மிகவும் கேவலமானா ஒரு செயல்..

    இனி உங்களுக்கான என் குறிப்பு

    தலைவரே பேஸ்புக்க குத்தகைக்கு எடுதுடீங்களா என்ன, அப்பப்போ இந்த பக்கமும் வந்து போறது.

    வேலை அதிகம், யோசிக்க முடியலைன்னு சாக்கு சொல்லாதீங்க

    ReplyDelete
    Replies
    1. //வேலை அதிகம், யோசிக்க முடியலைன்னு சாக்கு சொல்லாதீங்க// ஹா ஹா நண்பா, சாக்கு சொல்ல விரும்பவில்லை.. இனி முன்பு போல் எழுத நினைத்திருக்கிறேன்.. பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று..

      Delete
  9. துடிக்கின்ற சீவனுக்கு பால் ஊத்துவதே ஒரு கொலைதான்....

    ReplyDelete
    Replies
    1. உயிரோடு இருக்கும் போதே இங்கு பலரையும் நாம் கொஞ்ச கொஞ்சமாக கொன்று கொண்டு தானே இருக்கிறோம்...

      Delete
  10. உண்மை கசப்பானது ..
    ஆனால் அதுதான் உண்மை
    நானும் இது போல் ஒரு நிகழ்வை
    1981 ல் நேரில் கண்டு இருக் கிறேன்
    எனக்கு கொஞ்சம் இரக்கம் மகன் மீது உள்ளது
    அடுத்தவீட்டில் நடக்கும்போது
    நமது மனித நேயம் பீரீட்டு கிளம்பும்
    நமது வீட்டில் என்றால் தாங்க முடியாத நிலை
    வரும்போது கருணை கொலைகாரனாய்
    மாற வாய்ப்புண்டு கசப்பான ground reality
    அந்த மகன் பின்னால் மன அழுத்தம்
    தாங்காது செய்து விட்டோமே
    இவ்வாறு என்று வாழ்நாள் முழுதும்
    வருத்தப்பட்டு சிலுவை சுமந்து
    மீண்டும் தண்டிக்க படுவான் என்று தோன்றுகிறது .

    வயதான நான் விரும்புவதெல்லாம்
    active இருக்கும்போது வரும் வாழ்வின் இறுதியே
    மிகவும் பாசமாக உள்ள பிள்ளைகள்
    அந்த தன்மையில் நீடிக்கும்போதே
    போய்விட வேண்டும்

    உண்மை கசப்பானது ..

    ReplyDelete
    Replies
    1. உண்மை மிகவும் கசப்பானது தான் சார்.. நாம் வாழும் வாழ்க்கையின் பலன் நம் இறப்பில் தான் தெரியும்..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. எங்கள் பகுதியிலும் இந்தப்பழக்கம் உண்டு........[ கொங்கு மண்டலம் ] ... குளிச்சு விடறது என்பார்கள்.......இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் இழுத்துக்கொண்டு கிடந்தால், ஏம்ப்பா....... எண்ணைத்தண்ணி ஊத்திப்பார்க்கறது? என்று அக்கம்பக்கத்தவர்களே கேட்பார்கள்....... [ எத்தனை நாளானாலும் சரி.......அந்தப்பாவத்துக்கு மட்டும் கையேந்த மாட்டென் என்று உறுதியாக இருப்பவர்களும் உண்டு......]

    ReplyDelete
    Replies
    1. எல்லா பக்கமும் கருணை என்கிற பெயரில் கொலைகள் நடக்கத்தான் செய்கின்றனவா?

      Delete
  12. அன்பின் ராம்குமார் - செல்லும் பாதை நன்று - பெற்ற தாயைக் கருணைக் கொலை செய்வது சரியல்ல என்றாலும் - ஆசையாய் வளர்த்த மகனை அம்முடிவிற்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை - என்ன செய்வது ......நேரில் பார்ப்பது போலவும் - ஏதோ நம் வீட்டில் நடப்பது போலவும் ஒரு உணர்வு வருகிறதே ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. //ஆசையாய் வளர்த்த மகனை அம்முடிவிற்குக் கொண்டு செல்லும் சூழ்நிலை// இது எல்லாம் சாக்கு போக்கு சார்.. சூழ்நிலை என்பதெல்லாம் நாமே உருவாக்கி கொள்வது தான்.. இது என் தாழ்மையான கருத்து..

      Delete
  13. shocking!
    துணிச்சலான கரு; அருமையான நடை.
    இந்த நிலை மிகச் சாதாரணமாகும் நாள் தொலைவில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. பல பகுதிகளில் இது மிக மிக சாதாரணமான விசயம் தான் சார்..

      Delete
  14. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சிறுகதை. நன்று :-). இதை கேள்விப்படாதவர்களுக்கு இது முழுக்க கற்பனையாக தெரியும்..
    இது எங்க ஊர் பக்கமும் நடக்கும். அதனால் காட்சிகள் கண்முன் விரிகிறது. ஆனா எங்க ஊர் பக்கம் இவ்வளவு அப்பட்டமா பேசிக்க மாட்டாங்க (வீட்டுகுள்ள கூட). காதும் காதும் வச்ச மாதிரி கமுக்கமா முடிச்சிருவாங்க.
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் கமெண்ட் :-) இங்கும் யாரும் அப்பட்டமாக பேசிவிடவில்லை.. தன் மகனுக்கு கூட தெரியாமல் தான் அதை செய்கிறார் நம் கதாநாயகன்..

      Delete
  15. மனதை திடபடுதிக்கொன்டுதான் வாசித்தேன் இருந்தும் மனம் கனத்துவிட் டது.காட்சிகளை கண் முன்னே நிறுத்திய உங்கள் எழுத்து நடையை பாராட்டுகிறேன்.ஒரு மகள் இருந்த்திருந்தால் அந்த தாய்க்கு இந்த நிலை வந்திருக்காதோ? அரவிந்தன்,சிங்கப்பூரில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரவிந்தன் சார்.. //ஒரு மகள் இருந்த்திருந்தால் அந்த தாய்க்கு இந்த நிலை வந்திருக்காதோ?// ஹா ஹா சார், மகள் இருந்திருந்தால் அவளும் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து ஊற்றியிருப்பாள்...

      Delete
  16. என்ன சார் இப்படி எழுதிட்டீங்க இப்படியும் நடக்குமா. மனசு நடுங்குது
    கலங்க வச்சுட்டீங்க.
    முதன் முறையா உங்க பக்கத்துக்கு வரேன். மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெளியில் தெரியாமல் நிறைய நடக்கிறது சார்... உங்கள் வருகைக்கும் கமெண்டிற்கும் மிக்க நன்றி..

      Delete
  17. மனசு கனத்தது ராம் குமார்.....

    தலைக்கூத்தல் - பெற்ற தாய்க்கு இப்படிச் செய்ய எப்படி மனசு வரும் ..... :((((

    ReplyDelete
    Replies
    1. அந்த பெத்த தாயை அனத்தலாக, தொல்லையாக நினைக்கும் போது இந்த எண்ணம் வரும். :-(

      Delete
  18. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  19. கொடூரம்'ன்னா SAW, Final Destination போன்ற படங்களில் வருவது மட்டும் கொடூரம் இல்ல. இந்த கதையில வருவது அதைவிட மோசமான கொடூரம்.

    ReplyDelete
  20. மருந்து கசப்பாக இருந்தாலும் அருந்தித்தான் ஆக வேண்டும் அதுபோல் இந்தக்கதை கதை தற்போதைய சமூக நிலையை பட்டவர்த்தமாக காட்டியது ....! அதுவும் மென்பொருள் துறையில் உள்ளவர்கள் நிஜத்தை தேடி நிழலில் அலையும் மாந்தர்கள்

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One